வேன் திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லவும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானாள் மதிவதனி.
“ரஞ்சன் நாம அம்பாசமுத்திரத்துக்கா போறோம்?”
“இவ்வளோ நேரம் என்னை எப்படி கூப்பிட்ட?! இப்போ மட்டும் என்ன ‘ரஞ்சன்’?”
“ரஞ்சன்! ப்ளீஸ், விளையாடாதீங்க! சொல்லுங்க”
“ஏய்! உங்க ஊருக்கு தான்டி போறோம். இப்போ என்ன? போகக் கூடாதா?”
“இல்லை, இல்லை போகலாமே! ஆமா அங்கே போய் எங்க அத்தை வீட்டிலேயா தங்க போறோம்?”
மனோரஞ்சன் திரும்பி அவளை முறைத்தான்,”இப்போ உனக்கு என்ன பிரச்சனை? உங்க அத்தை வீட்டுக்கு நாம போகக் கூடாதா?”
அவள் வாயை பொத்திக் கொண்டாள்.
அம்பாசமுத்திரம் சென்று சேரும் போது இருட்டி விட்டது. அத்தை வீட்டுக்கு சென்று, நலம் விசாரிப்புகள் முடிந்து, சாப்பிட்டு உறங்கினர்.
மறுநாள் காலை அவள் அத்தை காமாக்ஷி, தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குற்றாலம் சென்று குளிக்குமாறு கூறினார்.
“அய்யோ! அத்தை, உங்களுக்கு தான் என்னை பத்தி தெரியுமே? நான் ஆத்துல இறங்க மாட்டேன். நான் போகல”
“ஏய்! லூசு, நீ போகாட்டி அவங்க மட்டும் தனியா போவாங்களா? உனக்கு தான் இங்க உள்ள இடமெல்லாம் நல்லா தெரியும். கிளம்பி போ பேசாம”
இதற்குமேல் அவள் அத்தையிடம் வாதிட முடியாது என்று தெரியும். அதனால் அரை மனதாய் கிளம்பினாள்.
குற்றாலம் சென்றதும் முதலில் ஆற்றில் குளித்துவிட்டு, பின் அருவிக்குச் செல்வதென்று தீர்மானித்தனர். ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு, சுளித்து ஓடும் நீரை கண்டதும், அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
“வாவ்! எவ்வளோ அழகா இருக்கு! இதுல குளிச்சா எவ்வளோ சூப்பரா இருக்கும். அண்ணி நீங்க ரொம்ப லக்கி அண்ணி. தினமும் இங்க தான் குளிப்பீங்களா?” மதிவதனியை பற்றி தெரியாமல் கேட்டாள் நிலா.
மதிவதனி அவஸ்தையுடன் மனோரஞ்சனை பார்க்க, அவன் அவள் அருகில் வந்து, “மது! வா குளிக்க போகலாம்” என்று அழைத்தான்.
“ரஞ்சன்! நீங்க எல்லாரும் போங்க. உங்களுக்குத் தான் தெரியுமே! என்னால கண்டிப்பா குளிக்க முடியாது”
“மது! பயத்தை கடந்து வரணும்னா, அந்த பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளணும்! இந்த பயம் தான் உன்னோட எல்லா கவலைக்கும் காரணம், இந்த பயம் தான் உன்னோட அவநம்பிக்கை, இந்த பயத்தை கடந்து வந்து பாரு, இதுவரைக்கும் நீ மிஸ் பண்ணினது உனக்கு புரியும்”
“நீ என்னை நம்புறியா இல்லையா? என்னை நீ நம்புனா என் கையை பிடிச்சிக்கிட்டு வந்து ஆத்துல இறங்கு. இல்லேன்னா வேண்டாம்” அவன் கைகளை நீட்டிக் கொண்டு, அவளின் முடிவுக்காக காத்து நின்றான்.
மதிவதனி ஒரு நிமிடம் கண் மூடி நின்றாள், பின்பு அவன் கைகளில் தன் கையை வைத்தாள்.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மதிவதனியின் கைகளை மனோரஞ்சன் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.”மது! இங்க பாரு, இந்த இடத்துல மட்டும் தான் கொஞ்சம் கல்லு இருக்கு, அதை தாண்டி அந்த சைடு போயிடலாம் வா, அங்க பாரு மண்ணு தெரியுது. பாத்து, இந்த கல்லுல கால் வைக்காதே கொஞ்சம் வழுக்குது” அவளுக்கு வழிக்கட்டிக் கொண்டே அவளை பிடித்து அழைத்துச் சென்றான்.
மணல் நிறைந்த இடத்தை அடைந்ததும், மனோரஞ்சன் அவளை இடுப்போடு சேர்த்து பிடித்துக் கொண்டு,”மது! நான் இருக்கேன். பயப்படாதே! கையை,காலை நல்லா ஆட்டி, நீச்சலடிச்சு பாரு. எதுவும் ஆகாது பயப்படாதே!”
“உன்னோட இறந்த காலம், எதிர்காலம் எல்லாத்தையும் மறந்துடு. இப்போ இந்த நொடியை மட்டும் அனுபவிச்சு பாரு. ஜில்லுனு ஓடுற இந்த தண்ணி, நம்ம காலுக்கு கீழே அரிச்சிட்டு போற மண்ணு, காலை கடிக்கிற மீனு, லேசா வீசுற இந்த காத்து, எல்லாமே எவ்வளோ அழகா இருக்கு பாரு! அதை அப்படியே அனுபவிச்சு பாரு. உன் பயமெல்லாம் ஓடி போய்டும்”
அவன் வார்த்தைகள் தந்த ஊக்கத்தில், சிறிது சிறிதாக பயம் தளர, அவன் கைப்பிடியில் உலகம் மறந்தாள். அவன் சொன்னது போலவே அந்த நொடியை அனுபவித்தாள்.
அவளுக்கு தண்ணீரை பற்றிய பயம் முற்றிலுமாக நீங்கியதா என்று சொல்ல முடியாது, ஆனால், மனோரஞ்சன் தன் அருகில் இருக்கும் வரை அந்த பயம் வரவே வராது என்பது அவளுக்கு புரிந்தது.
தன்னை பயமுறுத்தும் அந்த கனவும் இனிமேல் தனக்கு வராது என்று புரிந்து கொண்டாள். காதலுடன் அவனை நோக்கியவள், அவன் அவள் புறம் திரும்பியதும், இவள் பார்வையை திருப்பினாள்.
இவர்கள் ஒரு பக்கம் குளித்துக் கொண்டிருக்க, மறுபுறம் ரித்துநந்தனும், தாமரையும், ஒருவர் மேல் ஒருவர் நீரை ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.
பெரியவர்கள் அனைவரும் கரை பக்கமே நின்று பேசிக் கொண்டே குளிக்க, நிலா மட்டும் தனியாக குளித்துக் கொண்டிருந்தாள்.
”கடவுளே! என்ன இது அநியாயம்?! ஆளாளுக்கு அவங்கவங்க ஆளு கூட இருக்காங்க. இங்க நான் மட்டும் தனியா இருக்கேனே! உனக்கு என்னை பார்த்தா பாவமா இல்லையா?”
“சிங்கிள் பொண்ணுங்க சிங்கிள் பொண்ணுங்க, இப்போ மிங்கிள் ஆக ரெடிங்க” அவள் பாட்டை மாத்தி பாடிக் கொண்டிருக்க, மனோரஞ்சன்,”ஏய்! நிலா…” என்று அதட்டினான்.
“அய்யயோ! அண்ணா, உங்களுக்கு கேட்டுடுச்சா?! ஹி….ஹி….ஹி….நான் சும்மா, உளறிட்டு இருந்தேன். நான் அந்த சைடு போய் குளிக்கிறேன்” என்று நகர்ந்தாள்.
ஆற்றில் குளித்துமுடித்து, அடுத்து அருவியில் குளித்தனர். குளித்த முடித்ததும் அனைவருக்கும் பசி வயிற்றை கிள்ளியது. மதிவதனி அவர்களை அங்கிருந்த புகழ்பெற்ற பார்டர் கடைக்கு அழைத்துச் சென்றாள்.
பார்டர் கடை பரோட்டா அங்கு மிகவும் பிரசித்தம். அதை ஒரு பிடிபிடித்த பின், வேறு எங்கு செல்லலாம் என் அனைவரும் யோசிக்க, மதிவதனி அங்கு அருகிலேயே ஒரு தோப்பு இருப்பதாகவும், அது தனக்கு தெரிந்தவரின் தோப்பு தான் என்றும் கூற, அங்கே செல்வதென்று முடிவாயிற்று.
சுற்றிலும் நூற்றுக்கணக்கில் தென்னை மரம், பக்கத்திலேயே பச்சை பசேலென்ற வயல்வெளி, அந்த வயலுக்கு பாயும் தண்ணீர், பம்புசெட், அங்கங்கே உட்காருவதற்கு கயிற்று கட்டில் என அந்த இடம் சொர்க்கலோகமாக இருந்தது.
அருவியில் குளித்த அலுப்பு தீர, காற்றாட அங்கு போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தனர். சிறியவர்கள் அனைவரும் ஒரு புறமும், சற்று தள்ளி பெரியவர்களும் அமர்ந்திருந்தனர்.
“சரிண்ணா! இப்பவாச்சு சொல்லுங்க? எப்படி நம்ம மாமாவை ஏமாத்துன அந்த ஆளை கண்டுபுடிச்சீங்க?”
“அதுவா….நம்ம அப்பாவா பத்தி நமக்கு தெரியாதா? கண்டிப்பா அவரு எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டாருன்னு தெரியும். இதை பத்தி நான் ரொம்ப நாளாவே யோசிச்சிட்டு தான் இருந்தேன். ஆனால் இந்த பிரச்சனையை தீர்க்கிறதுக்கு, அடுத்து எந்த முயற்சியும் நான் பண்ணாமலே விட்டுட்டேன்”
“இப்போ கொஞ்ச நாளா, ரித்துவையும், தாமரையையும் ஒண்ணா பார்க்கும் போது, மனசு உறுத்திகிட்டே இருந்துச்சு. பெரியவங்க சண்டையை முதல சரி பண்ணினா தான், அது சின்னவங்க வாழ்க்கையை பாதிக்காம இருக்கும்னு தோணிச்சு”
“அதனால ‘இந்தியா ஸ்கில்ஸ்’ ஆர்கனைசேஷனுக்கு போய் விசாரிச்சு பார்த்தேன். பல வருஷத்துக்கு முன்னாடி நடந்தது, ரெக்கார்ட்ஸ் இருக்குமா இல்லையானு தெரியலனு சொன்னாங்க. அப்படினாலும் அட்ரஸ் எல்லாம் குடுக்க முடியாதுன்னு சொன்னாங்க. எப்படியோ கெஞ்சி கூத்தாடி, தகிடு தத்தோம் பண்ணி ஒருவழியா அந்த ஆளோட திருச்சி அட்ரஸ் கண்டுபுடிச்சேன்”
“என் பிரெண்டு மூலமா அந்த அட்ரஸ்ல போய் விசாரிக்க சொன்னேன். அங்க இருந்தவங்க காலி பண்ணிட்டு போய்டதா சொன்னாங்க. அதுக்கப்புறம் அவங்க சொந்தக்காரங்க மூலமா விசாரிச்சு ஒருவழியா அந்த ஆளோட சென்னை அட்ரஸ் கண்டுபுடிச்சேன்”
“அங்க போய் பார்த்தா அந்த ஆளுக்கு ஒரு கை இல்லை. விசாரிச்சு பார்த்தப்போ அவர் பண்ணுன தப்புக்கு அவர் வருத்தப்படுறாருனு புரிஞ்சிது.நம்ம வீட்டுக்கு வந்து அப்பா கிட்டயும், மாமா கிட்டயும் பேசுறதா சொன்னாரு. நான் தான் வேண்டாம்னு தடுத்துட்டேன்”
“ஏன்னா வேண்டாம்னு சொன்ன? உனக்கு இந்த உண்மையெல்லாம் எப்போ தெரியும்?”
“எனக்கு ஒரு வாரம் முந்தியே தெரியும்”
“அப்புறம் ஏன் எதையுமே நீ சொல்லல? அப்பவே சொல்லியிருந்தேனா, அந்த ஒரு வாரமாவது தாமரை சந்தோஷமா இருந்திருப்பால?”
“ஏய்! அது இல்லடி, அடுத்த வாரம் ஒரு முக்கியமான நாள் வருது, என்னனு ஞாபகம் இருக்கா?”
“முக்கியமான நாளா? என்ன முக்கியமான நாள்?” நிலா யோசிக்க, மதிவதனிக்கு அது என்ன நாள் என்று சற்றும் பிடிபடவில்லை.
தாமரை உடனே,”ஆங், எனக்கு ஞாபகம் வந்துடுச்சு. எங்க அப்பாவோட பிறந்தநாள், அதுமட்டுமா உங்க அப்பாவோட பிறந்தநாளும் அன்னைக்கு தான். முந்தியெல்லாம் அந்த நாளை எப்படி கொண்டாடுவோம் இல்லை”
“ஹ்ம்ம்….ஆமா தாமரை. அப்பா, மாமாவோட பிறந்தநாள். அன்னைக்கே அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான், எதுவும் சொல்லாமல் இருந்தேன். அதுக்குள்ள மாமா ரித்துவை அடிக்க, சண்டை பெருசாகனு ஏதேதோ ஆயிடுச்சு. அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்”
சூப்பர்! ஜாலி! செம்ம! என ஆளாளுக்கு கத்த, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ரிதுநந்தன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“ஹேய்! ரித்து என்னாச்சு டா உனக்கு? அமைதியா இருக்க?” நிலா கேட்க அப்பொழுதும் ரிதுநந்தன் வாயை திறக்கவில்லை.
“டேய்! என்னாச்சு டா?” மனோரஞ்சன் கேட்க, ரிதுநந்தன்,”சாரிணா” என்றான். அவன் குரல் உடைந்து, கண்கள் கலங்கியிருந்தது.
“எதுக்குடா சாரி? நீ என்ன பண்ணின?””
“இல்லேண்ணா என்ன இருந்தாலும் அன்னைக்கு உன் கிட்ட அப்படி பேசியிருக்கக் கூடாது! தாமரை கூட சண்டை போட்ட கோபத்தில உன் கிட்டயும் ஏதேதோ பேசிட்டேன். ரொம்ப சாரிண்ணா”
“அட! நான் அதை அன்னைக்கே மறந்துட்டேன்டா. விடுறா, இதெல்லாம் ஒரு விஷயம்னு அழுதுகிட்டு. போடா லூசு”
“இல்லேன்னா எனக்கு மனசே சரி இல்லை, ரொம்ப சாரி”
“ஹலோ!ஹலோ!ஹலோ! என்ன இது?தர்மத்தின் தலைவனா?போன வாரம் அப்பாவும்,மாமாவும் தளபதி படத்த ஓட்டுனாங்க. இந்த வாரம் நீங்க தர்மத்தின் தலைவனா?”
“ஏய்! போடி, நானும் என் தம்பியும் பாசமா இருக்கிறது உனக்கு பொறாமை”
“கரெக்ட்ண்ணா. அவளுக்கு பொறாமை. நீ வாண்ணா” அவர்கள் இருவரும் கட்டிக்கொண்டனர்.
நிலா அவர்கள் பின்னால் நின்றுக் கொண்டு,”நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை. தன்னை போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை” என்று பாட ரிதுநந்தன் அவளை அடிக்க ஓடினான்.
தாமரையும் அவர்கள் பின்னாலே செல்ல, மனோரஞ்சனும், மதிவதனியும் தனித்து விடப்பட்டனர்.
“மது! வரியா கொஞ்சம் தூரம் அப்படியே நடந்துட்டு வரலாம்?”
“ம்ம்ம்….சரி”
அந்த வயல்வெளியின் வரப்பிலேயே நடந்துக் கொண்டிருந்தனர்.
“மது, எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு. மாசு இல்லாத காற்று, சுத்தமான தண்ணீர், பச்சைபசேல்னு வயல்வெளி, சுத்தி நல்ல மனசு உள்ள மனுசங்க, அப்புறம்….அப்புறம்…..”
“அப்புறம்?”
“அப்புறம்….பக்கத்துலேயே ஒரு அழகான பொண்டாட்டி” சொல்லிவிட்டு அவளையே பார்த்தான்.
அவள் அருகில் நெருங்கி வந்து, “மது! இதுக்குமேல இங்க நின்னா எனக்கு ரொம்ப கஷ்டம். வா போகலாம்” சிரித்துக்கொண்டே அவள் கையை பிடித்து அழைத்துச் சென்றான்.
மனம் நிறைய சந்தோஷத்துடன், கண்களில் கற்பனையுடன், அன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டபடி படுக்கச் சென்றாள் மதிவதனி, மறுநாள் அவள் வாழ்வையே மாற்றிய ஒரு நாள் என்பதை முற்றிலும் மறந்தவளாக…..
புலரும்