மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் – 1
அழகிய பச்சையும் நீலமும் சேர்ந்தாற் போல் அப்பழுக்கின்றித் தென்பட்ட அந்தக் கடல் தன் வெண்கரங்களை அடிக்கடி கரை பக்கமாக நீட்டி, அங்கே நடக்கும் நிகழ்வுகளை வேவு பார்த்துக் கொண்டிருந்தது. பின்னே பச்சையும், நீலமும் அளவாய் கலந்து டார்குவிஸ் வண்ணத்தில் காண்பவர் மதிகளை மயக்கி தன்வசப்படுத்தும் வல்லமை தனக்கு மட்டுமே உள்ளதென இறுமாப்புடன் ஆர்ப்பரித்த கடலுக்கு, அங்கே கரையில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சமும் ரசிக்கவில்லை. தன் அழகுடன் போட்டி போடும் விதமாக அந்த வெண்மணலில் திடீரென முளைத்திருந்த திருமணச் சடங்கு நடைபெறும் மேடையைக் காணக் கடலுக்குமே பெரு வியப்பு.
மெல்லிய பிங்க் நிற வெண்சங்குகள் இத்தனை எங்கிருந்து இவர்களுக்குக் கிடைத்தன?” என்று கூட யோசித்தது ஆழி. அதிலும், பிங்க் நிறச் சங்கும், அதே பேபி பிங்க் நிற முத்துகளும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட சின்னஞ்சிறிய மணி மாலை தோரணங்கள் அந்த மணமேடையின் தூண்களைச் சுற்றியிருக்க, நான்கு தூண்களுக்கும் சேர்த்து இணைக்கப்பட்டிருந்த மேற் கூறையிலிருந்து முன்தினம் காலை மலர்ந்திருந்த மஜந்தா வண்ண ஆர்கிட் மலர்ச்சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.
மலர்கள் ஒன்று கூடக் கொஞ்சமும் வாடிவிடா வண்ணம், ஆர்கிட் மலர்களைக் கௌரவிக்கும் வகையில் அவை தனி விமானத்தில் பிரத்தியேகமாகத் தருவிக்கப்பட்டிருந்ததாம். ஆர்கிட் மலர்கள் ஒன்றுக்கொன்று உரசி கொண்டு, காற்றுடன் கதை பேச, கடலலைக்குப் பொறாமை ஏற்படத் தானே செய்யும்? இந்த மாலதீவில் நான் தானே முதல் அழகி? என்னைக் காணத் தானே ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிகின்றனர் என்ற எண்ணம் கொஞ்சம் அடிவாங்கியிருக்க, அந்தப் பச்சை வண்ணக் கடல் கொஞ்சமே கொஞ்சம் கோபம் கொண்டிருக்கலாம்.
ஆனாலும் இந்த ஆர்கிட் மலர்களுக்குக் கொஞ்சமும் விவஸ்தை இல்லை. பந்தலுடன் உரசிக் கொண்டு நிற்பதிலேயே கவனம் செலுத்துகின்றனவே தவிர, மணமேடையின் முன்னால் திரண்டிருந்த அந்த இருபது பேர் கொண்ட குழு என்ன சம்பாஷணையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிந்து கொள்ளக் கொஞ்சமும் அக்கரை காட்டவில்லையே இந்த மலர்கள். வம்பு பேசக் கூட கற்றுக் கொள்ளவில்லையா இந்த பூக்கள்?
சரி,சரி, நம்ம ஊர், மல்லி சாமந்தி, சூரியகாந்தி என்றிருந்தால் அவைகளுக்கு இந்த மக்களின் பாஷை விளங்கியிருக்கும். பாவம் அயல் தேசத்து ஆர்கிட் மலருக்கு, அழகிய தமிழ் மொழியின் வார்த்தைகள் புரியாது போயிருக்கலாம். ஆனால், பலநூறு வருடமாகக் கடற்கரைக்கு வந்து செல்லும் அலைகளுக்கு, அங்கே குழுமியிருந்தவர்கள் பேசியது புரியாது போக வாய்ப்பில்லை. அதனால், தன் இரைச்சல் ஓசையைக் கூடக் குறைத்துக் கொண்டு மௌனமாகச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தது.
“சத்யாவைக் காணோமாம்” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள் வெண்தாமரை மொட்டு நிறத்தில் மெல்லிய பச்சை இழையோடிய வண்ணத்தில் விலையுயர்ந்த புடவையும், அதற்கு தோதாக இறுக்கமான ஸ்லீவ்லெஸ் ரவிக்கையும், கழுத்தை நெரிக்கும் அன் கட் வைர நகைகளும் அணிந்திருந்த அந்த நவீன ஆண்ட்டி.
“சத்யாவைக் காணலையா? மிருது இதுக்கு என்ன ஆர்ப்பாட்டம் பண்ண போறாளோ?” என்றாள் தாமரை மொட்டுக்கு ஈடு கொடுக்கும் விதமாக, பர்ன்ட் ஆரஞ்சு வண்ண ஜார்ஜெட் சேலை அணிந்திருந்த மற்றொரு ஆண்ட்டி.
“ஆமா ஆமா,சின்ன விஷயம் பர்ஃபெக்டா நடக்கலைன்னாலே வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு சீன் க்ரியேட் பண்ணற டாடீஸ் லிட்டில் பிரின்சஸ்? இப்போ என்ன பண்ண காத்திருக்காளோ?” என்று முகத்தில் கொஞ்சமும் வியப்பு காட்டாமல் பின்னாலிருந்து வினவினாள் ஒரு வெங்காயச் சருகு வண்ண ஃப்லோயிங் சாரி ஆண்ட்டி.
இப்படித் தன் வயதை மறைக்க முழு முயற்சி எடுத்துக் கொண்டிருந்த ஆண்ட்டிகளும் அவர்களின் ஆண்ட்டி ஹீரோக்களும் அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டிருக்க, இதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டு நின்றிருந்த ஹரிணி, ஈவண்ட் மேனேஜ்மெண்ட் டீம் லீடர் நடாஷா இருக்குமிடம் நோக்கி நடந்தாள்.
“கிவ் தெம் சம்திங் டு ஈட். அந்த வாய்களுக்கு வேலை குடுக்கலைன்னா, என் தம்பிய மென்னு தின்னுட்டு இருப்பாங்க!” என்று அதிகாரமாக கட்டளை இட்டுவிட்டு கடற்கரையிலிருந்து ரிசார்ட் அறை நோக்கி வேகவேகமாக நகர்ந்தாள் ஹரிணி. அவள் செல்வதைக் கண்ட அவளின் கணவன்,பிரதாப், தன் மூன்று மாதக் குழந்தை அதிதியை தூக்கிக் கொண்டு ஹரிணியின் பின்னால் நகர்ந்தார்.
அதுவரையிலும் மெல்லமாக கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டிருந்த குழுக்கள் சற்றே தைரியம் பெற்று தங்கள் மனதின் வன்மத்தையெல்லாம் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தன. பின்னே, அத்தனை கோடிகள் செலவு செய்து நெருங்கின சொந்த பந்தம் என்று இவர்களையெல்லாம் தனிவிமானம் மூலம் மாலத்தீவு கூட்டி வந்ததற்கு ஏதாவது உபயோகம் இருக்க வேண்டும் அல்லவா?
“உன்ன காசு செலவு பண்ணி கூட்டிட்டு வந்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட”என்று சத்யாராஜ் வடிவேலு பாணியில் நிகழ்ச்சிகள் நடந்தேறிக் கொண்டிருந்தன.
“டெஸ்டினேஷன் வெட்டிங்காம்! பொல்லாத டெஸ்டினேஷன். இவங்க வசதிக்கு ஆஃப்டரால் மால்டீவ்ஸ் தான் கூட்டி வர முடியுமா? ஃப்ரான்ஸ், பேரீஸ், ஆம்ஸ்டர்டேம்னு கூட்டி போயிருக்கலாம்” என்று மாலத்தீவில் சுற்றிப் பார்க்க ஏதுவாக இடங்கள் இல்லை என ஒரு குழு.
“கோகனட் ட்ரிங்க்ல இன்னும் கொஞ்சம் வோட்கா மிக்ஸ் பண்ணியிருக்கலாம்” என்று தலைகுப்புற தண்ணீரில் குதித்திருந்தது ஒரு குழு.
மற்றொரு ஆண்கள் குழுவோ, எதிலும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல், தானுண்டு, தன் க்ரிப்டோ கரன்சி மார்க்கெட் உண்டு, கையில் பிடித்திருந்த மதுபானக் கோப்பை உண்டு என, ஒரு தென்னை மரத்தடி நிழலை தனதாக்கிக் கொண்டு இளைப்பாறியது.
ஆக மொத்தம் அங்கே இருந்த அனைவருக்கும், இந்தத் திருமணம் நடக்கப் போவதில்லை என்பது சர்வ நிச்சயமாகத் தெரிந்து போய்விட்ட மிதப்பில், அடுத்து அரங்கேறக் காத்திருக்கும் நாடகம் என்னவென்று காணும் ஆவல் மிகுந்திருந்தது.
சாய் க்ரூப் ஆஃப் இண்டஸ்டரீஸின் இளைய மகன் சத்யசாய்ராம் பற்றியும், மிருது எக்போர்ஸ்ட்ஸின் ஒரே வாரிசான மிருதுளாவைப் பற்றியும் தங்களுக்குத் தெரிந்த, தெரியாத, கற்பனை கலந்து கதைகள், கவிதைகள், சிறுகதைகள் எனப் பலவகையான செய்திகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
இதையெல்லாம் மெளனமாக கிரகித்து கொண்டு அமைதியாகக் காட்சியளித்தது அந்த பச்சை பட்டாடை அணிந்த கடலழகி. பாவம் அதற்கு தெரியாதல்லவா? இது யார் வீட்டுத் திருமணமென்று? தொழிலதிபர் நடராஜ் சமர்தியன் வீட்டு திருமணத்தில் இந்த அளவு கூட செலவழிக்காமல் இருப்பார்களா என்ன?
அதிலும் வீட்டின் கடைசி திருமணம் வேறு! சாய் இண்டஸ்ட்டிரீஸின் சேர்மன், திரு.நடராஜ் சமர்தியனின் இளைய மகனும், இந்த பிரம்மாண்டத் தொழில் சாம்ராஜ்ஜியத்தைத் திறம்பட நடத்தி வரும் சத்யசாய்ராம் சமர்தியனின் திருமணம்.
தொழிலதிபர் நடராஜ் சமர்தியனுக்கு இரு பிள்ளைகள், மூத்த மகள் ஹரிணி, இளையவன் சத்யசாய்ராம். ஹரிணிக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. தன் கணவர் பிரதாப்புடன் அமெரிக்காவில் வாசம் செய்கிறாள். இதோ இப்போது, தரை அதிர, விடுவிடுவென தன் ஜஃபோன் சகிதம் ரிசார்டின் சூட் ரூம் நோக்கி நடந்த ஹரிணி, அறையில் கிடந்த சோஃபாவில் தொப்பென அமர்ந்தாள். 16 டிகிரிக்கு குறைக்கப்பட்டிருந்த சில்லிப்பான அறைக்காற்றையும் மீறி அவளுக்கு வியர்த்திருந்தது.
தங்கள் மூன்று மாதக் குழந்தை அதிதிக்குப் பால் டப்பாவை வாயில் திணித்து அவள் அழுகையை நிறுத்த திணறி கொண்டிருந்தார் ஹரிணியின் கணவர் பிரதாப்.
“நானிம்மா எங்க? நீங்க ஏன் இந்த வேலைய செஞ்சுட்டு இருக்கீங்க?” என்று குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வகிக்கும் “நானிம்மா” என்று இவர்கள் பிரத்தியேகமாக அழைக்கும் ஜானகியம்மா எங்கே என வினவினாள்.
“சத்யா எங்கன்னு பார்த்துட்டு வரசொல்லி நான் தான் அனுப்பினேன். அதுக்குள்ள அதிதி அழுக ஆரம்பிச்சுட்டா”
“ஆமா, காலையில ஃபீட் பண்ணது. மணி இப்போ பதினொன்னாகப் போகுது. இன்னமும் பசிக்காம இருக்குமா என்ன?” என்று அதிதியை வாங்கிக் கொண்ட ஹரிணி, உள் அறையினுள் குழந்தையுடன் நகரத் துவங்க, பின்னோடே பிரதாப்பும் சென்றார்.
குளிரூட்டப்பட்டிருந்த அந்த பெரிய அறையில் இவர்கள் நுழையும் போது, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். குழந்தையுடன் ஹரிணி உள்ளே நுழையவும், “பாப்பாக்கு ஃபீட் பண்ண போறேன்” என்று சினேகமாகச் சிரித்துக் கொண்டே ஹரிணி கூற, அவர்கள் நாகரீகமாக அறையிலிருந்து வெளியேறினர்.
அவர்கள் தலை மறைந்ததும், “சத்யா எங்க ஹரிணிம்மா போனான்? ஃபோன் இன்னமும் ஆஃப்ல தான் இருக்கு. நான் பலதடவை ட்ரை பண்ணிட்டேன்” என்று பதற்றத்துடன் கேட்டார் பிரதாப்.
“தெரியலை பிரதாப். எனக்கு பயங்கர டென்ஷனா இருக்கு”என்று வெகுவாக தன் குரலைத் தாழ்த்திக் கொண்ட போதும் ஹரிணிக்கு பதற்றத்தில் வார்த்தைகள் வேக வேகமாக வெளிப்பட்டன.
“சத்யா உங்கிட்ட எதாவது சொன்னானா பிரதாப்? நீங்களும் அவனும் தானே நேத்து ரிஷப்ஷன் முடிஞ்சு ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிட்டிருந்தீங்க? கல்யாணம் பிடிக்கலைங்கற மாதிரி எதாச்சும் பேசினானா? மறைக்காம எங்கிட்ட சொல்லுங்க. அப்பா நேரா உங்ககிட்ட வந்து தான் கேள்வி கேட்பாரு. சொல்லிட்டேன்” என்று கணவனை கண்களாலேயே மிரட்டினாள் ஹரிணி.
பிரதாப்பிற்குமே அந்தப் பயம் இருந்தது. ஏனென்றால் நடராஜனிடம் அனைவருக்குமே இருந்த பயம் கலந்த மரியாதை, பிரதாப்பிற்கு சற்று அளவுக்கு அதிகமாகவே இருந்தது. தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசிவிடமாட்டார் நடராஜ். அவர் கேள்விகளும் அது போலவே தெளிவாய், சுற்றி வளைக்காமல் கேட்கப்படும்.
“ஹரிணிம்மா, நிஜம்மாவே எனக்கு எதும் தெரியாதுடா. அவன் நேத்து நைட் என் கூட நல்லா தான் பேசினான். கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தான். ஆனா அது கல்யாணத்துக்கு முன்னத்தைய நாள் எல்லாருக்குமே இருக்க நர்வஸ்னஸ் தான்னு நான் கண்டுக்கலை.”
“நர்வஸ்ஸா இருந்தானா?”
“ஆமா அடிக்கடிவாட்ச் பார்த்துட்டே இருந்தான். நான் கூட ரெண்டு தடவை “டைமாகிடுச்சா சத்யா? வாட்ச் பார்த்துட்டே இருக்க? ஃப்ரெண்ட்ஸ் யாராவது வர்றேன்னு சொன்னாங்களா? அவங்களுக்காக வெயிட் பண்ணறியா?”ன்னு கேட்டேன்.”
“இதை நேத்தே எங்கிட்ட சொல்லறதுக்கு என்ன? இப்போ வந்து சொல்லறீங்க?”
“பெருசா படபடப்பாலாம் இல்லம்மா. கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தான். சாதாரணமா கல்யாணத்துக்கு முந்தின நாள் எல்லாருக்கும் இருக்க டென்ஷன் தானேன்னு நினைச்சேன் ஹரிணிம்மா. நான் கூட அப்படி தான் இருந்தேன்”என்று பாவமாக பதிலளித்தான் பிரதாப்
“உங்களுக்கு இருக்கும். ஆனா என் தம்பி டென்ஷன் ஆகறவனோ, நர்வஸ் ஆகறவனோ கிடையாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்ல. அவன் என்னைக்காவது கத்தி, டென்ஷன் ஆகி ஒரு விஷயத்தை ஹேண்டில் பண்ண தெரியாம பதட்டப்பட்டு நீங்க பார்த்திருக்கீங்களா?” என்று இல்லையென்று சொல்ல வாய்ப்பளிக்காமல் ஹரிணி வினவ, பிரதாப் மௌனமாய் மனைவியை பார்த்தான்.
“அதுக்கு பதிலா, அவனுக்கும் சேர்த்தி தான் நீ பதட்டப்படுவியே. வீட்டுல ஒருத்தருக்கு அந்த மாதிரி தீராத வியாதி இருந்தா பத்தாதா? எல்லாருக்கும் இருக்கணுமா?”
“நேரக்கெட்ட நேரத்தில ஜோக் அடிக்கறேன்னு மொக்கயா பேசினீங்க நான் மனுஷியா இருக்க மாட்டேன் பார்த்துக்கோங்க” என்று கட்டிலின் மேலே கிடந்த டிவி ரிமோட்டை எடுத்து கணவரின் மீது வீச, அவனோ ரிமோட்டை லாவகமாகப் பிடித்து, அதை சரியான இடத்தில் திரும்ப வைத்தான். இரண்டு வருட கைப்பழக்கம் அல்லவா? அதனால் சரியாக காட்ச் பிடித்திருப்பான்.
“பிரதாப், சத்யா ஏன் இப்படி பண்ணறான்? இப்படி நடந்துக்க கூடியவன் இல்லை பிரதாப் அவன். ஃபோனை ஒரு செகண்ட் கூட ஸ்விட்ச் ஆஃப் பண்ணதில்ல. ரிசாட் சூட் ரூம்ல அவன் இல்ல. ஃப்ரெண்ட்ஸ் ரூம்ல இல்ல. பீச்ல பார்த்தாச்சு, அங்கையும் இல்ல. ரிசார்ட் ஃபுல்லா தேடியாச்சு! எனக்கு பயமா இருக்கு பிரதாப். ஆக்ஸிடெண்ட் மாதிரி ஏதாவது ஆகியிருக்குமோ?” என்று பதற்றப்பட்ட ஹரிணியை பாவமாகப் பார்த்தான் பிரதாப்.
அவனுக்குமே மனம் முழுக்க பயம் தான். ஆனால் அவன் பயத்தை ஹரிணியிடம் காட்டிக் கொண்டு அவளை மேலும் பதற்றமாக்க மனம் வரவில்லை. ஏற்கனவே முகூர்த்த நேரம் தாண்டியிருக்க என்ன செய்வதென்று தெரியாத மனநிலை தான் அங்கே வியாபித்திருந்தது.
“சத்யாகூட நேத்து நைட் தூங்க போற வரைக்கும் இருந்தது நான் தான். அதனால அவன் எங்கன்னு மொதல்ல எங்கிட்ட தானே மாமா கேட்பாரு?” என்ற பயமே அவனுக்கு வயிற்றைக் கலக்கியது.
மாமனார் நடராஜ் சமர்தியன் பற்றி எண்ணிய போதே, அந்த நேரம் அறையினுள் அவர் நுழைந்தார். இறுகிப் போயிருந்த அவர் முகத்திலிருந்தே சத்யா பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று புரிந்தது.
நடராஜை தொடர்ந்து அந்த அறையினுள் வந்தனர் ராஜமாணிக்கமும் அவர் மனைவி விமலாவும். சத்யா திருமணம் செய்து கொள்ள போகும் மிருதுளாவின் பெற்றோர். நடராஜின் நீண்ட கால நண்பர் மற்றும் தொழில் பங்குதாரர்.
அவர் முகமும் சோர்ந்து பொலிவிழந்து காணப்பட்டது. ராஜமாணிக்கம் “சத்யா பத்தி ஏதாவது?” என்று இழுவையாகக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார். ஹரிணி இல்லை என்று தலையசைக்கச் சட்டென அமைதியாகிப் போனார்.
அனைவரின் முகத்திலும் அடுத்து என்ன என்ற கேள்வி விஸ்வரூபமெடுக்க, இதிலெல்லாம் சம்பந்தப்பட்ட முக்கியமான மற்றொருவர் அந்த அறையில் இல்லை என்பதை அப்போது தான் உணர்ந்தாள் ஹரிணி.
“ஆண்ட்டி, மிருது எங்க? அவளுக்கு சத்யாகிட்ட இருந்து எதாவது மெசேஜ் வந்திருக்கா?” என்று விமலாவிடம் கேட்டாள் ஹரிணி. விமலா பதில் சொல்லத் தயங்கிக் கொண்டு தன் கணவர் ராஜமாணிக்கத்தைப் பார்க்க, அவரும் தடுமாற்றத்துடன் அந்த அறையிலிருந்தவர்களை ஏறிட்டார்.
“மிருது! மிருதுவையும் ரூம்ல காணோம்!” என்று தலையை தாழ்த்திக் கொண்டே கூற, ஹரிணி, பிரதாப், நடராஜ் என மூவருமே திடுக்கிட்டனர்.
“என்ன அங்கிள் சொல்லறீங்க? மிருதுவையும் காணோமா?” என்று அதிர்ந்து போய் வினவினாள் ஹரிணி.
“ரிசார்ட் பூரா தேடியாச்சு. மிருது எங்கையும் இல்லை.”
“சத்யாவையும் காலையில இருந்து காணோம். மிருதுவும் மிஸ்ஸிங். அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து எங்கையாவது போயிருக்காங்களோ என்னவோ?” என்று உளறிய பிரதாப்பை கண்களாலேயே பேச்சை நிப்பாட்டும் படிக்குப் பணிந்தாள் ஹரிணி.
“ஒன்பது மணிக்கு முகூர்த்தம் முடிஞ்சிருக்க வேண்டியது. இப்போ மணி பதினொன்னாச்சு. இன்னும் நாம இங்கையே தேடிட்டு இருக்கறது சரின்னு படலை. ஒரு வேளை நம்ம பிசினஸ் எதிரிங்க யாராவது நம்ம பேரை டேமேஜ் பண்ணி ஷேர் பிரசைசஸ் குறைக்க நினைச்சு அவங்களை கடத்தியிருக்கலாமோ? “ என்று ராஜமாணிக்கம் கூற, நடராஜ் யோசனையுடன் தலையசைத்தார்.
ஏனென்றால், சாய் இண்டஸ்டரிசஸும் மிருது எக்ஸ்போர்ட் எண்டர்பிரைசஸும் சத்யா – மிருதுவின் திருமணத்தால் இணைகிறது என்ற செய்தி அறிக்கை வெளியே கசிந்தவுடன் இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பும் அதிகரிக்கத் துவங்கின தான்.
இரண்டு நிறுவனங்களுமே தகுதி, தரம் எனத் தத்தமது தொழிலில் சிகரமாக பறக்கும் வணிகங்கள். பரம்பரையாகத் தொழிலில் ஈடுபட்டு வரும் ராஜமாணிக்கம் குடும்பமும், தன் தந்தை ராம சமர்தியனின் உயரிய எண்ணத்தாலும், நடராஜ் சமர்தியனின் அயராத உழைப்பாலும் ஓங்கி வளர்ந்திருந்த சாய் இண்டஸ்டிரீசும் இணைவது, பல விதங்களிலும் இரு தொழில்களுக்கும் பெருமையையும் மதிப்பையும் கூட்டும்.
இந்த எண்ணம் பொது மக்களுக்கும் உருவாகியிருக்க வேண்டும். அதனால் தானே செய்தித்தாளில் திருமண அறிவிப்பு பார்க்கவும், கம்பெனி பங்குகளின் மதிப்புகள் சடசடவென உயரத் துவங்கியிருந்தன. இன்று அதே காரணத்திற்காக மணமக்கள் இருவரையும் கடத்திச் சென்று விட்டிருக்கக் கூடுமோ என்ற எண்ணம் நடராஜிற்கு ஆரம்பம் முதலே இருந்தது.
அதே எண்ணத்தை ராஜமாணிக்கமும் வலியுறுத்த, நடராஜ் ஒரு முடிவை எட்டியிருந்தார். “பேசாம நாம போலீஸ் கம்பிளைண்ட் குடுத்து, முறைப்படி தேட ஆரம்பிக்கலாம்.” என்று முடிவாய் கூற, அவர் முடிவே சரியாகப் பட்டது அனைவருக்கும்.
“நீங்க சொல்லறது தான் சரி. ரெண்டு பேருமே இப்படி கல்யாணத்தன்னைக்கு காணாம போக வாய்ப்பே இல்லை. சத்யா ரொம்ப கண்ணியமான, பொறுப்பான பையன். மிருது கொஞ்சம் குழந்தைதனம் இருந்தாலும், நானும் அவ அம்மாவும் மட்டும் தான் அவ உலகம். அவ விருப்பத்துக்கு மீறி நாங்க எதையுமே எப்போதுமே செஞ்சதில்ல. இப்போ ரெண்டு பேரையும் காணோம்னா அது கண்டிப்பா எதாவது பிசினஸ் சதியா தான் இருக்கணும். நாம் போலீஸ் கம்பிளைண்ட் குடுக்கறது தான் நல்லது.” என்று ராஜமாணிக்கம் முன்மொழிந்தார். ஆண்கள் மூவரும் மாலத் தீவின் காவல் நிலையம் நோக்கி நகர, விமலா அங்கிருந்த சோஃபாவில் ஆயாத்துடன் அமர்ந்தவர்
“நான் சொன்ன பேச்சை மிருது கொஞ்சமாச்சும் கேட்டிருக்கலாம். டெஸ்டினேஷன் வெட்டிங் அது இதுன்னு ஆசைப்பட்டுச்சேன்னு மால்தீவ்ஸ் வந்து, இப்படி நம்ம பிள்ளைக எங்க ஏதுன்னு தெரியாம ஆளில்லாத ஊர்ல வந்து உட்கார்த்துட்டு இருக்கோம். ஹும்..” என்று அங்காலயித்தார்.
“கவலைப்படாதீங்க ஆண்ட்டி, அப்பாவும், அங்கிளும் போயிருங்காங்கள்ல! அப்பாவுக்கு இங்க இருக்க பிசினஸ் காண்டாக்ஸ் மூலமா ஹெல்ப் கிடைக்கும். சோ, நம்ம ஊர் இல்லையே! நம்ம ஆட்கள் இல்லையேன்னு யோசிக்காதீங்க ஆண்ட்டி!” என்று விமலாவைத் தேற்றினாள் ஹரிணி.
அவர் அருகில் தூங்கிப் போயிருந்த குழந்தை அதிதியைக் கிடத்திய ஹரிணி, அந்த பெரிய அறையின் திரைச் சீலைகளைச் சரி செய்து, வெளி வெயில் உள்ளே நிறைய வராதபடிக்கு மூடினாள்.
அறையின் மத்தியில் நடுநாயகமாக வீற்றிருந்த ஃப்ரெண்ச் விண்டோஸின் அருகே சென்று வெளியே தூரத்தில் தகதகத்த கடலை வெறித்த படிக்கு நின்ற ஹரிணியின் மனம் சொல்லொண்ணா துயரத்தில் மூழ்கியது.
“இருவரும் எங்கே சென்றனர்? உயிருக்கு எதாவது ஆபத்து நேர்த்திருக்குமோ?” என்ற பரிதவித்தவளின் மனக்கண்ணில், முந்தின மாலையில் இருந்து அந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ளாத, இதோ இப்போது வரையிலும் கண்களில் தென்படாத, தன் மனதளவில் கொஞ்சம் நெருடல் கொடுத்த அந்த மற்றொரு முக்கியமான நபர் எங்கே என அவளால் யோசிக்காமல் இருக்க இயலவில்லை.
நொடி நேரம் தான் என்ற போதும், அந்த உறுத்தலைச் சாதாரணமாகக் கடந்து போய்விட ஹரிணியால் ஏனோ முடியவில்லை. கண்களை இறுக்கமாக மூடி தன் அன்னையின் முகத்தை மனதில் நிரப்பிக் கொண்ட ஹரிணி,
“அம்மா, நீ மேல இருந்து எப்பவும் எங்களை பார்த்துட்டே இருப்ப தானம்மா! எங்க கூடவே இருப்பன்னு தானே சொன்ன! சத்யா எங்கிருந்தாலும் அவனை பத்திரமா பார்த்துக்கோமா! அவனுக்கு எதுவும் ஆகிடாம காப்பாத்தும்மா!” என்று பல வருடங்களுக்கு முன்பு இறைவனடி சேர்ந்திருந்த தாய் மாலதியிடம் ஆத்மார்த்தமாக பிராத்தனை செய்தாள்.