மிருதுளா சத்யாவிற்கு ஏற்ற துணை அல்ல என்ற விஷயத்தைச் சத்யாவிற்குப் புரிய வைத்து அவனை யோசிக்க வைக்க வேண்டும் என்ற வரையில் மட்டுமே ராகாவின் எண்ணவோட்டம் சென்றிருந்தது.
சத்யா என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்ளப் பெரும் ஆவல் இருந்த போதிலும், அவனுக்குத் தானாக அழைத்துப் பேசப் போவதில்லை என்ற முடிவில் தீர்க்கமாக இருந்தாள்.
“எப்படியும் நைட் டின்னர் போலாமான்னு கேட்பான்ல. அப்போ பேசிக்கலாம்” என்று ராகா நினைத்திருக்க, அன்றைய தினம் இரவு கடிகாரம் பத்து மணி ஆகிவிட்டது என்று உணர்த்தியும் சத்யாவிடமிருந்து அழைப்போ குறுஞ்செய்தியோ வரவில்லை.
“ஒரு வேளை நாம அவன்கிட்ட மொதல்ல பேசக்கூடாதுன்னு நினைக்கற மாதிரி, அவனும் எதிர்பார்க்கறானோ? ஆனா இப்படி ஈகோ கேம்ஸ் விளையாடற ஆளா தெரியலையே! அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கற ஒரு மனுஷன் இப்படிச் சின்னபுள்ளத்தனமா, நீ ஃபர்ஸ்ட் கால் பண்ணா தான் நான் பண்ணுவேன்னு அடம்பிடிக்க மாட்டானே”
“அப்போ, அவனுக்குத் தான் செஞ்சது பெரிய தப்புன்னு மனசில பதிஞ்சிருக்கு. என் மேல காதலோ பாசமோ கொஞ்சமும் இல்லைன்னு அர்த்தமாகுது. ஏதோ அந்த நேரத்தோட எமோஷன்ஸை கொட்ட ஒரு வடிகால் மாதிரி என்னை நினைச்சிருக்கான், அதான் கில்ட்டியா ஃபீல் பண்ணி, என்னை அவாய்ட் பண்ணறான்.” என்று அர்த்தம் கற்பித்துக் கொண்டாள் ராகா.
அவள் வரையில் சத்யாவின் பார்வையில் அவன் ஏக்கத்தின் வடிகாலாய், கட்டியணைத்து அழும் தலையணையாய் மட்டுமே தன்னைப் பாவித்துள்ளான் என்ற எண்ணம் மனதை ரணம் கொள்ளச் செய்தது. “பன்சிங் பேக் ஆ நான்?” என்ற கேள்வி உள்ளமெல்லாம் வலி ஏற்படுத்தியது.
சாதாரணமாக வெளிபட்டுவிடாத கண்ணீர் கூட, அன்று விழியின் ஓரத்தில் வந்து எட்டிப் பார்த்து,“ என்ன இன்னைக்கு வந்து விடட்டுமா?” என்று மெல்லமாய்த் தலையை நீட்ட, ராகா மூக்கை உரிஞ்சி கண்ணீரை உள்ளே திரும்ப இழுத்துக் கொண்டாள்.
“டே, முட்டாள்தனமா இருக்கு நான் யோசிக்கறது. ஏதோ, ஒரு ஃபீலிங்ல கட்டி புடிச்சு ஆறுதல் தேடி நின்னிருக்கான். இதுக்கும் அவனா ஒண்ணும் கட்டிக்கலை. நான் கொஞ்சமா சாஞ்சவனை வம்பா இழுத்து என் தோள் மேல போட்டேன். பாவமேன்னு தலையை இறுக்கமா பிடிச்சுகிட்டேன். இதுக்கு உடனே அவன், தன்னோட நிச்சயத்தை நிறுத்திட்டு என் பின்னாடி ஓடி வந்துடுவான்னு எப்படி நான் நினைக்கலாம்?”
“அப்போ மிருது பத்தி தப்பான எண்ணங்களை அவன் மனசில வளர்த்த வேணாமா?” என்று கரகரப்பான நம்பியார் குரலில் கைகளைப் பிசைந்து கொண்டு எழுந்தது மனதில் குடியிருந்த குள்ள நரி.
இந்தக் கேள்வியைக் கேட்டதும் ராகாவிற்குச் சீன பழமொழி ஒன்று நினைவிற்கு வந்தது. மனிதர் எல்லார் மனதிலும் இரண்டு விதமான நரிகள் இருக்குமாம். நல்லதை மட்டுமே எண்ணி, மற்றவருக்குத் துன்பம் விளைவிக்கக் கூடாது என்ற நோக்கம் கொண்ட வெள்ளை நரி ஒன்றும், துரோகம், கொள்ளை, திருட்டு, பயம், பொறாமை, கெட்ட எண்ணம், கேடு விளைவிக்கும் செயல்கள் என்ற நோக்கம் கொண்ட கருப்பு நரி ஒன்றும் இருக்குமாம்.
“இரு நரிகளில் நாம் எந்த நரிக்கு தீனி போட்டு வளர்க்கிறோமோ அதுவே நம் மனதை ஆளும்” என்ற பழமொழியை நினைவு படுத்திக் கொண்டாள் ராகா.
“மிருதுவைப் பத்தி தப்பான எண்ணங்களை நான் அவன் மனசில விதைக்கக் கூடாது.” என்றது ராகாவின் ஒரு மனம். மற்றொரு மனமோ, “எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்” என்று ஷேக்ஸ்பியரை துணைக்கு அழைத்துக் கொண்டுவந்து நடுவீட்டில் உட்கார வைத்துக் கும்மாளம் இட்டது.
ராகா இப்படியான முரண் எண்ணங்களுடன் வளைய வர, அவள் கைப்பேசி அந்த ராத்திரியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அலறியது. “சத்யா” தானோ என்ற நப்பாசையில் ஓடிச் சென்றவளுக்கு, திரையில் தெரிந்த “மைக்கில்” என்ற பெயர் எரிச்சல் கூட்டியது.
“இவன் என்ன இந்த நேரத்தில கூப்படறான். காரணமில்லாம இப்படிக் கால் பண்ண மாட்டானே” என்று உணர, கைப்பேசியைக் காதுகளுக்குக் கொடுத்தாள் ராகா.
“இரு வனிக்கும் கான்ஃபரன்ஸ் போடறேன்” என்றவன் வனிஷாவையும் அழைப்பில் சேர்த்துக் கொண்டான்.
“ராகா, நம்ம மிருது மேம் அப்பாவுக்கு மைல்டா ஸ்டிரோக் மாதிரி வந்திருக்காம். வீட்டில தலை சுத்தி கீழ விழுந்துட்டார். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. இப்போ தான், மிருது மேம் ஃப்ரெண்ட் தீப்தி கால் பண்ணி சொன்னாங்க”
“உனக்கு எதுக்கு டா தீப்தி கால் பண்ணி சொல்லணும்?” என்றாள் வனிஷா
“அது.. அது வந்து..” என்று சற்றே உளறியவன், “அந்த இண்டர்வியூ வென்யூ கேட்க நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணேன். மிருது மேம் எடுக்கலை. அதான் தீப்தி கிட்ட கேட்டேன் மிருதுமேம் எதாச்சும் டிஸ்கஸ் பண்ணாங்களானு. அப்போ இந்த மாதிரி விஷயம்னு சொன்னாங்க.”
“ஓ” என்ற ஒற்றை வார்த்தையில் மைக்கிலுக்குப் பதில் சொல்லியிருந்தாலும், ராகாவின் யோசனை சத்யா தன் வருங்கால மாமனாரை மருத்துவமனை கொண்டு சேர்த்திருப்பான், அதனால் தான் எனக்கு இப்போது வரையிலும் ஒரு செய்தி கூட அனுப்பவில்லை. ஒரு முறை கூட அழைக்கவில்லை” என்ற எண்ணத்தை வம்படியாக மூளையினுள் திணித்தது.
“என்ன ஓங்கற? நாம போய் நாளைக்குப் பார்த்துட்டு வரணும்ல” என்றான் மைக்கில் ஏதோ மிருதுளாவின் தந்தை ராஜமாணிக்கம் அவனது சொந்த சித்தப்பா போன்று அதீத பாசத்துடன்.
“அதெல்லாம் போய்ப் பார்க்கணும்னு அவசியம் இல்ல.” என்றாள் வனிஷா திரும்பவும். ராகாவிற்குப் போக இஷ்டம் இருக்கவில்லை.
“நாம எதுக்குப் போகணும். வேண்டாம்” என்று ராகா பட்டுத் தெறித்தாற் போல.
“அங்க போயி அவன் மிருதுவை கொஞ்சிகிட்டு, ஆறுதல் சொல்லறேன்னு பேசிகிட்டு, தாங்கிட்டு கிடப்பான். இதெல்லாம் பார்த்து நான் வயிறு எரியணுமாக்கும்?” என்ற எண்ணம் தான். ஆனாலும் மைக் விடாமல் வாதாடினான்.
“ஏ க்ளையண்ட் வீட்டில ஒரு எமோஷனல் விஷயம் நடந்திருக்கு. நாம போறது தானே முறை!” என்றான்.
“ஆமா, பெரிய முறை! நீ அந்தத் தீப்தி கோழிய சைட் அடிக்க, இதைச் சாக்கா வச்சு சுத்தற! அதைச் சொல்லுடா!” என வனிஷா எடுத்துக் கொடுக்க, “இதென்ன புதுக் கதை!” என்றாள் ராகா, மைக்கிலிடம்.
மைக்கில் பதில் சொல்லும் முன்னர், முந்திக் கொண்ட வனிஷா, “என்ன அப்படியே ஷாக் ஆகற! ஏன் நீ மட்டும் தான் ஊர் சுத்தணும்னு ஐடியா வச்சிருக்கியா? நம்ம மைக்குக்கும் காலா காலத்தில ஒரு நல்ல இடத்தில வாக்கப்படணும், பொண்டாட்டி சொத்துல உட்கார்ந்து சொகுசா வாழணும்னு பேசிக் ஆசை கூட இருக்கக் கூடாதா?” என்று வினவியவளின் கேள்வி சட்டெனச் சுட்டெறித்தது ராகாவை.
“இவ சத்யா கூட நான் வெளிய போறதை பார்த்திருப்பாளோ! ஒரு மார்க்கமாவே பேசறாளே! தெரிஞ்சு பேசறாளா இல்ல சும்மா நம்ம வாயைக் கிண்டறாளான்னு புரியலையே!” என்று அதிர்ச்சியில் ராகாவிற்குச் சில நொடி பேச்சே வரவில்லை.
நல்ல வேளை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர். இல்லையெனில் மனம் நினைப்பதை கண்ணாடி போன்று பிரதிபலிக்கும் தன் முகம், பயத்தையும் பதட்டத்தையும் அப்படியே படம் விரித்துக் காட்டியிருக்கும். சட்டென ஸ்தம்பித்துப் போன ராகாவின் அமைதியை உள்வாங்கியபடிக்கே இருந்தாள் வனிஷா,
“நீங்க ரெண்டு பேரும் போற திசை சரியே இல்ல. சொல்லிட்டேன். அவனாவது பரவாயில்ல. ஆனா மேடம் பண்ணறது என்ன வகையில சேர்த்தின்னு எனக்கு நிஜம்மாவே புரியலை” என்று சூசகமாகவே பேசினாள்.
“ஏ,என்ன வனி பேசற! நீ பேசறது எனக்குப் புரியவேயில்லையே!” என்று மைக்கில் கேட்க,
“அதாவது சிம்பிளா சொல்லணும்னா, நாம கண்ணை மூடிகிட்ட, நம்ம கண்ணுக்கு தான் மத்தவங்க தெரிய மாட்டாங்க. நாம கண்ணை மூடிட்டதால மத்தவங்க கண்ணுக்கும் நாம தெரிய மாட்டோம்னு நினைக்கக் கூடாது.” என்றாள் திரும்பவும்.
“யார் கண்ணை யார் மூடிகிட்டா? என்ன உளர்ற?” என்றான் மைக்.
“நானு? உளர்றேன்ல… ஆமா, அப்படித்தான் தோணும்” என்று மைக்கிடம் கூறிய வனிஷா, “நான் உளர்றேன்ல ராகா” என்று நக்கலாக ராகாவிடம் வினவினாள். ராகாவிடம் எந்தப் பதிலும் இல்லை.
ஆக, மைக்கிலுக்கு ராகாவின் சங்கதி தெரிந்திருக்கவில்லை. ஆனால் வனிஷா கண்டுகொண்டாள் என்பது ராகாவிற்குப் புரியவும், வேறெதுவும் பேசாமல் அமைதியாகிப் போனாள்.
“என்னமோ உளறு போ! நாளைக்கு மிருது மேம் வீட்டுக்கு நீயும் நானும் போலாம். போய் அவங்க அப்பாவுக்கு எப்படி இருக்குன்னு விசாரிச்சுட்டு வரலாம் என்ன?” என்று அவன் காரியமே கண்ணாக வனிஷாவிடம் கேட்டு, ஒரு கெட்ட வார்த்தையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.
“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு ஆள் ஆளுக்கு ஒரு சின்னப் பையனை பயமுறுத்தறீங்க?” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவன், “நீங்க யாரும் வரலைன்னா பரவாயில்ல, தீப்திக்கு.. ஐ மீன் மிருது மேம்க்கு இப்போ என் சப்போர்ட் ரொம்பத் தேவை. நான் போய்க் காலையில அவங்களை மீட் பண்ணி ஆறுதல் சொல்லலைன்னா என் மனசு தாங்காதுப்பா” என்று கூறலானான்.
“உனக்கும் சமாதானம் செய்யணும்னு தோணுதா?” என்று ராகாவை சங்கேதமாய் அப்போதும் குத்திய வனிஷா, “சரி நாளைக்குப் பார்க்கலாம். எனக்குத் தூக்கம் வருது. வைக்கறேன்” என்று கைப்பேசியைத் துண்டித்தாள்.
ராகாவிற்கு ரொம்பவும் தர்ம சங்கடமாக இருந்தது. அதை விடவும் மற்றவருக்குத் தெரிந்தால் தன்னை இப்படித்தான் கீழாக நினைப்பர் என்ற புரிதலும் முதல் முறையாக அப்போது உண்டாயிற்று.
இத்தனைக்கும் வனிஷா ராகாவிற்கு நல்ல தோழி தான். அவளே ராகாவை குத்தலாகவும், இளப்பமாகவும் பேசுகிறாள் என்னும் போது, மற்றவர், முக்கியமாக மிருதுவும் அவள் சுற்றமும் தன்னை எப்படியெல்லாம் ஏசும் என்று சில நொடி யோசித்துப் பார்த்தாள்.
அவளது எண்ணங்கள் சென்ற திசையே வெகு கரடு முரடாகத் தெரிந்தது. “என்னோட நல்லா பழகின வனிஷாவே என்னைப் படு கேவலமா நினைக்கறாளே, ஒரு வேளை சத்யாவை நான் கல்யாணம் பண்ணிக்கற நிலைமை வந்தா மத்தவங்க என்னை என்னவெல்லாம் பேசுவாங்க. அவன் சொத்துக்காக அவனை மயக்கிட்டதா பேச மாட்டாங்க?” என்ற கவலை பட்டியலில் மேலிடம் பிடித்தது.
இதையெல்லாம் எண்ணிக் கொண்ட ராகாவின் அன்றைய தின உறக்கம் அவளை விட்டு எட்டாத தூரத்திற்குச் சென்றிருக்க, விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில் மைக்கிலுக்குத் தன் கைப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டினாள்.
“நான் உன்னுடன் வரும் விஷயத்தை வனிஷாவிடம் சொல்லாதே” என்று சேர்த்து செய்தி அனுப்பலாமா என்று தோன்றியது. “அவனுக்கு என் மேல கொஞ்சமும் சந்தேகம் இல்ல. இப்படியெதாவது லூசுத்தனம் பண்ணாம இருந்தாலே போதும்.” என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
*****
மறுதினம், காலை மைக்கிலுடன் பைக்கில் மிருதுளாவின் தந்தை சேர்க்கப்பட்டிருந்த அந்தப் பெரிய மருத்துவமனைக்குச் சென்றாள் “பேஷண்டைப் பார்க்க முடியாது. விசிட்டர்ஸ் டைம் இப்போ இல்ல. அதுவுமில்லாம பேஷண்ட் ஐசியுல இருக்கார். சோ, கண்டிப்பா பார்க்க அலவுட் இல்ல” என்று தயவு தாட்சண்யம் பாராமல் இருவரையும் மருத்துவமனையின் வாயிலிலேயே நிறுத்திவிட்டனர்.
“சே, சிம்பதி க்ரியட் பண்ணக் கிடைச்ச ஒரு சான்ஸையும் யூஸ் பண்ண விடமாட்டேங்கறாங்களே! மிருதுவுக்கு லெஃப்ட் ஹேண்ட் மாதிரி கூடவே இருக்கத் தீப்தி, என்னை எவளோ நல்லவன் இவன்னு நினைக்க ஒரு நல்ல வாய்ப்பு இது. சே! மை பேட் லக்” என்றெல்லாம் தன்னைப் போல உளறிக் கொண்டிருந்தான் மைக்கில்.
ராகாவிற்கு, “எதுக்கடா இவன் கூட வந்தோம்” என்ற எண்ணமே. அதிலும் இப்போது சத்யா இங்கே மருத்துவமனையில் நிச்சயம் இருக்கப் போவதில்லை. அது தெரிந்திருந்தும் எதற்காக இங்கே இந்த அதிகாலையில் வந்து தேவுடு காக்க வேண்டும்? என்று தெளிவாய் மனம் யோசித்த போதும், அவள் குறுக்கு புத்தி அவளை வேறு வகையில் இழுத்துச் சென்றது.
“மிருதுகிட்ட லேசு பாசா பேசி, நேத்து அவ அப்பாவுக்கு எப்போ இப்படி ஸ்டிரோக் வந்துச்சு. எதனால வந்துச்சு. யார் ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்தா! சத்யா சார் வந்தாரா? என்ன சொன்னார்? எப்போ வந்தார்? எப்போ கிளம்பினார்?” என்பதைப் போன்ற கேள்விகளுக்கான விடையைக் கறக்க இயலும் என்று சொல்லியது.
அவளுக்குச் சத்யா எப்போது அங்கே வந்தான்? அங்கே மிருதுவுடன் மருத்துவமனையில் உதவி செய்து கொண்டிருந்த காரணத்தினால் தான் அவளுக்குக் குறுஞ்செய்தியோ அழைப்போ விடுக்கவில்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இல்லை, வெறுமனே தன்னிடம் இருந்து விலகி நிற்கப் பார்க்கிறானா என்பது ஊர்ஜிதமாக வேண்டும். அவனாக அன்றைய இரவைப் பற்றிப் பேசாமல் மெளனமாய் விலகி நிற்கத் தான் மட்டும் அவன் மீது விழுந்து புரண்டு பேசுவது தவறு. அவனது வசதிக்காக அவனை வளைத்துப் போட பார்ப்பதாய் அவனுக்கே கூடத் தோன்றிவிட வாய்ப்புண்டு.
“கோல்ட் டிக்கர்” என்று நினைத்துக் கொள்ளக் கூடும். அதனால் தான் மைக்கிலைத் தொற்றிக் கொண்டு ராகா மருத்துவமனை வந்தது, இருவரையும் உள்ளே விடவில்லை என்பதை உடனே மிருதுவிற்கு அழைத்துச் செய்தி தெரிவித்திருந்த மைக்கிலின் அறிவை மெச்சிக் கொள்ளத்தான் வேண்டும்.
மிருதுவிற்கு அழைத்துச் செய்தி சொன்னதுமே, அவள் கீழே ரிஷப்ஷன் வரையிலும் வந்துவிட்டிருந்தாள். மிருது இப்படி அவர்களுக்காகக் கீழே இறங்கி வருவாள் என்று ராகா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மிருதுவின் மீது அவளுக்கு இருந்த சிறிய அளவிலான கோபம் சட்டென மறைந்து போயிற்று.
“எப்படியும் நாங்க அவங்ககிட்ட வேலை பார்க்கறவங்க தான். பெயிட் வர்கர்ஸ் தான். ஆனாலும் கொஞ்சம் கூட ஈகோ இல்லாம, பணக்காரின்னு திமிரு இல்லாம, எங்களைப் பார்க்க கீழ வரைக்கும் வந்திருக்கே இந்தப் பொண்ணு. நானா இருந்தா கண்டிப்பா இப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டேன்” என்று தன் மனதின் எண்ணத்தை மெல்லிய குரலில் மைக்கிலிடம் பகிர்ந்து கொண்டாள் ராகா.
மைக்கிலுக்கு அவன் கவலையே பெரியதாய் இருந்தது. மிருதுவின் பின்னால் தீப்தி தென்படவில்லையே. அவள் இல்லையோ என்று கண்ணும் கருத்துமாக நோட்டம் விட்டவன் காதுகளில் ராகாவின் வார்த்தைகள் விழவில்லை. இதற்குள் மிருது இவர்களின் அருகே வந்துவிட்டிருந்தாள்.
“இப்போ சாருக்கு எப்படி இருக்கு மிருது! இஸ் ஹீ ஸ்டேபிள்?” என்று உண்மையான அக்கறையுடன் வினவினாள் ராகா. ராகா கொஞ்சமும் எதிர் பாரா விதமாக மிருது, ராகாவின் தோளில் சாய்ந்து கொண்டு மெல்லமாய் விசும்பினாள்.
“டாடிக்கு மைட்டா ஸ்டிரோக்ன்னு சி.டி ஸ்கேன்ல பார்த்துட்டு சொல்லியிருக்காங்க. ஐசியூல தான் இருக்கார். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. டாடிக்கு எதுவும் ஆகிடாதுல்ல ராகா?” என்று குழந்தை போல ராகாவின் தோளில் சாய்ந்து தேம்பிய மிருதுளாவை ஆதுரமாய்த் தட்டிக் கொடுத்தாள் ராகா.
அந்த நிலைமையிலும், அவள் நக்கல் மனம் விழித்துக் கொண்டு, “என்ன ஆளாளுக்கு உன் தோள்ல சாஞ்சு ஆறுதல் தேடிக்கறாங்க. உனக்கே இங்க பத்து பேர் ஆறுதலும் அறிவுரையும் சொல்லற நிலைமையில நீ இருக்க! இந்த லட்சணத்துல மேடம் என்ன அன்னை தெரசா ரேஞ்சுக்கு எல்லாருக்கும் அரவணைப்பை அள்ளி வீசிட்டு இருக்கீங்க. இங்கே சாய்ந்து கொண்டு ஆறுதல் தேடிக் கொள்ளுங்கனு போர்ட் வேணா போட்டுக்கறியா” என்று தொக்காகக் கேள்வி கேட்டது.
அந்த நேரத்தில் அவள் நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை ராகாவிற்கு. “நேத்து இப்படித்தான் உன் ஃபியான்சி சத்யசாய்ராமும் இதே மாதிரி என் தோள்ல சாஞ்சுகிட்டான். என் கழுத்தில முகம் புதைச்சுகிட்டான்” என்று சொன்னால், இந்த மிருது என்ன செய்வாள் என்று எண்ணவோட்டம் குதற்கமாகத் தோன்ற, ராகா தன்னைச் சமன் செய்து, மிருதுவுக்கு ஆறுதல் சொல்லும் வேலையில் இறங்கினாள்.
“மிருது! பீ பிரேவ். உங்க அப்பாவுக்கு எதுவும் ஆகாது! எவளவோ மெடிசன்ஸ் வந்தாச்சு இப்போ. எர்லி ஸ்டேஜ்ல ஸ்டிரோக் டயகனைஸ் பண்ணிட்டா போதும். மருந்து இஞ்சக்ஷன்ஸ்னு குடுத்தே சரி பண்ணிடலாம். பயப்படாதீங்க” என்று தேற்றினாள்.
ராகா திடமாய், ஆறுதலாய் பேசப் பேச மிருதுவின் விசும்பல் கொஞ்சம் மட்டுப்பட்டது. “தேங்கியூ கைஸ். நீங்க பார்க்க வருவீங்கன்னு நான் கொஞ்சமும் எக்ஸ்பெக்ட் பண்ணலை. ரியலி இட் மீன்ஸ் எ லாட்” என்று உள்ளார்ந்த அன்புடன் பேசிய மிருதுவின் மீதிருந்த மரியாதை உயர்ந்து தான் போனது.
“நீங்க மட்டும் தனியாவா இருக்கீங்க ஹாஸ்பிடல்ல. கூட யார் இருக்கா?” என்று அப்போதும் விடாக்கண்டனாக வினவினான் மைக்கில். ராகா அவனை முறைப்பதைக் கண்டு கொள்ளாமல் மிருதுவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
“அம்மா, நான் அப்பறம் தீப்தியும் நைட் முழுக்க இருந்தோம். தீப்தி இப்போ கொஞ்சம் முன்னால தான் வீட்டுக் போயிட்டு ரெஃப்ரெஷ் ஆகிட்டு, எனக்கு டிரஸ் எடுத்துட்டு வர கிளம்பினா. அம்மா ரூம்ல தான் இருக்காங்க” என்று மைக்கிலின் கேள்விக்குப் பதிலளித்தாள் மிருது.
“சத்யா சார் வரலையா மிருது?” என்று தன் பங்கிற்கான கேள்வியை இயல்பாக வினவுவது போலக் கேட்டாள் ராகா.
“ம்ம், சத்யா தான் டாடிய ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்ததே. நிச்சயதார்த்தம் பத்தி என்னவோ பேசணும்னு டாடிய மீட் பண்ண சத்யா வந்திருந்தார். அப்போ தான் டாடி மயக்கம் போட்டு விழுந்தார். சத்யா நேத்து நைட்டெல்லாம் கூடவே இருந்து டாடியையும் என்னையும் பார்த்துகிட்டார்.”
“ஓ, இப்போ மேலையா இருக்காங்க?” என்று ராகா வினவ, இது என்ன கேள்வி? இது அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றா என்ற எண்ணம் மைக்கிலுக்குமே லேசாக எழுந்தது.
ஆனால் மிருது அதைப் பெரியதாய்ப் பாவிக்காமல் பதில் கூறினாள். “இல்லை. லேட் நைட் வரைக்கும் இருந்தார். மார்னிங் ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்கு போகணும்னு எர்லி மார்னிங் கிளம்பினார்.” என்று செய்தி சொல்லி முடித்தாள். ராகாவிற்குப் புசுபுசுவென எங்கிருந்தோ கோபம் வந்து சேர்ந்து கொண்டது. எதற்காக இந்தக் கோபம் என்று புரியவில்லை.
“நேத்து நைட் முழுக்க மிருது கூட இருந்திருக்க. அதனால தான் எனக்கு ஒரு மெசேஜ் கூட அனுப்பலையா? அப்போ அவ இல்லைன்னா தான் என் நியாபகம் வரும். அவ பக்கத்தில இருந்தா நான் தேவையில்லையா?” என்று மட்டித் தனமாகக் கோபம் கொண்டாள்.
“ஏ லூசு. அவ பக்கத்தில இருந்தா அந்த நேரத்தில அவன் எப்படி உனக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்க முடியும். பைத்தியம் மாதிரி யோசிக்கற நீ” என்று எடுத்துக் கூற முயன்ற மனசாட்சியின் வார்த்தைகளைச் செவிகளில் வாங்கிக் கொள்ளவே இல்லை ராகா,
“உனக்கு மிருது தான் முக்கியமா அப்போ? என்ன தேவைக்கு என்னைக் கட்டி கட்டி புடிச்சு, கழுத்துல மாடு மாதிரி மூச்சு விட்டுட்டு இருந்த? “ப்ளீஸ் ராகா, டூ மினிட்ஸ் ராகான்னு” எதுக்குக் கெஞ்சின? விடியக்காலையில கிளம்பிட்டல. அப்போவாது எனக்கு ஒரு மெசேஜ் பண்ணத் தோணுச்சா உனக்கு?” என்று அவன் மீது கோபம் கொண்டது மனம்.
தன் கோபத்தை மிருதுவிடம் காட்டிவிடாமல் இருக்க, வாய்க்கு வேலை கொடுக்கும் பணியினைத் தேர்ந்தெடுத்தாள் ராகா. மிருதுளாவை அழைத்துக் கொண்டு அந்த மருத்துவமனையின் காஃபிடேரியாவில் சூடாகக் காபி வாங்கிக் கொடுத்து தெம்பூட்டினாள்.
ராகாவின் இதயம் என்னவோ அந்தக் காபியை விடச் சூடாகக் கொதித்துக் கொண்டிருந்தது. சத்யாவின் மீது தோன்றியிருந்த ஆத்திரத்தை எங்கே எப்படிக் காட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், மைக்கில், “அப்பாவுக்கு இப்போ இப்படி ஆகிட்டதால் உங்க நிச்சயதார்த்தம், மாரேஜ் டேட்லாம் தள்ளிப் போக வாய்ப்பிருக்கு இல்லையா மிருது மேம்” என்று அலுவல் ரீதியாக ஏதோ பேசலானான்.
எங்கிருந்து ராகா மிருதுவுக்கு அந்த யோசனைக் கூறினாள் என்று இப்போதும் அவளுக்கு நினைவில்லை. ஆத்திரத்தில் இருந்த ராகாவின் இதயம், எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் போக்கில் பேசியது.
“மிருது, நான் சொல்லறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க முன்னாடி டிசைட் பண்ண மாதிரி, உங்க நிச்சயதார்த்தத்தை நீங்க ப்ளான் பண்ண டேட்ல வைக்கப் பாருங்க. உங்க டாடி இப்போ உடம்பு கொஞ்சம் தான் முடியாம இருக்கார். அவர் நல்லா இருக்கப்போவே அவர் ஒரே செல்ல பொண்ணோட நிச்சயத்தைப் பார்த்தா, ரொம்பத் தெம்பா ஃபீல் பண்ணுவார்.” என்று கொழுத்திப் போட்டாள்.
ராகாவின் சொற்கள் கேட்டு மிருதுவின் புருவங்கள் சுருங்கத் துவங்கியது. “மிருது கண்டிப்பா இதை யோசிப்பா, இப்போவே நிச்சயம் வைக்கலாம்னு சொல்லுவா! சத்யா தன்னோட அக்கா வரட்டும்னு சொல்லுவானா? இல்ல மிருதுவுக்காக விட்டுக் குடுப்பானா?”
“ரெண்டுமே எனக்குச் சாதகம் தான். இப்போவே நிச்சயம் வைக்கலாம்னு மிருது சொன்னா, வேற வழியில்லாம சத்யா ஒத்துகிட்டாலும், தன் அக்கா இல்லையேன்னு மனசில ஓடிட்டே இருக்கும். கில்டியா ஃபீல் ஆகும். நான் மிருதுவோட இடத்தில இருந்தா, அவனுக்காக விட்டுக் குடுப்பேன்னு கண்டிப்பா நினைப்பான்.”
“இல்லை, வேணாம் அக்கா வரட்டும்னு மிருதுகிட்ட சொன்னா, அவ அவங்க அப்பாவோட நிலைமையை வச்சு கத்தி ஆர்ப்பாட்டம் செய்வா! என் அப்பா முக்கியமில்லையா அப்போன்னு சண்டை போடுவா! எது எப்படியோ, மிருது கூட இருந்தா அவனோட லைஃப் இப்படித்தான் புரிதல் இல்லாம போகும்னு அவன் உணர்வான். அது போதும் எனக்கு” என்று “கொளுத்திப் போட்டுட்டியே பரட்டை” என்று வில்லத் தனமாக யோசித்தது.
மிருதுளாவிற்கு யோசனை சொல்லிய ராகாவின் முகத்தில் ஏன் இந்த நேரத்தில் கொஞ்சமும் பொருந்தாத சம்பந்தமில்லாத ஈவில் விட்ச் புன்னகை பூக்கிறது என்று குழம்பிய மைக்கில், ராகாவையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தான்.