அடுத்த நாள் காலை மிகவும் மகிழ்ச்சியுடனே யாழிக்கு விடிய நேரே குளித்து விட்டு கீழே சென்றவள் காபி போட்டு மாமனார் மாமியார் என்று அனைவருக்கும் கொடுக்க,
‘எதுக்கும்மா நீ…’ என்று ஆரம்பித்த மரகதத்திடம்,
“இன்னைக்கு என்னோட நாள் அத்தை எனக்கு பிடிச்சதை நான் செய்யலாம் தானே..??” என்று கேட்டு அவரை பதில் கேள்வி கேட்க முடியாமல் செய்தவள் நேரே மாடிக்கு சென்று அதிர்துடியனிடம் கொடுக்க,
‘உன்னை எதுவும் செய்ய கூடாது சொன்னேனேடி அப்…’
‘இன்னைக்கு என்னோட நாள்ன்னு நேத்து நீங்க தானே சொன்னீங்க..??’
‘ஆமா… ஆனா..,’
“என்னோட நாள்ல எனக்கு பிடிச்ச மாதிரி நான் இருக்கலாம் தானே..??” என்று கேட்டவளுக்கு கிட்டத்தட்ட இரு வாரங்கள் அதிர்துடியனுடன் சரியாக பேச கூட முடியாமல் போனதில் அவனுடனான இன்றைய நாளின் நொடி பொழுதையும் தவற விட அவள் தயாராக இல்லை.
‘ஆம்’ என்று தலை அசைத்தான்.
“அப்போ முதல்ல இந்த காபி குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்று அவன் மறுக்காத வகையில் அவனை மடக்கி இருந்தாள் அவன் மனையாள்..!!
பின்னே பெண்ணடிமைத்தனம் என்ற பெயரில் இங்கு பலரும் தனக்கு பிடித்தவர்களுக்கு அவர்களுக்கு பிடித்ததை கூட செய்ய முடியாத வகையில் சமூக வலைதளங்களால் மறைமுகமாக மூளை சலவைக்கு உட்படுத்த படுகின்றனர்.., யாழி போன்று சுயமாக சிந்திக்கும் திறனும் பக்குவமும் இல்லாத பல மாணவ மாணவிகள் சமூக வலைதளங்களில் சுழலும் இது போன்ற பேச்சுக்களால் கவரப்பட்டு தாங்களும் அப்படி இருப்பது தான் பெண் சுதந்திரம், ஆடை குறைப்பே ஆடை சுதந்திரம், சமஉரிமை என்ற தவறான கொள்கையை அவர்களுக்கு ஏற்பில்லை என்றாலும் ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாக்க படுகின்றனர்.
பெண்ணியம், சுதந்திரம், ஆணாதிக்கம் இவற்றிற்கு எல்லாம் சரியான அர்த்தம் தெரியாமல் பெண் கரண்டி பிடிப்பது கேவலம், அன்பின் மிகுதியால் இணக்கத்தோடு கணவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வது அடிமைதனம், கணவனை அவன் வீட்டாரை எதிர்த்து ஒன்றை செய்வது தான் புதுமை என்ற தவறான புரிதலை கொண்டு தங்கள் வாழ்வை சிக்கலாக்கி கொள்பவர்கள் ஏராளம்…!!
என்ன செய்ய..?? சமூகவலைதளங்களின் ஆதிக்கத்தில் இப்போதெல்லாம் கைபேசியில் காண்பது மட்டும் தான் உலகம், அவ்வாறு மட்டுமே மானுட சமூகம் கட்டமைக்க பட்டுள்ளது தாங்களும் அதுனுள் பொருந்தி போனால் மட்டுமே வாழ முடியும் என்ற மாயையை கொண்டு பெரிதாக எதையும் பகுத்தறியாமல் கண்ணால் காண்பது கேட்பது எல்லாமே நிஜம் என்று இருப்பவர்களுக்கு எதையும் தீர விசாரித்து முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி போகின்றனர்…
சிறு பிள்ளைகள் கையிலும் கைபேசி புழங்கும் இக்காலத்தில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் சிறுக சிறுக மேலோங்கி பெருந்திரளான கூட்டம் ஏற்றுக்கொள்ளும் ஒன்றை தானும் ஏற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் தள்ளி விடுகிறது.., தனி மனிதர்களிடம் பெரும் மாற்றத்தை உண்டாக்கி அவர்களுக்கே தெரியாமல் இது போன்ற கருத்துக்களை மனதில் விதைத்து விடுகிறது.
ஆனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கைபேசி இல்லாத நிலையில் வலைதளங்களில் யாருடைய போதனையும் இல்லாமல் யாழி ஓரளவு தன்னை தானே சுயபரிசோதனை செய்து தனக்கு பிடித்த கணவனுக்கும் அன்பான உறவுகளுக்கும் செய்வதில் ஆத்மார்த்தமான மகிழ்வே முன்னிலை வகிப்பதை கண்டு கொண்டு அதை செயலாற்றுகிறாள்.
************************************************
‘எப்படி இருக்கு..??’ என்று யாழி முதல் முறை கணவனுக்கு செய்து அவன் பாராட்டை அனுபவிக்க காத்திருந்தாள்.
எப்போதுமே ஆசிரியரின் விருப்ப மாணவியாக திகழ நினைக்கும் குழந்தைகள் தான் செய்த ஏதோ ஒன்றை அல்லது தனக்கு கிடைத்ததை ஆசிரியருக்கும் பகிர்ந்தளித்து தனக்கு அவரை எவ்வளவு பிடிக்கும் என்பதை நிருபித்து அவரிடம் இருந்து பாராட்டு வார்த்தைகளை பெரும் மனநிலையில் தான் யாழியும் இப்போது…!!
‘நீயா போட்ட..??’
‘ஆமா..’,
‘வாவ் யாழி சூப்பர் டேஸ்ட்..!! எனக்கு பிடிச்ச மாதிரி டிகாஷன் பால் சரியான அளவுல சேர்த்து எனக்கு பிடித்த சூட்டுல ஆத்தி எடுத்துட்டு வந்திருக்க ஐ லவ் இட்’ என்று மெச்சிக்கொண்டவன் மனைவயின் முதல் காபியை துளி துளியாக ரசித்து குடிக்க யாழி முகத்தில் அத்தனை பிரகாசம்.
‘நிஜமாவே உங்களுக்கு பிடிச்சிருக்கா..??’
‘உண்மையா தான்டி எப்படி சர்க்கரை கூட எனக்கான அளவு சேர்த்த..??’ என்று அவன் பார்க்க,
‘அது… அது… அத்தை கிட்ட ஏற்கனவே உங்க எல்லாருக்கும் என்னவெல்லாம் பிடிக்கும்ன்னு கேட்டு வச்சிருந்தேன்…’
“இது என்ன கேள்வி..?? எங்க வீட்ல எங்க அம்மா விஷ்ணு எல்லாருக்கும் என்னலாம் பிடிக்கும் பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் அதே மாதிரி தானே இங்கயும் நான் அங்க சமைச்சப்போ கூட அவங்களுக்கு பிடிச்சதை செய்து கொடுப்பேன்” என்றிட அதிர்துடியனோ எத்தனை கள்ளம் கபடமற்று மாமியார் வீட்டு சொந்தங்களையும் தன் சொந்தங்களை போலவே அவர்களின் பிடித்தம், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன் மனைவியின் குணத்தில் இன்னுமே வேகமாக அவள் பால் வீழ்ந்து கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க இன்னைக்கு ப்ரேக்பாஸ்ட், லஞ்ச் எல்லாமே நான் தான் பண்ண போறேன்..’,
‘நீ எதுக்கு…’ என்று ஆரம்பித்தவன் புன்னகையுடன் ‘சரி’ என்று தலை அசைத்தான்.
முந்தின நாளே யாழி மகேஷ்வரன், சுகமதி மற்றும் விஷ்ணுவையும் அங்கு வர சொல்லி அழைப்பு விடுத்திருந்தாள் யாழி.., காலை அப்பா அம்மாவில் தொடங்கி மாமியார், கணவன் வரை அனைவர்க்கும் பிடித்தவிதமாக இட்லி, பொங்கல், பூரி, பன்னீர், என்று பல விதங்களை ஆராதனாவின் துணையோடு சேர்ந்து இரண்டு மணி நேரத்தில் செய்து முடித்தவள் அனைவரையும் அமர வைத்து தன் கையால் பரிமாற,
அவள் பெற்றோரோ நம்ப முடியாமல் மகளை பார்த்திருந்தனர்…
‘எப்படி இருக்கு..?? உங்களுக்கு பிடிச்சிருக்கா..??’ என்று கணவனை கேட்க,
‘நீ இவ்ளோ நல்லா சமைப்பியா யாழி..??’ என்று முதல் முறையாக மனைவியின் சமையலை சாப்பிட்டவனிடம் ஆச்சர்யமே மேலோங்கியது..,
சுகமதிக்கும் அவருக்கு பிடித்ததை பரிமாற அவரோ இன்னுமே பிரமிப்பில் இருந்து மீளவில்லை…, சாப்பிட்டு முடித்து பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க அவர்களுக்கு டீ கொடுத்து விட்டு, ஹாலின் ஓரத்தில் இருந்த கணினி எதிரே அமர்ந்து யாழியும் ஆராதனாவும் அடுத்த வீடியோவிற்காக ஏதோ விவாதித்தவாறு குறிப்பு எடுத்து கொண்டிருந்தனர்.
எப்போதும் கைபேசியுடன் சுற்றும் தங்கள் மகள் இப்போது புத்தகமும் கையுமாக இருப்பதை கண்டு அவள் பெற்றோருக்கு நெகிழ்ந்து போனது.
‘எங்கே பெரிதாக திருமணத்தில் ஆர்வம் காட்டாதிருந்த மகன் ஒற்றையாகவே நின்று போவானோ’ என்று கவலை கொண்டிருந்தவருக்கு யாழிக்கு அவன் சம்மதம் தெரிவித்த போது இருவருக்கும் பெரிதாக அறிமுகம், புரிதல் இல்லாமல் இத்தனை அவசர திருமணம் எப்படி தொடங்குமோ என்று பயந்து போயிருந்தவருக்கு மருமகளின் நடவடிக்கைகள் அத்தனை மகிழ்வை கொடுத்திருந்தது.
அருகே இருந்த கணவன் மற்றும் சம்பந்திகளிடம், “நான் தான் அப்பவே சொன்னேனே இது அண்ணாமலையான் போட்ட முடிச்சு யாழியை தவிர அதிக்கு வேற யாருமே பொருத்தமா இருக்க முடியாது.. மூத்த மருமகளை பொறுத்து தான் ஒரு குடும்பத்தின் நிம்மதி, சந்தோஷம், கௌரவம் எல்லாமே தீர்மானிக்க படும் ஆனா இங்க யாழி கிடைக்க நாங்க புண்ணியம் பண்ணி இருக்கணும்.., இப்படி ஒரு பாசமான, தங்கமான மருமகளை எங்களுக்கு கொடுத்ததுக்கு நன்றி சம்பந்தி” என்று கூற மகேஷ்வரனுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் சுந்தரலிங்கத்தை பார்க்க,
“நிஜமா தான் மகேஷ் யாழிகிட்ட இப்படி ஒரு versatality நான் எதிர்பார்க்கலை.., என் வைப் எப்பவும் யாழி பத்தி தான் சொல்லிட்டே இருப்பாங்க” என்று கூற சுகமதிக்கு கண்கள் கலங்கி விட்டது.
மதிய உணவை முடித்து கொண்டு மகேஷ்வரனின் குடும்பம் கிளம்பிட, மாலை அதிர்துடியனை அழைத்து கொண்டு யாழியும் அவனோடு பைக்கில் கிளம்பினாள்.
கார் எடுத்து வந்தவனிடம் வேண்டாம் என்று சொல்லி அவள் தான் பைக் எடுக்க வைத்திருந்தாள்.
நேரே அவனை அழைத்து கொண்டு மால் சென்றவள் ‘எனக்கு ஷூட்க்கு ட்ரெஸ் எடுங்க’ என்று கூற அவனால் மறுக்க முடியாமல் அவளுக்கு பொருத்தமானதை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அவளிடம் ‘பிடிச்சிருக்கா..??’ என்று கேட்க,
“நான் எந்த ட்ரெஸ் போட்டாலும் என்னை பார்த்து ரசிக்க போறது நீங்க தானே..??” என்று அவள் எதிர்கேள்வி கேட்க, அதிர்துடியனிடம் இதழ் கொள்ளா புன்னகை..!!
‘இத்தனை நாட்கள் ட்ரெண்டிங் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் மற்றவர்கள் பதிவையும், கண்கவர் விளம்பரங்களையும், தோழிகளின் பகிர்வையும் கொண்டு ஒரு ஆடையை அது அவளுக்கு பிடிக்கிறதோ இல்லையே பொருத்தமாக இருக்குமா இல்லையா..?? என்ற யோசனை கூட இல்லாமல் அவர்களோடு பொருந்தி போக வேண்டி உடைகளை அணிந்து வந்தவள் முதல் முறை தன் கணவனின் ரசனைக்கேற்ப எடுக்க முடிவு செய்திருந்தாள்’.
இதுவும் அவள் முடிவே..!! ஆனால் அதிர்துடியன் மீது கொண்ட அன்பால் காதலால் எடுத்தது..
எப்படி இருந்தால் என்ன..?? மொத்தத்தில் அதிர்துடியன் சத்தமே இல்லாமல் அவன் நினைத்ததை அவளை பேச செய்து அவன் விரும்பியதை அவளை செய்ய வைத்து அவளை மாயையில் இருந்து மீட்டு நிஜ உலகில் வாழும் வகையில் அவளை சிறுக சிறுக செதுக்கி கொண்டிருந்தான்.
‘ஹ்ம்ம் சீக்கிரம் உங்களுக்கு பிடிச்சதை எடுங்க’ என்று அவள் அவசரபடுத்த,
‘ஏன்டி நீ இதைபோட்டுட்டு வந்தா நான் உன்னை ரசிக்கிறதா இல்ல ஷூட் பண்றதா..??’ என்று கேட்க,
யாழியோ என்ன பதில் சொல்வது என்று புரியாமல் ஒரு நொடி விழித்தவள், ‘எனக்கு தெரியாது ஆனா நீங்க தான் எடுக்கணும்’ என்று இதழ்களை சுழித்து அவனை பார்க்க,
மூச்சை இழுத்து வெளியேற்றியவன் மனமோ, “டேய் அதி இவ இப்படியே உன்னை முழுசா கவுத்துடுவா போல நீ எப்பவும் கண்ட்ரோல்ல இரு, முடிஞ்ச வரை ஸ்ட்ரிக்ட்டாவே இருடா சிரிச்சிடாத இல்லை அவ்ளோதான்” என்று அவனை கட்டுபடுத்த,
‘இப்போ வாங்க உங்களுக்கு நான் எடுக்குறேன்’ என்று அவள் உரிமையை விட்டு கொடுக்காமல் அவனை அழைக்க,
‘ஏன்டி அப்போ படிக்கிற வேலையை விட்டுட்டு என்னை ரசிச்சிட்டு இருக்க போறியா..??’ என்று அவன் நேரடியாக கேட்க,
விழிகள் விரிய அவனை பார்த்த யாழியோ தன்னை கண்டு கொண்டானே என்ற தவிப்புடன் நாக்கை கடித்து கொண்டு கண்களை இறுக மூடி கொள்ள,
அதிரோ மீசை துடிக்க அவளை பார்த்திருந்தவன் ‘சரி வா’ என்று கை பிடித்து அழைத்து கொண்டு அடுத்த தளத்திற்கு சென்றவன் அவள் விருப்பபடி அவனுக்கு தேர்ந்தெடுக்க அமைதியாக கை கட்டி கொண்டு அவளை பார்த்திருந்தவன் அவள் எடுத்து முடிக்கவும் பில்லை கொடுத்துவிட்டு,
‘சரி சொல்லு அடுத்து எங்க..?? ஏதாவது படத்துக்கு போகலாமா ..??’ என்றான்.
‘படமா..??’ என்று யோசித்தவளுக்கு மூன்று மணி நேரம் அவனுடன் பெரிதாக பேச முடியாதே சத்தமாக இருக்குமே என்று யோசித்தவளுக்கு அவனுடனான இந்த நாளில் முழுதாக அவனோடு அவன் அருகில் எந்த குறுக்கீடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற ஆசை அதனால்,
‘நாம போட் ஹவுஸ் பார்க் போலாமா..??’ என்று கேட்டு அவனோடு அங்கு சென்றவள் மேலும் இரண்டு மணி நேரம் செலவிட்டு பின் புக் ஷாப் அழைத்து சென்றவன் இரவு உணவையும் அவள் ஆசைப்படி முடித்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
********************************
வாரம் ஒரு நாள் (அவர்களுக்கான நாளில்) இரவு படிக்க வேண்டிய கட்டாயம் யாழிக்கும் ஆராதனாவிற்க்கும் கிடையாது, ஆனால் விரைவாக தூங்கி விட வேண்டும் என்று ஏற்கனவே அதிர்துடியன் கூறி இருப்பதால் ஆராதனாவுடன் அடுத்த நாளுக்கான பாடங்களை திட்டமிட்டு விட்டு அறைக்கு திரும்பி இருந்தாள் யாழி.
அதிர்துடியனும் அப்போது தான் முக்கியமான அழைப்பை பேசி முடித்து கைபேசியை அணைத்து மேஜை இழுப்பறையில் வைத்து கொண்டிருந்தான்.
யாழி மீண்டும் வெளியில் வருவதை கண்டு, ‘எங்கடி போற..??’
‘உங்களுக்கு பால் எடுக்க மறந்துட்டேன் இருங்க..’ என்றவள் அவன் பேச்சை கூட கேட்காமல் கீழே ஓடி சென்றிருந்தாள்.
‘என்ன இது இன்னைக்கு படிக்காம சீக்கிரம் தூங்க வந்துட்டா..??’ என்று கீழே செல்பவளையே பார்த்து நின்றவனிடம் வந்த ஆராதனாவும் “அண்ணா நாளைக்கு போர்ஷன் முடிச்சிடுவோம் மறுநாள் ஷூட் வச்சிக்கலாம் குட் நைட்ண்ணா” என்று தன் அறைக்கு சென்றாள்.
அப்போது தான் இன்றைய நாள் நினைவில் வர, ‘அடேய் அதி திரும்ப பூஜை புனஸ்காரம்ன்னு அவ ஏதாவது வில்லங்கமா ஆரம்பிக்கும் முன்னாடி அவ கையில சிக்காம போய் தூங்கிடுடா’ என்று அவசரமாக உடை மாற்றி கொண்டு வந்தவன் இருவருக்கும் இடையில் அவளது டெட்டியை வைத்து விட்டு விளக்கை அனைத்து இழுத்து போர்த்தி கொண்டு படுத்து விட்டான்.
அறைக்கு திரும்பிய யாழி கணவனை எழுப்ப அவனோ ‘தூக்கம் வருதுடி நீயே குடி’ என்று மறுத்த போதும் அதியை விடாமல் எழுப்பி பாலை குடிக்க செய்தே படுக்க விட்டவள் தானும் உடை மாற்றி வந்து தன்னிடத்தில் படுத்தாள்.
மேலும் அரை மணி நேரம் கடந்தும் தூக்கம் வராமல் யாழி புரண்டு கொண்டிருந்தாள்… பின்னே தினமும் இரண்டு மணி வரை படித்து கொண்டு இருந்தவளுக்கு வழக்கத்திற்கு மாறாக இன்று சீக்கிரம் தூங்க வேண்டும் என்றால் எப்படி முடியும்…?? கடந்த இருவாரமும் அதிர்துடியன் வேலை விஷயமாக சென்று விட்டதால் ஆராதனாவுடன் கதை பேசி, விவாதம் செய்து, நடனமாடி என்று அவளுடனே உறங்கி விட்டவளுக்கு இப்போது பேசவும் ஆள் இல்லாமல் போனதில் உறக்கமும் இல்லை.
பல நிமிடங்கள் தூக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தவள் பேசாமல் விளக்கை போட்டு கொண்டு படிக்கலாமா..?? என்று யோசித்து கொண்டிருந்த போது தான் இருவருக்கும் இடையில் இருந்த டெட்டியை கவனித்தாள்.
‘இது வேற..’ என்று கோபமாக அதை பார்த்தவள் டெட்டியை தாண்டி அவனை பார்க்க அதிர்துடியனோ அவள் புரண்டு கொண்டிருந்ததில் உறக்கம் வராமல் போனாலும் அவளது ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கி கொண்டிருந்தவன் இப்போது மூச்சை கூட வெளியிடாமல் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு படுத்திருந்தான்.