மனதில் இருந்த பாரத்தைச் சத்யாவின் தலையில் தூக்கிப் போட்டுவிட்ட திருப்தியில் ராகா அன்றைய இரவை நிம்மதியாகவே கழித்தாள். சத்யாவின் மீதான கோபம் அவள் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
“என்னை என்ன நினைச்சுட்டு இருக்கான் இவன்? இவனோட பணத்துக்காக நான் இவனை விடாம துரத்தறேன்னு தப்பு கணக்கு போட்டிருக்கான்” என்று கொந்தளித்தவள், பிஜி வந்ததும் நடந்தவற்றை வழக்கம் போல ரேணுவிடம் ஒப்பித்தாள்.
ரேணுவிடம் சொல்லி முடிக்கவும் மனம் இன்னமும் லேசானது போன்ற உணர்வு. அதை விடவும், “சரி விட்றா செல்லக்குட்டி பார்த்துக்கலாம். ஒரு வீரியோட வாழ்க்கையில சில பல சருக்கல்கள் இருக்கறது சகஜம்” என்று அதையும் இதையும் பேசி ரேணு, ராகாவை சிரிக்க வைத்திருந்தாள்.
ரேணுவிடம் பேசிவிட்டு, சிறிது நேரம் தன் தாய் தந்தை, அண்ணன் எனக் குடும்பத்தார் அனைவரிடமும் வீடியோ கால் பேசிய ராகாவிற்கு வீட்டு நினைப்பு அதிகமாகியது. என்னவோ அவர்கள் எல்லோரும் ஒன்றாக ஒரு கட்சியில் இருப்பது போலவும், தான் மட்டும் தனிக் கட்சி போலவும் தோன்றியது. எல்லாரையும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அதிகமாகியது.
ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இங்கே தனியாக இருந்தால், மனம் அமைதி கொள்ளாமல் சத்யாவைப் பற்றியே எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் என்று நினைத்தாள்.
“உடம்பு சரியில்ல நட்ஸ். எனக்கு ஒரு மூணு நாள் லீவ் வேணும்” என்று நடாஷாவிடம் சொல்லி அனுமதி பெற்றவள், அடுத்தத் தினம் காலையே சென்னைக்கு ரயில் ஏறியிருந்தாள்.
வீட்டினர் யாருக்கும் தான் வருவது குறித்துச் செய்தி சொல்லாமல், திடுதிப்பென மதியம் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டிய ராகாவை தூக்க கலக்கத்தில் வந்து கதவினைத் திறந்த முத்துலட்சுமி ஆச்சர்யமாகப் பார்த்தார்.
“என்னடீ சொல்லாம வந்திருக்க? எதாச்சும் பிரச்சனையா? உடம்பு சரியில்லையா?” என்று அவளை மேலும் கீழும் தினுசாகப் பார்த்துக் கொண்டே வினவினார். பின்னே அவள் சென்னை வந்து முழுதாய் 6 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தது.
எப்போது கூப்பிட்டாலும், “வேலை இருக்கு, ஃபன்ஷன் இருக்கு. சென்னையில வெயிலா இருக்கு, அங்க மழையா இருக்கு ரோடெல்லாம் தண்ணீ நிக்கும், ட்ராஃபிக் இல்லாம ஃப்ரீயா இருக்கு. பெங்களூர் மாதிரி இல்ல. எல்லாரும் இடிக்காம வண்டி ஓட்டறாங்க. அதனால பிடிக்கல” என்று நக்கலாக எதாவது சாக்கு சொல்லி வராமலேயே தவிர்த்துவிடுவாள்.
இரு முறை பெற்றோரும், ஒரு முறை அண்ணனும், ரேணுவும் இடையில் பெங்களூர் வந்து இவளைப் பார்த்துவிட்டு வந்ததோடு சரி.
“ஒரு பொண்ணு 6 மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தா ஒரு தாய் இப்படித் தான் வரவேற்பாளா? நீ பார்க்கற எந்தச் சீரியலுமே உனக்கு ஒரு தாய் தன் பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் குடுக்கலையா?” என்று அவள் அன்னையைப் போலவே பேசிக் கொண்டே, அவள் அறையினுள் சென்றாள்.
அவளது அறையினைத் தற்காலிகமாக, அண்ணன் மகனின் விளையாட்டுப் பொருட்கள் ஆக்கிரமித்திருந்தன. கட்டில் முழுக்கவும் ரேணுவின் சேலை கொண்டு டெண்ட் கட்டப்பட்டிருந்தது. கீழே அவனது விளையாட்டுப் பொருட்கள் சிதறிக் கிடந்தன.
“ஓ, நான் ஒரு 6 மாசம் வரலைங்கவும், என் ரூம் மொதற் கொண்டு ஆக்கிரமிச்சிருக்கீங்க. இது மட்டும் தானா, இல்ல என் திங்கஸ் எல்லாத்தையும் பாத்திரகாரனுக்குப் போட்டு ரெண்டு எவர்சில்வர் தட்டு வாங்கி அடுக்கி கிட்டியா?” என்று அன்னையிடம் எகிறினாள்.
முத்துலட்சுமி அவசரமாக டெண்ட்டைப் பிரிக்க எத்தனிக்க, “விடு விடு, அப்பறம் உன் பேரன் ஸ்கூல்விட்டு வந்து அழுகப் போறான்.” என்று பெருந்தன்மையாக மொழிந்துவிட்டு, “சாப்பிட ஏதாவது இருக்கா?” என்று அடுத்தபடியாக வினவ, முத்துலட்சிமியின் முகம் இன்னமும் படபடப்பானது.
“சாப்பாடு மிட்சம் இல்லையே டீ. நீ வருவேன்னு எனக்கு எப்படித் தெரியும்? சாயந்தரம் சப்பாதி போடறேன்னு ரேணு சொன்னாளா, அதனால மதியத்துக்குச் சாப்பாடு கம்மியா தான் வச்சேன்”
“ஓ, ரேணு சொல்லிட்டா, அதனால கம்மியா வச்ச?” என்று வில்லத்தனமாய் அன்னையிடம் வினவ,
“ஏங்க இங்க வாங்க! இன்னும் என்ன தூக்கம்? உங்க பொண்ணு சொல்லாம கொள்ளாம பெங்களூர்ல இருந்து வந்து என்னைச் சும்மா மிரட்டறா, அந்த ஸ்விக்கில அவளுக்கு என்ன வேணுமோ கேட்டு ஆடர் பண்ணுங்க. பசிக்குதுன்னு நினைக்கறேன். என்னை ரொம்பப் பிராண்டரா” என்று ஆழ்ந்த மதிய உறக்கத்தில் இருந்த ராகாவின் தந்தையை எழுப்பி விட்டிருந்தார்.
அவரும், “எப்படா வந்தா? ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் ஸ்டேஷன் வந்திருப்பேன்ல…” என்று வினவினார்.
தாயிடம் காட்டிய “பீஸ்ட் மோட்டை” தன் தந்தையிடம் ராகா கொண்டு செல்ல மாட்டாள். அதனால தன்மையாகப் பதிலளித்துவிட்டு, தந்தை ஸ்விக்கியில் ஆடர் செய்த மட்டன் பிரியாணியைத் திவ்யமாய் உண்டுவிட்டு, தன் அறையில் வந்து தஞ்சம் புகுந்தாள்.
அதுவரையிலும் அணைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசியை உயிர்ப்பிக்க, அதில் வாட்ஸ்ஸப் மெசேஜ்கள் மலையாய் குவிந்தன. வனிஷா, மைக்கில் நடாஷா என்று அலுவலகச் செய்திகள் நிறைய இருந்தன. அதில் தனியாய் மிளிர்ந்தது மிருதுவின் குறுஞ்செய்தி தான்.
அதைத்தான் ராகா முதலில் திறந்தாள். “அப்பா இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துட்டார். உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்.” என்று அனுப்பியிருந்தாள்.
“டே கேர்” என்று மறுமொழி அளித்தவளுக்கு அடுத்த நொடியே சத்யாவைப் பற்றிய நினைவு எழுந்தது.
நேற்று பிஜி வந்து சேர்ந்த அடுத்த நிமிடமே, தொடர்ந்து சத்யாவிடமிருந்து அழைப்புகளாய்க் குவியும், “ஒரு ஃபோனைக் கூட அட்டெண்ட் பண்ணக்கூடாது. கட் பண்ணிட்டே இருக்கணும்” என்று மனதின் மூலையில் ஒரு நப்பாசை ஒட்டிக் கொண்டுதானிருந்தது. ஆட்டோவில் கோபமாக ஏறிய போதும், ஒருவேளை பின்னால் தொடர்ந்து வருவானோ என்ற ஏக்கம் துளிர்த்தது. ஆனால் சத்யா அது போல் பின் தொடரவில்லை. அவள் பிஜி வந்து சேர எடுத்துக் கொண்ட முக்கால் மணி நேரத்தில் ஒரு அழைப்போ, குறுஞ்செய்தியோ கூட விடுக்கவில்லை.
இதயத்தின் ஓரமாய் அவன் உதாசீனம் இன்னமும் வலிக்க, அவன் எண்ணை, வாட்ஸ்ஸப், ஃபேஸ்புக், கைப்பேசி அழைப்பு என அனைத்து இடத்திலும் ப்ளாக் செய்துவிட்டுத் தான் அடுத்த வேலையைப் பார்த்தாள்.
அதனால் தன் கைப்பேசியில் சில மாதங்களாய் எப்போதும் முதல் பெயராய் நிற்கும் சத்யாவின் எண்ணும், அதில் வந்து குவிந்து கொண்டே இருக்கும் குறுஞ்செய்திகளும் இல்லாதது வெறுமையாக இருந்தது. அந்த வெறுமையைப் போக்கத் தான் அவள் சென்னை வந்ததும், விடாமல் தன் தாயை நோண்டி வம்பிழுப்பது.
மேலும் அவள் சீண்டலைப் பெற்றுக் கொள்ள அந்தத் தோழியாகி அண்ணி ஜீவன் அலுவகத்தில் இருந்து மாலையில் தான் வந்து சேர்ந்தது. ரேணு வந்ததுமே ராகாவைக் கண்டு கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, “ஏ எப்போடீ வந்த? சொல்லவேயில்ல?” என்று வினவினாள்.
“ம்ம்ம், இங்க பாரும்மா, உன் மருமக உள்ள வந்ததும் வராததுமா என்னைப் பார்த்து ஏன்டீ வந்தன்னு கேட்கறா?” என்று சமையல் அறையில் இருந்த தாயை கத்தி கூச்சலிட்டு ஹாலிற்கு அழைத்திருந்தாள். இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டு, தன் ஈவில் விட்ச் புன்னகையை மறக்காமல் சிந்தினாள். ரேணு அவளையும், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மாமனாரையும் மாறி மாறி பார்த்துவிட்டு தங்களது அறைக்குள் சென்றாள்.
“ம்மா, உன் மருமக என்னைப் பார்த்து முறைச்சுட்டே அவ ரூமுக்குள்ள போயி டொம்முனு கதவை சாத்தறாம்மா” என்று சொல்லிக் கொண்டே ரேணுவின் பின்னால் சென்று அறையின் கதவை வேண்டுமென்றே சத்தமாகச் சாத்தினாள்.
“ஏ, ஏண்டீ படுத்தற? உன் ப்ரேக்கப் மூடை சரி பண்ண, சென்னை வந்தா, கண்ணீரும் கவலையும் உன் ரூம்ல போய்க் குப்பற படுத்து அழுதுட்டு இருக்கணும்ல நீ. போ மா, போய்ப் படுத்து உருண்டு பிரண்டு அழும்மா. அண்ணி வந்து சமாதானம் செய்யறேன்” என்று ரேணு, ராகா கூறிய தொனியிலேயே பதில் பேச, ராகாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“ஓ, இந்தச் சீனுக்கு இப்படித் தான் ரியாக்ட் பண்ணனுமா? ஆனா எனக்கு அழுகை வரலியே! என்ன பண்ணா அழுகை வரும் பாஸ்?” என்று வினவிய ராகாவை சிரிப்புடன் ஏறிட்ட ரேணு,
“நிஜமாவே ஒரே நாள்ல சரியாகிட்டியாடீ நீ? வருத்தமா இல்லையா உனக்கு? உண்மைய சொல்லு” என்று தூண்டினாள். ரேணுவின் அக்கறையான கேள்வி வாஸ்தவத்தில் ராகாவிற்குச் சத்யாவைப் பற்றிய நினைவைத் தூண்டியது.
“கஷ்டமே இல்லைன்னு பொய் சொல்ல முடியலை. ஆனா, நீ எக்ஸ்பெக்ட் பண்ணற மாதிரி அழுது பொரண்டு அழுகற அளவுக்கு வலிக்கலை ரேணு! நான் ஒண்ணும் அவனைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சற ஐடியால அவனை மீட் பண்ண போலையே! டீசண்டா பாய் சொல்லிட்டு தள்ளி வந்துடணும்னு தானே போனேன்” என்று ரேணுவிடம் சொல்வது போலத் தன் மனதிற்கே தன் செயலுக்கான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டாள்.
ராகாவை கொஞ்சம் ஏறிட்டுவிட்டு, அவள் உண்மையாகத் தான் சொல்கிறாள் என்பதையும், தானாகவே இரு தினங்களில் சரியாகிவிடுவாள் என்பதையும் தெரிந்திருந்த ரேணு, அந்தப் பேச்சை அத்தோடு விட்டிருந்தாள். மாலையில் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டே இரவு உணவை முடித்துக் கொண்டு, ரேணுவிடமும் அண்ணன் பிரதீப்பிடமும் அரட்டை அடித்துவிட்டு உறங்க எத்தனிக்க, ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
பொதுவாக நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் ட்ரூகாலரில் பெயர் காட்டிவிடும் அல்லவா. அது போலச் சில நொடி திரையில் மிளிர்ந்த பெயரை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். திரையில் “சத்யா க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்” என்று காட்டிக் கொண்டிருந்தது.
“ஓ, உன் நம்பரை ப்ளாக் பண்ணேன்னு வேற நம்பர்ல இருந்து கூப்பிடறியா?” என்று எண்ணியவள் அந்த எண்ணையும் ப்ளாக் லிஸ்டில் போட்டு விட்டு நிம்மதியாக உறங்கினாள்.
அடுத்தத் தினம் காலை, “ராகா, முக்கியமான மீட்டிங்க் இருக்குடீ. என்னால லீவ் போட முடியாது. ஈவினிங்க் நான் வர்றப்போ ரெடியா இரு, வெளிய போலாம்” என்று சொல்லிச் சென்றாள் ரேணு.
“ம்மா, நான் ஆறு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கேன். உன் மருமகளுக்குக் கொஞ்சமாச்சும் என் மேல நாத்தனார் பாசம் இருக்கான்னு பாரு. ஒரு நாள் லீவ் கூடப் போடாம வேலைக்குக் கிளம்பறா” என்று வேண்டுமென்றே முத்துலட்சுமியின் வாயைக் கிண்டி, காலையிலேயே ரேணுவை இரையாக்கினாள் ராகா.
முத்துலட்சுமிக்கு ராகாவும், ரேணுவும் எவ்வளவு நெருக்கம் என்று தெரியாமல் போகுமா? “ம்ம்ம்கும்.. அப்படியே நான் சொல்லிட்டா உன் ஃப்ரெண்டு கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாளா?” என்று பெரிய ம்கும்யை கக்கிவிட்டு அமைதியானார் முத்துலட்சுமி.
“ஏண்டி படுத்தற? பை. டைமாச்சு. ஈவினிங் ரெடியா இரு” என்று சொல்லிக் கொண்டே வீட்டை விட்டுக் கிளம்பிய ரேணுவை சிரிப்புடன் வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டாள்.
சத்யா பற்றித் தான் அதிகம் கவலை கொள்ளாமல் இருக்க, தன்னை வேலையில் அமிழ்த்திக் கொள்ள வேண்டும் என்றும், இரண்டு மூன்று தினங்களுக்காவது தன்னைச் சுற்றிலும் ஆட்கள் இருக்கும்படிக்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தாள். அதற்காக, தன் கைப்பேசியை வீட்டிற்கு வந்ததில் இருந்தே அணைத்து வைத்திருந்தாள்.
அன்றைய தினம் அவள் அறையைச் சுத்தப்படுத்துவதிலும், பழசு பட்டைகளை அன்னையுடன் சேர்த்து ஒதுக்குவதிலும் கழிந்து போயிற்று. மாலையில் ரேணுவுடன் பெசண்ட் நகர் சென்று உலாத்துவதிலும் கழிந்து போயிற்று.
அடுத்தத் தினம், வாரநாள் என்பதால் பத்து மணிக்கே அவரவர் வேலையைப் பார்க்க வெளியே கிளம்பியிருக்க, கைப்பேசியை எடுத்துப் படம் பார்க்கலாம் என்று நினைத்தவளுக்கு, “அட, ஃபோனை ரேணுவோட ஹேண்ட் பேக்கில வச்சிருக்கேன்ல” என்ற நினைவு எழுந்தது.
மறந்து போயெல்லாம் தன் கைப்பேசியை ரேணுவின் பையில் வைக்கவில்லை. எங்கே தன் கையில் ஃபோன் இருந்தால் ஒரு கட்டத்தில் அழைப்பை ஏற்றுப் பேசிவிடுவாளோ என்ற அச்சம் காரணமாக,காலையில் ரேணு கிளம்பிய சமயம், அவளுக்குத் தெரியாமல், தன் கைப்பேசியைச் சைலண்டில் வைத்து அதை ரேணுவின் பேக்கில் போட்டிருந்தாள்.
“எப்படியும் ரேணு திரும்பி வரதுக்கு ஈவினிங் ஆகும். ஃபோன் இருந்தா தானே எடுத்து அவன் ஃபேஸ்புக் பாரு, இன்ஸ்டா பாருன்னு மனசு சொல்லும். ஃபோனே கையில இல்லைன்னா, என்ன பண்ணறது” என்று அப்போதைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், உடலின் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டிருந்த வஸ்துவைப் பிரிந்தது மிகவும் துக்கத்தைக் கொடுத்தது.
அதிலும் கைப்பேசி இப்போது கைக்குக் கிடைக்காது என்று தெளிவாகத் தெரியவும், அதன் மீதான நாட்டம் இன்னமும் அதிகரித்தது. “மூணு நம்பரை ப்ளாக் பண்ணியிருக்கேன். வேற எதாவது நம்பர்ல இருந்து கூப்பிட்டிருப்பானோ! நான் ஃபோன் எடுக்கலைங்கவும் ஆபீஸ் போய் விசாரிச்சிருப்பானோ, அவங்க நான் லீவ்னு சொன்னதும், நேரா கிளம்பி பிஜி வாசல்ல வந்து காத்துக்கிட்டு இருப்பானோ! ஐய்யோ எப்படித் தெரிஞ்சுக்கறது. மட்டி மாதிரி வேணும்னே ஃபோனை ரேணு பேக்ல போட்டு அனுப்பிட்டேனே” என்று ஒரு பக்கம் மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
சத்யாவின் நினைப்பின் வாட்டம் ஒரு பக்கம் என்றால், அன்றைய வெட்டிப் பொழுதை நெட்டித் தள்ள என்ன செய்ய வேண்டும் என்று தெரியவே இல்லை ராகாவிற்கு. “இண்ஸ்டால, சம்பந்தமேயில்லாம ஸ்டேரி, ரீள்ஸ் பார்த்துட்டு, ஃபேஸ்புக்ல மீம் பார்த்து கெக்க பெக்கன்னு சிரிச்சுட்டு எவளோ ஆனந்தமா இருந்தேன்! இப்படி ஃபோன் இல்லாம கையை உடச்சு உட்கார வச்சிருக்கே இந்த விதி” என்று நொந்து கொண்டு, “ம்மா, என்ன பண்ணற? ப்ப்பா என்ன பண்ணறீங்க?” என்று ஒன்னரை வயது பிள்ளை போக அவள் பெற்றோரின் பின்னாலேயே சுற்றி வந்தாள்.
ஒருகட்டத்தில் கடுப்பாகிப் போன முத்துலட்சுமி, “ ஏ, அமைதியா உட்கார்ந்து நாடகம் பார்க்கறதுன்னு பாரு! இல்லைன்னா எந்திரிச்சு போடீ! ஒரு நாடகத்தைப் பார்க்க விடாம, சும்மா, அவ யாரு, இவங்க யாருன்னு கேள்வி கேட்டுட்டு. விஜய் டீவி பாக்கியலட்சுமி யார்னு தெரியாம நீ எல்லாம் என்ன தமிழ் பொண்ணு?” என்று திட்டிவிட்டிருந்தார்.
தாயிடம் வசை வாங்கிக் கொண்டு, தந்தையுடன் சேர்ந்து அனைத்து நியூஸ் சானலையும் வியந்து ரசித்துப் பார்த்தாள். “சே, ஃபோன் இல்லாம ஒரு நாளை கடத்த முடியலையே, அந்தக் காலத்தில என்ன பண்ணியிருப்பாங்க” என்று அறிவார்த்த சிந்தனைகள் எழுந்தன. ஆனால் அதைப் பதிவு செய்ய ட்விட்டர் இல்லையே கையில் என்ற வேதனை அதிகமாகியது.
“அந்த வேதனை இருக்கே அந்த வேதனை!” என்று கண்ணாடி முன் நின்று வடிவேலு பாணியில் சொல்லிப் பார்த்து நேரத்தை நெட்டித் தள்ளினாள்.
ஒருவழியாக மாலை ரேணு வந்துவிட, வேண்டுமென்றே, “எதுக்குடீ என் ஃபோனை நீ ஆபீஸ் பேக்ல போட்டு எடுத்துட்டு போனா?” என்று வினவ, ரேணு “பைத்தியமா இவ?” என்று முறைத்து விட்டுச் சென்றாள்.
தன் கைப்பேசியில் வந்திருந்த செய்திகளைப் பார்வையிட, வனிஷாவும் மைக்கிலும் நிறையத் தடவை அழைத்திருந்தனர். “என்னவா இருக்கும்?”என்று ஆவலுடன் மைக்கிலின் எண்ணைத் தொடர்பு கொண்டாள். முதல் ரிங்கிலேயே மைக்கில் கைப்பேசியை எடுத்திருந்தான்.
“ஏ, ராகா, உன் ஃபோனுக்கு என்னாச்சு? காலையில இருந்து ட்ரை பண்னறேன். ஒரு கால் கூட எடுக்கலை நீ?”
“ஏ, சென்னை வந்திருக்கேண்டா. இங்க கொஞ்சம் வேலை. அதான் ஃபோன் பார்க்கமுடியலை. என்னாச்சு சொல்லு” என்று வினவினாள்.
“சென்னை போயிருக்கியா? சொல்லவேயில்ல?”
“அது சும்மா தான். நீ சொல்லு என்ன விஷயம்?”
“அது, சத்யா சார் காலையில ஆபீஸ் வந்திருந்தார். உன்னைப் பத்தி விசாரிச்சார்” என்று மைக்கில் சொல்லி நிறுத்திய சில நிமிடங்களுக்குள் ராகாவிற்கு நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.
“என்னவாம்? ம்ம்ம்?” என்று ஆர்வமேயில்லாமல் கேட்பவள் போலக் காதுகளைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வினவினாள்.
“தெரியலை. நடாஷாகிட்ட பேசினார். அப்பறம் என் கிட்ட, நீ இல்லையான்னு கேட்டார். உடம்பு சரியில்லன்னு சொன்னேன். அவளோ தான். போயிட்டார்.”
“உடம்பு சரியில்லன்னு சொன்னியா? ஏன்?”
“ஏ, நீ அப்படித்தனே நடாஷாகிட்ட சொல்லிட்டு லீவ் வாங்கின. நீ சென்னை போயிருக்கன்னு இப்போ நீ சொல்லித்தான் எனக்குத் தெரியும்? என்ன ஒரு மாதிரி பேசற? என்னாச்சு ராகா உனக்கு” என்று அவன் கேட்கவும் தான் நடாஷாவிடம் அவள் சொல்லிய பொய் நினைவில் வந்தது.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. அங்க எல்லாம் ஒ.க எதானே?”
“ம்ம் யா யா. சரி நீ எப்போ வர்ற?”
“இன்னைக்குச் சாடர்டேல, கசின்ஸ் வர்றாங்க வீட்டுக்கு, அவங்க கூட இருந்துட்டு, சண்டே நைட் ட்ரெயின் ஏறிடுவேன். மண்டே மார்னிங் ஆபீஸ் வந்துடுவேன் மைக்”
“ம்ம், சரி, எஞ்சாய். வைக்கறேன்” என்று மைக்கிலிடம் பேசிவிட்டு, கைப்பேசியை அணைத்தவள், அடுத்தபடியாகத் தன் பிஜி வீட்டின் ஓனரின் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் வந்திருக்கிறதா என்று ஆராய்ந்தாள். வந்திருந்தது.
“ஓ, என் பிஜிக்கு போய் விசாரிச்சிருக்க?” என்ற எண்ணத்துடன் பிஜி ஓனருக்கு அழைத்துப் பேசினாள்.
“என்னைத் தேடி யாராச்சும் வந்தாங்களா?” என்று தன் கோக்கு மாக்கான கன்னடத்தில் வினவ, “ யாரோ பந்தாரு, நிம்ம விலாச கேளிதே! நானு கொட்டித்தேனே.”
“விலாசம்னா அட்ரஸ் தானே! சென்னை அட்ரஸ்ஸா? ஏன் குடுத்தீங்க?”
“நிம்ம ஸ்னேகிதண்டே ஹேலிதே! நிம்ன ஃபோட்டோ தோர்சிதே!” என்று இருவரும் இருந்த படத்தைக் காட்டி நீ எங்கே என்று வினவியதால் அவளது சென்னை வீட்டின் முகவரியைக் கொடுத்ததாய் குண்டைத் தூக்கிப் போட்டார் அவர்.
இதைக் கேள்விபடவும், அந்த இரண்டு தினங்கள் உண்டாகியிருந்த நிம்மதி நொடி நேரத்தில் காணாமல் போயிருந்தது. “எதுக்கு அட்ரஸ் வாங்கியிருப்பான்? ஒரு வேளை சென்னை வருவானோ?” என்று சினிமாத்தனமான கற்பனையில் சில நேரம் தத்தளித்தவளை அவள் சிற்றப்பா மகள்களின் வருகை மீட்டெடுத்தது.
சனிக்கிழமை என்பதால், தன் சிற்றப்பா பெண்கள் இருவரையும் அன்று அவர்களுடன் தங்கும் படிக்கு வருந்தி அழைத்திருந்தாள் ராகா. அவர்களும் ஆவடியில் இருந்து ஏழு மணிக்கு மாம்பலம் வந்துவிட்டனர்.
ரேணு, சிற்றப்பா பெண்கள், பிரதீப், ராகா என அனைவரும் நள்ளிரவு வரையிலும் அரட்டை அடித்துவிட்டு, கார்ட் விளையாடி, வழக்கம் போல ஏமாற்றித் தோற்றுப் போய் என இன்பமாக அந்த இரவைக் கழித்த ராகா, ஹாலிலேயே தன் சிற்றாப்பா மக்களுடம் உறங்கிப் போனாள்.
காலை பத்து மணி ஆகியும் அந்த வீட்டில் முத்துலட்சுமியையும் அவள் கணவரையும் தவிர ஒரு ஜீவன் விழித்துப் பார்க்கவில்லை. காலிங் பெல் சப்திக்க, “யாரா இருக்கும்?” என்ற யோசனையுடன் முத்துலட்சுமி எழுந்து சென்று கதவைத் திறந்தார்.