“என்ன பாக்குறீங்க ஜீவா… என்னடா இத்தனை நாள் எதுவும் தெரியாத மாதிரி தானே பண்ணோம் இன்னைக்கு எப்படி தெரிஞ்சிதுன்னு யோசிக்கிரீங்களா இல்லை இந்த செவிடு எப்படிக் கண்டுப் பிடிச்சான்னு யோசிக்கிரீங்களா?…” என்றதும் ஜீவா திருத்திருவென விழித்தான். ஆனால் கலையோ வஞ்சியின் செவிடு என்ற வார்த்தையில் பல்லைக் கடித்தபடி காரிகையைப் பார்த்தான். கலையின் அனல் கக்கும் பார்வையை துளியும் பாவையைத் தாக்கவில்லையோ போல அவன் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை.
“இத்தனை நாளும் உங்களை கண்டுக்காம இருந்தது என்னோட கேர்லஸ் மிஸ்டேக்ன்னு நினைச்சீங்களா? ஷீ என் கம்பனி நேரத்தில் உங்க பெர்சனல் வேலையை நீங்க பார்த்திருந்த நான் உடனே ஆக்சன் எடுத்து இருப்பேன். பட் நீங்க ஆப்டர் சிக்ஸ் ஓ கிளாக் மேல தான் உங்க பெர்சனல் ஒர்க்க பாக்குறீங்கன்னு கேள்விப்பட்டதுனால தான் எந்த ஆக்சனும் எடுக்காம இருக்கேன்…”
“ஆனா நேத்து நீங்க செஞ்ச வேலைக்கு இனியும் நீங்க இங்க வேலை செய்யணுமான்னு யோசிக்கணும் ஜீவா… உங்க பெர்சனல் வெஞ்சன்ஸ்காக மெட்டியரியல் நீங்களே போயி மாத்தி எடுத்து இருக்கீங்க…ஆனா பாருங்க ஆல்ரெடி என்ன டைல்ஸ் கேட்டீங்கற டீடைல்ஸ் என்கிட்ட அனுப்பிட்டீங்க…” என்றதும் தன் முட்டாள் தனத்தை எண்ணி தலை குனிந்தான் ஜீவா.
அவன் தலைக்குனிவு எல்லாம் இவளுக்குப் பொருட்டே இல்லை என்பதை “சோ இதுபோல டைல்ஸ் மாத்தி போட்டு கலை சார் இதுதான் வாங்கி கொடுத்தாருன்னு சின்ன புள்ளை மாதிரி ரீசன் சொல்லாதீங்க… அண்ட் உங்க பெர்சனல் வெஞ்சன்ஸ தீத்துக்க என் ஆபிஸ் தான் கிடைச்சதா?…” என்றவள் மற்றவர்களைப் பார்த்து
“இனிமே யாரையும் லிபரலா விட மாட்டேன். யாரா இருந்தாலும் ஈகுவல் ஆக்சன் எடுப்பேன். தென் ஆபீஸ் நேரத்தில என் பெர்மிஷன் இல்லமா யாரும் வெளிய போகக் கூடாது. இல்லை மேடம் எங்கனால நீங்க சொல்றதை செய்ய முடியாதுன்னு சொன்னா தரலாமா வேலையை விட்டுப் போகலாம். நீங்க இத்தனை வருசமா வேலை பார்க்குரீங்க, டேலண்ட் பெர்சன் இப்படியெல்லாம் நான் பார்க்க மாட்டேன். நீங்க இல்லைன்னா ஆயிரம் பேர் வேலைக்கு வருவான்…” என்றவள் அடுத்தடுத்து கேட்ட கேள்விகள் அனைத்தும் ஈட்டியாய் பாய்ந்தது.
நேற்று சைட் என்ஜினியருக்கும்,குவாண்டடி டீமிற்கும் விழுந்ததை விட இன்று ஆர்க்கிட்டெக் டீமிற்கு பலமாக விழுந்தது… அதிலும் ஜீவாவிற்கு சொல்லவே வேண்டாம் வாக்கியத்திற்கு ஒரு தடவை ஜீவா என்ற பெயரை அழைத்தாள்.
ஒவ்வொரு முறையும் ஜீவாவின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் ஜீவாவின் தொண்டை ஏறியிறங்கியது. பயத்தில் நா வறண்டு அவனுக்கு பேச்சே வரவில்லை. இதெல்லாம் மற்றவர்கள் கூட கவனித்தார்களோ இல்லையோ கலை கவனித்தான்.
ஜீவாவின் முக பாவத்தைப் பார்த்தவனுக்குச் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகிப் போனது. சட்டென பாக்கெட்டில் இருந்த மாஸ்க்கை மாட்டிக் கொண்டான். அப்போதும் கண்கள் அவன் சிரிப்பதை வெளியில் காட்டிக் கொடுத்தது…அரைமணி நேர மீட்டிங் என்றாலும் கச்சேரி பலமாகவே இருந்தது.
அனைவரும் கிளம்பும் சமயத்தில் “மிஸ்டர் ஏகலைவன் நீங்க இருங்க… ஜீவா சார் மெட்ரியல்ஸ் டீம் எல்லாத்தையும் வர சொல்லுங்க…” என்றவள் நாற்காலியில் அமர்ந்தாள். அனைவரும் சென்ற அடுத்த நிமிடம் காரிகையின் முகத்தைத் தான் பார்த்தான் ஏகலைவன்.துடைத்து வைக்கப்பட்டிருந்தது அதை வைத்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று ஏன் அப்படிக் கேட்டாய் என்று கேட்டிருந்தால் நிச்சியம் அதற்கான விளக்கத்தைக் கொடுத்திருப்பான் ஆனால் அவளோ நடிப்பில் நடிகர் திலகத்திற்கு மேலாக இருந்தாள்.
ஒரு வார்த்தை கூட கலை பேசிய பேச்சைப் பற்றிக் கேட்டுக் கொள்ளவேயில்லை. ஏன் கேன்டினிலும், பார்க்கிங் ஏரியாவிலும் என்ன நடந்தது என்பதையும் கேட்கவில்லை.. அவளின் இந்த ஆட்டிட்யுட் எதிரில் அமர்ந்திருப்பவனுக்குத் தான் கடுப்பை கிளப்பியது. ‘நேத்து என்னவோ அந்த கத்து கத்தினா… இன்னைக்கு அப்படி ஒன்னு நடந்துச்சான்னு கேட்கற அளவுக்கு மூஞ்சியை வைச்சிட்டு இருக்கா…’ என நினைத்தவன் கோப்பையில் மூழ்கி இருந்தவளை அழுத்தமாக பார்த்துவிட்டு
“சாரி…” எனக் குறுஞ்செய்தி அனுப்பினான். அலைபேசி வைப்ரேட்டானதும் தொடுதிரையில் தெரிந்த பெயரைப் பார்த்தவள் நிமிர்ந்து கலையைப் பார்த்தாள்.
மங்கை பார்க்கவே காத்திருந்தவன் போல “சாரி…” என இதழ் அசைத்தான். இப்போது நன்றாக நிமிர்ந்து அமர்ந்து டேபிளில் கையை ஊன்றியபடி கலையைப் பார்த்தாள்.
‘நீ எப்படிப் பார்த்தாலும் சாரியை தவிர வேறு ஒன்றும் இல்லை..’ என நினைத்தவன்
“மல்டி ஸ்டார் டைம்ஸ் சாரி…” என்றான். அப்போதும் ஆரி வாயவே திறக்கவில்லை.
அணங்கின் அமைதியில் கடுப்பானவன் “ம்ப்ச்.. இப்ப என்னங்க இங்க பெர்சனல் லைப் பத்தி கேட்க கூடாது. உங்க கிட்ட உரிமையா பேசி இருக்கக் கூடாது அப்படி தானே இனிமே அப்படி கேட்டா என்னனு கேளுங்க…”என சத்தமாக சொல்லியும் ஆரியிடம் பதில் இல்லை.
மண்டமூக்கிக்கு சரியான பிடிவாதம் வாயை திறக்கிறாளா பாரு…’ என நினைத்தவன்
“நீங்க எதை ப்ரூப் பண்ண நினைக்கிறீங்க…” எனக் கைகளைக் கட்டி தீர்க்கமாகப் பார்த்து கேட்டான்.
மாயோனின் கேள்வியில் கண்களைச் சுருக்கி பார்த்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. கலையும் அதைப் பற்றி துளியும் கவலை கொள்ளவுமில்லை “நான் இப்படி தான். ரொம்ப ஸ்ட்ரீட்,அழுத்தம், யாரையும் என் லைஃப் லைனுக்குள்ள விட மாட்டேன் இப்படி நிறையா நிறையா ப்ரூப் பண்ண நினைக்கிறீங்களா…” என கேட்கவும் “ம்ம் அடுத்து பேசு…” என்பதை போல் ஒரு பார்வை பாவையிடம். அந்த பார்வை இவனை ஏதோ செய்யக் குனிந்து கொண்டான்.
சில நிமிடங்கள் அமைதி மட்டுமே நிலவ ஏதோ நினைவு வந்தவனாய் “என் மேல இருக்கற பெர்சனல் வெஞ்சன்ஸ தீத்துக்க தான் என் டீமை மீட்டிங்க்கு கூப்பிட்டு இருக்கீங்களா…” என நிமிர்ந்து ஆரியின் கண்களைப் பார்த்தபடி கேட்டான்.
எவ்வித உணர்வுகளையும் வெளிக் காட்டாத வஞ்சியின் பார்வை தற்போது அனலைக் கக்கியது. “பெர்சனல் வெஞ்சன்ஸ் வைச்சுக்கற அளவுக்கு நீங்க ஒன்னு வொர்த் இல்லை மிஸ்டர் ஏகலைவன்…” என்றதும் கிடுகிடுவென உச்சிக்கு ஏறி நின்ற கடுப்பை வார்த்தையில் கொட்டிட நினைத்தானோ
“ஆமாம அந்த காட்டேறி அசோக் எல்லாத்தூக்கும் வொர்த்தா இருக்க போயி தான் கல்யாணமானாலும் பரவாயில்லைன்னு கூட இருக்கீங்க?…” என வார்த்தையை விட்டான்.
“நீ அவ்வளவு தான்…” என்பதைப் போல் நக்கலாக உதட்டை வளைத்தாள். ஆரியின் நக்கல் சிரிப்பில் கோபத்தில் தான் பேசிய பேச்சின் வீரியம் புரிய உடனே “சாரி…” என்றான்.
“அடுத்தவன் பெட்ரூம்குள்ள விளக்கு பிடிச்சு பார்க்கிற உங்ககிட்ட எல்லாம் இப்படியான பேச்சு சகஜம் தான்…” என்றதும் சட்டென இருக்கையை விட்டு எழுந்தவன் “அந்தளவுக்கு ஈனப் பிறவி இல்லங்க நான். இனிமே என்கிட்ட பேசறதுன்னா வார்த்தையை அளந்து பேசுங்க. …” எனக் கத்தியவன் அவ்வறையை விட்டு வெளியேறினான்.
அவளைச் சந்தித்ததிலிருந்து இதுவரை இருவருக்கும் இடையில் பனித் திரை இருந்து கொண்டே தான் இருந்தது. அந்த பனித்திரையை தாண்டி வர நினைத்தது இவன் தவறு தான் என்று தான் நினைத்தான்.
ஆரி பேசிய வார்த்தைகளின் வீரியம் இவன் முகத்தை இறுகச் செய்திருந்தது. எப்படியான வார்த்தை இது கூர்வாள் கொண்டு மொத்தமாக வெட்டி வீசாது கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி வெட்டி துடிக்க வைப்பது போல். கேசத்தை அழுத்தக் கோதிக் கொண்டவன் ஆரியின் அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அதற்கு பின்னான வந்த நாட்களில் ஆரியை அவன் கண்டுகொள்ளவே இல்லை… வீக்லி ரிபோர்ட் மட்டும் இவனிடமிருந்து ஆரியின் மெயிலுக்கு தவறாது சென்றுவிடும். மற்றபடி அவளிடம் அனாவசியமாக ஒரு வார்த்தை பேசவில்லை அவளிடம் மட்டுமல்ல அலுவலகத்தில் எவரிடமும் பேசவில்லை..
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் முடிந்தும் அவனிடம் எவ்வித மாற்றமும் இல்லை. எப்போதும் கலகலவென இருக்கும் கலை இப்போது முகம் இறுக வளம் வந்தான். அந்த வாரத்தில்
ஆரியும், கலையும் கிளையண்ட் மீட்டிங் செல்ல வேண்டிய நாளும் வந்தது.
இருவரும் சேர்ந்து தானே செல்ல வேண்டும் வாகனத்திலேயே சென்று விடலாம் என்று எண்ணி வேலிடம் ஆரி கூறினாள். ஆனால் வேலு அழைத்தும் கலை மாட்டேன் என்று விட்டு அவனது வாகனத்திலேயே புறப்பட்டுச் சென்று விட்டான். மீட்டிங் நடக்கும் இடத்திலும் ஆரியை துளியும் பேச விடவில்லை மொத்தமாக அவனே பேசி முடித்துக் கொண்டான்.
வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை சைட்டிற்கு எத்தனை மெட்டிரியல்ஸ் சென்றதுள்ளது அதற்கு எத்தனை செலவானது என்பதையெல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டும் அதற்கான மீட்டிங் தான் இது.
எப்போது ஆரியே அனைத்தையும் பார்த்துக் கொள்வாள். இவன் எப்போதாவது வாயைத் திறப்பான். சில சமயம் அதுவும் தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற ரீதியில் ஆரியே மொத்தமும் பேசி விடுவாள். ஆனால் இன்று ஆரியை கலை பேச விடவேயில்லை மொத்தமும் அவனே பேசிவிட்டான். தன்னை துளியும் பேச விடாமல் அனைத்தும் பேசி முடித்தவனை ஒரு விதக் கடுப்போடு பார்த்தாள்.
ஆடவனின் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை முகம் இறுகியிருந்தது. கண்களில் எப்போதும் போலிருக்கும் குறும்புமில்லை, உயிர்ப்பும் இல்லை.
எப்போதும் கலகலவென இருக்கும் கலை இல்லையே இவன் என்று தான் தோன்றியது ஆரிக்கு. இன்று மட்டுமல்ல இந்த இரண்டு வாரங்களாக அவள் பார்க்கும் கலை இப்படி தான் இருக்கிறான். கண்களை மூடி திறந்தாள் கலையின் களையிழந்த முகம் கண்முன்னே வந்து சிரித்தது. முயன்று வாடிக்கையாளரிடம் கவனத்தைச் செலுத்தினால் இருந்தும் அடிக்கடி பாவையின் கண்கள் கலையின் மீது பட்டுத் தெறித்தது.
மீட்டிங் முடிந்து வெளியில் வந்தவன் நேராக பைக் நிற்கும் இடத்திற்குச் செல்ல ” இப்படி பேசாம, அமைதியா இருந்து எதை ப்ரூப் பண்ண நினைக்கிறீங்க மிஸ்டர் ஏகலைவன்… எப்பவும் போல இருக்க வேண்டியது தானே என்ன எதிர்பார்க்கறீங்க என்கிட்ட இருந்து. நான் அன்னைக்குச் சொன்னது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்கன்னு உங்க கிட்ட மன்னிப்பை வேண்டி நிக்கனும் நினைக்கிறீங்களா?…” என்ற ஆரியின் குரலில் நின்றான்.
மங்கையின் கேள்வியில் உச்சியில் ஏறி நின்ற கோபத்தோடு திரும்பி அவனை முறைத்தவன் “என்னை, என்ன நினைச்சுட்டீங்க மிஸ் ஆரீயா அடுத்தவன் ரூமை எட்டிப் பார்க்கிற அளவுக்கு ஈனப் பிறவின்னா… என்னை யாரும் இந்தளவுக்கு அவமானப்படுத்தினது இல்லை… சொல்லப்போனால் எனக்கே நான் இப்படி இருக்கறது பிடிக்கல.. மீறி சிரிக்க நினைச்சாலும் உங்க வார்த்தை என்னை சிரிக்க விடலை. எப்படி நீங்க என்னை அப்படி சொல்லலாம். என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு…” என்றான் கடுப்பாக.
காரிகை கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் தான் எதற்காகக் கோபமாக இருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொன்னான். அது என்னவோ கலை எதைப் பற்றிக் கூறுகிறான் என்பது சரியாகப் புரிந்து விட்டது மங்கைக்கு
“நான் முதல்ல ஆரம்பிக்கல…” என்றாள் மூக்கு விடைக்க
“அதுக்கு தான் உடனே சாரி சொல்லிட்டேன்ல…” என்றதற்கு அவளிடம் பதிலில்லை அமைதியாக நின்றாள். சில நிமிடம் அமைதிக்குப் பிறகு ஆரியே “இப்ப நான் என்ன பண்ண வேணும்னு நினைக்கிறீங்க மிஸ்டர் ஏகலைவன்…” என்று கைகட்டி அழுத்தமாகப் பார்த்தபடி கேட்டாள்.
“நான் சொன்னது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்கன்னு கேட்க சொல்லல.. அட்லீஸ்ட் நான் அப்படிப்பட்ட ஆள் இல்லைன்னாவது சொல்லலாம்…” என்றான் இன்னும் கோபமாக.
கலையின் சிறுபிள்ளைத்தனத்தைக் கண்களில் சிரிப்பு மின்னப் பார்த்தாள். “சிரிக்கிறீங்களா…” கோபம் மறந்து கேட்டான்.
அவளிடம் பதில் இல்லை அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வாகனத்தை நோக்கி நடந்தான். பூவையின் கண்களில் எட்டிய சிரிப்பு ஆடவனின் இதழ்களைத் தொட்டதோ மெல்லிய இளம் புன்னகையுடன் “என்னவோ பண்றா…” என முனகிக் கொண்டே கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவன் வாகனத்தை நோக்கி நடந்தான்.