மண்வாசம் : 2
மண்வாசம் வீச, துவங்கியது ரேக்ளா பந்தயம்!
துவக்கத்திற்கான விசில் சத்தம் கேட்டதும் சுற்றி இருந்தவர்களின் கரகோஷமானது காதைப் பிளந்தது.
அடங்கமறுக்கும் திமில், கோபத்தைக் காட்டும் சிவந்த கண்கள், கூர்மையான கொம்புகள், விடைத்த மூக்கில் அனல் காற்று என முறுக்கிய வாலுடன் உடலைச் சிலிர்த்து, வலது முன்னங்காலை தரையில் தேய்த்து, தலையைச் சற்று தரையை நோக்கி சாய்த்து, தயாராய் நின்றிருந்தன கொங்கு மண்ணின் காளைகள் அனைத்தும்.
“உட்ரா.. உட்ரா..” என்று உரிமையாளர்கள் குரல் கேட்ட மறுநொடி சிங்கமென சீறிப் பாய்ந்தன சாலையில்.
உம்பளச்சேரி, புளியங்குளம், பர்கூர், காங்கேயம் வகையான காளைகள் அனைத்தும் நாலு கால் பாய்ச்சலில் பறந்தன.
முன்வரிசையில் லோகநாதனும் சேதுராமனும் ஆட்சி செலுத்த, அவர்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர் விக்ரமனும் குலசேகரனும்.
நொடிக்கு நொடி காங்கேயம் காளைகள் தன் வேகத்தைக் கூட்ட, எதிர் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது விக்ரமனின் முன்னுச்சி முடிகளெல்லாம் அங்குமிங்கும் ஆட, அவன் இரும்பை ஒத்த கரங்கள் இரண்டும் காளைகளின் தலைக் கயிற்றைப் பிடித்து இழுத்து வண்டியை செலுத்திக் கொண்டிருந்தது.
குலசேகரனின் கூரிய விழிகள் எல்லாம் எல்லைக் கோட்டின் மீதே. வண்டியின் வேகத்திற்கு தன்னிரு கால்களையும் அழுந்தப் பரப்பி ஊன்றியபடி, காளைகளின் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
காளைகளின் வேகத்திற்கு வண்டியின் இருபுற சக்கரங்களும் சுழல, மின்னலென சென்றுகொண்டிருந்தது அவ்வண்டி. செலுத்திக் கொண்டிருந்தான் விக்ரமன்.
இந்திரராய் அவர்களும் ஐராவதமாய் காளைகளும் செல்வதைக் கண்ட கூட்டத்தினர் கத்திக் கூக்குரலிட்டு உற்சாகமூட்டினர்.
“அட இந்தத் தடவையும் நம்ம பாண்டியரு அணி தான் ஜெயிக்கும் போல” எனப் பெரியவர் ஒருவர் கூற,
“அதிலென்னப்பா சந்தேகம் உனக்கு, நம்மூரு ரேக்ளாவுல விக்ரமனையும் சேகரனையும் மீறி ஒருத்தன் ஜெயிச்சிருக்கானா என்ன?” என சிலாகித்துக் கூறினார் மற்றொருவர்.
விக்ரமன் முன்னேறுவதைக் கண்ட சேதுராமன் உடனே லோகநாதனின் தோளை அழுந்தப் பற்ற, அதை புரிந்து கொண்டவன் வண்டியை குறுக்கும் நெடுக்குமாய் விட்டு ஓட்டினான். விக்ரமனை முந்திச்செல்ல விடாது இரு புறமும் வழியும் விடாது கவனமாய் வியூகமிட்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.
வண்டிகள் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று இடிப்பதுபோல் நெருக்கமாய் வந்து கொண்டிருக்க, காளையர்களைப் போலவே காளைகளுக்குள்ளும் கடுமையான போட்டி துவங்கியது.
“பொறுமை மாப்ள” என்ற குலசேகரனின் குரலுக்கு பொறுமை காத்த விக்ரமனோ தன் வேகத்தை சமன் செய்ய, எல்லைக் கோட்டை நெருங்கியதும்
“இப்போ உட்…ராஆஆ வண்டியை” என்றான் பெருங்குரலெடுத்து.
“வேலாஆஆ… வீராஆஆ” என்ற விக்ரமனின் குரலிற்கு செவிமடுத்து, நான்கு கால் பாய்ச்சலை விடுத்து சிறகு முளைத்துப் பறக்கும் புரவியென பாய்ந்தன காளைகள் இரண்டும்.
எல்லைக் கோட்டைத் தாண்டியதும் தான் அவற்றின் கால்கள் தரையில் படிந்ததைப் பார்க்க முடிந்தது. மற்றவரின் வியூகத்தை முறியடித்து குறைவான நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து இம்முறையும் முதல் பரிசை தட்டிச் சென்றது பாண்டியர்களே.
வண்டியிலிருந்து குதித்து இறங்கிய விக்ரமனும் குலசேகரனும் அவர்களது வேலனையும் வீரனையும் வாஞ்சையாய் நீவிக் கொடுத்து அதன் இரு கொம்புகளுக்கு மத்தியில் முத்தமிட்டு மகிழ, காதுகளை அசைத்து தலையைக் குனிந்து அவையும் அவர்களோடு வெற்றியைப் பகிர்ந்துகொண்டன.
தன் ஆத்திரத்தை எல்லாம் வண்டிச் சக்கரத்தை உதைப்பதில் காண்பித்துக் கொண்டிருந்தான் லோகநாதன். அவன் எதிர் பார்த்திருக்கவில்லை விக்ரமனின் குரலுக்கு ஏறுகள் இப்படி சீறிப் பாயுமென.
“ச்சை.. அந்த குலசேகரன் சாட்ட வாரை கையில வெச்சிருந்தானே தவிர காளையை ஒரு அடி கூட அடிக்கல மாப்ள. தட்டிக் கொடுத்தே இந்த தடவையும் தங்கத்தை தட்டிட்டுப் போய்ட்டான்” என்று சொல்லி கன்னம் சிவக்க லோகநாதனிடம் அடியைப் பெற்றிருந்தான் சேதுராமன்.
“என்னை ஏன்டா அடிக்குற? அவனுகள எதுவும் செய்ய வக்கில்ல உன்ர ஆத்திரத்தை எல்லாம் என்ர கிட்ட காட்ட வந்துட்டயா. சொந்தக்காரனுகளா இருந்தே நம்மளால ஒன்னும் கழட்ட முடியல. அவனுகளைப் பாரு, ஒட்டும் இல்ல உறவும் இல்ல. இருந்தும் மாமன் மச்சானோட்டம் பழகி ஒருத்தனை ஒருத்தன் விட்டுக் கொடுக்காம ஒட்டுக்கா இருந்து காரியத்தை சாதிச்சுட்டு போயிருறானுக. இனியும் என்ரனால அசிங்கப்பட முடியாது. இனிமேல் ரேக்ளாவுல நான் கலந்துக்க போறதில்ல. நீயே என்னமோ பண்ணு” என்றுவிட்டு பரிசையும் வாங்காது சென்றுகொண்டான்.
ஏற்கனவே எரிச்சலில் இருந்த லோகநாதனுக்கு இப்போது இதயத்தின் அருகில் எரிமலையை பெயர்த்து வைத்ததுபோல் பற்றிக் கொண்டிருந்தது. அது போதாதென்று,
“என்ன லோகநாதா இந்தவாட்டியும் வெள்ளிக்காசு தானா? தங்கத்துக்கும் உனக்கும் ராசியில்லப்பா” என்றொருவன் சொல்லி, நொடியில் அவனையும் எரிமலையென பொங்க வைக்க, அதற்குமேல் அங்கிருக்கப் பிடிக்காது சென்றுகொண்டான்.
சில நிமிடங்களில் ரேக்ளா கிளப் நிர்வாகிகள் வெற்றியாளர்களை மேடைக்கு அழைத்தனர்.
மடித்துக் கட்டிய வேட்டியை இறக்கிவிட்டு அதன் ஓரத்தை ஒரு கையால் பிடித்தபடி மறுகையால் மீசையை முறுக்கியபடி கம்பீரமாய் மேடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் விக்ரமன்.
அவன் பின்னே, தன் நடையில் கம்பீரம் குறையாது, கூட்டத்திலும் தனித்து தனக்கென வந்த ஒரு விசில் சத்தத்தை கண்டு கொண்டு, கண்களை மட்டும் அத்திக்கை நோக்கிச் செலுத்தியபடி சென்று கொண்டிருந்தான் குலசேகரன்.
தன் மாமனுக்கென்றே பலமாய் ஒரு விசிலைப் போட்டுவிட்டு, எங்கு தன் தந்தை முறுக்கு மீசை முத்துச்சாமி பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடி தன் அன்னை மரகதத்தின் அருகில் அமைதியாய் நின்றுகொண்டாள் அரும்பு.
ஆடவர்களின் விசில் சத்தமும், அங்கு கூடியிருக்கும் பெண்களின் கரகோஷமும், பெரியோரின் மெச்சுதலான பார்வையும் பாண்டியாரைப் பின் தொடர, மேடையில் அமர்ந்திருந்த அவ்வூர்த் தலைவரான ஆறுச்சாமியின் பார்வை மட்டும் கூட்டத்தை ஊடுருவிச் சென்று சரியாய் ஓரிடத்தில் நிலைத்து நின்றது.
“மறஞ்சு நிக்காம நீயெங்க கண்ணு நடுவால போற? உங்கப்பன் பார்த்துட்டான் போ. வீட்டுக்கு போனதும் இருக்கு ஒரு பஞ்சாயத்து. நம்மட தலை உருளப் போவது உறுதி” என்று நாயகி புலம்பியதெல்லாம் அரசியின் கண்ணிலும் கருத்திலும் இல்லை.
அப்படியே இமைக்காது பார்த்திருந்தாள், அவளது ஆருயிர்த் தோழியான அரும்பை.
“அரசி!!!!!!!”
அளவற்ற ஆனந்தத்தில் கண்கள் பனிக்க, நட்பிற்குள் விழுந்த இடைக்காலப் பிரிவை எல்லாம் ஒரு நொடியில் தூக்கி எறிந்து, ‘அரசி’ என்ற ஒற்றை அழைப்போடு அவளை அணைத்துக்கொண்டாள் அரும்பு.
“அட எதுக்கு இப்போ கண்ணை கசக்குற அரும்பு? அதான் உன்ர ப்ரெண்டு வந்துட்டால்லோ. நீயும் இவளும் பண்ணப் போற கூத்துல இனி ஊருக்காரங்க தான் கண்ணை கசக்கோணும்” என்று நாயகி சொல்ல, இருவரிடமும் அழகிய சிரிப்பு.
அடுத்த நொடியே அரசியை அணுவணுவாய் ஆராய்வதாய் இருந்தது அரும்பின் பார்வை. இன்றுவரையில் அரசி மட்டுமே அவள் அகத்தில் ஆருயிர்த்தோழி என்ற இடத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறாள். அதுபோல் தான் தானும் உள்ளோமா என்ற எதிர்பார்ப்பு அரும்பிடம்.
“ஏரோப்ளேனுல வந்து இறங்குனவங்களுக்கு எங்க நெனப்பெல்லாம் இன்னும் இருக்குதோ இல்லையோங் ஆத்தா. நல்லா வெள்ளக்காரிக கூடயே சுத்தியிருப்பாங்க, இப்போ நாம எல்லாம் கருப்பா எரும மாடுகளாட்டம் இல்ல தெரியுவோம்” என்று நாயகியிடம் சொல்லியபடி அரசியை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
‘நாம எல்லாம்னா என்னையும் சேர்த்து சொல்லுறாளா இந்த புள்ள’ என அரும்பை உற்றுப் பார்த்திருந்தார் நாயகி.
“ஆமா ஆமா ஏரோப்ளேனுல வந்தது மட்டும் தான் எரும மாடுக கண்ணுக்குத் தெரியும். நாங்க இட்லிக்கும் தோசைக்கும் அரும்புக்கும் எங்க அப்பத்தா சுடுற ஆப்பத்துக்கும் ஏங்கிப்போய் வந்ததெல்லாம் இங்க யாருக்கு தெரியப் போகுது” என அரசியும் நாயகியிடம் ஜாடையாய் சொல்ல,
‘இனி இவளுகளுக்கு நடுவுல நம்மளைய தூது விடுவாளுக’ என்று நினைத்த நாயகியோ,
“என்ன மரகதா உன்ர மாமியா வேலாத்தா எப்படி இருக்கறா?” என அரும்பின் அன்னை மரகதத்திடம் பேச ஆரம்பித்திருந்தார்.
“நல்லா இருக்குறாங் அத்தை. எங்க கொழுந்தியா சரோஜினி வீட்டுக்கு போயிருக்காங்க”
“அதேன் இன்னைக்கு உன்னைய அதிசயமா வெளில பார்க்க முடியுது. உன்ர மாமியா வீட்டுல இருந்திருந்தா நீ எங்க வெளிய வந்திருக்கப் போற. ஒரு கோயில் கொளத்துக்கு கூட வரக் கூடாதா மரகதா?”
“என்ன பண்ணுறதுங் அத்தை? எனக்கு கொடுப்பனை அவ்வளவு தான். கோவில்லையும் சாமிதேன் இருக்கு வீட்டுப் பூஜை அறையிலையும் சாமிதேன் இருக்கு. வீட்டுல இருந்தே மனசார வேண்டிகிட்டு நம்ம கடமையை சரிவர செஞ்சுட்டு போக வேண்டியது தான். எம்புள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சாலே போதும். அதொன்ன தான் நம்ம செல்லாண்டியம்மன் கிட்ட வேண்டிக்குறேன்” என கண்களில் நீர் ததும்பப் பேச, அவர் கைகளை ஆதுரமாய் பற்றிய நாயகி,
“நீ ஒன்னும் கவலைப்படாத மரகதா உன்ர நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே அமையும்” என்று சொல்ல, மரகதமும் புன்னகை சிந்தினார்.
“அப்பறம் ஏன் இங்கிருந்து வெளிநாடு போனாங்கலாமாங் ஆத்தா? சரி போனதுதேன் போனாங்க, ஒரு நல்ல நாள் கெட்ட நாளுக்கு கூட வரமுடியாதாங் ஆத்தா?” என அரும்பு சொல்ல,
“அப்படி நெனச்ச நேரமெல்லாம் வந்துட்டு போறதுக்கு எங்கப்பனூட்டு ஏரோப்ளேனாங் ஆத்தா அது? இல்ல அப்படியே வந்திருந்தாலும் இவ மூஞ்சியவெல்லாம் பார்த்துட்டு என்னால தான் திரும்ப அங்க போயிருக்க முடியுமா? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டே கேட்டா நான் என்னத்த சொல்லுறதுங் ஆத்தா” என்று அரசி பதிலுக்குப் பேச,
“அட இன்னுமா உங்களுக்குள்ள ஜாடை பேசி முடிக்கல? உங்களுக்கு நடுவுல என்னைய தூது விட்டது போதும் கண்ணுகளா” என்று நாயகியே கூறவும் இருவரும் ஒருசேர இதழ்களை விரித்தனர்.
அரசியின் பேச்சில் பால்ய வயது நினைவுகள் எல்லாம் அகத்தில் அழகாய் அரும்பியது அரும்பிற்கு.
‘ஏழு கடல் ஏழு மலை தாண்டி போனாலும் நீ என்னிக்கும் மாற மாட்ட’ என்று மனதில் நினைத்து அரசியின் கையை பிடித்துக் கொண்டாள்.
‘புரிஞ்சா சரி’ என அவளும் அழகாய் புன்னகைத்து அரும்பின் கையை அழுந்தப் பற்றினாள்.
இருவருக்கும் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. அதற்கான இடமும் சூழ்நிலையும் தற்போதில்லை என்றறிந்து கைபேசி எண்களை மட்டும் பகிர்ந்துகொண்டிருக்க,
“என்றும்போல் இன்றும் வெற்றி வாகை சூடியிருக்கும் சிங்கிள் சிங்கங்களே! கம்பீர காட்சில்லாக்களே!” என்ற மைக் மாரிமுத்துவின் குரலில் இருவரும் மேடையின் புறம் பார்த்தனர்.
வெற்றியாளர்களின் பெயரை மேடையில் இருந்தபடி அறிவித்துக் கொண்டிருந்தான் அவன். இன்னும் பல வாழ்த்து மொழிகளைக் கூற,
‘அடக்கி வாசிடா!’ என குலசேகரன் அவனை ஒரு பார்வை பார்க்க,
“எனதருமை மச்சான்களான பாண்டியர்களை அன்போடு மேடைக்கு அழைக்கிறேன்” என்று முடித்துக் கொண்டான் மாரிமுத்து.
அவர்களுக்கான பரிசை வழங்கத் தயாரானார் ஊர்த் தலைவரான ஆறுச்சாமி. இப்போது எப்படி பாண்டியர்களோ அதுபோல் தான் முன்பொரு காலத்தில் ஆறுச்சாமியும் அவரது உயிர்நண்பன் வேலுச்சாமியும் ரேக்ளாவில் ஆதிக்கம் செலுத்தினர்.
இன்று வேலுச்சாமி இப்பூவுலகில் இல்லை. ஐந்து வருடத்திற்கு முன்னதாகவே தன் பூவுலகப் பயணத்தை அவசரமாய் முடித்துக் கொண்டார். அந்த நினைவுகளில் ஆறுச்சாமியின் நெஞ்சம் கனக்க, ஓர் நொடி கண்களை அழுந்த மூடினார்.
தன்னை சமன் செய்துகொண்டு கண் திறந்தவர், தன் முன்பிருக்கும் தன் உயிர் நண்பனின் மகனான விக்ரமனைக் கண்டார். அவனது திண்ணிய தோள்களை தன்னிரு கைகளாலும் அழுந்தப் பற்றியவர் பின் பெருமையாய் அவனுக்கு மெடலை அணிவித்தார்.
“கண்ணு! அது ஆருன்னு தெரியுதா?” என நாயகி தன் சின்னப் பேத்தியிடம் கேட்க, அரும்போடு ரகசியமாய் பேசிக்கொண்டிருந்தவளோ தன் அப்பத்தாவின் புறம் திரும்பி ‘யாரு’ என புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
“அட நம்ம வேலுச்சாமி மாமன் மவன் விக்ரமன் மச்சானை தெரியலையா? சிறுசுல உன்ர அப்பன் கிட்ட அடிவாங்கிட்டு அவனூட்டுக்கு தானே ஓடுவ. முத்துலெட்சுமி அத்தை உனக்கு எத்தனை தடவ முறுக்கு சுட்டுக் கொடுத்திருக்கா எல்லாம் மறந்துட்டயா கண்ணு?” என்று கேட்டுவைக்க, அவள் முறைப்பை முன்னிருத்தினாள்.
ஐந்து ஆண்டுகள் ஊரில் இல்லை என்றால் அனைத்தையும் மறந்துவிடுவாள் என்ற எண்ணமா?
அதுவும் அவள் முன்பு அடிவாங்கியதை எல்லாம் கூற, அப்பத்தாவை முறைத்தவள், இப்போது தன் பார்வையை கூர்மையாய் மேடையின் புறம் வைத்தாள்.
போட்டியில் வென்றதற்கு விக்ரம பாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் தங்கக்காசும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட, ஜெனத்திரலின் கரகோஷம் காதைப் பிளக்க, அவர்கள் அதரங்களில் ஒரு அழகிய மென்னகை.
அவர்கள் பரிசைப் பெற்றுக்கொண்டு கீழே வர, கூட்டத்தில் இருந்த தன் அக்காவையும் அக்கா மகளையும் பார்த்தபடி வந்துகொண்டிருந்த குலசேகரனின் பார்வை வட்டத்தில் அவர்களுக்கு அருகில் நின்றிருந்த அரசியும் விழுந்தாள்.
“புலி வந்திருச்சு போல!” என்றான்.
குலசேகரன் அப்படிக் கூறியதும் ஒருநொடி நின்று பின் கூட்டத்தில் பார்வையை செலுத்தியபடி வந்துகொண்டிருந்தான் விக்ரமன். இருந்தும் அப்புலியானது அவன் கண்களுக்கு தட்டுப் படவில்லை. அதை அறிந்து குலசேகரனே,
“கம்பத்துக்கு கீழ மாப்ள. எங்கக்கா மக எலிக்கு பக்கத்துல தான் உங்க மாமன் மக புலி நிக்குது” என்றான் சின்ன சிரிப்புடன்.
அதன் பின்னரே அரசியை கவனித்தான் விக்ரம பாண்டியன். அவள் முகத்தைக் கூட முழுதாய் பார்த்திருக்கவில்லை அதற்குள் மின்னலென மாயமாகி இருந்தாள்.
விக்ரமனின் பின்னால் தன் தந்தை ஆறுச்சாமி வருவது கண்டு தன் அப்பத்தாளோடு கூட்டத்தில் புகுந்து அவ்விடத்தைக் கடந்து, காற்றென மறைந்து போயிருந்தாள் அரசி!
வேங்கையரசி..!
வாசம் வீசும்..!