“அம்மா முறுக்கு குடுத்தாங்களாண்ணா” என்று ஓடி வந்த கீர்த்தியை பார்த்த கதிரவன் “பாத்து வாம்மா முறுக்க நா திருப்பி எடுத்துட்டுல்லாம் போக மாட்டேன்” என்றான் அவள் முன்னே பெரிய பையை நீட்டிக்கொண்டே.
அங்கே இருந்த நிழலில் அமர்ந்துகொண்டு அதை திறந்து பார்த்தாள் கீர்த்தி, ஒரு பாத்திரம் நிறைய தேங்காய்ப்பால் முறுக்கு மற்றொன்றில் அதிரசம் தட்டை, வாழையிலையில் கட்டிவைத்த இருபது முழம் மல்லிப்பூ இருந்தது ,அனைத்தின் வாசத்தையும் நாசியில் நிரப்பிக்கொண்டாள்.
“இந்த பொம்பள பிள்ளைகளுக்கு ஹாஸ்டலும் மாமியார் வீடும் ஒண்ணுதான் போல அம்மா வீட்ல இருந்து சின்னதா ஒரு பை வந்துட்டா கூட அவ்ளோ சந்தோசம்” என்க புன்னைகைத்துக்கொண்டவள் விழிகள் சுற்றிலும் அவளின் பாசமலரை தேடியது.
“அண்ணே போன் பேசிட்டு இருக்காங்க” என்றான் கதிரவன்.
“தாத்தா நல்லா இருக்காரா” என்றவளிடம் “ஹ்ம் அவருக்கென்ன ஜம்னு இருக்கார் அம்மாக்குத்தான் புலம்பல் நிக்குல , இந்த அண்ணா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? எனக்கே ஒரு புள்ள பொறந்திடுச்சு” என்றான் சிறு வருத்தத்தோடு.
அவள் முகமும் வாடியது,அழுத்தமான காலடி சத்தத்தில் முகத்தின் வாட்டத்தை மறைத்துக்கொண்டாள்.
“வேண்டாம் அந்த பொண்ண வீட்டில விட்டுட்டு நாங்க அப்படியே குன்னூர் போறோம் நீ வர வேண்டாம்” என்றவன் அந்த பொண்ணுக்கு என் கூட வர ஒன்னும் பிரச்னையில்லயே” என்றான் தங்கையை பார்த்துக்கொண்டே.
“தப்பு கீர்த்தி அப்படி சொல்லாத, நாம உதவி செய்றதாலயோ அவங்க நம்ம கிட்ட கேட்டதாலோ நாம ரொம்ப மேல இருக்கிறதா அர்த்தம் இல்ல, அந்த பொண்ணுக்கு வேற வழி இல்லாமகூட இதுக்கு ஓத்துட்டு இருக்கலாம்”.
“வெங்கடேசன் தாத்தா தெரிஞ்சவராவே இருந்தாலும் முன்ன பின்ன தெரியாத ரெண்டு ஆம்பளைங்க கூட அந்த பொண்ணு எட்டு மணிநேரம் பயணம் செய்யணும், நாங்கதான் என்னனு பேச இல்ல அந்த பொண்ணுதான் எங்ககிட்ட என்ன பேச” என்றான் தங்கையிடம்.
“சாரிண்ணா நா அப்படி யோசிக்கவே இல்ல,உண்மைதான கதிர் அண்ணாவுக்கு பதிலா வேற யாரவது வந்தா எனக்கே ஒருமாதிரி தானே இருக்கும்” என்றாள்.
“சரிவிடு பத்திரமா கொண்டு போய் விட்டுடனும்” என்றவன் “நீ போய் அந்த பொண்ண கூட்டிட்டு வா இப்போவே கிளம்பினாதான் சரியா இருக்கும்” என்றான்.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் இருந்த மரத்தின் பின்னால் நின்றவள் “என்னோட வரியான்னு ஒருதடவை கேட்டுத்தான் பாருங்களேன் மிஸ்டர் ஹல்க்” என்றாள் மனதிற்குள்.
அப்படிதான் இருப்பான் சேனாபதி பாண்டியன் உயரத்திற்கும் அகலத்திற்கும் பஞ்சமில்லாமல் ,அவன் தாத்தாவின் உடற்கட்டு பக்கத்தில் நிற்பவர் நான்கடி தள்ளிநின்றுதான் பேசவேண்டும் அவன் முகத்தை பார்த்து பேச.
கீர்த்தியை இந்த கல்லூரியில் சேர்க்க அவன் மட்டுமே வந்தான் உடன் அவர்களிடம் ஓட்டுநராக வேலை பார்க்கும் கதிரவனும், அன்றுதான் முதன்முதலில் அவனை பார்த்தாள் திலோத்தமா.
அத்தனை பெரிய உருவத்திற்கு சம்மந்தம் இல்லாமல் அழும் தங்கையை அணைத்து நின்று ஆறுதல் கூறினான் “எல்லா மாசமும் அண்ணே வந்துடுவேன் எதுனாலும் உடனே போன் போடு, நா இல்லனாலும் யாரையாவது உடனே அனுப்புறேன்” என்று அவள் தலையை கோதிக்கொண்டே அவன் கூற.
‘அந்த அணைப்பிற்குள் தான் நின்றாள் எப்படி இருக்கும்’ என்று ஒரு நொடியில் மனதில் ஆசை தோன்றிவிட்டது திலோத்தமாவிற்கு, அதை அவள் மாற்றிக்கொள்ளவும் இல்லை.
“டேக் கேர் டியர்,கேஷ் அக்கவுண்ட்ல போட்டுட்டேன் ஜஸ்ட் ஒரு கால் பண்ணு என்ன வேணும்னு ஒகே” என்ற தந்தை காரில் ஏறி செல்ல விரக்தி புன்னகை அவளிடம், மீண்டும் பார்வை அண்ணன் தங்கையில் பதிந்தது.
“கீர்த்தி… இப்படி அழுவேன்னுதான் யாரையும் கூட கூட்டிட்டு வரல அங்கேயிருந்து அழுதுட்டு இருக்க வேண்டாம்னா வந்துடு,அங்கேயே காலேஜில சேந்துக்கலாம்” என்க.
சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு “இல்ல எனக்கு இங்கதான் படிக்கணும்” என்றாள் வேகமாக, அவன் இதழ்களில் குறுநகை.
“சரி போ ரூம் பாத்து பொருள் எல்லாம் வெச்சுட்டுவா வெளில போய் சாப்பிடலாம்” என்றான்.
“சரி” என்றவள் உடைமைகளை எடுத்துக்கொண்டு ஹாஸ்டலின் உள்ளே செல்ல, இவர்களை மட்டுமே பார்த்து நின்றிருந்தாள் திலோத்தமா கீர்த்தி உள்ளே சென்றதும் சுற்றிலும் பார்வையை செலுத்தினாள், அணைத்து மாணவ மாணவிகளும் குடும்பத்தோடு வந்திருந்தனர்.
அணைப்பு கெஞ்சல் கண்ணீர் என்று எங்கும் அன்பு நிறைந்திருந்தது எப்பொழுதும் போல இவள் மட்டும் தனியே நின்றாள், அறைக்கு செல்ல மனம் வரவில்லை எப்படியும் தங்கை வந்ததும் சென்றுவிடுவான் அதுவரை பார்க்கலாம் என்று அங்கேயே அமர்ந்துகொண்டாள்.
அது பெங்களூரில் இருக்கும் பிரபலமான ஹோமியோபதி மருத்துவ கல்லூரி தாத்தாவை பின்பற்றி சேனாபதி போக, தந்தையை பின்பற்றி கீர்த்தி மருத்துவத்தை தேர்ந்தெடுத்தாள்
பார்த்தவுடனே ஒருவரை பிடிக்குமா!! இன்றுவரை அப்படி ஒரு விஷயத்தை அவள் நம்பியதில்லை, இத்தனை வருடங்கள் கடந்தும் தாயையும் தந்தையையும் பிடிக்கவில்லையே, அவர்களின் புதிய துனைகளையும் பிடிக்கவில்லையே.
‘தன்மீதுதான் தவறா’ ஒன்றும் தெரியவில்லை அறையை கண்டுபிடித்து பொருட்களை வைத்த கீர்த்தி தன்னை ரெப்ரெஷ் செய்துகொண்டு மீண்டும் வெளியில் வந்தாள், தங்கையை அழைத்துக்கொண்டு அவனும் சென்றுவிட்டான்.
திலோத்திமா எங்கும் செல்லவில்லை மாலை அவன் வந்து தங்கையை அங்கு விட்டுச்செல்லும் வரை அங்கேயே அமர்ந்திருந்தாள் கீர்த்தியை விட்டுவிட்டு ஆயிரம் பத்திரம் சொல்லி கட்டாக பணத்தை அவள் கையில் திணித்தான்.
“இருக்குண்ணா” என்க “பரவாயில்ல கையில கொஞ்சம் இருக்கட்டும்” என்று அவளை அனுப்பிவைத்து அவன் செல்ல, கீர்த்தியின் பின்னே தன்னுடைய பெட்டியை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் திலோத்தமா.
பூபதி பாண்டியன் மணிமேகலை தம்பதிக்கு ஒரே மகன் முத்துப்பாண்டி, அதன் பிறகு பிள்ளைகள் கருவில் தங்கவில்லை ,மணிமேகலை முத்துப்பாண்டியின் பதிமூன்று வயதில் இறந்துவிட மகனுக்காக மட்டுமே வாழ்ந்தார் பூபதி, வீட்டிற்கு ஒரு பெண் வேண்டுமென முத்துப்பாண்டிக்கு இருபத்தி நான்கு வயதிலே வெண்மதியை மனம் முடித்து வைத்துவிட்டார்
முத்துப்பாண்டி வெண்மதி தம்பதியின் மூத்த புத்திரன் சேனாபதி பாண்டியன் இரண்டு டிகிரி முடித்தவன் ஆனால் எங்கும் வேலைக்கு செல்லவில்லை, திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் அவர்களின் சொந்த ஊர் அங்கே ஊருக்குள் கைராசியான ஹோமியோ மருத்துவர் அவன் தந்தை.
ஆனால் அவன் செய்வது குஸ்தி தாத்தா பூபதி பாண்டியனின் வழிகாட்டுதல், இரண்டு ஜிம் வைத்திருக்கிறான் தற்காப்பு கலைகள் கற்று கொடுக்கிறான் அதற்க்கு தனியே இடமும் நேரமும் உண்டு, இவற்றிலே நல்ல வருமானம், அதோடு குடும்பத்தொழில் பழ ஏற்றுமதி அதையும் பார்த்துக்கொள்வான் கொஞ்சம் பெரிய மனிதர்கள் பழக்கமும் உண்டு.
அவனுடைய இருபத்தியாறு வயதிலே பெண் பார்க்க தொடங்கிவிட்டார் வெண்மதி ஏனோ பார்த்த எந்த பெண்ணையும் அவனுக்கு பிடிக்கவில்லை ஒரே பார்வையில் வேண்டாம் என்று மறுத்துவிடுவான்.
சிலர் “படிச்சிருக்காரே நல்ல வேலைல சேரலாமே” என்றனர்.
சிலர் “நாங்க அலோபதி சாப்பிடுறவங்க நீங்க ஹோமியோ மட்டும்தான் சாப்பிடுவோம் சொல்றீங்க எங்க பொண்ணுக்கு சரியா வராது” என்றனர், அதனால் பல சம்பந்தம் கை நழுவியது.
அவனுடைய உருவத்தை வைத்து பல பெற்றோர் பயந்து வேண்டாம் என்றனர், இப்படி கரணங்கள் பல இருக்க, மூன்றே வருடத்தில் “இனிமேல் பெண் பார்க்காதீர்கள் நானே சொல்கிறேன்” என்று கூறிவிட்டான்.
வயது முப்பத்து மூன்றை தொட்டு நிற்கிறது இப்படியே ஓட்டி விடுவானோ என்ற பயம் அவன் தாய் வெண்மதிக்கு
இரு தினங்களுக்கு முன் சேனாபதியின் தாத்தா பூபதியின் நெருங்கிய நண்பர் வெங்கடேசன் அவரை காண வீட்டிற்கு வந்தார் “வாடா” என்ற பூபதி வீல் சேரில் ஹாலிற்கு வந்தார்.
இப்பொழுதும் அந்த கம்பீரம் குறையவில்லை, மூன்று வருடங்களுக்கு முன்பு கால்கள் செயல் இழந்துவிட்டது, முத்துப்பாண்டி தந்தையை அப்படி பார்த்துக்கொள்வார் தன்னை தாயாக தந்தையாக நின்று வளர்த்தவர் என்று தந்தைக்கான அனைத்தையும் அவரே பார்த்து பார்த்து செய்வார்.
“வா ஒக்காரு” என்றவர் சோபாவுக்கு நேரே வீல் சேரை நிறுத்தினார், “ஹ்ம்ம்” என்று அவர் அமர
“வாங்க மாமா” என்ற வெண்மதி குடிக்க அவருக்கு மோர் கொண்டுவந்து கொடுத்தார், குடித்து முடித்தவர் “முத்துவும் சேனாபதியும் இல்லையாமா” என்க.
“இருக்காங்க மாமா இதோ கூப்பிடுறேன்” என்றவர் தங்கள் அறைநோக்கி சென்றார்.
“ஏன் எல்லோரையும் அழைக்கிறான்” என்று யோசனையாக பூபதி அமர்ந்திருக்க தன்னுடைய அறையில் இருந்து சேனாபதியும் கீழிறங்கினான் அனைவரும் முகமன் கூறி அமர.
“சொல்லுடா என்ன விஷயம்” என்றார் பூபதி.
“உனக்கு சுந்தரை ஞாபகம் இருக்கா” என்றார் பூபதியைப்பார்த்து அவர் சிறிது நேரம் யோசனை செய்து “யார்? அந்த காரைக்குடி பிரெண்டா” என்க.
“ஹ்ம்ம் ஆமாம்” என்று தலை அசைத்தவர் “அவனோட பொண்ணு கல்யாணம் அப்புறம் நடந்த எல்லாம் உனக்கு தெரியும்ல” என்க.
பூபதி “தெரியும்” என்பதாக தலை அசைத்தார், மற்றவர்களுக்கு புரியவில்லை என்றாலும் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
சேனாபதியை திரும்பி பார்த்த வெங்கடேசன் “சுந்தர் அஞ்சு வர்ஷம் முன்னாடி இறந்துபோய்ட்டான், ஒரு பேத்தி இருக்கா பேரு திலோத்திமா பதினஞ்சு வயசு வரைக்கும் இவன்தான் பாத்துக்கிட்டான் அப்புறம் அந்த பொண்ணு அப்பாகூட போய்டுச்சு”.
“இப்போ பொண்ணுக்கு கல்யாணத்துக்கு பாத்துருக்காங்க ஞாயித்துக்கிழமை பொண்ணு பாக்க வராங்க, திலோத்திமாவை ஹாஸ்டல்ல இருந்து கூட்டிட்டு வரணும்” என்றார்.
பின் தயங்கி “திலோவோட அப்பா அவர் குடும்பத்தோட துபாய் டூர் போயிருக்கார்” என்க சேனாபதி புரியாமல் பார்த்தான் அவரை.
‘குடும்பம் என்றால் இந்த பெண் இல்லையா’ என்றவன் கேள்வியை அவன் விழிகளில் அவரால் படிக்க முடிந்தது.
“அது… கொஞ்சம் பிரச்சனைகள் இருந்துச்சு தம்பி அது பெரிய கதை, இப்போ திலோவை கூட்டிட்டு வர நம்பிக்கையான ஆள் வேணும்னு திலோவோட அப்பா கரண் கேட்டான், எனக்கு உன் ஞாபகம் தான் வந்துச்சு அதான் உன்னை தேடி வந்துருக்கேன்” என்றார்.
பூபதி பேரனை திரும்பி பார்த்தார் “செய்கிறாயா” என்னும் விதமாக.
“எங்க இருக்காங்க” என்றான் வெங்கடேசனிடம்.
“நம்ம கீர்த்தி படிக்குற காலேஜுலதான் படிக்குதுப்பா கடைசி வர்ஷம்தாம் அந்த பொண்ணும்” என்றார்.
“பெங்களூர்ன்னா பிலைட் ஈஸிதானே” என்றான் யோசனையாக.
“திலோத்தமாவுக்கு அக்ரோபோபியா இருக்கு உயரங்கள் அவளுக்கு பயம்” என்றார், அவனுக்கு புரிந்தது.
விவரங்களை கேட்டுக்கொண்டான், திலோத்தமாவிற்கும் இவன் வருவதை பற்றி தகவல் கூறப்பட்டது.
‘வரமாட்டேன்’ என்று சொல்ல காத்திருந்தவள் அழைத்துச்செல்ல சேனாபதி வருகிறான் என்ற தகவலில் அமைதி காத்தாள்,எட்டு மணிநேரம் அவனை அருகில் பார்த்துக்கொண்டே செல்லலாம்.
இந்த காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையெல்லாம் அவளுக்கு கிடையாது, இறுதி வரை அவனுக்கு இதை பற்றி தெரியப்போவதும் இல்லை, காரைக்குடியில் அவளை இறக்கி விட்டுவிட்டால் அவனுடைய கடமை முடிந்துவிட்டது.
நெஞ்சம் அடைத்தது திலோத்தமாவிற்கு, அவனுடன் பயணம் என்ற சந்தோஷத்தையும் தாண்டி உடன் வருகிறவள் தன்னை நான்கு வருடமாக மனதில் சுமக்கிறாள் என்ற உண்மைகூட இவனுக்கு தெரியப்போவதில்லையே என்ற பாரம் அவளை அழுத்தியது.
கீர்த்தி அவளை தேடி உள்ளே செல்ல மெல்ல அங்கிருந்து நகர்ந்து தூரே நின்றுகொண்டாள், திலோவை தேடி சென்ற கீர்த்தி அவளை காணாமல் திரும்பி வந்தாள்.
ஹாஸ்டெல் காம்பௌண்டில் இடப்பட்டிருக்கும் இருக்கை ஒன்றில் அவள் அமர்ந்திருப்பதை பார்த்து அருகில் நெருங்கியவள் “திலோ உன்னைத்தான் தேடினேன் அண்ணா வந்துட்டாங்க போலாமா” என்க.
“ஹ்ம்” என்றவள் அவளுடன் இனைந்து நடந்தாள், அவன் அருகில் நெருங்க நெருங்க கால்கள் தடுமாறியது உள்ளே அடித்துக்கொள்ளும் இதயத்தின் ஓசை அவனை அடைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்தது.
“அண்ணா இதுதான் திலோத்திமா” என்றாள் கீர்த்தி.
அவனை நிமிர்ந்து பார்த்து இவள் மெலிதாக புன்னகைக்க அவள் தெத்துப்பல்லில் ஒருநொடி சிக்கி மீண்டது அவன் விழிகள்.
“போலாமா” என்றான் உடனே அந்த கணீர் குரலில்.
“ஹ்ம்” என்றவள் கீர்த்தியிடம் “சாரி” என்க.
“ஏன்” என்றாள் அவள் புரியாமல்.
“இல்ல உங்க அண்ணாவோட வெளில போக உனக்கு பிளான் இருந்திருக்கும் என்னால அது கெட்டுப்போச்சு சாரி” என்றவளை ஆச்சர்யமாக பார்த்த கீர்த்தி.
“அப்படிலாம் இல்ல எக்ஸாம் முடிஞ்சு வீட்டுக்குத்தானே போகப்போறேன் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை அமையட்டும் வாழ்த்துக்கள் நீ என்ஜாய் பண்ணு” என்று வாழ்த்தி அனுப்ப.
திலோத்தமாவை ஒரு முறை ஆழ்ந்து பார்த்து முன் இருக்கையில் சென்று அமர்ந்தான் சேனாபதி பாண்டியன்.