பரசுராம் வந்துப்போன பிறகு ஷியாமளன் சிந்தனைவயப்பட்டவனாகவே சுற்றினான்.
ஒரு வாரமாய் தன்னை கட்டாயப்படுத்தி இயல்பாய் இருப்பதை போல காட்டிக்கொண்டவனுக்கு இப்போது அப்படி நடிக்க கூட வராமல் போக, மதியத்திற்கு மேல் ஷோரூம் வந்த மார்த்தாண்டம் அவனை கண்டுகொண்டுவிட்டார்.
“மறுபடியும் அந்த பொண்ணு நினைப்பா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டார்.
“ச்ச… ச்ச… இல்ல மாமா” என்றவனை அவர் நம்பாமல் பார்க்க,
“நிஜமா இல்ல மாமா” என்றான் ஷியாமளன்.
“இதுவரைக்கும் என்கிட்ட எதையும் மறைச்சதே இல்ல… இந்த பொண்ணு விஷயத்தை தவிர… இப்போ மறுபடி அதே தப்பை செய்யாத” கண்டிப்புடன் அவர் சொன்னதும் தலைகுனிந்தவன்,
“ஜனனி அப்பா என்னை பாக்க வந்தாரு மாமா” என்றான்.
“அந்தாளு எதுக்கு இங்க வரணும்?” சூடாக கேட்டார்.
“மன்னிப்பு கேட்டாரு மாமா”
“ஓ… பொண்ணு தப்பு பண்ணுவா… அப்பன் வந்து மன்னிப்பு கேட்ப்பானா? என்ன குடும்பமோ… ச்சை”
மார்த்தாண்டதுக்கு அந்த பெண் யார் என்ன என்றுக்கூட தெரியாது. தன் மகனை அழ வைத்தவள் நல்லவள் அல்ல என்று ஆணித்தரமாய் நம்பினார். அவளையும் அவள் சார்ந்த அத்தனையையும் வேப்பங்காயாய் எண்ணி முகம் சுளித்தார்.
“அவர் ரொம்ப நல்லவர் மாமா” மாமனின் பழி சொல்லை ஏற்க முடியவில்லை அவனால்.
“அவளை கூட போன வாரம் வரை அப்படி தானே நினைச்ச?” சுருக்கென கேட்டார் மார்த்தாண்டம்.
“இப்டி எல்லாரையும் நல்லவன் நல்லவன்னு கண்மூடித்தனமா நம்பு… இன்னும் நாலு பேர் வந்து உன் தலைல மொளகா அரைச்சுட்டு போவட்டும்” கடுமையாக சொல்ல, மணிக்கட்டில் இருந்த வாட்சை திருகிக்கொண்டு பேசாமல் இருந்தான் ஷியாமளன்.
“பொழைக்க கத்துக்க ஷியாம்! இன்னமும் ஏமாளியாவே இருக்காத! நான் அவ்ளோதான் சொல்லுவேன்! அதுக்குமேல உன் இஷ்டம்!” என்றவர்,
“ஒரு அளவுக்கு மேல அழுத்தி சொல்லக்கூட பயமா இருக்கு… என்ன இருந்தாலும் பெத்தவன் இல்லையே!” அவர் இப்படி சொல்லியதும் ஷியாமளனின் மனதை வெகுவாய் நோகவைத்தது.
“பெத்தவன் கூட யாரு தெரியாது மாமா! நீங்க எனக்கு எல்லாருக்கும் மேல! தயவுசெஞ்சு இனி ஒருமுறை இப்படி பேசிடாதீங்க!” என்றவன்,
“நான் தெளிவா தான் இருக்கேன் மாமா! என்னை நினைச்சு நீங்க வருத்தப்படாதீங்க” என்றான் திடமாய்.
பரசுராமின் வருகையில் கலங்கிய மனது, மார்த்தாண்டத்தின் பேச்சில் மீண்டும் இறுகிக்கொண்டது.
ஜனனிக்கு காய்ச்சல் சற்றே மட்டுப்பட்டிருந்தது. அவள் தூக்கம் கலைந்தும் எழாமல் அப்படியே படுத்திருக்க, அறைக்குள் வந்த பரசுராம் கையில் இருந்த கஞ்சியை டேபிளில் வைத்துவிட்டு சென்றார்.
பரசுராம் மகளுடன் பேசுவதை நிறுத்தி இருதினங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஜனனியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் விடுப்பில் இருப்பவர், கடமைக்கு அவளுக்கு தேவையானதை செய்ய, இதற்குமுன் தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கிய தந்தையின் அன்பிற்காக மனம் ஏங்கியது.
கண்கள் தன்போல கசிய, ‘ஷியாம் என்ன செய்ராரோ தெரியலையே!’ என்ற எண்ணம் வேறு அவளை இன்னும் பலகீனமாக்கியது.
அவளுக்கு பரசுராம் சென்று அவனிடம் பேசியதெல்லாம் தெரியாது. அவர்தான் இவளிடம் பேசுவதே இல்லையே.. பிறகு எப்படி தெரியவரும்?
இதுநாள் வரை கொஞ்சி சீராட்டி வளர்த்த தந்தை கைநீட்டிவிட்ட ஏக்கத்தில் வந்த காய்ச்சலா, அல்லது ஷியாமை ஏமாற்றி விட்டோமே என்று அவள் நெஞ்சே நெருஞ்சி முள்ளாய் மாறிவிட்ட குற்றவுணர்வில் வந்த காய்ச்சலா இல்லை… அவனை பார்க்க போன ஸ்டார் ஹோட்டல் ஏ.சியில் குடித்த கோல்ட் காஃபி ஏற்ப்படுத்திய காய்ச்சலா…? ஏதோ ஒன்று… அவளை விட்டு போகாமல் படுத்தியது.
மெல்ல எழுந்து அமர்ந்தாள். உடலில் ஜீவனே இல்லாததை போல இருந்தது.
எழுந்து நான்கடி வைக்க முடியுமா என்றுக்கூட தெரியவில்லை. மனம் திடமாய் இருந்தாலே உடல் திடமாகிவிடும். இவளுக்கு தான் இப்போது ரெண்டுமே பலகீனமாய் உள்ளதே!!! தள்ளாடிப்போனாள்.
அறைக்குள் இருக்கும் பாத்ரூமுக்கு போகவே பயமாய் இருந்தது.
முயன்று நடப்போம் என அவள் இரண்டடி வைத்தபோதே தள்ளாடி விழப்போக, வேகமாய் வந்து தாங்கிப்பிடித்தார் பரசுராம்.
‘அப்பா..’ கண்கள் கலங்கியது அவளுக்கு.
ஒன்றும் பேசாமல் பாத்ரூம் வரை அழைத்துசென்றவர், அவள் திரும்பி வரும்வரை அங்கேயே நின்று மீண்டும் அஹைத்து வந்து கட்டிலில் அமர வைத்தார்.
பின் தான் வைத்துவிட்டு சென்ற கஞ்சியை எடுத்து சிறுது சிறிதாக அவளுக்கு புகட்ட ஆரம்பிக்க, அவளுக்கு அழுகை உதடு பிதுக்கிக்கொண்டு வந்தது.
‘அப்பாஆஆஆ’ இடையோடு அவரை கட்டிக்கொண்டு அழுதாள் ஜனனி.
மகள் லேசாக கண்கலங்கினால் கூட தாங்காத மனிதருக்கு இப்படி அழுகையில் பார்த்துக்கொண்டே நிற்கத்தான் முடியுமா?! ஆனாலும் அவாள் செய்த காரியம் தெரிந்ததில் இருந்து அப்படி ஒரு கோபம் இருக்கிறது உள்ளுக்குள்…!
“எதுக்கு அழுகுற இப்போ?” அதட்டலாகவே கேட்டார்.
“தப்பு பண்ணிட்டேன்ப்பா!”
“செய்யும்போது தப்புன்னு தெரியலியா?”
“இல்லப்பா! நான் இப்படி ஆகும்ன்னு நினைக்கல! நான் அவர்ட்ட வழியப்போய் பேசுனா அவர் என்னை அவமானப்படுத்துவாரு, திட்டுவாரு… இப்டி தான் எதிர்ப்பார்த்தேன்! என்னை காதலிக்குறேன்னு சொல்லுவாருன்னு கனவுகூட காணல!”
“அவன் உன்கூட பழகுனதை வச்சுக்கூட உன்னால இதை கண்டுப்பிடிக்க தெரியலன்னா நீயெல்லாம் எதுக்கு சைக்காலஜி படிச்ச?” இதற்கு அவளால் பதில் சொல்லமுடியவில்லை.
ஆரம்பத்தில் அவள் சொன்னதுப்போல எதிர்மறை தாக்குதல்களை தான் எதிர்ப்பார்த்தாள். அது நடக்கவில்லை என்றதும் அவள் மனம் சோர்ந்தது தான்.
ஆனாலும், ஒரு பெண்ணாய் சென்று வழிய பேசும்போது அதற்கு நேர்மறையாய் ஒரு ஆண் நடந்துகொள்வது கூட வித்தியாசமாய் நன்றாக இருப்பதாய் தோன்ற தீசிஸ் தலைப்பில் சிறிய மாற்றத்தை செய்துவிட்டு அவனோடு பழகுவதை தொடர்ந்தாள்.
ஒரு கட்டத்தில் அவனுக்கு இவள் மீது ஈர்ப்பு வந்துவிட்டது என்பதை தெளிவாய் அவள் உணர்ந்துக்கொண்டாலும், ‘சீக்கிரமே உண்மையை சொல்லிவிட்டு விலகிவிட வேண்டும்’ என்று சுயநலமாய் தன் ஆராய்ச்சி தான் முக்கியம் என்று இருந்தாள் ஜனனி.
தன் சுயநல எண்ணத்தை அப்போது நினைக்கையில் ஒன்றும் பெரிய தவறாய் படவில்லை. ஆனால், இப்போது? நினைக்கவே கூசியது!
கல்லை போல நின்றவர் கஞ்சியை மட்டும் ஊட்டிக்கொண்டிருக்க, அவர் கையை தடுத்தவள், “பேசுங்கப்பா” என்றாள் இறைஞ்சலாய்.
“என்ன பேச சொல்ற?” கடுகடுவென கேட்டது கூட அவளுக்கு பெரிதாய் இல்லை. தந்தை பேசுவதே போதும் என்றிருந்தது.
“இத்தனை வருஷமும் ‘என் பொண்ணு’ ‘என் பொண்ணு’ன்னு பெருமைப்பட்டுட்டு இருந்தேன். அம்மா இல்லனா கூட என் பொண்ணை எப்படி வளர்த்துருக்கேன் பாருன்னு கர்வமா இருந்தேன்… எல்லாத்தையும் ஒரே நாள்ல மண்ணோட மண்ணாக்கிட்டியே நீ…”
ஜனனியால் அவரை நிமிர்ந்தும் பார்க்க இயலவில்லை.
“நீ ஒவ்வொரு வயசுலயும் ஒவ்வொரு விஷயம் செஞ்சுட்டு வந்து நிக்கும்போது, ‘பார்த்தீங்களா என் பொண்ணு என்ன செஞ்சுருக்கான்னு?’ பெருமையா பேசுவேன்… இப்போ எல்லாம் தெரிஞ்சு, மனுஷங்க மனசை கூட படிக்க தெரிஞ்ச வயசுல நீ செஞ்சுட்டு வந்துருக்க விஷயத்தை நாலு பேருக்கிட்ட சொல்ல தான் முடியுமா?
இப்டி ஒரு வேலை செஞ்சு அந்த தீஸிஸ்’க்கு பரிசு கிடைச்சா என்ன நாசமா போனாதான் என்ன?! மானம் மரியாதை வித்து தான் ஒன்னு கிடைக்கும்ன்னா என்ன இதுக்கு’ங்குறேன்!!?” அதிஉக்கிரம் தெறித்தது அவர் பேச்சில்.
“அப்படி என்ன உனக்கு தினவெடுத்து போச்சு? அப்பன் ஒரு ஏமாளி… அவன் நம்மளை கண்டுக்க மாட்டேங்குற அசாலட்டு தானே?” என்று கேட்க,
‘இல்லை..’ என்று வேகமாய் தலையாட்டினாள்.
“பிறகு வேறென்ன? தப்புன்னு தெரிஞ்சும் கூட பயம் இல்லாம எது அந்த தப்பை செய்ய வச்சுது? கண்டிக்க ஆள் இல்லாங்குற நினைப்பு தானே?” என்று வினவ, ‘ஆம்’ என்பது அவள் மனம் மட்டுமே அறிந்தது.
தன் தவறை கண்டுக்கொள்ள, தட்டிக்கேட்க, தண்டனை கொடுக்க ஆள் இருக்குமானால், ஒரு பயம் உள்ளூர இருக்கும் தானே?! இதெல்லாம் இல்லாதபோது, தவறென மனதிற்கு தெரிந்தாலும் செய்து பார்க்க சொல்லி ஏவிவிடும் சாத்தானுக்கு அடிபணியும் நிலைக்கு தான் தள்ளப்படுவோம்.
“உனக்கு அந்த பையனை பிடிக்குமா?” திடுமென தந்தை கேட்டதில் பேந்த பேந்த முழித்தாள்.
“சொல்லு” அதட்ட, “ஆம்” என்பதாய் ஆடியது அவள் சிரம்.
“அப்போ நீ அவனை தான் கல்யாணம் பண்ணனும்… அவன் கை கால்ல விழுந்தாவது சம்மதம் வாங்கு” என்றுவிட, அதுவரை குழம்பிய குட்டையாய் கிடந்த அவள் மனதுக்குள் உற்சாகம் குமுழியிட, தந்தையையே அதிசயமாய் பார்த்தாள்.
“அந்த தம்பி ரொம்ப கோவமா இருக்கு உன்மேல… மன்னிக்குறது கஷ்டம்” என்றார்.
இவருக்கு எப்படி தெரியும்? என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை.
“இது மனசு சம்பந்தப்பட்ட விஷயம் ஜனனி. இனி ஒருமுறை அவன் மனசோட விளையாடாத… ஒருவேளை நீ எவ்ளோ மன்னிப்பு கேட்டும் அவன் இறங்கி வரலன்னா விட்டுடனும்… இம்சிக்க கூடாது” என்றார் கண்டிப்பாய்.
“எனக்கு தெரியும்ப்பா என் ஷியாம் பத்தி… கண்டிப்பா என்னை மன்னிச்சுடுவாங்க…” என்றாள் உறுதியாய்.
“இல்ல ஜனனி, நீ அவனை குறைச்சு எடை போடுற… முன்ன உன்மேல இருந்த பார்வை வேற… இப்போ உன்மேல இருக்க பார்வை வேற… முன்னபோலவே இப்போவும் நடந்துப்பான்னு நினைக்காத…”
இப்படி சொல்ல… “ப்பா… எனக்கு தெரியாதா?” என்றவள்,
“ரொம்ப குழப்பத்தோட இருந்தேன்… இப்போ தெளிவா இருக்கேன்… ஷியாம் என்னை ரொம்ப லவ் பண்ராரு ப்பா… அவரை நான் ஏமாத்திருக்கேன்… கண்டிப்பா அந்த கோபம் எல்லாம் என்மேல வெறுப்பா மாறிருக்கும்…” என்றவள்,
“கன்வின்ஸ் பண்றது கஷ்டம் தான்… ஆனாலும் என்னால முடியாதுன்னு எதுவுமே இல்லை” என்று உற்சாகமாய் எழுந்து நின்றவள் சற்று நேரம் முன் பாத்ரூம் செல்லக்கூட தடுமாறி விழுந்தால் என்றாள் ஒருவரும் நம்ப மாட்டார்கள்…!
“ஜனனி… அப்பாக்கு உன்மேல கோபம் போய்டுச்சுன்னு நினைக்காத… இன்னும் அப்டியே தான் இருக்கு…” என்றவர்,
“செஞ்ச தப்பை நேர்ப்பண்ண முடியுதா பாருன்னு தான் சொல்றேன் இப்பவும்” என்றார்.
“இப்போ நீ செஞ்ச அதே தப்பை ஒரு பையன் செஞ்சுருந்தா…? அதே பொண்ணை கல்யாணம் பண்ணுன்னு தானேன்னு சொல்லுவோம்…?! அதையே தான் உனக்கும் சொல்லிருக்கேன்… ஷியாமளன் மனசுக்கு உன்னை மன்னிக்க முடிஞ்சு அவனுக்கு சம்மதம்ன்னா மட்டுமே இந்த கல்யாணம் நடக்கும்” அழுத்தம் திருத்தமாய் சொன்னார்.
“எனக்கு நல்லா புரிஞ்சுது ப்பா… நான் கண்டிப்பா என் ஷியாம் மனசை மாத்துவேன்” என்றவள்,
“வரேன்… வர்ஷன் 2.0’வா அப்க்ரேட் ஆகி திரும்ப வரேன்” என உள்ளுக்குள் அவனிடம் சொல்லிக்கொண்டாள்.