காரில் மியூசிக் சிஸ்டம் தன் ஆக்கிரமிப்பை நிலைநாட்டியிருந்தது. ஐ.ஜியை நேரில் சந்தித்து, ‘ஷூட் அட் சைட்’ ஆர்டரை பெற்றுக்கொண்டு திரும்பி வந்துக்கொண்டிருந்தனர் ரகுனந்தபூபதியும், ஷைலஜாவும்!
இப்படி வளைவு குழைவு எல்லாம் அவளுக்கு வராத ஒன்றாயிற்றே…!
“ரகு? என்ன முழிக்குறீங்க?” அவள் தோளில் தட்டியதும், புன்னகைத்தவன், இடவலமாய் தலையசைத்து, “சொல்லு!” என்றான் அவளிடம்.
“உங்களை பார்க்கனும்ன்னு அடிக்கடி தோணும்… அப்படி தோணும்போதெல்லாம் பார்க்குறதுக்காக உங்களை வீடியோ எடுத்து வச்சுக்கலாம்ன்னு ஸ்பை கேம்’மோட வந்தேன்!” இப்படி சொன்னவளை நம்பமாட்டாமல் ஒரு நொடி பார்த்தவன், பின்னே சிரித்துகொண்டு,
“பொறந்த குழந்தை கூட இதை நம்பாது… ஆனா, நான் நம்புவேன்… ஏன்னா சொல்றது என் ஷைலுவாச்சே!” என்று கண்ணடிக்க, எழுந்த சிரிப்பை மறைத்துக்கொண்டாள் அவள்.
அவன், “க்ளவர்!” என்றான் அவள் சாதூர்யமாய் தன் வாயடைத்ததை மனதில் கொண்டு.
“யாரு?”
“யாரை சொல்வேன்னு நினைக்குற?”
“ஹவ் டூ ஐ க்னோ?” அவளுக்கு புரிந்தாலும் புரியாதது போலவே பேச,
“ஒரு நாள் சிக்குவ… அன்னைக்கு இருக்கு உனக்கு” என்றான் எப்போதும் போல.
முதல் நாள் அவன் முன் வந்து ‘ஷைலஜா ரிபோர்டிங் சார்’ என்றவளுக்கும், இப்போது தன்னை உரிமையாய் ‘ராஸ்கல்’ என்பவளுக்கும் எத்தனை வேறுபாடுகள்!? இந்த ஒன்னரை மாதங்களில் அவனிடம் மொத்தமாய் தன் சுயம் மாறி நின்றாள் ஷைலஜா.
ஆனால், அவள் சுயம் தொலைக்கவில்லை… அதை மறைத்திருக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று!!!
$$$$$
ஷைலஜாவிற்கு யார்மீதும் நம்பிக்கை இல்லை. பார்ப்பவரை எல்லாம் சந்தேகம்கொள்ள சொல்லி மூளை ஏவ, தன் சந்தேகத்தை யாரிடமும் சொல்லவும் முடியாத கடுப்பில் அந்த பைக்காரன் பாக்கு போடும் கிளிப்பிங்கை மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கு மேல் ரீவைண்ட் செய்து பார்த்துவிட்டாள்.
ஏனோ இதை ரகுவிடம் சொல்லிவிட்டால், தன் குழப்பம் ஒரு நொடியில் மாயமாகிவிடும் என்று தோன்ற அது வேறு எரிச்சலாய் இருந்தது அவளுக்கு.
அவளென்ன சிறு குழந்தையா? இல்லை, அவள் பார்க்கும் ஒரு கேஸ் இதுதானா? எத்தனை வழக்குகளை ‘இம்’மென்பதற்குள் முடித்திருக்கிறாள்.
அது என்னவோ இந்த கேஸ் மட்டும் அவளை இழுத்து அடித்தது. அதிலும் ரகுனந்தபூபதி வந்தபிறகு இவள் மூளையே மழுங்கிவிட்டதோ என்று வேறு ஐயம் உதிக்க, எப்படியேனும் இந்த குழப்பத்தை அவனிடம் இட்டுசெல்லாமல் தானே முடிக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.
கண்ணை மூடி சிறிது நேரம் தியானம் இருந்தாள்.
மனதில் எழும் விக்கி மற்றும் ரகுவின் உருவங்கள் மறையும் வரை அப்படியே இருந்தாள்.
மனம் ஒருபோக்கில் அமைதியானதும், ‘திரையில் தெரிபவன் யார் என்பதை மட்டுமே யோசிக்காதே! சுற்றிலும் கண்களை சுழட்டு… வேறு துப்புகள் கிடைக்கிறதா என்று உற்று பார்!’ என்ற ஆழ்மன கட்டளையை சிரத்தில் ஏற்றவள், நிர்மலமான மனதோடு மீண்டும் அந்த வீடியோ’வை பார்க்கலானாள்.
பைக்காரன் பாக்கு போட்டு துப்புவதை தவிர வேறு ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தியன் போல, மீண்டும் ப்ளே செய்தாள்.
ஓரமாய் நிற்கிறான்…
பேன்ட் பாக்கெட்டில் இருந்து பொட்டலத்தை எடுக்கிறான்.
வாயில் சரித்ததும், பைக்கில் ஏறி அமர்கிறான்…
கார் அவனை தாண்டி செல்கிறது.
யுடர்ன் அடித்து காரை பின்தொடர்கிறான்.
பைக்கை பற்றி எந்த க்ளூவும் இல்லை என்றதும், அவனை உச்சி முதல் பாதம் வரை பொறுமையாய் ஆராய்ந்தாள்.
மெல்ல மெல்ல அவன் பாதத்தில் இருந்து மேலே உயர்ந்த அவள் கண்கள், அந்த ஹெல்மெட்டிடம் வரும்போது சற்று கூர்மையானது.
சட்டென பார்ப்பதற்கு கருநீல நிற தலைகவசம் போல தெரிந்தாலும், சற்றே உற்று நோக்கினால், அது கருப்பும் நீலமும் கலந்தது போல தெரியும். முடிந்தவரை ஜூம் செய்து தெளிவாய் காண முயன்றாள்.
அவளது தொடர் முயற்சியில் பலனாய், கருநிற ஹெல்மெட்டின் பின்பகுதியில் நீல நிற பாம்பின் உடல் போன்ற தோற்றம் தெரிய, அப்படியே அதை கேப்சர்’ செய்து பிரிண்ட் போட்டு எடுத்துக்கொண்டாள்.
‘ஹெல்மெட் டிசைன்’ வச்சு இவன்தான் கொலைகாரன்னு சொல்லமுடியுமா? அவள் மனமே இதை கேட்டாலும்,
‘ஒன்றுமே கிடைக்காமல் இருந்ததற்கு இது எவ்ளோ பெரிய க்ளூ?’ என்று சமாதானம் செய்துக்கொண்டாள்.
ஏதோ ஒன்று கிடைத்த திருப்தியில் தன் அறையை விட்டு வெளியே வந்தவள் காரிடாரில் நேராய் நடக்க, அங்கே பார்க்கிங்’கில் ஒரு காக்கிசட்டை நின்றது.
அது மெல்ல தன் வெறும் கரத்தை பேண்டுக்குள் நுழைத்தது.
கரத்தை வெளியே எடுத்தபோது அதில் என்னவோ இருக்க, அதை பிரித்து அப்படியே வாயில் கொட்டிக்கொள்வதை கண்டதும் ஷைலஜாவின் பிபி தாறுமாறாய் எகிறது.
“நடேசன்?” காட்டுகத்தலாய் அவள் கத்தியதில் நடுங்கிப்போனார் அவர்.
“மே.. மே.. மேடம்?”
“என்ன பண்றீங்க?”
“சும்மா தான் மேடம்…”
“என்ன வாய்ல!?”
“அது ஒரூவா பாக்குங்க மேடம்… வாய் நமநமங்குதேன்னு போட்டேன்!”
பல்லை கடித்தவள், “வாய் நமநமத்தா சூடத்தை கொளுத்தி வாய்ல போட்டுக்கோங்க… இனி என் முன்னாடி யாராது பாக்கு போட்டீங்க…? பத்து நாள் சஸ்பென்ட் பண்ணி அனுப்பிடுவேன் பார்த்துக்கோங்க!” என்று கத்த,
என்ன ஏதென்று புரியாவிட்டாலும் மாங்குமாங்கென தலையாட்டினார் நடேசன்.
அவரிடம் கத்திவிட்டு திரும்பியபோது ஒரு பைக் கிளம்பும் சப்தம் கேட்க, அசட்டையாய் திரும்பி பார்த்தாள்.
ஹெல்மெட் அணிந்த ஒரு காக்கிசட்டைக்காரன் அவர்களை தாண்டி சென்றுகொண்டிருந்தான்.
முதலில் அவள் கண்களுக்கு அது தெரியவில்லை. கண்கள் பார்த்ததை மூளை கண்டுப்பிடித்து அவளுக்கு சொல்வதற்குள் அந்த பைக் சில அடிகள் தள்ளிப்போயிருக்க, வேகமாய் திரும்பிப்பார்த்தாள்.
அது…
அதேதான்…
அந்த தலைகவசம் தான்!
விஷம் நிறைந்த பாம்பு தன் உடலை விரித்து வைத்திருக்கும் அதே அடையாளம் கொண்ட ஹெல்மெட்.
சட்டென பரபரப்பானவள், “அது யாரு? நிறுத்துங்க அவனை!” என்றாள் வாசல் நோக்கி ஓடிக்கொண்டே.
“மேடம், அது நம்ம விக்கி சார் தாங்க! கூப்பிடனுமா?” என்று நடேசன் கேட்க, அவள் கால்கள் அப்படியே நின்றுப்போனது.
“விக்கியா?”
“ஆமாங்க மேடம்!” என்றார் நடேசன்.
‘அப்போ?’ அவள் மனம் கணக்கிட்டது.
அவள் தேடி அலைந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டட்து.
ஆனாலும், அது கிடைத்துவிட்டதென்ற நிம்மதியும், நிறையும் வரவில்லையே அவளுக்கு!?
மற்றதை எல்லாம் ஓரம் கட்டியவள், இதற்குமேல் தாமதிக்கக்கூடாது என்றெண்ணி, தான் திரட்டிய ஆதாரங்களோடு ரகுனந்தபூபதியின் முன்னே சென்று நின்றாள்.
இவள் விஷயத்தை சொல்லியதும் அவன் வியந்துப்போவான், திகைத்துப்போவான், அதிர்ந்துப்போவான் என்று அவள் எதிர்ப்பார்க்க,
“எனக்கு தான் ஏற்கனவே தெரியுமே!” என்று அசராமல் சொல்லி, இவளைத்தான் வியக்கவைத்தான், திகைக்கவைத்தான், அதிரவைத்தான் அந்த ரகுநந்தபூபதி.
‘ஏற்கனவே தெரியுமா?’
அவள் கண்களுக்கு முன்னே நிற்கும் அவன்…
அந்த பூபதி…
‘போலீசா…? இல்லை பூதமா?’ என்ற குழப்பத்தில் அவனை பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டாள் ஷைலஜா.