அன்று இரவு உணவு முடித்ததும் அனைவரும் முற்றத்தில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருக்க,
“அடடா..பேசிட்டே இருக்கீங்களே..போர் அடிக்குது..எதாவது விளையாடலாம்..”
என்று நிலா கூறவும்,
“ஏன் சாயுங்காலம் பட்டம் விட்டது போதலையா..?? கொஞ்ச நேரம் அசந்து உட்கார விட மாட்டியாடி..”
என்று வெண்பா மகளை முறைக்க பதிலுக்கு பழிப்புக் காட்டிய மகள்,
“லீவ் டேஸ்ல தானே ம்மா விளையாட முடியும்..மத்த நாள்ல எல்லாம் எல்லாரும் பிஸியா இருப்பீங்க..”
என்று சொல்ல,
“சரி…அப்ப அந்தாக்ஷெரி விளையாடலாமா..”
ஆர்வமாய் கேட்டாள் லாவண்யா..
“அய்யோ சித்தி..நீங்க பாடினால் யார் கேட்குறது..”
என்று அவள் அதிரவும் மற்றவர்கள் பட்டென்று சிரித்துவிட,
“போடி வாயாடி..” என்று நங்கென்று தலையிலே கொட்டினாள்.
“ஆஆ..” என்று தலையில் தடவிக் கொண்டு,
“நாம செஸ் விளையாடலாமே..”
என்று சொல்ல, “ஐ..நான் வரேன்..”
என்று உடனே ஒத்துக் கொண்டாள் உதயா.
“நாத்தனாரே..சொன்னா கேளு..வேணாம்..”
என்று லாவண்யா எச்சரிக்க,
“ஏன்ண்ணி..அப்படி சொல்றீங்க..ரொம்ப நாள் ஆச்சு..ஜாலியா இருக்கும்..நிலா..நீ போய் போர்ட் எடுத்துட்டு வா..”
என்று அவள் சொல்லவும், “அப்புறம் உன் இஷ்டம்..” என்று விட்டாள்.
மற்றவர்கள் அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்க்க அமர்ந்தனர்.
ஆட்டம் தொடங்கும் முன், “சும்மா விளையாண்டா போர் அடிக்குமே…சரி..நான் ஜெயிச்சா என்ன தருவ அத்த..”
என்று கேட்க, “ம்ம்..அதையும் நீயே சொல்லேன்..”
என்றதும்,
“நாளைக்கு எங்கேயாவது கூட்டிட்டு போகணும்..ம்ம்ம்..சினிமாவுக்கு..”
என்று சொல்ல,
“ஒகே..அப்ப நான் ஜெயிச்சா..”
என்று உதயா புருவம் உயர்த்த,
“சினிமா கூட்டிட்டு போக வேண்டாம்..சிம்பிள்..”
என்று அசால்ட்டாய் தோளை குலுக்க “டன்..” என்று வேகமாய் ஒப்புக் கொண்ட பின் தான்,
“ஆமா..இதுல உனக்கு என்ன லாபம்..”
என பல்ப் எரிந்தது.
மேலே பேச இடமே கொடுக்காது நிலா காயை நகர்த்தி ஆட்டத்தை தொடங்கி வைக்க அதன்பின் அதில் கவனமாகினர்.
இந்த இடத்தில் நிலாவின் புத்திக் கூர்மையை பாராட்டியே ஆக வேண்டும்.ஒவ்வொரு காயையும் யோசித்து நகர்த்தி எளிதாய் உதயாவின் வீரர்களை வீழ்த்தினாள்.
அந்நேரம் மதியின் போனில் ஜெகன் வீடியோ காலில் வர உதயாவும் இருப்பதைக் கண்டு சந்தோஷித்தவன் உதய்யிடம் அண்ணன்களிடம் என்று பொதுவாய் பேசியபின் உதயாவை,
“செஸ் எல்லாம் அறிவு இருக்கிறவங்க விளையாடுறதாச்சே..உனக்கு தான் டாப் ஃபுலோர்ல ஒன்னுமே இல்லையே..நீ எதுக்கு செல்லம்..இந்த ரிஸ்க் எல்லாம் எடுக்குற..”
என்று வம்படியாய் கன்னி வெடியில் காலை வைக்க கானொலியில் தெரிந்த அவனை முறைத்து,
‘மவனே..உன்னை..’ என்று மனதில் கறுவிக் கொண்டு அமைதியாய் இருந்தவள் வெண்பா பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சின் ஊடே இடைப்புகுந்து,
“ஏன் அண்ணி..நம்ம ஜெகனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பித்தால் என்ன..”
என்று மிக பொறுப்பாய் தீவிரமாய் சொல்லி அவன் முகத்தில் உண்டான கலக்கத்தை கண்டு உள்ளே சிரித்துக் கொண்டாள்.
“நானே இங்க இருக்கேன்..இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்..”
“அட..இப்ப பொண்ணு பார்க்க ஆரம்பிச்சா தானே..நீ லீவ் கிடைச்சு வரும் போது கல்யாணம் பண்ண சரியா இருக்கும்..”
என்று சொல்ல உதயாவின் முகத்தில் இருந்த குறும்புன்னகையை யாரு கண்டார்களோ இல்லையோ கணவனாக பட்டவன் கண்டுக் கொள்ள,
‘ஏதோ பொடி வைச்சு பேசுறா..’ என்று புருவம் சுருக்கி ஆர்வமாய் பார்த்திருந்தான் உதய்.
“ஆமா..நீ சொல்றதும் கூட சரி தான்..” என்று வெண்பா யோசிக்க தொடங்க,
“அப்பா கூட சொன்னாங்க..அத்தை வந்து கூட இது சம்பந்தமா முன்னமே பேசினாங்கலாம்..” என்று மதிவாணனும் உள் நுழையவும் ஜெகன் அவஸ்தையாய் நெளிந்தான்.
‘எந்த அத்தைன்னு தெரியலையே..’ என்று அவன் மூளை குடைந்தது.
சதுரங்க ஆட்டத்தில் தன் அடுத்த காயை நகர்த்திக் கொண்டே,
“என்ன அண்ணா..ஜெகன் இந்த காலத்து பையன்..சொந்ததுக்குள்ள எல்லாம் மேரேஜ் பண்றது எல்லாம் விரும்ப மாட்டான்..”
என்று சொல்ல ஜெகன் கண்களுக்கு மட்டும் ஷக்தி இருந்தால் தங்கை என்ற குட்டி பிசாசை பார்வையாளே சுட்டெரித்து இருப்பான்.
‘இவ மட்டும் எங்க அதர் ஸ்டேட்ல இருந்தா கட்டிக்கிட்டா..இவளுக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமுன்னு பேசுற வாய் மேலேயே ஒன்னு போடணும்..’
என்று எண்ணியவனாய்
“போதுமே..ஏன் இப்ப இந்த பேச்சு..”
என்று தவிக்க,
“என்ன ப்ரதரே..ஸ்ருதி ரொம்ப இறங்கிடுச்சு…தொண்டைல கிச்கிச்சா..”
என்றவள் ‘ஸ்ருதி..’யில் சற்று அழுத்தம் கொடுத்து சொல்லவும் அவனுக்கு புரிந்து போனது.உதயா எதையோ கண்டு பிடித்துவிட்டாள் என்று..!!
‘தப்பு தான் உன்னுட்ட சொல்லாம மறைச்சது தப்பு தான்..கருணை காட்டு தாயே..’
என்று கண்களாலே பாவமாய் கெஞ்ச ஆனால் அவர்களே எதிர்பார்க்காதது நடந்தது.
“ஸ்ருதின்னதும் நியாபகம் வருது..ஸ்ருதி நல்ல குணமான பொண்ணு..அவளை பார்க்கலாம்ல..”
என்று வெண்பா ஆர்வமாய் சொல்ல,
“ஆமா க்கா..நல்ல பொண்ணு..” என்று லாவண்யாவும் ஆமோதிக்க ஜெகனின் முகம் ஸ்விச் போட்டது போல் பளீச்சென்றானது.
“ஹே..ஸ்ருதிக்கு தான் அத்தையும் கேட்டது..உதயா கல்யாண நேரத்தில் கேட்டதால நான் தான் அப்புறம் பேசிக்கலாம்னு அப்பாவை சொல்ல சொன்னேன்..”
என்று மதிவாணன் ஆச்சரியமாய் சொல்ல, “அவனுக்கும் வயசு ஏறுது..இன்னும் ஏன் தள்ளி போட்டுட்டு..இப்ப கேட்டால் என்ன ண்ணா..”
என்று தயாவும் சொல்லவும் மதி யோசித்தான்.
“நாமளே ரூட் போட்டு கொடுத்துட்டோமோ..” என்று உதயா அசடு வழிய ஜெகனை பார்த்த மதி,
“நீ என்னடா சொல்ற..”
என்று அவன் அபிப்ராயம் கேட்க முகத்தை படு பவ்யமாய் வைத்துக் கொண்டு,
“உங்க எல்லாருக்கும் இஷ்டம் என்றால் ஓகே ண்ணா..” என்றவன் உதயா வாய் திறக்கவும் அவள் என்ன சொல்வாள் என்று அறிந்தவனாய்,
“ஆனால் எனக்கு பிடிச்சிருக்கு..”
என்று அவசரமாய் சொல்லி அதனால் ஏற்பட்ட வெட்கத்தை மறைக்க வேகமாய் அழைப்பை துண்டித்துவிட அவன் அவசரத்தில் முதலில் புரியாமல் விழித்து புரிந்ததும் அனைவர் முகத்திலும் சிரிப்பு..!!
“இது எத்தனை நாளா நடக்குது தெரியலையே..”
என்று முணுமுணுத்த மதி,
“நான் அப்பாட்ட பேசுறேன்..” என்றான்.
அதேசமயம் நிலா தன் காயை நகர்த்தி,
“செக்மேட்..” என்று உற்சாகமாய் கத்த அப்பொழுது தான் உதயாவிற்கு ஜெகனை வம்பிழுக்கும் சுவாரஸ்யத்தில் ஆட்டத்தை விட்டுவிட்டோம் என்று புரிந்தது.
“ஹே…இதெல்லாம் ஒத்துக்க முடியாது..நான் பேசிட்டு இருந்ததால கவனிக்காம விட்டுட்டேன்..”
“தட்ஸ் யுவர் ஃபால்ட்..செஸ் விளையாடும் போது முழு கவனமும் இங்க தான் இருக்கணும்..அது…கொ..கொ..”
என்று யோசித்த நிலா, “அப்பா அதென்ன சொல்வீங்க..”
என்று சந்தேகம் கேட்க,
“கொக்கிற்கு ஒன்றே மதி..” என்றதும்,
“ஆங்..அது மாதிரி..” என்று சொல்ல,
“ஹிஹி..நான் அப்பவே சொன்னேன்..கேட்டியா..” என்று கிண்டலாய் சிரித்தாள் லாவண்யா.
“என்னை தோக்கடிச்சிட்டேல..எனக்கு பதிலா..எங்க அஞ்சா நெஞ்சம்..அறிவு சுடர்..தானை தலைவன் கலத்துல இறங்குவார்டா..”
என்று அடுக்கிக் கொண்டே போனவளை,
“யாருக்கு இம்புட்டு பில்டப் கொடுக்குறா..” என்று உதய் யோசிக்கும்போதே,
“ஏங்க..என்ன வேடிக்கை பார்த்துட்டு உட்கார்த்து இருக்கீங்க..வாங்க..”
என்று இழுத்து அவனை உட்கார வைக்க,
“சின்ன பிள்ளைட்ட கோர்த்து விடுற..இது அல்லவோ பதிபக்தி..” என்று முணுமுணுத்தப்படி அமர்ந்தான்.
ஆனால் ஆட்டம் தொடங்கியதும் இருவருமே அருமையாய் விளையாடினர்.ஒரு கட்டதிற்கு மேல் நிலா மிகவும் குழம்பி போய் அடுத்து என்ன செய்வது என்று விழித்தவள்,
“ப்பா…நீங்க வந்து கண்டினியூ பண்ணுங்க..”
என்று மதியை அழைக்க,
“ஏய்..இது போங்காட்டம்..”
என்று உதயா கூறவும்,
“நீ மட்டும் உனக்கு பதிலா மாமாவ விளையாட வைச்சலே..”
என்று கூறி, “ ப்பா..” என்று மதியை பாவமாய் பார்க்கவும் அவனும் வந்து அமர்ந்துவிட மற்ற அனைவருக்கும் ஏக குஷி..!!
மாமனும் மச்சானும் எதிரெதிரே அமர்ந்து விளையாட ஆட்டத்தின் சுவாரஸ்யத்தில் ஒருவர் மற்றவருக்கு கமெண்ட் கொடுத்துக் கொண்டே செக் வைக்க அதற்கே அத்தனை மகிழ்ச்சி அடைந்தனர் அவர்தம் மனைவிகள்..!!
இறுதியில் உதய்யே செக்மேட் வைக்க,
“யாஹூ..” என்று சிறுப்பிள்ளை போல் கூக்குரலிட்டவனை கண்டு மதியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
மனைவியோடு ஹைஃபை கொடுத்துக் கொண்டவன் மருமகளை அருகில் அழைத்து,
“நாளைக்கு நாம எல்லாரும் மூவி போறோம் தான்..ஓகே..” என்று அவளை மகிழ்விக்கவும் தவரவில்லை.
மறுநாள் அதிகாலையில் எழுந்து மதிவாணன் நடைபயிற்சிக்கு கிளம்பினான்.எல்லாம் ஜெகன் இம்முறை உடன் இருந்தபோது பழக்கிவிட்டது தான்.தான் தினமும் செல்லும் போது உடன் தன் அண்ணன்களையும் அழைத்து செல்ல மதிக்கும் அது பிடித்தவிட்டது.
ஞாயிறுகிழமை தயா தூக்கத்தை விட்டு தரமாட்டான் என்பதால் தான் மட்டுமே வந்திருந்தான்.
அந்த காலை வேளையில் பறவைகளில் கீச் குரல்களும் வெறிச்சோடிய நீண்ட சாலையும் உடலை இதமாய் தீண்டும் தென்றலும் அத்தனை அமைதியை அவனுக்கு கொடுக்க மெதுவாய் நடந்துக் கொண்டிருந்த மதி சில நிமிடங்கள் சென்றபின்பு தான் சற்று தூரத்தில் உதய்யும் வருவதை கண்டான்.
ட்ராக் சூட்டில் மெல்ல ஓடி வந்தவனை பார்த்து,
“நின்னு அவன் கூட சேர்ந்தே வரலாமா..” என்று முதலில் யோசித்தவன்,
“அவன் எப்படியும் பேச மாட்டான்…எதுக்கு வீணா..”
என்று எண்ணிக் கொண்டு முன்னேறி நடக்க சற்று நேரத்தில் வெகு அருகில் காலடி சத்தம் கேட்டது.
“மா..மா..”
தயக்கமாய் ஒலித்த உதய்யின் குரலில் சடென் ப்ரேக் போட்டதுபோல் நின்றவிட்ட மதி ஆச்சரியமாய் திரும்பி பார்க்க,
“சாரி மாமா..” என்று மீண்டும் அவனே பேசே, ‘இது வையகம் தானே..அதில் நின்று பேசுவது தன் மச்சினன் தானா..’ என்று அதிர்ச்சியாய் பார்த்தான்.
“அப்படி பார்க்காதீங்க மாமா..ரொம்ப கில்ட்டா இருக்கு..”
என்று சொல்லவும் சுதாரித்த மதி,
“ஏன் சாரி..??” என்று கேட்டபடி முன்னால் ஓரடி எடுத்து வைக்க உதய்யும் உடன் நடந்தான்.
“எல்லாத்துக்குமே..நைட் எல்லாம் தூக்கமே இல்ல..ரொம்ப உறுத்தலா இருந்தது..கேட்கணும்னு தோணுச்சு..கேட்டேன்..”
என்று அவன் சொல்ல சின்ன புன்னகை ஒன்றோடு தலையசைப்பை பதிலாய் கொடுத்தான் மதி..மீண்டும் சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது.
ஒருவரையொருவர் அலட்சியப்படுத்திய போதோ சண்டைப்போட்ட போதோ இருவருக்கும் எந்த தயக்கமும் இல்லை.ஆனால் இன்று பெரும் தயக்கம் தான் இருவரிடத்திலும்..!!
சாலையில் இருந்த செடி,கொடி,மடு,மட்டை என்று அனைத்தையும் பார்வையிட்டாலும் மற்றவர் முகத்தை மட்டும் பார்க்கவே இல்லை.
“நான்..நான் அப்பாவோட கடையை பார்க்கலாம்னு இருக்கேன் மாமா..”
என்று யாரிடமும் சொல்லாத தன் முடிவை முதன்முதலில் மதியிடமே சொல்ல அவன் அதிர்ச்சியாய் பட்டென்று திரும்பி அவனை பார்த்தான்.
“என்னது…!”
“ஆமா மாமா..சினிமாவை விட்டுடலாம்னு இருக்கேன்..இனியும் என்னோட பிடிவாததால யாரையும் கஷ்டப்படுத்த விரும்பல..உதயாவுக்கும் கோவைல ஒரு ப்ரான்ச் இருக்கு..அங்கே மாற்றல் வாங்கிட்டு வந்துட்டு அங்கேயே இருந்திடலாம்ன்னு நினைக்கிறேன்..”
“இதை உதயாவிடம் சொல்லிட்டியா..”
“இல்ல..யாருக்கும் தெரியாது..”
“சொன்னால் சந்தோஷப் படுவான்னு நினைக்கிறியா..” என்றவன்,
“முதல்ல நீ சந்தோஷமா இருப்பீயா உதய்..”
என்று கேட்க அவனிடம் பதில் இல்லை.எங்கோ பார்த்தபடி,
“முதலில் கஷ்டமா இருந்தாலும் தொழில்ல கவனமாக ஆரம்பிச்சிட்டால் பழகிடும் மாமா..”
என்று சொல்ல, “வெரி குட்..ஆனால் ரொம்ப முட்டாள்தனமான முடிவு..”
என்று சொல்ல இம்முறை உதய் அவனை அதிர்ந்து பார்த்தான்.
“இவர் தானே முதலில் நம்மகிட்ட சினிமாவை வேண்டாமுன்னாரு..இப்ப இவரே இப்படி சொல்றாரேனு பார்க்கிறியா..”
என்று கேட்கவும் தானே அவன் தலை அசைந்தது.
“அப்ப சொன்னேன் தான்..ஆனால் இந்த சில மாசமா நீ ராவுபகலு பாராம எடுத்த முயற்சியும் உழைப்பையும் நாங்களும் கவனிச்சிட்டு தான் இருந்தோம் உதய்..எத்தனை தூரம் அதில் விருப்பம் இருந்தால் நீ இவ்வளவு எஃபோர்ட் போடுவ..அல்மோஸ்ட் பாதி கிணறு தாண்டியாச்சு..மீதியை கடக்காமல் திரும்பி போக நினைப்பது முட்டாள் தனம் இல்லாம வேறென்ன..”
“ம்ச்..நம்பிக்கை எல்லாம் மடிஞ்சு விரக்தியாகி போச்சு மாமா..இனியும் போராட என் மனசுல தெம்பில்ல..”
என்று அவன் சொல்லவும் மறுத்து தலையசைத்த மதி,
“இல்ல..அது காரணம் இல்ல..ஏன்னு நான் சொல்லவா..” என்றவன்
“உதயா..” என்று அழுத்தமாய் சொல்லவும் உதய்யின் பார்வை அலைபாய்ந்தது.
“கல்யாணத்திற்கு முன்னாடி இந்த ப்ராப்ளம் வந்திருந்தால் எவ்வளவு கஷ்டப்படாலும் நீ உன் பேஷனை விட்டு இருந்திருக்க மாட்ட.. ஆனால் இப்ப அந்த பேஷனைவிட ஒருபடி மேல உனக்கு முக்கியமா படுறது உதயா..!!!
உன்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பொண்ணை எங்க பார்த்துக்காமல் விட்டுட்டோமோன்னு பயம்..! உன் கனவிற்காக அவளை பலி ஆகுறோமோன்னு குற்றவுணர்ச்சி..!! நம்ம நல்ல கணவனா இல்லாம இருக்கோமோன்னு தயக்கம்..!! அதான் இந்த நிலை நீடிக்க விரும்பாமல் இங்கேயே முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிற…”
என்று எளிதாய் அவன் உள்ளத்தை பிட்டு பிட்டு வைக்க உதய்யிக்கு ஆச்சரியம் தான்.
“ஆனால் இந்த விஷயம் மட்டும் உதயாவிடம் சொன்னேன் வையேன்..கண்டிப்பா துடிச்சு போய்டுவா..அவளை உன்னிடம் இழுத்து வந்ததே உன் பேஷன் தான் உதய்…எங்க நம்மை கல்யாணம் பண்ணிகிட்டதால தான் அவன் லட்சியத்தை அடைய முடியலையோன்னு மனசு உடைஞ்சு போயிடுவா உதய்…உன் கனவை தொலைச்சு நீயும் போலியான ஒரு சந்தோஷத்தோட தான் வலம்வருவ..உங்க வாழ்க்கையே இயந்திரமாகிடும் உதய்..அதில் உங்க காதல்..அன்பு எல்லாம் காணாமல் போயிடும்..!!”
என்று மதி நிதானமாய் கூற அவன் வார்த்தைகளில் இருந்த உண்மை உதயை சுட்டது.
“அந்த கொடுமைக்கு இப்ப இந்த தற்காலிகமான பிரச்சனை எவ்வளவோ பரவாயில்லை..ஒன்னு புரிஞ்சிக்க உதய்..எந்த சூழ்நிலையிலும் உதயா உன்னையும் உன் கனவை விட்டு தரவும் மாட்டாள்…அதுக்காக வருந்தவும் மாட்டாள்…திருமண பந்ததின் உன்னதமே அது தான்..அதுல ரெண்டு பேருக்கும் சந்தோஷமும் பொது தான்..கவலைகளும் பொது தான்..கனவுகளும் பொது தான்..”
என்று சொல்ல உதய்யின் முகத்திலும் சன்னமாய் ஒரு புன்னகையின் கோடு..
அவன் தோளில் தட்டி,
“அப்பா கடை எங்கேயும் போயிறாது..முதல்ல உன் லட்சியத்தை நிறைவேத்து..அடுத்தடுத்து எல்லாம் தானே நடக்கும்..”
என்று சொல்லி சிரிக்க,
“தேங்க்ஸ் மாமா..” என்று அவன் கையை இறுக்க பற்றி சொன்னவன் கண்கள் லேசாய் பனித்தது.
“உங்கக்கா உன்னை பத்தி நினைச்சது..சரியா போச்சு..”
“ஏன்..என்ன சொன்னா..”
“ம்ம்ம்..முன்னாடி எல்லாம் நீ திமிறு பிடிச்சவன்..மண்ட கணம் கொண்டவன்னு நினைச்சிட்டு இருந்தேன்..உங்கக்கா தான் நீங்க தான் அவனை புரிஞ்சிக்கலன்னு சொல்லிட்டே இருப்பா..அப்புறம் உன்னை கிட்ட இருந்து கவனிச்சு பார்த்தப்ப தான்..அவ சொன்னது புரிஞ்சிது.. அது திமிறு இல்ல குழந்தையோட பிடிவாதம் மாதிரின்னு..உனக்கு ரொம்ப வெகுளியான மனசுடா..”
என்று உள்ளார்ந்து சொல்ல இருவருக்கும் நெகிழ்ச்சியான தருணம் அது..!!
மீண்டும் வீடு திரும்பும்போது இருவரும் பேசி சிரித்துக் கொண்டு வர அந்த காட்சியை கண்ட உதயாவும் வெண்பாவும் திகைப்பில் வாய் பிளந்தவர்கள் தான் உள்ளே நான்கைந்து கொசு புகுந்திருந்தால் கூட உணர்ந்திருக்க மாட்டார்கள்.
“அண்ணி…”
“உதயா..”
“உங்க கண்ணுக்கும் அதானே தெரிஞ்சுது..நான் காண்பது கனவு இல்லையே..”
“எனக்கும் சந்தேகமா இருக்குடி..அவன் சொன்னா மாதிரியே ஷாக் கொடுத்து நெஞ்ச பிடிச்சு விழ வைச்சிடுவான் போல…என்னை அப்படியே கைதாங்கலா பிடிச்சுக்கோ..”
என்று மயங்கி விழுவதுப்போல் உதயாவின் மீது சாய,
“போதுமே உங்க நாடகம்..எதாவது வேலை இருந்தா போய் பாருங்க..போங்க..”
என்று விறைப்பாய் சொல்லிவிட்டு மதி ஒருபக்கமும் எதுவும் நடவாதது உதய் ஒருபக்கமும் சென்றுவிட,
“இத பாருடா..” என்று வியந்து நின்றனர்.
நிலா கேட்டதற்காக அன்று உதய் அனைவருக்கும் புதிதாய் வெளிவந்த ஒரு படத்திற்கு புக் செய்திருக்க குடும்பத்தோடு சென்று வந்தபின் மாலையே உதய்யும் உதயாவும் சென்னை கிளம்பி விட்டனர்.
இரயிலில் தங்கள் இருக்கையில் வந்தமர்ந்ததும் கணவனின் தோள் வளைவில் சாய்ந்துக் கொண்ட உதயா,
“ஐம் வெரி வெரி ஹேப்பி உதய்…இன்னைக்கு நாள் இதைவிட சூப்பரா அமையாது..”
என்று முகமலர சொல்ல அதே சமயம் அவள் மொபைல் சிணுங்கியது.
கணவனிடம் இருந்து நகர்ந்து அதனை எடுத்து பார்க்க புது நம்பாராக இருக்கவும் யோசனையோடு எடுத்து காதில் வைத்தவள்,
“ஹலோ..தவரூபன் ஹியர்..”
என்று கம்பீரமான அவர் குரல் கேட்கவும் கண்கள் விரிய,
“ஹலோ சர்..”
என்றாள் பரபரப்பாய்..