அத்தியாயம் – 29
நந்தினிக்கு அவளது உலகமே இருண்டது போலிருந்தது. தான் பிறக்கும் போதே, தன்னுடைய பெற்றோரை இழந்து, பின்னர் தன்னை சொந்த மகளாகப் பாவித்து அன்பூட்டி வளர்த்த பெற்றோரைப் பிரிந்தவள், பொசய்டனின் உண்மை சொரூபத்தைக் கண்டு அதிர்ச்சியில் மூழ்கினாள். தான் அவரை தந்தைக்குச் சமமாகக் கருதி இருக்க, பொசய்டனோ அவளை அவருடைய விளையாட்டில் ஒரு காயாகத் தான் பயன்படுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் மேலாக தன்னுடைய ஜென்ம விரோதி என்று கருதிய ப்ரொமேத்தியஸ், உண்மையில் தன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்திருக்கிறார். ஆனால், இறுதியில் அவர் கூட தன்னை விட்டுப் பிரிந்து விட்டார் என்று நந்தினியின் மனதில் ஒரு பெரும் குழப்பம் உருவாகி கொண்டிருந்தது.
அதற்குள் லூனா, சிற்றரசர்களிடம் நந்தினியைப் பற்றியும், அவளுடைய திறமைகளைப் பற்றியும், அவர்கள் பிரம்ம கிரந்தத்தில் பார்த்த அனைத்து உண்மைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் கூறியதைக் கேட்டு, அவர்கள் அனைவர் மனதிலும் கனமான ஒரு பாறையை வைத்தது போல பாரமேறியது. என்னதான் இதுவரை ப்ரொமேத்தியஸை அவர்கள் தங்களது வார்த்தையால் துன்புறுத்தி, அவரிடம் இருந்து விலகி இருந்தாலும், கயா கிரகத்திற்காக எவ்வளவு விஷயங்களைத் தியாகம் செய்திருக்கிறான் என்று இப்போது புரிய, அதை எண்ணி வருந்தினர்.
அதிலும், வல்கன் லூனா சொன்ன அனைத்தையும் கேட்டு இடிந்து போய் அமர்ந்தார். அவர் மனதில் இருந்த ஒவ்வொரு நிகழ்வுகளும், அவரை கைதியாக்கிக் காட்டின. அவன் பிறந்த போது, தன்னுடைய வளர்ப்பு தாயார் இறந்தது முதல் நடந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் அவன் மீதல்லவா குற்றம் சுமத்தினேன். ஆனால், அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்து இருக்கிறான் என்று எண்ணி எண்ணி வருந்தினார்.
அனைவரும் தத்தமது நினைவுகளிலே சுழல, அக்கிலஸ் நந்தினியிடம் வந்து, “கயா கிரக பேரரசி க்ரிசான்டாவிற்கு எனது வணக்கங்கள் ! என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஒன்று மட்டும் உங்களுக்கு உறுதி அளிக்கின்றேன். அந்த டைட்டனை வெல்வதற்கு, உங்களுக்கு உறுதுணையாக இருந்து எல்லோருடைய தியாகங்களுக்கும் பலன் பெற்றுத் தருவேன்” என்றான்.
அவன் இவ்வாறு கூறியதும், ஆதி முன் வந்து நின்றான். ஆதியும் அக்கிலஸூம் இடையே கண்களிலே யுத்தத்தைத் தொடங்க, அங்கிருந்த சிற்றரசர்கள் அனைவரும் நந்தினியை அப்போது தான் பார்க்க, அவர்கள் அவளை நோக்கி வேகமாக வந்தனர்.
அவளை, வல்கன் கண்கள் பனிக்கப் பார்த்து, தன்னுடைய தங்கையின் மகள் என்று பூரிப்படைந்தார். பின்னர், வல்கன் தங்கள் முன்னிருந்த கடமையைக் கண்டு, “க்ரிசான்டா ! இது வருத்தப்படுவதற்கான நேரமில்லை. நாம் ஒவ்வொருவரும் இந்த போரில் நமக்கு வேண்டியவர்களை இழந்து விட்டோம். ஆனால், இனியும் இது தொடரக் கூடாது. இந்த முறை நாம் டைட்டனை அழித்தே தீர வேண்டும்” என்றார். அவர் மனதில் அவரது நெருங்கிய தோழன் சீரஸின் முகமும், அவரது தங்கை மினர்வாவின் முகமும் வந்து சென்றது.
அவர் கூறியதைக் கேட்ட நந்தினி, எழுந்து நின்று, “நான் உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கும் உரியவராக நடந்து கொள்வேனா என்று தெரியாது. ஆனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் இந்தப் போரில் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று கம்பீரமாக கயா கிரக மொழியில் கூறினாள். அவளுடைய இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு அனைவருக்கும் மயிர் கூச்சம் ஏற்பட்டது. அவளைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஆதிக்கும், ஆரியனுக்கும் கூட அவளிடம் ஏதோ வித்தியாசம் இருப்பதாகத் தோன்றியது.
ப்ரொமேத்தியஸை நினைத்துக் கொண்ட நந்தினி, அவர் இருந்த இடத்திற்குச் செல்ல, அங்கே இன்னமும் அந்த இரு டிராகன்கள் ப்ரொமேத்தியஸின் அருகே படுத்துக் கிடந்தன. நந்தினி அவரை நோக்கி நடக்க, மற்ற அனைவரும் அவளைப் பின் தொடர்ந்தனர். வல்கன் முன்வந்து, ப்ரொமேத்தியஸின் உடலைத் தூக்கிக் கொண்டு சென்றார். ப்ரொமேத்தியஸ் இருந்த அறையிலேயே அவரது உடல் வைக்கப்பட, அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மீண்டும் அவர்கள் கோட்டையின் மையப் பகுதிக்கு வந்தனர். “இன்னும் கன்வர்ஜென்ஸ் நடப்பதற்குச் சரியாக ஒரே நாள் தான் இருக்கிறது” என்றார் வல்கன். ஆதியும், ஆரியனும் இருப்பதைப் பொருட்டு அவர்கள் அனைவரும் பொதுவான மொழியிலேயே பேசத் தொடங்கினர்.
ஆதி, “இது எப்படி சாத்தியம் ? இருபத்தி நான்கு வருடங்கள் ஆகணும்னா, அதுக்கு இன்னும் பல வாரங்கள் இருக்கே ?” என்று கேட்டான்.
க்ரோனன், “இருந்தது. ஆனால், இப்போது இல்லை. கன்வர்ஜென்ஸ் நடக்கும்போது அனைத்து கேலக்ஸிகளும் ஒரு நேர்கோட்டில் இணையும். ஆனால், டைட்டன் க்ரிசான்டாவை தேட வரும்போது, தனது சக்திகளைப் பயன்படுத்தி, நேர்க்கோட்டில் அமையும் Alignment-ஐ சீக்கிரமே வருமாறு செய்து விட்டான். அந்த தைரியத்தில் தான் அவன் பொசய்டனின் போர்வையிலிருந்து தன்னை வெளிப்படுத்தி கொண்டான்” என்றார்.
அவர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குப் பழக்கப்பட்டிருந்ததால், இது அவர்களைப் பாதிக்கவில்லை. அக்கிலஸ், “எப்படி இருந்தாலும் சோல் பாக்ஸை திறப்பதற்குச் சாவி தேவைப்படாதா ?” என்று கேட்க,
ஹெஸ்பரஸ், “அது அவனுக்கு முன்னரே கிடைத்து இருக்கும்” என்றார். அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த நந்தினி, “அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. இதை எப்படி நீங்கள் உறுதியாகக் கூறுகிறீர்கள் ?” என்று கேட்டாள்.
“பேரரசி க்ரிசான்டா ! நீங்கள் கூறியதை வைத்துத் தான் நான் இதைக் கூறுகிறேன்” என்று கூற, நந்தினி, “நான் கூறியதா ?” என்று குழப்பமான முகத்தைப் பதிலாக கொடுக்க, “முதலில் சோல் பாக்ஸுடைய சாவி என்றால், அது ஒரு பொருள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அது ஒரு நினைவு. சோல் பாக்ஸுக்கு எப்போதுமே ஒரு நினைவு தான் திறவுகோலாக இருக்க முடியும். கடைசியாக சீரஸிடம் தான் அந்த நினைவு இருந்தது. ஆனால், அவர் இறந்த பிறகு அவருடைய ஆத்மாவில் அது கலந்து எங்கே இருக்கும் என்று கண்டுபிடிப்பது கடினம் என்று நினைத்தோம். ஆனால், உண்மையில் அவர் அந்த நினைவை உங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும், க்ரிசான்டா” என்றார் ஹெஸ்பரஸ்.
“என்ன தான் தான், அந்த சோல் பாக்ஸின் சாவியை அதாவது நினைவுகளை வைத்திருந்தோமா ?” என்று நந்தினி அதிர்ச்சி அடைய, “கண்டிப்பாக டைட்டன் அதை உங்கள் நினைவுகளில் இருந்து எடுத்திருப்பான். அவனுக்கு இருக்கும் ஒரே எதிர்ப்பு ஈரின் கல் தான்” என்றார் ஹெஸ்பரஸ்.
நந்தினிக்கு, அப்போதுதான் முதல் நாள் விண்வெளி வாகனத்தில் மூமூ அலறியது நினைவுக்கு வந்தது. அப்படியென்றால், அன்றே அந்த நினைவு மூமூவிடம் இருந்திருக்கா என்று பொசய்டன் சோதித்துப் பார்த்திருக்கிறார். தனக்கு செலினா எந்த நினைவுகளையும் தரக்கூடாது என்பதற்காக, தன் எண்ணங்களுக்குச் சிறை ஒன்றை உருவாக்கி இருக்கிறார் என்பது புரிந்தது.
லூனா, “சரி இப்போ பிரச்சனைகள் எல்லாத்தையும் பார்த்துட்டோம். இப்ப அதுக்கு என்ன தீர்வு என்று யோசிப்போம்” என்றாள்.
நந்தினி, “வெலாரிஸ் கோட்டையைச் சுற்றி மக்கள் யாரும் இருக்கமாட்டார்களா ? அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாமா ?” என்று கேட்டாள்.
அக்கிலஸ், “அந்த விஷயத்தை நான் முன்னரே செய்து விட்டேன், பேரரசி ! அதனால் அதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று புன்னகையுடன் கூறினான்.
நந்தினி, “முதலில் என்னை பேரரசி என்று கூப்பிடுவதை நிறுத்துங்கள். நீங்கள் அனைவரும் என்னை விட வயதில் மூத்தவர்கள். அதனால், நீங்கள் என்னை க்ரிசான்டா என்றுதான் கூப்பிட வேண்டும்” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்டவுடன் அனைவரின் முகத்திலும் புன்னகை கோடுகள் தோன்றின. வல்கன், “நமக்கு இப்போது அதிக நேரம் இல்லை. நாம் இங்கு வீணடிக்கும் ஒவ்வொரு நொடியிலும் டைட்டன் தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டிருப்பான்” என்றார்.
அதற்கு பிறகு அனைவரும் தங்கள் யோசனையில் மூழ்க,
நந்தினி, “இப்ப நம்ம கிட்ட இருக்கிற இரண்டு ஆயுதங்கள்னா, அது ஈரின் கல்லும், mind controlling device- ஸும் தான். டைட்டனுக்கு ஈரின் கல்லோட சக்தியைப் பத்தி கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அதனால அதை உபயோகப்படுத்தி நாம டைட்டன அழிக்க முடியாது. நமக்கு இருக்கிற ஒரே வழி அந்த சோல் பாக்ஸ திறக்காமல் இருக்கிறதுதான்” என்றாள்.
மற்ற அனைவரும் எந்தப் பதிலும் கூறாமல் இருப்பதைக் கண்டு நந்தினி, அவர்களைப் பார்க்க, மெட்லடன், “இந்த இடத்தில் நாம் இன்னொரு விஷயத்தையும் யோசிக்க வேண்டும். இந்த கிரக மக்களுக்குச் சக்தி தருவது உணவோ, நீரோ இல்லை. சோல் பாக்ஸில் இருந்து வரும் சக்திதான், அனைவருக்கும் பலத்தைத் தருவது. சென்ற முறையே அவர்களுக்கு அந்த சக்திகள் கிடைக்கவில்லை .இந்த முறையும் கிடைக்காவிட்டால், அது அவர்களது உயிருக்கே ஆபத்து” என்றார்.
ஆதி, “அப்படியென்றால், சோல் பாக்ஸை நாம் திறக்க வேண்டும். ஆனால், அதை டைட்டன் பயன்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்” என்றான்.
சிற்றரசர்கள், “ஆம்” என்று ஒருமித்துக் கூற,
ஆரியன், ”இதில் என்ன பிரச்சனை இருக்கு ? டைட்டன் ஒருவனை நம் இத்தனை பேரால் சமாளிக்க முடியாதா ?” என்று கேட்க,
லூனா, “கூறுவதற்கு சுலபம்தான். ஆனால், இந்நேரம் டைட்டன் தன் படை வீரர்களை உருவாக்கி இருப்பான். அதே சமயம் அவனை எதிர்த்துத் தாக்குவதும் சாதாரண காரியம் இல்லை” என்றாள்.
அக்கிலஸ், “நம்மிடம் மற்றொரு ஆயுதமும் இருக்கிறது. அது, அந்த இரு டிராகன்கள் தான். அவை எனக்கும் லூனாவுக்கும் கட்டுப்படும். அவற்றையும் இந்த போரில் நாம் பயன்படுத்தலாம்” என்றான்.
நந்தினி, “சரி, அடுத்து நம்ம வியூகங்களை வகுக்க வேண்டும். இப்போது நம்முடைய வீரர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் ?” என்று முடிந்த அளவுக்கு வேற்று மொழிக் கலப்பில்லாமல் பேசினாள்.
எரேகன், “அவர்கள் அனைவரும் இப்போது பெருங்கடல் கோட்டையின் அடித்தளத்தில் தான் இருக்கிறார்கள்” என்றார்.
அக்கிலஸ், “அவர்கள் அனைவரையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.
நந்தினி, “சரி இப்போது நமது திட்டம் இதுதான். நாளை நமது வீரர்கள் தான் முதல் பாதுகாப்பு லைன். டைட்டனுடைய வீரர்கள் யுத்த களத்திற்கு வந்தவுடன், நாம் அடுத்து mind controlling device- ஸை பயன்படுத்த வேண்டும். அந்த இடத்தை பார்த்து கொண்டிருக்கும் டைட்டனுக்கு, இது கோபத்தை வரவழைக்கும். டைட்டன் எப்போது கோட்டையை விட்டு வெளியே வருகிறாரோ, அப்போது தான் நாம் நமது அடுத்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அக்கிலஸ், லூனா நீங்கள் இருவரும் உங்களுடைய டிராகன்களில் ஆதியையும், ஆரியனையும் ஏற்றிக்கொண்டு வீரர்களுக்கு உதவுங்கள். எரேகன், ஆர்கஸ், நிகேடர், நீங்கள் மூவரும் உங்கள் சக்திகளைப் பயன்படுத்தி சோல் பாக்ஸ் இருக்கும் இடத்திற்கு யாருக்கும் தெரியாமல் சென்று, அங்குப் பாதுகாப்பு கவசங்களை உருவாக்குங்கள். ஹெஸ்பரஸ், நீங்கள் நிகேடருடைய சக்திகளை உள் வாங்கிக் கொள்ளுங்கள். வல்கன், க்ரோனன், மெட்லடன் நீங்கள் மூவரும் என்னோடு வாருங்கள். நாளை நாம் அந்த டைட்டனை எப்படியாவது வீழ்த்த வேண்டும்” என்றாள்.
அவர்கள் அனைவரும் அவளுடைய ஆளுமைத் தன்மையைக் கண்டு ஒரு நொடி வியந்து நின்றனர். இதுவரை வெறும் ராஜ்ஜியங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு, அவர்கள் அனைவரும் ஒரே ஒரு போரில் மட்டும் தான் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போதும் அவர்கள் கோபத்தில் எந்த திட்டமும் தீட்டாமல், நேரடியாக ப்ரொமேத்தியஸூடன் மோதி, அவனுடைய கைதிகளாக மாறினர்.
ஆனால், இப்போது நந்தினியைப் பார்க்கும் போது, அவர்களுக்கு செலினாவையே பார்ப்பது போல இருந்தது. நந்தினிக்கும், தான் எப்படி இவ்வளவு தூரம் யோசித்தோம் என்று புரியவில்லை. அதற்குப் பிறகு, அந்தத் திட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை விவாதித்து அனைவரும் ஒரு மனதாக அந்த முடிவிற்கு ஒத்துக் கொண்டனர்.
இறுதியாக, வல்கன், “அனைவரும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாளை நாம் செய்யப் போகிற செயலில் தான் இந்த அண்டச் சராசரத்தினுடைய எதிர்காலம் இருக்கிறது” என்றார்.
அங்கிருந்த அனைவரும் அந்தக் கோட்டையில் இடிபாடில்லாத இடமாகப் பார்த்து தங்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் பிரிந்து தங்களது அறைக்குச் சென்ற போது, ஆரியன் லூனாவிடம் வந்து, “லூனா ! நாம கொஞ்ச நேரம் தனியா பேசலாமா ?” என்று கேட்க, எப்போதும் எரிந்து விழும் லூனா கூட இப்பொழுது அமைதியாக, “சரி” என்று ஒத்துக் கொண்டாள்.
அவர்கள் இருவரும் அந்தக் கோட்டையை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினர். சிறிது தூரம் இருவரும் தங்களுக்குள் எதையும் பேசிக்கொள்ளாமல் நடக்க, ஆரியனே அந்த மௌனத்தை உடைத்தான்.
“லூனா, நான் இப்ப எதை சொல்றதுக்காக இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும்” என்று கூறிய ஆரியனை இடைமறித்து லூனா ஏதோ கூற வர, “நீ என்னதான் என்னோட எண்ணங்களை மாத்த முயற்சி பண்ணாலும், இது தான் என்னோட முடிவு லூனா” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான் ஆரியன்.
“நானும் தான் உன்னைக் காதலிக்கிறேன் ஆரியா. ஆனா, இத தொடர்வது நல்லது இல்லை” என்றாள் லூனா.
ஆரியன், அவள் கூறிய முதல் வரியைக் கேட்டு மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்றவன், அடுத்த வரியைக் கேட்டவுடன் மனம் சோர்ந்து போனான்.
லூனா தொடர்ந்து, “முதல்ல உன்னைய நான் பார்த்தபோதெல்லாம் நந்தினியோட சின்ன வயசுல நீ அவளுக்குச் செய்த உதவிகளால் உன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுச்சு. அவ்வளவுதான். ஆனா, அதுக்கு அப்புறம் நீ உன் ஃபிரெண்டுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்குறது, என்மேல ஸ்பெஷல் அஃபெக்ஷன் காட்டுறது, இதெல்லாம் உன்னைய புடிக்க வச்சிடுச்சு. இது தப்புன்னு தெரிஞ்சும், நா அதுல மாட்டிகிட்டேன். அதுக்குதான் உன்கிட்ட பேசுறப்பல்லாம், திட்டிகிட்டே இருந்தேன். அது உன்னைத் தள்ளி வைக்கிறதுக்கு பண்ணனா இல்ல என்னை நான் சுய நினைவோடு வச்சுக்கிறதுக்கு செஞ்சனானு தெரியல” என்றாள். அவள் இறுதி வரியைக் கூறும் போது அவளது குரல் பிசிறியது. அவள் அழுகிறாளோ என்று பதறிய ஆரியன், அவள் முன் நின்று, அவளது கண்களைப் பார்க்க, அதில் கண்ணீர் தேங்கி இருந்தது.
ஆரியன், “லூனா, எதுக்கு உன்னைய நீயே இப்படி கஷ்டப் படுத்திக்குற ? இப்ப ஆதியும் நந்தினியும் காதலிக்கிலயா ?” என்று கேட்க,
லூனா, “இப்போதைக்கு என்னால எதையும் சொல்ல முடியாது, ஆரியா” என்று கூற,
ஆரியன், “நாளைக்கு நடக்கப்போற யுத்தத்துல, நான் உயிரோடு இருப்பேனோ, இருக்க மாட்டேனோ தெரியல. அட்லீஸ்ட் அந்தக் காரணத்தையாவது என்கிட்ட சொல்லக் கூடாதா ?” என்று கேட்க,
லூனா இறுதியில், “இந்த முறை நாம ஜெயிச்சு கன்வர்ஜென்ஸ் நடந்துச்சுன்னா, அப்போ உங்க ரெண்டு பேரு உடலிலும் இருக்குற கயா கிரக சக்திகள எடுத்துடுவாங்க. அப்புறம் நீங்க ரெண்டு பேரும் இந்த கிரகத்தில் இருக்கமுடியாது. பூமிக்கு அனுப்பி விடுவார்கள்” என்றாள்.
அவள் கூறிய விஷயத்தை முழுமையாக கிரகிக்கவே, ஆரியனுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. பிறகுத் தன் எண்ணங்களை வார்த்தையாகக் கொடுக்க முடியாமல், “வேற வழியே இல்லையா ?” என்று எப்படியோ கேட்டு விட்டான் ஆரியன்.
லூனா, “நந்தினி எப்படியும் இனிமே இந்த கிரகத்தில க்ரிசான்டாவா தான் இருக்க முடியும். ஆனா ,உங்க ரெண்டு பேருக்குள்ளயும் அந்த சக்திகள் இருப்பது அபாயகரமானது. அதனால் நிச்சயமா உங்க ரெண்டு பேரையும் பூமி கிரகத்துக்கு அனுப்பி விடுவோம்” என்றாள்.
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்த ஆரியனுக்குள், அப்போது தான் அவனது குடும்பத்தினர் நினைவுக்கு வந்தனர். ஒரு பக்கம் லூனா, மற்றொரு பக்கம் அவனது பெற்றோர் என அவன் குழம்ப, லூனா ஆதியைப் பற்றி கூறியது நினைவு வர,
ஆரியன், “லூனா, அப்போ நந்தினியும் ஆதியை பிரியணுமா ?” என்று கேட்க,
“ஆமாம் ஆரியா, இத நந்தினி கிட்ட இப்போதைக்குச் சொல்ல வேணாம். அவளுக்கு இப்ப இருக்கிற ஒரே பிடிப்பே ஆதித்யன் தான்” என்றாள்.
பிறகு அவர்களிடையே மறுபடியும் மௌனம் ஆட்சி செய்யத் தொடங்கியது.
அங்கே நந்தினி, தன் அறையில் பிரம்ம கிரந்தத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் அந்த Gauntlet-டும், மற்றொரு கருவியும் இருந்தன.
அந்த நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்தான் ஆதி. அவன் வந்தது கூட தெரியாமல், அவள் அந்த பிரம்ம கிரந்தத்தில் மூழ்கி இருந்தாள். அவளின் நிலை புரிந்த ஆதி, அவளைத் தொட்டு, அவளது மௌன நிலையைக் கலைக்க, நந்தினி அப்போது தான் அவனைக் கவனித்தாள்.
அவள் குரலில் சுரத்தே இல்லாமல், “வா, ஆதி !” என்றாள்.
அவன் எதுவும் சொல்லாமல், அவளது இரு கைகளையும் பிடித்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அவள் மனம் விட்டுக் கதறினாள் .அப்போதும், ஆதி அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டானே தவிர, வேறு எந்த ஆறுதல் வார்த்தைகளையும் கூறவில்லை. நாம் ஏதாவது வேதனையில் உழலும் போது, யாருடைய ஆறுதலும் தேவைப்படாது. உனக்காக நான் இருக்கிறேன் என்று, ஒருவர் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் கூட போதும். நம் வேதனை தீர்ந்து விடும் என்று எப்பயோ படித்தது நந்தினிக்கு நினைவுக்கு வந்தது. அது உண்மையென்று அப்போது உணர்ந்தாள்.
பிறகு ஆதி, “பழசை நினைச்சு வருத்தப்படாத, அப்படின்ற மூன்று வார்த்தையை நான் சொல்லி உன்னைய இன்னும் கஷ்டப்படுத்த விரும்பல, சனா. ஆனா, நாளைக்கு நடக்க போற யுத்தத்தில் நீ ஏதாச்சும் இந்த வருத்ததுல ஒரு சின்ன தப்பு செஞ்சா கூட அத பத்தி யோசிக்கிறதுக்கு யாருக்குமே வாய்ப்பு இருக்காது. இத மட்டும் மனசுல வச்சுக்க” என்று கூற, “சரி” என்று தலையசைத்தாள் நந்தினி.
பின்னர் அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேச, ஆதி தன் அறைக்குச் சென்றான். நந்தினியின் கவனம் அடுத்து அந்த gauntlet-க்கு சென்றது. அதைப் பார்த்த நந்தினி ப்ரொமேத்தியஸை எண்ணி மீண்டும் வருந்தினாள். அதனிடையே அவருடைய திறமையும் அவளை வியக்கச் செய்தது. பின்னே ஈரின் கல்லை பயன்படுத்தி, எண்ணங்களைச் சக்தியாக மாற்றலாம் என்ற எண்ணம் யாருக்கு வந்திருக்கும். க்ரோனனின் சக்தி மூலம் ஒருவருடைய நினைவைத் தூண்டி, ஹெஸ்பரஸின் சக்தியைக் கொண்டு, அந்த நினைவுகளை சக்தியாக மாற்றி பலம், பறத்தல் போன்ற விதத்தில் செயல்படுத்தலாம் என்ற அவருடைய எண்ணத்தை வியந்தாள் நந்தினி.
அப்போது தான் அவளுக்கு ப்ரொமேத்தியஸ் இறக்கும் தறுவாயில், “பிரம்ம கிரந்தம்” என்று கூறிய பொழுது, அவருடைய கண்ணிமைகள் ஏதோ ஒரு வித்தியாசமான முறையில் சிமிட்டியது நினைவுக்கு வந்தது.
ப்ரொமேத்தியஸ் ஏன் தன் உயிரை இழக்கும் தருவாயில், அவ்வாறு செய்ய வேண்டும் என்று தோன்ற, அவள் மனதில் மின்னலெனப் பாய்ந்தது அந்த எண்ணம். “Morse code” அவர் தன்னிடம் மட்டும், மறைமுகமாக ஏதோ கூற முயன்றிருக்கிறார் என்பது புரிய அதற்காகத் தான் parchment- இல் Morse code மூலமாக அனைத்தையும் கூறியிருக்கிறார் என்று அறிந்து கொண்டாள் நந்தினி.
உடனே அவர் கண் சிமிட்டியதை நினைவில் கொண்டு வந்து, அதைப் புள்ளிகளாகவும் கோடுகளாகவும் எழுதினாள். ஏற்கனவே பலமுறை பார்த்திருந்ததால், அவளுக்கு அந்த குறியீடுகள் பழகியிருந்தன. அவர் கூறிய செய்தியை டீகோட் செய்தவளுக்குப் பேரதிர்ச்சி ஏற்பட்டது.
“TITAN LIVES” என்றது அந்தக் குறியீடு. “ப்ரொமேத்தியஸ் எதற்கு டைட்டன் வாழவேண்டும் என்று கூறுகிறார் ?” என்று யோசித்து யோசித்துக் குழம்பிப் போனாள் நந்தினி.
பின்னர், அவள் ஏதோ யோசனையோடே உறங்கி விட்டாள். அடுத்த நாள் வந்துவிட்டது என்று அவரவரது biological clock வலியுறுத்த, அனைவரும் வேகமாகத் தயாராகி வந்தனர். அனைவரும் அந்தக் கோட்டைக்கு வெளியே வர, அங்கே அவர்களுக்காக லூனாவும் அக்கிலஸும் காத்திருந்தனர்.
நந்தினி ஆரியனிடம், அந்த Mind controlling கருவியைக் கொடுத்தாள். “ஆரி, அக்கிலஸ் சொல்லும் போது சரியா இத ஆன் பண்ணிடு” என்றாள்.
அதற்குப் பின், வல்கன் நந்தினியிடம் வந்து, “க்ரிசான்டா ! அந்த gauntlet-ஐ கொடுத்தாயென்றால், அதில் இருக்கும் ஈரின் கல்லை உன் உடலுடன் சேர்த்து விடுவோம்” என்று கூற, நந்தினி அவரிடம் அந்த gauntlet-ஐ தந்தாள்.
அந்த ஏழு சிற்றரசர்களும், அவளைச் சுற்றி நின்று கொண்டனர். அவர்கள் அனைவரும் தங்கள் சக்தியைக் கொண்டு அந்த gauntlet-ஐ தாக்க, அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறியது. அதைக் கண்டு ஆதியும், ஆரியனும் அதிர்ச்சி அடைய, அங்கு அந்த ஈரின் கல் மட்டும் மிஞ்சி இருந்தது. அது பல நிறங்களில் ஜொலிக்க, அதை எடுத்த வல்கன் நந்தினியின் நெற்றியில் வைத்து விட்டு தள்ளி நின்றார்.
சிறிது சிறிதாக நந்தினியின் உடல் அனைத்து நிறங்களுக்கும் மாறத் தொடங்கியது. அதோடு சேர்ந்து அவளது விழிகள் தங்க நிறத்திற்கு மாற, அவள் மெல்ல பறக்க தொடங்கினாள். அவளுடைய உடலைச் சுற்றி கவசங்கள் தோன்ற ஆரம்பித்தன. பின்னர், அவள் மெல்ல தரையில் இறங்கினாள்.
அவளை அந்த கவசத்தில் பார்த்த போது, அவர்கள் அனைவருக்கும் அகஸ்டஸின் ஓவியம் ஞாபகம் வர, அவள் முன் மண்டியிட்டனர். ஆரியனும், ஆதியும் அவளை வியந்து பார்க்க, லூனா ஆரியனின் காலை இடித்தாள். சுற்றிலும் இருந்தவர்களின் நிலைமையைப் பார்த்தவன், ஆதியைக் கீழே இழுத்தான்.
நந்தினி, “அனைவரும் எழுங்கள்” என்று புன்னகையுடன் கூறினாள். அவள் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றி அவளை ஒரு முழு கயா கிரக வாசியாகக் காட்டியது.
நிகேடரை பார்த்துத் தலையசைக்க, அவர் ஒரு சைகை செய்தார். உடனே அந்த பெருங்கடலில் நில நடுக்கம் ஏற்பட்டது போல் அதிர தொடங்க, அந்த பெருங்கடலில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் பறக்கத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து இரு டிராகன்களும் வந்து அமர்ந்தன.
லூனா ஆரியனிடமும், ஆதித்யனிடமும் வந்து இருவரிடமும் நாணயம் போல இருந்த ஒரு பொருளைக் கொடுத்தாள்.
ஆரியனிடம் கொடுத்து விட்டு, “இது உங்களுக்காக நான் உருவாக்கிய கவசம்” என்று அவனின் முகத்தைப் பார்க்காமல் கூறி விட்டு சென்றாள். அதை அவர்கள் கையை வைத்து அழுத்த, அவர்களது உடல்களைச் சுற்றி கவசங்கள் தோன்றின. அந்தக் கவசம் ஆரியனின் உடலில் காயம் ஏற்படாமல் காப்பாற்றப் போகும் அதே சமயம், அவனது கண்ணீரையும் மறைத்தது.
லூனாவும் அக்கிலஸும் தங்கள் டிராகன்களில் ஏறி அமர, ஆரியன் லூனாவிற்கு பின்னால் அமர்ந்தான். ஆதிக்கு வேறு வாய்ப்பு இல்லாததால் அக்கிலஸுடன் அமர்ந்தான்.
சிற்றரசர்கள் அனைவரும் பறக்கத் தொடங்க, நந்தினியும் தன் சக்தியைப் பயன்படுத்தி அதிவேகமாகச் செல்லத் தொடங்கினாள். அவளுக்கு இரு புறங்களிலும் டிராகன்கள் பறக்க, மற்ற ஏழு சிற்றரசர்களும் ஒரு அரைவட்ட அமைப்பில் அவளைப் பின் தொடர்ந்தனர். மறுபடியும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த அதே சூழ்நிலை உருவாக, சரித்திரம் திரும்புமா ? அல்லது நந்தினி புதிய சரித்திரத்தை உருவாக்குவாளா ?