உமையாள் வசீகரனின் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில், அன்று அலுவலகத்தில் நண்பர்கள் மூவருமே கொஞ்சம் பரபரப்பாய் தான் இருந்தனர்.
இன்று தான் அந்த வெளிநாட்டு நிறுவனம், ஒப்பந்ததிற்கான பதிலை தெரிவிப்பதற்கான நாள். கொஞ்சம் கடுமையான போட்டி தான், இருந்தாலும் நண்பர்கள், இந்த ஒப்பந்தம் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனே இருந்தனர்.
என்ன தான் நம்பிக்கை இருந்தாலும், அறிவிப்பிற்கான நேரம் நெருங்கையில், முடிவு நல்ல விதமாக வர வேண்டுமே என்ற பதட்டம் இருந்தாலும், அதை கவனமாக வெளிக்காட்டி கொள்ளாமல் வேலையிலும் கவனமாக இருப்பது போல காட்டி கொண்டனர்.
ஒரு வழியாக அந்த வெளிநாட்டு நிறுவனம் இவர்களின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமில்லாமல், அடுத்த வாரத்தில், அவர்களின் சார்பில் நால்வர், தொழிற்சாலையை பார்வையிட வரும் தகவல் தாங்கி மின்னஞ்சல் வர, நண்பர்களுக்கோ ஏக மகிழ்ச்சி.
[the_ad id=”6605″]
வசீகரனும், பாலாவும் மகிழ்ச்சியாக இருக்க, கிருஷ்ணாவோ ஏதோ சிந்தித்த வண்ணம் இருந்தான். அவனின் முகத்தை பார்த்த வசீகரன்,
“என்ன கிருஷ்ணா யோசிக்கிற” என கேட்க, கிருஷ்ணாவோ,
“விசிட்கு ஒன் வீக் தான் டைம் இருக்கு” என அறிவுறுத்த, பாலாவோ அவன் சொல்ல வருவதை புரிந்துகொண்டு,
“நாம ரெடி ஆக இதுவே அதிகம் தான் கிருஷ்ணா, நம்ப பேக்டரில எப்பவுமே எல்லாமே பக்காவா தான் இருக்கும், கிளீன்ங்ல இருந்து எம்பிளாய் வரை, வேணும்னா அவங்க வருவதற்கு முதல் நாள், ஒரு தடவை ஸ்பெஷல் அஹ கிளீன் பண்ண சொல்லலாம், நத்திங் டூ வரி கிருஷ்ணா” என்றான்.
பாலா சொல்லுவதை அமைதியாக செவிமடுத்து, தலை அசைத்து அவன் சொல்லியதை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணா,
“ஹ்ம்ம், அவங்களுக்கு ரூம் புக் பண்ணனும் பாலா” என தாங்கள் செய்ய வேண்டிய வேறு ஒரு வேலையையும் நினைவூட்டினான்.
“எப்படியும் பாரின்ல இருந்து வருபவர்களுக்கு, ஸ்டே பண்ண பைவ் ஸ்டார் ஹோட்டல்ல தான் ரூம் புக் பண்ணனும், அங்க எல்லாமே மோஸ்டலி ப்ரீ புக்கிங் தான், இவ்ளோ ஷார்ட் பீரியட்ல ரூம் கிடைக்குமானு தெரிலயலையே” என யோசித்த பாலா, கிருஷ்ணா சுட்டிக்காட்டிய விஷயத்தை மிக சரியாக உள்வாங்கி இருந்தான்.
“அவங்களை ரிஸிவ் பண்றது, அவங்க ஸ்டேயிங் எல்லாம் என்னோட பொறுப்பு, நான் பார்த்து கொள்கிறேன்” என பாலாவே இருவருக்கும் பொதுவாக அறிவித்தான்.
அதன்பிறகு நண்பர்கள் மூவரும், அவர்களின் வருகை தொடர்பாக, என்னென்ன செய்ய வேண்டும் என அதை பற்றிய கலந்தாலோசிக்க ஆரம்பிக்க, அந்த பேச்சுவார்த்தை மதியம் உமையாள் உணவுக்காக வரும் வரையிலும் தொடர்ந்தது.
உமையாள் உள்ளே வந்ததும், முதலில் பார்த்தது, வசீகரனை தான். அவனின் முகமலர்ச்சியில், காரணம் தெரியாத போதும், தானும் சேர்ந்து மலர்ந்தவள், விரிந்த புன்னகையுடனே வசீகரனை பார்த்து,
“என்ன கரன் என்ன விஷயம், முகம் அப்படியே ஜொலிக்குது” என கிண்டல் போலவே கேட்க, அவனோ அதே புன்னகையுடன், இடவலமாக தலையை ஆட்டியவன்,
“நான் சொல்ல மாட்டேன், நீயே கண்டுபிடி பாப்பு” என, இரண்டு நிமிடங்கள் கூட யோசித்திருக்க மாட்டாள், ஒரு துள்ளலுடன் வசீகரனை நெருங்கிய உமையாள்,
“ஹே அந்த பாரின் அக்ரிமெண்ட் தானே, அவங்க ஒகே சொல்லிட்டங்களா” என கேட்க, அவனும் அதே துள்ளலுடன்,
“யெஸ், யெஸ்” என, அவனின் கைகளை பற்றி குலுக்கியவாறே உமையாள்,
“சூப்பர்டா கரன், மை ஹார்ட்டி கங்கிராட்ஸ்” என அவனின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாய் உணர்ந்து சொல்ல, வசீகரனோ,
“ஹே அவங்க இங்க விசிட்கு வருவாங்க, அதும் ஒகே ஆனா தான் நமக்கு ஆர்டர், அதுக்குள்ள” என வசீகரன் நிதர்சனத்தை சொல்ல வர, அவனை இடைவெட்டி தடுத்த உமையாள்,
“அது எல்லாம் எனக்கும் தெரியும், பட் இங்க வந்து நம்ப கம்பனி அஹ பார்த்தா, கண்டிப்பா அவங்களால் இந்த ஆர்டரை நமக்கு தர மாட்டேன்னு சொல்லவே முடியாது” என்று ஆணித்தரமாக சொன்னாள்.
அப்படியே, இவ்வளவு நேரம் இவர்கள் இருவரின் உரையாடல்களை வெறும் பார்வையாளர்களாக பார்த்துக்கொண்டு இருந்த கிருஷ்ணா மற்றும் பாலாவை நோக்கி,”கங்கிராட்ஸ் காய்ஸ்” என பொதுவாக வாழ்த்தவும் மறக்கவில்லை அவள்.
உமையாளுக்கு அவளின் மாமா, அதாவது வசீகரனின் தந்தை, அவரின் உயரம் புரியாமல் இல்லை.
இந்த ஒப்பந்தம் மூலம் நண்பர்களுக்கு கிடைக்க போகும் வருவாய், அவரின் மொத்த வருமானத்தில் சொற்பம் தான். அவரை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயமாக கூட இல்லாமல் போகலாம்.
[the_ad id=”6605″]
நண்பர்கள், இந்த தொழிற்சாலை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில், அவர்கள் அடைந்து இருக்கும் உயரமே அவர்களின் உழைப்புக்கும், இத்தொழிலின் மேல் அவர்கள் கொண்டுள்ள ஈடுப்பாட்டுக்குமான சான்று.
மற்ற இருவரை விட, வசீகரனுக்கு இந்த தொழிற்சாலை, அவனின் கனவு. நண்பர்களின் துணையுடன் தன் இலட்சியத்தை எட்டிவிடும் ஆர்வம் அவனுக்கு.
வசீகரன் அவர்களின் குடும்ப தொழிலை பொறுப்பேற்ற பிறகு, அவனின் கனவுக்கு போதுமான நேரம் செலவழிக்க முடியாமல் போகலாம்.
அப்படி ஒரு சூழ்நிலை வருவதற்குள், இந்த தொழிற்சாலையில் ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்பது தான் வசீகரனின் எண்ணம். இது உமையாள் அறிந்த ஒன்று தான்.
அதனால் தான், இந்த வெளிநாட்டு ஒப்பந்தம், அவனின் கனவான இந்த தொழிற்சாலையின் முன்னேற்றதிற்கு அதிமுக்கியமானது என்பதில் அவளுக்கு துளியும் சந்தேகம் இல்லை.
வசீகரனின் கனவுக்கு என அவனின் தந்தை கொடுத்து கால அவகாசமான ஐந்து ஆண்டுகளில், அவனுக்கு கொஞ்சமேனும் மனநிறைவு வரும் அளவுக்கு, அவனின் பிடித்த துறையில், அவன் சாதித்திருக்க வேண்டும் என்பதே அவளின் விருப்பம்.
வசீகரன் அவனின் கனவை நோக்கி நெருங்குவதில், அவனை விடவும் உமையாளுக்கு தான் கூடுதல் மகிழ்ச்சி.
ஒருவரின் மகிழ்ச்சி, இன்னொருவரில் எத்தனை அழகாய் எதிரொளிக்கிறது என பாலா, அவர்களின் அன்பை பார்த்து வியந்து கொண்டு இருக்க, கிருஷ்ணாவின் கண்களோ உமையாள் மீது தான்.
உமையாள் உள்ளே நுழைந்ததில் இருந்து, அவளையே தன் கண்களால் பின்தொடர்ந்து, வழக்கம் போல, அவளின் முக பாவங்களை, பொக்கிஷங்களாக ஆழ்மனதின் இரசிய அறையில் சேமித்துக்கொண்டு இருந்தான்.
கிருஷ்ணாவுக்கோ, உமையாளின் மகிழ்ச்சியிலேயே மனம் நிறைந்துவிட்டது. அவளின் புன்னகையில், அவனின் மனமும் மலர்ந்து விட்டது.
ஏனோ கிருஷ்ணாவுக்கு, வசீகரனின் மகிழ்ச்சியை தான், அவள் பிரதிபளித்து கொண்டு இருக்கிறாள் என்பது எல்லாம் அந்நேரம் தோன்றவே இல்லை.
சற்று நேரம் கழித்து தான், கிருஷ்ணாவின் கண்களுக்கு, உமையாள் அருகில் நின்று அவளுடன் பேசிக்கொண்டு இருந்த வசீகரன் பட, பொங்கிய பாலில் தெளித்த நீரென அவனின் மகிழ்ச்சி அப்படியே அமிழ்ந்தது.
“இது தான் நிதர்சனம், வசீகரன் தான் அவளுக்கு எல்லா விதத்திலும் உரிமை உள்ளவன், பொருத்தமானவனும் கூட” என மனசாட்சி எடுத்துரைக்க மனம் தான் அதை ஏற்றுகொள்ள முரண்டியது.
“இது தான் உண்மை, உசிதம்”, என்று எத்தனை முறை மனதில் பதியவைக்க முயன்றாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும், தொடர் தோல்வி தான் அவனுக்கு.
அதிலும் அவன் மனசாட்சியே சொல்லிய “பொருத்தமானவன்” எனும் பதம் அவனை பதம் பார்க்கவும் தவறவில்லை.
“ஜெயவர்மன் மகனான நீ, காதல், கல்யாணம் என்று நினைப்பது கூட பாவம், காதலின் மேன்மையை நேரில் பார்த்து, கல்யாணத்தின் உன்னதத்தை அனுபவித்த உனக்கு எப்படி காதல், கல்யாணம் என்ற எண்ணம் எல்லாம் வருகிறது, உன் பங்குக்கு நீ இன்னொரு கிருஷ்ணாவை உருவாக்காதே” என மனசாட்சி இவனின் மேல் கொஞ்சம் கூட தயை கொள்ளாமல் கூரிய வார்த்தைகளால், அவனின் காயங்களை கீறிவிட, வலியில் துடித்து கொண்டிருந்தான் கிருஷ்ணா.
அதிலும் “இன்னொரு கிருஷ்ணா” என்ற பதம், எப்பொழுதும் போல, சரியாக அவனின் இதயத்தை சென்று தாக்க, தனிமையில் வாடும் ஒரு சிறுவனின் மங்கலான உருவம் மசமசப்பாய் மனக்கண்ணில் தெரிய, அந்த காட்சிகளின் கணம் தாங்காமல் ஓய்ந்து விட்டான் கிருஷ்ணா.
இத்தனை மன போராட்டம் நடந்தாலும் வெளியில் அதை துளிக்கூட காட்டிக்கொள்ளாமல், வெகு திறமையாக சமாளித்து, “நான் நரசிம்மவர்மனின் பேரன், அவரின் வளர்ப்பு” என நிருபித்து கொண்டிருந்தான் கிருஷ்ணா.
ஒருவாறாக உமையாள் உணவு முடித்து செல்ல, நண்பர்கள் மூவரும் அவர்களின் ஆலோசனையை தொடர கிருஷ்ணாவும் முயன்று தன்னை அதில் ஈடுபடுத்தி கொண்டான்
அந்த வாரம் முழுவதுமே நண்பர்கள் மூவரும், அவர், அவரின் துறை அதிகாரிக்களுடனான தனி தனியான சந்திப்பு, ஒட்டுமொத்த மேலதிகாரிகளுக்கான சந்திப்பு என பரபரப்பாகவே இருந்தனர்.
“மைக்ரோ லேபாரட்ரரி” கம்பீரமாய் தன்னை காண வரும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக தயாராக, தொழிலாளர்களும் அதே அளவு ஆர்ப்பாட்டத்துடன் தயாராகினர்.
இந்த ஒரு மாத காலத்தில் கிருஷ்ணாவின் தந்தை ஜெயவர்மர் உடன் உமையாள் நெருங்கி பழகி இருந்தாள்.
இருவரும் புத்தகங்களை, புதினங்களை பற்றி நெடுநேரம் உரையாடி கொண்டு இருப்பார்கள். உமையாள், ஜெயவர்மரை சந்திக்க வரும் நாட்களில் எல்லாம் கிருஷ்ணா வரவேற்பரையில் வேலை செய்யும் சாக்கில் அமர்ந்து, அதற்கு பக்கவாட்டில் உள்ள, புத்தக அறையில் அவர்களின் உரையாடலை ரசித்து கொண்டு இருப்பான்.
அவனுக்கு ஒவ்வொரு நாளும் உமையாள் புதுமையாக தெரிந்தாள். ஒரு நாள் பார்த்தால், அமரர் கல்கி அவர்களின் மிக சிறந்த படைப்பாக கருதப்படும் பொன்னியின் செல்வனில் இருந்து, வந்தியத்தேவன் பற்றி அலசி கொண்டு இருப்பாள்.
இன்னொரு நாள் பார்த்தால், “தான் எழுதிய கதைகளில் தனக்கு மிகவும் பிடித்தது” என அவர் சிலாகித்த புதினம் “அலை ஓசை”, ஒரு சாதாரண பெண்ணின் வாழ்வில் நடக்கும் அசாதாரணமான திருப்பங்களை கொண்ட அக்கதையை விவாதித்து கொண்டு இருப்பாள்.
சில சமயம், அமரர் நா.பார்த்தசாரதி அவர்கள், கிட்டத்தட்ட அவர்களின் கதைகளில் எல்லாம் ஏன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொன்று விடுகிறார் என்று வருந்தி கொண்டு இருப்பாள்.
ஒருவரின் தவறை மட்டும் சொல்லாமல், எந்த சூழ்நிலையில் அந்த தவறை செய்கிறார்கள், என்று எல்லா விஷயத்தையும் புது விதமாக, வித்தியாசமான கோணத்தில் அணுகும் பாலா குமாரன் அவர்களை சிலாக்கிப்பாள் சில நேரம்.
கிருஷ்ணாவுக்கு புத்தகத்தில் பெரிதாக ஈடுபாடு எல்லாம் கிடையாது, ஆனால் உமையாள் அதை அலசி ஆராயும் போது, அவளுடன் இணைந்து பேசுவதற்காகவேனும் புத்தங்கள் படித்தால் என்ன என்று தோன்றும் அவனுக்கு.
இன்றும் அப்படி தான், சாண்டில்யன் அவர்கள் வரலாறு புதினங்கள் எழுதுவதற்காக, அடிப்படையான உண்மையான வரலாற்று சம்பவத்தை தேடி நாளில் பெரும்பான்மையான நேரத்தை நூலகத்தில் கழிப்பார் என்றும், அத்தகைய சம்பவங்களை கண்டுபிடித்து கொடுக்கும் நபருக்கு, ஒரு தொகையை கொடுப்பார் என்றும் பேசி கொண்டு இருந்தனர் இருவரும்.
அவர்கள் இருவரும் சுவாரஸ்யமாக பேசிகொண்டு இருக்க, வெளியே சோபாவில் அமர்ந்து இருந்த கிருஷ்ணா கண்களை மட்டும், மேசையின் மீது இருந்த மடிக்கணினியில் வைத்துவிட்டு, கவனம் முழுவதையும் உமையாளிடம் கொண்டிருந்தான்.
பேச்சு எப்படியோ காதல் பக்கம் திரும்ப, ஜெயவர்மர் கண்கள் கனவில் மிதக்க, தங்கள் காதல் கதையை கூற ஆரம்பித்தார்.
அவர் பேச ஆரம்பித்ததும், கிருஷ்ணாவுக்கோ “காதலாம், காதல், மண்ணாங்கட்டி” என்று கத்த வேண்டும் போல இருந்தது.
இவ்வளவு நேரம் இருந்த இனிமை எல்லாம் எங்கோ போக, மனதில் தெளிவில்லாத பல காட்சிகள் அணிவகுக்க, அதை தொடரவிடாமல் கண்களை இறுக்கி மூடி திறந்து, அக்காட்சிகளை அப்படியே விழுங்கியவன், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் எழுந்து, தனது அறை நோக்கி விரைய ஆரம்பித்தான்.
அங்கு ஜெயவர்மரோ கிருஷ்ணாவின் நிலையை பற்றி அறியாமல், அவரின் வழக்கம் போல, அவரை பற்றிய எண்ணகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, உமையாளிடம்,
“உனக்கு தெரியுமா உமா, நானும் என்னோட மனைவியும் ஒரே காலேஜ், நான் பஸ்ட் டைம் அவளை பார்த்தது கூட எங்க காலேஜ் லைப்ரரில தான், அவளுக்கும் புத்தகங்கள்னா அவ்ளோ பிடிக்கும், சாந்தமான அழகு, பூ மாதிரி ரொம்ப மென்மையானவ” என்று சொல்லி கொண்டு இருந்தவர், சட்டென்று அப்படியே நிறுத்தினார்.
[the_ad id=”6605″]
ஏதோ நினைவு வந்தவராக, புத்தக அறையை விட்டு வெளியே வந்து பார்க்க, அவருக்கு காண கிடைத்தது எல்லாம், தோள் வரை வளர்ந்த குழல்கள், ஆக்கோரஷமாக காற்றில் அசைந்தாட, ஏதோ துரத்துவது போலவும், அதில் இருந்து தப்பிப்பவன் போலவும், வேக, வேகமாக மாடி ஏறிக்கொண்டு இருந்த கிருஷ்ணா தான்.
அவருக்கு நன்றாக தெரியும் அவரின் மகனின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் என்று. எத்தனை நாட்கள் அவர் அவனை நினைத்து மறுகி இருப்பார், “எங்கே கல்யாணமே செய்து கொள்ளாமல் இருந்து விடுவானோ” என்று.
இப்போதும் அவருக்கு, கிருஷ்ணாவை குறித்த பயம் அப்படியே இருந்தாலும், அவருக்கு இருக்கும் சிறு நம்பிக்கை சுடர் உமையாள் தான்.
ஏதோ ஒரு விதத்தில் உமையாள், கிருஷ்ணாவை பாதிக்கிறாள் என்று அவருக்கு புரிந்தது. அவரின் தவபுதல்வன் முகத்தில் எதையும் வெளிக்காட்டி கொள்ளாவிட்டாலும், உமையாள் இங்கு வரும் பெரும்பான்மையான நாட்களில், வரவேற்பறையில், இயல்பு போல தன் இருப்பை அவன் பார்த்துக்கொள்வது தான், அவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.
சில சமயம், “இது எல்லாம் தன் மனதின் கற்பனையோ”, என்று கூட அவர் அஞ்சுவது உண்டு. உமையாள் அவரின் மகனில், சிறு சலனத்தையாவது விதைக்கிறாள் என்று மட்டும் அவருக்கு உறுதியாகும் பட்சத்தில், உமையாளை எப்பாடு பட்டாவது தன் மகனின் வாழ்க்கையில் பிணைத்து விடமாட்டாரா அவர்.
இது சுயநலம் தான், ஆனால் இந்த பரந்து விரிந்த உலகத்தில் அவருக்கென இருக்கும் ஒரே ஒரு ஜீவன் அவரின் மகன் மட்டும் தானே. அவனின் ஒரே ஒரு புன்னகைக்காக, என்ன செய்ய வேண்டும் என்றாலும் தயார் அல்லவா அவர்.
அவர் அறிந்து கிருஷ்ணாவின் புன்னகையை அவர் பார்த்தது, அவனின் குழந்தை பருவத்தில் தான். விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு, அவருக்கு அவனை கவனிக்க நேரம் இல்லை.
இப்பொழுது எல்லாம் அவரின் மகன், அவரிடம் நின்று கூட பேசுவது இல்லை என்று அன்றாட வாடிக்கையை நினைக்க, அவர் அறியாமல் ஒரு பெருமூச்சை வெளியிட்ட வண்ணம், அவன் சென்ற வழியை பார்த்து கொண்டு இருந்தார்.
கன்னத்திற்கு கையை முட்டு கொடுத்துக்கொண்டு, ஜெயவர்மர் கண்களில் கனிவோடு சொல்ல ஆரம்பித்த கதையை, வெகு ஆர்வமாக கேட்டு கொண்டிருந்த உமையாள், அவர் சட்டென நிறுத்தியதோடு மட்டும் அல்லாமல் வெளியே வேறு சென்று பார்க்கவும் குழம்பி போய் விட்டாள்.
சரி அவரே வருவார் என்று காத்திருக்க, நேரம் தான் சென்றதே ஒழிய அவர் வரவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, அவள் எழுந்து வெளியே வர, அவரோ அந்த அறையின் வாசலில் நின்று மாடியை பார்த்து கொண்டு இருக்க, இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவரின் முகத்தில் இருந்த அந்த சோகம் அவளையும் தாக்க, ஆதுரமான குரலில்,
“அங்கிள் என்ன ஆச்சு” என கேட்க, அவளின் குரலோ, அல்லது அதில் இருந்த அக்கறையோ ஏதோ ஒன்றில் கட்டுப்பட்டு அவர் தன்னையும் மீறி,
“கிருஷ்ணா” என்று சோகம் அப்பிய குரலில் சொன்னவர், மாடியையும் கை காட்ட, அவர் சொல்ல வருவது புரியவில்லை என்றாலும், ஏதோ கிருஷ்ணாவை நினைத்து வருந்துகிறார் என்று மட்டும் புரிய, அவரை தேற்றும் விதமாக,
“கிருஷ்ணாக்கு என்ன அங்கிள், அவர் அப்படியே ராஜா மாதிரி ஜம்முனு இருக்கார், அவர் லைப் சும்மா கும்முனு இருக்கும் பாருங்க” என்று ஆருடம் சொல்ல, அவள் சொன்ன தினுசில் ஜெயவர்மர் முகத்தில் புன்னகையின் சாயல்.
“நீ சொன்ன மாதிரி நடந்தா அதுவே போதும், அதைவிட எனக்கு வேற என்ன வேணும்” என்று தனக்குள் பேசுபவர் போல முனுமுனுப்பாக சொல்லியவர், மீட்டெடுத்த கம்பீரமான குரலில் அவளை பார்த்து,
“அது என்ன ராஜா மாதிரி, அவன் நிஜமாவே ராஜா தான், நாங்க ஜமீன் பரம்பரை தெரியுமா” என்று மீசையை முறுக்கிவிட்டு கொள்ள, அவளோ,
“ஆன் இப்படி தான், இப்படியே இருங்க, இதான் பார்க்க நல்லா இருக்கு” என அவரை போலவே, தன் முகத்தில் இல்லாத மீசையை முறுக்கி காட்டினாள்.
அவர் சொன்ன “ஜமீன் பரம்பரையை” அப்படியே கண்டுக்காமல் காற்றில் பறக்க விட்டுவிட்டு, அவரிடம் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு,
சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு, விடைபெற்று தன் வீட்டுக்கு சென்றாள் உமையாள்.
[the_ad id=”6605″]
அந்த வாரம் சனிக்கிழமையும் வழக்கம் போல வசீகரனின் வீட்டில், நண்பர்களின் கலந்தாய்வு நடைப்பெற, ஒரே ஒரு மாற்றமாக உமையாளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் வருகை இவர்களின் வாழ்வில் ஏற்படுத்த போகும் மாற்றம் அளவிடமுடியாதது.
வசீகரன் இத்தனை நாள் உணராத தன் நிலா பெண்ணின் மீதான காதலை உணர்ந்து தெளிய போகிறான்.
உமையாளுக்கு, அவள் இத்தனை வருட காதல் கைக்கூட போகிறது. அவளை கவர்ந்த, அவளின் வசியின் கண்களில், அவள் காண விரும்பிய, “அவளுக்கான காதல்” அவளை ஆராதிக்க போகிறது.
கிருஷ்ணாவோ தன் மனதில் இருந்த, இருக்கும் காயங்களுக்கு எல்லாம் உமையாள் மருந்து என உணர்ந்து, அவனை பிணைத்திருந்த தளைகளை தகர்த்து, உமையாள் தான் வேண்டும் என முனைப்புடன் அவளை அவனுடன் இணைக்க போராட போகிறான்.
காலம் இவர்களுக்காக என்ன வைத்திருக்கிறது என்று நாமும் இவர்களுடன் காத்திருந்து பார்ப்போம்.
காதல் கொள்வோம்………..