உதய் சீதாலக்ஷ்மியை அழைப்பதை கண்டு கஜபதியின் மனைவி முகம் மாறிட உடனே கணவரைப் பார்த்தார்.. பார்ப்பதால் மட்டும் என்ன செய்துவிட முடியும்..? இன்று அவர் சீதாவிடம் பேசிய பேச்சுக்களை அங்கே வேலை செய்பவர்கள் அம்பலவாணனிடம் போட்டுக்கொடுத்ததில் திருமண மண்டபத்திற்கு வந்து தன் மதிப்பை காட்ட முயற்சித்த கஜபதியை மதிக்க தான் யாருமில்லை. அதோடு அவரிடம் ஆசி பெற வேண்டும் என்று தளிர் சொல்ல ‘கல்யாணம் முடிச்சுட்டு மொத்தமா வாங்கிக்கலாம் இப்போ எல்லாரும் வைட் பண்றாங்க வா’ என்று தளிரை அழைத்து சென்றுவிட்டான்.
“இவங்க தளிரோட பெரியம்மா வீட்டுக்கு மூத்தவங்க இருக்கப்போ அவங்க வைக்கிறது தான் வழக்கம் உதய் நிச்சயத்துல அக்கா தானே செய்தாங்க” என்று ஜெகதீஸ்வரி கேட்க அவனும் நினைவு வந்தவனாக,
“சரிம்மா ஆனா அத்தை ஏன் அங்க நிக்கிறாங்க..” என்ற உதய் மேலும் கேள்வி கேட்கும் முன் நிவி “வாங்கத்தை” என்று சீதாவை கொண்டு வந்து நிறுத்திவிட்டாள்.
“மாப்பிள்ளை அக்கா வைக்கட்டும் அப்புறம் நான் வைக்கிறேன்..” என்றவர் சொன்னது போலவே செய்ய அடுத்ததாக தென்றல் வந்தாள்.
“ஹேய் ப்ரீஸீ எங்க வந்ததுல இருந்தே உன்ன ஆளையே காணோம் ரொம்ப சைலன்ட்டா இருக்க.. இப்படி இருக்க ஆள் கிடையாதே நீ..? என்னாச்சு ஸ்டேஜ்ல நிற்காம அப்ஸ்கான்ட் ஆகிட்ட..?”
“கொஞ்சம் வேலையா இருந்தேன் த்தான்”
“சரி நலங்கு வை உன்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன்..” என்ற உதயாதித்தனை மௌனமாக பார்த்த தென்றல் பட்டும் படாமல் அவன் கன்னத்தில் தயக்கத்துடனே நலங்கிட்டாள்.
“என்னம்மா இது மச்சினிச்சி இப்படியா பட்டுப்படாமல் வைப்ப..? நல்லா அள்ளி எடுத்து பூசு இன்னிக்கு தான் நமக்கு வாய்ப்பு இன்னொருமுறை கிடைக்காது” என்று உதய்க்கு அத்தை முறையில் இருந்தவர் சிரிப்போடு சொல்லவும் உடன் நின்றிருந்த பெண்களும் ஆமோதித்தனர்.
“ஆமா ஆமா இன்னைக்கு தான் சான்ஸ் எங்க அத்தையே சொல்லிட்டாங்க அவங்க சொன்ன மாதிரியே செய் பிரீஸி” என்று உதய் சிரிக்கவும் தென்றல் சங்கடத்துடன் அவன் நெற்றியில் குங்குமமிட போகவும் அவள் கையை பிடித்து கொண்ட சுஜி,
“என்ன யோசிக்கிற தென்றல்..? யாரோ எதுவோ சொன்னா அதையே நினைச்சுட்டு இருப்பியா..? உன் மனசு சுத்தமா இருக்கிறப்போ யாரோட வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவங்க சொன்ன பொய்க்கு உயிர் கொடுத்துடாத..!” என்றாள்.
“எதுவும் நினைக்காத தென்றல் எங்க அக்கா கல்யானத்துல நாங்க கசின்ஸ் மூணு பேர் சேர்ந்து நலங்கு வைக்கிறோம்னு எங்க மாமாக்கு முகம் முழுக்க பூசினோம் ஆனா அவர் பனியனை கழட்டிட்டு ‘ஹே நீ இங்க பூசு நீ அங்க பூசுன்னு’ எங்ககிட்ட காமெடி பண்ணி முதுகை திருப்பி லெப்ட் ரைட்ன்னு காட்டிட்டு இருந்தார். நாங்களும் கிடைச்ச சான்ஸ்ல அவரை மஞ்சள் சந்தானத்துல குளிப்பாட்டிட்டோம் தெரியுமா..? செம ஃபன்னா இருந்தது நீ என்ன இவ்வளவு யோசிக்கிற..? எங்க அண்ணன் தப்பா எடுத்துக்க மாட்டாங்க அவருக்கு நாங்களும் நீயும் ஒண்ணுதான்.., பேசுறவங்க என்ன வேணுனாலும் பேசிட்டு போகட்டும் அவங்களுக்காக நம்மளோட சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க முடியாது புரியுதா..? வச்சு விடு” என்றதில் சற்று தெளிந்த தென்றலின் விழிகள் ராஜியை பார்க்க அவரோ முகம் கடுகடுக்க நின்றிருந்தார்.
“என்ன மூணு பேரும் ஏதோ பெருசா ப்ளான் பண்ற மாதிரி இருக்கு..” என்ற உதய்யிடம், “அண்ணா கண்ணை மூடிக்கோங்க” என்று நிவி குரல் கொடுத்த அதேவேளை கைநிறைய மஞ்சளை அள்ளிகொண்ட தென்றல் உதய்யின் முகமெங்கும் பூச தொடங்கிட அவளோடு உதய்யின் அத்தையும் சேர்ந்து உதயாதித்தனை ஒருவழியாக்கி இருந்தார்.
உதய் சிரிப்போடு அவர்களை பார்த்திருக்க அங்கே வந்த சரவணன் “நீ மட்டும் தப்பிக்கலாம்னு பார்க்கிறியா மாப்பிள்ளை..?” என்றவாறே உதய்யின் பனியனை கழற்றிவிட்டு “இப்ப பூசுங்க” என்று அவனை பிடித்துகொள்ள வைஷுவும் கௌஷிக்கும் “அப்பா மாமாக்கு நாங்களும் பூசுறோம்” என்று ஆளுக்கு ஒருபுறம் நின்றுகொண்டு உதய்யை குளிப்பாட்டி இருந்தனர்.
“உன்னோட டவல், சோப் எல்லாம் எடுத்து வச்சுட்டேன் ஆதி.. நீ குளிச்சிட்டு வந்துடு நான் சூடா பால் கொண்டு வரேன்”
“சரி ராஜிம்மா..! நீங்க வரும் போது அம்மாகிட்ட என்னோட ஃபோன் கொடுத்திருந்தேன் அதை வாங்கிட்டு வந்துடுங்க.. அப்புறம் தலைவலின்னு சொல்லிட்டு தளிர் சரியாவே சாப்பிடலை, எப்படி இருக்குன்னு கேட்டு அவளுக்கும் ஒரு காஃபி போட்டு கொடுத்துடுங்க” என்றவன் குளியலறைக்குள் செல்ல, ‘இவளுக்கு நான் சேவை செய்யணுமா எல்லாம் என் தலையெழுத்து’ என்றவாறே முதலில் உதய்க்கு பாலை வாங்கிக்கொண்டு அவன் கைபேசியோடு அறைக்கு திரும்ப தளிர் உதய்க்கு அழைத்திருந்தாள்.
‘இந்நேரத்துக்கு எதுக்கு என் பிள்ளைக்கு கூப்பிடுறா..? ச்சை விவஸ்த்தை கெட்டவ இங்கயும் ஏதாவது கூத்துகட்ட போறாளோ..?’ என்ற யோசனையோடே ராஜி தளிரின் அழைப்பை அமைதியாக ஏற்க.,
“ஹலோ உதய் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… வெரி அர்ஜென்ட்! இங்க என் ரூம்ல எல்லாரும் வந்துட்டு போயிட்டு இருக்காங்க இஃப் யூ டோன்ட் மைண்ட் மாடிக்கு வரீங்களா..?” என்றபோதே,
என்றவாறே வெளியில் வந்தவன் “யார் ராஜிம்மா ஃபோன்ல” என்று தலைதுவட்டி கொண்டே கேட்க உடனே அழைப்பை துண்டித்த ராஜி, “மருமகள் தான்ப்பா உன்கூட பேசணுமாம்.. நீ பேசு நான் காஃபி போட்டு கொடுத்துட்டு வரேன்” என்று தலையில் அடித்துகொண்டு சென்ற ராஜிக்கு மனம் வெதும்பியது..
உடனே தளிருக்கு அழைத்தவன், “நான் டஃப்பான கேள்வி தானே கேட்டிருந்தேன் மேடம் என்ன அதுக்குள்ள ஆன்சர் கண்டுபிடிச்சிட்டீங்களா..?” என்று சிரிப்போடு உதய் கேட்க,
“அதில்ல உதய் இது வேற ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட அர்ஜென்ட்டா பேசணும் மாடிக்கு வரீங்களா..?” என்று கேட்டவள் குரலில் இருந்த அழுத்தத்தில் விளையாட்டை கைவிட்டவன்,
“உனக்கு தலைவலி எப்படி இருக்கு ராஜிம்மா கிட்ட காஃபி கொடுக்க சொன்னேனே வந்ததா..?”
“இல்ல உதய் பரவால்ல பட் எனக்கு உடனே பேசணும் வரீங்களா..?”
“சரி வரேன்” என்றவன் வைக்கவும் நைட்டியில் இருந்தவள் அவசரமாக சுடிதாருக்கு மாறி வெளியில் வர அங்கே பலர் உறங்க சென்றிருக்க ஓரிருவர் அமர்ந்திருந்தனர். சீதா உறவினர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றிருப்பதாக சொன்ன தென்றலிடம் தான் உதய்யை சந்திக்க போவதை சொல்லிவிட்டு மாடிக்கு சென்றவள் அவனுக்கு காத்திருக்க தொடங்கினாள்.
சமையல் கூடத்தில் இருந்த தங்கையிடம், “ஜெகா நாமெல்லாம் மாப்பிள்ளை முகத்தை கல்யாணத்துக்கு அப்புறம் தான் முழுசா பார்த்தோம் ஆனா இங்க பொம்பளைக்கு கூச்சங்கிறது வேணாமா..? இந்த ராத்திரியில ஆதியை மொட்டை மாடிக்கு வர சொல்லி இருக்காடி இதெல்லாம் எங்கயாவது நடக்குமா..? எனக்கென்னமோ சரியாபடலை, எங்க நாம உன் வீட்டுகாரர் பேச்சை கேட்டு அவசரபட்டுட்டோமோன்னு இருக்கு..”
“எதுக்குக்கா வர சொன்னா..?” என்ற ஜெகாவிற்குமே தளிரின் நடவடிக்கைகள் அத்தனை ஏற்பற்றதாக இருந்தது. தன் பெண்கள் மாமியாரிடம் எத்தனை உரிமையாக வலம் வருகையில் தளிர் இதுவரை மாமியாரான தனக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் போனதோடு மகனோடு மட்டும் தன் உறவை வளர்ப்பது அவருக்கு அச்சம் கொடுத்தது.
“இருடி”என்று கிளம்பிய ராஜிக்கு இளந்தளிர் உதயனை மாடிக்கு தனியாக வர சொன்னதன் பின்னணி அறியாவிட்டால் மண்டை வெடித்து போகும் நிலை. வேகமாக மாடிக்கு செல்லவிருந்த ராஜியை வழியில் வைஷுவும் கௌஷிக்கும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு வந்து இடித்து கீழே தள்ளிவிட, “அம்மாஆஅ..” என்று இடுப்பை பிடித்துகொண்டு அமர்ந்துவிட்டார்.
“என்னாச்சு பாட்டி..?” என்று வைஷு கேட்க அவர்கள் பின்னே வந்த நிவியும் கேட்க, “என்னடி இதுங்க இன்னும் தூங்காம இருக்குதுங்க..?”
“அதுக்கு தான் உங்களை தேடி வந்தேன்.. குழந்தையை கொஞ்சுறேன்னு என் பிள்ளையையும் எழுப்பி விட்டுடாங்க.. அத்தை கிட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன்.. நான் அவனை தூங்க வைக்கிறேன் நீங்க இவங்களை கூட்டிட்டு போய் தூங்க வைங்க” என்று நிவி அதிகாரமாக சொல்ல அதை மறுக்க முடியாத ராஜி இருவரையும் அழைத்து கொண்டு அறைக்கு சென்று கதை சொல்லி உறங்க வைக்க முற்பட்டார்.
அதேநேரம் சூடான காஃபியோடு மாடிக்கு சென்ற உதய் தளிரிடம் கொடுக்க அவளோ அதை பருகும் நிலையில இல்லாது கைபிடியில் வைத்து விட்டு, “நான் ஒரு..” என்று ஆரம்பிக்கவுமே கோப்பையை அவள் இதழ்களில் பொருத்திய உதய், “எதுவா இருந்தாலும் குடிச்சிட்டு பேசு அப்போதான் கேட்பேன்..” என்றவன் தன் கோப்பையை எடுத்துகொண்டு அவளை ஆராய்ந்தவாறே குடிக்க தொடங்கினான்.
ஒருமணி நேரத்திற்கு மேலாக ராஜியை படுத்தி எடுத்த குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல அவசரவசரமாக இடுப்பை பிடித்துக்கொண்டு மாடிக்கு சென்றார் ராஜி,
அங்கே கைகளை கட்டிக்கொண்டு கைபிடியில் சாய்ந்து நின்றிருந்த தளிரை நெருங்கிய உதய் அவள் முகத்தை இருகரங்களால் அள்ளிக்கொண்டு அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு இறுக்கமாக கட்டிக்கொண்டான்.
அதை கண்டு அதிர்ந்த ராஜி மீண்டும் தலையில் அடித்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டு கீழே வந்தார்.
********************************
இரவு முழுக்க தூங்காமல் உதய் அனுப்பிய காணொளிகளை பார்த்து கொண்டிருந்த தளிரின் முகத்தில் நிரந்தரமாக புன்னகை குடியேற அவன் கொடுத்த முத்தத்தின் தித்திப்பு மனதெங்கும் விரவியிருக்க தளிரின் சிந்தை முழுக்க உதயாதித்தனின் ராஜ்ஜியம் தான். அவனை பார்க்கும் ஆவலில் அதிகாலையே எழுந்துவிட்ட தளிரின் முகத்தில் என்றும் இல்லாத பொலிவு குடிகொண்டு இருந்தது.
கைபேசியை எடுத்து மீண்டும் உதய் அனுப்பிய பாடலை கேட்டவளின் முகத்தில் செம்மை படர இதழ்களில் உருகிய புன்னகையோடு அவனை போலவே இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை கொண்டு பாடல் வரிகளை கோர்த்து பதில் அனுப்பினாள்.
இரவு தளிருடனான நிமிடங்களுக்கு பின் அறைக்கு திரும்பிய உதய் புன்னகையோடு படுக்கையில் சரிந்து சுகமாக உறக்கம் கொள்ள தளிரின் மெசேஜூடன் அவன் காலை அழகாய் புலர்ந்தது அவள் கொடுத்த நிறைவுடன் குளிக்க சென்றவன் வேகமாக தயாராக தொடங்கினான்.
தளிரை அலங்கரிக்க வந்த அழகுநிலைய பெண்கள் அடுத்த ஒருமணி நேரத்தில் தளிரை ஜொலிக்க வைத்திருந்தனர். சுஜியின் கைவண்ணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட புடவை தளிருக்கு அத்தனை அழகாக இருந்தது.
மகளை நெட்டி முறித்த சீதாலக்ஷ்மி திருஷ்டி பொட்டு வைக்க தளிரின் அறைக்கு வந்து வைஷு “மாமி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்னோட டிரஸ் எப்படி இருக்கு பாருங்க..?”
“வைஷு ரொம்ப கியூட்டா இருக்கீங்க” என்றவள் இருவரையும் செல்ஃபி எடுத்து ஏற்கனவே எடுத்த புகைப்படங்களையும் சேர்த்து உதய்க்கு அனுப்பி வைத்தாள்.
முதலில் மணமேடைக்கு வந்த உதயாதித்தன் பூஜை செய்திட அடுத்து சர்வலங்காரத்தோடு வந்த இளந்தளிர் உதய் அருகே அமர்ந்து பூஜை செய்ய தொடங்கியிருந்தாள். சுஜியும் நிவியும் மணமேடையில் கணவரோடு இணைந்து நின்றிருந்தனர்.. வரவேற்ப்பரையில் சம்பந்திகளோடு நின்றிருந்த அம்பலவாணன் சடங்குகள் ஆரம்பிக்கவும் மேடைக்கு வந்துவிட்டார்.
முதலில் அம்பலவாணன் ஜெகதீஸ்வரி தம்பதியருக்கு மணமக்கள் கால்கழுவி பாதபூஜை செய்திட அடுத்து கஜபதியும் அவர் மனைவியும் வந்து நிற்க அதுநேரம் வரை கேட்டுக்கொண்டிருந்த மேளசத்தம் நின்றுவிட மந்திரம் உச்சரித்து கொண்டிருந்த ஐயரின் வார்த்தைகைள் தடைபட்டுபோனது “கல்யாணத்தை நிறுத்துங்க” என்ற குரலில்.
தாம்பாளத்தில் கால் வைக்க போன கஜபதி தன் செயலை நிறுத்திவிட்டு பார்க்க கூட்டத்திற்கு மத்தியில் நின்றிருந்த இருபத்திஐந்து வயது மதிக்கத்தக்க வாலிபன், “என் பொண்டாட்டிக்கு நீ எப்படிடா தாலி கட்டுவ..? எந்திரி இல்ல நடக்கறதே வேற..” என்று உதய்யை பார்த்து சொல்ல மொத்த கூட்டமும் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனது.
கூட்டத்தில் சலசலப்பு எழ வந்திருந்த வாலிபன் கையோடு கொண்டு வந்திருந்த புகைப்படத்தை அனைவரிடமும் கொடுத்து, “உயிருக்கு உயிரா காதலிச்சு கட்டிக்கிட்ட என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ண பார்க்கிறான் நீங்களே கேளுங்க இந்த நியாயத்தை..” என்று கேட்டுக்கொண்டிருக்க தளிரை நெருங்கிய ராஜி அவளிடம் புகைப்படத்தை காட்டி,
“இது நிஜமா இதுல இருக்கிறது நீதானா..? உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா..?” என்று கேள்விகளை தொடுக்க அவர் காட்டிய புகைப்படத்தில் பட்டுபுடவை பூவோடு நின்றிருந்த இளந்தளிரின் கழுத்தில் புதிதாக வந்திருந்த வாலிபன் தாலி கட்டிக்கொண்டிருந்தான்.