இரவு உணவு முடிந்து எல்லோரும் கூடத்தில் ஆங்காங்கே அமர்ந்திருக்க, மஞ்சள் மிளகு போட்ட பாலை மிதமான சூட்டில் ஆற்றி கொண்டு வந்து அன்பழகனிடம் நீட்டினார் புவனா.
அதை வாங்கக்கூட செய்யாமல் கவனமின்றி அவர் அமர்ந்திருக்க, “ஏங்க! புடிங்க” என்றதும், கவனம் சிதற, அவர் கொடுத்ததை பெற்றுக்கொண்டார் அவர்.
“என்ன பாக்குறீங்க அப்படி?”
“ம்ம்… எல்லாம் உன் மவன் பண்றது தான்! முன்னாடி பொறுப்பில்லாம இருந்து என் நிம்மதியை கெடுத்தான்! இப்போ ஒரு வாரமா ஓவர் பொறுப்பா இருந்து என் நிம்மதியை கெடுக்குறான்” என்றவரின் பார்வை மட்டும் சற்று தள்ளி அமர்ந்து கடைக்கணக்கு பார்த்துக்கொண்டிருந்த மகனை விட்டு விலகவில்லை.
மகனை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்த புவனா, “உங்களுக்கு அவனை எதாவது கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்கணும்…அதானே? முன்னதான் பொறுப்பு இல்ல, பருப்பில்லன்னிங்க… கல்யாணம் நிச்சயம் ஆன நேரம் தானா பொறுப்பு வந்து வேலைல உட்காருறவனை பார்த்தும் எதுக்குதான் இப்படி குறை பேசுறீங்களோ தெரியல எனக்கு!” என்றார்.
“ப்ச்! உன் மவனை சும்மா நொய்நொய்ங்க எனக்கென்ன கிறுக்கா? ஒரு வாரமா எல்லா கம்பெனிக்கும் போய் சுத்திருக்கான்! தோட்டத்தை கூட விட்டுவைக்கல! இன்னைக்கு திடீர்ன்னு பைனான்ஸ் ஆபீஸ் வந்து சித்த நேரம் உலாத்திட்டு வரவு செலவு நோட்டை எல்லாம் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டான்” என்றவர் பேச்சில் சந்தேகம் மட்டுமே!
“இதுல என்ன அதிசயத்தை கண்டீங்க? பொறுப்பா கணக்கு பார்க்குறானா இருக்கும்!”
“கணக்கு பாக்குறவன் இந்த மாச நோட்டைல்ல டி எடுத்துட்டு வந்துருக்கணும்! என்னத்துக்கு நாலஞ்சு வருஷ பழைய கணக்கெல்லாம் எடுத்து பொரட்டிட்டு இருக்கான்?”
லேசாக திடுக்கிட்ட புவனா, “அது…அது… அவனுக்கு என்னமோ செய்யணும்ன்னு தோணுது! செஞ்சுட்டு போட்டும்ன்னு தான் விட்டு தொலைங்களேன்!” என்றார் மழுப்பலாய்.
அன்பழகன் மேற்கொண்டு தன் ஐயத்தை பற்றி பேச வருகையில் வீட்டின் உள் படிகட்டு வழியாய் இறங்கி வந்துக்கொண்டிருந்தான் மனோகர்.
அவன் வருகையை அதிலும் உள்மாடத்தின் வழியே வருவதை திறந்த வாய் மூடாமல் தான் பார்த்தனர் எல்லோரும்.
புவனாவிற்கு அவனை கண்டதுமே காரணமற்ற கண்மண் தெரியாத எரிச்சல் எப்போதும் போல!
நேரே அன்பழகனிடம் வந்தவன், “பேசணும்!” என்றான் அவரை நோக்கி கரம் நீட்டி.
“தனியாவா…. இல்ல….?”
“இல்ல, இப்படியே பேசலாம்” என்றவன், “உங்க பொண்ணுங்களுக்கு சொத்துல பங்கு குடுக்கலாம்ன்னு எண்ணம் இருக்கா? இல்ல வெறும் சீதனத்தோட அனுப்புற மாறியா?” என்றான்.
அவனிடம் இருந்து இப்படியொரு கேள்வியை துளியும் எதிர்ப்பார்க்கவில்லை யாரும்.
புவனாவுக்கோ வாய் நமநமக்க, “உனக்கெதுக்கு அதெல்லாம்? முதல்ல உன்னை யாரு வீட்டுக்குள்ள வர சொன்னது? என்னவோ நீ பரம்பரை பரம்பரையா சம்பாரிச்ச சொத்து மாறி உரிமையா கேட்குற? இடத்தை குடுத்தா மடத்தை பிடிப்பானாம் ஆன்டி… அந்த கதையாள இருக்கு?” என்று கத்த, கௌசிக்கு தான் அன்னையின் பேச்சு ‘சுருக்’ ‘சுருக்’ என்றிருந்தது.
மனோவுக்கோ தன் காதில் எதுவுமே கேட்கவில்லை என்பதை போல அன்பழகனை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றான்.
அவன் பார்வை ‘தனக்கு பதில் வேண்டும்’ என்ற பிடிவாதத்தை உணர்த்த, சொல்ல பிரியமில்லை என்றாலும், வழியின்றி, “அதெப்படி வெறும் சீதனத்தோட அனுப்புறது? இந்த வீட்டை தவிர வேற என்ன இருக்கோ அதை மூணு பங்கா போட்டு மூணு பேருக்கும் தான் தருவேன்!” என்றார்.
“ஓ” என்றவன், “அப்ப தொழில்?” என்று அடுத்ததாய் கேட்க,
“சொத்து’ன்னா அதுல தொழிலும் தானே அடக்கம்? பையனுக்கு குடுத்தது போக மிச்சம் இருக்க தொழில என் காலத்துக்கு பிறகு… வர மருமவன் வசம் ஒப்படைச்சுடுவேன்” என்றான்.
“நல்லதா போச்சு! அப்போ பின்னாடி ஒப்படைக்க போற தொழில பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சு வச்சுருக்கணும்ல? அதனால நாளைல இருந்து கௌசியை நம்ம கம்பெனிக்கெல்லாம் கூட்டிட்டு போய் என்ன நடக்குதுன்னு பார்க்க சொல்லுங்க!” என்றான்.
‘ஆங்’ என கௌசி முழிக்க, “என் மவளுக்கு என்ன செய்யணும்ன்னு சொல்ல நீ யாரு? என்ன பழசை எல்லாம் புதுப்பிக்கலாம்ன்னு பாக்குறியா?” என புவனா பேச, “புவனா…!!!” என அதட்டினார் அன்பழகன்.
“நான் நல்லதுக்கு தான் சொல்றேன்! கௌசியும் படிப்பு முடிஞ்சு சும்மா தான் இருக்கா! தினம் ஒரு இடம்ன்னு கூட்டிட்டு போனா தொழில் கத்துக்குடுத்த மாறியும் ஆச்சு! நாளபின்ன வரவன் எந்தளவு எடுத்து நடத்துவானோ, தொழில் இருக்குமோ படுக்குமோங்குற பயம் இல்லாத மாறியும் ஆச்சு!” என்றான்.
உண்மையில் அன்பழகனுக்கு அடிமனதில் இந்த பயம் உண்டு தான்!!! மகனைநம்பி பிரயோஜனம் இல்லை எனும்போது மருமகன்களை தான் நம்ப வேண்டும்! வருபவனும் தந்தியாய் போய்விட்டால்…? அவர் கஷ்டப்பட்டது எல்லாம் காற்றில் கரைந்துவிடுமே என்ற சொல்லொண்ணா அச்சம் அவருக்குள் இருப்பதை எப்படியோ அறிந்து வைத்திருந்து சமயத்தில் சொல்லிவிட்டான் அவன்.
சில நிமிடங்கள் யோசித்தவருக்கு மனோ சொல்வதில் தவறொன்றும் இருப்பதாய் தோன்றாமல் போக, “சரிதான் மனோ! பொண்ணுங்களுக்கும் தொழில் தெரிஞ்சுருக்கனுமே! ஆர்த்தி சின்ன பொண்ணு! அதனால இப்போதைக்கு கௌசி போய் வரட்டும்!” என்றார்.
கௌசி முகம் சுண்டிவிட்டது.
வந்த வேலை முடிந்துவிட திரும்பி செல்ல போனவனை, “ஆனா, என்னால தினம் கூட்டிட்டு அலைய முடியாது… பொறுப்பா நீயே அவளுக்கு தொழில் சொல்லிக்குடு! என்னை விட உனக்கு தானே எல்லாம் தெரியும்!!!” என்றார்.
புவனாவுக்கு மட்டும் கண்ணாலேயே எரிக்கும் திறன் இருந்திருந்தால் இந்நேரம் அன்பழகன் சாம்பலாகி இருப்பார்.
“அது சரி வராது! என்னால போற இடத்துக்கு எல்லாம் அவளை கூட்டிட்டு போயிட்டு இருக்க முடியாது!”
“அட, நீயா தூக்கி சுமக்கப்போற அவள! சும்மா போற கார்ல அவளும் உட்காந்து வருவ! இதுக்கு போய்!!!: என்றவர், பேச்சு முடிந்ததை போல எழுந்துக்கொண்டு, “சணல் கம்பெனிக்கு முதல்ல கூட்டிட்டு போ! ராசியான இடம்!!” என சொல்லிக்கொண்டே தன் அறைப்பக்கம் நகர்ந்துவிட்டார்.
‘ப்ச்!’ லேசான எரிச்சல் மூழ, விறுவிறுவென மாடியேறியவனை சற்று பொறுத்திருந்து தேடி வந்தாள் கௌசி.
“எதுக்கு மாமா இப்படி செஞ்சீங்க?” வந்ததும் வராததுமாய் ஆரம்பித்தாள்.
“எப்படி செஞ்சாங்க?”
“நான் இப்போ தொழில் கத்துக்கிட்டு என்ன சாதிக்க போறேன்!?”
“நீ சாதிக்கனும்ன்னு உன்னை வெளில அனுப்ப சொல்லல! சும்மா இருக்க மனசு சாத்தானோட கூடாரம்ன்னு சொல்லுவாங்க! வெளில போ, நாலு மனுஷங்களை பார்த்து பேசு! கவனத்தை திசை திருப்பு! வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து என்ன செய்யப்போற சொல்லு?”
“ப்ச்! நான் தான் தெளிவா சொன்னேனே! கொஞ்ச நாள்ல நான் சரி ஆகிடுவேன்னு! அதுக்குபிறகு நான் எதுவும் தொல்லை செஞ்சேனா? இல்ல தானே?” கேட்கும்போதே கண்கள் கலங்க, அழுதால் வேறு திட்டு விழுமே என்று முயன்று அடக்கிக்கொண்டாள்.
“நீ தொல்லை பண்ண… பண்ணல! அது இல்ல பேச்சு! வீட்டை விட்டு வெளில போய் வெளி காத்தை அனுபவி! உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கண்ணை திறந்து பாருன்னு சொல்றேன்! இதுல என்ன தப்பு!?”
“என்…என்னா…என்னால முடியாது”
அடக்க முயன்றும் முடியாமல் இரு துளிகள் விழிகள் விட்டு இறங்க,
“முடியாதுன்னா… ஏன்?”
“எப்டி சொல்றது? என்னால யாரையும் ஃபேஸ் பண்ண முடியாது மாமா!!”
“எனக்கு புரியலையே!”
“அது… ப்ச்! என்னால எந்த ஆம்பளை முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியாது! பேச முடியாது!” என்றவளிடம், “எதனால?” என்றான் அவன்.
அவளுக்கு துளிர் கோபம் எட்டிப்பார்க்க, “தெரியாத மாதிரி கேட்காதீங்க! அவ்வளவு அசிங்கமான பேச்செல்லாம் கேட்ட பிறகு ஒருத்தனை நிமிர்ந்து பார்க்கவும் வருமா எனக்கு? ஒருமுறை நிமிர்ந்ததுக்கே இன்னும் தலைகுனிஞ்சு நிக்குறேன்!” என்றவள் குரல் கமற, உடைந்து அழுதாள்.
அழுபவளை கையைக்கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தான். அவளே சில நிமிடங்களுக்கு பின் தன்னை தேற்றிக்கொண்டு நிமிர, “முடிச்சுட்டியா?” என்றான்.
“ஆங்?”
“அழுது முடிச்சுட்டியா? இல்ல இன்னும் மிச்சம் இருக்கா? இருக்குன்னா சொல்லு, அப்படி ஓரமா உட்காந்துக்குறேன்”
மீதமிருந்த கன்னத்தின் ஈரத்தை கூட ரோஷமாய் துடைத்துக்கொண்டாள்.
“ஹும்!!! என்ன பயம் உனக்கு? ஏன் நிமிர்ந்து பார்த்தா தான் என்ன ஆகிடும்?” அவன் கேட்க, மௌனித்தாள்.
“இப்போ நீ வீட்டுக்குள்ளயே இருக்குறதால, எந்த ஆம்பளைங்க கூடயும் பேசாம இருக்குறதால மட்டும் உன்னை இந்த உலகம் நல்லவன்னு சொல்ல போகுதா?”
“என்னை யாரும் நல்லவன்னு சொல்ல வேண்டாம்! அதேமாதிரி மோசமானவன்னும் சொல்லவும் வேண்டாம்!!
இப்போ நான் வெளில போறதும், எல்லாரோடவும் சகஜமா பேசுறதுமா இருந்தா, உங்க கண்ணுக்கெல்லாம் நான் எப்படி தெரிவேன்?
எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாம சிரிச்சு பேசிட்டு இருக்கா பாரு’ன்னு நினைக்க மாட்டீங்க?
ஏதோ ஒரு பையன் கூட இயல்பா பேசிட்டு இருந்தாக்கூட எங்க இவ மறுபடியும் ஓடிடுவாளோன்னு தானே தோணும் உங்களுக்கு?”
மூச்சு வாங்க கேட்டவளை நிதானமாய் பார்த்தவன், “உங்களுக்கு’ உங்களுக்குன்னு சொல்றியே! அது யாரு? என்னய்யா?” என்றான்.
“ம்ச்… நீங்கன்னா, நீங்க தானா? வீட்ல என் விஷயம் தெரிஞ்சவங்க!”
“ஓ! அப்படின்னா… உன் அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி! இவங்க தான்… இல்லையா?”
“ம்ம்ம்”
“இப்போ நீ வீட்டுக்குள்ள இருக்குறதால அவங்க எல்லாம் உன்னை நல்லவன்னு… அதாவது மோசமான பொண்ணு இல்லன்னு சொல்லுவாங்கன்னு நினைக்குற? அப்டிதானே?”
அவன் கேள்வியை கிரகித்து யோசித்தவளுக்கு, ‘இல்லை’ என்று தான் தோன்றியது.
“உன் மனசுக்கே தெரியும்! நீ சாகுறவரைக்கும் உன்மேல விழுந்த பழி போக போறது இல்லை! உன் வீட்டாளுங்க உன்னை சகஜமா சேர்த்துக்க போறதும் இல்லை!” என்றான் பளிச்சென…!
உண்மைதானே!? அவளுக்கு பிறகு பிறந்தது கூட வார்த்தையில் வதைக்கும்போது பெரியவர்களை என்ன சொல்ல?
“அவங்கக்கிட்ட நல்ல பேர் எடுக்குறேன், நம்பிக்கையை உண்டாக்குறேன்னு வீட்டுக்குள்ள கடந்தின்னா காலம் முழுக்க நீ இப்டியே தான் இருக்கணும்! ஒழுங்கா நாளைக்கு காலைல கிளம்பி இரு! சணல் கம்பனியை போய் பார்த்துட்டு வருவோம்!”
சொன்னதோடு அவன் சென்றுவிட, அவளும் இருமனதாய் உறங்க சென்றாள்.
அங்கே தங்கள் அறையில் அன்பழகனை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார் புவனா.
“உங்க மண்டைல எதுவும் கோளாரான்னு கேட்குறேன்! அவளை வெளில விடுறதே எனக்கு உடன்ப்பாடு இல்ல, இதுல தினம் அவன்கூட ஊரே பாக்க ஜோடி போட்டு வேற அனுப்பணுமோ?”
“கார்ல தானே டி…”
“என்ன கார்ல தானே டி? கார்ல போனா மட்டும் தெரியாம போய்டுமா? கம்பெனில எல்லாரும் கண்ணை கட்டிக்கிட்டா இருக்காங்க?”
“அட, இப்போ பழசெல்லாம் எதுக்கு?” மனைவியின் கரத்தை லேசாய் தொட்டதுமே, வெடுக்கென உதறியவர், “நான் கொஞ்சம் ஆற போடலாமான்னு யோசிச்சேன்! ஆனா, அது சரியா வராது… நாளைக்கே சம்பந்தி வீட்ல கூப்பிட்டு பேசி, ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வைக்கலாம்ன்னு சொல்ல போறேன்!” என்றார் தீவிரமாய்.
“இங்க பாரு புவனா, அவசரப்படாத!”
“நீங்க சும்மா இருங்க! வெள்ளம் தலைக்கு மேல போன பிறகு ஒன்னும் செய்ய முடியாது! இதுக்கு இப்போவே ஒரு முடிவு கட்டுனா தான் எனக்கு நிம்மதி” என்றவர் பொழுது எப்போதடா விடியும் என்று காத்திருக்க ஆரம்பித்தார்.