“அச்சோ லட்சுமி… இப்படியா உளறுவ… கடவுளே… அத்தை சிரிச்சாங்க.. மாமா சிரிச்சாங்க… இந்த ஈஸ் மாமா மட்டும் எந்த ரியாக்சனும் காட்டலையே… போச்சு போச்சு.. சும்மாயில்லாம ஈஸ் மாமா கூட போய் வாங்கிக்கிறேன்னு ஏன் சொன்ன…” என்று தனக்கு தானே வெகு நேரமாய் திட்டிக்கொண்டு இருந்தாள்.
இரவு வெகு நேரமாகியும் உறங்கவில்லை. ஈசனும் இன்னும் மேலே வரவில்லை. அப்போதே உண்டுவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்.
“திரும்ப வெளிய போறியா ஈசா..??” என்று மரகதம் கேட்டதற்கு, “வந்துடுவேன் ம்மா..” என்றுமட்டும் சொல்லி கிளம்பிச் சென்றவன், இன்னும் வரவில்லை.
“சரியான லூசு லட்சுமி நீ…” என்று உடையை மாற்றி, முகம் கழுவி கொஞ்ச நேரம் படிக்க உட்கார்ந்தவளுக்கு அதுவும் செய்ய முடியாமல் போக, சலித்தபடி அனைத்தையும் எடுத்துவைத்து விட்டு, கட்டிலில் வந்து விழுந்தாள்.
சரியாய் அவள் படுத்த நேரம், ஈசன் மேலே வரும் சத்தம் கேட்க, ‘ஈஸ் மாமா வந்துட்டாங்க…’ என்று கண்களை உருட்டியவள், அருகே இருந்த தலையணையில் முகத்தை மூடிக்கொண்டு உறங்குவது போல் படுத்துவிட்டாள்.
அறைக்குள் வந்த ஈசனோ, அவள் படுத்திருக்கும் விதத்தை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் நின்றான். குழந்தைகள் ஒளிந்து கொள்கிறேன் என்று கண்ணுக்கு முன்னாடியே எங்காவது நிற்குமே அதுபோல தான் லட்சுமியும், உறங்கிவிட்டேன் என்று காட்ட அப்படி ஒரு கோலத்தில் படுத்திருந்தாள்.
ஈசன் வருகிறான் என்றதும் எதுவுமே செய்யாமல் அப்படியே கட்டிலில் விழுந்த வேகத்தில் தலையணையை கொண்டு முகத்தை மட்டும் மூடிக்கொள்ள, அவள் அணிந்திருந்த நைட்டியோ, அவளுக்கே எதிரியாய் மாறி முட்டி வர ஒரு பக்கம் சுருண்டு மேலேறிக் கொள்ள, இவளோ ஆடாமல் அசையாமல் படுத்திருந்தாள்.
மாலை வரைக்கும் கூட அவள் மீது வருத்தத்தில் தான் இருந்தான். எத்தனை சொன்னாலும் இவளுக்கு புரியாது.. அப்படியென்ன பிடிவாதம் என்று. ஆனால் ஏனோ லட்சுமி ‘ஈஸ் மாமா கூட போய் வாங்கிக்கிறேன்…’ என்று சொன்ன பிறகு தான் அவனுக்குமே புத்தியில் உரைத்தது, இதுநாள் வரைக்கும் அவளை எங்குமே அழைத்து செல்லவில்லை என்று..
இப்போது லட்சுமி படுத்திருக்கும் விதத்தை பார்த்தால், ஈசனுக்கு மனதில் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த அவளின் மீதான வருத்தங்கள் காணமல் போக,
‘படுத்திருக்கா பாரு…’ என்று தனக்குள்ளே சொல்லி சிரித்தவன், சுருண்டு மேலேரிருக்கும் அவளது நைட்டியை கீழே இழுத்துவிட, அவன் இழுத்த வேகத்தில் என்னவோ என்று லட்சுமி வேகமாய் எழுந்தமர,
ஈசன் அவளைப் பார்த்து ‘மாட்டினியா…’ என்பது போல் சிரித்துவிட்டு குளியலறைக்குள் செல்ல, ‘ஷ்ஷ்….’ என்று தலையில் குட்டிக்கொண்டாள்.
‘இப்படியா படுப்ப…’ என்று முனங்கியபடி போர்வையை முழுதாய் இழுத்து போர்த்தி, படுத்துறங்க, ஈசனும் கொஞ்ச நேரத்தில் வந்து படுத்தவன், “லஷ்மி…” என்றழைத்தான்..
அவ்வளவு தான் லேசாய் அசைந்தால் கூட தன்னை கண்டுகொள்வான் என்று தோன்ற, அப்படியே படுத்திருந்தாள்.
“நீ தூங்கலைன்னு தெரியும் லஷ்மி.. திரும்பு…” என, அதற்கும் அவளிடம் அசைவில்லை.
‘எப்பவுமே ஈஸ் மாமாக்கு நடு ராத்திரில தான் பேச தோணும்…’ என்று எண்ணிக்கொண்டே படுத்திருக்க,
“இப்போ நீயா திரும்பலைன்னா நானே திருப்புவேன்…” என்று அவனும் விடாது பேச, உறக்கத்தில் தானாக திரும்பிப் படுப்பது போல் படுத்தாள்.
“இருமல் டானிக் குடிச்சா தான உனக்கு எதுவும் தெரியாது.. சும்மா படுக்கும் போது கூடவா தெரியாது…” என்று ஈசனது குரல் வெகு அருகே கேட்க, பட்டென்று கண்களை திறந்துவிட்டாள்.
ஈசன் முகம் வெகு அருகே தெரிய, தன்னப்போல் தலையை பின்னே நகர்த்தியவள் ஒன்றும் புரியாமல் பார்ப்பது போல் காண, அவனோ இன்னும் சிரித்தான்.
“இப்போ தூங்கினவள எழுப்பி ஏன் சிரிக்கிறீங்க..??” என்று கடுப்பாய் கேட்பது போல் கேட்க, “தூங்குன..?? நீ???” என்று கிண்டலாய் பார்த்தான்.
“ம்ம்.. நடுராத்திரில தான் பேச தோணும் உங்களுக்கு…” என்றபடி இன்னும் கொஞ்சம் தள்ளி அவன் முகம் பார்த்து படுக்க,
“இப்போ எதுக்கு நீ இப்படி தள்ளி தள்ளி போற…” என்றவன் அன்று போல் இழுத்து தன் மீது படுக்க வைக்க,
“அச்சோ மாமா விடுங்க…” என்று விலக, “அன்னிக்கு மட்டும் படுத்த…” என்று ஈசனும் விடாது பிடிக்க,
“ஹா.. அன்னிக்கு தான் டானிக் குடிச்சேன்ல…” என்று லட்சுமி உளறிட, ஈசனுக்கு இன்னும் இன்னும் சிரிப்பு வர, சிரிப்பில் அவன் உடல் குலுங்க, அவன்மீது படுத்திருந்தவளோ,
“ஆடாம படுங்க மாமா…” என்று சிணுங்கத் தான் செய்தாள்.
அவளது சிணுங்களில் மேலும் சிரித்தவன், லட்சுமியை இறுக்கிப் பிடித்து தன்மீது அழுத்த, “ஆ.. போங்க..” என்றபடி அவளோ தள்ளிப்போக,
“ரொம்ப பண்ணாத டி…” என்று மேலும் இறுக்கமாய் அவளை தன் மீது சாத்திக்கொண்டான்.
என்னவோ லட்சுமிக்கு இத்தனை நேரம் மனதில் இருந்த அலைப்புருதல் எல்லாம் போய், ஒரு அமைதியும் ஒரு நிம்மதியும் மனதில் தோன்றுவது போலிருக்க, இத்தனை நாள் அவளிடம் இருந்த தயக்கங்களும் காணமல் போக, மெல்ல தலையை மட்டும் உயர்த்தி அவன் முகம் பார்த்தவள்,
“நான்.. நான் எல்லாத்தையும் ரொம்ப க்ரிடிக்கல் பண்ணிக்கிட்டேனா…??” என்றாள் கேள்வியாய்.
அவளை பொருத்தமட்டில் இப்போது ஈசனிடம் அவளுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கட்டும்.. தான் அவனோடு இணைந்து வாழ்வதை பொருத்து தான் அவர்களின் மகிழ்வும் நிம்மதியும் என்றிருக்க, ஈசன் எப்படியிருந்தாலும் சரி என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.
எதற்கு மனதில் ஆசையையும் எதிர்பார்ப்பையும் வைத்துகொள்வானே, அது நடக்கவில்லை என்றதும் தவிப்பானே.. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவிட்டால் யாருக்கும் பிரச்னையில்லை அல்லவா.. ஆக அந்த எண்ணத்தில் இருந்தவளுக்கு, இந்த ஒரு கேள்வி தோன்றவும் கேட்டுவிட்டாள்.
ஆனால் ஈசனோ பதில் சொல்லாது அவள் முகத்தை தான் பார்த்தான். என்னவோ ஒரு ஆராய்ச்சி. அவனுக்கு புரியவில்லை இதற்கென்ன பதில் சொல்வதென்று.. ஆம் என்றால் எல்லா தப்பும் அவள் மீதென்பது போலிருக்கும். இல்லையென்றால் அனைத்தும் அவனது என்றாகிவிடும். ஆக என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாய் அவளை பார்த்திருக்க,
“ம்ம் சொல்லுங்க மாமா…” என்று ஈசனை ஊக்கியவள், “இது கம்பர்ட்டா இல்ல…” என்றபடி இறங்கிப்படுக்க, அவன் மறுக்கவில்லை.
“ம்ம் சொல்லுங்க…” என்று மறுபடியும் சொல்ல, “என்ன சொல்ல லஷ்மி…” என்றான்..
“நான் தான் எதையும் சரியா புரிஞ்சுக்கலைல..” என்றதும், “இல்லையே…” என்றான் வேகமாய்.
“இல்லையா????” என்று லேசாய் லட்சுமி கண்களை விரித்து கேட்க,
“முழுசா இல்லைன்னு சொல்ல மாட்டேன் லஷ்மி.. ஆனாலும் ரொம்ப இல்லை…” என்று ஈசன் சொல்ல, நேராய் படுத்திருந்தவன் முகத்தை அழுந்த பற்றி,
“இப்போ கூட மனசுல இருக்கிறத சொல்ல மாட்டேங்கிறீங்க…” என்றபடி, அவள் பக்கம் திருப்பினாள்.
“அப்படில்ல, நம்ம நினைக்கிற எல்லாமே லைப்ல நடக்காது.. ஆனா கொஞ்சம் நம்மளும் புரிஞ்சு வாழணும்…” என்று அவனுக்கும் சேர்த்தே சொல்ல,
“ம்ம்… நான் இனிமே எதுக்கும் சண்டை போடமாட்டேன் மாமா…” என்றாள் உறுதியாய்..
“ஹா… அப்படியா…” என்று ஈசன் கேட்கையில் அவனது புன்னகை எட்டிப் பார்க்க,
“ம்ம்ச் எப்போ பார் சிரிக்கிறீங்க… போங்க நான் பேசவேயில்லை…” என்று அவன் மார்பில் ஒரு அடி போட்டு வேகமாய் திரும்பிப் படுக்க, அவனோ அவளை திரும்பாமல் தடுத்து,
“இப்போதான சொன்ன சண்டை போடமாட்டன்னு…” என்றுசொல்லி அதற்கும் சிரித்தான்.
“பின்ன நீங்க இப்படி சிரிச்சா???”
“சரி சரி சிரிக்கல.. சொல்லு…”
“ம்ம்.. நீங்க எப்படி இருக்கீங்களோ அப்படியே இருங்க மாமா. நான் உங்கள ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணேன்.. ஆனா கொஞ்சம் சுயநலமா இருந்துட்டேன் போல.. அதான் எதையும் புரிஞ்சுக்க முடியல.. நீங்க சொன்னது எல்லாமே என் நல்லதுக்குன்னு எனக்கு இப்போ புரியுது மாமா.. அதுனால இனிமே நான் உங்கட்ட வேற எதுவும் எதிர்பார்க்க மாட்டேன் மாமா..” என்று அவள் மனதில் இருப்பதை எல்லாம் சொல்ல, ஈசனுக்கு தான் ஒருமாதிரி ஆகிவிட்டது.
லட்சுமி கொஞ்சம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான் தான். ஆனால் அதை அவன் வெளிப்படுத்திய விதம் தான் சொதப்பலானது. அவளும் ஒரு பிடிவாதத்தில் எல்லாம் செய்தாலும் இப்போது லட்சுமி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஈசனது மனதை அசைத்து பார்த்தது என்னவோ உண்மை தான்.
‘நீ எப்படி வேண்டுமென்றாலும் இருந்துகொள்.. நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன்.. நம்முடைய வாழ்வு அமைதியாய் நிம்மதியாய் இருந்தால் அதுவே போதும்…’
இதைத்தானே அவள் சொல்கிறாள்.. அப்படியானால் அவளுக்கு எத்தனையளவு நேசம் இருந்தால் இப்படி சொல்வாள் என்று நினைக்க, அவன் முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாய் லட்சுமியை பார்க்க,
“என்.. என்ன மாமா.. எதுவும் தப்பா சொல்லிட்டேனா???” என்று அப்போதும் அவள் மீது தவறென்பது போல் கேட்க,
“முதல்ல எப்பவுமே இப்படி யோசிக்கிறத விடு லஷ்மி.. நீ உன் மனசுல இருக்கிறத சொன்ன.. அதுல தப்பென்ன இருக்கு சொல்லு..” என்றான்.
“ம்ம்… இல்ல மாமா.. உங்களுக்கு எவ்வளோ வேலை, டென்சன்.. ஆனா அதெல்லாம் புரிஞ்சுக்காம என்னை நீங்க கவனிக்கல, என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலைன்னு.. நான் லூசு மாதிரி நடந்துக்கிட்டேன்…” என்றதும், ஈசனுக்கு என்னவோ தொண்டையை அடைத்தது..
வாழ்வில் தினம் தினம் தான் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அதற்காக தன்னை நம்பி வந்தவளை கவனிக்காமல் இருப்பதா.. அவள் மட்டும் கணவனை, அவனின் குடும்பத்தை எல்லாம் தன் பொறுப்பாக்கி பார்த்துக்கொள்ள வேண்டும், ஆனால் அவன் வேலையை காரணம் காட்டி அவளை தள்ளி வைப்பதா..
வெறும் பணமும் பெயரும் மட்டும் வாழ்வில் மகிழ்வல்லவே.. தனக்கென்று ஒரு பெயர் வேண்டும் என்று உழைப்பவன், தன்னை நம்பி வந்தவளை சந்தோசமாய் வைத்திருக்கிறேன் என்பதல்லவா ஒரு ஆணுக்கான பெரிய கௌரவம் என்று அப்போது தான் புத்தியில் உரைத்தது.
“மாமா…” என்று லஷ்மி அழைக்க,
“ம்ம்…” என்றவனுக்கு வார்த்தையே வரவில்லை.
“என்ன மாமா எதுவும் பேசலை…”
“ஹ்ம்ம்…” என்றவன் அவளது கரங்களை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்து அழுத்தியவன், என்ன நினைத்தானோ, “உன் மடியில படுத்துக்கவா…” என்று கேட்க, அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது..
“படுத்துக்கவா..” என்று மீண்டும் கேட்க, “ம்ம்” என்றவள் எழுந்து சாய்ந்தமர, ஈசனும் அவள் மடியில் தலை வைத்துக்கொண்டான்.
அதன் பிறகு ஈசன் பேசவேயில்லை.. மனதில் ஒரு பாரம் வந்து அமர்ந்துகொண்டது போலிருந்தது. இதுநாள் வரைக்கும் தான் செய்த எல்லாமே சரி என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு இப்போது லட்சுமி பேசிய வார்த்தைகள் மனதில் ஒரு பிசைவை கொடுக்க, அதை வெளிப்படுத்தும் வழித் தெரியாமல் அவளிடம் தஞ்சம் புக, லட்சுமியும் அவனது தலையை வருடிக்கொண்டே இருந்தாள்.
கொஞ்சம் நேரம் அப்படியே படுத்திருந்தவன், பின் அவள் முகம் பார்த்து, “நாளைக்கு ஷாப்பிங் போகலமா…” என, அவளோ புரியாமல் பார்த்தாள்.
“என்ன டி முழிக்கிற.. நீதான சொன்ன.. நாளைக்கு போகலாம்…”
“இல்ல மாமா வேணாம்.. உங்களுக்கு வேலையிருக்கும்…”
“உனக்கு போகணும்னு ஆசை இருக்கா இல்லையா..” என்று ஈசன் கொஞ்சம் அழுத்தமாய் கேட்க, முதலில் இல்லையென்று தலையை ஆட்டியவள், பின் ஆமாம் என்றாள்.