அறை முழுவதும் இருளில் இருக்க, கதவை திறந்ததால் அதன்வழி விசாலமாய் உள்புகுந்தது கதிரவனின் கால்கள்.
அடைத்திருந்த ஜன்னல்களை எல்லாம் ஒவ்வொன்றாய் திறந்து விட்டாள் கௌசி.
கட்டிலில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த புவனா, கௌசியின் வருகையை பார்த்தாலும் ஒன்றும் பேசவில்லை.
அறை முழுக்க வெளிச்சம் இருந்தது இப்போது. கட்டிலின் மறுகோடி ஓரத்தில் அமர்ந்தாள் கௌசி.
‘எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும்’ என்ற திட்டம் எதுவுமே அவளிடம் இல்லை.
‘ஆனால், பேச வேண்டும்’ என்ற நிர்பந்தம் இருக்க, தயக்கத்தை தாண்டி, “ம்மா?” என்று அழைத்தாள்.
அவளை ஏறிட்டு பார்த்தார் புவனா.
சரியாய் வாராத தலை, பொட்டில்லாத வாடிய முகம், கசங்கி போயிருந்த காட்டன் புடவை!!! இப்படியொரு தோற்றத்தில் ஒருநாளும் அவரை கண்டதில்லை அவள்!
“ம்மா? எழுந்து முகம் கழுவிட்டு வாங்க! நான் சூடா டீ போட்டு கொண்டு வரேன்! எழுந்துரிங்க!”
அவள் சொன்னதும், முரண்டு பிடிப்பார், கத்துவார், சொன்னதை செய்யமாட்டார் என அவள் எதிர்ப்பார்த்திருக்க, அவள் சொன்னதற்கு மறுபேச்சில்லாமல் அறையோடு இருந்த பாத்ரூமுக்குள் அவர் நுழைந்ததை கண்டு வியப்பேறி போனது அவளுக்கு.
சொன்னதை போல இஞ்சி ஏலம் தட்டிப்போட்ட சூடான டீயை அவள் கொண்டு வந்தபோது, தலையை வாரி கொண்டையிட்டுக்கொண்டிருந்தார் அவர்.
அவள் நீட்டியதை வாங்கிக்கொண்டு மீண்டும் கட்டிலில் சென்று அமர்ந்தவர், மிடறு மிடறாய் அதை உறிஞ்ச, கௌசிக்கு அவரை பார்க்கையில் ஏனோ பாவமாக தான் இருந்தது.
குடித்து முடித்ததும் அவளை பார்த்துக்கொண்டு அமர்ந்தார் அவர்.
“என்னமா?” அவர் பார்வை புரியாது வினவினாள்.
“என்கிட்ட பேச தானே வந்த? பேசு!” அவர் இப்படி சொன்னபோது அவள் பேச வந்தது கூட நாவோடு ஒட்டிக்கொண்டது.
“சும்மா தான் ம்மா! பேச ஒன்னும் இல்லை”
“ஒரு வாரம் பெத்தவ இருக்காளா செத்தாளான்னு பாக்காதவ! இன்னைக்கு அக்கறையா வந்து கவனிக்குறன்னா… இதை கூட புரிஞ்சுக்க தெரியாத மடச்சி இல்ல நானு! என்ன சொல்ல வந்தியோ சொல்லு பளிச்சுன்னு!” என்றார்.
அவர் சொன்னது நெஞ்சில் முள்ளாய் குத்தத்தான் செய்தது அவளுக்கு. அவர் சொல்வதும் உண்மைதானே?! இத்தனை நாள் கண்டுக்கொள்ளாமல் விட்டிருக்கக்கூடாதே!
சங்கடத்தில் அவள் அமர்ந்திருக்க, “அவன் கூட தான் வாழப்போறேன்னு சொல்லப்போற! அதானே?” என்றார் அவரே!
அதற்குமேல் தயங்காது, “ம்மா… நான் மாமா கூட இருந்தா தான்ம்மா சந்தோஷமா இருப்பேன்! ப்ளீஸ் ம்மா! என்னை அவர்கூட சந்தோசமா அனுப்பி வைங்களேன்!” கெஞ்சலாய் கேட்டாள் கௌசி.
“சரி போ!” என்றுவிட்டார் உடனே!
“ம்மா?” அதிர்ச்சியுடன் அவள் விளிக்க,
“போ’ன்னு சொன்னேன்!” என்றார்.
“ம்மா… நிஜமாவா?” முகத்தில் மலர்ச்சி வர கேட்டவளிடம், “இப்போ நான் மாட்டேன்னு சொன்னா நடக்க போறது எதுவும் இல்லன்னு ஆகிடுமா என்ன? என்னை மீறி செய்யுறதை செய்யத்தானே போறீங்க! என் பேச்சை மீறி நடக்குதுங்குற அசிங்கத்தை விட, நான் சரின்னு சொல்லிதான் நடக்குதுங்குற சின்ன நிம்மதியாவது எனக்கு இருந்துட்டு போகட்டும்” என்றார்.
அவள் முகம் சிறுத்துப்போனது.
“ம்மா? என்னமா நீங்க?”
“உனக்கு எதனால அவனை பிடிச்சுதுன்னு தெரில டி எனக்கு! நீ செஞ்சு வச்ச காரியத்துக்கு அவன் ஒருத்தன் தான் உன்னை குத்திக்காட்டாம சகிச்சுப்பான்னு நினைச்சு அவன் கூட போறேங்குறியோ?” மனதில் உறுத்திக்கொண்டே இருந்ததை கேட்டுவிட்டார்.
“நான் தப்பு செஞ்சுட்டேன் தான்ம்மா! இல்லன்னு மறுக்க மாட்டேன்! ஆனா அதுக்காகவெல்லாம் வேற ஆள் கிடைக்காம நான் இப்படி முடிவெடுக்கல!
நான் எந்த தப்பும் செய்யாம இருந்துருந்தாலும், என் மனசு மனோ மாமாவை தான் விரும்பிருக்கும்! எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ம்மா! எனக்கு மாமாவை விட பெட்டர்’ரான ஒரு ஆளை உங்களால கண்டிப்பா கொண்டு வந்து நிறுத்த முடியாது!” என்றவள்,
“அவர் பெரியம்மாவோட தம்பிங்குறதை தாண்டி, அவர்மேல வேற எதாவது பிரச்சனை இருக்கா உங்களுக்கு? ஒரு குறை சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்க!” என்று தில்லாய் சவால் போல கேட்க,
‘இருந்தால் தானே சொல்ல முடியும்!’ அமைதியாய் இருந்தார் புவனா.
என்னை யாருக்கு கட்டிக்குடுத்தாலும் நான் நிம்மதியா சந்தோசமா வாழ்றது தானே உங்களுக்கு முக்கியம்? என் நிம்மதி, சந்தோஷம், வாழ்கை எல்லாமே என் மாமா தான்ம்மா!” என்றாள்.
பெரிதாய் மூச்சை இழுத்துவிட்டார்…
சிலநொடிகள் மௌனம்…
கண்கள் லேசாக பனித்திரையிட்டதை போல தோன்றியது…
கௌசி உற்று கவனிக்கும் முன்னே முகம் மாற, “சீக்கிரமே நல்ல நாளா பார்க்க சொல்லு! தள்ளிப்போட வேண்டாம்!” என்றார்.
வதனம் விகாசிக்க, “ம்மா? நிஜமா தானே? உங்களுக்கு கோபம் இல்ல தானே?” மீண்டும் மீண்டும் இதையே கேட்டு அவர் ‘இல்லவே இல்லை’ என சொன்னபிறகே விட்டாள் அவள்.
மிகவும் பிரயத்தனப்பட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், கதற வேண்டும்… நாட்கள் எடுக்கும்… எத்தனை விதமான போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றெல்லாம் சற்று நேரம் முன்பு வகைவகையாய் யோசித்துக்கொண்டு வீடு வந்தவளுக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி மனதை சிறகின்றி பறக்க வைத்தது.
இத்தனை எளிதில் ஒத்துக்கொள்வார் என அவள் கற்பனை கூட செய்திருக்கவில்லை.
அது கொடுத்த உற்சாகம் அவள் துள்ளலை கூட்ட, லேசாகி போன மனதுடன், “இப்போதான் ம்மா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” என்றாள்.
மகளின் மகிழ்ச்சி அவள் முகத்திலேயே தெரிய, மெலிதாய் வளைந்த இதழ்களுடன், ஒன்றும் சொல்லாமல் அவள் உச்சியில் கரம் வைத்து ஆட்டினார் ஆதூரமாய்.
“ம்மா? உங்களுக்கு என்னை பிடிக்குமா?”
“இதென்ன கேள்வி?”
“நான் எவ்ளோ தப்பு பண்ணிருக்கேன்! உங்களுக்கு கஷ்டம் குடுத்துருக்கேன்! அப்பறம் எப்படி என்னை பிடிக்கும் உங்களுக்கு?”
“பிள்ளைங்க தப்பு பண்ணுன்னா பெத்தவங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்! கண்டிப்போம், அடிப்போம்! அதுக்காக வெறுத்துடுவோம்ன்னு எப்படி நினைக்குற நீ?” எதிர்கேள்வி கேட்டார் புவனா.
“அப்போ நீங்க பெத்த பிள்ளைன்னா தப்பு பண்ணாலும் வெறுக்க மாட்டீங்க! இதே வேற ஒருத்தர் பெத்த பிள்ளைன்னா காரணமே இல்லாம வெறுப்பீங்களா?” அவள் தலையை சுற்றி மூக்கை தொட வருவது புரிந்துப்போனது அவருக்கு.
“யாரோ பெத்த புள்ளைய நான் எதுக்கு வெறுக்க போறேனாம்?”
“மாமாவை நீங்க வெறுக்கல? எப்பப்பாரு திட்டல?”
வெடுக்கென்று கௌசி கேட்டுவிட, “வெறுத்தேன் தான்… ஆனா அந்த வெறுப்பு கோபம் எல்லாம் மனோகரால இல்ல… எல்லாம் உன் அப்பன், ஆத்தா மேல இருந்த கோபம்!!!” என்று அவர் சொல்ல,
“என்னம்மா சொல்றீங்க?” என்று திகைத்தாள் கௌசி.
“உண்மையை தான் சொல்றேன்! இந்த மனோ என்ன எனக்கு முன்னுக்கு பின்ன விரோதியா சொல்லு?”
“அப்பறம் ஏன்ம்மா?” என்றாள்.
புவனாவின் உள்ளக்கிடங்கில் கேட்ப்பாரற்று கிடந்த குமுறல்கள் எல்லாம் இன்று உடைப்பெடுக்க ஆரம்பித்தது.
“நான் உன் அப்பாவுக்கு முறை பொண்ணு! சின்ன வயசுல இருந்தே அன்பு தான் உன் புருஷன், நீதான் அவனுக்கு பொண்டாட்டின்னு சொல்லி சொல்லியே வளர்த்துட்டாங்க!
உங்க ஆத்தா என்னை எப்பவுமே ‘மருமகளே’ன்னு தான் கூப்பிடும்! நானும் உங்க அப்பாவை பாக்குற பார்வைல இருந்து பேசுற வார்த்தை வரைக்கும் மனசுல புருஷன்னே நினைச்சுருந்தேன்!
ஆனா திடீர்ன்னு ஒருநாள் வந்து அன்புக்கு வேற இடத்துல கல்யாணம் பேசிட்டாங்களாம்ன்னு சொன்னாங்க! எனக்கு எப்படி இருந்துருக்கும்? விவரம் தெரிஞ்சதுல இருந்து மனசுல போட்டு பதிய வச்சதை ஒரேநாள்ல அழிச்சு போடணும்ன்னா முடியுமா?
உங்க ஆத்தாக்கிட்ட எங்க அப்பா நியாயம் கேட்டதுக்கு, எங்கயோ போனானாம்… பொண்ணை பார்த்தானாம்… பார்த்த நிமிஷம் பிடிச்சு போச்சாம்… கட்டுனா அவளை தான் கட்டுவேன்னு நிக்குறானாம்!!
புள்ளையை மீறி ஒன்னும் செய்ய முடியாதுன்னு ஒரே பேச்சா சொல்லிட்டாங்க!
என் அழுகையோ, வருத்தமோ யாருக்குமே பெருசா தெரியல!
உங்க அப்பா சந்தோசமா கல்யாணம் கட்டிக்கிட்டாரு! நான் அவர் கண்ணுலேயே படாம இருந்தேன்! கொஞ்ச கொஞ்சமா அவரை மறக்கவும் முயற்சி செஞ்சுட்டு இருந்தேன்!
அழுகை, வருத்தம் எல்லாம் போய் அவர் மேல கோபம் அப்போ அதிகமா வந்துச்சு! ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை குடுக்குற மாதிரி நடந்துக்கிட்டு இன்னொரு பொண்ணை கட்டிக்கிறது என்னை ஒருத்தவரை ரொம்ப பெரிய தப்பு!
அத்தனை வருஷமா ‘மருமக மருமகன்னு’ ஆசைக்காட்டிட்டு இப்போ வேறொருத்தி வந்ததும் என்னை ஒரு பொருட்டா கூட மதிக்கல உங்க ஆத்தா! ரெண்டு பேரு மேலயும் நான் செம்ம கோபத்துல இருக்கும்போது தான் அந்த திடீர் சாவு…!
அந்த பொண்ணுக்கு ஏற்கனவே ஏதோ வியாதி இருந்து கவனிக்காம விட்டுருப்பாங்க போல! ஒரே வருஷத்துல போய்ட்டாங்க! ஆனா, அவங்க செத்தப்போ மனசுல ஒரு ஓரத்துல கூட ஒரு துளியா கூட நான் சந்தோசப்படல தெரியுமா? உண்மையா சொல்லனும்ன்னா வாழ வேண்டிய வயசுல போயிட்டாங்களேன்னு ரொம்ப வருத்தமா தான் இருந்துச்சு!
இது நடந்து ஆறு மாசம் கூட ஆகல! வந்தாங்க பாரு எங்க வீட்டுக்கு உங்க ஆத்தாளும் அப்பனும் நீலிக்கண்ணீர் வடிச்சுக்கிட்டு…
என் புள்ளைக்கு பிறகு வம்சம் இல்லாம போய்டும்! என் தலைமுறையே உன் வாக்குல தான் இருக்கு, அது இதுன்னு பேசி எங்க அப்பாக்கிட்ட என்னை கட்டி வைக்க சம்பந்தம் வாங்கிட்டாங்க!
எனக்கா… ஆத்திரம்ன்னா ஆத்திரம்!!!
என்னை வேண்டாம்ன்னு சொல்லி வீசிவிட்டு போயிட்டு, இப்போ திரும்ப வந்து என்னையே கேட்குறீங்களேன்னு… அப்பாக்கிட்ட எவ்வளவோ கெஞ்சுனேன், வேண்டவே வேண்டாம்ன்னு!!!
பொண்ணுங்க பேச்சுக்கு மரியாதை இருக்குமா என்ன? செவுல்லையே நாலு விட்டு கல்யாணம் முடிச்சு விட்டாரு! வந்த நாள் தொட்டு, இது அவ பண்ற மாறி இல்ல… அது அவ செய்யுற மாறி இல்லை… அவளா இருந்தா இப்படி… அவளா இருந்தா அப்படி….
அய்யயோ!! நல்லா வாழனும்ன்னு வந்த என் பொறுமையை ரொம்பவே சோதிச்சுட்டாங்க உங்க ஆத்தா! நானும் அதுக்கு பிறகு அப்படியே மாறிட்டேன்!!!” மூச்சு விடாமல் புலம்பி தள்ளினார் அவர்.
சிறிது இடைவெளி விட்டு,
“வாழ்க்கைல ரெண்டாவதா போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணை கட்டிக்க ஒரு ஆம்பளை வந்தா அவனை தியாகியா பாக்குறது! ஆனா, பொண்ணுங்கக்கிட்ட சம்மதமான்னு கூட கேட்கிறது இல்லை.
இன்னொருத்தி கூட வாழ்ந்தவரு! இன்னொருத்தியோட புருஷன்!
உங்க அப்பாவை கட்டுன பிறகு இந்த நினைப்பு என் மனச விட்டு போக எத்தனை வருஷமாச்சுன்னு தெரியுமா உனக்கு?
நான் செய்யுறதுல எல்லாம் ‘அவளை’ தேடுனாரு உங்கப்பா! அவளோட வாழ்ந்த அவர் வாழ்க்கையை மறக்கடிச்சு, என்னை மட்டுமே நினைக்க வைக்க எனக்கு கிட்டத்தட்ட பத்து வருஷம் தேவைப்பட்டுச்சு! அந்த அளவுக்கு ‘அவ’ ஆழமா அவர் மனசுல இருந்தா!
ஒருவழியா அவர் மனசுல நான் வந்துட்டேன்னு சந்தோஷப்பட்ட சமயம், வந்து நிக்குறான் வாசல்ல…
அப்படியே அவளை உரிச்சு வச்சு!!!
எனக்கே மனோகரை பாக்கும்போது அந்த பொண்ணு நினைப்பு வரப்போ, உங்க அப்பாக்கு வராமையா இருக்கும்? விட்டு போச்சுன்னு நினைச்ச சொந்தம் இவன் மூலமா தொடருதுன்னா என்னால எப்படி சும்மா இருக்க முடியும்?
அவன் அவர் கண்ணுல படாம இருந்தா தேவலாம்ன்னு நினச்சு தான் எந்நேரமும் திட்டுனேன்! அவனே இங்கிருந்து போயிடுவான்னு நினைச்சேன்! நான் நினைச்சது நடக்கலங்கும்போது வர கோபம், ஆற்றாமை… எனக்கு வேற எங்க காட்டுறதுன்னு தெரியல!
உங்க ஆத்தாவும் அவனுக்கு சப்போர்ட்டா இருக்க, எனக்கு அவனை இங்கிருந்து அனுப்பணும்ன்னு வெறியே வந்துச்சு!
அவனை பாக்கும்போதெல்லாம் நான் ‘ரெண்டாந்தாரம்’ இன்னொருத்தி வாழ்கையை, அவ விட்டுட்டு போய்ட்டதால மட்டுமே அவ வாழ்கையை நான் இப்போ வாழ்ந்துட்டு இருக்கேன்னு தோணும்…
ஒருவேளை அவ உயிரோட இருந்துருந்தா எனக்கு இந்த வாழ்க்கை அமைஞ்சுருக்காது தானே?
என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு இன்னொருத்தியை கட்டுனவன், திரும்ப ‘அவ இல்லாததால இவ’ன்னு என்னை கட்டுவானாம்! இதென்ன நாடகமா? அவருக்கு பதில் இவர்’ன்னு போட!?
எப்படியோ அவன்{மனோ} என் வாழ்க்கைல என் கண்ணுலேயே படாம இருக்கனும்ன்னு நினைச்சு இப்போதான்… ஒருவழியா அனுப்பிட்டோம்ன்னு நிம்மதியானானேன்!
அவ்ளோதான்.. எல்லாம் முடிந்துன்னு நினைச்சேன்!!!
இதோ, இல்லன்னு நீ சொல்ற!!!”
முகத்தை அழுந்த துடைத்தவர், “நான் வாழ்ந்து முடிக்க போறேன்… நீ இப்போதான் வாழ்க்கையை ஆரம்பிக்கப்போற! பிடிச்ச மாறி பிடிச்சவனோட ஆரம்பி! வேற என்ன சொல்றது?” என்றவர்,