“அட அட… என்ன தம்பி நீங்க? சொன்னா கேட்கவே மாட்டேன்குறீங்களே? என்ன செய்யணும்ன்னு வாயால சொன்னா போதாதா? நாங்கல்லாம் என்னத்துக்கு இருக்கோம்?” வேலையாட்களில் ஒருவர் மனம் கேளாது கேட்டுவிட,
“அதனால என்னண்ணே? எனக்கு என் கையால செஞ்சா ஒரு திருப்தி! நீங்க மிச்ச வேலையை பாருங்க நேரமாச்சு!” என்றான் மனோகரன், விரித்திருந்த சிகப்பு கம்பளத்தை லாவகமாய் சுருட்டிக்கொண்டே.
அடுத்து மண்டபம் முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்த பலவண்ண மலர்களை கழட்டி எடுத்துக்கொண்டிருந்த ஆட்களிடம் மேலும் சில வேலைகளை நியாகப்படுத்திக்கொண்டிருந்தான் மனோ.
எங்கிருந்தோ வேகமாய் வந்த அன்பழகன், “என்ன மனோ நீ? இதெல்லாம் செஞ்சுட்டு இருக்க?” என்று கடிந்தவர், சுற்றி இருந்த ஆட்களிடம்,
“டேய், இதுக்கு தான் நான் உங்களுக்கெல்லாம் சம்பளம் குடுக்குறேனா?” என்றார் அதட்டலாய்.
மனோகர், “அவங்களை திட்டாதீங்க! நான் தான் இதெல்லாம் செய்யுறேன்னு சொன்னேன்!” என்றான்.
“இன்னைக்கு ஒருநாள் நீ ஒன்னும் செய்ய தேவையில்லை! ட்ரெஸ்ஸ பாரு, கசங்கிப்போச்சு! நீ போய் ரூம்ல புது துணி மாத்திக்க! வீட்டுக்கு கிளம்பனும்!” என்றார்.
“சரி!!!” என்றான் அவன்.
“இன்னமும் மொட்டை மொட்டையா பேசாத! உரிமையா முறை வச்சு பேசு!” என்று சிநேகமாய் மனோவின் தோள் தட்ட, “சரி மாமா!” என்றவனை,
“டேய், அத்தான்’டா நானு!” என்று திருத்தினார் அன்பழகன்.
“நீங்க எனக்கு மாமா தான்! மாமனாரை ‘மாமா’ன்னு தானே சொல்றது வழக்கம்!” என்று கேட்டவன் நிற்காமல் அறைக்கு நகர்ந்துவிட,
‘நீ எனக்கு என் மனைவி வழியில் மட்டுமே சொந்தம்!’ என்று அன்பழகனுக்கு உணர்த்தியது மனோவின் வார்த்தைகள். ஆனால், அது பெரிதாய் அவரை பாதிக்கவில்லை. சொந்தம் விடாமல் நிற்பதே போதுமானதாய் இருந்தது.
மாடியில் இருந்த அறைகளில் இறுதியாய் இருந்த ஒன்றின் கதவை தட்டாமலே திறந்துக்கொண்டு உள்ளே சென்றான் அவன்.
‘இனிமேல் எதற்கு தட்டவேண்டும்?’ என்ற எண்ணம் வர, வெட்கம் போல ஏதோ ஒன்று எட்டிப்பார்த்தது அவன் வதனத்தில்.
உள்ளே சென்றதும், அந்த சிறு அறையில் இருந்த இரும்பு கட்டிலில் தன்னை குறுக்கிக்கொண்டு நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள் கௌசல்யா.
நின்று நிதானமாய் தலை முதல் கால் வரை விசரமில்லாமல் ரசித்தான் அவளை.
பிரம்மமுகூர்த்ததில் தாலி கட்டவேண்டும் என்று புவனா சொல்லியிருக்க, குடும்பத்து ஆட்கள் மட்டும் குலதெய்வ கோவிலுக்கு சென்று அம்மன் முன்னே பழைய தாலியை உண்டியலில் செலுத்திவிட்டு, புது தாலியை கட்ட செய்தனர்.
தாலி கட்டிய கணம் முதல் மனோவின் கரத்தை விடாமல் இறுக்கி பிடித்துக்கொண்டாள் கௌசல்யா. யார் எத்தனை கேலி செய்தும் விடாமல் அழுத்தமாய் பற்றியிருந்தவளை பார்க்கையில் மையல் பெருகியது அவனுக்கு.
காலையில் மண்டபத்தில் வரவேற்ப்பு இருக்கவே, தாலி கட்டி முடிந்ததும் நேரே மண்டபம் வந்தனர். அதன்பிறகு நேரம் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடியது என்றுதான் சொல்ல வேண்டும்!
மகனுக்கு நிச்சயம் செய்துவிட்டு மகளுக்கு திடீர் திருமணம் என்பதால், காரணம் கேட்பவர்களுக்கு கதை சொல்லி மாளவில்லை.
‘மனோவுக்கும் கௌசிக்கும் ஒருத்தரையொருத்தர் பிடித்துப்போனதால் திருமணம் செய்ய ஜாதகம் பார்த்தபோது, அவளுக்கு உடனே திருமணம் முடிக்க வேண்டும் என்று இருந்ததால், அவசரமாக செய்ய வேண்டியதாய் போயிற்று!’
பேசிவைத்துக்கொண்டு இதையே வந்த எல்லோருக்கும் சொன்னனர் அன்பழகனும் புவனாவும்!
ஆனால், இதையே மதனின் சம்பந்தி வீட்டாட்களிடம் சொல்லும்போது தான் சங்கடமாய் இருந்தது புவனாவுக்கு.
அவர் சங்கடம் கூட அனாவசியம் என எண்ணும்படி, “பொண்ணுங்க விருப்பம் என்னனு கேட்க்காம கல்யாணம் பண்ண நம்ம என்ன கற்க்காலத்துலையா இருக்கோம்? மனோ ரொம்ப தங்கமான பையன்! அவனுக்கே நீங்க கௌசியை குடுத்துருக்குறது சந்தோஷம் தான்!” என்ற சியாமளா,
“அத்தை!! இந்தாங்க கூல்ட்ரிங்க்ஸ்” என்று ஒரு தட்டை கையில் ஏந்திக்கொண்டு வந்து நின்றாள் ஆர்த்தி.
“புடவைல பார்க்க பெரிய பொண்ணா இருக்காளே?” ஆர்த்தியின் தோற்றத்தை மெச்சிக்கொண்டே, “படிப்பு முடிய எத்தனை வருஷம் இருக்கு?” என்றார்.
புவனா, “ரெண்டு வருஷம்!” என்று சொன்னபோது, இரு அன்னைமார்களும் வெளியே வார்த்தை விடாமல் உள்ளுக்குள் லேசாக முடிச்சு போட்டு வைத்தனர்.
சொந்தங்கள், தெரிந்தவர்கள், தொழில் வட்டாரங்கள் என ஏகப்பட்ட பேர் வந்து குவிந்தவர்.
‘திறமையான பையனை வெளியே விடாம வீட்டுக்குள்ளயே புடிச்சு போட்டுட்டியே ப்பா!’ என இதையே பலவிதமாய் சொல்லிவைக்க, அன்பழகனுக்கு பெருமையாய் இருந்தது.
‘பாரு, என் முடிவு எவ்ளோ சரின்னு!’ என்பதை போல கெத்தாய் மீசையை முறுக்கிக்கொண்டு சுற்றியவர், புவனாவை அவ்வப்போது கீழ்ப்பார்வை பார்த்து வெறுப்பேற்றவும் தவறவில்லை.
புவனா சிரித்த முகமாய் இருந்தார். எல்லோரையும் வரவேற்று உபசரித்தார். மகள் திருமணம் என்ற பூரிப்பில் மண்டபம் முழுக்க வளைய வந்தார். ஆயினும், மனோகரிடம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.
“அவனை வீட்டை விட்டு அனுப்பணும்ன்னு சொல்லிட்டு எதுக்கும்மா அவனுக்கே கௌசியை கட்டி வைக்குறேங்குற? பழசெல்லாம் முடிஞ்சுதுன்னு தானே சொல்லுவ?” மதன் கூட புரியாமல் கேட்டபோது,
“அவர் உன் தங்கச்சி புருஷன்… மரியாதை குடுக்கலைன்னாலும், அவமரியாதை பண்ணக்கூடாது!” என்று அவர் கண்டிப்பாய் சொல்லியிருக்க,
‘எவன் எப்டி போனா எனகென்ன? என் கல்யாணம் நடந்தா சரி!’ என விட்டுவிட்டான் அவனும்.
வந்தவர்கள் எல்லாம் மதிய விருந்து முடிந்து கொஞ்சகொஞ்சமாய் கிளம்ப, நல்லநேரம் நான்கு மணிக்கு மேல் தான் இருப்பதால், அதுவரை மண்டபத்திலேயே வீட்டாட்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டிருந்தார் அன்பழகன்.
புவனா மட்டும் இரவு விருந்து செய்ய வேண்டும் என்று வீட்டுக்கு சென்றுவிட்டிருந்தார்.
அப்படி ஓய்வெடுக்க சொன்னவன் வேலை செய்யவும் தான் அவனை அதட்டி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைத்திருந்தார் அன்பழகன்.
அறைக்குள் வந்தவன், அமைதியாய் உறங்குபவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து வைக்க, உள்ளூர எழுந்த உந்துதலில் அசைந்தாள் பெண்ணவள்.
சத்தமில்லாமல் எழுந்தவன், புது உடையை எடுத்துக்கொண்டு அவசர குளியல் போட, அவன் திரும்பி வந்தபோது எழுந்து அமர்ந்திருந்தாள் கௌசி.
“ம்ச்! வேண்டாம் மாமா! சாயங்காலம் ஆகப்போது! இன்னும் கொஞ்ச நேரம் தானே! நைட்’டே தூங்கிக்குறேன்!” என்றவள் சொல்ல,
‘ஆங்?’ என புருவம் உயர்த்தியவன், பின்னே நமட்டு சிரிப்புடன், “சரிதான்…” என்றான்.
அவன் சிரிப்பு புரியாமல், “என்ன மாமா?” என்றவளை, “லேசா குளிச்சுட்டு வேற புடவை கட்டி ரெடி ஆகு! வீட்டுக்கு கிளம்புறோம்” என்று பாத்ரூமுக்குள் அனுப்பி வைத்தான் அவன்.
நல்லநேரத்தில் அன்பழகனின் வீடு வந்து சேர்ந்தனர் மணமக்கள்!
ஐந்து சுமங்கலி பெண்கள் ஆரத்தி எடுக்க, தன் வீட்டுக்கு மறுவீடு வந்திருந்தாள் கௌசி.
மனோவுக்கு இது முதல்முறை! உரிமையாய் வீட்டுக்குள் நுழைந்து கூடத்தில் உள்ள மெத்தை நாற்காலியில் பலர் உபசரிக்க அமர்வது!
இதற்குமுன் சியாமளா அமர சொன்னார் தான்! அது அவன் வேண்டாவெறுப்பாய் செய்தது.
இப்போதோ வீட்டின் மருமகன்!!!
சிரிப்பாய் வந்தது அவனுக்கு…
கௌசி அவனை விட்டு இம்மியும் நகரவில்லை.
வயது மூத்த பெண்கள் எல்லாம் கேலி பேச, வெட்கத்திலும் கூச்சத்திலும் நெளிந்தாலே ஒழிய, அதுபொருட்டு கூட அவனை விட்டு நகரவில்லை அவள்.
அவள் நெருக்கத்தில் எதை உணர்ந்தானோ, மனோகரே அவள் கரத்தை எடுத்து தன் மடியில் வைத்து பிடித்துக்கொண்டான்.
கேலி செய்து கேலி செய்து ஓய்ந்து போனவர்கள் சற்று இளைப்பார, விழா நாயகர்கள் பேசிக்கொள்ள நேரம் கிடைத்தது.
வேண்டுமென்றே அவளை சீண்ட, “அதென்ன உன் பிரன்ட் காயத்ரி ‘நான் சொன்ன மாறியே புடிச்சுட்ட, கெட்டிக்காரி’ன்னு சொல்றா உன்னை பார்த்து?” என்றான்.
“ஏய்…. பொய் சொல்லாத! சொல்லு” என மிரட்டல் போல அவன் கேட்க, இவள் மறுக்க என சுற்றி இருந்தோர் கவனத்தில் பதியாமல் சிறுபிள்ளைகள் போல இருவரும் சிரித்து விளையாடுவதை கண்டு புவனாவுக்கு மனம் லேசானது.
சாமி மாடத்தில் விளகேற்ற சொல்லி புதுமக்களை அனுப்பி வைத்தனர்.
பூஜை அறையில் தெய்வங்களோடு கலந்து தனபாக்கியத்தின் போட்டோவும் இருக்க, முணுக்கென்று கண்களில் நீர் சுரந்தது கௌசிக்கு.
“நம்ம கல்யாணம் கட்டிக்கனும்ன்னு ஆத்தா தான் ரொம்ப ஆசைப்பட்டுச்சு! ஆனா, என்னாலேயே… அவங்க…” மெலிதாய் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு அவள் சத்தமின்றி விசும்ப,
“மண்டைலையே கொட்டுவேன் பாரு! அவங்க என்ன அல்ப்பாயுசுலயா போனாங்க? எண்பது வயசுல எல்லாம் அனுபவிச்சுட்டு தானே போனாங்க! நீ ஒன்னும் பண்ணாம இருந்துருந்தா மட்டும் இன்னும் இருவது வருஷம் இருந்துருப்பாங்களா?” என்றவன்,
“கண்ணைத்துடை!” என்றான் அதட்டலாய்.
அவன் அதட்டல் நன்றாய் வேலை செய்தது. அத்தோடு அழுகையை விட்டவள், விளக்கேற்றி மௌனமாய் கைக்கூப்பி நின்றாள்.
கௌசியை சமாதனப்படுத்த அப்படி சொல்லிவிட்டாலும் தனபாக்கியத்தின் இழப்பு, இந்த நேரத்தில்…. இந்த கணத்தில்… அவனையும் வாட்ட தான் செய்தது.
‘நான் நல்லா இருக்கனும்ன்னு நினைச்ச ஜீவன், நல்லா இருக்குற சமயம் அதை பார்க்க இல்ல!’ வருத்தமாய் எண்ணிக்கொண்டான்.
தனபாக்கியத்தின் நிழலுருவை பார்த்துக்கொண்டே நின்றவனின் கரம் கோர்த்தவள், “நான் ரொம்ப லக்கி… இல்ல மாமா? எனக்கு நீங்க கிடைச்சுட்ட மாதிரி வழி தவறி போற எல்லா பொண்ணுங்களுக்கும் யாரோ ஒருத்தர் கிடைக்கிறது இல்லையே?” என்றாள்.
“எதுக்கு கிடைக்கணும்?” என்றான் அவன்.
“மாமா?”
“இல்ல எனக்கு புரியல! இப்போ நான் இல்லன்னா என்ன? உன் வாழ்கை அதோட முடிஞ்சுடும்ன்னு நினைச்சியா? இந்த உலகத்துல யார் இல்லன்னாலும் யாரோட வாழ்கையும் நிக்காது கௌசி!
அம்மாவும் அப்பாவும் என்னை அவ்ளோ பாசமா வச்சுருந்தாங்க! அக்கா இருந்தவரை அவ ஊட்டினா தான் நான் சாப்பிடுவேன்! அவ்ளோ செல்லம்! ஒரு நாள் எல்லாருமே என்னை விட்டுட்டு போனாங்க!
அதனால நான் என்ன ஆகிட்டேன்? என் வாழ்கை முடிஞ்சுடுச்சா என்ன?
இங்க யாரும் யாரை சார்ந்தும் இல்லை! யார் இருந்தாலும் இல்லன்னாலும் வாழ்கை அதுபோக்குல நம்மள கொண்டு போய்க்கிட்டு தான் இருக்கும்!
யாரோ ஒருத்தர் வந்து தான் நம்ம வாழ்க்கையை காப்பாத்தனும்… அந்த ஒருத்தர் இருக்குறதால தான் நம்ம வாழ்கை ஓடுதுன்னு நினைக்குறதே என்னை கேட்டா தப்பு!!!
என்னடா இந்த மாமன் எப்பப்பாரு சித்தாந்தம் பேசி கொல்றானேன்னு நினைக்காதே! பொறுமையா யோசிச்சு பார்த்தா நான் சொல்றது கூட சரின்னு தான் தோணும் உனக்கு!” என்றவன்,
“இப்போ வா! எல்லாரும் நமக்காக வெயிட் பண்றாங்க!” என்றுவிட்டு அவளை கையோடு அழைத்து சென்றான்.
இரவு தம்பதிகளுக்கு மாமியார் வீட்டு விருந்து பரிமாறப்பட்டது.
தலைவாழை இலை விரித்து தம்பதிகளுக்கு இருபக்கமும் ஆட்கள் அமர்ந்திருக்க, முதலில் இனிப்பில் இருந்து ஆரம்பித்த வகைகள் பின்னே நீண்டுக்கொண்டே சென்றது.
மனோகரின் இலையில் குறைய குறைய வைத்துக்கொண்டே இருந்தார் புவனா. ஆனால், ஒரு வார்த்தை பேசவில்லை.
எப்படி பேச வரும்? இத்தனை வருடங்கள் மதிக்காமல், ‘ச்சீ போ’ எனும்படி நடத்திவிட்டு திடீரென ‘சிரித்து பேசு’ என்றால் முடியுமா?
நாட்கள் நகர நகர எல்லாம் மாறும்…!
இதற்குமேல் ஒருபருக்கை கூட உள்ளே தள்ள முடியாது என்ற நிலை வந்தபோது, இலையின் அருகே பாத்திரத்தை தூக்கிக்கொண்டு வந்த புவனாவை பார்த்து கலவரத்துடன்,
“போதும் போதும் அத்தே! இதுக்குமேலன்னா என் வயிறு வெடிச்சுடும்!” என்று மனோகரே கதற, வாய்விட்டு சிரித்தனர். புவனாவுக்கும் சிரிப்பு தாளவில்லை.
சிரித்தாலும், அவன் ‘அத்தை’ என்றழைத்தது இதமாக இருந்தது அவருக்கு.
கழுத்து வரை உண்டுவிட்டு நடக்க முடியாமல் நடப்பவனை கண்டு வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் கௌசி.
கடுப்பானவன், “ரொம்ப சிரிக்காத! அப்பறம் கஷ்டப்படுவ” என்று மிரட்ட, மேலும் மேலும் சிரித்தாள் அவள்.
‘எந்த ஆக்ஷனும் எடுக்க முடியாத சுச்சுவேஷன்ல இருக்கேன்’ என்பதைப்போல கடுப்பை விழுங்கிக்கொண்டு கையை கழுவிவிட்டு சென்றவனை பார்த்து கண்களில் நீர் வரும் அளவுக்கு கௌசி சிரிக்க,
“ஏய், இந்தா… அவனுக்கு துண்டை குடுத்துடு!” என்று ஒரு டவலை அவளிடம் நீட்டிக்கொண்டு நின்றாள் ஆர்த்தி.
கௌசியின் சிரிப்பு அப்படியே உறைந்தது.
“யாருக்கு இந்த துண்டு!?”
“அவனுக்கு தான்!” என்று அவள் சொல்லிமுடிக்கையில் அவள் வாயின் மேலே ‘சொத்’ என அடித்துவிட்டிருந்தாள் கௌசல்யா.
“அவர் என் புருஷன்… உனக்கு அத்தான்… இன்னொரு முறை இப்படி மரியாதை இல்லாம பேசின? பாக்குற இடத்துல எல்லாம் அடிப்பேன்!” என்று விரல் நீட்டி மிரட்டியவள், அவள் கரத்தில் இருந்த துண்டை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு செல்ல, ‘ஆ’வென வாயை பிளந்துக்கொண்டு நின்றாள் ஆர்த்தி.
ஆர்த்தி மீதிருந்த கடுகடுப்பு குறையாமலே சற்று தள்ளி இருந்த கல்பெஞ்சில் அமர்ந்திருந்த மனோகரனிடம் சென்றவள், “இந்தாங்க!” என்று துண்டை நீட்டினாள்.
உண்ட களைப்பே கண்ணைக்கட்ட, மாமரத்தின் குளுமையும், காற்றும் அவனை சுகமாய் தாலாட்டியதில் உட்கார்ந்த வாக்கிலேயே நித்திரைக்கு போக பார்த்தான் மனோ.
“மாமா…..?” கௌசி கத்தவும் தான் விழித்தான்.
அவள் நீட்டிக்கொண்டிருந்த துண்டைப்பார்த்ததும், “இதெதுக்கு?” என்றவன், அவள் முந்தானையை எக்கிப்பிடித்து இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் தடுமாறி அவன் மீதே மோதி அமர்ந்தாள் அவள்.
“ஸ்ஸ்… என்ன மாமா நீங்க?” அந்த இருட்டில் அவர்கள் இருப்பதே தெரியாது என்றாலும் வீடு முழுக்க ஆட்கள் இருக்கும்போது இதென்ன வேலை?! என்ற பதட்டத்துடன் சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் முந்தானையில் நிதானமாய் கை துடைத்தவன், அதை முகத்துக்கும் கொண்டுப்போக, “அய்ய! இந்தமாறி புடவை எல்லாம் கட்டாத கௌசி! சொர சொரன்னு இருக்கு!” என்று முகம் சுளித்தான் மனோ.
“பார்டர்’ல முகத்தை தேய்ச்சா எரிய தான் செய்யும் மாமா!!!”
“அதெல்லாம் தெரியாது! எனக்கு எரியாத மாதிரி கட்டு!!!”
“கட்டிட்டா போச்சு!” என்றவள், அங்கிருந்து போகப்பார்க்க, அவள் கரத்தை இறுக்கமாய் பிடித்தவன்,
“எங்க ஓடுற? கொஞ்ச நேரம் கூட இரு!” என்றான்.
“மாமா! வீட்ல எல்லோரும் இருக்கும்போது நான் எப்படி உங்கக்கூட இருக்க முடியும்?”
“அட லூசே! நீ என்கூட இருக்கனும்ன்னு தானே கட்டி வச்சுருக்காங்க? இன்னைக்கு நம்மளை யாரும் ஒன்னும் சொல்ல போறதில்லை! ஒழுங்கா இங்கயே இரு”
அவன் சொன்னதற்கு விருப்பம் இல்லாததை போல சிணுங்கினாலும், அவளும் அவன் அருகாமையை தான் வேண்டினாள்.
“சும்மா இருந்தா எப்படி? எதாவது பேசு!” என்றான்.
“நானா? நான் என்ன பேசுறது?”
திகைத்தவன் போல கரம் கொண்டு வாயை மூடியவன், “உனக்கு பேச தெரியாது! அப்படிதானே?” என்று கேட்க, அவன் பாவனைக்கண்டு எழுந்த சிரிப்பை அவனுக்கு தெரியாமல் மறைத்தாள் அவள்.
“நம்ம ரொம்ப பேசிக்கிட்டதே இல்லை! இன்னும் சொல்லனும்ன்னா நான் பேசுனதே இல்ல! ஆனா, கல்யாணம் பண்ணிட்டோம்! அதுவும் ‘லவ் மேரேஜ்'” என்றுவிட்டு அவன் சிரிக்க, கௌசிக்கும் சிரிப்பாய் வந்தது.
“சரி கேளு! உனக்கு எதாவது என்கிட்ட கேட்கணும்ன்னு மனசுல இருக்கும்ல? அப்டி தோணுறதை கேளு!” கௌசியை பேச சொல்லி ஊக்கினான்.
கௌசி, “நிறைய கேள்வி இருக்கு! ஆனா, நான் கேட்டபிறகு கோச்சுக்கக்கூடாது! அப்படின்னா கேட்குறேன்!” என முன்ஜாமீன் கேட்டாள்.
மனோ ‘சரி’ என்றதும், முதல் கேள்வியாக, “எதுக்கு மாமா அப்பாக்கிட்ட இருந்து பணத்தை எடுத்தீங்க?” என்றாள்.
ஆர்ப்பாட்டமாய் சிரித்தான்.
சிரிக்கும் அவனை புரியாமல் பார்த்தாள் கௌசி.
“ஏன் மாமா சிரிக்குறீங்க?”
அவனே சிரித்து முடித்தவன், “ஏய் மக்கு! நான் ஏன் காசு எடுத்தேன்னு உங்க அப்பாவுக்கே புரிஞ்சுடுச்சு! ஆனா உனக்கு புரியல!” என்று சொல்ல,
‘நானே உன்னை வீட்டை விட்டு போ’ன்னு துரத்தனும்ன்னு தான் பணத்தை எடுத்தியா?’ என்று அன்பழகன் கேட்டதும் அதற்கு இவன் மௌனமாய் இருந்ததும் நினைவு வந்தது அவளுக்கு.