“ம்ம் சரிங்கய்யா..” என்றவன் மேலே செல்ல, அடுத்த கொஞ்ச நேரத்தில் லட்சுமியும் மாடிக்கு வந்துவிட்டாள்..
ஈசன் மொட்டை மாடியில் நடக்க “இங்க இருக்கீங்களா..” என்றபடி அவனுடன் சேர்ந்து அவளும் நடக்க, கொஞ்ச நேரத்தில் ஈசன் லட்சுமியின் கையைப் பிடித்துக்கொண்டவன்
“இப்படி உட்காருவோமா??” என்று சொல்லியபடி சுவரில் சாய்ந்துமர, அவளும் அப்படியே அமர, பக்கத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்..
திடீரென்ற அவனது இந்த செய்கையில், சட்டென்று ஒரு அதிர்வு லட்சுமியினுள் ஓடி மறைய, “என்ன மாமா..??” என்றாள் ஆச்சர்யமாய்..
“ம்ம்ம்” என்றவன் அவள் இடையில் கை போட்டு இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.
“மாமா..” என்றவளுக்கு, அந்த இரவு நேர குளிர் காற்றுக்கும், மொட்டை மாடியில் தாங்கள் இருக்கும் விதமும் கொஞ்சம் கூச்சமாகவும், சங்கடமாகவும் இருக்க, அவளுக்கு வார்த்தையே வரவில்லை..
மனதில் அவளோடு பேசவேண்டும் பேசவேண்டும் என்று எண்ணங்கள் பொங்கினாலும், பேசும் நேரம் வரும்போது எப்படி ஆரம்பிக்க என்று தெரியாமல் அவளுள் மூழ்கிப் போகவே எண்ணம் விளைந்தது..
“மாமா…” என்றவளின் கரம் அவன் தலை முடியை வருட, “லஷ்மி..” என்றவனின் அணைப்போ இன்னும் இறுகியது..
அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.. ஈசனின் கைகளுக்குள் அவள் உடல் தளர ஆரம்பிக்க, உள்ளம் மெல்லிய நடுக்கத்துடன், அப்படியே உறைந்துபோக, ஈசனின் மூச்சுக்காற்று அவளை உரச, லட்சுமியோ உருகத் தொடங்கினாள்.
அவள் மௌனித்திருக்க “உன்கிட்ட பேசணும் லஷ்மி..” என்றான் முகத்தைத் திருப்பாமலே..
“பேசணுமா…??”
“ம்ம்.. ஆனா தெரியல…” என்று சொல்ல, குழம்பிப்போனாள் லட்சுமி.. மூளையும் அந்த நேரத்தில் வேலை செய்யாமல் போக, “என்ன தெரியல???” என்றாள்.
“என் லஷ்மிக்கிட்ட நிறைய பேசணும்னு தோணுது.. ஆனா எதுவுமே தெரியலை…” என்று ஈசன் பிதற்ற,
“சரி உள்ள போய் பேசலாம்…” என்று லட்சுமி லேசாய் விலகப் பார்த்தாள்..
“ம்ம்ச்..” என்றவன் அவளை அப்படியே தூக்க, “ஈஸ் மாமா…” என்று லட்சுமி கண்களை அகல விரிக்க, அவனோ நேராக அவர்கள் அறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்தவன், அவளையும் தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.
முன்பு பின்வீட்டில் இருக்கையில் இப்படிதான் செய்வான்.. மீண்டும் ஈசன் அப்படி செய்தது லட்சுமிக்கு மனதில் பழைய நினைவுகளை கிளற, அவளும் அவனோடு ஒண்டிக்கொண்டாள்..
“ஹ்ம்ம்… இந்த சோஃபா நமக்காகத் தான் இங்க போட்டன்னு தெரியும்…” என்றவன் அவள் கூந்தலில் முகம் புதைக்க, அவன் தலையை தன்னில் இருந்து நிமிர்தியவள், அவனது கண்களைப் பார்த்து “பேசணும் சொன்னீங்க மாமா..” என்றாள்..
“ஹ்ம்ம் பேசணும்.. லஷ்மி.. பேசணும்…” என்றவன் கண்களை மூடி அப்படியே பின்னால் சாய.. லட்சுமியையும் தன்னோடு சேர்த்து சாய்துக்கொண்டான்.
ஈசனின் இதயத் துடிப்பு மட்டும் லட்சுமிக்கு கேட்டபடி இருக்க, கரங்களோ அவள் தலையை வருடியபடி இருக்க லட்சுமியின் மனதிலும், உடலில் ஒரு இதம் பரவ அவன் நெஞ்சில் முகத்தை இன்னும் அழுந்தப் பதித்துக்கொண்டாள்..
“சாரி சொன்னேன்.. உன்கிட்ட சாரி கேட்க கூட எனக்கு உன்னோட சப்போர்ட் தேவையாயிருக்கு.. நீ இங்க இல்லாம எனக்கு இது சொல்ல தைரியம் வரல.. அதான் இவ்வளோ நேரம்…” என்று சொல்ல, “மாமா…??” என்றாள் புரியாமல்..
“நீ எதையுமே புரிஞ்சுக்கலைன்னு நினைச்சு நான் தான் லஷ்மி உன்னை புரிஞ்சுக்கவேயில்ல..” என்றான் அவள் கண்களையே பார்த்து.. அவளுக்கோ பேச்சே வரவில்லை.
“ம்ம்… இப்போக்கூட நீ இங்க இல்லைன்னா எனக்கு இதெல்லாம் பேச தைரியமிருக்காது.. அப்படி மாத்தி வச்சிருக்க என்னை…” என்று சொல்லும் போதே அவன் அணைப்பு இறுக, லட்சுமிக்கு அந்த நொடி அத்தனை இன்பமாய் இருந்தது..
“மாமா…” என்றவள் சிரிக்க,
“சிரிக்காதடி.. பைத்தியம் ஆக்குற…” என்றவன் அப்படியே சோஃபாவில் அவளை கிடத்த, அவளோ அவனைத் தன் மீதே சாய்த்துகொண்டாள்.
“இந்த சோஃபா எதுக்காக இங்க நீ போட்டன்னு கூட எனக்கு லேட்டா தான் புரிஞ்சது லஷ்மி…” என்று ஈசன் சிரித்தவன், “லஷ்மி.. இனி நீ எப்பவுமே என்னைவிட்டு போகக் கூடாது…” என்று சொல்ல,
“போக விடுவீங்களா??” என்றாள் பதிலுக்கு அவளும்..
அவன் பேச நினைத்தது வேறு.. இப்போது பேசிக்கொண்டிருப்பது வேறு அவளோடு இருக்கும் பொழுதுகளில் அவனால் நினைத்ததை அப்படியே பேசிட முடியவில்லை.. இந்த காலம் முழுதும் போதாது என்று நன்றாகவே புரிந்தது..
“இப்போ ஏன் மாமா இந்த சாரி..??”
“ஹ்ம்ம் எல்லாத்துக்குமே…” என்று ஆழ்ந்து சொன்னவன் அவள் நெற்றியில் முத்தமிட,
“சாரி ஏத்துக்க முடியாது.. ஆனா இந்த கிஸ் ஓகே…” என்று லட்சுமி சொல்லும் போது தான் புரிந்தது அவள் அவனை இயல்பாகக முயல்கிறாள் என்று..
“ம்ம்ஹும் நான் ஏது கொடுத்தாலும் வச்சுக்க…”
“அதெல்லாம் முடியாது.. நான் உங்கக்கிட்ட உங்களை மட்டும் தான் எதிர்பார்க்கிறேன் மாமா.. வேற எதுவுமில்ல..” என்றவளும் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க,
“வேறெதுவுமே வேணாமா???” என்றவன் இன்னும் லட்சுமியை நெருங்க, “ம்ம்ஹும்..” என்று தலையை ஆட்டியவள் அவனை இறுக்கமாய் அணைத்துக்கொள்ள, “ஆனா எனக்கு நீ வேணும் லஷ்மி…” என்ற அவனது உருகளில் அவனுள் கரைந்துத் தான் போனாள்..
எத்தனை நாட்கள் ஆனது.. அவர்களின் நெருக்கத்தை ஸ்பரிசத்தை உணர்ந்து எத்தனை நாட்கள் ஆனது.. இனி எனக்கு நீ மட்டுமே என்ற எண்ணத்தில் ஈசன் காட்டிய நெருக்கம், இத்தனை நாள் கொண்ட உறவை விட, லட்சுமியை இன்னும் அவன்பால் காதல் கொள்ள வைக்க,
எனக்கு அனைத்தும் நீயே என்ற எண்ணத்தில் அவள் அவனிடம் காட்டிய இழக்கம், ஈசனை இன்னும் அவள்மேல் பித்தம் கொள்ள வைக்க, அந்த சோஃபாவில் இருந்து எப்போது கட்டில் வந்தனர்.. எப்போது பொழுது விடிந்தது என்றெல்லாம் இருவருக்குமே தெரியவில்லை..
பொழுது விடிகையில் என்னவோ புதிய மனிதனாய் எழுவது போல் ஓர் உணர்வு.. அருகில் படுத்திருக்கும் லட்சுமியைப் பார்க்க, அவளோ புன்னகையோடு உறங்கிக்கொண்டு இருந்தாள்..
“லஷ்மி…” என்று ஈசனது இதழ்கள் முணுமுணுக்க, அவனது கரங்களோ மெல்ல அவள் முகத்தை வருட, “ம்ம்.. இன்னும் கொஞ்ச நேரம்..” என்று அவனையே ஓட்டிப் படுத்தாள்..
மெல்ல குனிந்து அவள் காதருகே “லஷ்மி.. டைம் ஆச்சு…” என்று சொல்லியபடி அவள் காதிலேயே இதழ் பதிக்க, “ம்ம்ஹும்…” என்று கூசியவள், “போங்க மாமா…” என்று தள்ளினாள்..
“கொஞ்ச நேரம் போனா அம்மா கால் பண்ணிடுவாங்க..” என்றதும், “ஆமாமா..” என்று லட்சுமி வேகமாய் எழ,
“அம்மாக்குன்னா பயப்படுற.. நான் எழுப்பினா தள்ளுற..” என்றபடி அவனும் எழுந்தான்.