Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

72. மதுமதி - மதுரம் தூவும் மழையே

மழை 23

அன்று முழுக்க இருவரும் வெளியே வந்திருக்கவில்லை. பூட்டிய கதவு பூட்டியபடியே இருந்தது. காலையில் கதிரை வழியனுப்ப வந்த ரம்யா, இன்னும் கதவு திறக்கப்படாமலிருந்ததை எண்ணி யோசனையோடு நிற்க… கதிரோ நமட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து புறப்பட்டான்.

மதியம் வரை கதவு திறக்கவில்லை. ரம்யாவும் அதற்கு மேல் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள். அங்கே, அறைக்குள்… தரையில் இருவரும் பின்னிப் பிணைந்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களது ஆடைகள் எல்லாம் மூலைக்கு ஒன்றாய்க் கிடக்க, இருவரும் எதையும் கவனிக்காது பாம்பு போல ஒட்டித் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அலைபேசி அலற, முதலில் விழித்திறந்தது என்னவோ யூரன் தான். அலைபேசியை எடுத்துப் பார்த்தான், கம்பெனி கால் தான். அதைத் தூரப் போட்டுவிட்டு மணியைப் பார்க்க… ஒன்று என்று காட்டியது!



Advertisement

அதிர்ந்தவன், தன் கை வளைவுகளுக்குள் உறங்கும் மதுராவைக் கண்டான். சிறு பிள்ளை போல அவனை அணைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவர்களது நிலையைத் திரும்பிப் பார்த்து அவனுக்கே லேசாக வெட்கம் வந்தது.

கன்னத்தில் விழுந்து கிடந்த முடிக்கீற்றை ஓரமாக ஒதுக்கிவிட்டு, அவளது கன்னத்தில் இதழ் பதிக்க… மீசை தீண்டியதில் மெல்ல அசைவு கொடுத்து விழித்திறந்தாள் மதுரா.

“து… துரா…!” என்றான் யூரன் மெல்ல.

Advertisement

“இப்போ மணி என்ன யூரன்?” – கண்களைக் கசக்கியபடி கேட்டாள்.

Advertisement

“ம… ம… மதியம் ஒ… ஒண்ணு டி!”

“பசிக்குது யூரன்! ஏதாவது செஞ்சு கொடுங்க!”

“எ… என்னடி வே… வே ணும்? சொ… சொல்லு, செ… செஞ்சு த..தர்றேன்.”

Advertisement

“எதையாவது செய்யுங்க! ரொம்ப பசிக்குது.”

“ரொ… ரொம்ப ப.. பசிக்குதா? மு… முத்தம் கொ… கொடுக்கட்டுமா? மு… முத்தம் கொ… கொடுத்தா ப…பசி அ…அடங்கிடும் து… துரா!” என்று வம்புக்கு இழுத்தான்.

“ம்ம்… அப்புறம் உங்கப் பசி முழிச்சிக்கும்! மணி எத்தனை ஆச்சுன்னு பார்த்தீங்கதானே? நீங்க ரொம்ப மோசம் யூரன்… ஏதோ நாளைக்கே உலகம் அழியப் போறது போலத்தான் பண்றீங்க. போங்க…” எனச் சிணுங்கி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

அவளை இறுக்கியவன், “எ… என்னவோ தெ… தெரியல… உனக்குள்ள இருக்கிற தே… தேடலை என்னால க… கண்ட்ரோல் பண்ண முடியல துரா! இன்னும்… இன்னும் உனக்குள்ள தொ… தொலைஞ்சு போய்க்கிட்டே இருக்கணும்னு தோணுது! எ… எனக்கு இ… இன்னமும் எ… என்னோட ப… பசி அ.. அடங்கலைனு தோ… தோணுது! உ… உ.. உன்னை க… கடிச்சு தி.. தின்னா கூ…கூட அ…அடங்காது! அ…அதுவும் உ… உன்னை ம… மட்டுமே கே… கேட்கும் எ… என்னோட பசி…” என்று கழுத்தில் மீண்டும் முகத்தைப் புதைத்தான்.

அவனது கேசத்தைப் பற்றி இழுத்தவள், “பசிக்குதுடா…” எனச் செல்லமாகச் சிணுங்கினாள்.

“ச… சரிடி, இ… இதோ செ… செஞ்சு த.. தர்றேன்” என்று அவளது மூக்கைக் கடித்து இழுத்தவன், அவளிடம் செல்ல அடிகளை வாங்கிக்கொண்டு, காற்சட்டை மட்டும் அணிந்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தான்.

அவளோ அவனது சட்டையையும் தன் பாவாடையையும் உடுத்திக்கொண்டு சமையல் மேடையில் வந்து அமர்ந்தாள். அவனது சட்டை, அவனே உள்ளே சுருண்டு கொண்டுவிடலாம் என்கிற அளவுக்கு அவளுக்கு தொளதொளவென இருந்தது. அதை அணிந்துகொண்டு அவனை இன்னும் படுத்திக் கொண்டிருந்தாள்.

உடனே செஞ்சு சாப்பிட, அவசரத்திற்குக் கையில் கிடைத்ததோ நூடுல்ஸ் தான். எக் நூடுல்ஸ் செய்து இருவரும் சாப்பிட்டனர். அதிலும் ஒரு வாயால் கயிறு இழுக்கும் போட்டி! “யா… யாரிதழ், யா… யாரிதழில் மு… முதல் முத்தம் வைக்குதோ… அ… அவங்க தோத்தவங்க!” என்று போட்டி வைத்து, அவனே தோற்றும் போனான் யூரன்.

அன்று முழுக்க வீட்டுக்குள்ளே கட்டிலில் காதல் ஆட்சி தான்! மாலையில் தான் ‘போனால் போகட்டும்’ என்று கதவைத் திறக்க, வெளியே நின்ற ரம்யா அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள்.

இப்படியே இரண்டு நாட்கள் ஓடிவிட, இருக்கும் விடுமுறை நாட்களில் ஹனிமூன் சென்று வர எண்ணியவர்கள், மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குச் செல்ல திட்டமிட்டனர். கூடவே கதிர் – ரம்யாவையும் அழைக்க, அவர்களோ குழந்தைக்காகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பதால் வர மறுத்துவிட்டனர். இதனால், புதுமணத் தம்பதியினர் மட்டுமே ஹனிமூன் கொண்டாடக் கிளம்பினர்.

கற்பகம் ஒரு முடிவாகத் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். அருண் – மதிவதனி காதல் விவகாரத்தைத் தெரிந்து கொண்டதுமே, அவர் கண்டிக்காமல் அந்தப் பையனின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். சமூகத்தில் அந்தஸ்தும், சொத்துகளும் நிறைந்த குடும்பம் அது!

படிக்கும் வயதில் காதல் தப்பு என்று கண்டிக்காத தாய்… மகளது காதலன் பெரிய இடத்துப் பிள்ளை என்றதும் அவளது காதலை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அருணோ, தன் வீட்டில் தன் காதலைச் சொன்னபோது… பெண்ணின் படிப்பு, அந்தஸ்து, வசதி கம்மி என்ற ரீதியில் அவர்கள் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. அவன் எவ்வளவு கெஞ்சியும் பயனில்லாமல் போனது.

அருணின் அக்கா அகல்யா, விவாகரத்தான பெண். தன் இரண்டு வயது மகனைத் தன் தாயிடம் கொடுத்துவிட்டு, சொந்தமாகத் தொழிலை பார்த்துக் கொள்கிறாள். அருண் தன் காதலைக் காப்பாற்றிக் கொள்ள, மதியூரனைத் தன் அக்கா அகல்யாவிற்குத் திருமணம் செய்து வைக்க ஒரு தந்திரக் காயை நகர்த்தினான்.

மதியூரனுக்குத் திக்குவாய் என்றதும் முதலில் யோசித்த அருணின் குடும்பத்தினர், பின் தன் மகளது குழந்தையைப் பார்த்துக் கொள்கிற, தங்களுக்கு அடங்கிய அடிமையாக அவன் இருப்பான் என்று எண்ணி, அவனுக்கு அகல்யாவைக் கட்டி வைக்க முடிவு செய்தனர்.

அதை அகல்யாவிடம் சொன்னபோது அவளுக்கு முதலில் கோபம் வந்தது. பின் அவனது புகைப்படத்தைப் பார்த்ததும் ஓரளவு சமாதானமானவள், அவனது குரலில் மொத்தமாக வீழ்ந்து சம்மதம் தெரிவித்தாள்.

இதை அருண் கற்பகத்திடம் சொல்ல… ‘ கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?’ என்ற ரீதியில், பைசா செலவில்லாமல் தன் மகனையும் ஒரு பெரிய இடத்தில் விற்றுவிடலாம் என்கிற பேராசை கற்பகத்திற்கு! மதியூரனிடம் சொன்னால் மறுத்துவிடுவான் என்று எண்ணிய கற்பகம், அவன் சம்மதம் சொல்லிவிட்டதாக அருண் வீட்டாரிடம் பொய் சொல்லிவிட்டார். “கழுத்து பிடியில் செண்டிமெண்டாகப் பேசினால் அவன் சம்மதித்துவிடுவான்” என்று கணக்குப் போட்டார் கற்பகம்.

ஆனால், அங்கேதான் பெரிய ட்விஸ்ட் அரங்கேறியது! வீட்டை விட்டு வெளியேறிய மதியூரன், மதுராவைத் திருமணமும் செய்து கொண்டான்.

மதியூரன் தன்னை மறுத்த கோபத்தில், “அருணும் அந்தப் பெண்ணும் சேரவே கூடாது!” என்று அகல்யா தன் தாய், தந்தையிடம் மூட்டிவிட… அவர்களோ மகள் பேச்சைக் கேட்டுத் தீவிரமாக மகனுக்கு வேறு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அருண் அவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

இங்கே மதிவதனியோ அருணிடம், “நீங்க கிடைக்கலைன்னா உங்க பேரையும் எழுதி வச்சு, உங்க குடும்பத்துல இருக்குற எல்லாரையும் எழுதி வச்சுட்டு செத்துப் போயிடுவேன்!” என்று மிரட்டல் விடுத்தாள். அருணுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்.

மூவரிடமும் கெஞ்சியும் அவர்கள் மனமிறங்கவில்லை. இதில் கற்பகம் வேறு, இருவருக்கும் எப்படியாவது திருமணம் செய்து வைப்பதாக மதிவதனியிடம் உறுதி அளித்துக் கொண்டிருந்தார். அவளோ, “நாம வீட்டை எதிர்த்துப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம்” என அருணை நச்சரித்தாள்.

அருணுக்கோ பயம்! வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்தால், நிச்சயம் அக்கா அகல்யா அவனை வீட்டில் சேர்க்க மாட்டாள்; சொத்தில் ஒத்த பைசா கூடக் கிடைக்கவிட மாட்டாள். அக்காவைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும், அம்மா அப்பாவை ஏத்திவிட்டுத் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வாள் என்று அவனுக்குப் புரிந்தது.

மதிவதனியைச் சமாதானம் செய்ய அருண் அவள் வீட்டிற்கு வந்தபோது, கற்பகத்தின் உபசரிப்பில் அவனுக்கு மாப்பிள்ளை கர்வம் தலைக்கேறியது.

“அத்தை! அவ வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்றா. ஆனா, அவங்களை எதிர்த்து வெளிய வந்தால் எனக்கு எதுவுமே கிடைக்காதபடி பண்ணிடுவா எங்க அக்கா! அதனாலதான் கொஞ்சம் அவளைப் பொறுமையா இருக்கச் சொல்லுங்க அத்தை. நான் வீட்ல பேசி எப்படியாவது சம்மதம் வாங்குறேன்” என்றான் அருண்.

“என்ன மாப்பிள்ளை நீங்க இப்படிப் பேசுறீங்க? உன் அக்கா கோபமா இருக்கும் போது உங்க பேச்சு உங்க வீட்ல எடுப்படுமா? அந்த வீட்டுக்கு ஒரே ஆண் பிள்ளை நீங்க! அவங்க குடும்பத்துக்கே வாரிசு கொடுக்கப் போற ஆம்பள நீங்க! உங்க பேச்சுக்கு அங்கே மரியாதை இல்லையா? இப்படித்தான் நீங்க எந்தப் பவரும் இல்லாம வாழ்ந்துட்டு இருக்கீங்களா?” என்று அவனுக்குள் தீயை மூட்டினார் கற்பகம்.

மேலும், “என்ன இருந்தாலும் உங்க அக்கா இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணு. நீங்கதான் கடைசி வரைக்கும் அம்மா அப்பாவை வச்சுப் பார்த்துக்க போறீங்க. அவங்க சொத்தும் உங்களுக்குத்தான் வரணும். இருந்தும், இதெல்லாம் கிடைக்கவிடாம பண்ற உங்க அக்காவை எதிர்க்காம ‘அவங்ககிட்ட பேசுறேன்’னு சொல்றீங்க! இப்பக் கூட உங்க விருப்பம் கேட்காம உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்க்குறாங்க. நாளைப் பின்னாடி வர்ற பொண்ணு முன்னாடியே உங்களை அடிமையாத்தான் வச்சிருப்பாங்க. அப்புறம் நீங்க வீட்ல ஆம்பள பிள்ளையா இருந்தாலும் வெத்து வேட்டுதான்! நீங்க ஆண் வாரிசு பெத்துக் கொடுத்தாலும், உங்க அக்கா மகனைத்தான் தூக்கி வச்சுக் கொஞ்சுவாங்க, அவனையே வாரிசாக்குவாங்க… ஆச்சரியப்படுறதுக்கில்லை. உங்க மதிப்பு என்னன்னு காட்டணும் மாப்பிள்ளை… இல்லைன்னா நீங்க வெத்து வேட்டுதான்!” என்று ஏத்திவிட்டார்.

கற்பகம் ஏற்றிவிட்ட வெறியில் வீட்டிற்குச் சென்ற அருண், “எனக்கு மதிதான் வேணும்!” என்று ஒற்றைக் காலில் நின்றான். ஆனால், மகளின் பேச்சைக் கேட்டுப் பெற்றோர் மறுத்துவிட… கோபம் கொண்டவன், தன் மதிப்பைத் தன் குடும்பத்திற்கு நிரூபிக்க, மதிவதனியைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான்.

தன் நண்பர்கள் மூலம் ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அந்த வேலைகளை வீட்டிற்குத் தெரியாமல் ஏற்பாடு செய்தான் அருண். அங்கே அருண் வீட்டில், பெண்ணெடுத்துப் பெண்கொடுக்கும் முறையில் ஒரே வீட்டில் மகளுக்கும் மகனுக்கும் சம்பந்தம் பேசி முடிக்கும் தருவாய்… இங்கே இவனோ, திருமணம் செய்து கொள்ளப் பதிவாளர் முன் நின்றிருந்தான்.

மதிவதனிக்குக் கற்பகம் சாட்சி கையெழுத்துப் போட, அருணுக்கு அவனது நண்பன் போட… தாலி கட்டி, மூன்று முடிச்சிட்டு மதிவதனியைத் தன் மனைவியாக்கிக் கொண்டான் அருண்.

தாய் சொன்னதைச் செய்து முடித்தாள் மதிவதனி; அருணைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாள். அந்தச் சந்தோஷத்தில் கற்பகத்தைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

அப்படியே கையோடு அவர்களை அருண் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் கற்பகம். அங்கே, அகல்யாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தனர். அகல்யாவிற்கு மாப்பிள்ளையைப் பிடித்துவிட, மேற்கொண்டு பேசும் நேரத்தில்… அங்கே அருண் தன் திருமணக் கோலத்துடன் வந்து நின்றான்!

அதிர்ந்துபோன மாப்பிள்ளை வீட்டாரோ, அருணின் அம்மா, அப்பாவைத் தவறாகப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், “இனி உனக்கு இந்த வீட்டிலும் சொத்திலும் பங்கு இல்லை!” என்று அருணிடம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர்.

அருணோ ஆத்திரத்தில், “எனக்குச் சொத்தைப் பிரித்துத் தாங்க!” என்று சண்டையிட… அகல்யாவோ கேலியாக உதட்டை வளைத்து அவன் அருகே வந்தாள்.

“தாத்தா சொத்தைத்தான் நீ முழுசா எனக்கே எழுதிக் கொடுத்திட்டியேடா! இனி என்ன சொத்து இருக்கு உனக்குப் பிரிச்சுத் தர? அப்பா சொத்தும் அவர் விருப்பப்பட்டுக் கொடுத்தால்தான் உனக்கு வரும். ஏன்… அவர் விருப்பப்பட்டு என் பேருலயோ, என் மகன் பேருலயோ கூட எழுதி வைக்கலாம், யார் கண்டா? நானா பார்த்துப் பாவம்னு பிச்சை போட்டுக் கொடுத்தாத்தான் உனக்கு ஏதாவது கிடைக்கும்!” என்று அவனது ஈகோவைத் தீண்டினாள்.

கோபத்திலும் ரோசத்திலும் ஆவேசமடைந்த அருண், “எனக்கு எதுவும் வேண்டாம்!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டான்.

பாவம் கற்பகம்! அவர் போட்ட கணக்கெல்லாம் தப்பாகப் போயின. மகளோடு சேர்த்து மருமகனையும் உட்கார வைத்துப் சோறூட்ட வேண்டிய சூழ்நிலை உருவானது. இதோடு பேரடியாக, அருணின் வேலையும் பறிபோனது!

வீட்டோடு மாப்பிள்ளையாக வந்தவன்… வேலை வெட்டிக்குக் கூடப் போகாமல், வீட்டிலேயே முடங்கி மனைவியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் கணவனாக மாறிப்போனான் அருண். அவனும் சேர்ந்து கற்பகத்தின் தலைமேல் கூடுதல் சுமையாகிப் போனான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!