“என்ன யோசிக்கிற சீதா தளிர் எங்க..?” என்று மீண்டும் ஜெகா கேட்க..,
“அது.. அதுவந்து அண்ணி.. அம்மூக்கு உடம்பு முடியலன்னு அண்ணாகிட்ட காலையிலேயே சொல்லியிருந்தேனே அண்ணி..” என்ற சீதாவின் குரல் குறைந்து ஒலித்தது.
“முடியலைன்னா ஒரு மாத்திரையை போட்டுட்டு கிளம்பி வர வேண்டியது தானே..? இந்த காலத்து பசங்க டேஸ்ட் வேற மாதிரி இருக்கு, நாம எடுத்துகொடுத்தா பிடிக்கிறதில்ல நம்ம விருப்பத்தை மதிக்கிறதும் இல்லை… யாராவது ஒருத்தர் விட்டுகொடுத்துதான ஆகணும் என் தலையெழுத்து அது நானாவே இருந்துட்டு போறேன்.. அவளுக்கு பிடிச்சதே எடுக்கட்டும் வரசொல்லு..” என்று வேண்டா வெறுப்பாக பேசிட.,
“இல்லண்ணி என் பொண்ணு அப்படியெல்லாம் சொல்லமாட்டா நாம எது எடுத்தாலும் அவளுக்கு சம்மதம்தான்”
“இன்னைக்கு நீ இப்படி சொல்லுவ..? ஆனா நாளைக்கு காலம் முழுக்க எனக்கு ஒரு சொல் வந்துடக்கூடாது பாரு எனக்கு எதுக்கு வம்பு அவளையே வந்து பிடிச்சதை எடுத்துக்க சொல்லு..” என்று பட்டும்படாமல் பேச.,
“இல்லண்ணி அவ வீட்டுக்கு தூரமாகிட்டா எப்படி இங்க கூட்டிட்டு வர.. அதான் வரலை” என்று தயக்கத்தோடு சீதா சொல்லி முடிக்கும் முன் “ச்சீய்ய்” என்று முகம் சுழித்துவிட்டார் ராஜேஸ்வரி.
ராஜி ‘ச்சீய்’ என்ற ஒற்றை வார்த்தையில் சீதாவின் நெஞ்சில் அமிலத்தை வார்க்க திகைத்து போன சீதா அடுத்து எதுவும் பேசமுடியாமல் கலங்கிய விழிகளுடன் மெளனமாக நின்றார்.
“ச்சை என்ன இதெல்லாம் நல்லநாள் அதுவுமா இப்படிதான் அபசகுனமா ஆகணுமா..? அதான் இப்போல்லாம் மாத்திர மருந்து இருக்குதே எதையாவது போட்டு தள்ளி வைக்க தெரியாதா..? காலையில வீட்ல இருந்து கிளம்பும் போதே வண்டி ஆக்சிடென்ட்னு கால் வந்துச்சு இங்க வந்து பார்த்தா மகராசி இப்படி உட்காந்துட்டா.. விளங்கின மாதிரி தான்” என்று ராஜி நொடித்து கொள்ள.,
“அப்படியில்ல சம்பந்தியம்மா ஏற்கனவே குறித்த நாளில் அண்ணிக்கு முடியாம போனதால நாம எடுக்க முடியல..” என்று ஜெகாவை துணைக்கு அழைக்க அவரோ சீதாவின் புறம் திரும்பவே இல்லை.
“ஓஓ அப்போ என் தங்கச்சி எப்படி போனாலும் பரவாயில்ல உங்க காரியம் ஆகணும் அப்படிதானே..?”
“இல்ல சம்பந்தியம்மா நான் அப்படி சொல்லலை..”
“வேற எப்படி..? நீ சொல்ல வந்ததுக்கு அதுதான் அர்த்தம்..! உங்க தரப்பு தப்பை மறைக்க எங்களை குறை சொல்லாத” என்று இறைந்து விட்டு தனியாக சென்று அமர்ந்துவிட்டார்.
சுஜியும் நிவியும் தென்றலோடு சேர்ந்து தளிர்க்கு பொருத்தமான பட்டுக்களை மும்முரமாக பார்வையிட்டு கொண்டிருந்ததில் சற்று தள்ளி அமர்ந்திருந்த ஜெகாவும் ராஜியும் பேசியது பெரிதாக அவர்களுக்கு தெரியவில்லை.
ராஜி கோபித்து கொண்டு செல்லவும், “வயசுல மூத்தவங்க கிட்ட இப்படிதான் பேசுவியா சீதா..? எங்கக்கா வயசும் அனுபவமும் என்னன்னு உனக்கு தெரியுமா..? ஆதியை நான் பெத்திருக்கலாம் ஆனா அவனை முழுக்க முழுக்க தன் சொந்த பிள்ளையா வளர்த்தது எங்கக்கா தான்..!! அவனுக்காக எந்த நேரமானாலும் சிரமம் பார்க்காம ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்யறவங்க பெஸ்ட் மட்டும் தான் கொடுப்பாங்க.. ஆனா இன்னைக்கு அவனுக்கு நடக்கற விசேஷத்துல கரும்புள்ளி மாதிரி உன் பொண்ணு உட்காந்துட்டாளேன்னு ஏதோ ஆதங்கத்துல ஒன்னு இரண்டு வார்த்தை கூட குறைய பேசத்தான் செய்வாங்க அதுக்காக இப்படி சொல்லுவியா..? உனக்கே இது சரின்னு தோணுதா..?” என்று ஜெகா கோபமாக கேட்க..,
“அண்ணி நான் ஒன்னும் சொல்லலையே அண்ணி..” என்று சீதா பரிதவித்து போனார்.
“அவங்களோட வார்த்தைக்கு வார்த்தை பேசினதே தப்பு.. போ நீயே போய் எங்கக்காவை கூட்டிட்டு வா இல்லைன்னா உங்க இஷ்டத்துக்கு என்ன செய்யணுமோ செய்ங்க நானும் எதுலயும் தலையிடலை.. ஏற்கனவே உன் பெண்ணால வீட்ல எனக்கு மரியாதை போச்சு இன்னைக்கு மானமும் போகணும்னு இருந்திருக்கு நான் எதுக்கு பேசிக்கிட்டு..” என்று தெளிவாக அவர் காதில் விழுமாறு முனுமுனுத்தவர் இறுதியாக,
“என்னையெல்லாம் யார் மதிக்க போறா எங்கக்கா மாதிரியே நானும் ஒரு ஓரமா இருந்துக்கிறேன்..” என்று சொன்னது போலவே ஒரு ஓரத்தில் அழுத்தமாக நின்றுகொண்டார். அக்கா தங்கையின் பேச்சை கேட்டு ஸ்தம்பித்த நிலையில் நின்றிருந்த சீதாவிற்கு அவர்களின் வார்த்தையை கிரகிக்கவே பலநிமிடம் பிடித்தது.
அப்படி என்ன பேசிவிட்டோம் என்று இருவரும் இப்படி நடந்து கொள்கின்றனர் என்று அலமலந்து போனவருக்கு ஒருவழியாக ராஜியை சமாதானம் செய்யவேண்டும் என்பது வரை புரிபட உடனே அவரை நெருங்கி, “மன்னிச்சிடுங்க சம்பந்தியம்மா.. நான் ஏதோ தெரியாம பேசிட்டேன், தயவுசெய்து வாங்க வந்து புடவையை பாருங்க ப்ளீஸ்..” எனவும் அமர்த்தலாக அவரை ஒரு பார்வை பார்த்தவர் “வா ஜெகா” என்று தங்கையையும் அழைத்து கொண்டு சென்றார்.
அனைவரையும் நகர்த்திவிட்டு முன்னே சென்றவர் சில புடவைகளை பார்வையிட்ட பின், “இந்த புடவையை பாருங்க” என்று ஏதோ ஒன்றை கடனே என்று காண்பிக்க அதுவோ கிளி பச்சையில் காபி கலர் பார்டரில் அரத பழசான டிசைனில் இருந்தது.
“ராஜிம்மா என்ன இது அண்ணிக்கு புடவை எடுக்க சொன்னா உங்களுக்கு எடுத்திருக்கீங்க..?” என்று நிவி சிரிக்கவும் தென்றலும் உடன் இணைந்து சிரித்துவிட்டாள். அதில் ராஜியின் கோபம் இன்னுமே கிளறப்பட தென்றலை முறைத்தவாறு அமர்ந்துகொண்டு, “நீங்களே பார்த்து சொல்லுங்க” என்றுவிட்டார்.
“அத்தை வாங்க..” என்று சுஜி அழைத்த போதும் அருகே செல்லாத சீதா நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெகாவின் அருகே அமைதியாக நின்றுகொண்டார்.
“அம்மா அத்தை இது பாருங்க..” என்று சிவப்பு நிறத்தில் தங்க இழையோடிய ஆறரை லட்சம் பெறுமானமுள்ள மனதை கொள்ளைகொள்ளும் வேலைபாட்டிலான மென்பட்டை காண்பித்த சுஜி, “தளிருக்கு இது ரொம்ப நல்லா இருக்கும்மா.. அவளுக்குமே பிடிச்சிருக்கு” என்றிட
“ம்மா மா இதை பாருங்கம்மா..” என்று மற்றொரு பட்டுடன் வந்த நிவி, “அக்கா காட்டினதைவிட அண்ணிக்கு இது அட்டகாசமா இருக்கும்..” என்றவளின் கையில் இருந்தது கிட்டத்தட்ட பத்து லட்சம் பெறுமானமுள்ள புடவை. பெண்கள் புடவையை பார்த்துகொண்டிருக்க அங்கே வந்த அம்பலவாணனிடம் “ப்பா நீங்க சொல்லுங்க இதுல எது அண்ணிக்கு நல்லா இருக்கும்..?” என்று நிவி கேட்கவும்,
“கலெக்ஷன்ஸ் எல்லாம் பிடிச்சிருக்கா இல்லைன்னா சொல்லுங்க இன்னும் கொண்டு வருவாங்க” என்று பொதுவாக சொன்னவர் சீதாவிடம், “ஒரு எமெர்ஜென்சி சீதா நாங்க கிளம்பறோம் நீங்க பொறுமையா பாருங்கம்மா வந்துடுறேன்”
“அண்ணா மாப்பிள்ளை இன்னும் வரலைங்களே எதுவும் பிரச்சனைங்களா..?”
“அப்படியில்ல சீதா இன்னொரு முக்கிய வேலை வந்துடுச்சு அதான் அவன் வர முடியலை நீங்க பாருங்கம்மா நான் சீக்கிரமே வந்துடுவேன்” என்றவர் உதய்க்கு எடுத்திருந்த பட்டுவேட்டியை மனைவியிடம் கொடுத்து கிளம்பிவிட்டார்.
“ம்மா அப்பாக்கு இரண்டுமே ஓகே உங்களுக்கு எதுன்னு சொல்லுங்க” என்று நிவி இருபுடவைகளையும் காட்டி கேட்க, “இதுவா..?” என்று ஜெகதீஸ்வரியின் நெற்றி சுருங்கி விரியவும் அருகே இருந்த பணிப்பெண்,
“எங்க எங்களுக்குத் தான் அந்த கொடுப்பனை இல்லையே! நல்லநாள் அதுவுமா உட்காந்து வச்சிருக்கவ இன்னும் என்னல்லாம் செய்ய போறாளோ.. நல்லவேளை மகராசி மணமேடையில வந்து அபசகுனமா உட்காந்து தொலைக்காம போனாலேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்..” என்று ராஜி அங்கலாய்க்க..,
இறுகிய முகத்துடன் நின்றிருந்த ஜெகாவும், “பொண்ணு வரலம்மா நீங்க இந்த புடவையே குடுத்துடுங்க” என்று மகள்கள் தேர்ந்தெடுத்ததில் ஒன்றை கடமைக்கு கைகாட்டி இருந்தார்.
“அத்தை ஏன் இவ்ளோ டல் ஆகிட்டீங்க? ஒன்னும் கவலைபடாதீங்க அக்கா இல்லைன்னா என்ன அதுதான் நான் இருக்கேனே! நானும் அம்மாவும் தான் பொதுவா அக்காக்கு புடவை செலெக்ட் பண்ணுவோம் எனக்கு பொருத்தமா இருந்தா அது அக்காக்கும் நல்லாத்தான் இருக்கும்..” என்று தென்றல் உல்லாசக்குரலில் கூற,
“அப்போ முகூர்த்த புடவையை உனக்கு வச்சு பார்த்து எடுக்கணும்னு சொல்றியா..?” என்று ராஜி நக்கலாக கேட்க,
அதை புரிந்து கொள்ளாத தென்றல், “ஆமாத்தை நீங்க எனக்கு வச்சு பாருங்க அதுல எது பெஸ்ட்டா இருக்கோ அதையே நாம எடுத்துடலாம்” என்றதும் தான் தாமதம்,
“எப்படி இப்போ புடவையை உனக்கு கட்டிபார்த்து எடுக்கிற மாதிரியே கல்யாணமேடையில என் பையன் உனக்கு தாலி கட்டி பார்த்து உங்கக்காக்கு கட்டனும்னு சொல்லவரியா..?” என்று ராஜி குத்தீட்டியாய் வார்த்தைகளை வீச,
“அத்தை” என்று திகைத்த தென்றலுக்கு குறையாத அதிர்ச்சியுடன் சீதாவும் ராஜியை பார்த்தார்.
கூடி இருந்த பெண்களுமே திகைப்புடன் பார்க்க.., “என்ன பார்க்கிற சீதா பொட்டபுள்ளைக்கு நாவடக்கம் வேணும்! இதுதான் நீ வளர்த்த லட்சணமா…? புடவை எடுக்க வராம ஒருத்தி ஒதுங்கிட்டான்னு பார்த்தா இன்னொருத்தி அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு இருக்காளே.. கூறைபுடவையை இவளுக்கு கட்டி பார்த்து எடுக்கணும்னா நாளைக்கு என் பையன் இவளுக்கு தாலிகட்டி பார்த்து அக்காளுக்கு கட்டனும்னு சொல்றாளா..? சொல்லு..?” என்று ஆவேசமாக கேட்க,
“என்ன ராஜி ஏன் இப்படி கோபப்படற..?” என்றார் வயதில் மூத்த பெண்மணி.
“வேற என்ன சித்தி செய்ய சொல்றீங்க..? கல்யாண பொண்ணு வீட்டுக்கு தூரம், நாங்க வீட்ல இருந்து கிளம்பினப்போ டெலிவரி எடுத்த கார் ஆக்சிடென்ட், சரின்னு மனசை தேத்திகிட்டு இங்க வந்தா இதோ இவ என்னடான்னா அக்காளுக்கு எடுக்க போற புடவையை இவளுக்கு கட்டி பார்த்து எடுக்கணும்னு சொல்றா..?” என்று கோபமாக கேட்க,
“என்ன பாப்பா பேச்சு இது” என்று அப்பெண்மணி தென்றலை கண்டிக்கவும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நின்ற தென்றலின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. நிச்சயம் தான் இப்படி நினைத்து பேசவில்லையே பிறகு எப்படி தவறாகி போனது என்று புரியாமல் நின்றிருந்தவளின் கரத்தை அதரவாக சுஜி பிடித்துக்கொள்ள,
“ராஜிம்மா தென்றல் சாதாரணமா சொன்ன வார்த்தையை நீங்க எப்படி பேசுறீங்க..?” என்று நிவி பதற ஜெகா மெளனமாக நின்று அக்காவின் கேள்விகளை ஆதரித்தார்.
“கொஞ்சம் அமைதியா இரு நிவி எல்லாம் இவங்களை கேட்டுதானே உங்கப்பா செய்துட்டு இருக்கார் அப்படியிருக்கப்போ இன்னைக்கு வீட்டுக்கு தூரம்ன்னு முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல ஏன் உன் கல்யானத்தப்பவும் இப்படிதானே ஆச்சு.. நீ எங்களுக்கு இரண்டு நாள் முன்னாடியே சொல்லவும் நாம அடுத்த வாரம் போய் எடுக்கலயா இவங்களும் முன்கூட்டியே சொல்லியிருந்தா வேற தேதி பார்த்து வந்திருப்போமே.. ப்ச் போயும் போயும் என் பையனுக்கு இப்படியா…” என்று ஏதோ பேசவரவும் அவர் முன் கண்ணீருடன் கைகூப்பி விட்ட சீதாலக்ஷ்மி,
“மன்னிச்சிடுங்க சம்மந்தியம்மா அவ சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா.. தயவுசெய்து இந்த பேச்சை இத்தோட விட்டுடுங்க..” என்றவரை இடையிட்ட ராஜி,
“இதெல்லாம் என்ன பேச்சு கொஞ்சமும் அடக்க ஒடுக்கம் இல்லாம.. முதல்ல உன் பொண்ணுக்கு பெரியவங்களை மதிக்கவும் எப்படி பேசணும்னு கத்துகொடு” என்று கடுமையான குரலில் கூற “இல்ல..” என்று தென்றல் ஏதோ சொல்லவர உடனே அவள் கை பிடித்து இழுத்து சொல்லவிடாமல் தடுத்துவிட்ட சீதா எதுவும் பேசாதே என்று கண்களாலேயே மகளை கட்டிபோட்டு விட்டார்.
“ராஜிம்மா விடுங்க அவ ஏதோ தெரியாம சொல்லிட்டா எதுக்கு பெருசு பண்ணிட்டு..” என்று சுஜி ஆரம்பிக்கவும்,
“கல்யாணங்கிறது ஆயிரங்காலத்து பயிறு..! பெண் பார்த்து, பாக்கு வெத்தலை மாற்றி, பத்திரிகை அடிச்சு, பந்தக்கால் நடறதுல இருந்து மணமேடை ஏறி தாலி வாங்கற வரை ஒவ்வொரு விசேஷத்தையும் சுத்தபத்தமா செய்யணும் தீட்டோட செஞ்சா அந்த கல்யாணம் எப்படி செழிக்கும்..? சின்ன பசங்க உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா போச்சா..?” என்ற ராஜி சுஜியையும் கத்திக்கொண்டிருப்பதை கண்ட தென்றல்,
“ஸாரி ஆன்ட்டி நான் பேசினது தப்பு தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க” என்று சொன்ன பின்னர் தான் ராஜி சற்று அடங்கினார்.
“சரி சரி விடுங்க அதான் அந்த பொண்ணு மன்னிப்பு கேட்டுடுச்சே விட்டுட்டு வந்த வேலையை பாருங்க” என்றவர் மற்றவர்களுக்கும் புடவையை எடுக்க சொல்ல கடைக்கு வந்த போதிருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்து போக கரைபுரண்ட கண்ணீரோடு அமைதியாக சீதாவின் பக்கம் நின்றுகொண்டாள் இளந்தென்றல்.
நிவி அவளை அழைத்த போதும், “இருக்கட்டும் அண்ணி நீங்களே செலெக்ட் பண்ணுங்க” என்று சொல்லிவிட புடவைகளை தேர்ந்தெடுத்தவர்கள் அதை பெற்றுக்கொண்டு வெளியில் வர அம்பலவாணனும் வேலை முடிந்து வந்தவர் அனைவரையும் உணவகத்துக்கு அழைத்து சென்றார்.
வழிநெடுக கலங்கிய விழிகளுடன் தாயின் முகம் பார்த்தவாறே அமைதியாக வந்த தென்றல் ஒருவழியாக மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர அங்கே தென்றலின் தோழிகள் காத்திருந்தனர்.
“எப்போம்மா வந்தீங்க..? பஜ்ஜி போட்டுட்டு இருக்கேன் வந்துடுறேன் இருங்க” என்ற தளிர் சமையலறைக்குள் செல்ல, ஹாலில் இருந்த தென்றலின் தோழிகளை கண்டு, “எதுக்கு வந்திருக்காங்க..?” என்றார் சீதா.
“ம்மா அக்காவோட கல்யாணத்துக்கு அத்தானுக்கு வெல்கம் டான்ஸ் சர்ப்ரைஸ் கொடுக்க போறோம் அதுக்கு இன்னைக்கு கடைசியா ரிகர்சல் பார்த்துடலாம்னு வந்திருக்காங்க..” என்று நா தழுத்தழுக்க தென்றல் கூறவும்..,
“இல்ல எதுவும் வேண்டாம் அவங்களை அனுப்பிடு” என்றவர் “எந்த டான்ஸ்ஸும் கிடையாதும்மா வேளையோடு வீடு போய் சேருங்க” என்றிட அவர்களோ கிளம்பாமல் தென்றலை பார்த்தனர்.
தென்றலோ எதுவும் சொல்ல முடியாமல் மெளனக்கண்ணீரோடு நின்றிருக்க பஜ்ஜியோடு வந்த தளிர் தாயின் வார்த்தைகளில், “ம்மா என்னம்மா சொல்றீங்க..? உங்ககிட்ட பெர்மிஷன் கேட்டு தானே தென்றல் செய்தா இப்போ ஏன்ம்மா இப்படி சொல்றீங்க..? எல்லாரும் ரொம்ப ஆசையா இருந்தாங்க இப்போ வேண்டாம்னு சொன்…” என்று தளிர் முடிக்கும் முன்னமே,
“உனக்கெல்லாம் ஒருமுறை சொன்னா புரியாதா தளிர்..? கிளம்ப சொல்லு இவங்களை” என்று சீதா சீறவும் திடுக்கிட்ட பெண்கள் உடனே அங்கிருந்து வெளியேறினர்.
ஒன்றும் புரியாமல் தளிர் தென்றலை பார்க்க அவளோ பெருங்கேவலுடன் “அக்கா ஸாரிக்கா..” என்று தளிரை கட்டிக்கொண்டு கடையில் நடந்ததை சொல்லி “நான் தெரியாமத்தான்.. நிஜமா எதுவும் மீன் பண்ணலை” என்று ஒருமூச்சு அழுதுதீர்த்தவளை சமாதானபடுத்திய தளிர் வெளியில் வர அங்கே சிவந்த விழிகளோடு கணவரின் புகைப்படத்தின் முன் தளர்ந்து அமர்ந்திருந்த சீதாவோ, “நான் அவசரபட்டுட்டேனாங்க..?” என்று கேட்டிருந்தார்.