பூ 1:
ஓவ்வொரு மனிதனுக்கும் மனதில் ஒவ்வொரு விதமான ஆசைகள்.சிலருக்கு இளையராஜா பாடல்கள் என்றால் சிலருக்கு கண்ணதாசன் பாடல்கள். சிலருக்கு மழை பிடிக்கும்,சிலருக்கு மழையைக் கண்டாலே ஆகாது.சிலர் பிறந்து விட்டோம் என்று வாழ்கிறார்கள். சிலர் வாழ்வதற்காகவே பிறக்கிறார்கள். அதில் வெகு சிலர் தான்…வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் வாழ்கின்றனர்.
நாம் வாழும் வாழ்க்கையும் அப்படித்தான்…மனோபாவங்கள் எல்லாருக்கும் ஒன்றாய் அமைவதில்லை. அதே போல் வாழ்க்கையும் அப்படி அமைவதில்லை. கிடைத்ததை, பிடித்ததாய் மாற்றிக் கொள்கிறவர்கள் மட்டுமே புத்திசாலி. அவர்களை மட்டுமே இந்த வாழ்க்கை ஜெயிக்க வைக்கிறது. எதார்த்தங்களோடு பயணிக்கிறவர்கள் மட்டுமே….பாதையை அடைய முடியும்…!
வாழ்க்கை வாழ்வதற்கே…வாழ்ந்து காட்டுவோம்..!!!
ஈரோட்டின்…முக்கிய பிரதான வீதிகளில் இருந்து பிரிந்து… செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. அந்த வீட்டைச் சுற்றி உள்ள வீடுகள் அனைத்தும், இன்றைய நவீன தலை முறைக்கு ஏற்ப கட்டப்பட்டிருக்க, அந்த ஒரு வீடு மட்டும்…பழமையும் மாறாமல், அதே சமயம் கொஞ்சம் புதுமைகளைப் புகுத்தி…அந்த வழியில் செல்வோர் திரும்பிப் பார்க்கும் விதத்தில்…அழகியலுடன் இருந்தது.
ஈரோடு… பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், திப்பு சுல்தான் முதலானவர்களின் கையில் இருந்த போது…அவர்களுக்கு வரி வசூலித்துக் கொடுக்கும் பட்டயக்காரர்களாக… அந்த வீட்டின் முன்னோர் இருந்தனர். அவர்களின் வழியில்..அந்த பட்டையக்காரர் பரம்பரை செழித்து வளர…அதற்கு அடுத்து வந்த தலை முறையினர்..அதை மேலும் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தனர்.
பட்டையக்காரர்களாக இருந்த போது கிடைத்த அதே மதிப்பும், மரியாதையும் இன்றளவும் அவர்களுக்கு மாறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் பணம் தான் என்றாலும்…அந்த வீட்டில் உள்ளவர்களின் குணமும் அடங்கும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
விவசாய இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிச்சாலை, மஞ்சள் ஏற்றுமதி நிறுவனம், பின்னலாடை நிறுவனம்…பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம்…இப்படி இவர்களின் நிறுவனம் ஈரோடு எங்கும் விரிந்திருந்தது.
அவர்கள் தயாரிக்கும் விவசாய எந்திரங்கள்…அனைத்து முக்கிய ஊர்களிலும்…அவர்களின் சொந்த ஷோரூமிலேயே விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதற்கான மெயின் பிரான்ச் சென்னையில் இயங்கிக் கொண்டிருந்தது.
தொழில் வழிக் குடும்பம் என்பதால்..அவர்களுக்கு தொழில் வட்டாரத்திலும் நல்ல பெயர் இருந்தது. மொத்தத்தில் அந்த குடும்பம் ஈரோட்டின் ஒரு முக்கிய அடையாளம்.
அப்படிப் பட்ட அந்த குடும்பத்தில்….ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது. பரந்து விரிந்த ஹாலில்…முகம் முழுவதும் கோபத்துடன் அமர்ந்திருந்தார் ரத்னவேல். அவருக்கு அருகில், கணவருக்கு குறையாத அதே கோபத்துடன் வள்ளியம்மை நின்றிருந்தார்.
முகத்தில் எந்த வித பாவனையையும் காட்டாமல், அமைதியாய் நின்றிருந்தார் ராஜ சேகர். ரத்னவேலின் மூத்த மகன் அவர்.
அவருக்கு அருகில், முகத்தில் அதிர்ச்சியும், கோபமுமாய் அவருடைய தம்பி சுந்தர சேகரும், அவரின் மனைவி நீலாவதியும் நின்றிருந்தனர்.
இவர்களுக்கு எதிரில் ரத்னவேலின் மகள் வித்யாவும், அவரின் கணவர் சுரேஷும் நின்றிருந்தனர். வித்யாவின் முகத்தில், கோபம், அதிர்ச்சி, ஆங்காரம் என அனைத்தும் கலந்த ஒரு பாவனை.கதறிவிடத் துடித்த மனம், அதை செய்யமுடியாமல் தவிக்கும் நிலை..என வித்யாவின் நிலை தான் மோசமாக இருந்தது. தன் இரண்டு அண்ணன்களையும் அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.முக்கியமாக அப்பா, அம்மா முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை.
அவரால் எப்படி முடியும்? பாராட்டி, சீராட்டி வளர்த்த மகள்…இன்றைக்கு வந்து நிற்கும் கோலம் அப்படி.
“வொய் திஸ் அமைதி…?” என்று அவள் போக்கில் கேட்டுக், கிளுக்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள் விஷ்வ துளசி. வித்யா-சுரேஷின் மகள்.அவளுக்கு ஒரு அண்ணன்…பிரவீண் பாலா.
“தாத்தாதா…வொய் முறைச்சிபயிங்…பாத்தீஈஈஈஈஈஈஈஈஇ…யு ஆல்ஸோ…” என்றபடி பொத்தென்று அங்கிருந்த சோபாவில் விழுந்தாள் விஷ்வ துளசி.
அவளின் செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரத்னவேலிற்கு ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.
ஆனால் அதைப் பற்றி எல்லாம் விஷ்வ துளசி கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை. அவரின் கோபத்தை தெரிந்து கொள்ளும் நிலையிலா அவள் இருக்கிறாள்..???
அவளின் அப்பா…சுரேஷின் அருகில் சென்றவள்…”தெய்ய்வங்க்கள் எல்லாம் தோற்றே ப்போகும்..அப்பாஆஆஆஆ அன்பின் முன்ன்னே…!” என்று குழறலாய் பாடியவள்…”ஐ லவ் மை டாடி…” என்றாள் தடுமாறிக் கொண்டே.
“வித்யா……” என்று அந்த வீடே அதிரும் படி கத்தினார் ரத்னவேல் தாத்தா.அவர் கத்தி முடிக்க,“ஹேக்…!” என்றபடி விக்கினாள் விஷ்வ துளசி.
“அப்பா..!” என்று வித்யா கண்ணீர் விட,
“என்ன நடக்குது இந்த வீட்ல..?” என்றார் கோபமாய்.
“நீங்க நடக்குறிங்க…இதோ நான் நல்லா நடக்குறேன்…பெரிய மாமா.. சும்மா ஜம்முன்னு நடப்பாரு….” என்று வித்யாவிற்கு முந்திக் கொண்டு குழறலாய் பதில் அளித்தால் விஷ்வ துளசி.
“விஷ்வா….இப்போ அமைதியா இருக்கப் போறியா இல்லையா…?” என்று வித்யா பல்லைக் கடித்துக் கொண்டு பேச,
“மாட்டேன்…மாட்டவே மாட்டேன்…! “ என்று நடுஹாலில் சம்மணம் இட்டு அமர்ந்தாள் விஷ்வ துளசி.
அவள் தினமும் குடிப்பவள் அல்ல. இன்றுதான் முதல் முறை. அதைத்தான் அந்த குடும்பத்தில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆண்கள் குடிப்பதற்கே அந்த வீட்டில் அனுமதி இல்லை எனும் போது, பெண்களை எப்படி அனுமதிப்பார்கள்.
“விஷ்வாவ உள்ளக் கூட்டிட்டு போ வித்யா..!” என்றார் நீலாவதி. அந்த வீட்டின் இரண்டாவது மருமகள்.
“நீலா சொல்றது தான் சரி. நீ உள்ள கூட்டிட்டு போ வித்யா.எதுவா இருந்தாலும் விடிஞ்சதுக்கு அப்பறமா பேசிக்கலாம்..” என்றார் வள்ளியம்மை.
“நான் எதுக்கு உள்ள போகணும்…? சொல்லுங்க நான் எதுக்கு… உள்ள்ள…போகணும்ம்..!” என்று அவள் நிறுத்தி நிதானமாய் கேட்க,
“சொன்னா கேளு விஷ்வா….வா..!” என்று வித்யா அழைக்க,
“மாட்டேன்..!” என்று ஒரே கத்தாய் கத்தினாள்.
“என்னம்மா சத்தம்..?” என்றபடி அருண் குமார் வெளியே வந்தான். சுந்தர சேகர்- நீலாவதியின் மகன். அவனுடைய தங்கை பவித்ரா.
வெளியே வந்த அருணின் கண்களில், விஷ்வ துளசி இருந்த நிலை தெரிய, உள்ளுக்குள் குளிர் எடுத்தது அவனுக்கு.
“பாவி..! எவ்வளவு தைரியம் இவளுக்கு. நானே இதுவரைக்கும் சரக்கடிச்சது இல்லை. இவ அடிச்சுட்டு வந்தது மட்டும் இல்லாம, குடும்பத்தையே கூட்டி வச்சு லந்தக் குடுத்துட்டு இருக்காளே… ஏற்கனவே பெருசு ஆடும். இன்னைக்கு இவளுக்கு ஒரு கச்சேரியே இருக்கு..!” என்று மனதிற்குள் நினைத்தான். வெளியில் சொல்லவில்லை.
அருண் வந்து நின்றதும் ரத்னவேலின் கோபம், அவனின் பக்கம் திரும்பியது. அவரின் முறைக்கும் பார்வையைக் கண்டவன்…
“பெருசு எதுக்கு நம்மளை முறைக்குது. இந்த சம்பவத்துல நம்மோட பங்கு எதுவும் இல்லையே..?” என்ற படி முழித்துக் கொண்டிருந்தான் அருண்.
“இப்ப எதுக்கு உங்க மாமனார் என்னை முறைக்கிறார்..?” என்றான் நீலாவதியின் காதில்.
“கொஞ்ச நேரம் பேசாம இரு அருண். தாத்தா கோவத்துல இருக்காரு..!” என்றார் நீலாவதி.
“அவரெல்லாம் நிதானமா இருந்தாத்தான் ஆச்சர்யம்..!” என்றவன், லேசாக சிரித்து வைத்தான்.
அந்த சிரிப்புக்கும் ரத்னவேலின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டான்.
“விஷ்வா…! சொன்னா கேளு…முதல்ல ரூம்க்கு நட..” என்று வித்யா கொஞ்சம் கோபமாகவே சொல்லிக் கொண்டிருந்தார்.
“நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கம்மா…! மிஸ்டர் ரத்னவேலுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு. இவரு பெரிய இவரு…அப்படியே முறைக்கிறாரு. வயசானாலும் உன் கோபமும், திமிரும் உன்னைவிட்டு போகலை வேலு…!” என்று ரத்னவேலுவின் சட்டையைப் பிடித்து, குளறிப் பேசிக் கொண்டிருந்தாள். நிற்க முடியாத அளவிற்கு தள்ளாட்டம் வேறு.
“அப்படி சொல்லுடி என் அத்தை மகளே..!” என்று அருண் மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டிருந்தான்.
“துளசி என்ன இது…? தாத்தான்னு ஒரு மரியாதை இல்லாம இப்படி பேசிட்டு இருக்க..?” என்று வள்ளியம்மை சத்தம் போட,
“இது யாரு…? இந்தா வரேன்..!” என்றபடி வள்ளிப் பாட்டியின் அருகில் சென்றவள், அவரை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வையை பார்த்தாள்.
“கள்ளி..சாரி..சாரி…வள்ளி… உனக்கு என்ன மனசுல ஜான்சி ராணின்னு நினைப்பா…?ரொம்ப பேசுற நீ… நீ மட்டும் உன் புருஷனை முந்தானையில் முடிஞ்சு வச்சிருக்க. ஆனா, பாவம் நீலா அத்தை…அவங்க புருஷனும் நீ சொல்றதைத் தான் கேட்குறார். இப்படி எல்லாரையும் உன் கைப்பிடியில் வச்சிருக்க வித்தை என்ன…?” என்றபடி தள்ளாட,
“வந்த நிலைமை தப்புன்னாலும், பேசுற விஷயம் கரெக்ட்டு..!” என்று நீலாவதியும் மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டார்.
“இப்போ இவளை உள்ள கூட்டிட்டு போகலை…என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது..?” என்றார் வள்ளியம்மை.
“அதான்..உனக்கே தெரியாதுல…அப்பறம் என்னா பண்ணுவ…? இப்ப என்ன பண்ணுவ..? இப்ப என்ன பண்ணுவ..?” என்றபடி டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டாள்.
“விஷ்வா…” என்று வித்யா கத்தியது எல்லாம் அவள் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை.
சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தவள், ஒரு நிலைமைக்கு மேல், தலை சுற்றி , எதிரே வந்தவனின் மேல் பலமாக மோதி நின்றாள்.
“ஐயோ சுவத்துல முட்டிட்டேன்..!” என்றபடி நிமிர, அங்கே அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் விஜய் என்று அழைக்கப்படும் விஜய குமார்.
அவனைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவள்…
“அட நம்ம குமாரு….!” என்றபடி சிரிக்கத் தொடங்கினாள். சிரிப்பை பாதியில் நிறுத்தியவள்,
“நம்ம குமாரு இல்லை…சுமார் மூஞ்சிக் குமாரு..!” என்றபடி மீண்டும் சிரிக்க, அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை. விஜயின் கோபம் பற்றி அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அவ்வளவு நேரம் கோபமாக இருந்த ரத்னவேலு கூட, விஜய் என்ன சொல்ல போறானோ… என்றபடி அவனையே பார்த்திருந்தார்.
“அடிப்பாவி…! விஜய் அண்ணன், உனக்கு சுமார் மூஞ்சிக் குமாரா…?” என்றபடி விஜயைப் பார்த்தான்.
ஆறடி, எட்டு அங்குலம் இப்படி எல்லாம் என்னை வர்ணிக்கத் தேவையில்லை..என்பதைப் போன்ற ஒரு முகம். ஆள் பாதி ஆடை பாதி என்பதைப் போன்ற அவனின் தோற்றம். மாநிறம் தான். அவன் செய்யும் வேலையும், அவனின் அளவு கடந்த தன்னம்பிக்கையும் அவனை அழகனாகக் காட்டியதே அன்றி அவன் உருவ அமைப்பு இல்லை. மொத்தத்தில் பெண்களுக்கு பிடிக்கும் அழகு. கோபத்தைத் தவிர குறை ஒன்றும் இல்லை.
அவனின் மேல் மோதியவள், அவனை விட்டு நகராமல் இருக்க…
“விஷ்வா, பேசாம ரூமுக்கு போ..!” என்றான் அருண் வாயைத் திறந்து.
“ஷ்….பிள்ளைப் பூச்சி எல்லாம் பேசக் கூடாது..!” என்றபடி அவள் செய்கையில் சொல்ல, அவளை விலக்கி விட்டு நடக்க ஆரம்பித்தான் விஜய குமார். அவனின் நடையில் தெரிந்தது அவனின் கோபம்.
அவளும் விடாமல் அவன் பின்னால் சென்று அவனைக் கூப்பிட, கோபத்தில் அவளை தரதரவென்று இழுத்துச் சென்று அவளின் அறையில் விட்டவன், பட்டென்று கதவை அடைத்து விட்டு அவனின் அறைக்கு சென்று விட்டான். அவனின் அறைக் கதவும் அறைந்து சாத்தப்பட்டது.
“கதவைத் திறடா…பக்கி…!” என்று விஷ்வா உள்ளே கத்திக் கொண்டிருப்பது, வெளியே இருந்த அனைவருக்கும் கேட்டது.
ரத்னவேலும், வள்ளியம்மையும் அவர்கள் அறைக்கு சென்றுவிட, வித்யா மட்டும் பரிதாபமாக நின்றிருந்தார்.
“நீ போய் அவளைக் கவனி வித்யா. காலையில பேசிக்கலாம்..!” என்று நீலாவதி சொல்ல…வேறு வழியின்றி மகளைத் தேடி சென்றார். அவரின் பின்னாடியே சென்ற சுரேஷ்,
“வித்யா, அம்முவை ஒன்னும் சொல்லாத…” என்று ஏதோ சொல்ல வர, அவரை முறைத்தார் வித்யா.
“எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்..! இன்னைக்கு எல்லார் முன்னாடியும் அசிங்கப் படுத்திட்டா. புதுசா இப்போ குடிக்கிற பழக்கம் வேற..? இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கா உங்க பொண்ணு..!” என்றார்.
“இங்க பார் வித்யா. துளசி எப்பவும் இப்படி செய்யற பொண்ணா. இன்னைக்கு இப்படி வந்திருக்கான்னா…அதுக்கு வேற காரணம் ஏதாவது இருக்கும். என் பொண்ணு எப்பவும் தப்பு பண்ண மாட்டா..! விடிஞ்ச பிறகு அவளை நிக்க வெச்சு கேள்வி கேட்கிறதை நான் விரும்பலை. அதையும் மீறி யாராவது ஏதாவது சொன்னா, அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை..!” என்றார் சுரேஷ்.
“இங்க இவ்வளவு பேசுறவர், இன்னேர வரைக்கும் ஏன் அமைதியா இருந்திங்க..? அப்பா முன்னாடியே பேசியிருக்க வேண்டியது தான..?” என்றார் வித்யா.
“பேச எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு இருக்க, நான் ஒன்னும் வீட்டோட மாப்பிள்ளை இல்லை புரியுதா. இங்க இருக்குறது கூட உனக்காகத் தான்.அதுவும் என் மகளுக்காகத் தான். நியாபகத்துல இருக்கும்ன்னு நினைக்கிறேன்..!” என்றார் சுரேஷ்.
அவருடைய இந்த பேச்சிற்கு வித்யாவிடம் பதில் இல்லை. அவர் சொன்னது அனைத்துமே உண்மை என்கிற பட்சத்தில், அவரால் என்ன பேச முடியும்…?
அறைக்குள் சென்ற விஜய்க்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. அவன் வீட்டிற்கு வரும் போதே..ஏகப்பட்ட எரிச்சலில் வந்தான். அப்படி வந்தவின் கண்களில் விஷ்வ துளசி இருந்த நிலை பட, சொல்லவா வேண்டும்..?
வேகமாக தன்னுடைய செல்லை எடுத்து யாருக்கோ அழுத்தினான் விஜய். எதிர்முனையில் போனை எடுத்த பிரவீண் பாலா,
“சொல்லு விஜய்…!” என்றான்.
“எங்கடா இருக்க..? என்னத்த சொல்ல சொல்ற…? உன் தங்கச்சிய ஒழுங்கா அதட்டி வச்சுக்க…? என்ன நினைச்சுகிட்டு இருக்கா அவ மனசுல..?” என்று கத்தினான். எதிர்முனையில் இருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“விஜய் நான் சென்னைல இருக்கேன். என்னாச்சு..? எதுக்கு இவ்வளவு கோபம்..?” என்றான் பிரவீண் நிதானமாக.
“ம்ம்ம்…அதான் தங்கச்சின்ற பேர்ல ஒரு குடிகாரி இருக்காள்ள உனக்கு..?” என்றான் விஜய்.
“இங்க பாரு விஜய்….துளசியப் பத்தி தப்பா பேசாத. அப்பறம் நான் சும்மா இருக்க மாட்டேன்..!” என்று சொல்ல,
“டேய்…! உண்மையைத்தான் சொல்றேன். அவ இப்படியே குடிச்சுட்டு இருந்தான்னு வையி…அப்பறம் தாத்தா என்ன பன்னுவார்ன்னு உனக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்…!” என்றபடி போனை வைத்து விட்டான்.
“என்ன பண்ற விஜய்…! இதை சொல்லவா அவனுக்கு இப்போ நீ போன் பண்ணின..?” என்றது அவனின் மனம்.
“இல்லை..!” என்றான் உண்மையாக.
“அப்பறம் ஏன்…? என்ன பேசுறதுக்காக போன் பண்ணினியோ அதைப் பேசுறதை விட்டுட்டு, ஏன் தேவையில்லாததைப் பேசுற…?” என்று அவனின் மனம் அவனைச் சாடியது.
“இல்ல வேண்டாம். பிரவீண் தாங்க மாட்டான். இது எனக்குள்ளையே இருக்கட்டும். நானே இந்த விஷயத்தை ஹேண்டில் பண்ணிக்கிறேன்…!” என்றபடி கண்ணாடியைப் பார்த்தான். அவனின் முகமும், மனமும் அவனுக்கு பல கதைகள் சொல்லியது.
ராஜ சேகரின் ஒரே மகன் தான் விஜய குமார். சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டான். பாதி வருடம் வள்ளியம்மையின் பாசத்திலும், மீதி வருடம் நீலாவதியின் பாசத்திலும் வாழ்ந்தவன்.
எவ்வளவு சொல்லிப் பார்த்தும் ராஜ சேகர் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். அவரின் முழு உலகமும் விஜய்யும் தொழிலும் என்றானது. அதிகம் யாருடனும் பேச மாட்டார்.ஆனால் அனைவரின் மேலும் அளவு கடந்த பாசம் அவருக்கு உண்டு.
தாய் இல்லாமல் தகப்பனைப் பார்த்து வளர்ந்ததால், விஜய்யும் அப்படியே வளர்ந்தான்.எதையும் ஒரு தடவை சொன்னால், அதை அப்படியே கிரகித்துக் கொள்ளும் கற்பூர புத்தி அவனுக்கு. அதுதான் அவனுக்கு சாதகம். அதுவே தான் அவனுக்கும் பாதகமும் கூட.
தப்பே செய்தாலும்..’ஆமாம்..! செய்தேன்..!’ என்று ஒப்புக் கொள்ளும் மனதைரியம் அவனுக்கு சிறு வயது முதலே உண்டு. அதனால், இப்போது வரை எதையும் முகத்துக்கு நேரே பேசிவிடுவான். பொய் சொல்வது அவனுக்கு அறவே பிடிக்காது.
குடும்பமே தாத்தா ரத்னவேலைக் கண்டு பயந்தால், அவரே சில சமயங்களில் இவனைக் கண்டு பயப்படுவார். இவனின் கோபம் வீடறிந்த ஒன்று. அந்த கோபத்திலும் நியாயம் இருப்பதால், இதுவரை யாரும் இவனை ஒன்றும் சொன்னதில்லை.
தொழிலும் அப்படித்தான். நேக்குப் போக்குத் தெரிந்தவன்.நிறைய லாபம் கொட்ட வேண்டும் என்று என்ன மாட்டான். அதே சமயம் கொஞ்சமும் நட்டம் கூட ஆகக் கூடாது என்று நினைப்பான். மொத்தத்தில் வேகமும், விவேகமும் இருக்கும் ஒரு இளைஞன்.