“என்ன சொல்ற பவி..?” என்றான் விஜய் மீண்டும்.
“ஆமாண்ணா..! துளசி மயங்கி விழுந்துட்டா..! அதான் மாமாவும், அப்பாங்களும் சேர்ந்து ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போயிருக்காங்க..!” என்றாள் பவி.
“நீங்க எல்லாரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? நல்லது செய்றேன் நல்லது செய்றேன்னு சொல்லி, இன்னும் எத்தனை பேர் நிம்மதியை கெடுக்கக் காத்திருக்கிங்க..? நான் உங்க யார்கிட்டையாவது, எனக்கு நல்லது செய்ங்கன்னு கேட்டேனா..?” என்றவன் பிரவீனை நோக்கித் திரும்பினான்.
“உண்மையை சொல்லப் போனா, நீ ரொம்ப நல்லவன்டா..! அதான் சொந்த தங்கச்சி வாழ்க்கைன்னு கூட பார்க்காம பலி ஆக்கியிருக்க..?” என்று வேதனை நிறைந்த குரலில் சொல்ல, பிரவீனுக்கு வார்த்தையே வரவில்லை.
“எந்த ஹாஸ்பிட்டல்..?” என்றான் விஜய்.
“சாதாரண மயக்கம் தான்..!” என்றார் வள்ளியம்மை.
“உங்களுக்கு எல்லாமே சாதாரணம் தான் பாட்டி..!” என்றவன் மீண்டும் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
அங்கிருந்த அனைவரின் ஒரே கவலையும், விஜய்-துளசியை எப்படி சமாதனப் படுத்துவது என்றுதான். நீலா மட்டும் தான் இது எதிலும் கலந்து கொள்ளாத ஜீவன். இப்படி ஆனதில் அவருக்கும் வருத்தம் தான். ஆனால், ஏதோ ஒரு சிறு நிம்மதி அவருக்கு.
ஹாஸ்பிட்டலில், மயக்கம் தெளிந்த துளசிக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. சுரேஷ் அருகில் இருக்க, ராஜ சேகரும், சுந்தரும் வெளியே இருந்தனர். அவர்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கே நுழைந்தான் விஜய். அவனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது, அவர்களின் அதிர்ந்த முகத்தில் இருந்தே தெரிந்தது.
ராஜசேகரின் அருகில் வந்தவனுக்கு, ஏனோ எதுவும் பேசத் தோன்றவில்லை. அவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றான். அவனின் அந்த செய்கையை அவரால் தாங்க முடியவில்லை.
“என்னை மாதிரி கடைசி வரைக்கும் நீ துணையில்லாம போய்டக் கூடாதுன்னு தான், இந்த கல்யாணத்துக்கு நான் சரின்னு சொன்னேன் விஜய். சில விஷயங்களை மறைக்க வேண்டிய கட்டாயம். அப்படி செஞ்சா தான், இந்த கல்யாணம் நடக்கணும்ன்னு இருந்தது. அதான் மறைச்சேன். தப்புன்னா, என்னை மன்னிச்சுடுப்பா..!” என்று உக்கி உருகிப் போன குரலில் அவர் சொல்ல,
“நான் உங்ககிட்ட விளக்கம் கேட்கவேயில்லையே..!” என்றான் விட்டேறியான குரலில்.
“நீ கேட்கலைன்னாலும், சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு விஜய்..! எந்த தகப்பனும் பிள்ளைக்கு கெடுதல் நினைக்கிறது இல்லை. நல்லதுன்னு நினைச்சு செய்ற சில விஷயங்கள், சந்தர்ப்ப சூழ்நிலையால தப்பா தெரியுது, அவ்வளவு தான். அதை நீ புரிஞ்சுக்கிற நாள் சீக்கிரம் வரும்ன்னு நம்புறேன்..! அந்த நாள்.. நான் உயிரோட இருக்குறதுகுள்ள வந்துட்டா பரவாயில்லை..!” என்று அவர் சொல்ல,
“என்னண்ணா..? எதுக்கு இப்படி எல்லாம் பேசுறிங்க..? கண்டிப்பா விஜய் புரிஞ்சுப்பான்..!” என்று சுந்தர சேகர் அவருக்கு ஆறுதல் கூற, அவரை கடுப்புடன் பார்த்தான் விஜய். அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்த அறைக்குள் செல்ல,
காலையில் தேவதையாய் ஜொலித்தவள், அழுததில் கண்ணில் போட்ட மை எல்லாம் அழிந்து,கோபம், விரக்தியால் சோர்ந்து, வாடிய கொடியாய் படுத்திருந்தாள். சுரேஷ் அருகில் அமர்ந்திருக்க, விஜய்யை அவர் கவனிக்கவில்லை. துளசியை இப்படி ஒரு கோலத்தில் பார்ப்பான் என்று அன்று காலையில் யாராவது சத்தியம் செய்து சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டான் விஜய். நீண்ட நெடிய நிமிடங்கள் அவன் அப்படியே அவளைப் பார்த்துக் கொண்டு நிற்க, ஏதோ உந்த சுரேஷ் தான் திரும்பிப் பார்த்தார். பார்த்தவருக்கு அங்கு விஜய்யைக் கண்டதும் அப்படி ஒரு நிம்மதி.
“வா விஜய்..? எங்க போன..? ஏன் இப்படி பண்ண..? எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்திருக்கலாம். இப்படி மண்டபத்துலையே விட்டுட்டுப் போகத்தான் துளசியை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேனா..?” என்று என்ன கேட்கிறோம், என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் பேசி வைத்தார் சுரேஷ். அவர் கேட்ட எதுவுமே அவனின் காதில் விழுந்தபாடில்லை.
“டாக்டர் என்ன சொன்னங்க..?” என்றான் மொட்டையாக.
“அதிர்ச்சியில வந்த மயக்கம் தான். கொஞ்சம் அனீமிக்கா இருக்கா. அதான் குளுகோஸ் போட்ருக்காங்க. வேற எந்த பிரச்சனையும் இல்லை..!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கண்களைத் திறந்தாள் துளசி.
அவள் கண்களைத் திறந்ததும், அவளின் பார்வையில் பட்டது விஜய் தான். ஏதோ பிம்பம் மாறித் தெரிகிறது என்று எண்ணியவள், மீண்டும் நன்றாகப் பார்க்க, விஜய் தான் நின்று கொண்டிருந்தான். காலையில் பட்டு வேஷ்ட்டி சட்டையில் ஜம்மென்று மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்தவன், இப்போதும் அதே உடையில், முகம் இறுகி, கண்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து, அந்த இடத்தில் கடமைக்காக நிற்பவனைப் போன்று நின்றிருந்தான். மண்டபத்தில் அவனின் நியாயங்களை உணர்ந்து பேசிய துளசி, அவனைப் பார்த்ததும் காணாமல் போனாள். அவன் மாலையைக் கழட்டி எறிந்து விட்டு சென்றது மட்டும் தான் அவளின் கண் முன் நிழலாடியது.
“எதுக்காக திரும்பி வந்த..? அவ்வளவு ரோசமா போன..? இப்ப எதுக்கு திரும்பி வந்திருக்க..? உன்னோட கடமைக்கு வந்தியா..?” என்றாள் விரக்தியான குரலில். அவளின் கேள்விகளுக்கு, விஜய் எந்த பதிலையும் சொல்லவில்லை. அவனுக்கு பதில் தெரிந்தால் தானே சொல்லுவான். அவனின் மறுபக்கங்கள் தான் அவனுக்கே தெரியாதே.
“என்ன பேச்சையே காணோம்..? யாரோட அனுதாபமும் எனக்குத் தேவையில்லை..” என்றாள்.
“நான் அனுதாபத்தில் வரலை..!” என்றான் பட்டென்று.
“பின்ன..? எனக்கு வாழ்க்கை குடுக்க வந்தியா..? நீயெல்லாம் வாழ்க்கை குடுக்குற நிலமையில இந்த துளசி இல்லை..! நீ போகலாம். காலையில நடந்தது எனக்கு ஒரு கனவு. அதை நான் அப்போவே மறந்துட்டேன். என்னை ஒருத்தன் தூக்கி எறியற நிலைமையில் நான் இல்லை..!” என்று, அந்த நிலையிலும் தெளிவாக பேசினாள் துளசி.
இது தான் துளசி. கொஞ்சம் பிடிவாதம் அதிகம் என்றாலும், அதில் சுய கௌரவம் மட்டுமே நிறைந்திருக்கும். எப்போதும் அவள் தலைகுனிந்ததில்லை. அந்த பழைய நிமிர்வு மீண்டும் அவள் முகத்தில் வந்து குடியேறி இருந்தது.
“நான் வேற எந்த எண்ணத்தோடும் இங்க வரலை..! எனக்கே தெரியாம சில விஷயங்கள் நடந்திருச்சு. இதுல, உன்னோட வாழ்க்கையும் சேர்ந்து வீணாப் போறதை நான் விரும்பலை. உனக்கு என்ன தோணுதோ அதை நீ செய்யலாம்..!” என்றான் விஜய்.
“வீட்ல போய் பேசிக்கலாம் விஜய். இங்க வச்சே எல்லாத்தையும் பேசி முடிச்சுடனுமா..?” என்று சுரேஷ் சொல்ல,
“இல்ல மாமா..! சில விஷயங்கள் தெளிவாகுற வரைக்கும், என்னால வேற எதைப் பத்தியும் சிந்திக்க முடியாது..!” என்று தெளிவாகக் கூறிய விஜய்,
“நான் போய் பில் கட்டிட்டு வரேன்..! இந்த ட்ரிப்ஸ் முடிய போகுது. கிளம்பலாம் தானே..!” என்றான்.
“ஆமா விஜய்..!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அப்பா..! நீங்க போய் பில் பே பண்ணுங்க. யாரோட கரிசனையும் எனக்குத் தேவையில்லை..!” என்றாள் துளசி பட்டென்று.
“இது கரிசணை இல்லை, கடமை..!” என்று சொன்னவன், அவளைத் தீர்க்கமாகப் பார்க்க, அவன் பார்க்கும் வரை அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் துளசி.
“நீ போய் கட்டிட்டு வா விஜய்..!” என்று சுரேஷ் சொல்லும் வரை அவர்களின் முறைப்பு படலம் தொடர்ந்தது.
அங்கே கனகவேல் வீட்டில்…
“என்ன பண்ணிட்டு வந்திருக்க திவ்யா..? நான் அவ்வளவு சொல்லியும் நீ என் பேச்சை கேட்கவேயில்லையா..?” என்று கோபமாக பேசிக் கொண்டிருந்தார் கனகவேல்.
“நான் தான் தெளிவா சொன்னேன் தான..! அவனை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னேன். நீங்க முடியாதுன்னு சொன்னிங்க. அவன்கிட்ட கேட்டேன், அவனும் முடியாதுன்னு சொன்னான். அதான் சொல்ல வேண்டிய விஷயத்தை, சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லிட்டு வந்திருக்கேன். இனி அவன் வாழ்க்கையில நிம்மதியே இருக்காது..!” என்று திவ்யா ஆங்காரமாய் பேசிக் கொண்டிருக்க,
“அவனுக்கு தான் எதுவுமே தெரியாத மாதிரி இருக்கானே..! அவன் அப்படி இருக்குற வரைக்கும் எனக்கும் பிரச்சனை இல்லைதான். இருந்தாலும், நீ இப்படிப் பண்ணியிருக்க கூடாது..!” என்றார் கனகவேல்.
“என்னப்பா..? முன்னால் பொண்டாட்டியோட மகளுக்காக, மனசு வருத்தப்படுதா..? அப்படி பார்த்தா, உங்க அளவுக்கு நான் ஒண்ணுமே பண்ணலை. உண்மையைத் தான் சொல்லிட்டு வந்தேன். இதுக்கே இந்த குதி குதிக்கிறிங்க..!” என்று அவளும் காட்டமாய் பேச,
“தேவையில்லாம பேசாத திவ்யா. அவர் உனக்கு அப்பா, அதை எப்பவும் மறந்துடாத..!” என்று ராதிகா அவளை அதட்டவும்,
“எனக்கு எப்பவும் மறக்காதும்மா..! உன் புருஷனுக்கு அது மறக்காம இருந்தா சரி. சொல்லி வச்சுக்க..!” என்று சொல்லிவிட்டு சட்டை செய்யாமல் சென்று விட்டாள்.
“எது உப்புக்கல்லுன்னு நினைச்சேனோ அது வைரக்கல்லா இருந்திருக்கு. எதை வைரம்ன்னு நினைச்சேனோ, அது இப்படி உப்புக்கல்லா இருந்து தண்ணி குடிக்க வைக்குது..!” என்று விரக்தியாய் சொன்ன கனகவேல் அங்கிருந்து அகல, அதைக் கேட்ட ராதிகாவிற்கு கண்கள் கலங்கியது.
அன்று காலை வரை திருமண வீட்டின் சந்தோஷத்துடன் காணப்பட்ட, ரத்னவேல் வீடு இப்போது சாவு விழுந்த வீடு போல் அமைதியாக இருந்தது. யாரும் யாரிடமும் பேசாமல் இருக்க, துளசியோ…வித்யாவை தனக்கு அருகில் கூட விடவில்லை.
கடந்த காலம் மகளிற்கு தெரிந்த அதிர்ச்சியில் இருந்தே வித்யா மீளவில்லை. அவரின் மேல் தப்பு இல்லை என்றாலும், ஏதோ ஒரு தர்ம சங்கடம் அவருக்கு.
“எல்லாரும் இப்படியே இருந்தா என்ன அர்த்தம்..? நடந்தது நடந்து போய்டுச்சு. அதுக்காக இப்படியே ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தா, எல்லாம் சரி ஆகிடுமா..? அடுத்து நடக்க வேண்டியதைப் பாருங்க..!” என்றார் வள்ளியம்மை.
அவருக்கு பேச்சில் இருந்த தெளிவு முகத்தில் இல்லை. இருந்தாலும் யாராவது ஒருத்தர், அந்த வீட்டின் மௌனத்தை கலைத்தாக வேண்டுமே..!
“நீலா..! எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்ணு..!” என்றவர்,
“சுந்தரு..! விஷயம் வெளிய எப்படி பரவியிருக்குன்னு பாரு. தேவையில்லாத எந்த விஷயமும் எந்த மீடியாலையும் வரக் கூடாது..!” என்றார் ரத்னவேல்.
அங்கே மண்டபத்தில் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு எல்லாம் கொடுத்து விட்டு, அப்போது தான் வீடு திரும்பியிருந்தான் அருண்.
“வா..அருண்..! எல்லாம் செட்டில் பண்ணியாச்சா..?” என்றார் சுந்தர்.
“எல்லாமே முடிஞ்சதுப்பா..!” என்றான் அவன்.
“பவித்ரா..! நீ போய் விஜய்யைக் கூட்டிட்டு வாம்மா..!” என்று வள்ளி சொல்ல, மிரண்டாள் பவித்ரா. அவள் அப்படியே நிற்க,
“என்ன பவித்ரா..? உன்னைத்தான் சொல்லிட்டு இருக்கேன்..!”
“இல்லை பாட்டி..! அண்ணா, ரொம்ப கோபமா இருக்காங்க..!” என்றாள் பவித்ரா.
“நான் கூப்பிட்டேன்னு சொல்லு..!” என்று அவர் மீண்டும் அவளிடம் சொல்ல, வேறு வழியில்லாமல் விஜய்யை அழைக்க சென்றாள் பவித்ரா.
கொஞ்சம் பயத்துடன் தான் அவனின் அறைக் கதவை தட்டினாள். கோபமாக வந்து அதைவைத் திறந்த விஜய், அங்கு பவித்ரா கண்களில் பயத்துடன் நிற்பதைப் பார்த்தவன்,
“என்ன பவி..?” என்றான், முகத்தில் எதுவும் காட்டாமல்.
“பாட்டி உங்களை வர சொன்னாங்க அண்ணா..!” என்று அவள் சொல்ல, பல்லை கடித்தவனின் முகம் இறுகியது. ஆனால் அதை பவித்ராவிடம் காட்ட முடியாதே.
“நீ போம்மா..! நான் வரேன்..!” என்று அவளை அனுப்பியவன், சிறிது நேரம் கழித்தே, கீழே சென்றான்.
கீழே வந்தவன் எதுவும் பேசாமல் அங்கிருந்த சோபாவில் அமர,
“என்ன பண்ணலாம்ன்னு இருக்க விஜய்..? இப்படியே இருந்தா எல்லாம் சரியாகிடுமா..?” என்று வள்ளி தான் ஆரம்பித்தார்.
“உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா..? எப்படி எதுவுமே நடக்காத மாதிரி உங்களால பேச முடியுது..? நடந்தது சின்ன விஷயமில்லை..!” என்று சத்தமே காட்டாமல், வார்த்தைகளில் அழுத்தத்தைத் கூட்டி பேசினான் விஜய்.
“எங்களுக்கும் புரியது விஜய். அதுக்காக நடந்ததையே நினச்சுட்டு இருந்தா, அடுத்து நடக்க வேண்டியது எப்படி நடக்கும்..? துளசிக்கு நீ தாலி கட்டியிருக்க..!” என்றார் வள்ளி.
“தாலி கட்டியிருக்கேன் இல்ல..! கட்ட வச்சிருக்கிங்கன்னு சொல்லுங்க..!” என்றான் கோபமாய்.
“நீ எப்படி வேணும்ன்னாலும் எடுத்துக்க விஜய்..! ஆனா, இப்போதைக்கு உன்னோட பொண்டாட்டின்னா அது துளசி தான். நடந்ததை மறக்கப் பாரு விஜய்..!” என்றார் ரத்னவேல்.
“நடந்ததை மறக்கணுமா..? முதல்ல மறந்ததை நியாபகத்துக்கு கொண்டு வரணும். என்னைய வச்சு நீங்க ஆடுன ஆட்டம் எல்லாம் போதும்..!” என்று வெறுப்பாய் வார்த்தைகளை விட்டவன், எழுந்து செல்ல முற்பட,
“அப்போ, எங்க பேச்சுக்கான மரியாதை இவ்வளவு தான் இல்லையா விஜய்..?” என்றார் ரத்னவேல்.
“இப்போ வரைக்கும் வாயில பேசிட்டு இருக்கேன் தாத்தா. எப்போ நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது..? வீணா, என் கோபத்தைத் தூண்டாதிங்க. யார் எப்படி போனாலும், உங்க பேச்சுக்கான மதிப்பு மட்டும் போய்டக் கூடாது அப்படித்தான..?” என்றான் விஜய்.
“எங்களுக்காக பார்க்க வேண்டாம் விஜய்..! உன் அத்தையைப் பாரு..!உனக்காக மட்டும் தான் அவ எல்லாத்தையும் செஞ்சா. இப்போ, ஒரு பொண்ணைப் பெத்த தாயா, அவளோட துடிப்பு உனக்குத் தெரியலையா..?” என்று வள்ளியம்மை சொல்ல,
அதற்கு விஜய் பதில் சொல்லுவதற்கு முன்பே… எப்படி இவர்களின் பேச்சைக் கேட்டாளோ..? எங்கிருந்து கேட்டாளோ..? அவ்வளவு ஆக்ரோஷமாய் வந்தாள் துளசி.
வந்தவள், கையிலிருந்த கல்யாண புடவை முதல்,வளையல் முதல் அனைத்தையும் நடு ஹாலில் தூக்கி எறிந்திருந்தாள். அனைவரும் பிரம்மை பிடித்ததைப் போன்று பார்க்க,
“துளசி..!!!” என்ற வித்யா, கதறித் துடித்தே விட்டார்.
காலையில் அவள் உடலில் நயனமாய், நளினத்துடன் கட்டப்பட்டிருந்த புடவை, நடுஹாலில் அலங்கோலமாய் கிடந்தது. கை நிறைய அணைந்திருந்த வளையல்கள் சுக்கு நூறாக போயிருந்தது. தங்க வளையல் ஓவ்வொரு புறம் தெறித்து விழுந்திருக்க, அவள் அணிந்திருந்த அனைத்து நகைகளும், கேட்பாரற்று கிடந்தது தரையில்.
“துளசி..? என்ன பண்ணிட்டு இருக்க..? எதுவுக்கு இவ்வளவு கோபம்..? உனக்கு என்ன பைத்தியமா..?” என்று நீலாவே அதிர்ந்து கெட்டு விட்டார்.
“ஆமா அத்தை..! எனக்குப் பைத்தியம் தான். அது ஒன்னும் மட்டும் தான் இன்னும் நடக்கலை. இவங்க நடத்துற நாடகத்துல, அதுவும் கூடிய சீக்கிரம் பிடிச்சுடும்..!” என்று கத்தினாள்.
காலையில் விஜய் மாலையை கழட்டி வீசியதை விட, பல மடங்கு ஆக்ரோஷத்துடன் அனைத்தையும் வீசியிருந்தாள் துளசி. விஜய், கண்களை மூடி, தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர, கொஞ்சம் பாடுபட்டுத் தான் போனான்.
“இப்ப என்ன நடந்திடுச்சுன்னு இப்படி கத்திட்டு இருக்க துளசி. உண்மையை மறைச்சோம் தான். அதுக்காகத் தான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தோம். இது தான் சாக்குன்னு, உன் இஷ்ட்டத்துக்கு பேசிட்டு இருக்க..? ஒரு பொம்பளைப் பிள்ளைக்கு இவ்வளவு ஆங்காரம் ஆகாது..!” என்று வள்ளியம்மை அவளைத் திட்ட ஆரம்பிக்க,
“வாயை மூடுங்க முதல்ல..! நீங்கள்லாம் ஒரு பொம்பளையா..? என்னை பேச வந்துட்டிங்க..? காலையில இவன் மாலையைக் கழட்டி வீசும் போது, பார்த்துட்டு தான நின்னிங்க..? அதே மாதிரி இப்பவும் நிக்க வேண்டியது தானே..? ஆம்பளை செஞ்சா எதுவும் தப்பில்லை. அதே, அதை நாங்க செஞ்சுட்டா எல்லாமே தப்பு..! அப்படித்தான..?” என்று அவள் கத்த,
‘துளசி..!’ என்று வந்த வித்யா, அவளை ஓங்கி ஒரு அறை அறைய, அவளுக்கு அப்போதும் ஆங்காரம் குறையவில்லை.
“அவங்க வயசென்ன..? உன் வயசென்ன..? அவங்களைப் பார்த்து எப்படி, அப்படி ஒரு பேச்சை நீ பேசலாம்..?” என்றார் வித்யா.
“நான் அப்படித்தான் பேசுவேன். உங்கம்மா உங்களுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சதோட நின்னிருக்கணும். அதே மாதிரி எனக்கும் பண்ணி வச்சு.. இதெல்லாம் தேவையா..?” என்றாள் துளசி.
“இதென்ன நாக்கா..? இல்லை வேற எதுவுமா..? எதுக்கு அதையே பிடிச்சுட்டு தொங்குற..? எனக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சாங்கதான், இல்லைன்னு சொல்லலை. ஏன்? அப்படி பண்ணாங்க… எனக்கு வாய்ச்சவன் சரியில்லை. அதனால் அப்படி பண்ணாங்க. ஆனா, உனக்கு என்ன பிரச்சனை..? விஜய் மாதிரி ஒருத்தனை தேடுனாலும் கண்டு பிடிக்க முடியுமா..?” என்று கேட்ட வித்யாவிற்கு கண்ணீரும் சேர்ந்து வர,
“இவனும் விதிவிலக்கு இல்ல. இவனும் அதே பொறுக்கி தான். அதெப்படி..? எல்லாம் நியாபகம் இருக்கும், பொண்டாட்டியை மட்டும் மறந்திடுவானா..?” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளின் கழுத்தை நெரித்து விட்டான் விஜய்.
“விஜய்..! விடு அவளை..!” என்று ஆளாளுக்கு சொல்ல,
“ஏதோ.. என் மேலயும் தப்பிருக்கு அப்படின்னு தான் பேசாம இருக்கேன். ஆனா, அதையே அட்வான்ட்டேஜா எடுத்துகிட்டு நீ பேசிட்டு இருக்குறதை எல்லாம் கேட்டுட்டு சும்மா இருக்க, நான் ஒன்னும் சொம்ப பய இல்லை.. ஜாக்கிரதை..!” என்றவன் அவள் கழுத்தை விட, அவன் பிடித்த இடம் சிவந்திருந்தது.
“என்ன பண்ணிட்டு இருக்க விஜய்..? அதுக்காக நீ அவ கழுத்தை பிடிப்பியா..?” என்று சுரேஷ் சண்டைக்கு வர, அவரைப் பார்த்தவனின் கண்களில் பொறி பறந்தது.
“கல்யாணம் நடந்த வீட்ல, கருமாதி நடக்க வச்சிடாதிங்க..?” என்றவன் அங்கிருந்து செல்ல முற்பட,
“எனக்கு டிவேர்ஸ் வேணும்..!” என்றாள் துளசி பட்டென்று. அந்த வீட்டில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அப்படி ஒரு அமைதி.
“துளசி..!!!” என்ற அதிர்ந்த குரல்கள் மட்டுமே.
“எஸ்..! எனக்கு கண்டிப்பா டிவேர்ஸ் வேணும்..! என்னால இவனோட மனைவின்னு கூட சொல்ல முடியாது. இனி என்னோட விஷயத்துல மத்தவங்க முடிவு எடுக்குறதை என்னால் அனுமதிக்க முடியாது..!” என்றாள் உறுதியாக.
“துளசி..? இது விளையாட்டு காரியமில்லை..!” என்றார் சுரேஷ்.
“விளையாட்டா கூட என்னால ரெண்டாவதா இருக்க முடியாதுப்பா. அதான் முதல்லயே மாட்டேன்னு சொன்னேன். எல்லாம் கட்டாயப்படுத்தி செஞ்சு வச்சிங்க. இப்போ, இவனுக்கு முதல் பொண்டாட்டி யாருன்னே தெரியலை. இதெல்லாம் இவனுக்கு தெரிய வச்சு, அவளோட நினைவை மறுபடியும் மறக்க வச்சு, தியாகிப் பட்டம் வாங்கி, இவன் கூட குடும்பம் நடத்த, நான் ஒன்னும் சராசரி பொண்ணு கிடையாது. நான் துளசிப்பா..! பேர்ல இருக்குற அதே புனிதம் வாழ்க்கையிலையும் இருக்கனும்ன்னு நினைக்கிறவ. என்னால முடியாது. கண்டிப்பா, விவாகரத்து வேணும்..!” என்றாள் உறுதியாக.
“அடுத்து இன்னொரு கல்யாணம் நீ பண்ணிகிட்டாலும்… அதுவும் ரெண்டாவது தாலி தான்..!” என்றார் வள்ளி. ஏனோ அந்த வார்த்தைகள் அவளை ஊசியாய் தைத்தது மனதை.
“கல்யாணமா..? இனி என் வாழ்க்கையில அந்த பேச்சுக்கே இடமில்லை..!” என்றவள், அடுத்த நிமிடம் அங்கு நிற்கவில்லை.
“என்னங்க இவ இப்படி பேசிட்டு போறா..?” என்று வள்ளியம்மை தன் அழுகையை ஆரம்பிக்க, விஜய்யோ இறுகிப்போய் இருந்தான்.
“அப்பா..! லாயரை வர சொல்லுங்க..! என்னால யாரோட வாழ்க்கையும் பாதிக்கப் பட வேண்டாம். யாரோட சுதந்திரத்தையும் நான் பறிக்க விரும்பலை. எல்லாத்துக்கும் நான் தயார்..!” என்றவன், அங்கிருந்த பூ ஜாடியை தள்ளி விட்டு சென்றான் கோபத்தில்.
“யாரோட கண்ணுப் பட்டுச்சோ தெரியலையே..? என் குடும்பம் இப்படி சிதறிக் கிடக்குதே..!” என்று வள்ளியம்மை, அந்த இடத்திலேயே அமர்ந்து அழ ஆரம்பிக்க, வித்யாவிற்கு கண்ணீர் எல்லாம் வற்றிப் போயிருந்தது.
“அவ இஷ்ட்டப்படியே விட்டுடுங்க..! அவளுக்கு எது சரின்னு தோணுதோ அதையே செய்யட்டும்..!” என்றார் வித்யா.
“என்னடி..? நீயும் இப்படி சொல்ற..?
“வேற நான் என்ன சொல்லனும்ன்னு எதிர்பார்க்கிறிங்க..? எல்லாம் விஜய் பார்த்துப்பான் அப்படிங்கிற நம்பிக்கைல தான், நானும் அவளை வற்புறுத்தி சம்மதிக்க வச்சேன். இப்போ, அவனுக்கே இதுல விருப்பம் இல்லைங்கும் போது, நான் என் பொண்ணோட வாழ்க்கையைத் தான் பார்க்க முடியும்..!” என்று சொன்னவர், அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க, ராஜ சேகர் மட்டும் எதுவும் பேசவில்லை. அவர் அப்படி ஒரு அமைதியாய் இருந்தார். இருந்த களேபரத்தில் அவரை யாரும் கவனிக்கவில்லை. ஒரு வேளை கவனித்து இருந்தால், பின்னால் வர இருப்பதை தடுத்திருக்கலாமோ என்னவோ..?
“அருண்..! போன் போட்டு, பிரவீனை உடனே வர சொல்லு..!” என்றார் ரத்னவேல். அருணுக்கும் அதுவே சரியென்று பட, போனுடன் சென்று விட்டான்.
அங்கே அறையில், கைகளை வைத்து கண்களை மறைத்தபடி,கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தான் விஜய். அவனுடைய மனப் போராட்டங்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை, இன்று நேற்றா அனுபவிக்கிறான். அவன் படும் பாடு, அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
துளசியும் அவள் அறையில் அப்படித் தான் படுத்திருந்தாள். உள்ளம் உலை களமாய் கொதிக்க, கண்களின் ஓரம் கசிந்து கொண்டிருந்த கண்ணீர் மட்டுமே, அவளுடைய அப்போதைய ஆறுதல்.
இருவரின் அறையும் அடுத்த அடுத்த அறைதான். இருவரின் மன நிலையம் ஒன்று தான். இருவரும் இருவேறு துருவங்களைப் பார்த்து சாய்ந்திருக்க, அருகில் இருக்க வேண்டிய அவர்களின் மனங்கள் மட்டும் இருவருக்கும் எட்டாத தூரத்தில்.
அங்கே சுரேஷ் வீட்டில், ஹாலில் சாய்ந்து அமர்ந்திருந்த பிரவீனுக்கு, நியாபகங்கள் பின்னோக்கி செல்ல, அவனுக்கு முன்னால் இருந்த சுவரில், மாலையிடப்பட்டிருந்த போட்டோவில் சுரேஷின் தாய், தந்தையர் சிரித்துக் கொண்டிருந்தனர். பிரவீனின் தாத்தா,பாட்டி.
பூ மலரும்…!!!!