திவ்யாவின் வடிவில் வந்த சூரைக் காற்று சிலர் மனங்களை அடியோடு சாய்த்திருந்தது. அலைகள் அற்ற கடலைப் போல் அந்த திருமண மண்டபம் அமைதியாக காட்சியளித்தது. யாருக்கும் என்ன செய்வதென்றும் புரியவில்லை, என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. எதற்கும் கலங்காத துளசியே கலங்கி நின்றாள். விஜயின் மனதை அவளால் அப்பொழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லோரையும் விட பிரவீன் தான் மிகவும் சோர்ந்து காணப்பட்டான். விஜய்யின் பின்னால் செல்லும் அளவிற்கு அவனுக்கு உடலிலும் தெம்பில்லை, மனதிலும் தெம்பில்லை. சில விஷயங்களை விஜய்யிடம் இருந்து மறைக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு. திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பேச, சில மணி நேரங்களில் அங்கிருந்த கூட்டம் அனைத்தும் காணாமல் போயிருந்தது.
துளசிக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. துளசியும் யாரையும் தன் அருகே நெருங்க விடவில்லை. அவள் எதையும் எதிர்பார்த்து இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றாலும், மனதின் ஏதோ ஒரு மூலையில் அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த வலியை யாரும் அறியா வண்ணம் மனதிற்குள் புதைத்துக் கொண்டாள்.
ராஜசேகரும் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். மகனுக்கு தன் மீதும் கோபம் இருக்கும் என்று எண்ணினார். வித்யாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.தன் மகளுக்காக பார்ப்பதா? இல்லை, தன் அண்ணன் மகனுக்காக பார்ப்பதா? என்று பரிதவித்துப் போய் நின்றிருந்தார். தன்னுடைய பெண்ணின் கழுத்தில் தாலி ஏறிய சில நிமிடங்களில் விஜய் வெளியே சென்றது அவருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருந்தது. துளசி கட்டாயமாக இந்த திருமணத்திற்கு மறுத்தது சரியோ? என்று கூட எண்ண ஆரம்பித்து விட்டார் வித்யா.
“ஆளாளுக்கு இப்படி இருந்தா என்ன பண்றது..?. யாராவது விஜய்யை போய் கூட்டிட்டு வர்ற வழிய பாருங்க. எடுத்துச் சொன்னா என் பேரன் புரிஞ்சுக்குவான். என் பேத்தி இப்படி தனியா நிக்கிறதுக்குத் தானா இந்த கல்யாணத்தை நடத்த ஆசைப்பட்டேன்..” என்று வள்ளியம்மை புலம்ப ஆரம்பித்தார்.
வள்ளியம்மை அப்படிச் சொல்லவும், அவரை வெறுப்புடன் பார்த்தாள் துளசி.
அவளின் பார்வைக்கான அர்த்தம் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வள்ளியம்மைக்கு நன்றாகவே புரிந்தது. அதே நேரத்தில் விஜய்யின் மீது அவருக்கு கொஞ்சமும் நம்பிக்கை குறையவில்லை. எப்படியும் அவன் திரும்பி வந்து விடுவான் என்று எண்ணினார்.
“அப்படி பார்க்காத துளசி…! நான் உங்க ரெண்டு பேரோட நல்லதுக்காகத்தான் இதெல்லாம் பண்ணினேன். விஜய் அப்படி எல்லாம் போறவன் கிடையாது. அவன பத்தி உனக்கு தெரியாதா?” என்றார் வள்ளியம்மை.
“அவன் அப்படிப் போறவன் இல்லைதான்..! ஆனா, நீங்க..?”என்றவள்,
“அவனுக்கு, நடந்த எந்த விஷயமுமே தெரியல. அவனுக்கு தெரியாது அப்படிங்கிற விஷயமே, எனக்கு இப்பதான் தெரியுது. இதை கூட என்கிட்ட இருந்து மறைச்சு இருக்கீங்க. இத்தனை நாள் இது தெரியாம, நான் அவனைப் தப்பா நினைச்சுட்டு இருந்திருக்கேன். இன்னும் என்னவெல்லாம் எங்க கிட்ட இருந்து மறைச்சு இருக்கீங்க? ஒரேடியா சொல்லிடுங்க…!” என்று வள்ளியம்மையிடம் கத்தியவள், பிரவீனை நோக்கி திரும்பினாள்.
“நீ எனக்கு அண்ணன் தான..? நான் எதையாவது உன்கிட்ட மறச்சிருக்கேனா..? இல்லை உனக்கு ஏதாவது கெடுதல் தான் பண்ணியிருக்கேனா..? எதுக்கு இப்படி பண்ணின..? ஏன் எல்லாரும் சேர்ந்து என் வாழ்க்கையில விளையாடுனிங்க…?” என்று ஆக்ரோஷமாய் கத்த ஆரம்பித்தாள் துளசி.
“சத்தியமா உன் வாழ்க்கையில விளையாடனும்ன்னு நினைச்சு இதைப் பண்ணலை துளசி..! என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா..? என்னால உனக்கு கெடுதல் நினைக்க முடியுமா..?” என்று பிரவீன்.
“இதுவரைக்கும் இல்லை..! ஆனா, இப்ப நடந்திருக்கே..? இதுக்கு என்ன சொல்லப் போற..? இன்னும் எத்தனையை என்கிட்டே இருந்து மறைச்சிருக்க..?” என்று அவன் சட்டையைப் பிடித்து கத்திக் கொண்டிருந்தாள் துளசி.
“துளசி, இந்த அண்ணனை நம்பு..! கண்டிப்பா உன்னோட நல்லதுக்காகத் தான் இப்படி செஞ்சோம்..!” என்று அவன் மீண்டும் அதையே சொல்ல,
“போதும்..! உங்களையெல்லாம் நம்பி நம்பி.. நான் இப்போ வந்து நிக்கிற இந்த நிலைமை வரைக்கும் போதும்..! இனி தயவு செஞ்சு யாரும் என் விஷயத்துல தலையிடாதிங்க..! அதுக்கான அருகதையை நீங்க எல்லாம் எப்பவோ இழந்துட்டிங்க..!” என்றவளால், அதற்கு மேல் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை. அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள், ஒரு கட்டத்தில் வெடித்து சிதற, இதுவரை அப்படி ஒரு அழுகையை துளசி அழுததே இல்லை எனலாம். இதுவரை என்று கூட சொல்ல முடியாது. ஏனென்றால், துளசி அவ்வளவு சீக்கிரம் எதற்கும், எப்போதும் கலங்க மாட்டாள். உணர்வுகளையும் வெளிக்காட்ட மாட்டாள். ஆனால் இன்று, ஏதோ ஒன்று அவளுக்குள் உடைந்து போனது. இத்தனை நாள் இருந்த தைரியம் எல்லாம் நிமிடத்தில் மறைந்து போனது போல் ஆனது அவளுக்கு.
‘நான் என்ன பண்ணேன்..? இவங்க சொன்னதைக் கேட்டது என் தப்பா..? அவன் கையால தாலி வாங்கிகிட்டது என் தப்பா..? எல்லாம் தெரிஞ்சும் இப்படி கல்லு மாதிரி நிக்கிறேனே..? இதுவும் என் தப்பா..?’ என்று அவளின் மனம் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டுக் கொண்டிருக்க, அந்த உணர்வுகள், கோபங்கள் எல்லாம் வெளியே கண்ணீராய் வெளியேறிக் கொண்டிருந்தது.
“துளசி..!!!” என்று கலங்கிய விழிகளுடன் வித்யா அவளின் கையைப் பிடிக்க, பட்டென்று உதறினாள் வித்யாவின் கையை.
“என் பக்கத்துல வராதிங்க..? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..? நீங்க எனக்கு அம்மாவே இல்லை..! நீங்க அவனுக்கு நல்ல அத்தையா இருந்திருக்கிங்க..? ஆனா, எனக்கு ஒரு நல்ல அம்மா இல்லை. இப்ப உங்களுக்கு சந்தோஷமா..? இதைத்தான எதிர்பார்த்திங்க..? உங்க பொண்ணு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்வேன்னு தான நினைச்சிங்க..? பாருங்க, இன்னும் நல்லா பாருங்க..!
ஏதோ ஒரு வகையில உங்க எல்லாருக்காகவும் ஒத்துகிட்ட கல்யாணம் தான், இல்லைன்னு சொல்லலை. ஆனா, இப்படி தாலிகட்டி அஞ்சு நிமிஷத்துலயே இப்படி நிப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கலை. என்ன இல்ல என்கிட்டே..? நான் அழகா இல்லையா..? இல்ல அறிவா இல்லையா..? இல்லை கை,கால் முடமா இருக்கேனா..? எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிச்சு, இப்படி ஒரு ஆகாத கல்யாணத்தை எனக்கு செஞ்சு வச்சிங்க..? ஏன் என்கிட்டே இதையெல்லாம் மறைச்சிங்க..? நான் இப்படி கூனி குறுகி நிக்குறதை பார்க்குறதுக்கா..?” என்று கத்த ஆரம்பித்தாள் துளசி. அவள் மனதில் உள்ள வலிகள் எல்லாம் வார்த்தைகளாய் வெளியே வந்து கொண்டிருந்தது. அவள் மனதிலும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறதே..? அந்த ரகசியம் தந்த வேதனையாகக் கூட இருக்கலாம்.
“அப்படி எல்லாம் பேசாத துளசி..! நாங்க எப்படி கெடுதல் நினைப்போம். அதுலயும் நான் உன் அம்மாடி..!” என்று வித்யா கதற,
“அதுவே எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு. நீங்கதான் என்னைப் பெத்திங்களா..?” என்றாள் பட்டென்று.
“துளசி..!!!!”
“இந்த கேள்வி இன்னைக்கு நேத்திக்கு இல்லை. எனக்கு ரொம்ப நாளாவே இருக்கு. உங்களுக்கு எப்பவும் அந்த விஜய் தான் பெருசு..!” என்று சொல்ல, அவள் பேசுவதை கேட்க முடியாத வித்யா, சுரேஷிடம் சென்றார்.
“நீங்களாவது அவளுக்கு சொல்லி புரிய வைங்க..!” என்று சொல்ல, தன் மகளின் வேதனையைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ், இப்போது துளசியின் பக்கம் நின்றார்.
“நீங்க எல்லாரும் சொன்னிங்கன்னு தான் நானும் சரின்னு சொன்னேன். ஏன்னா விஜய் மேல எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனா, இப்படி மாலையைக் கழட்டி வீசிட்டு போவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. இந்த இடத்துல நான் என் பொண்ணுக்காகத் தான் நிற்பேன்..!” என்று சுரேஷ் உறுதியாக சொல்லி விட, ஏனோ அவரின் வார்த்தைகள் மட்டுமே துளசிக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
“அருண்..! விஜய்க்கு போன் போடு..!” என்று ரத்னவேல் சொல்ல,
“அண்ணனோட போன், என்கிட்டே தான் தாத்தா இருக்கு..!” என்றான் அருண்.
“சுந்தரம்..! நீங்க எல்லாரும் என்ன செய்வீங்களோ தெரியாது, விஜய் எங்க இருந்தாலும் இங்க வந்தாகணும்..!” என்று ரத்னவேல் சொல்ல,
“உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா..? நீங்க அவன்கிட்ட இருந்து எவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சிருக்கிங்க தெரியுமா..? செய்றதையும் செஞ்சுட்டு, அவன் உடனே வந்தாகனும்ன்னு சொல்றிங்க..? நீங்கள்லாம் மனுஷங்க தானா..?” என்றாள் துளசி.
“துளசி..! நாங்க பேசுறதே உனக்காகத் தான்..! மேடையிலையே அவன் மாலையை வீசிட்டு போனது, இந்நேரம் வெளிய தெரிய ஆரம்பிச்சு இருக்கும். அது நம்ம குடும்பத்துக்கும் நல்லதில்லை. உனக்கும் நல்லதில்லை..!” என்று ரத்னவேல் சொல்ல,
“எவன் எப்படிப் போனாலும் பரவாயில்லை. உங்களுக்கு உங்க குடும்ப கவுரவம் முக்கியம் இல்லையா..? என்னையும் எங்க அப்பாவையும் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது..? என் அப்பா, உங்க மகளுக்கு ரெண்டாவதா ஒரு வாழ்க்கை குடுப்பார். அவரோட மக நான், உங்க பேரனுக்கு ரெண்டாவதா வாழ்க்கை குடுக்கணும்..! என்ன ஒரு சுயநலம் உங்களுக்கு..?” என்று துளசி கேட்க, அவளின் கேள்வியில் அதிர்ந்து நின்றது அந்த மொத்த குடும்பமும் தான். முக்கியமாக இளையவர்கள். அவர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாதே..?
“பார்த்து பேசு துளசி..!” என்று வள்ளியம்மை சொல்லிக் கொண்டிருக்க, வித்யா திக் பிரமை பிடித்ததைப் போன்று ஆனார். எந்த ஒரு விஷயம் பிள்ளைகளுக்குத் தெரிய கூடாது என்று அவர் நினைத்தாரோ, அது இப்போது வெளியே வந்து விட்டது. அதுவும் இப்படியான சூழலில், அதுவும் துளசி வாயால் வெளியே வரும் என்று வித்யா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“துளசி..! உனக்கு அப்பாவா.. எனக்கு சில கடமைகளும்,பொறுப்புகளும் இருக்கு. அதே மாதிரி ஒரு கணவனா எனக்கு சில கடமைகள் இருக்கு. என்னோட மனைவியை எந்த இடத்திலும் மரியாதை குறைவா நடத்துறதை நான் அனுபவிக்க முடியாது..!” என்று துளசியை அதட்டினார் சுரேஷ்.
“சபாஷ்ப்பா..! ரொம்ப பிரமாதம்..! உங்க மனைவி உங்களுக்கு முக்கியம்ன்னு சொல்லாம சொல்லிட்டிங்க..? ஆனா, எனக்குத் தாலி கட்டுனவன், அடுத்த நிமிஷம் விட்டுட்டு போய்ட்டான். இப்படி எல்லார் முன்னாடியும் அலங்கோலமா நிக்கணும்ன்னு எனக்கு என்ன தலை எழுத்தா..? இப்படி ஒரு நிலைமையை உருவாக்கினது யாரு..? உங்க மனைவி தான..? படிச்சு படிச்சு சொன்னேனே..? இந்த கல்யாணம் நடந்தா, யாருக்கும் நிம்மதி இருக்காதுன்னு. யார் கேட்டிங்க..? ஆனா, இப்போ நான் எதுவும் பேசக் கூடாது அப்படித்தானே..?” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, அழுது கொண்டிருந்தாள் துளசி.
“துளசி..! அழாதடா..! அப்பா இருக்கேன்..” என்று சுரேஷ் அவளை சமாதானப் படுத்த,
“இல்லை..! எனக்கு யாரும் இல்லை..! எனக்கு யாரும் வேண்டாம்..! போங்க எல்லாரும்..! போங்க எல்லாரும்..அப்படியே போய்டுங்க..!” என்று அழுகை மறந்து கத்த ஆரம்பித்தாள்.
“துளசி, சொல்றதை கேளுமா..!” என்று வள்ளி சொல்ல,
“யாரும் கிட்ட வராதிங்க..? போய்டுங்க..! என்னைத் தனியா இருக்க விடுங்க..!” என்று தன் அருகில் வந்தவர்களை தள்ளி விட்டுக் கொண்டிருந்த துளசி, அப்படியே மயங்கி சரிய,
“துளசி..! துளசி..! என்னைப் பாருமா..? அப்பாவைப் பாருமா..?” என்று சுரேஷ் பதட்டத்துடன் பேசி கொண்டிருக்க, அவள் மயங்கியதைப் பார்த்த வித்யா அப்படியே மடங்கி அமர்ந்து விட்டார்.
“அருண்..! காரை எடு..! சீக்கிரம்..!” என்றவர் துளசியை தூக்கிக் கொண்டு செல்ல, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
“பிரவீன்..! நாங்க ஹாஸ்பிட்டல் போறோம்..! நீ என்ன செய்வியோ தெரியாது. விஜய்யோட தான் வீட்டுக்கு வரணும்..!” என்று சொல்லிவிட்டு, ராஜ சேகரும், சுந்தர சேகரும் செல்ல, இதையெல்லாம் பார்த்த வள்ளியம்மை,
“ஆத்தா பரமேஸ்வரி..! இந்த கொடுமையை எல்லாம் பார்க்குறதுக்கு, உன்கிட்டயே கூப்பிட்டுக்க ஆத்தா..!” என்றவரின் கண்களிலும் கண்ணீர்.
காரை எடுத்துக் கொண்டு சென்ற விஜயோ..இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தான். எங்கு செல்கிறான்..? ஏன் செல்கிறான்..? என்று அவனுக்கும் தெரியவில்லை. அந்த காருக்கும் தெரியவில்லை.
அவனின் முகம் முழுவதும் கோப ரேகைகள். அளவுக்கு அதிகமாக சிவந்திருந்த முகமும், இறுகிப் போயிருந்த மனமும், உடலும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனது தான் பரிதாபம்.
“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருச்சா..? அப்படின்னா, என்னோட மனைவி எங்க..? என்கூட ஏன் இல்லை..? இவங்க ஏன் இதை என்கிட்டே இருந்து மறைச்சாங்க..? இவ்வளவு பெரிய விஷயத்தை மறைக்கிற அளவுக்கு என்ன நடந்தது..? இதனால தான் துளசி என்னை கண்டாலே, விலகி விலகிப் போனாளா..? அந்த திவ்யா என்னை உரசிகிட்டு வந்து நின்னாலே, அதுக்கு இதுதான் காரணமா..? அவளோட அக்காதான் என்னோட மனைவின்னா.. இத்தனை நாள் அவ ஏன் என்கிட்டே சொல்லலை. அப்போ அந்த கனகவேல் எனக்கு மாமனாரா..? வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தும் ஏன் மறச்சாங்க..? அன்னைக்கு அந்த கனகவேல், வீட்ல வந்து உரிமையா பேசுனதுக்கு கூட இதுதான் காரணமா..?” என்று விடை தெரியாத பல கேள்விகள் அவன் மனதிற்குள் அணி வகுத்து, அதை யோசித்து, குழம்பி.. அதனால் அனைவரின் மீதும் கோபம் கொண்டு, இப்போது சென்று கொண்டிருக்கிறான்.
“எல்லாரும் சேர்ந்து உன்னை முட்டாள் ஆக்கியிருக்காங்க விஜய்..!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், அந்த ஆள் அரவமற்ற சாலையில் காரை நிறுத்தினான். அப்படியே சீட்டில் பின் நோக்கி சாய்ந்தவனுக்கு எந்த நினைவுகளும் வரவில்லை. மனைவி என்பவளின் முகம் கூட அவன் கண்களுக்குத் தெரியவில்லை. துளசியுன் முகம் மட்டுமே, அதுவும் இன்று மணகோலத்தில் பார்த்த அந்த தேவதையின் வடிவம் மட்டுமே அவனுக்கு கண் முன்னால் வந்தது.
“இது எப்படி சாத்தியம்..? எது மறந்தாலும், எப்படி அவள் முகம் எனக்கு மறந்து போகும்..? அப்படி என்ன நடந்திருக்கும்..?” என்று மீண்டும் யோசித்தான் விஜய்.
“இதை நீ பிரவீன்கிட்ட கேட்டுத் தெரிச்சுக்கோ விஜய்..! நடந்தது என்னன்னு அவனுக்குத் தான் முழுசா தெரியும்..!” என்று மனசாட்சி சொல்ல,
“நோ..! நான் இனி அவனை நம்புறதா இல்லை..!எனக்கு இதை அவன் முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு பிரச்சனை இல்லை. இந்த துளசி கூட என்கிட்டே இருந்து மறைச்சிட்டா..?” என்றவனுக்கு, மனதில் வேதனை குடி கொள்ள,
“முட்டாள் மாதிரி யோசிக்காத விஜய்..! உனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குறதே அவளுக்குத் தெரியாது. அப்பறம் எப்படி அவ சொல்லுவா..?” என்று விஜய்யின் மனம், துளசிக்கு ஆதரவாக வாதாடியது.
“ஆமா..! அவ விலகி விலகி தான் போனா..? நான் தான் தப்பா நினச்சுட்டேன்..!” என்றவன், மீண்டும் மீண்டும் யோசிக்க, நினைவுகள் திவ்யா வந்து பேசிய பேச்சிற்கு சென்றது மீண்டும்.
“என் அக்காவை சாகடிச்சுட்டு, நீ மட்டும் ரெண்டாவது கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பியா..?” என்ற திவ்யாவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் விஜய்யின் காதுகளுக்குள் ஒலிக்க, பட்டென்று கண் திறந்தான் விஜய்.
“அப்போ, என்னோட மனைவி உயிரோட இல்லை. அவளுக்கு என்ன நடந்தது..? துளசி எனக்கு ரெண்டாவது மனைவியா..?” என்று நினைத்தவனுக்கு அந்த நினைவே கசந்தது. ஆம், துளசி அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் அவனுக்குத் தெரியுமே.
துளசிக்கு வாழ்க்கையில் இரண்டாது என்ற விஷயமே பிடிக்காது. அது படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி.
“நான் எப்படி அவனே உலகம்ன்னு இருக்கேனோ, அதே மாதிரி எனக்கு வரப் போற புருஷனுக்கும் நான் மட்டும் தான் எல்லாமே. ஒருத்தனுக்கு ஒருத்தி தான். இதுல நான் எப்பவுமே உறுதியா இருப்பேன்..!” இது தான் துளசி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.இந்த திருமண பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்னால் வரைக்கும், குறிப்பாக விஜய்யைக் கண்டுவிட்டால், இந்த வார்த்தைகளை கண்டிப்பாக சொல்லிவிடுவாள். அதற்கான அர்த்தம் அப்போது அவனுக்கு விளங்கியிருக்கவில்லை. இப்போது தான் ஒவ்வொன்றாய புரிய ஆரம்பித்திருக்கிறது.
எது எப்படி இருந்தாலும், அவன் மாலையைக் கழட்டி எரியும் போது, துளசியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி, இப்போதும் விஜய்யின் கண் முன்னே விரிந்தது..! அவளின் முகத்தில் தெரிந்த அந்த பாவனை, இது வரை அவன் துளசியிடம் கண்டிறாத ஒன்று. எப்போதும் நிமிர்வுடன் தெரியும் துளசி, எதற்கும் பயபடாத துளசி, எதையும் முகத்திற்கு நேராக சொல்லிவிடும் துளசி என்று இதுநாள் வரை இப்படியான பாவனைகளைத் தான் அவளிடம் கண்டிருக்கிறான் விஜய். ஆனால் இன்று..?
‘என்ன பண்ணியிருக்க விஜய்..? எல்லாரும் சேர்ந்து செஞ்ச தப்புக்கு, அவ என்ன பண்ணுவா..? இந்த கல்யாணமே வேண்டாம்ன்னு தான சொன்னா..? எல்லாரும் அவளை கட்டாயப்படுத்தி இதுக்கு சம்மதிக்க வச்சப்பவே, நீ அவகிட்ட தெளிவா பேசியிருக்கனும். உன் மேலையும் தப்பு இருக்கு. அவளோட வெறுப்புக்கு பிரவீன் சொன்ன காரணமே சரின்னு இருந்தது உன் தப்பு. ஒரு ஆணா, உனக்கே இவ்வளவு வலிக்கும் போது, ஒரு பொண்ணா அவ எவ்வளவு வேதனையை அனுபவிச்சுக்கிட்டு இருப்பா..? என்ன நடந்திருந்தாலும், நீ இப்படி மாலையை கழட்டி எறிஞ்சுட்டு வந்திருக்க கூடாது..! எல்லாரும் சேர்ந்து செஞ்ச தப்புக்கு, அவளை மட்டும் பலிகடா ஆக்கியிருக்கக் கூடாது. தாலி கட்டி பத்தி நிமிஷத்துல நீ வந்தது, அவளுக்கு எவ்வளவு பெரிய அவமானம். சாதாரண பொண்ணுங்களாலேயே தாங்க முடியாது,அதிலையும் துளசி..??’ என்று விஜய்யின் மனம் அவனைக் சுக்கு நூறாய் உடைத்துக் கொண்டிருந்தது.
ஏற்கனவே தெளிவில்லாமல் கலங்கியிருந்த அவனின் மூளையும், மனதும் இப்போது இன்னும் கலங்கியிருக்க, அதில் இருந்து விஜய்யால் உடனே வெளிய வர முடியவில்லை. அவ்வளவு மன அழுத்தங்களும் சேர்ந்து அவனைப் பாடாய் படுத்த, அந்த அழுத்தம் ஒரு சொட்டு கண்ணீராய் விழ, அப்போது தான் நிஜம் உறைத்தது விஜய்க்கு.
ஆண்கள் அழக் கூடாது என்று சொன்னவர்கள் யார்..?தன்னுடைய நிலையை ஒதுக்கி, அந்த நிலையிலும் அடுத்தவர் நிலையையும் யோசிக்கும் மனப்பக்குவம் இங்கு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது..?
ஒவ்வொருவருக்கும் அவரவர் வாதங்கள் நியாயங்களாய் தெரியும் அதே நேரத்தில், மற்றவரின் பக்கங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற நினைப்பு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது..?முழுதாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கேனும் யோசித்தான் விஜய். தலையெல்லாம் பாரமாய் இருக்க, கண் முன்னே வந்த துளசியின் தோற்றம் அவனின் பாரத்தை கூட்டியதே தவிர, குறைக்கவில்லை.
சில நிமிடங்கள் கண்களை மூடி யோசித்தவன், சில முடிவுகளை மனதில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அங்கே துளசி இருக்கும் நிலை விஜய்க்கு எப்படித் தெரியும்..?
இவர்களை விட அதிகம் கலந்கியிருந்தவன் பிரவீன் தான். அவன் தானாக எதுவும் முடிவு செய்து செய்யவில்லை. வீட்டினரின் பேச்சை செயல்படுத்தினான், அவ்வளவே. ஆனால், துளசி இன்று அவனைக் கேட்ட கேள்விகள் எல்லாம் அவனை உயிருடன் கொன்று புதைத்திருந்தது. ஒரு அண்ணனாகவும், ஒரு நல்ல நண்பனாகவும் இருந்தவனின் நிலை இப்போது அடியோடு மாறியிருந்தது.
விஜய்யைத் தேடி செல்வதற்காக வெளியே வந்து காரின் அருகில் நின்றவனுக்கு, மனதில் பல எண்ணங்கள் ஓட, கலங்கிய கண்களை சட்டையில் துடைத்துக் கொண்டான். அவனின் செயல்களை பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவுக்கு, பிரவீனை அப்படிப் பார்க்க முடியவில்லை.
வேகமாக அருகில் சென்றவள், பின்னிருந்து அவனின் தோளைத் தொட்டாள். கைகளில் சிறிது நடுக்கத்துடன் . வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டவன், திரும்பினான். திரும்பியவன் அங்கு பவித்ராவை எதிர்பார்க்கவில்லை.
“என்ன பவி..?”என்றான்.
“எல்லாம் சரியாகிடும் மாமா..!வருத்தப்படாதிங்க..!உங்களால யாருக்கும் கெடுதல் நினைக்கக் கூட முடியாது. அப்படி இருக்கும் போது விஜய் அண்ணா விசயத்துல எப்படி நினைப்பிங்க..? கவலைப் படாதிங்க, அண்ணாவும், துளசியும் இதை புரிஞ்சுப்பாங்க..!” என்றாள் அமைதியான குரலில்.
வயதில் சிறியவள் என்றாலும், அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று பிரவீனுக்கு ஒரு மன தைரியத்தை கொடுத்தது.
“நான் கவலைப் படலை பவி..! ஒண்ணுமில்லை நீ உள்ள போ..! எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புங்க..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விஜய்யின் கார் சீறிக் கொண்டு அங்கே வந்து நின்றது.
அவன் திரும்பி வந்ததைப் பார்த்த பிரவீனுக்கு, பாதி உயிர் திரும்பியிருந்தது.பவித்ராவுக்கு சொல்லவே வேண்டாம். வேகமாக உள்ளே ஓடியவள்,
“விஜய் அண்ணா.. வந்துட்டாங்க..!” என்றாள் வேகமாக, அவள் அப்படி சொன்னதும் முதல் ஆளாய் வெளியே வந்தது வள்ளியம்மை தான். வேகமாக வந்தவர், விஜய்யின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.
“ராசா.. எங்கய்யா போன..? என்ன கோவம்ன்னாலும் எங்களை ரெண்டு அடி கூட அடிச்சுடுப்பா..! இப்படியெல்லாம் கிளம்பிப் போயிடாத விஜய்..! நீ போன கொஞ்ச நேரத்துல, எங்க உசுரே எங்ககிட்ட இல்லை..!” என்று அழ ஆரம்பிக்க, விஜய்யின் முகம் அப்போதும் இறுகிப் போயிருந்தது. வள்ளியம்மையிடம் அவன் பேசவே இல்லை.
“பவி, துளசி எங்க..?” என்றான் இயந்திரம் போல்.
“அண்ணா..! அது வந்து..!” என்று அவள் மென்று முழுங்க, அவளின் முகம் ஏதோ சரியில்லை என்று உணர்த்தியது விஜய்க்கு.
“என்னாச்சு..?” என்றான் மொட்டையாய்.
“துளசி…ஹாஸ்பிட்டல்..!” என்ற வார்த்தையைத் தான் சொல்லியிருந்தாள் பவி. அதைக் கேட்டே அதிர்ந்து நின்றான் விஜய்.