வேலுச்சாமியின் இழப்பில் இருந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முத்துலட்சுமி வெளிவந்திருக்கிறார். இந்நேரத்தில் அவரை வருத்தமடையச் செய்யக் கூடாதென்று எண்ணிக்கொண்டு அவரோடு கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தாள் அரசி.
“நான் நேத்தே வரலாம்னு இருந்தேங் அத்தை. அதுக்குள்ள நம்ம தோப்பெல்லாம் சுத்தி பாக்க கிளம்பிட்டேன்” என்று சொல்ல,
‘ஆமா மகாராணி நேத்தெல்லாம் நகர்வலம் கிளம்பிட்டாங்க’ எனப் பார்த்திருந்தான் விக்ரமன்.
“சரி சாயங்காலம் வரலாம்னு பாத்தா அதுக்குள்ள உங்க ஆறுச்சாமி அண்ணன் வீட்டுக்கு வந்துட்டாரு” என,
“அதனால என்ன கண்ணு நீ என்னைய பாக்கத்தான் வர்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கலாம்ல” என முத்துலட்சுமி கேட்க,
“சொல்லியிருக்கலாம் தான். ஆனா உங்க நாயகி அத்தை, பொழுது சாயுற நேரத்துல வீட்ட விட்டு வெளிய போனா காத்து கருப்பு என்னைய அடிச்சு போடும்ன்னு சொல்லி போக வேண்டாமுன்டாங் அத்தை” என்றாள் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு.
‘நீ காத்து கருப்பை அடிக்காம இருந்தா சரி’ என நினைத்த விக்ரமன்,
“ஆமா, ஆத்தாவும் மாமாவும் சொல்லுறதை எல்லாம் நீ எப்போ இருந்து கேக்க ஆரம்பிச்ச?” என்று கேலி செய்ய,
“இனிமேல் கேக்கலாம்னு முடிவு பண்ணிட்டேனுங் மச்சா. இருந்தாலும் அப்பக் கூட அத்தையை பார்க்கணும்னு கிளம்பி வாசல் வரைக்கும் வந்துட்டேன்…” என்றாள் தன் கதையைத் தொடர்ந்தவாறே.
“ஓஹோ! அப்பறம் என்னாச்சு” என்றான் அவனும்.
“இந்த சூப் கடை சுப்பாத்தா இல்ல சுப்பாத்தா. அது பாத்து போடுச்சு. அதுக்கு மனசுல பெரிய சி.ஐ.டின்னு நெனைப்பு. எந்நேரம் பாத்தாலும் எங்க வீட்டையே உத்து உத்து பாத்துகிட்டு உக்காந்திருக்கு. என்னைய கவனிக்குறதை விட்டுட்டு சூப் கடையை எப்படி டெவலப் பண்ணலாம்னு யோசிச்சாவாச்சும் கல்லா கட்டும். அதைய விட்டுப்போட்டு எங்க அப்பத்தா கொடுக்குற இருபது ரூபாய்க்கு ஆசைப்பட்டு இந்த வயசிலையும் எனக்கு எட்டப்பன் வேலை பாக்குது” என்று சொல்ல, முத்துலட்சுமி வாய்விட்டே சிரித்து விட்டார்.
விக்ரமன் அவன் அன்னையையே பார்த்திருந்தான். இப்படி இரு சிரிப்பை அவர் முகத்தில் கண்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.
“பாரு விக்ரமா என்னைய பாக்குறதுக்கு அரசி எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கான்னு” என அவனிடம் சொல்ல,
“அம்மா அவ சொல்லுறதை நீங்களும் நம்பிட்டு. உங்களை பாக்க ஒன்னும் வந்திருக்க மாட்டா. அவ மாட்டை புடிச்சிட்டு போகத்தான் வந்திருப்பா” என்று சொல்ல,
“சியாமளா நல்லா இருக்காளாங் அத்தை?” என்று அரசி சம்பந்தம் இல்லாது முத்துலட்சுமியிடம் கேட்க, சம்பந்தப் பட்டவனோ திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.
“யாரு சியாமளா?” என்று முத்துலெட்சுமி வினவ
“அதான் அந்த கணக்கு வாத்தியார் பொண்ணு. நம்ம மச்சானுக்கு கூட நல்லா தெரியுமே. இல்லங் மச்சா?” என்று விக்ரமனைப் பார்க்க,
“அம்மா! அடுப்புல ஏதாவது வெச்சிட்டு வந்துட்டீங்களா?” என்றான்.
“அட பாலை வெச்சிருந்தேன். அடுப்ப அணைக்காம வந்துட்டேன் போல” என உள்ளே விரைந்தார் லட்சுமி. அவர் உள்ளே சென்றதை உறுதி படுத்தியவன்,
“ஏய் கட்டக்காரி! சும்மா இருக்க மாட்டியா” எனப் பல்லைக் கடிக்க,
“சேம் டூ யூ மிஸ்டர் அத்தைக்கருப்பன் அவர்களே” என்றவள் வாசலில் நின்றிருந்த புல்லெட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனையும் பார்க்க, அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்து போனது.
இருவரது நினைவும் பின்னோக்கிப் பயணித்தது.
அது விக்ரமன் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த காலகட்டம்.
தினமும் இரவு நல்ல நிலையில் அவர்களது வீட்டில் நிறுத்தியிருக்கும் அவனது புல்லெட், அதிகாலையில் பார்க்கும் போது மட்டும் எதாவது ஒரு டயரில் பஞ்சராகி நின்றிருக்கும். எப்படி பஞ்சர் ஆகிறது என்று புரியாது இருந்தவன், அன்றைய தினம் கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டு வெளியே படுத்துக் கொண்டான்.
[the_ad id=”6605″]
நடு இரவில் யாரோ மதில் ஏறிக் குதிப்பது தெரிய, அவனும் எழுந்து தன்னை இருளில் மறைத்துக்கொண்டான்.
வேங்கையரசி தான் மெல்ல நுழைந்து கையில் வைத்திருந்த கோநூசியை எடுத்து அவனது வண்டியின் டயரில் குத்திக் கொண்டிருந்தாள்.
“சக்சஸ்” என்று எழுந்தவள் மெல்ல திரும்ப, விக்கிரம பாண்டியன் விரைப்பாய் நின்றிருந்தான்.
‘ஐயோ அத்தக்கருப்பன்’ என இடப்புறம் தப்பிக்க முயல, கையை முன் நீட்டி மறித்தான். வலப்புறம் திரும்ப அவனும் நகர்ந்து மறித்தான். இனி ஓடிப் பயனில்லை என்று அறிந்தவள் நேருக்குநேர் பார்த்தபடி நின்றுகொண்டாள்.
“மதில் வளத்தியா இருக்கே எப்படி ஏறிக் குதிச்ச?” என்றான் முதல் கட்ட விசாரணையாய்.
“அது முன்பக்க மதில் தானேங் மச்சா. நீங்க பின்பக்கத் திண்ணை மேல ஏறி அப்பறம் மதில் மேல ஏறினா ஈசியா கேட் மேல காலை வெச்சு உள்ளார இறங்கிடலாம்” என்றாள் அவன் வீட்டு மேப்பை அவனுக்கே போட்டுக் காண்பித்து.
‘இவ்வளவு பாதுகாப்பு இல்லாமையா இருக்கு நம்ம வீடு’ என்று பார்த்திருந்தவன்,
“எதுக்குடி வண்டிய பஞ்சர் பண்ணுன?” என்றான்.
“கணக்கு வாத்தியார் பொண்ண கணக்கு பண்ண நெனைச்சா அப்படி தான்”
“என்ன????”
“அந்த கணக்கு வாத்தியார் பொண்ணு சியாமளாவை எதுக்கு புல்லட்டுல ஏத்திட்டு வந்தீங்க?”
“உன்ரகிட்ட எல்லாம் சொல்ல முடியாது”
“அப்போ என்னாலையும் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்றுவிட்டு நடந்தவள் அவன் பார்க்கும் போதே சரசரவென ஏறி மதிலைப் பிடித்து எட்டிக் குதிக்கத் தயாரானாள்.
“பாத்துபோடி கட்டக்காரி” என குரல் கொடுக்க,
“உங்களுக்கு பயமா இருந்தா இங்கயே நின்னு வேடிக்கை பாக்காம உள்ளார போய் படுங்க மச்சா” என்றுவிட்டு சிரிக்க, அவள் நின்றிருப்பது அவனுக்குத் தான் பயமாக இருந்தது. காலை பரப்பி வைக்கக் கூட இடமில்லாத மதில் மேல் வெகு இயல்பாய் நின்றிருந்தாள்.
“உன்னை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா”
“போய் உங்க ஆறுச்சாமி மாமனை கேளுங்க. என்னைய தவுட்டுக்கு வாங்குனாலும் வாங்கியிருப்பாரோனு எனக்கே சந்தேகமா இருக்கு” என்றுவிட்டு திரும்பி குதித்திருந்தாள்.
தனியாகப் போகிறாளே என அவனும் கதவைத் திறந்து கொண்டு பின்னால் வர, வீதியில் இறங்கி ஓட்டமெடுத்தவள் அவர்களது வீட்டு மதிலையும் தாண்டி மின்னலென உள்ளே சென்றிருந்தாள். அவள் செல்வதைப் பார்த்துவிட்டு திரும்பிய விக்ரமன், அவளைப் போல் செய்து பார்க்க எண்ணி அவன் வீட்டு மதில் மேல் ஏறினான்.
‘நம்ம வீட்டு மதிலை தாண்ட நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, இவ எப்படி எல்லாரு வீட்டு மதிலையும் ஈசியா தாண்டுறா? கட்டக்காரி!!’ என்று எண்ணியபடி குதிக்க, சரியாக அவன் முன் அவன் தந்தை வேலுச்சாமி நின்றிருந்தார்.
‘இந்நேரத்துல இவன் எங்க மதிலேறி குதிச்சு போய்ட்டு வர்றான்’ என யோசித்தவாறே ஒன்றும் பேசாமல் அவர் நின்றிருக்க,
“அதுங்.. அப்பா கன்னுக்குட்டி கயித்தை அத்துட்டு வெளிய ஓடுன மாறி இருந்துச்சுங். அதான் பார்த்துட்டு வர்றேங்” என,
‘அதை கேட்டை தொறந்துட்டு போய் பாத்திருக்கலாமே’ என்று அவர் கேட்டைப் பார்க்க, அவர் பார்வை சொன்ன சேதியை அறிந்து விக்ரமன் சமாளிப்பாய் சிறு புன்னகையை உதிர்க்க, வேலுச்சாமி தன் தலையை இடவலமாய் ஆட்டிவிட்டு ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றுகொண்டார்.
‘இந்த கட்டக்காரி இத்தனை தடவ வந்திருக்கா. ஆனா ஒரு தடவ கூட மாட்டல. நான் ஒரே ஒரு தடவ தான் மதிலை தாண்டுனேன். உடனே மாட்டிக்கிட்டேன். ச்சே! அப்பா என்ன நினைச்சாருனு வேற தெரியல’ என அமைதியாய் சென்று படுத்துக் கொண்டான்.
“அடுப்பை அணைச்சிட்டு தான் வந்தேன் விக்ரமா” என்ற முத்துலட்சுமியின் குரல் கேட்கவும் தான் விக்ரமனும் அரசியும் நிகழ்காலத்திற்கு வந்தனர்.
“நீ என்ன அரசி சொல்லிட்டு இருந்த, ஆரு சியாமளா?” என்று கேட்க
“அது ஒண்ணுமில்லைங் ம்மா. நம்ம நாயகி ஆத்தா தனியா இருக்காங்களாமாங், ஒடம்பு வேற சரியில்லைங்லாமா அதான் வெரசலா அவ வீட்டுக்கு கிளம்போனும்னு சொல்லிட்டு இருந்தாளுங். நானே கொண்டு போய் அவங்க வீட்டுல விட்டுட்டு நம்ம தோப்பு வரைக்கும் போய்ட்டு வந்தர்றேன்ங்” என்று அரசியை கிளப்பும் முயற்சியில் இறங்கினான்.
“இருங் மச்சா. அத்தை ஏதோ கேக்குறாங்க. என்னனு சொல்லிட்டு அப்பறம் போலாம்” என அரசி நகர மறுக்க,
“நான் அவசரமா தோப்புக்கு கிளம்போனும் வேங்கை. நீ இனி இங்க தானே இருப்ப, நாளைக்கு வந்து உன்ர அத்தையோட சாவுகாசமா பேசிக்கோ” என விடாது கிளப்ப, புன்னகையுடன் முத்துலட்சுமியிடம் விடைபெற்று வெளியே வந்தவள் வண்டியில் ஏறிக்கொண்டாள்.
வீடு வரும் வரை அமைதியாய் வந்தவன் அவளை வீட்டில் இறக்கி விட்டதும்,
“ஏய் கட்டக்காரி..” என்றழைக்க திரும்பியவளிடம்,
“சியாமளாவுக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னமே கல்யாணம் முடிஞ்சுது. அவ குடும்பத்துல போய் கும்மியடிச்சிறாத” என, அதைக் கேட்டு அவளே பொங்கிச் சிரித்துவிட்டாள்.
[the_ad id=”6605″]
“நம்மூரு பஸ் வராம ரோட்ல தனியா நடந்து வந்துட்டு இருந்தா. அதான் அன்னைக்கு பாவம் பாத்து வண்டில கூட்டிட்டு வந்தேன்” என அன்று அவள் கேட்டும் சொல்லாததை இன்று அவள் கேட்காமலே சொன்னான்.
“அதான் அவ உங்களுக்கு காதல் கடிதம் எழுதியிருக்கா” என அரசியும் இயல்பாய் சொல்ல,
‘உனக்கு எப்படி தெரியும்’ என அவன் ஆச்சர்யமாய் பார்த்திருக்க,
“அதைய மொதோ ஆளா படிச்சதே நான் தான். உங்க வண்டி கவர்ல்ல அவ லெட்டர் வைக்கும்போதே மாமரத்துமேல உக்காந்திருந்த நானும் அரும்பும் அதைய பார்த்துட்டோம்”
“அப்போ என்ர தோட்டத்துல மாங்கா திருடுனது எல்லாம் உன்ர வேலை தானா?”
“ப்ச், அதுவா முக்கியம் இப்போ? சியாமளா மேட்டருக்கு வாங்க மச்சா. எங்க விட்டேன்? ஹான் லெட்டரை அவ வெச்சாளா, அவ போனதும் நான் போய் அதையே எடுத்து படிச்சு பாத்தேன். சும்மா சொல்லக் கூடாது வசீகரிக்கும் புன்னகையில் என்னை வசமிழக்கச் செய்தவனேனு உருகி உருகி எழுதி இருந்தா” என்று சொல்ல, விக்ரமனுக்கே சிரிப்பு வர அதை அடக்கி முறைப்பை முன்னிறுத்தினான்.
“அங்கயே சுக்கு நூறா கிழிச்சு போடலாமான்னு பாத்தேன். இன்னொருத்தருக்கு வந்த லெட்டரை நம்ம கிழிக்குறது தப்புன்னு விட்டுட்டேன். கொஞ்ச நேரத்துல நீங்களே அதை தான் செஞ்சீங்க. அதான் வீட்டுல சொல்ல வேண்டாம்னு பெரிய மனசு பண்ணி, போனா போகுதுன்னு உங்களை காட்டிக் கொடுக்காம விட்டுட்டேன்” என்றுவிட்டு உள்ளே சென்றுகொள்ள,
‘இன்னொருத்தருக்கு வந்த லெட்டரை எடுத்து படிச்சது தப்பில்லையாமா, அதை கிழிக்குறது தான் தப்புன்னு அமைதியா போய்ட்டாளாமா’ என அதரங்களில் அரும்பிய புன்னைகயுடன் வண்டியைக் கிளப்பி தோப்பிற்கு சென்றான்.
நேரம் அப்படியே மெல்ல நகர, மாலை ஆகியிருந்தது.
பள்ளியில் இருந்து அருந்தமிழ் திரும்பி இருந்தாள். அரசி மேலறையில் நாயகியோடு பேசிக் கொண்டிருந்தாள். கீழே வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் ஆறுச்சாமி. அவரை ஊர் திருவிழாவிற்கு தலைமை தாங்கும்படி அழைக்க, பொதுமக்கள் அவர் இல்லத்திற்கு வருகை புரிந்தனர்.
அவர்களோடு கந்தசாமியும் வந்திருந்தார். அனைவரையும் உபசரித்து அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார் ஆறுச்சாமி.
“தேவி! வந்தவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா மா” என்று குரல் கொடுக்க, உள்ளே இருந்த அருந்தமிழ் அனைவருக்கும் தேநீர் கலந்து கொண்டிருந்தாள்.
கந்தசாமியின் பக்கத்தில் நின்றிருந்த மாறனின் விழிகள் இரண்டும் வந்ததில் இருந்து அவளையே தான் தேடிக் கொண்டிருந்தது. அவள் வருவதற்குள் அவனுக்கு கைபேசி அழைப்பு வர, அது எடுத்து பேசியபடி வெளியே வந்துகொண்டான்.
“மொதல்ல ஊர் மக்கள் கிட்ட நோம்பு வசூல் செய்ய ஏற்பாடு பண்ணோனும். இதெல்லாம் கணக்குப்பிள்ளை பொறுப்புல இருக்கட்டும். நாளைக்கே ஊர் கூட்டம் கூட்டி, ஒரு நாளை தேர்வு செஞ்சு அதிலிருந்து பதினைந்து நாள் சாட்டு வெச்சுக்கலாம். எட்டாம் நாள் கொடிக்கட்டு. பதினஞ்சாம் நாள் நோம்பு. நீங்க என்ன சொல்லுறீங்க ஆறுச்சாமி?” என கந்தசாமி அவரது விருப்பத்தை கேட்க,
“நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். எனக்கும் உடன்பாடு தான். நாளைக்கு பொதுக் கூட்டத்துல வெச்சு மத்த எல்லாரோட விருப்பத்தையும் கேட்டு தெரிஞ்சுகிட்டு அப்படியே செஞ்சிடலாம்” என்று அவரும் சொல்ல, தேநீரோடு வந்த அருந்தமிழ் அனைவருக்கும் அதை அளித்தாள்.
ஆறுச்சாமியும் அருந்தமிழை தனது மூத்த மகள் என்று அறிமுகம் செய்து வைத்தார். அவள் புன்னகைத்து வணக்கம் சொல்ல, கந்தசாமியும் புன்னகைத்து தலையசைத்தார். என்ன செய்கிறாள் என்று கேட்டுக்கொண்டிருக்க, அவள் பணி குறித்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
“மேல படிக்கோணும்னு சொன்னா, நாந்தேன் போதும்னு சொல்லிட்டேன்” என்றார் ஆறுச்சாமி.
“கல்வி தான் அழியா செல்வம். விருப்பப்பட்டா மேல படிக்க வெய்ங்க ஆறுச்சாமி. நான் என்ர பையனை மேல படிக்கச் சொல்லி எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன் அவனுக்கு விருப்பம் இல்லை. நானும் விட்டுட்டேன்” என்றார்.
‘தத்தியா இருப்பான் போல அதான் படிக்க மாட்டேன்னு சொல்லியிருக்கான்’ என நினைத்துக் கொண்டாள் தமிழ்.
“வெளிய இருக்குற எல்லாருக்கும் கொண்டுபோய் கொடுத்துட்டு வா ம்மா” என்று ஆறுச்சாமி சொல்ல, அவள் மீண்டும் தேநீர் கப்புகளை தட்டில் அடுக்கி எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
வெளியே வேறு யாரும் தென்படவில்லை. மாறன் மட்டும் கைபேசியை பார்த்தபடி ஜீப்பின் அருகில் நின்றிருந்தான்.
‘அட கட்டவண்டி தான் கந்தசாமி அய்யா வீட்டு டிரைவரா’ எனப் பார்த்திருந்தவள்,
“மிஸ்டர். கட்டவண்டி” என்று குரல் கொடுத்தாள். அவளது மதுரம் சிந்தும் குரலில் மெல்ல நிமிர்ந்தான் நன்மாறன்.
“இந்தாங்க டீ”
அவளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன் அவளிடமிருந்து அதை வாங்கி சுவைத்துப் பருகியபடி நின்றிருக்க, அவளும் தட்டோடு நின்றிருந்தாள்.
[the_ad id=”6605″]
“உங்களுக்கு டீச்சர்?”
“இல்ல பரவாயில்லை நீங்க குடிங்க” என்றாள். தேநீர் கொஞ்சம் கொதிநிலையில் இருக்க, மெல்லக் குடித்துக் கொண்டிருந்தான்.
“ஏன் டீச்சர் டீ கொடுத்துட்டு குடிக்குறேனான்னு பாத்துட்டு நிக்குறீங்க? அதெல்லாம் குடிச்சிருவேன் நீங்க போங்க”
“குடிச்சிட்டு டீ கப்பை கொடுத்தா கையோட வாங்கிட்டு போயிருவேன்” என்றாள்.
“வெவரமான ஆளாத்தான் இருக்கீங்க டீச்சர். ஆனா மனுஷனுக்கு நம்பிக்கை தான் முக்கியம் டீச்சர். உங்க டீ கப்பை கொண்டுட்டு நான் என்ன ஓடியா போயிருவேன். இந்தாங்க உங்க கப்பு” என தட்டில் வைக்க, அவளும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
“என்னமா வெளிய இருந்தவங்களுக்கு எல்லாம் டீ கொடுத்தியா?” என ஆறுச்சாமி கேட்க,
“டிரைவர் மட்டும் தான் இருந்தாருங். அவருக்கும் கொடுத்துட்டேன்ங் ப்பா” என்றாள்.
ஊர்மக்கள் சிலரும், கந்தசாமியும், மாறனும் தான் ஆறுச்சாமியின் வீட்டில் இருந்தனர். அவள் ட்ரைவர் என்று சொல்ல,
“டிரைவரா! நீ யாருக்கு கண்ணு கொடுத்த?” என ஊர் மக்களிள் ஒருவர் குழப்பமாய் கேட்க, அந்நேரம் சரியாய் மாறன் வீட்டினுள் வர,
“இதோ இவருக்கு தான்ங்” என மாறனை கைகாண்பித்ததில் கந்தசாமி வாய்விட்டே சிரித்துவிட்டார்.
ஆறுச்சாமி தர்ம சங்கடமாய் தமிழைப் பார்க்க, அவர் பார்வையில் இருந்தே கண்டுகொண்டவள்,
“இல்லைங் ப்பா இவரு தான் ஜீப் ஓட்டிட்டு வந்தாருங்..” என்று தயங்கியபடியே சொல்ல,
“ஜீப் ஓட்டிட்டு வந்தா உடனே டிரைவர்னு முடிவு பண்ணிடுறதா கண்ணு. இது கந்தசாமி ஐயா மகன் கண்ணு. ஐயாவுக்கு எப்போமே தம்பி தான் ஜீப் எடுப்பாரு” என ஊர்க்காரர் கூற, மாறனை அதிர்ச்சியாய் பார்த்தாள் அருந்தமிழ்.
அவன் சின்ன சிரிப்போடு நின்றிருந்தான்.
வாசம் வீசும்…!