மண்வாசம் : 8
கலையரசன் தன் கண்களை அப்படியும் இப்படியும் உருட்டியபடி அருகிலிருந்த மாறனைப் பார்த்தான். அவன் மட்டுமின்றி பின்சீட்டில் அமர்ந்திருந்த அகிலன் மற்றும் கவின் கூட மாறனைத் தான் வித்தியாசமாய் பார்த்திருந்தனர்.
“என்னங்கடா அன்னாடும் வாய் ஓயாம தொனதொனத்துட்டு வருவீங்க. இன்னைக்கு என்னடானா பொட்டோட்ட வர்றீங்க?” என மாறனே கேட்க,
“அதில்லண்ணே! நாங்க இன்னைக்கு பஸ்சுலையே பள்ளிக்கூடத்துக்கு போயிருப்போமே, நீ என்னத்துக்கு கட்டவண்டியில கூட்டிட்டு போறைன்னு தான் யோசிக்குறோம்” என்றான் அகிலன்.
‘ஏன்டா வாயைத் திறந்தோம்’ என்றாகிவிட்டது மாறனுக்கு. அகிலனை பின்னால் திரும்பிப் பார்த்தவாறே,
“ரொம்ப யோசிக்காதீங்கடா. அண்ணனுக்கு உங்க மேல அம்புட்டு பாசம். அதான்” என்றான்.
“பாசமாஆஆ? இது பயங்கர வேஷமா இல்ல இருக்கு” என கலையரசனும்,
“நாங்க எதுவும் நினைச்சுக்க மாட்டோம். நீ பயப்படாம தகுரியமா உண்மையை சொல்லுண்ணா” என கவினும் குரல் கொடுக்க,
‘வெஷம் வெஷம் வெஷம்’ என்று முத்துக்கள் மூன்றையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, சாலையின் புறம் பார்வையைத் திருப்பியவன்
“தினமும் லேட்டா வந்தா பாடம் கவனிக்க முடியறது இல்லையாமாடா. உங்க சிம்ரன் டீச்சர் அண்ணனையே எப்படி திட்டுனாங்க பாத்தீங்க இல்ல? அண்ணனுக்கு உங்க படிப்புதான் முக்கியம். அதான் இனிமேல் நானே உங்களை பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் விட்டு, திரும்ப வந்து கூட்டிட்டு போலாம்னு முடிவு பண்ணிருக்கேன்” என்றான்.
தினமும் ஜீப்பில் செல்வதை எண்ணி ஆனந்தம் கொண்ட மூவரும் குதுகலமாய் மாறனைப் பார்த்தனர். பள்ளிக்கூடம் வந்திருக்க, அவர்களை இறக்கி விட்ட மாறன் சுற்றிலும் பார்வையை ஓட்ட, அவன் தேடிய ஆள் தென்படவில்லை. ஏன் ஆளே தென்படவில்லை.
“எங்கடா உங்க சிம்ரன் டீச்சரை காணோம்?” என்று அவர்களிடமே கேட்க,
“பள்ளிக்கூடமே இன்னும் தொறக்கல. நேரமே வரச்சொன்னா அதுக்குன்னு இவ்வளவு நேரமேவா கூட்டியாருவ? இந்நேரத்திக்கு ஆயாம்மா கூட வந்திருக்காது” என்று முறைத்தான் கவின்.
‘இவன் வேற ரொம்ப முறைக்குறானே’ என அமைதியாய் அவர்களோடு அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தான் மாறன்.
சில நிமிடங்களில் ஒவ்வொருவராய் வருகை புரிய, தரிசனமளித்தாள் அவன் தேவி.. அருந்தமிழ் தேவி!
“குட் மார்னிங் டீச்சர்” என்ற சிறார்களின் குரலில்,
“குட் மார்னிங்” என்று அவர்கள் புறம் பார்வையை செலுத்தியவள் அவர்கள் அருகில் இருந்த மாறனைப் பார்க்க, அவனும் அவர்களைப் போல் வலக்கையைத் தூக்கி,
“குட் மார்னிங் டீச்சர்” என்றான்.
[the_ad id=”6605″]
சிரிக்கத் துடித்த தன் இதழ்களைக் கட்டுப் படுத்தியவள் சின்ன தலையசைப்புடன் அவனைக் கடந்து வகுப்பறைக்குள் சென்றாள். அவள் சென்ற பின்னரும் கூட மாறன் அப்படியே நிற்க,
“நீ என்னத்துக்கு இப்போ கொடிக்கு சல்யூட் அடிக்குற மாறி அசையாம நிக்குற?” என கலையரசன் மாறனின் காலைச் சுரண்ட,
‘கொடிதான்டா ஆனா தேசியக்கொடி இல்ல. இது என்ர வஞ்சிக்கொடி. அவங்க பார்த்தாவே நான் ஃப்ரீஸ் ஆகிடுறேன். மனசும் மூளையும் மரத்துப் போயிருது’ என்று நினைத்திருக்க, சிறார்கள் மூவரின் பார்வையும் அவனிடம் தான். அதை உணர்ந்து,
“சரி நான் கிளம்புறேன். நீங்க ஒழுங்கா படிங்க டா. இனி எவனாச்சும் சைன்ஸ் பாடத்துல ஃபெயில் ஆனா புளிய வெளாரெடுத்து பிச்சுப் போடுவேன் பிச்சு” என்றுவிட்டு செல்ல, மூவரும் அவனை அதிர்ந்துபோய் பார்த்திருந்தனர்.
ஆறுச்சாமியின் இல்லத்தில் நீலகிரித் தைலத்தின் மணம் மூலை முடுக்கெல்லாம் வீசிக் கொண்டிருந்தது.
நேற்று அரசியோடு காடு மேடெல்லாம் அலைந்ததில் மொத்தமாய் அலுத்துப்போய் தன் கால்களுக்குத் தைலத்தை தடவியபடி அமர்ந்திருந்தார் ரங்கநாயகி.
“ஆடிய ஆட்டம் என்ன.. ஓடிய ஓட்டம் என்ன…” என அரசி பாடிக்கொண்டு வர,
“ஏய் சின்னக் குட்டி! என்ர கிட்டையே உன்ர எகத்தாளத்த காட்டுறியா?” என அவளை முறைத்தார் நாயகி.
“உங்ககிட்ட வம்பு பண்ணுவேனுங்களா? அப்பறங் ஆத்தா, நான் நம்ம வேலுச்சாமி மாமா வீடு வரைக்கும் போய்ட்டு வரலாம்னு இருக்கேன். நீங்களும் வர்றீங்களா?” என்று கேட்க,
“இனி என்ரனால அம்மாந்தொல எட்டி வைக்க முடியாது கண்ணு. நீ நம்ம மாடசாமிய கூட கூட்டிக்கிட்டு போய் பாத்துபோட்டு வா” என்றுவிட்டார் நாயகி.
உடனே அவளறைக்குள் சென்றவள் கொஞ்சம் நேரம் எடுத்து தன்னை தயார் படுத்திக்கொண்டு கீழே வர, வாசலில் அவளுக்காக மாடசாமியும் காத்திருந்தார். சமையலறையில் இருந்து வந்த நாயகி,
“நேத்து நம்ம வயலுக்கு போனதும் லட்சுமி அத்தை நம்மூட்டுக்கு வந்து பாத்துபோட்டு, நீ இல்லைன்னு திரும்பி போயிட்டாளாமா பாவம். இப்போ உன்னைய பாத்தா நெம்ப சந்தோசப்படுவா” என்றுவிட்டு,
“அப்பறங் கண்ணு! வெறுங்கையோட போனா நல்லா இருக்காது, இந்தா இதுக்கு உள்ளார அதிரசம் இருக்குது. இதையக் கொண்டுட்டு போ. நம்ம விக்ரமன் நல்லா சாப்புடுவான்” என ஒரு பாத்திரத்தை அவளிடம் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு மாடசாமியோடு விக்ரமனின் வீட்டை நோக்கி நடைபோட்டாள்.
[the_ad id=”6605″]
சிறிது நேர நடை பயணத்தில் அவன் வீட்டை எட்டியிருந்தாள். கேட்டை திறந்து உள்ளே நுழையவுமே அவள் கண்கள் முதலில் ஆசையாய் தேடியது முத்துலட்சுமியைத் தான்.
அதற்குள் கட்டுத்தரையில் இருந்து சத்தம் வர, அங்கு சென்றாள். வரிசையாய் கட்டியிருந்த கால்நடைகளை ஒவ்வொன்றாய் பார்வையிட்டாள். இப்போது அவள் கண்கள் ஆசையாய் தேடியது அவள் வளர்த்த லட்சுமியை.
கம்பீரப் பார்வையுடனும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நின்ற காங்கேயம் காளைகளை முதலில் பார்வையிட்டாள். ரேக்ளாவிற்கு விக்ரமன் அழைத்துச் செல்லும் அவனது வேலனும் வீரனும் மக்காச்சோளத்தையும், தீவனக் கம்பையும் மென்று கொண்டிருந்தனர்.
அதை அடுத்து வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திட்டுக்கள் கொண்ட உம்பளச்சேரி காளை அதன் கண்களை கூர்மையாய் தீட்டி அவளையே பார்த்திருக்க, தன்னால் பின்னால் நகர்ந்து சென்றாள் அரசி.
அடர்ந்த சாம்பல் நிறத்தில் பின்புறம் வளைந்த கொம்புகளுடன் புலிக்குளம் காளை, பருத்திக்கொட்டையை நாவால் சுழற்றியபடி தன் முன்னங்கால்களை தரையோடு தேய்த்துக் கொண்டு நின்றிருந்தது.
“வளர்த்துற ஆளைப் போலவே இங்க இருக்குறதும் முரட்டுக் காளைகளா நல்லா கம்பீரமா தான் இருக்கு” என மெச்சுதலாய் சொல்ல,
“என்ன சொன்னீங் அம்மணி?” என்ற மாடசாமியின் குரலில் லேசாய் நாக்கைக் கடித்தவள்,
“நம்ம லட்சுமி எங்கைன்னு கேட்டேங்” என்று சமாளித்துக் கொண்டாள்.
“அங்கிருக்குதுங் அம்மணி” என மாடசாமி கைகாண்பித்த திசையில் பார்த்தாள் அரசி.
கட்டுத்தரை அத்தனை சுத்தமாய் இருந்தது. காளை மாடுகளுக்கு சலிக்காது அதே இனத்தில் பசுமாடுகளும் சீமைப் பில்லை அசைபோட்டபடி இருந்தன.
“லட்சுமி” என்றழைக்க, அவள் குரல் கேட்டதும் பதிலுக்கு குரல் கொடுத்தது ஒரு பசுமாடு.
அதனருகில் சென்று அதை நீவிக்கொடுக்க, இரு காதுகளையும் வேகமாய் அசைத்து அவளை உரசிக் கொண்டிருந்தது அது. அவர்கள் வீட்டு கட்டுத்தரையில் இருக்கும் மாடுகளை விட இங்கு இருப்பதெல்லாம் செழிப்பாய் காணப்பட்டன. இனி லட்சுமியை இங்கிருந்து அழைத்துச் செல்லும் எண்ணம் அவளுக்கில்லை.
“உனக்கு என்னைய அடையாளம் தெரியுதா லட்சுமி?” என அதனிடம் கேட்டுக்கொண்டிருக்க,
“எங்களுக்கு மறக்கலையம்மா. ஆனா உங்களுக்கு இப்பத்தேன் எங்க நெனப்பு வந்திருக்கும் போல!” என்ற குரலில் திரும்ப, அவள் பின்னால் நின்றிருந்தார் முத்துலட்சுமி.
மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி மின்ன, நெற்றிப் பொட்டில் வட்டப் பொட்டு எடுப்பாய் தெரிய, நேர்வகிட்டில் குங்குமம் பளிச்சிட, கழுத்தை ஒட்டிய அட்டிகை ஜொலிக்க லட்சுமி கடாச்சமாய் இருக்கும் அந்த முத்துலட்சுமியை இனி என்றும் அதுபோல் காணமுடியாது என நினைக்கவே அரசிக்கு நெஞ்சம் கனத்தது.
அதற்கு மேல், முத்துப்பல் வரிசை தெரிய அவர் உதிர்க்கும் சிரிப்புக்கு அரசியே அடிமை. பெரிதாய் மலர்ந்திருக்க வேண்டிய அவரிதழ்கள் இன்று அளவாய் தான் விரிந்திருந்தன.
ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த முத்துலெட்சுமி அல்ல அவர் இப்போது. வண்ணங்களை முற்றிலுமாய்த் தொலைத்திருந்தார். வண்ணங்களை மட்டுமா? வாழ்க்கைத் துணையையும் தான்.
“அத்த..” என்று அகத்திலிருந்து ஆழ அழைத்தபடி அவர் அருகில் வர,
“ஆமா லொத்த. இந்த அத்தைய இப்பத்தான் உன்ர கண்ணுக்கு தெரியுதா?” என்று அவர் கன்னத்தைக் கிள்ள வந்த அவள் கைகளைத் தட்டிவிட்டார்.
“நான் என்ர முத்து அத்தையை பாக்க போறேன்னு ஒத்தக் காலுல நின்னேன். உங்க ஆறுச்சாமி அண்ணன் தான் போவேண்டாம்னு சொல்லிட்டாரு. நீங்க அவரை வந்து என்னனு கேளுங்க” என்று சொல்ல, அவளது பாவனையிலும் பேச்சிலும் லேசாய் புன்னகை எட்டிப் பார்த்தது அவருக்கு.
“நீ மறந்துபோட்டு எங்கண்ணன குத்தஞ் சொல்லுறையா” என அவள் காதை செல்லமாய் திருக,
[the_ad id=”6605″]
“போங்கத்த, இத்தனை வருஷம் கழிச்சு வர்றேன் உங்களுக்கு என்ரமேல கொஞ்சூண்டு பாசங்கூட இல்ல. இப்படி வாசல்ல நிக்க வெச்சே பேசிட்டு இருக்கீங்க” என, வாஞ்சையாய் அவள் தலையைத் தடவியவர்
“பாத்து எத்தன வருஷமாச்சு! இப்படி எளைச்சு போய் வந்திருக்க பாரு. சரி உள்ளார வா கண்ணு, உனக்கு பிடிச்ச சீப்பம்பால் தான் காய்ச்சிட்டு இருந்தேன்” என்று அவளை உள்ளே வருமாறு அழைக்க,
“சீப்பம்பாலாஆஆ.. மாடு கன்னு போட்டிருக்காங் அத்தை? நான் கன்னுக்குட்டிய பார்த்துட்டு வர்றேன். நீங் அதுக்குள்ள ஏலக்காய் தட்டி போட்டு சீப்பம்பால் காய்ச்சி எடுத்து வைங்க” என கண்கள் மின்னக் கூறிவிட்டு தன் கையிலிருந்த பாத்திரத்தை அவரிடம் கொடுத்தவள் மீதம் இருந்த கால்நடைகளை பார்வையிடக் கிளம்பிவிட்டாள்.
பிறந்து சில தினங்களே ஆன கன்றுக்குட்டி கட்டுத்தரையில் துள்ளிக் கொண்டிருக்க, அதன் அருகில் சோர்வாய் படுத்திருந்தது அதன் தாய். அதை மெல்ல வருடிக்கொடுத்துவிட்டு கன்றை தன் கைகளில் ஏந்திக்கொண்டாள் அரசி.
திடீரென ஒலித்த புல்லெட்டின் சத்தத்தில் ஆநிரைகளோடு சேர்த்து அரசியின் பார்வையும் வாசலின் புறம் திரும்பியது.
வேகமாய் உள்ளே வந்த விக்ரமனைக் கண்டு காளைகளும் பசுக்களும் மொத்தமாய் சத்தம் எழுப்ப, அரசியை அங்கு எதிர்பாராது கொஞ்சம் வியப்பாய் பார்த்தவன், பின் அவளருகில் இருந்த மாடசாமியைப் பார்த்தான்.
“நீங்க போங்க. அப்பத்தா கேட்டா நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்னு சொல்லுங்க” என மாடசாமியை கிளம்பும்படி தெரிவித்தாள் அரசி.
“எப்போ வந்த?” என்றான் விக்ரமன், அவள் கைகளில் இருந்த கன்றைப் பார்த்தபடி.
“இப்போதாங் மச்சா” என்றவள் கன்றுக்குட்டியை கீழே விட்டுவிட்டு,
“எப்போ கன்னு போட்டுது?” என்று கேட்க,
“நாலு நாள் முன்ன” என்றான்.
“மாட்டுக்கு கால் சத்து பத்தல. அதான் எழுந்து நிக்க சிரமப்படுது போல. கால்சியம் ஊசி போட்டீங்களா?” என்று கேட்க,
“அதெல்லாம் கம்பவ்ண்டர் வந்து பாத்துட்டு கால்சியம் ஊசியும் க்ளுகோசும் போட்டுட்டு போனாரு” என்றான்.
“பசுந்தாள் தீவனம் தினமும் வெய்ங்க. அப்பறம் வைக்கோலும் சோளத்தட்டும் மாத்தி மாத்தி வெய்ங்க. கண்டிப்பா மாடு சீக்கிரம் தெம்பாயிரும்” என்றவளுக்கு, பதிலேதும் சொல்லாமல் அவளை ஆழமாய் மட்டும் பார்த்திருந்தான் விக்ரமன்.
“அரசி கண்ணு! இன்னும் அங்க என்ன பண்ணுற உள்ளாரா வா” என்ற லட்சுமியின் குரலில் அங்கிருந்து உள்ளே சென்றாள் அரசி. யோசனையோடு அவளைப் பின்தொடர்ந்தான் விக்ரமன்.
உள்ளே வந்தவளின் பார்வையோ மெல்ல அவ்வீட்டை ஆராய்ந்தது. சுவரில் மாட்டியிருந்த வேலுச்சாமியின் புகைப்படத்தைக் கண்டவளுக்கு அதன் பின் பார்வை வேறெங்கும் செல்லவில்லை.
எப்படிப்பட்ட மனிதர்! அவர் உடன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ண எண்ண நெஞ்சைத் தாவிப் பிடித்தது ஒரு இனம் புரியா வலி. மறக்க முடியாத பேரிழப்பு அவரது இழப்பு.
அன்றைய நாளில் விக்ரமனின் தோற்றம் கண்முன்னே வர, உடனே கண்கள் அவனைத் தேடியது. அவனும் அவளருகே தான் நின்றிருந்தான். அவன் பார்வையும் வேலுச்சாமியின் புகைப்படத்தில் பதிய, அரசிக்கு உள்ளுக்குள் திடுக்கிட்டது.
அதற்குள் காய்ச்சிய சீப்பம்பாலோடு முத்துலட்சுமி வெளியே வர, இருவரும் தத்தம் பார்வையை வேலுச்சாமியின் புகைப்படத்தில் இருந்து பிரித்தெடுத்துக் கொண்டனர்.