நிறைவுப்பகுதி
மூன்று வருடங்களுக்குப் பிறகு….
மாடி ஹாலில் சாதனா மடியில் ரிஷி படுத்திருக்க…. அப்போது அங்கே வந்த ஜோதியை பார்த்ததும், இருவரும் பதறி எழுந்தனர்.
“எங்க டா சந்தோஷ்?” என ஜோதி கேட்டதும், இருவரும் அவர்கள் மகனை, ஆளுக்கொரு சோபாவிற்கு அடியில் குனிந்து தேடினர்.
“ரொம்ப நல்லாயிருக்கு, பிள்ளையைக் காணோம்மா… ரூம் ரூமா தேடுவாங்க. இவங்க சோபாவுக்கு அடியில தேடுறாங்க.” என ஜோதி நக்கலடிக்க….ரிஷி அவரை முறைத்து விட்டுச் சென்றான்.
சந்தோஷ் எப்போதுமே சோபாவுக்கு அடியில், டைனிங் டேபிளுக்கு அடியில், அல்லது கட்டிலுக்கு அடியில் என்று தான் ஒளிந்து கொள்வான். அவனுக்கு அந்த விளையாட்டு தான் பிடிக்கும். அதற்கு இவர்கள் என்ன செய்வார்கள்?
அறைக்குள் சென்ற ரிஷி கட்டிலுக்கு அடியில் இருந்த தங்கள் மகனை கண்டுவிட்டு, அவனை இழுத்து வெளியில் போட்டான்.
“மெதுவாங்க…” என்ற சாதனா மகனை தூக்கி அவனைத் துடைத்து விட்டவள், “ஏன் செல்லம் எப்ப பாரு எங்கையாவது போய் ஒளிஞ்சிகிறீங்க?” என்றதும், தன் குருத்து பல்லைக்காட்டி சந்தோஷ் அழகாகச் சிரிக்க… அதில் அவனைப் பெற்றவர்கள் மயங்கி தான் போய் விட்டனர்.
“அம்மா, அப்பா…” என மழலையில் சதோஷ் அழைக்க…..
“எவ்வளவு அழகு எங்க குட்டி?” என மகனை சீராட்டிக் கொண்ட சாதனா தன் கணவனைப் பெருமையாகப் பார்த்தாள்.
“சந்தோஷ் உங்க அத்தை வந்திருக்கா டா…” ஜோதி சொன்னதும்,
“ஹே…. நம்ம ஷ்ரேயா குட்டியும் வந்திருக்கும்.” எனச் சாதனா மகனிடம் சொல்ல… அனைவரும் கீழே இறங்கி சென்றனர்.
[the_ad id=”6605″]
அங்கே ஹால் சோபாவில் வெற்றியும், ப்ரீதாவும் அவர்களின் ஒன்பது மாத குழந்தை ஷ்ரேயாவுடன் இருந்தனர்.
சந்தோஷுக்கு தன் தாய் மாமனின் மேல் தனிப் பிரியம். அவனைப் பார்த்ததும் “மாமா…” என அவனிடம் தாவ… வெற்றியும் தன் மருமகனை ஆசையுடன் தூக்கி கொஞ்சினான்.
ஒரு நிமிடம் மட்டுமே தன் மாமனின் கைகளில் தங்கிய சந்தோஷ். பிறகு இறங்கி ஓடி விட்டான். அதற்கு மேல் அவன் யாரிடமும் இருக்க மாட்டான். ஒரு இடத்தில் ஒரு நிமிடத்திற்கு மேல் அவன் இருந்தால்… அதே பெரிய சாதனை.
அவனின் பொம்மை, விளையாட்டுச் சாமான்கள், சைக்கிள் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து கடைபரப்பியவன், சிறிது நேரம் வைத்து விளையாடிவிட்டு, பிறகு ஒவொன்றையும் கழட்டி ஆராய்ச்சியில் இறங்கி விட்டான்.
மகனின் மீது ஒருக்கண்ணை வைத்தபடியே மற்றவர்களுடன் சாதனா பேசிக்கொண்டு இருந்தாள். பிறகு அவனுக்கு இரவு உணவு கொடுக்க… அவள் பால் சாதம் கொண்டு வர…. அதைக் கொடுத்து முடிக்க அவளுக்கு ஒரு மணி நேரம் ஆகியது.
அதுவும் ரிஷி இருந்ததால் தான் அவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டான். இல்லையென்றால் இன்னும் தாமதம் ஆகும்.
இரவு உணவிற்கு ஜோதி அழைக்க…. தான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சாதனா மட்டும் இருக்க… மற்றவர்கள் சாப்பிட சென்றனர்.
ஸ்ரேயா தவழ்வதால்… அவளைத் தரையில் மெத்தை விரித்து உட்கார வைத்துவிட்டு, சாதனாவும் அவள் அருகில் உட்கார்ந்து இருந்தாள். சந்தோஷ் சற்று தள்ளி விளையாடிக் கொண்டிருந்தான்.
முதலில் ரிஷி சாப்பிட்டுவிட்டு வந்தவன், அவனும் சாதனாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து திரும்பி தன் மகனை பார்த்தான்.
“இன்னைக்காவது இவன் சீக்கிரம் தூங்குவானா…”
“ஏன்?”
“உனக்குத் தெரியாது…” ரிஷி கண்சிமிட்ட
“அவன் லேட்டா தூங்கினா மட்டும்…” எனச் சாதனா இழுக்க….
“அதுக்கு முன்னாடி நீ தூங்கிடுறியே டி…” என்றான் ரிஷி கடுப்புடன்.
பகல் எல்லாம் சந்தோஷின் பின்னால் ஓடுவதால்…. சாதனா இரவில் மிகவும் அலுப்பாக இருப்பாள். அதனால் அவள் படுத்ததும் உறங்கி விடுவாள். ரிஷி தான் பாவம்.
சாதனா ரிஷியை பார்த்து சிரித்தவள், அப்போது தான் கவனித்தாள் அருகில் இருந்த ஸ்ரேயாவை காணோம். அவள் ரிஷியிடம் சொல்ல… இருவரும் திரும்பி பார்க்க…
அங்கே ஷ்ரேயாவின் ஒரு காலை பிடித்துச் சந்தோஷ் இழுத்துக்கொண்டு வந்தான்.
“ஐயோ ! பாப்பா டா விடுடா…” என்றவள், வேகமாக எழுந்து சென்று ஸ்ரேயாவை தூக்க… ரிஷி சென்று சந்தோஷை தூக்கினான்.
“டேய் இது பாப்பா டா… பொம்மை இல்ல…. இப்படிப் பிடிச்சு இழுத்திட்டு வர…. உங்க அத்தை பார்த்தா அவ்வளவு தான்.” எனச் சொல்லிவிட்டுச் சாதனா திரும்ப… அங்கே ப்ரீதாவும் வெற்றியும் நின்று கொண்டு இருந்தனர்.
ப்ரீதா சென்று தன் மகளை வாங்கினாள். ஷ்ரேயா அழவே இல்லை…. சமத்தாக இருந்தது.
[the_ad id=”6605″]
“ரொம்பக் கொழுப்புடா உனக்கு… என் பெண்ணைப் பார்த்தா எப்படி இருக்கு?” ப்ரீதா மிரட்ட….
“ஹே… பே…” எனச் சந்தோஷ் அவளை அலட்ச்சியபடுத்திவிட்டு இறங்கி செல்ல…. ப்ரீதா திரும்பி ரிஷியை முறைத்தாள்.
“அண்ணா, உன் பையன்கிட்ட சொல்லி வை… என்னைப் மதிக்கவே மாட்டேங்கிறான்?”
“நீ அவனைப் பார்க்கும் போது எல்லாம் திட்ற… இதே அவன் வெற்றிகிட்ட நல்லாத்தானே பேசுறான். வெற்றி நீ அவனைக் கூப்பிடு…” ரிஷி சொன்னதும்,
“சந்தோஷ்…” வெற்றி அழைத்ததும், அவனிடம் பாசமாக ஓடி வந்த சந்தோஷ், தன் மாமன் காலைக் கட்டிக்கொண்டவன், உடனே திரும்பி அங்கிருந்து ஓடியும் விட…. அதைப் பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வந்தது.
“பாரு… வெற்றி அவன்கிட்ட ஒழுங்கா பேசுறதுனால… அவனும் ஒழுங்கா இருக்கான். நீயே சொல்லு தப்பு யாரு மேல?…” ரிஷி கேட்க….
“அத்தை டா… ஒழுங்கா பேசுடான்னு நீ உன் மகனுக்கு சொல்லிக்கொடு….” என்றாள் ப்ரீதா விடாமல்….
“யாரு? அவனா…கேட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பான். இந்த ரெண்டு வருஷமா அவன் சொல்றதை தான் டி நாங்க கேட்கிறோம். நாங்க சொல்றதை என்னைக்கு டி அவன் கேட்டிருக்கான்.” ரிஷி பாவமாகச் சொல்ல…
“எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்கு.” என்றார் ராஜ்மோகன்.
“உன்னை அடக்க ஆள் இல்லாம திரிஞ்சியே டா… இப்ப உன் பையன் உன்னை அடக்கிறதை பார்க்கவே சந்தோஷமா இருக்கு…” என்றவர், பெருமையாகப் பேரனை தூக்கி கொஞ்ச…. அதைப் பார்த்த அனைவரும் சிரித்தனர்.
யாரிடமும் அடங்காதவர்களைக் கூட… இந்தக் காலத்துப் பிள்ளைகள் அடக்கி விடுவார்கள்.
“பேரனை பற்றி பெருமை பேசுறீங்களே.. இன்னைக்கு ஒருநாள் நைட் அவனை உங்க கூட வச்சுக்கோங்க பார்க்கலாம்.” ரிஷி சவால் விட…. ராஜ்மோகன் சந்தோஷை அவரது அறைக்குத் தூக்கி கொண்டு சென்றார்.
“சீக்கிரம் சாப்டிட்டு வா…” என ஜாடை காட்டி விட்டு ரிஷி அவர்களது அறைக்குச் செல்ல…. சாதனா சாப்பிட்டு முடிக்கும் போதே…. சந்தோஷை வைத்திருக்க முடியாமல் ராஜ்மோகன் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார்.
சாதனா சிரிப்புடன் மகனை தூக்கி கொண்டு அறைக்குள் நுழைய…. மகனைப் பார்த்ததும் ரிஷியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே….
“டேய்…. உன்னோட தாத்தா பெரிசா சவால் விட்டார். அவ்வளவு தானா…” என்றவன், மகனை சாதனாவிடம் இருந்து வாங்கி, கட்டிலில் மெதுவாகத் தூக்கி போட்டான். சந்தோஷ் சிரித்தபடி எழுந்து அமர்ந்தான்.
“நீ தூங்கு சாதனா… நான் இவனைப் பார்த்துகிறேன்.” என்ற ரிஷி மகனுடன் விளையாட… சாதனா அவனைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரிஷி கேலியாகப் பேசுவானே தவிர…. இரவில் மகனை சாதனாவிடம் கொடுக்க மாட்டான். அவனே தான் பார்த்துக் கொள்வான்.
விடியற்காலையில் ஒரு தரம் சந்தோஷ் எழுந்து பால் கேட்பான். அதையும் ரிஷியே கொண்டு வந்து கொடுத்து, அவனை மீண்டும் தூங்க வைப்பான்.
சாதனா தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ரிஷி, என்ன என்பது போல் புருவத்தைக் கேள்வியாக உயர்த்த…. வா எனச் சாதனா அவனைக் கரம் நீட்டி அழைக்க…. மகனை தூக்கிக் கொண்டு வந்தவன், விளக்கை எல்லாம் அனைத்து விட்டுக் கட்டிலில் படுத்தான்.
அறை இருளானதும் சந்தோஷ் எழுந்து தன் பெற்றோரை பார்க்க…. இருவரும் தூங்கி விட்டது போல் நடிக்க…. அவர்களுக்கு மேல் இவன் கில்லாடி.
[the_ad id=”6605″]
அவர்கள் மீது ஏறி அமர்ந்து.. நிஜமாகவே உறங்கி விட்டார்களா எனப் பல கட்ட சோதனைகள் செய்த பிறகும், அவர்கள் அசையாமல் இருக்கவே… வேறுவழியின்றி அவனும் அவர்கள் அருகில் படுத்தவன், சிறிது நேரத்தில் உறங்கி விட்டான்.
இப்படித்தான் அவனைப் பல நேரம் உறங்க வைப்பது. இதில் என்ன சோகம் என்றால்…. சில நேரம் இவர்கள் இருவரும் நிஜமாகவே உறங்கி விடுவது உண்டு.
பத்து நிமிடத்திற்கும் மேல் அவன் அசையவில்லை என்றதும், மெதுவாக எழுந்த ரிஷி மகனுக்கு இருப்பக்கமும், தலையணையை வைத்து விட்டு, கட்டிலுக்கு அடியில் இருந்த இன்னொரு மெத்தையை இழுத்து வெளியில் போட… அதில் அவனும் சாதனாவும் படுத்துக் கொண்டனர்.
“இவன் ரொம்பச் சேட்டை பண்றானே…. கஷ்ட்டமா இருக்கா ரிஷி.”
“ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டா குறைஞ்சிடும். அதுவும் இதெல்லாம் ஒரு கஷ்ட்டமே இல்லை….”
“அப்ப வேறு எது கஷ்ட்டம்.”
“நீ இவனைப் பெத்து எடுகிறதுகுள்ள பயந்து பயந்து இருந்தியே… அதைப் பார்த்த போது தான் கஷ்ட்டமா இருக்கும். குழந்தை நல்லபடியா பிறக்கனுமே, இல்லைன்னா… நீ ரொம்ப மனசு உடைஞ்சு போயடுவியோன்னு பயமா இருக்கும்.”
“ஆனா நான் உங்ககிட்ட ஒன்னும் சொன்னது இல்லையே….”
“நீ சொல்லலைனாலும் எனக்குத் தெரியாதா….”
தனக்காகத் தன் கணவன் இவ்வளவு பார்க்கும் போது… இதை விட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன வேண்டும்?
“தேங்க்ஸ், நீங்க என் லைப்ல வந்ததுக்கு.”
“நான் தான் சொல்லணும் தேங்க்ஸ்…. அதுவும் நேகாவை தள்ளிவிட்டுட்டு நீ வந்ததுக்கு.” என ரிஷி சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல… சாதனா பொங்கி விட்டாள்.
“ஹே… அவளைப் பத்தி இப்ப ஏன் பேசுறீங்க? அதுவும் நான் அவளைத் தள்ளி விட்டுட்டு வந்தவளா…..”
“இல்லையா பின்ன…” ரிஷி அப்பாவியாகக் கேட்க….
சாதனா அவனை நன்றாக மொத்தினாள். “இருங்க சந்தோஷை எழுப்பி விடுறேன். நைட் புல்லா அவனைத் தூங்காம வச்சிருங்க.” என அவள் எழுந்துகொள்ள முயல….
அவளை எழ விடாமல் அவள் மேல் கவிழ்ந்து படுத்த ரிஷி “எனக்குப் போய்த் தேங்க்ஸ் சொல்ற…. நான் யாரோவா உனக்கு…. அது தான் கொஞ்சம் டென்ஷன் பண்ணேன்.” என்றான்.
“சாரி ரிஷி…” என்றவள், அவனின் நெற்றியில் முத்தமிட….
“நான் விளையாட்டுக்கு பேசுறேன்னு உனக்குத் தெரியாதா…. நீ மட்டும் வரலைன்னா என்னோட லைப் என்ன ஆகியிருக்கும்னு நான் நினைக்காத நாளே இல்லை…. அதுவும் இப்ப சந்தோஷ் வந்த பிறகு…. நான் தான் உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனுஷன்.” என்றான் ரிஷி முழு மன நிறைவுடன்.
“நீங்க இப்படி நைட் புல்லா பேசிட்டே இருக்க போறீங்களா ரிஷி. உங்க பையன் எழுந்திடுவான் பரவாயில்லையா…” சாதனா சீரியஸாக கேட்க….
“பேசாம வேலைப்பாருன்னு சொல்ற…” என்ற ரிஷி தன் மனைவியை ஆசையாக தழுவிக்கொண்டான்.
இனி அவர்கள் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி தான்.