ஒளி 10 :::-
அழகிக்கு யெல்லாம் துணிவதிகம்!
அழகியின் திமிரில் ருசியதிகம்!
அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்!
கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம்!
கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்!
அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்!
எல்லாம் நல்லதாகத் தான் ஆரம்பித்தது.. பள்ளியில் முழுவதுமாக பெண்களுடன் படித்துவிட்டு இங்கு ஆண்களுடன் சேர்ந்து படிப்பது அவளுக்கு புது அனுபவம். புது நண்பர்கள் கிடைத்தனர். தினமும் கல்லூரி செல்வது நடந்ததை வீட்டில் பகிர்வது என்று அவள் நாட்கள் நகர்ந்தது.
போகப் போகத் தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே மாற ஆரம்பித்தது. வருடத்திற்கு ஒரு முறை கமலம்மாள் தருவதாக சொன்ன பத்தாயிரத்தை வாங்க ரதி தான் செல்ல வேண்டும்..
அப்படி வரும் நேரங்களில் உடனே தந்து விட மாட்டார். சில பல முறை வர வைத்து அலைக்கழித்து தான் கையில் பணத்தைத் தருவார். கூடவே அவளை வீட்டு வேலையும் செய்ய வைத்தார்.
இந்த பணம் கிடைத்தால் தந்தையின் பளு கொஞ்சம் குறையுமே என்று அவர் அவளை நடத்தும் விதத்தை எல்லாம் பெரிதுபடுத்தாமல் சகித்தாள். கூடவே அவரின் பேச்சுகளையும்…
ஆனால் அதே விஷயம் தன் தாயையும் நோக்கித் திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை …
முதலில் உடல்நிலை சரியில்லை என்று சாந்தியை அங்கு வரவைத்து வீட்டு வேலைகள் எல்லாம் செய்யவைத்தவர் , போகப் போக வாரத்தில் இருமுறை என்று வர வைத்தார். அவள் படிப்பு முடிக்கும் வரைக்குமே செய்ய வைத்தார்.
இதைக் கண்டு ரதி ஒருபுறம் ராஜதுரை ஒருபுறம் என வருந்தினர். ரதியோ “இதெல்லாம் வேண்டாம், அவங்க சொல்லுவதை எல்லாம் ஏன் செய்யறீங்க? நம்ப வேற ஏதாவது முயற்சி செய்யலாம்” என்று எவ்வளவு பேசியும் பலன் என்னவோ பூஜ்யம் தான்..
“படிப்பு விஷயம் அம்முமா, இதுல ஏன் பிரச்சனை பண்ணனும்.. ஏதோ வயசானவங்களுக்கு செய்யறோம்னு நினைச்சுக்கோ..” என்று சாந்தி அவளை சமாதானப்படுத்த,
“ஆனால் அவங்க அப்படி நடத்தலையே?ஏன் அவங்களுக்கு வேலை செய்ய ஆளா இல்லை? வருஷத்துக்கு கொடுக்கற பத்தாயிரத்தை நம்மகிட்ட இருந்து இப்படி வசூல் பண்ணிக்கிறாங்கம்மா…” என்று ஆதங்கமாக சொல்ல,
“விடுடா உன் படிப்பு முடியும் வரைக்கும் தானே, பார்த்துக்கலாம். அப்புறம் நீ வேலைக்கு போய் எங்களை பார்த்துக்க மாட்டியா?” என்று அவன் தந்தை சொல்ல..
அன்னைக்கே இந்த படிப்பு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் இவங்க இப்படி கஷ்டப்பட்டிருக்க வேணாமே.. என்று பெருமூச்செடுத்தவள் “என்னமோ பண்ணுங்க .. எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலை…. “என்று சென்று விட்டாள்.
அந்த நேரத்தில் சாந்தியின் பிறந்த வீட்டில் கூட உதவி கேட்க முடியாத நிலை.. எல்லாவற்றையும் சகித்து சமாளித்து என்று ஒரு வழியாக படிப்பை முடித்தாள். காலேஜ் முடித்ததும் முதல் வேலையாக சாந்தியை அங்கு அனுப்புவதை நிறுத்தினாள்.
படிப்பில் எல்லாம் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாலும் செயல்முறை அனுபவம் கொஞ்சம் குறைந்து தான் காணப்பட்டது.
இப்போது தான் திறந்த காலேஜ் என்பதால் அங்கு அனுபவம் வாய்ந்த வழிநடத்தும் ஆசிரியர்கள் இல்லை… கேம்பஸ் இன்டெர்வியூம் இல்லை… படித்தாயிற்று அடுத்து எங்கு எப்படி வேலை தேட என்ற அறியாமையில் கலங்கித் தவித்தாள்…
அடுத்த தலைமுறையாக அவள் தான் இந்த அளவிற்கு படித்தது அதனால் அடுத்து எந்த பாதை என்பது தெரியவில்லை… கல்லூரியிலோ எல்லாம் விளம்பரமாக வாய் சொல்லாக மட்டுமே இருந்தது…
அதன்பின் உடன் படித்தோருடன் சேர்ந்து ஒரு கன்சல்ட ன்சி மூலமாக சிறிதளவு பணம் கட்டி ஏதோ ஒரு வேலையில் சேர்ந்தாள்.
[the_ad id=”6605″]
முழுக்க முழுக்க அவள் படித்ததற்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை… ஆனால் தந்தையின் பளுவைக் குறைக்க சேர்ந்து விட்டாள். எதுவானாலும் போக போக பார்த்துக் கொள்ளலாம் என்று சென்னைக்கு தினமும் ரயிலில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
இங்கு பள்ளி , காலேஜ் என எல்லாமே அவள் ஊரில் படித்தது. வீடு , கோவில், காலேஜ் இது தவிர வேற உலகம் அறியாதவள்.
முற்றிலும் மாறான நாகரிகத்தின் பட்டினத்திற்கு வேலைக்கு சென்று வருவது எதுவும் அத்தனை சுலபமாக இல்லை… எல்லாவற்றையும் தட்டி தடுமாறி தாண்டி இன்று ஓரளவிற்கு அவளுக்கு இந்த உலகம் பிடிபட்டது …
இதோ வேலைக்கு செல்ல ஆரம்பித்து ஆறு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது… வாழ்க்கை சுவாரசியமாகத் தோன்றியது.. தன் வருமானத்தில் பெற்றவர்களுக்கு செய்வது என்பது அத்தனை நிறைவாக இருந்தது…
இந்த ரயில் பயணம் இன்னும் அழகாக இருந்தது… யாரென்று தெரியாத நபர்களாக ஆரம்பித்து இன்று அவர்கள் நண்பர்கள் கூட்டமாக மாறும் அளவிற்கு ஒரு சுற்றம் கிடைத்தது…
எல்லாம் இனி சுபமே! அப்பாவின் ஆசையான அந்த வீட்டை மட்டும் எப்படியாவது கட்டிக் கொடுக்க வேண்டும்.. அது மட்டுமே அவளின் கனவாக இருந்தது…
பள்ளித் தோழி விஜி ,கல்லூரித் தோழிகள் கீர்த்தனா ஜெயந்தி என நால்வரும் சேர்ந்து தான் சென்று வருகின்றனர். ஆனால் ஒரே இடத்தில் அல்ல நால்வரும் வெவ்வேறு இடத்தில் வேலை செய்தனர். அதனால் இன்னும் அவர்களுக்குள் நட்பு நெருக்கமானது.
“ஜெய் ! நான் இப்ப வேலையிலே சேர்ந்து ஆறு மாசத்துக்கு மேல ஆச்சுல்ல.. எனக்கு லோன் கிடைக்குமா”, என்று ரதி கேட்க
“ம்ம்ம்…உன்னோட சம்பளம், கம்பெனி பொறுத்து கிடைக்கும் ரதி .. ஆனால் இப்ப லோன் எதுக்கு?”
“வீடு கொஞ்சம் ரெனோவேட் பண்ணலாம்னு…”
“அதுக்கு இந்த லோன் அமௌன்ட் மட்டும் போதாதே ரதி” என்று கீர்த்தனா சொல்ல,
“ஆமா கீது, போன வாரமே அப்பாகிட்ட இது பத்தி பேசிட்டேன்.. மாச மாசம் சம்பளத்துல பிடிச்சுக்கறா போல அவர் கடையிலேயே கொஞ்சம் அமௌன்ட் கேட்க சொல்லியிருக்கேன்.. அப்புறம் இந்த லோன் அமௌன்ட் எல்லாம் போட்டு கட்டலாம்னு..” என்று ரதி சொன்னாள்.
“அதுக்கு வீட்டு பத்திரம் வைச்சு ஒரே இடத்துல ஒரே லோனாக ஹோம் லோன் மாதிரி போடேன் ரதி”, என்று ஆன்ட்டி சொல்ல
“எனக்கு பத்திரம் வைக்கற ஐடியா இல்லை ஆன்ட்டி…” ரதி சொல்ல,
“இல்ல ரதி வீடு கட்றது நீ நினைக்கற மாதிரி இல்ல… ஆரம்பிச்சா எப்படி பணம் தேவைப்படும்னு சொல்ல முடியாது. அப்புறம் ஆரம்பிச்சுதும் பணம் பத்தலைன்னு அப்படியே பாதியில நிற்கும். ஒன்னு பணம் கொஞ்சம் சேர்த்துட்டு ஆரம்பி இல்லைனா ஹோம் லோன் போடு… அதான் நல்லது…” என்று அவர் சொல்ல,
“சரி ஆன்ட்டி !” வீட்டில பேசிட்டு முடிவு பண்றேன்.
ஆனால் யோசிக்க கூட அவகாசம் இல்லாமல் எல்லாம் தலைகீழாய் மாறி அவள் கையை மீறி சென்றதை இப்போது நினைத்தாலும் மனம் ஆற மறுக்கின்றதே, என்று மனதோடு வருந்தியவளை ட்ரைனின் ஹார்ன் சத்தம் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது. ஊரை நெருங்கிவிட்டோம் என்பது புரிய பைகளை எடுத்து கொண்டு இறங்கினாள்.
அவளை அழைத்து செல்ல அவளின் பெரிய மாமா நிற்பதை பார்த்ததும் முகம் மலர்ந்தது. அவரைப் பார்த்து வருடமாகி விட்டது.
“மாமா !” என அழைத்தபடி வேகமாக அவர் அருகில் செல்ல ,
[the_ad id=”6605″]
அவளைப் போலவே அவருக்கும் அந்த மகிழ்ச்சி தொற்ற, “எப்படி இருக்க ரதி ?? எங்களை பார்க்க உனக்கு இவ்ளோ நாள் ஆச்சா? ஆமா என்ன இப்படி இளைச்சுட்ட? சரியா சாப்படறியா இல்லையா ?”
அவளோ அவருக்கு பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே அவர் கையை பிடித்தபடி இருந்தாள்…
“என்னமா ? பதில் சொல்லாம சிரிக்கிற ?” என செல்லமாக கோவிக்க..
“ஐயோ மாமா !நீங்க மூச்சு விடாம கேள்வி கேக்கறது பார்த்ததும் அண்ணனுக்கு தங்கச்சி தப்பாம இருக்காங்கனு தோணுச்சு .. அம்மாவும் இதே போல தான் விடாம கேள்வி கேப்பாங்க அதை நினைச்சதும் சிரிப்பு வந்துடுச்சு” என இன்னமும் சிரிப்பை அடக்கினாள்.
அவருக்கும் தங்கையின் குணமறிந்து சிரிப்பு தோன்ற, “உனக்கு எங்க ரெண்டு பேர கலாய்க்கலனா தூக்கம் வராதே” என அவள் தோளில் ஒரு அடி போட,
வலி இல்லையானாலும் ,”ஆஆ ஆ … வலிக்குது மாமா .. இருங்க சின்ன மாமாகிட்ட சொல்றேன்” என பொய்யாய் மிரட்ட..
“யாரு நீ? அவன் கிட்ட முதல்ல நின்னு பேசறியானு பாரு அப்பறம் என் மேல புகார் படிப்ப” என அவளை கேலி செய்ததும் …
“மாமா ..” என செல்லமாக சிணுங்கும் தங்கை மகளை பார்க்கும் போது மனம் நிறைவாக இருந்தது..
“சரி வா ! வீட்டுக்கு போகலாம்.. நீ வந்ததும் தான் கோவிலுக்கு போவோம்னு சின்னதுலருந்து பெருசு வரைக்கும் எல்லாரும் உனக்காக தான் காத்திட்டு இருக்காங்க ..”
“ஆஹ்ஹ்ன் ! உங்களுக்கு பொறாமை மாமா ! எல்லாரும் எனக்காக வெயிட் பண்றங்கனு… வாங்க சீக்கிரம் போவோம்” என நடையில் வேகமெடுத்தாள்..
அவள் முகத்தில் அந்த சிரிப்பை பார்த்ததும் இந்த சிரிப்பு எப்பவும் நிலைச்சு இருக்கனும் ஆண்டவா என ஒரு வேண்டுதலை வைத்து விட்டு அவளை பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்.
தங்கமாக என்னை கையில் வைத்து தாங்க ஆயிரம் உறவுகள் சூழ்ந்திருந்தாலும்,
உயிராக என்னை உன் கண்ணில் வைத்து தாங்கும் உந்தன் காதலைத் தான் இந்த மனம் தேடுதே!