மண்வாசம் 15 :
சூரியக் கதிர்கள் மறைந்து சந்திரக் கதிர்கள் தோன்றிய வேளை!
அந்த நிலவின் குளுமையும் பிரகாசமும் அரசியிடமும் இருந்தது. உடன் கொஞ்சமாய் அல்ல, நிறையவே சந்தோஷமும் இருந்தது.
“இனி நீ உங்க ஊர்லையே சார்ஜ் எடுத்துக்கலாம். இப்போ சந்தோசமா மா?”
“தேங்க்ஸ் அங்கிள். இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்” என தென்றலது தந்தையின் பாதம் பணிந்து ஆசி பெற்றுக்கொண்டாள் அரசி.
“சொந்த நாட்டுல படிச்சிட்டு வெளிய வேலை தேடி போற காலத்துல நீ வெளிநாட்டுல படிச்சிட்டு வந்து உங்க ஊர்ல சேவை செய்யணும்னு நினைக்குற. உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்” என மனதார ஆசிர்வதித்துச் சென்றார் அவர்.
தென்றலின் தந்தை அரசியல் செல்வாக்கு உடையவர். அரசி தன் ஊரிலேயே பணியாற்ற வேண்டும் என்று சொல்ல, சிங்காநல்லூரிலும் அப்பணிக்கான இடம் காலியாய் இருக்க, அவர் முயற்சித்து அங்கு பணியாற்றும் வாய்ப்பை அரசிக்கே பெற்றுக் கொடுத்துவிட்டார்.
“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்னு சொன்னா நீ தான் இப்போவே ஊருக்கு போகணும்னு சொல்லுற” என தென்றல் குறைப்பட்டுக்கொள்ள,
“இவ்வளவு நாள் இருந்ததே பெரிய விசயம்” என்றாள் அரசி சின்னதாய் புன்னகைத்து.
உண்மையும் அது தான். அரசி அவள் வீட்டை விட்டு, அந்த ஊரை விட்டு இருப்பதெல்லாம் அவளால் இயலாத ஒன்று. ஆனால் வாழ்வில் வரும் மாற்றங்கள் சொல்லிவிட்டு வருவதில்லையே. மாற்றங்களுக்கு ஏற்ப மாறுவதும் சொல்லப்படாத ஒன்று தானே!
தன் உடைகளை எல்லாம் பேக் செய்து எடுத்து வைத்தவள் கைபேசியோடு வந்து கட்டிலில் அமர்ந்தாள். இப்போதே ஊர் கிளம்ப நினைத்ததற்கு காரணங்கள் பல. அதில் முதலும் முக்கியமான காரணமும் அரும்பு தான்.
இடைப்பட்ட நாட்களில் அரசிக்கு அவளது வேலையே சரியாய் இருக்க, கிடைத்த நேரத்தில் எல்லாம் அரும்பை தொடர்பு கொள்ளத் தான் முயற்சித்தாள். முத்துச்சாமியே அழைப்பை ஏற்க,
“நான் முத்துச்சாமி பேசுறேன்”
“நான் வேங்கையரசி பேசுறேன்”
இதுவே தொடர, அவரோடு பேச கண்ணை கட்டிக்கொண்டு வந்தது. குலசேகரனுக்கும் அழைப்பே செல்லவில்லை. என்ன நடக்கிறதென்றே புரியவில்லை அரசிக்கு.
என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று இன்று காலை அரும்பின் எண்ணுக்கு மீண்டும் அழைத்தாள்.
“அலோ…” என்று மறுமுனையில் ஒலித்த குரலில்,
“நீங்க முத்துச்சாமி பேசுறீங்க நான் வேங்கையரசி பேசுறேன். இப்போவாச்சும் அரும்பு கிட்ட போனை கொடுக்குறீங்களா” என்றாள்.
[the_ad id=”6605″]
தொண்டையை செருமியவர் பதிலளிக்கும் முன்,
“வெளி வேலையா இருக்கேன். அரும்பை பொறவு பேச சொல்லுறேன். அதானே சொல்லப் போறீங்க?” என்றதும் மறுமுனையில் அமைதி.
“பெரிப்பாஆ! நீங்க வேலைக்கு போங்க போகாம இருங்க, அவ போனை எதுக்கு தூக்கிட்டே சுத்துறீங்க? ஏதோ சரியில்லைங்களே. நான் நேரா உங்க வீட்டுக்கு வந்தே அரும்பை பாத்துக்குறேன்ங். அப்போ நான் வெச்சிடறேன்ங் பெரிப்பா. அப்பத்தாளை கேட்டதா சொல்லுங்க” என,
“இரு இரு.. அரும்பு கிட்ட கொடுக்குறேன்” என்று கைபேசியை கொண்டுபோய் அரும்பிடம் நீட்ட, புரியாது பார்த்தவள் அதை வாங்கிப் பேச, மறுமுனையில் அரசி என்று அறிந்ததும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது.
முத்துச்சாமி அருகிலேயே நிற்க அவளால் மனம்விட்டு பேசமுடியவில்லை.
“என்ன உங்கப்பா பக்கத்துலையே நிக்குறாரா?”
“ஹ்ம்ம்…” என்றாள் பெரிதாய்.
“வாட்ஸ் ஹேப்பனிங் தேர்?”
‘இருக்கவே இருக்கு இங்கிலீஷ்’ என இறங்கி விளையாட, வேடிக்கை பார்க்கக் கூட அங்கே நிற்கவில்லை அரும்பின் தந்தை.
அரும்பிற்கு நடந்தவற்றைப் பற்றி அவள் விவரித்த விதமே அரசிக்கு கவலை அளித்தது. அவள் அந்த அளவிற்கு நொந்து போயிருக்கிறாள் என்று புரியாமல் இல்லை. இருந்தாலும் அவள் தேர்ந்தெடுத்தது குலசேகரனை என்பதால் அரசிக்கு இதுவரை நடந்ததெல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை. அவன் இருக்க இவள் ஏன் அஞ்சுகிறாள் என்று தான் நினைத்தாள்.
“அப்போ உங்க மாம்ஸ் மேல ஆரம்பத்துல இருந்தே உனக்கு ஒரு நெனப்பு இருந்திருக்கு” என அரசி கேட்க,
“நான் மட்டும் நெனச்சு என்ன பிரயோசனம்” என ஆற்றங்கரையில் குலசேகரனோடான உரையாடல்களைப் பகிர்ந்தாள் அரும்பு.
‘இது வேறையா? அப்போ அரும்பு பாடு திண்டாட்டந்தேன்’ என நினைத்து முழுதாய் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்,
“அந்த நேரத்துல மாமாவோட உன்னைய பாத்தும் பெரியப்பா எதுவும் சொல்லலையா?” என அரசி ஆச்சர்யமாய் வினவ,
“எதுவும் சொல்லல. அமைதியா என்னைய கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு. என்ர போனையும் தரமாட்டீங்குறாரு. என்ரனாலையும் வீட்ட விட்டு எங்கயும் போமுடியல” என்றாள் அரும்பு.
“சரி நீ எதுக்கும் கவலைப்படாத, நான் சொல்லுறதோட்டம் செய். நாளைக்கு நான் ஊருக்கு வந்திருவேன். மத்ததை அப்பறம் பாத்துக்கலாம்” என்று சிலதை கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அப்போதிருந்து அதே சிந்தனை தான் அரசிக்கு. இப்போதும் அரும்பின் பிரச்சனையை தீர்க்கும் வழியை ஆராய்ந்துகொண்டிருக்க, அப்படியே நேரம் கடந்திருந்தது. மணி பத்தை நெருங்க, தென்றலின் இல்லத்தாரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு பேருந்தில் ஏறினாள்.
பேருந்து நகர்ந்த சிறிது நேரத்தில் அருந்தமிழை கைபேசியில் அழைத்து தன் வருகையை தெரிவித்துவிட்டு பின் இருக்கையில் சாய்ந்து மெல்லக் கண்ணயர்ந்தாள்.
ஆறுச்சாமியின் இல்லத்தில்!
[the_ad id=”6605″]
“இப்பவாச்சும் நம்ம அரசிகிட்ட ஒரு வார்த்தை சொல்லிப்புடலாம் ஆறுச்சாமி” என நாயகி சொல்ல,
“இங்கிருந்து போனதுல இருந்து உங்க சின்னப்பேத்தி இன்னும் ஒரு வார்த்த என்ரகிட்ட பேசலை. அதேன் நாளைக்கு வர்றேன்னு சொல்லிருக்காளே! வந்தே தெரிஞ்சுக்கட்டும்” என்றுவிட்டு நகர, செய்வதறியாது பார்த்திருந்தனர் நாயகியும் அருந்தமிழும்.
“தமிழு! நீ போய் நேரங்காலமே தூங்கு கண்ணு. நாளைக்கு நெறைய வேலை கெடக்குது. கோழி கூப்புட எந்திரிச்சா தான் சரியா இருக்கும்” என்றுவிட்டு நாயகியும் செல்ல, அருந்தமிழ் அவள் அறைக்குள் வந்தாள்.
விடிந்தால் நிச்சயதார்த்தம் என்ற நிலையில், இன்றைய இரவில் உறக்கம் அவளைத் தழுவுவது என்பது சற்று கடினம் தான்.
இன்னும் நம்பமுடியவில்லை அவளால். கந்தசாமி அவள் வீட்டிற்கு வருகை புரிந்ததும், அதன் பின் அவள் தந்தை மேற்கொண்ட துரித முடிவுகளும் கனவு போல் இருந்தது.
அருந்தமிழ் பள்ளி முடிந்து இல்லம் திரும்பிய ஒரு மாலை வேளை!
அவர்களது வீட்டின் வரவேற்பறையில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் கந்தசாமியைக் கண்டதும் இன்முகமாய் அவருக்கு வணக்கம் சொல்ல, அவரும் புன்னகையுடன் தலையசைத்து,
“இப்போ தான் வர்றியா மா” என
“ஆமாங்க” என்று பணிவுடன் சொல்லியிவள், அடுத்து அங்கு இருப்பதா வேண்டாமா என்ற பாவனையுடன் தந்தையை ஏறிட,
“நீ போ தேவி ம்மா” என்றார் ஆறுச்சாமி. உடனே அவ்விருவருக்கும் தலையசைத்து உள்ளே நகர்ந்தாள்.
இருவரும் ஏதோ பெரிய விஷயம் குறித்து பேசுவதாய் பட்டது தமிழுக்கு. யோசனையோடு சமையலறைக்குள் செல்ல, தேநீரோடு வெளியே வந்தார் நாயகி.
“கொடுங் ஆத்தா நான் கொண்டுபோய் கொடுக்குறேன்” என்று டிரேவை கையில் வாங்கச் செல்ல,
“இல்ல கண்ணு நீ போ நானே கொண்டு போறேன்” என்றுவிட்டு சென்றுகொள்ள, அருந்தமிழும் அவளறைக்குள் வந்து ரெப்ரெஷ் செய்துவிட்டு சிறிது நேரம் பால்கனியில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
‘மாறன் அப்பா எதுக்கு வந்திருக்காரு? ஒருவேளை மாறன் எங்க விஷயமா அவர் வீட்ல பேசியிருப்பாரோ’ என நினைக்க, லேசாய் பதற்றம் தொற்றிக் கொண்டது.
அப்போது கந்தசாமி கிளம்புவது தெரிய, உடனே பால்கனியின் முகப்பிற்கு வந்து தடுப்பிற்கு போடப்பட்டிருந்த இரும்பு கம்பியை பிடித்தபடி வாசலைப் பார்த்தாள்.
வண்டியில் ஏறும்போது கந்தசாமியும் மாடியில் அருந்தமிழ் நின்றிருப்பதைக் கண்டு லேசாய் புன்னகைத்து விடைபெற, அவளும் மரியாதையை நிமித்தமாய் தலையசைத்துப் புன்னகைத்தாள்.
அவர் சென்றதும் தடதடவென படிகளில் கீழிறங்கி வந்தவள் நாயகியைத் தேட, அவர் ஆறுச்சாமியோடு தீவிரமாய் எதையோ பேசிக்கொண்டிருந்தார். அருகில் செல்வோமா வேண்டாமா என யோசனையுடன் நின்றிருக்க, தமிழ் நிற்பதைக் கண்ட ஆறுச்சாமி அவளையே தன் அருகில் அழைத்தார்.
“தேவி மா!” என அன்பொழுக அவள் தலையை ஆதுரமாய் வருடியவர் அமைதியாய் இருக்க, என்ன சொல்லப் போகிறார் என தமிழுக்கு தான் படபடவென இதயம் அடித்துக் கொண்டிருந்தது.
“உன்ர விசயமா தான் அப்பத்தாளும் நானும் கலந்து பேசிட்டு இருந்தோம்” என்று சொல்லவும் விஷயம் என்னவென்று ஒருவாராக யூகித்தாள்.
“நான் நல்லா இருக்கையிலயே உனக்கொரு கலியாணத்த பண்ணி பாத்துடோனும் கண்ணு. எனக்கும் வயசாகிட்டே போகுதல்லோ எமன் எப்போ கூப்புடுவானோ. அடுத்து உன்ர தங்கச்சி வேற இருக்குறா” என நாயகி மெல்ல ஆரம்பிக்க, சில நொடிகள் அமைதி காத்த அருந்தமிழ் பின் இருவரையும் நிமிர்ந்து பார்த்து,
“நீங்களும் அப்பாவும் பார்த்து என்ன முடிவெடுத்தாலும் எனக்கு அதுல முழு சம்மதம்ங் ஆத்தா” என்றாள் முழு மனதாக.
“நாங்க ஆர தேர்ந்தெடுத்தாலும் உனக்கு அதுல விருப்பமா தேவி?” என்றார் ஆறுச்சாமி. அத்தனை நம்பிக்கையாய் ஒலித்தது அவர் குரல். அவளை சோதித்துப் பார்ப்பதாயும் இருந்தது.
லேசான குற்றவுணர்வு கூட அவளுள் எழுந்தது. இதுவரை எதையும் தந்தையிடம் இருந்து மறைத்ததில்லை. காதலில் விழுந்தது தவறோ என்று ஒருமனம் கேட்க, காதலிப்பது தவறல்ல அதற்காக பெற்றோரின் நம்பிக்கையை உடைப்பது தான் தவறு. இங்கு நீ யாருடைய நம்பிக்கையையும் இதுவரை உடைக்கவில்லை என்று இன்னோர் மனம் எடுத்துரைக்க, மனச்சுழலில் இருந்து விடுபட்டு அமைதியானாள்.
அவள் அமைதி கண்டு ஆறுச்சாமி அவளை ஆழமாய் பார்க்க,
“உங்க சொல்லை நான் என்னிக்கு தட்டி இருக்கேனுங் ப்பா” என்றாள். தன் மகளை பெருமிதமாய் பார்த்தவர்,
“தெரியுந் தேவி. நீ என்ர பேச்ச ஒருநாளும் மீற மாட்டின்னு தெரியும். அந்த நம்பிக்கைல தான் நான் ஆரு கிட்டையும் கேக்காம அந்த பெரியமனுசனுக்கு அப்படி ஒரு வாக்கை கொடுத்துட்டேன். எங்க என்ர வாக்கை காப்பாத்த முடியாம போயிடுமோனு நெனைச்சேன் ஆனா நீ இருக்கைல எனக்கென்ன கவலை. ரொம்ப சந்தோசம் ம்மா” என அவள் தலையை வருடிச் சொல்ல,
‘வாக்கு கொடுத்துட்டாரா’ என ஒருபுறம் லேசான அதிர்ச்சி இருந்தாலும் எல்லாம் நன்மையில் முடிந்த சந்தோஷத்தில் அது பெரிதாய் அவளைச் சென்றடையவில்லை.
“இனியென்ன ஆறுச்சாமி அடுத்து ஆகவேண்டிய வேலைய பாரு” என்று நாயகி சொல்ல, முன்பே நல்ல நாள் பார்த்து வைத்திருந்தவர் புதன் கிழமையை குறித்துவிட்டார்.
அதை எல்லாம் இப்போது எண்ணிப் பார்த்த அருந்தமிழ், தன் கைகளில் தவழ்ந்திருக்கும் வளையல்களோடு கதை பேச ஆரம்பித்திருந்தாள்.
“இப்படி எல்லாம் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சே தான் என்ர கைக்கு வந்தியா” என வளையலை வருடியவளின் அக விழிகளில், இறைவன் சன்னதியில் இவள் மனம் நிறைந்தவன் விழி நிறைத்தானே அந்தக் காட்சி தான்.
இன்னதென்று சொல்ல முடியாததொரு உணர்வு அன்று போல் இப்போதும் அகத்தினில் பெருகியது.
டீச்சர்..!
[the_ad id=”6605″]
அவன் அழைப்பு காதில் விழுவதுபோல் இருக்க,
“இனி டீச்சர்ன்னு கூப்பிட்டா முட்டி போட வெச்சிடுவேன் மிஸ்டர். கட்டவண்டி” என்று சொல்லிச் சிரிக்க, அவனோடான அழகிய நிமிடங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தாள்.
டிரைவர் என்று தவறாய் எண்ணியது, அவனும் தான் யாரென்று தெரிவிக்காது இயல்பாய் அவளோடு பேசியது, சிறார்களோடு பாசமாய் பழகுவது, ஆண்மையின் கம்பீரத்தோடு செயல் புரிந்தாலும் அதே சமயம் அன்னையின் பிரிய மகனாய் வலம் வருவதென அவன் குணனலன்களால் பெரிதாய் ஈர்க்கப்பட்டிருந்தது புரிய, இதழ்கள் விரிய அழகாய் புன்னகைத்தாள்.
“திருடுறது தப்பு தானே, அப்பறம் நீங்க ஏன் என் இதயத்தை திருடுறீங்க” என்று டீச்சருக்கே பாடம் எடுத்தானே!
அவன் எடுத்த காதல் வகுப்பில் தினமும் பாடங்களை சரிவரப் பயின்று காதலெனும் தேர்வை எழுதி அதில் முதல் வகுப்பில் தேர்ச்சியையும் பெற்றுவிட்டாள் இந்த மாணவி. அடுத்து அவன் மனைவி ஆவது தான் மிச்சம்.
“அப்பா கேட்டா என்ன சொல்லுவீங்க?” என்று கேட்டானே! சொன்னதுபோல் அவன் தந்தையை அனுப்பி என் தந்தையிடம் பெண் கேட்க வைத்துவிட்டானே!
“கட்டவண்டியை மட்டும் தான் பிடிக்கும்ன்னு சொல்லுவேன்” என்று மாறனுக்கு தான் சொன்ன மறுமொழி நினைவில் வந்தது.
மாறன் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் தன் தந்தை கூறியபோது, பெயர் படிப்பு வேலை அந்தஸ்து கடைசிக்கு புகைப்படம் என எது பற்றியும் விவாதிக்காது, தெரிந்துகொள்ள விரும்பாது தன் சம்மதத்தை மட்டுமே உறுதியுடன் கூறினாள் அருந்தமிழ். தன் மனம் கவர்ந்தவனையே தன் தந்தை தனக்கு தேர்வு செய்திருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.
மாறன் எப்படி உணர்கிறான் என அவன் முக பாவங்களை பார்த்து ரசிக்கவேண்டும் போல் இருந்தது. இடைப்பட்ட நாட்களில் அவன் அவள் முன் தோன்றியிருக்கவே இல்லை. எங்கு சென்றானோ! இல்லை, இன்ப அதிர்ச்சி தர எண்ணி நிச்சயம் வரையில் என் முன் தோன்றாமல் இருக்கிறானோ! என அருந்தமிழின் காதல் மனம் அதன் போக்கில் எண்ணிக் கொண்டிருந்தது.
கைபேசி எண்களைக் கூட இதுவரையில் இருவரும் பரிமாறிக் கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட காதல் கைகூடியதில் எல்லையற்ற ஆனந்தத்தில் இருந்தவளுக்கு வாழ்நாளில் இது நீண்டதொரு விடியலாய்த் தெரிந்தது.
பொள்ளாச்சி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இருந்து தன் முதுகில் மாட்டிய அமெரிக்கன் டூரிச்டர் பேகுடன் குதித்து இறங்கினாள் அரசி.
உடனே கைபேசி இசைத்தது. அருந்தமிழ் தான் அழைத்திருந்தாள்.
“என்ன தமிழ் எத்தனை வாட்டி தான் கேப்ப? பொள்ளாச்சி வந்தாச்சு ஒருமணி நேரத்துல வந்திடுவேன்” என்று கத்த
“பாசமா கூப்பிட்டா அதுக்கு ஏன்டி வள்ளுன்னு வர்ற” என்று சுணங்கினாள்.
“பின்ன என்ன நேத்து நைட் சென்னைல பஸ் ஏறினது. என்னைய தூங்கவே விடாம எப்போ வருவ எப்போ வருவைன்னு ஒரு மணி நேரத்துக்கு ஒருக்கா போன் போட்டுகிட்டே இருந்தா என்ன அர்த்தம்? பஸ் வந்து சேர்ந்ததும் சொல்லுறேன்னு சொன்னனா இல்லையா”
“அதுக்கில்லடி நீ எங்காவது தூங்கிட்டு வந்து இறங்காம போய்டா என்ன பண்ணுறது”
“ஷோ” என தலையில் அடித்துக் கொண்ட அரசி,
“என்ன விசயம்ன்னு கேட்டாலும் சொல்ல மாட்டிங்குற தமிழ். ஆனா ஏதோ விஷயம் இருக்கு. அதான் நீ என்னைய போட்டு இப்படி நொய் நொய்ன்னு நச்சிட்டு இருக்க. என்ன மிஸ்டர். ஆறுச்சாமி என்ரகிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காறா?” என்று சரியாய் யூகித்து கேட்க,
“அ.. அது” என தமிழ் திணற,
“உன்னைய வந்து கவனிச்சுக்குறேன் இரு” என்று அழைப்பை துண்டித்துவிட்டு தன் பார்வையை மினி பஸ்கள் நின்றிருக்கும் ரேக்கில் பதித்தாள்.
அவளது போதாத நேரம் அங்கு ஒன்று கூட இல்லை. சிறிது நேர காத்திருப்பிற்குப் பின்னரே ஒரு பேருந்து வந்தது.
“வேட்டைக்காரன் புதூர்.. ஆனைமலை.. சேத்துமடை.. சிங்காநல்லூர்” என்று கூவிக்கொண்டிருந்த நடத்துனரை நோக்கி நகர்ந்தாள்.
“ஆத்தாடி! இந்த புள்ளையா” என அரசியை கண்டதும் முன் படிக்கட்டில் இருந்து பின்பக்கம் சென்றுகொண்டார். சில நிமிடங்களில் பேருந்து நகர நடத்துனரும் நகர்ந்து முன்னால் வர,
“சிங்காநல்லூர் ஒன்னு” என்று அரசி பணத்தை நீட்ட, பயணச்சீட்டை கொடுத்தவர்
“பாக்கி நாலு ரூபா” என்று சொல்லி மீதியை கொடுத்துச் செல்ல, சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.
சிறிது நேரத்தில் ஊர் வந்திருக்க பேருந்தில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடைபோட்டாள். வாயிலில் இருந்த வண்ணக் கோலங்கள் அவளை வரவேற்றது.
ஒரு பாடலை முணுமுணுத்தபடி ஒருகையில் தோல்பையை பிடித்துக் கொண்டு மறுகையில் கைபேசியை பற்றியபடி வராண்டாவைத் தாண்டி உள்ளே வர, அங்கு அவள் கண்ட காட்சியில் முன்னேறாது அப்படியே நின்றாள் அரசி.
தாம்பூலத் தட்டை ஆறுச்சாமி கொடுக்க முத்துலட்சுமி பெற்றுக்கொள்ள, அரசியின் கையிலிருந்த தோல்பை தானாய் நழுவி தரை தொட்டிருந்தது.
இப்போது முத்துலட்சுமியிடம் இருந்து ஆறுச்சாமி பெற்றுக்கொள்ள, விக்ரம பாண்டியனுக்கு அருந்தமிழ் தேவியோடு நிச்சயம் செய்யப்பட்டது.
தாம்பூல தட்டிற்கு அந்தப்பக்கம் வீட்டினுள் விக்ரமனும் இந்தப்பக்கம் வெளியே வேங்கையரசியும் நின்றிருக்க, இருவரது பார்வையும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்ள, அரசியின் கையிலிருந்த கீழே விழுந்து சிதறியது கைபேசி.
சிதறியது கைபேசி மட்டுமா?
அவள் இதயமும் தான் என்பதை அங்கு யார் அறிவார், அவனைத் தவிர!