“நல்லாயிருக்கோம்டா. நானே உன்னை கூப்பிடணும்னு நினைச்சேன். கார் வாங்கலாம்னு இருக்கேன் விக்ரம்.”
“சூப்பர்ண்ணா. எப்ப, என்ன கார் ?”, மகிழ்ச்சியாய்க் கேட்டான்.
“பத்தாவது வெட்டிங் டே வருதே அடுத்த மாசம். அதான் உங்க அண்ணிக்கு கிஃப்ட்.”
“நானே கேக்கணும்னு நினைச்சேன். என்ன பண்ண போறீங்கன்னு. இல்லை இங்க வற்ரீங்களா கொண்டாட ?”
“எல்லாருக்கும் ஆபீஸ், ஸ்கூல் லீவ் போட முடியாதே. அது சரி வராது. காருக்குத்தான் சேர்த்து வெச்சென். மாருதி ஆல்டோதான் யோசிக்கறேன். இரண்டு லட்சம் கட்டிட்டு மிச்சம் லோன் போட்டுகலாம்னு.”, என்றான் ராகவன்.
“அண்ணா, வாங்கறது வாங்கறீங்க, எதுக்கு ஸ்ட்டார் ரேஞ்ச் வண்டி. நான் எங்க கிஃப்ட்டா இரண்டு லட்சம் உங்க அக்கவுண்ட்ல போடறேன். நீங்க நிசான் மைக்ரா மாதிரி பாருங்கண்ணா. “
“டேய், காசை உனக்கு சேர்த்து வை. “, அதட்டலாய் கூறினான் ராகவன்.
“நீங்க அப்படி நெனச்சா , உங்க அக்கவுண்டை துடைச்சு எனக்கு சி.ஏ ஃபைனல் பேப்பருக்கு காசு கட்டினீங்க ? “, வேகமாய் வந்தது விக்ரமின் பதில்.
“டேய், அதைத்தான் வேலைல சேர்ந்து எனக்கு திருப்பிட்டியே. இன்னும் என்ன ?”
“ அண்ணா, இப்ப இருக்கு தர்றேன். அன்னைக்கு நீங்களும் அண்ணியும் கணக்கு பார்க்கலை. இன்னைக்கு என்னை பார்க்க சொல்லாதீங்க. நாளைக்கு நான் ட்ரான்ஸ்ஃபர் செய்யறேன். அம்மாகிட்ட சொல்லிக்க வேண்டாம். காயத்ரிக்குன்னு ஆரம்பிப்பாங்க. நமக்குள்ள இருக்கட்டும். “, விக்ரம் சீரியசாய் சொல்லிக்கொண்டிருக்க, மாலினி முகத்தில் சிரிப்பு.
“என்ன அண்ணி, சிரிக்கறீங்க ?”, என்றான் விக்ரம்.
“உங்க அண்ணா சொன்னா, சரிங்கறதை தவிர வேற எதுவும் சொல்லாத அந்த விக்ரம் எங்க, இப்ப உங்க அண்ணாவையே அதட்டி பேசற இந்த விக்ரம் எங்கன்னு நினைச்சு வந்த சிரிப்பு.”
அசடு வழிந்தவன், “அப்படில்லாம் இல்லை அண்ணி. அது ஒரு வேகத்துல…”
“உன்னை ஓட்டறாடா உங்கண்ணி.”, சிரித்தான் ராகவன்.
“என்ன வேதா, உன்னை ஒரு வார்த்தை கேட்காம , இரண்டு லட்சம் தூக்கி தரேங்கறான். நீயும் சிரிச்சிட்டு வேடிக்கை பார்க்கற ? “, மாலினி வேதாவை வம்பிக்கிழுத்தாள்.
“அக்கா, இத்தனை மாசத்துல எங்கிட்ட நிறைய சொல்லிருக்கார். நீங்களும் பெரியத்தானும் இல்லைன்னா அவர் இந்தளவு வந்திருக்க மாட்டார். நீங்க அவரை பிரிச்சி பார்க்காத போது, நான் மட்டும் உங்களை அப்படி பார்ப்பேனா ? நீங்கதான் எனக்கும் ரோல் மாடல்கா.”
வேதா அப்படி சொல்லவும், சட்டென்று கண்கள் குளமாகியது மாலினிக்கு. அவள் புன்னகைத்து சமாளிக்கவும், ராகவன் இலகுவாக வேறு பேசி திசை திருப்பினான்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள். வேலையின் மத்தியில் மஞ்சரியின் தந்தை கைலாசத்தின் கைபேசி அழைக்கவும், எடுத்தார்.
“ஹலோ…”
“சார்… நான் சௌந்தர்ராஜன் பேசறேன். …ராஜேந்திரனோட அப்பா…”
“ஓ…சொல்லுங்க சார். சௌக்கியமா ?” , தன் ஆச்சர்யம் குரலில் தெரியா வண்ணம் பார்த்துக்கொண்டார் கைலாசம்.
“எப்ப, எங்கன்னு சொல்லுங்க சார். நானுமே உங்களை பார்த்து பேசணும்னுதான் இருந்தேன். உங்க நம்பர் தெரியாமத்தான் யோசிச்சிகிட்டு இருந்தேன்.”, சௌந்தர்ராஜனின் தயக்கம் புரிந்து, அதனை களைவிக்கும் பொருட்டு பேசினார் கைலாசம்.
“அ…நம்ம மட்டும் மொதல்ல பேசுவோம். நான் இன்னைக்கு கூட ஃப்ரீ தான். உங்க ஆபிஸ் கிட்ட பார்க்கலாமா ? “
“சரிங்க சார். நீங்க ஒரு நாலரை போல இங்க வந்துட்டீங்கன்னா, நானும் பெர்மிஷன் போட்டுட்டு வரேன். இங்க கான்டீன்லயே கூட பேசலாம். ஈ. பி மெயின் ஆபிஸ், ட்ரிப்ளிகேன்ல, உங்களுக்கு தெரியுங்களா இடம் ?”
“தெரியும்ங்க. நான் வந்துட்டு உங்களுக்கு கூப்பிடறேன்.”, என்று வைத்துவிட்டார்.
மகனின் இந்த மூன்று மாத ஒதுக்கம், தொலைந்து போன அவனின் சிரிப்பு, வேலை வேலை என்று உழைப்பில் தன்னைக் கரைத்துக்கொள்வதைப் பார்க்க சகியாமல், முதலில் கைலாசத்தை பேசிப் பார்த்து சரி கட்ட முயலுவோம் என்று நினைத்தார்.
[the_ad id=”6605″]
மனைவி கோவில் கோவிலாக சென்று வருவது தெரியும், ஆனாலும் கோமதியின் வருத்தத்தை அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு தீராக் கோபம் கனன்று கொண்டிருந்தது கோமதியின் மேல். அதனாலேயே பேச்சைக்கூட குறைத்துவிட்டார். கோமதியே வந்து புலம்பினாலும், “எனக்குத்தான் தெரியும்னு செய்யறதையெல்லாம் செஞ்சிட்டு இப்ப எங்கிட்ட வந்து நிக்காதே.”, என்று நிர்தாட்சண்யமாக சொல்லிவிட்டார்.
மனைவி, மகளை, தன் அண்ணனை, தூதுவிட்டதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார், தலையிடவில்லை. முட்டி மோதி தோற்றுப்போய், இப்போது மகன் மனது மாற வேண்டும் என்று சாமியே கதி என்று மனைவி சென்றதும், தன் முயற்சியை துவங்கினார்.
என்ன ஒரு வித்தியாசம், ராஜேந்திரனையும், மஞ்சரியையும் சேர்த்து வைக்க எண்ணி முதல் காயை நகர்த்தினார்.
அங்கே கைலாசமும் எப்படி பேசுவது என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார். அனேகமாக மீண்டும் கல்யாணப் பேச்சுவார்த்தையை தொடங்கத்தான் அழைத்திருப்பார் என்பது திண்ணம். தனது முந்தைய எதிர்ப்பு மகளால் தெளிவாக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவே இந்த ஒத்திகை. ஆனாலும், கோமதியம்மா சம்மதம் பெறாமல் எப்படி நடக்கும் என்பதுதான் கைலாசத்திற்குப் புரியவில்லை.
சொன்ன நேரத்திற்கு, இருவரும் காண்டீனில் சந்தித்துக்கொண்டனர். முதல் ஓரிரு நிமிடங்கள் இருந்த தயக்கமும், விடுத்து, காபி, பஜ்ஜி ஆர்டருடன் அமர்ந்தனர்.
“சார், இந்த மூணு மாசமா எனக்கு என் பிள்ளையைப் பார்க்க சகிக்கலை. அவன் விருப்பப்படியே உங்க மகளைக் கட்டி வைக்கத்தான் நான் ஆசைப்படறேன். உங்க தயக்கம் நியாயம்தான், ஆனா…”, சௌந்தர்ராஜன் சொல்லும்போதே இடைமறித்து,
“இல்லை சார். என் மகள் எனக்குத் தெளிவா புரிய வெச்சிட்டா. என் பெண்ணை உங்க வீட்டுக்கு மருமகளா அனுப்ப எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.”, என்றார் கைலாசம்.
நிறைய பேசி சரி கட்டவேண்டியிருக்கும் என்று நினைத்து வந்த காரியம், சட்டென முடிந்ததில், ஆச்சர்யத்தில் பார்த்தார் சௌந்தர்ராஜன்.
“ஆமாம் சார். ஆனா பாருங்க, என் பொண்ணை நான் இன்னும் குழந்தையாவே நினைச்சிகிட்டு இருந்தேன். அவ வளர்ந்து பக்குவமாகிட்டான்னு எனக்கு ஒரு வாரம் முன்ன புரியவெச்சிட்டா. அப்பறம்தான் என் மனசு மாறிச்சு.” என்றவர், தன் கோணத்தை மாற்றிக்காட்டிய மகளின் கருத்துக்களை சௌந்தர்ராஜனிடம் கூறினார்.
அவர் சொன்னதையெல்லாம் கேட்டதும், சொல்லொண்ணா பூரிப்பு சௌந்தர்ராஜனிடம். “என் மருமக ரொம்பத் தெளிவு சார். என் பையன் இவளைத்தான் கட்டுவேன்னு பிடிவாதம் பிடிக்கறதுல தப்பே இல்லை.”
இதைக் கேட்டு மகிழ்தாலும், “ஆனா, இப்ப ரெண்டு வீட்டம்மாக்களையும் சரி கட்டணுமே. “, என்றார் கைலாசம்.
“காஞ்சனாவுக்கு மஞ்சரிக்கு தோஷ ஜாதகம்னு பேசிடவேதான் கொஞ்சம் கோபமாகிடுச்சு. அதோட…”, என்று நிறுத்தியவர், தயங்கி பின்,
“உங்ககிட்ட சொல்றதுக்கென்ன… உங்க சம்மந்தியம்மா பர்வதம், காஞ்சனாவுக்கு அண்ணி. அவ அண்ணன் உயிரோட இருந்த காலத்தில, அவருக்கு காஞ்சனாவும் அவ அக்கா மல்லிகாவும்தான் உசத்தி. கல்யாணமாகி குழந்தைகள் பிறந்தும் கூட இவங்க ரெண்டு பேருக்கும் மிஞ்சினதுதான் அவர் மனைவி பர்வதத்துக்கு. ஓரளவுக்கு நானும் என் சகலையும் இதை தடுப்போம். ஆனாலும் அக்கா தங்கைகளுக்கு அவங்க அண்ணி கொஞ்சம் இளப்பம்தான்.”
“காஞ்சனாவுக்கு, பர்வதம்மா உறவுன்னுதான் நீங்க அவளுக்கு மதிப்பு குடுக்கறீங்க, இந்த சம்மந்தம் முடிஞ்சாலுமே, பொண்ணைக் கொடுத்த சம்மந்திக்குத்தான் முதல் மரியாதை இருக்கும்ங்கறதுதான் சங்கடம். ஆனா அதுவும் கூட இப்ப பொண்ணு தவிக்கிறதைப் பார்த்து கம்மியாகிடுச்சு. எப்படி சரி செய்யறதுன்னுதான் யோசிச்சிட்டு இருந்தோம்.”, என்று விளக்கினார் கைலாசம்.
“இது சரி செய்ய முடியும் சார். நாங்க உங்க வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டா, உங்க மனைவிக்கு கோபம் தணியணும். அவங்களுக்கு எந்த கௌரவக் குறைச்சலும் இல்லாம பார்த்துக்கலாம். அதெல்லாம் ராஜேந்திரனுக்கு கை வந்த கலை.”, இன்னும் நம்பிக்கை பெற்றவராகப் பேசினார் சௌந்தரராஜன்.
‘எல்லாம் சரி , உங்க மனைவியை எப்படி சரி கட்டறது ?’, என்ற கேள்வி நாக்கு நுனி வரை இருந்தாலும் கேட்க முடியாதவராய், பஜ்ஜியை வாயில் அடைத்தார் கைலாசம்.
ஒரு சங்கடமான அமைதிக்குப் பின், “கோமதியை சமாளிக்கறது தாங்க கஷ்டம். ராஜந்திரனை எப்படியெல்லாமோ சரி கட்டப் பார்த்தா, எதுவும் முடியலைன்னு, புள்ள மனசு மாறணும்னு கோவில் கோவிலா அலையறா.”, வருத்ததுடன் ஒத்துக்கொண்டார் சௌந்திர்ராஜன்.
“அந்த ஜோசியர்கிட்ட பேசமுடியாதா ?”, கைலாசம் கேட்டார்.
“நானும் அவர் கிட்ட வேலை பார்க்கற ரங்கசாமி கிட்ட கேட்டு பார்த்துட்டேன் சார். அவன் ஜோசியரை தொந்தரவு பண்ணமாட்டேன், எதாயிருந்தாலும் அவர் வந்த அப்பறம் பாருங்க. இல்லாட்டா வேற ஜோசியர்கிட்ட போய் கேட்டுக்கோங்க சார்ங்கறான். என் கஷ்டம் அவனுக்கு எங்க புரியுது ?”, பெருமூச்சு விட்டார் சௌந்தர்ராஜன்.
இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, கோமதியோ, அதே ரங்கசாமியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
“சொன்னா கேளுங்கம்மா. அய்யா கண்டிப்பா சொல்லிட்டு போயிருக்கார். யார் கேட்டாலும் நம்பரை குடுக்கக் கூடாதுன்னு. இப்பதான் அவர் பேரக் குழந்தை பிறந்து ஒரு வாரமாச்சு. இன்னும் ஒரு ரெண்டு மாசம்தான். வந்துடுவாரு . உங்க வீட்டுக்காரர், பிள்ளைன்னு மாத்தி மாத்தி வந்து கேட்டா என்னம்மா அர்த்தம் ? “ எரிச்சலாய் கேட்டான்.
‘ஓ அவங்களும் கேட்டாங்களா ?’, என்று நினைத்தவர் ,அவனிடம் விடை பெற்றுக் கிளம்பியவர், இரண்டு வீடு தள்ளி, ஒரு வீட்டிற்குள் நுழைந்தார்.
‘பங்கஜம் மாமி…’, என்று குரல் கொடுத்தார்.
[the_ad id=”6605″]
உள்ளிருந்து எட்டிப் பார்த்த ஒரு வாண்டு, “பாட்டி…யாரோ வந்துருக்கா….”, என்று கத்தியபடியே ஒடினான்.
உள்ளிருந்து எட்டிப் பார்த்தவர், “யாரு…”, என்று கம்பிக் கதவருகே வரவும்,
“நாந்தான் மாமி கோமதி. ஜோசியர் சம்சாரம் கோமளத்தோட ஃப்ரெண்ட். போன நவராத்திரிக்குக் கூட அவங்க வீட்ல வெச்சி என்னை வெத்தில பாக்கு வாங்கிக்க கூப்பிட்டீங்களே ? நானும் வந்தேனே ?”, என்று ஞாபகப் படுத்தினார்.
“ஆமாமாம், உள்ள வாங்க…”, என்று கதவைத் திறந்து வரவேற்றார்.
“என்ன விசேஷம் ? இப்படி உக்காருங்க..”, என்று அமர வைத்து, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
“கோமளம் பொண்ணுக்கு போன வாரம் குழந்தை பிறந்துச்சுன்னு சொன்னாங்க. பாருங்க, நான் வீட்ல இல்லை, இவர் விஷயத்தை வாங்கிக்கிட்டார், அவங்க நம்பரை வாங்கிக்கலை. நான் திரும்ப கூப்பிட்டு விசாரிக்க முடியாதபடிக்கு இருக்கு. அதான், அவர் பொண்ணு சங்கரி அமெரிக்கா நம்பர் உங்களண்டை இருந்தா வாங்கி பேசலாமேன்னு நெனச்சேன்.”, எல்லா தெய்வத்தையும், வேண்டிக்கொண்டு கேட்டார்.
“ஓ..எனக்கும் போன் பண்ணி சொன்னா கோமளம். இருங்க என் மாட்டுப்பொண் சங்கரி கூட வாட்சப்ல பேசிக்குவா. குழந்தை போட்டோ கூட அனுப்பிச்சாங்க. கேக்கறேன்.”, என்றவர் அவளை அழைத்து, நம்பரை வாங்கியும் கொடுத்தார்.
உஷாராக, அவர் மருமகளிடமே போனைக் கொடுத்து, “நீயே சேவ் பண்ணிக்கொடுத்துடுமா ?. என் பையன் போன்லருந்து பேசிக்கறேன். நம்ம நேரம் எது அவளுக்கு வசதிபடும் ?” , என்றார்.
“நம்ம ராத்திரி பத்து மணின்னா அவாளுக்கு காலை ஒன்பது மாமி. அந்த நேரம்தான் நான் கூப்பிடுவேன்.”, என்று பொறுப்பாய் பதிலளித்து நம்பரையும் சேமித்துக் கொடுத்தாள் அவர் மருமகள்.
உடனே கிளம்பினால் நன்றாக இருக்காது என்று , அவர்கள் கொடுத்த காபியைக் குடித்து, பொதுவாய் பேசி, பின் விடை பெற்றார்.
கோமதி வீடு வந்து சேர்ந்த அரை மணியில் சௌந்தர்ராஜனும் வந்தார். இரவுக்கு இட்லியை ஊற்றிய கோமதி, அவரிடம் “ராஜாவுக்கு போன் போட்டு வர சொல்லுங்க வீட்டுக்கு. முக்கியமா பேசணும்.”, என்றார்.
‘ஏன் நீயே போட வேண்டியதுதானே ?’, என்ற சௌந்தர்ராஜனின் பார்வையை சரியாகப் படித்தவர், “ நான் கூப்பிட்டா வர மாட்டான். நீங்க வர சொல்லுங்க. ரொம்ப முக்கியம்.”, என்றார்.
மகனை அழைத்த சௌந்தர்ராஜன், “ ராஜா, கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போப்பா. கொஞ்சம் முக்கியமா பேசணும்.”, என்றார்.
“என்னப்பா ?”
“நீ வா, நேர்ல பேசணும்.”, என்று வைத்துவிட்டார்.
அரை மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தான் ராஜேந்திரன்.
“எனக்கு வேலை இருக்கு, என்னன்னு சொல்லுங்க. சாப்பாடு வேண்டாம்”, சிடு சிடுத்தான்.
கோமதி கண்கள் குளமாகின. “ஏண்டா என்னை விரோதி மாதிரி பாக்கறீங்க அப்பாவும் பிள்ளையும் ? நான் என்ன வேணும்னா பண்ணறேன் ? சின்ன வயசுலேர்ந்து, ஜோசியர்கிட்ட கேட்டு அதும்படியே செஞ்சு பழகிட்டேன். இப்ப இவ்வளவு முக்கியமான விஷயத்துக்கு அவர் இப்படி சொல்லவும் அதை மீறி செய்யற தைரியம் எனக்கு வரலை. நீ இவ்ளோ வேதனைப் படறதை எனக்கு பார்க்க முடியலைடா. என்னாலதானேன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு.ஆனா என் வேதனைய யார் கேக்கறீங்க ? கோவில் கோவிலா போய் அந்த சாமிகிட்டதான் முறையிட்டேன். ஆனாலும் ஜோசியர் சொல்ல மீறி செய்ய எனக்கு யோசிக்க முடியலை, நாளைக்கு எதாச்சம் ஒண்ணுன்னா , அதுனாலதானோன்னு எண்ணம் வரும் அது நம்பளை நிரந்திரமா பிரிச்சிடும். என் பயத்தை எப்படி தீக்கறது ?”, அழுது கொண்டே கேட்டார்.
அவர் கதறுவது பொறுக்காமல், ராஜேந்திரன், “அம்மா…விடுங்க. எனக்கு உங்க ப்ரெச்சனை தெரியும். ஜோசியர் வந்தப்பறம், மறுபடி பேசிப் பார்க்கலாம். உங்களை அதீதமா நம்பவிட்டது எங்க தப்பு. அதுக்கான பலன இப்ப எல்லாரும் அனுபவிக்கறோம். ஒண்ணும் பண்றதுக்கில்லை.”, அவரை லேசாக அணைத்து கண்களைத் துடைத்துவிட்டான்.
[the_ad id=”6605″]
தன் கையில் இருந்த போனை அவனிடம் கொடுத்த கோமதி, “அதுக்கான ப்ராயசித்தம் நானே பண்ணறேன். இதுல சங்கரி, அமெரிக்கான்னு ஒரு நம்பர் இருக்கும் பாரு. ஜோசியரோட பொண்ணுது. குழந்தை பிறந்ததுக்கு விசாரிக்க பண்றா மாதிரி நான் பேசறேன். அப்பறம் ஜோசியரை கூப்பிட்டு உங்ககிட்ட குடுக்கறேன். நீ பேசுவியோ இல்லை உங்கப்பா பேசுவாரோ அவர்கிட்ட. எப்படியாவது அவர் வாயால, ஒண்ணும் தப்பில்லை கல்யாணம் பண்ணலாம்னு எங்கிட்டசொல்ல வை , அது போதும். மஞ்சரி அப்பாம்மா கால்ல விழுந்தாச்சம் நான் பொண்ணு கேக்கறேன்.”, கட கடவென்று பேசினார்.
அப்பாவிற்கும் மகனிற்கும் அப்படி ஒரு ஆச்சரியம். “உனக்கு எப்படிம்மா நம்பர் கிடைச்சுது ? அந்த ரங்கசாமி பணம் குடுத்தாக்கூட மாட்டேன்னு அடம் பிடிச்சான்.”
“அந்தக் கடங்காரன் எனக்கும் தர மாட்டேன்னுதான் சொன்னான். நீங்க ரெண்டு பேரும் கேட்டதாவும் சொன்னான். அதான் அவங்கிட்ட தொங்காம, ரெண்டு வீடு தள்ளியிருக்க பங்கஜம் மாமிய பார்க்கப் போனேன்.”, என்று அவருக்கு நம்பர் கிடைத்த விதத்தை விவரித்தார்.
“கில்லாடிமா நீ. எங்களுக்கெல்லாம் தோணவேயில்லை.”, மெச்சாமல் இருக்க முடியவில்லை ராஜேந்திரனால். சௌந்தர்ராஜனுக்கும்தான்.
“டேய், மஞ்சரிக்காக நீ உருகினா, ஒத்த பிள்ளைன்னு பார்த்து பார்த்து வளர்த்த நான் உன்னை பார்த்து உருக மாட்டேனா ? “