கண்முன்னே நிகழ்ந்தேறிக் கொண்டிருந்த அந்த எதிர்பாராத நிச்சயதார்த்த நிகழ்வால் திடீரென சுவாசம் தடைபட்டது போல் இருந்தது அரசிக்கு.
என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாது நின்றிருந்தாலும் கண்கள் சரிவர அக்காட்சியை படம் பிடித்து மூளைக்கு அனுப்பி இன்னதென்று அவளை உணரச் செய்தது.
அருந்தமிழ் தேவியும், விக்ரம பாண்டியனும் பெரியோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள, அவர்களை ஆசீர்வதித்த அனைவரும் ஆனந்தம் கொண்டிருந்தனர்.
“அட சின்னக் குட்டி வந்துட்டியா?” என்ற நாயகியின் குரலில் அனைவரது பார்வையும் வெளியே நின்றிருந்த அரசியின் மீது படிய, அவள் பார்வை என்னவோ விக்ரமனின் மீது மட்டும் தான் இருந்தது.
ஆளைத் துளைக்கும் பார்வை அது.
ஆறுச்சாமி அரசியை தான் பார்த்தார். இந்த நிச்சயதார்த்த முடிவை அவர் முன்னதாகவே எடுத்ததால் தான் அரசியை ஒரு வாரத்திற்கு எங்கும் செல்லவேண்டாம் என்று கூறியது. அவள் பிடிவாதமாய் சென்றுவிட, அவரும் பிடிவாதமாய் அவளிடம் தெரிவிக்கக் கூடாது என்றுவிட்டார்.
எப்படியும் இரண்டு நாட்களில் வந்துவிடுவாள் என்றிருக்க, அவளோ மேலும் சில நாட்கள் சென்னையில் தங்கவேண்டிய சூழல் உருவாகிவிட்டது. அதில் தன் இளைய மகள் மீதுள்ள கோபமெல்லாம் இப்போது எங்கு சென்றதோ ஆறுச்சாமிக்கு, மனமானது மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க அனைத்தையும் மறந்து போயிருந்தார்.
அவர் மனமெங்கும் அருந்தமிழை ஒரு நல்ல இடத்தில சேர்க்கப் போகிறோம் என்ற நிறைவே குடிகொண்டிருக்க அரசியை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
“வா கண்ணு வந்து உன்ர அக்காளையும் மச்சானையும் ஒரு போட்டோ புடி” என்று புன்னகையுடன் நாயகி அவள் கைப்பற்ற, விக்ரமனிடம் இருந்து பார்வையை அவர் புறம் திருப்பியவள், சிதறிக் கிடந்த தன் கைபேசியைப் பார்த்தாள்.
அவள் பார்வை சென்ற இடத்தை பார்த்தவர்,
[the_ad id=”6605″]
“அட என்ன சாமி செதறு தேங்காயோட்டம் போனை போட்டு இப்படி ஒடச்சு வெச்சிருக்கற? ஒரு காசா ரெண்டு காசா, எத்தனை வெலை கொடுத்து வாங்குறது. சூதானமா இருக்குறது இல்லையா. சரி வா உங்கப்பன் கிட்ட சொல்லி வேற வாங்கிக்கலாம்” என்று சொல்லி அவளை உள்ளே அழைக்க,
தன் பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு சிதறிக் கிடந்த கைபேசியின் பாகங்களை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவளோ யாரோடும் எதுவும் பேசாது நேராக அவளறைக்குள் சென்றாள்.
“என்னாச்சு அரசிக்கு மொகமே சரியில்லை” என்று முத்துலட்சுமி கேட்க,
“அது இன்னிக்கு விசேசம் நடக்குறது பத்தி அவ கிட்ட சொல்லலைன்னு கோபம் லட்சுமி. அதேன் மூஞ்சிய திருப்பிட்டு போறா. எல்லாம் உங்கண்ணனை சொல்லோணும். அப்பனுக்கும் மகளுக்கும் சண்டைனா எங்களையும் அவகிட்ட சொல்லக்கூடாதுன்னு வெச்சிட்டான்” என்று ஆறுச்சாமியை முறைக்க,
“என்னங் அண்ணா இப்படி பண்ணிட்டிங்க. ரெண்டு நாள் முன்ன என்ர கிட்ட கூட போன்ல பேசுனா. நானும் தெரிஞ்சுகிட்டே விளையாடுறானுதேன் நெனைச்சேன். புள்ள பாவம் பொக்குன்னு போயிருக்கும்” என்று அங்கலாய்க்க,
“விடு லட்சுமி அதெல்லாம் நான் சமாதானப் படுத்திக்குறேன்” என்று நாயகி பேசிக்கொண்டிருக்க, அனைத்தையும் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமன்,
“நான் தோப்பு வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன்ங் மாமா” என்று ஆறுச்சாமியிடம் கூறிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிக் கொண்டான்.
குறித்த நாளில் திருமணம் என்று பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டிருக்க, யாருக்கெல்லாம் அழைப்பு விடுப்பது, எங்கு மண்டபம் பார்ப்பது, சமையலுக்கு யாரை தேர்வு செய்வது என்றெல்லாம் கலந்து பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் லட்சுமியும் கிளம்பிக் கொள்ள, ஆறுச்சாமியும் வெளிவேலைகளை கவனிக்கச் சென்றுகொண்டார்.
“அரசி கண்ணு! இந்த சின்ன விசயத்துக்கு போய் எதுக்கு இந்தக் குதி குதிக்குற. கதவை தொற சாமி” என நாயகி தான் தன் சின்னப் பேத்தியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
இரண்டு முறை அரசியின் அறைக் கதவை தட்டிப் பார்த்துவிட்டு நாயகியும் ஒரு பெருமூச்சோடு கீழே சென்றுகொள்ள, அருந்தமிழ் அவள் அறைக்குள்ளேயே அமர்ந்திருந்தாள். அரசியை பற்றிய சிந்தனை எல்லாம் சுத்தமாய் இல்லை அவளுக்கு. இதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த கண்ணீர் கட்டவிழ்ந்து வெளியேறிக் கொண்டிருந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயம் என்றிருக்க, என்னென்னவோ கனவுகளோடு இன்பமாய் அருந்தமிழ் இருக்க, அப்போது தான் தெரிய வந்தது அவள் தந்தை மாறனின் இடத்தில் விக்ரமனை வைத்திருப்பது. அதிர்ச்சியிலும் அதிர்ச்சி அது பேரதிர்ச்சி.
ஆனந்தம் தாண்டவமாடும் ஆறுச்சாமியின் முகத்தைக் கண்டவளுக்கு அங்கு நடப்பதை தவிர்க்கவோ மறுக்கவோ முடியவில்லை. ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் இல்லை. அனல் மேல் விழுந்த புழுபோல் துடித்துக் கொண்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
“நீங்களும் அப்பாவும் பார்த்து என்ன முடிவெடுத்தாலும் எனக்கு அதுல முழு சம்மதம்ங்” என கர்வமாய் சொன்னாளே அவள் தந்தையிடம். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய் இதில் விருப்பமில்லை என்று சொல்வது. அனைவரது முன்னிலையிலும் அவர் கௌரவம் என்னாவது?
வாக்கு கொடுத்துவிட்டேன் என்றாரே! அப்போது இது அவர் என்றோ எடுத்த முடிவா? இனி தான் என்ன செய்வது என்றெல்லாம் அவளுள் ஒரு நடுக்கம் பிறந்தது.
அனைத்திற்கும் அமைதி காத்தாள். நாளை மாறனை சந்தித்து விசயத்தை சொல்லவேண்டும் என்று எண்ணி அமைதி காத்தாள். அவன் நிச்சயம் ஒரு நல்ல தீர்வை நல்குவான் என்றெண்ணி அமைதி காத்தாள்.
இப்படி பலவாறாக எண்ணியபடி அவளது சிந்தனைகளில் அவள் உழன்று கொண்டிருந்தாள்.
மாலை ஏழு மணிவாக்கில் ஆறுச்சாமி இல்லம் திரும்ப, நாயகி தான் சோகமாய் வாசற்படியில் அமர்ந்திருந்தார்.
“ஏன்ங் ம்மா பொழுது சாயுற நேரத்துல இங்க உக்காந்திருக்கீங்க” என,
“உக்காராம என்ன பண்ண சொல்லுற? இந்த சின்னக் குட்டி அப்போ போனவ இன்னும் ரூமைவிட்டு வெளிய வரலை” என்று புலம்ப
“கதவை சாத்திக்கிட்டு உள்ளார என்ன பண்ணுறா? தேவி எங்க போனா?” என்றார். அவள் இந்நேரம் தங்கையிடம் பேசி இருப்பாளே என்ற எண்ணத்தில். அதனால் தான் அவர் அரசியை பெரிதாய் கண்டுகொள்ளாது சென்றது.
“தமிழும் ஒரு மூலைல உக்காந்து அழுதுகிட்டு கெடக்குறா”என நாயகி சொல்ல, அவர் அதிர்ச்சியாய் பார்க்க,
“இந்த சின்னவ அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாம ரூமுக்குள்ளயே அடஞ்சு கெடக்குறாளேன்னு நம்ம தமிழு போய் கதவை தட்டுனதுக்கு அவளையும் ஏதோ பேசிப் போட்டாலோட்டிருக்குது. ஆளாளுக்கு வீம்பு பண்ணி இப்படி கடைசி காலத்துல என்ர உசுர வாங்குறீங்க. எல்லாம் உன்ரனாலதேன்” என ஆறுச்சாமியையே சாட,
“என்னைய என்னங்மா பண்ணச் சொல்லுறீங்க” என்றார் ஒன்றும் புரியாது.
“யாரோ ஒருத்தர் அனுசரிச்சு போகோணும். உனக்கும் அனுசரணை பத்தாது அவளுக்கும் பத்தாது. புலி பத்தடி பாஞ்சா குட்டி பதனாறடி பாயும்னு தெரியாதா. உன்ர மவளாச்சே அதேன் அவ உனக்குமேல இருக்குறா. அவ மட்டும் கோவிச்சுக்கிட்டு எங்காவது கெளம்பி போகட்டும் அப்பறம் பாரு ஆறுச்சாமி, நானும் இந்த ஊட்டுல இருக்க மாட்டேன்” என மூக்கை உறிஞ்சியபடி முந்தானையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ள,
“மொதல்ல உள்ளார வாங் ம்மா” என்று அழைத்துச் சென்றவர் அருந்தமிழை அழைக்க, வெளியே வந்தவளோ முகம் சிவந்துபோய் காட்சியளித்தாள்.
அவள் கண்ணீருக்கான காரணம் அவளன்றி யாரறிவார்!
அது முழுக்க முழுக்க அரசியால் தான் என்று நினைத்த ஆறுச்சாமியோ,
“தேவி! உன்ர தங்கச்சிய கீழ கூட்டிட்டு வா” என்றார். அவள் மீண்டும் அரசியை அழைத்தபடி அவள் அறைக் கதவைத் தட்ட,
“உனக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாதா தமிழ். நான் தான் இந்த குடும்பத்துக்கு வேண்டாதவளா போய்ட்டனல்லோ. நான் சாப்பிட்டா என்ன சாப்பிடாட்டி என்ன? தள்ளி நிறுத்தோணும்னு முடிவு பண்ணியாச்சு எல்லாரும் அப்படியே இருந்துகோங்க” என்றுவிட்டாள்.
அருந்தமிழுக்கு இருக்கும் வேதனை போதாதென்று அரசி வேறு வேதனையைக் கூட்ட, கண்ணீர் தான் பெருகியது.
“அரசி! ஏன் கண்ணு இப்படி எல்லாம் பேசுற வெளிய வா சாமி” என்று நாயகி கெஞ்ச,
“உங்களையும் சேர்த்து தான் சொல்லுறேன்ங் ஆத்தா. போய் உங்க மகனையும் பெரிய பேத்தியையுமே பாருங்க. நான் ஆரு உங்களுக்கு? சும்மா வந்து என்னைய தொந்தரவு செய்யாதீங்க அப்பறம் இங்கயும் இருக்க மாட்டேன் திரும்ப லண்டனே போய்டுவேன்” என்று ஒரு வேகத்தில் சொல்ல, உடனே ஆறுச்சாமிக்குள் தீப்பொறி பறந்தது.
“போ எங்கையோ போ. எல்லாம் உன்ர இஷ்டந்தேனோ. இத்தனை வேய்க்கானம் பேசுறவ ஏன் அஞ்சு வருசமா அக்காளையும் அப்பத்தாளையும் விட்டுபுட்டு அங்க இருந்தயாமா?” என்று குரல் கொடுக்கவும் தான்
‘இவரு எப்போ வந்தாரு’ என்று நினைத்தபடி உட்புற கதவருகே வந்து நின்றாள் அரசி.
[the_ad id=”6605″]
“பெரியவங்க பாத்து பண்ணுற விசயத்துல நடுவுல நீ எதுக்காமா? உன்னைய கேட்டுட்டு முடிவெடுக்கற அளவுக்கு நீ ஒன்னும் பெரியமனுசியில்ல. எதுக்கு நீ இருக்கோணும் எதுக்கு நீ இருக்க வேண்டியதில்லைன்னு எங்களுக்கு தெரியும். நீ என்னிக்கு சொன்ன சொல்லை காப்பாத்தியிருக்க சொல்லு?”
“…..”
“முதல்ல ஒரு சொல்லு சொன்னா அதைய காப்பாத்த கத்துக்கோணும். மத்தவங்களை பத்தி என்னிக்காச்சும் யோசிச்சு பாத்திருக்கயா? உன்ர இஸ்டத்திற்கு நடந்துக்குறது. போய்ட்டு ரெண்டு நாள்ல வர்றேன்னு சொன்னவ இத்தனை நாள் கழிச்சு வந்தா உனக்காக உன்ர அக்கா விசயத்துல நான் எடுத்த முடிவை மாத்திக்கறதா? நீ ஆரையும் மதிக்கமாட்ட ஆனா நாங்க உன்னைய மதிச்சு எல்லா விசயத்தையும் சொல்லோனும் அப்படித் தானோ?”
தந்தையின் பேச்சில் சற்று அமைதியடைந்தாள் அரசி. ஆனால் இன்னும் கதவைத் திறந்தபாடில்லை.
“இப்போ வெளிய வரப் போறயா இல்லையா” என்றொரு குரல் கொடுக்க, உடனே கதவைத் திறந்தாள்.
“கீழ போ” என்ற அதட்டலில் முகத்தை கடுகடுப்பாய் வைத்தபடி படிகளில் இறங்கி வந்தாள்.
அதோடு விடவில்லை அவளது போதாத நேரம். தந்தைக்கும் அவளுக்கும் இடையில் இன்னும் கொஞ்சம் இடைவெளியை உண்டாக்கி அழகு பார்க்க அவளுக்கு முன் படிகளில் இறங்கிச் சென்றது.
“இந்தா கண்ணு, சாப்புடு” என்று நாயகி அவள் தட்டில் அன்னம் எடுத்து வந்து நீட்ட,
“வேண்டாங் ஆத்தா” என்று மறுத்தாள்.
“அட பேசமா சாப்பிடு சாமி” என நெருங்கி நிற்க
“வேண்டாம்னு சொல்லுறனல்லங் ஆத்தா” என திரும்பிய வேகத்தில் தெரியாமல் கை தட்டிவிட, தட்டு விழுந்து அதிலிருந்த அன்னம் சிதறியது.
“உன்னைய எல்லாம் வயக்காட்டுல வேகாத வெயில்ல வேலைக்கு போடோணும். வெளிநாடு அனுப்பி படிக்க வெச்சது தான் என்ர தப்பு. இந்த அரிசி தட்டுக்கு வர எத்தனை பேரோட உழைப்பு இருக்குனு நெனச்சு பாத்தா இப்படி பண்ணிருப்பியா. விவசாயக் குடும்பத்துல இருந்து வந்த உனக்கே கொஞ்சமாச்சும் வருத்த மானம் தெரியுதா” என ஆறுச்சாமி ருத்ர தாண்டவமாட,
“விடு கண்ணு தெரியாம நடந்திருச்சு அதைய பெருசு படுத்தாத” என்ற நாயகி அருந்தமிழிடம் திரும்பி,
“தமிழு நீ போய் இன்னொரு தட்டுல சாப்பாடு எடுத்துட்டு வா கண்ணு” என, அவளும் தலையசைத்து நகர்ந்தாள்.
அரசிக்கு இன்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எரிச்சல் தான் வந்தது. அவள் பணி குறித்து தந்தையிடம் தெரிவிக்க அத்தனை ஆசை கொண்டு வந்தாள். அதை தெரிவித்தால் அவர் நிச்சயம் மகிழ்வார் என்று தெரியும். நேரில் பார்த்து பேசவேண்டும் என்று தான் இதுவரை அவரோடு பேசாதிருந்தாள். இங்கு வந்து பார்த்தால் என்னென்னவோ அவளறியாமலே நடந்துகொண்டிருக்க, அனைவர் மீதும் ஆத்திரம் தான் வந்தது.
கீழே சிதறிய அன்னத்தை வழித்து எடுத்த நாயகி,
“மாடசாமி! இதைய கொண்டு போய் நம்ம செவலையன் தட்டுல போட்ரு” என அவர்கள் வீட்டின் நன்றியுள்ள ஜீவனுக்கு அளிக்குமாறு சொல்ல,
“சரிங் பெரியாத்தா” என மாடசாமியும் பெற்றுக்கொண்டு செல்லும் வேளையில்,
“செவலையனுக்கு எதுக்கு? இதைய உங்க சின்ன பேத்தியையே சாப்புட சொல்லுங்க. அவனவன் ஒரு வேலை சோறு இல்லாம என்னவெல்லாம் கஷ்டப்படுறான் இவளுக்கு அதோட அருமை எங்க தெரியப் போகுது. நேராநேரத்திக்கு சாப்பாடு கெடச்சா அதைய அவமதிக்கத்தேன் தோணும். இவ இதையவே சாப்பிடட்டும். அப்பத்தேன் புத்தி வரும்” என்றார் ஆறுச்சாமி கோபத்தில்.
சிறு வயதில் இருந்தே இப்படித்தான் அன்னத்தை சிறிதும் வீணடித்தால் ஆறுச்சாமி சுனாமி போல் சுழற்றி அடிப்பார். இன்று காலையில் இருந்து எத்தனை சுனாமி தான் தன்னையே சுழற்றி சுழற்றி அடிக்கும், தானும் எத்தனையை தான் தாங்குவது என நின்றிருந்தாள் அரசி.
“அட ஒரு சொல்லோட விடேன் ஆறுச்சாமி, பேச்சை வளக்காத” என நாயகி அவரை அடக்க முயல, அதற்குள் அரசி அவ்விடம் கடக்க
“அரசி கண்ணு” என்று நாயகி அவள் பின்னால் செல்வதற்குள் மாடிப்படிகளில் ஏறிக்கொண்டாள்.
நேரம் தான் நகர்ந்ததே தவிர ஒருவரும் உணவருந்தவில்லை. அரசியை தவிர்த்து மற்ற மூவரும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருக்க.. அருந்தமிழின் முகத்தைக் கண்ட ஆறுச்சாமி,
“தேவி நீ ஏன்மா இப்படி இருக்க? வா வந்து சாப்பிடு” என அவளை தன்னருகில் அமரச் செய்து அவர் கையால் அன்னம் எடுத்து வர,
“இல்லங் ப்பா வேண்டாம். முதல்ல அரசியை சாப்பிட வையுங்க. அவ தான் காலைல இருந்து ஒன்னும் சாப்பிடலை” என்றாள்.
“அவ கெடக்குறா. காலைல தான் உன்னைய விக்ரமனோட சேத்து பாக்கைல மனசுக்கு அத்தனை நிம்மதியா இருந்துது தேவி. உனக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்குற சந்தோசம் மனசு பூரா நெறஞ்சு நிக்குது. ஆனா உன்ர தங்கச்சி என்ர நிம்மதியை கெடுக்கவே வந்து பொறந்திருக்கா” என்று சொன்னவர் தமிழின் தலையை ஆதுரமாய் வருடி,
“இன்னும் கொஞ்ச நாள்ல கலியாணம் முடிஞ்சு அப்பாவை விட்டு போய்டுவியா கண்ணு? நீ அழுதா என்ரனால தாங்க முடியாது. சாப்பிடு தேவி மா” என்று ஊட்டிவிட, கண்களில் நீர் பெருக அவரையே பார்த்தபடி உண்டாள் அருந்தமிழ்.
சில நிமிடங்களில் மேல் அறையில் மீண்டும் அரசியின் அறைக் கதவுகள் தட்டப்பட, அவளோ எரிச்சலில் அமர்ந்திருந்தாள்.
“நாந்தேன் வந்திருக்கேன் கதவை தொற சாமி” என்றார் நாயகி ரகசியமான குரலில்.
“நொய்யு நொய்யுங்காம போங் ஆத்தா” என்று கத்த,
“பால மட்டும் குடிச்சிட்டு தூங்கு கண்ணு. உனக்கு உங்கப்பன் மேல தானே கோவம் நானென்ன பண்ணுனேன்”
“சும்மா நடிக்காதீங்க. எல்லாம் கூட்டுக் களவாணிக தானே. நீங்களும் என்ர கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை”
“அதுக்கு காரணம் இருக்கு கண்ணு. நீ கதவை தொற சொல்லுறேன்”
“சொல்லுங்க நான் அப்பறம் தொறக்குறேன்”
“நீ படிக்க போனது உங்கப்பனுக்கு புடிக்கலையல்லோ கண்ணு, அதையவே சொல்லிக் காட்டுறானல்லோ! இப்போ உன்ர கிட்ட சொல்லாம தமிழுக்கு நிச்சயம் பண்ணி அவனொரு தப்பு பண்ணிப்புட்டான். இனி நீயும் சொல்லிக் காட்டலாமல்லோ அதுக்குத்தேன் நான் கம்முனு இருந்தேன்” என்று சொல்ல,
“ஓஹோ அப்போ இப்போவும் கம்முனே இருங்க” என்றுவிட,
“இங்க பாரு சாமி ரொம்ப புடிவாதம் புடிச்சா நாளைக்கே கொல்லனை கூட்டியாந்து உன்ர ரூம் தாழை புடுங்கி எறிஞ்சிருவேன். அதென்ன பழக்கம் உள்ளாரா போய் கதவை சாத்திக்குறது. இதெல்லாம் தப்பு சாமி. எனக்கு கஷ்டமா இருக்குதல்லோ கதவ தொற கண்ணு” என்றார்.
என்ன செய்வதென்று தெரியாது செய்துகொண்டிருந்தாள் அரசி. தன் ஆத்திரத்தை எல்லாம் வயதானவர்கள் மீதா காட்டுவது என்று இறுதியில் அவள் மீதே கோபம் வர,
“கதவு தொறந்து தான் இருக்கு மொதல்ல உள்ளார வாங்க” என்றாள் அமைதியாய்.
கதவைத் தள்ளாது நாயகி தான் அதைப் போட்டு தட்டிக் கொண்டிருந்தார். அது தெரிய வர, மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டு உள்ளே வர, அவர் கையிலிருந்த பால் டம்ளரை வாங்கி ஒரே மிடக்காக உள்ளே தள்ளிவிட்டு தான் நிமிர்ந்தாள் அரசி. அவளுக்கும் பசி கண்ணை கட்டிவிட்டிருந்தது.
“கொலப்பசியை வெச்சுக்கிட்டு இந்த வீம்புக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல” என கையில் வைத்திருந்த உணவுத் தட்டை எடுத்து உருண்டை பிடித்து அவளுக்குத் தர, கையை நீட்டாது வாயைப் பெரிதாய் திறந்தாள் அரசி.
அவள் கன்னத்தில் ஒரு இடி இடித்தவர் பின் புன்னகைத்தபடி ஊட்டிவிட, அவள் முகத்திலும் லேசான புன்னகை அரும்பியது. அதை அனைத்தையும் ஜன்னலின் வாயிலாக பார்த்துக் கொண்டிருந்தார் ஆறுச்சாமி.
பின்னரே நிம்மதியாய் உறங்கச் சென்றார்.
அவரிடம் நிலைத்த நிம்மதி அவர் மகள்களிடத்தில் பறிபோனது பற்றி அறியாமலே!
வாசம் வீசும்..!