மண்வாசம் 17 :
நான்கு நாட்கள் கடந்திருக்க, வெளியே செல்வதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாள் அரும்பு. அவளையே பார்த்தபடி வெற்றிலையைத் தட்டி வாயில் போட்டார் வேலாத்தாள்.
“நம்மூட்டு கல்யாண பத்திரிக்கை அச்சடிக்க கொடுக்க சரிபாத்து வாங்கியாறச் சொன்னாருங் ஆத்தா நம்ம முத்துச்சாமி மாமன்” என்றுவந்து நின்றான் மைக் மாரிமுத்து.
அதில் அரும்பு ஒரு நொடி வாசலைப் பார்த்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். பின் மரகதம் வந்து அதை வாங்கிப் பார்க்க, அவரை படித்துக் காண்பிக்குமாறு வேலாத்தாள் கூற, அவரும் படித்துக் காண்பித்தார். தாய்மாமன் என குலசேகரனின் பெயரும் அதில் இடம்பெற்றிருக்க,
“அந்த வெறும் பய பேரெல்லாம் எதுக்காமா? அதெல்லம் வேண்டாம்னு சொல்லிப்போடு. அப்படியே என்ர ஒன்னுவிட்ட தங்கச்சி மவன் பேரை பொறகால சேத்துக்க சொல்லிப்போடு” என்றார் மரகதத்தை பார்த்தபடி.
“உன்னைய ஒன்னு விடத்தான் ஆளில்லை ஆத்தோவ்” என மாரிமுத்து முனங்கியது கூட சரியாய் வேலாத்தாளின் செவிகளில் சென்று சேர,
“இந்த லோலாயமெல்லாம் என்ர கிட்ட வெச்சுக்கிட்டா உன்ர கண்ணாமுழி ரெண்டையும் திருகிப் போடுவேன் ராஸ்கோலு” என்றார் முறைப்புடன்.
‘கெழவிக்கு பாம்பு காது’ எனப் பார்த்தவன் பத்திரிக்கையை வாங்கிக்கொள்ள, அரும்பு தன் அன்னையிடம் கூறிக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினாள்.
“நிச்சயம் ஆனா கலியாணம் முடியுற வரைக்கும் வூட்டவிட்டு வெளிய எங்கையும் போகக் கூடாதுன்னு தெரியாதா?” என அரும்பிடம் பாய,
“யூ ஷட் அப்” என்றுவிட்டு நகர்ந்தாள்.
அதில் மாரிமுத்து வாயை பொத்திக்கொண்டு சிரிக்க,
“ஏன்டா! நான் என்ர வூட்டுக்காரருக்கு ஒரே சம்சாரந்தானோ இவ என்ன செட்டப்புன்னு சொல்லிட்டு போறா” என அவனிடம் சந்தேகம் கேட்க,
“ஆத்தோவ் அது அந்த செட்டப்பு இல்ல. புள்ள உன்னைய இங்கிலீஸ்ல இறுகிக் கட்டிக்கிட்டு இருன்னு சொல்லிட்டு போகுது” என,
“இம்புட்டு நீளமா அவ ஒன்னும் சொல்லலையே! அவ சொன்னாளா இல்ல நீயே சொல்லுறியா?” என சந்தேகமாய் பார்க்க,
“இதுக்குத்தேன் உன்ர கூட நான் பேச்சு வார்த்தையே வெச்சுக்கறது இல்ல ஆத்தோவ். ஒன்னு நீ படிச்சிருக்கோணும் இல்ல படிச்சவன் சொல்லுறத நம்போணும்” என்றான்.
உடனே வெற்றிலை பாக்கு போட்டு கறை ஏறிய பற்களைக் கொண்டு வேலாத்தாள் விகாரமாய் சிரிக்க,
“ஏனுங் ஆத்தா! அம்மாவாசை ராத்திரியில உங்க சிரிப்பை பாத்து பயந்துதேன் அப்பாரு அல்பாயிசுல போயிட்டாருன்னு ஊருக்குள்ள பேசிக்குறாங்களே அது நெசமாங் ஆத்தா” என்று கேட்க,
“என்னடா என்ர கிட்டயே எகத்தாளமா? இறுகிக் கட்டிட்டு கெளம்புடா” என குரல் கொடுக்க, வாயை கைகளால் பொத்திக்கொண்டு அங்கிருந்து கழன்று கொண்டான் மாரிமுத்து.
அவன் சென்றதும் மீண்டும் வெற்றிலை பாக்கை உலக்கையில் வைத்து லொக் லொக்கென்று தட்டியபடி,
‘கொழுப்பெடுத்த கழுத என்னையவே இறுகி கட்ட சொல்லுறாளா? இன்னொரு வீட்டுக்கு போக போறாளேன்னு கண்டுக்காம விட்டா பேச்செல்லாம் மேலால போய்ட்டு இருக்குது. அவ அப்பன் வரட்டும் சொல்லிட்டு பேசிக்குறேன்’ என்று அரும்பை நினைத்து உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தார்.
சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி சாலையில் நடைபோட்டுக் கொண்டிருந்தாள் அரும்பு.
அன்று அரசியோடு கைபேசியில் பேசியதில் அரும்புக்கு மனம் லேசு பட்டிருந்தது. அவளோடு பேசி முடித்ததும் அவள் சொன்னதுபோல் அரும்பும் தன் கைபேசியை எடுத்துச் சென்று முத்துச்சாமியிடம் கொடுக்க, அவர் அவளை நிமிர்ந்து பார்த்தார்.
“நான் யாருகிட்டயும் பேசக் கூடாது எங்கயும் வெளிய போகக் கூடாதுன்னு தானங் ப்பா எதிர்பாக்குறீங்க? இந்த கல்யாணத்தை நிறுத்திடுவனோன்னு பயப்படுறீங்க அதானே” என நேரடியாக போட்டுத் தாக்க, இருக்கையில் இருந்து எழுந்துவிட்டிருந்தார்.
“உன்ர அப்பன் கிட்டயே கொரல ஒசத்தி பேசுற அளவுக்கு வந்துட்டியா” என வேலாத்தாள் குரல் கொடுக்க அவரைத் திரும்பி பார்த்தவள்,
“ஓல்டி! யூ பீ கொய்ட் அண்ட் மைன்ட் யுவர் ஓன் வொர்க்” என்று சொல்ல,
“ஆஆ” வென புரியாது பார்த்திருந்தார் அவர். பின் தந்தையிடம் திரும்பியவள்,
“சொல்லுங் ப்பா அப்பறம் ஏன் இப்படி சொந்த வீட்டுலையே என்னைய கைதி மாதிரி வெச்சிருக்கீங்க” என்று கேட்க,
அவர் ஏதோ கூற வர,
“போதும்ங் ப்பா. நீங்க குறிச்ச நேரத்துல என்ர கல்யாணம் நடக்கும். எக்காரணத்தை கொண்டும் கல்யாணம் நிக்காது. இது சத்தியம். போதுங்ளா” என்று ஆக்ரோஷமாய் சொல்ல, அவளையே பார்த்திருந்த முத்துச்சாமி அவள் கைபேசியை அவளிடமே கொடுத்துவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியே சென்றார்.
அன்றிலிருந்து அவளது வீட்டுக்காவல் தளர்த்தப்பட்டது. தத்தைக்கு தடையென்பது இல்லை.
அதை நினைத்தபடி அடுத்து தான் செய்து முடிக்க வேண்டிய காரியம் பற்றி சிந்தித்தவாறே நடைபோட்டாள் அரும்பு.
சில நிமிடங்களில் மாந்தோப்பின் நடுவே இருந்த பம்பு செட்டின் அருகில் ஆளுக்கொரு திசையில் நின்றிருந்தனர் அந்நால்வர்.
குலசேகரன் அரும்பை முறைத்துக் கொண்டிருக்க, அரசியோ விக்ரமனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
சற்று முன் குலசேகரனின் கைபேசிக்கு அழைப்பு வர, அவன் அதை ஏற்றதுமே மறுமுனையில்
“என்ன மாமா எனக்கு மாப்பிள்ளை பாக்கறதா சொன்னயே பாத்தாச்சா?” என அதிகாரமாய் ஒலித்தது அரும்பின் குரல்.
“அப்படி எல்லாம் எடுத்தங் கவுத்தேன்னு முடிவெடுக்க முடியாது. கொஞ்சம் பொறுமையா இரு” என்றான்.
“இப்போ சொல்லுறேன் எழுதி வெச்சுக்கோ, நீ தலகீழா நின்னாலும் ஒருபய சிக்கமாட்டான். இந்த மாப்பிள்ளை தேடுறதை எல்லாம் விட்டுட்டு நீ மாப்பிள்ளை ஆகுற வழியை பாரு”
“உனக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாதா?” என கடுமையாய் சொல்ல
“உனக்கும் எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாதா?” என கடுப்பாய் சொல்ல, உடனே அவன் அழைப்பை துண்டித்துக் கொள்ள,
‘இனி உன்ரகிட்ட பேசி பிரயோசனம் இல்லை நான் பேச வேண்டியவங்க கிட்ட பேசிக்குறேன்’ என நினைத்து விக்ரமனை அழைத்தாள்.
அவனிடம் அனைத்து விடயங்களையும் தெரிவித்து உடனே வருமாறு சொல்லிவிட்டு பின் அரசியியை அழைத்தவள் அவளிடம் விசயத்தைக் கூறி குலசேகரனை எப்படியாவது அங்கு வரவைக்குமாறு சொல்லிவிட்டு வைத்தாள்.
இப்போது நால்வரும் மாந்தோப்பில் கூடியிருக்க..
“எதுக்கு அரசி வரச் சொன்ன?” என்றான் குலசேகரன் அரசியிடம். அவள் பதிலளிக்கும் முன்னரே
“நான் தான் அவகிட்ட சொல்லி உன்னைய வரச் சொன்னேன். நான் சொன்னா வரமாட்டினு தெரிஞ்சு தான் அவமூலமா வரச் சொன்னேன்” என்றாள் அரும்பு.
“உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா அரும்பு” என அவள் மீது காய,
“மச்சா! கோபப்படாம கொஞ்சம் அவ நிலைமைல இருந்தும் யோசிச்சுப் பாரு” என விக்ரமன் குறுக்கிட,
“மாப்ள உனக்கு விஷயம் என்னன்னு தெரியாது” என்று குலசேகரன் தடுக்க,
“அதெல்லாம் விக்ரமன் மாமாவுக்கு நல்லாத் தெரியும். நான் தான் அவரையும் வரச் சொன்னேன். இன்னிக்கு ஒரு முடிவு தெரியாம நான் இந்த இடத்தை விட்டு போறதா இல்ல” என்றாள் அரும்பு.
“என்னடி தெரியோணும் உனக்கு? அதேன் அன்னிக்கே நான் தெளிவா சொல்லியாச்சல்லோ. இந்தக் கல்யாணம் நடக்காது நீ பேசாம வீட்டுக்கு போ”
“ஓஹ் அப்பறம் என்ர கல்யாணத்தை நிறுத்திட்டு என்ன பண்ணுறதா உத்தேசம்? மணமேடை வரை வந்துட்டு வேற யாரு கட்டிப்பா என்னைய. நீ கட்டிப்பேன்னு சொல்லு இப்போவே அமைதியா வீட்டுக்கு போறேன்”
“ப்ச் என்ர பொறுமையை சோதிக்காத அரும்பு”
“போதும் நிறுத்து மாமா. நீ என்ர பொறுமையை சோதிக்காத. நாள் நெருங்க நெருங்க என்ன நடக்குமோ ஏது நடக்குமோன்னு நிம்மதி இல்லாம ஒவ்வொரு நொடியையும் பயத்தோடையே என்ரனால கடத்த முடியாது. நம்பிக்கை தர வேண்டிய நீயே என்ர நம்பிக்கையை அசைச்சு பாக்குற” என்ற போது கட்டுப் படுத்த முடியாது கண்ணீர் வந்தது அரும்பிற்கு.
அனைத்தையும் அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தாள் அரசி. அவர்கள் விஷயம் இடையில் செல்லக் கூடாதென்று விக்ரமனும் அமைதியாய் இருக்க, குலசேகரனோ பெரிதாய் தவித்துக் கொண்டிருந்தான்.
விக்ரமன் அரசியைப் பார்க்க, கண்களால் அவ்விடம் விட்டு வருமாறு சொன்னவள் சற்று தொலைவில் வந்து ஒரு வரப்பின் மீது அமர்ந்துகொண்டாள்.
அவள் பின்னால் வந்தவன் அவளுக்கு சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்திருக்க, ஏனோ அவனோடு உரிமையாய் பேசக்கூட அத்தனை தயக்கம் அரசியிடத்தில்.
இன்னொருத்தருக்கு சொந்தமான பொருளின் மீது உரிமை எடுத்துக் கொள்வதாய் ஒரு எண்ணம் உதித்தது. அக்காவிற்கு சொந்தமாகப் போகிறான் என்று நினைவில் நிறுத்த முயன்று பெரிதாய் தோற்றாள்.
எதையோ பெரிதாய் இழந்த உணர்வு. மனமெங்கும் வெறுமையே குடிகொண்டிருந்தது.
அணு அணுவாய் அனுதினமும் ரசித்து மகிழ்ந்து, தான் விரும்பி விளையாடிய விளையாட்டின் முடிவில், தானே தோற்றுப் போன உணர்வு.
வாழ்க்கை விளையாட்டல்லவே!
காதல் என்ற வார்த்தைக்கான அர்த்தம் அவள் அறியாள். அது புதிதாய் மலர்ந்தால் மட்டுமே அறியப்பட்டிருக்கும். அர்த்தமே அறியாத வயதிலேயே அவள் மனதில் ஆழமாய் பதியப்பட்டிருந்தது அவன் முகமும் அவன் மேலான பாசமும்.
அவனை அவள் உடைமையாய் எண்ணி, அவளுக்கு மட்டுமே உரியவனாய் எண்ணி உரிமையாய்ப் பழகியிருக்க, இன்று அனைத்துமே அர்த்தம் மாறிப் போகையில் அதை அரசியால் கையாள முடியவில்லை.
ஏனோ ஆத்திரம் ஆத்திரமாய் வர, நொடியில் முகமே சிவந்து போயிருந்தது. அவளது மாற்றத்தை அவனும் கவனித்து தான் இருந்தான்.
“என்னாச்சு வேங்கை?” என்று கேட்க, அவள் பதிலின்றி எதையோ தீவிரமாய் வெறித்திருக்க,
“வேங்கை” என அருகில் வந்து தோள் பற்றி அசைக்க, அவன் கையை தட்டி விட்டவள்,
“எனக்கு என்னானா உங்களுக்கு என்ன? இனி நீங்க தமிழை பத்தி மட்டும் அக்கறை படுங்க. தேவையில்லாம என்ர விசயத்துல தலையிடாதீங்க” என்று கத்தியே விட்டாள்.
அவளையே ஆழமாய் பார்த்திருந்தான் விக்ரமன்.
“என்னமோ குலசேகரன் மாமா கிட்ட அரும்பு நிலைமைல இருந்து யோசிச்சு பார்க்க சொன்னீங்களே, நீங்க அப்படி எத்தனை பேரோட நிலைமைல இருந்து யோசிச்சு பார்த்தீங்க?” என வெடிக்க,
“கொஞ்சம் பொறுமையா பேசு வேங்கை” என்றான்.
“என்ன பொறுமையா பேசணும்? அன்னைக்கு போன்ல பேசும் போது கூட நீங்களும் இதைப் பத்தி ஒரு வார்த்தை சொல்லல. லட்சுமி அத்தை என்ன சொன்னாங்கனு கேட்டதுக்கும் கெடா வெட்டுன்னு பொய் சொல்லிருக்கீங்க. அப்போ என்ன அர்த்தம்? எல்லாருமா சேர்ந்து என்னைய ஒதுக்கி வெச்சுட்டீங்க அப்படி தானே” எனப் பொரிய,
“ப்ச்.. நீ ஊருக்கு வர்றதா சொன்னதால, வந்தே தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன். முன்னாடியே தெரிஞ்சிருந்தா நீ போன வேலை அங்க சரியா நடந்திருக்காது” என்றான் பொறுமையாய்.
அவன் பொறுமை அவளிடத்தில் இல்லையே!
“என்ன நடந்திருக்காது? அங்க என்ர வேலையா, இல்ல இங்க உங்க வேலையா? எங்க இது முன்னாலையே தெரிஞ்சா நான் உடனே ஊருக்கு வந்திருவனோனு நெனச்சீங்களா, இல்ல நான் உங்க விருப்பத்துக்கு தடையா இருப்பனோன்னு நெனச்சீங்களா?” என்றாள் ஊடுருவும் பார்வையில்.
அவளது கேள்விகளில் அதிர்ந்து போய் அவளைப் பார்த்திருந்த விக்ரமன்,
“உளறாத” என்றான் எரிச்சலோடு.
“நான் பேசுறதெல்லாம் உளர்றதோட்டம் தான் தெரியும். அதான் என்னைய கொழப்பிட்டு நீங்க எல்லாரும் தெளிவா இருக்கீங்களே”
“என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசு வேங்கை” என்று விக்ரமனின் குரலில் இருந்த மென்மையும் குறைய,
“நான் நல்லா யோசிச்சு தான் பேசறேன். இங்க இருக்குறவங்கல்ல தான் யார் எப்போ எப்படி மாறுவாங்கன்னு புரிஞ்சுக்க முடியறதில்ல. எல்லாரும் இருந்தும் இன்னைக்கு நான் தான் தனியா நிக்குறேன். தோத்துப் போறதை விட ஏமாந்து போயிட்டோம்னு தெரியும் போது தான் ரொம்பவே வலிக்கும். அதுவும் என்ரகூட இருக்குறவங்களே ஏமாத்தும் போது…”
“போதும் நிறுத்து!”
அவன் சீற்றத்தில் அதுவரை பாய்ந்து கொண்டிருந்த வேங்கை அப்படியே அமைதியானது.