மண்வாசம் : 4
“ஏய் கட்டக்காரி….!”
விக்ரமனின் குரலில் ஒரு கணம் திகைத்து, குதிக்காது அப்படியே மதில் மேல் பூனை போல் நின்றாள் புலி.
காற்றுக்கென்ன கோவமோ அந்த இரவுப் பொழுதில் விர் விர்ரென்று அடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அந்த இரவுப் போர்வை விலகாமல் தான் நின்று கொண்டிருந்தது. இருளில் துளி வெளிச்சமாய் தூரத்தில் தெரு விளக்குகள்!
அந்நேரத்தில் அங்கு ஆட்கள் யாருமில்லாதது போலத் தான் தெரிந்தது. அதன் பின்னரே குதிக்கத் தயாராகினாள் அரசி.
சுற்றிலும் பார்த்தவள் அவளுக்கும் கொஞ்சம் தள்ளி மதிலுக்குக் கீழ், வலப்புறமாய் அதில் சாய்ந்து நின்றிருந்த விக்ரமனைப் பார்த்திருக்கவில்லை. பார்த்திருந்தாலும் அங்கு படிந்திருந்த காரிருளில் ஆளிருப்பதே தெரிந்திருக்காது.
அவனும் இப்போது இருளிலிருந்து வெளிப்பட்டு வெளிச்சத்தில் வந்து நின்றிருந்தான். அங்கு பரவிய மெல்லிய ஒளியில் இருவரது விழிகளும் ஒன்றை ஒன்று சந்திக்க, இருவரது நினைவுகளும் ஏழாண்டுகள் பின்னோக்கிப் பயணித்தது.
இதேபோல் ஒரு ஏகாந்த இரவுப் பொழுதில் பௌர்ணமி நிலவு நடுவானில் நின்றிருக்க, அரசியோ மதில் மேல் நின்றிருந்தாள்.
அங்கிருந்து அவள் குதிக்கும் தருவாயில், அவளை அழைத்திருந்தான் விக்ரமன். அவன் கட்டைக்காரி என்றழைத்ததும் மதில் மீது உட்புறம் ஒரு காலும் வெளிப்புறம் ஒரு காலும் போட்டு அமர்ந்திருந்தவாளோ,
“சொல்லுடா அத்தக்..கருப்பாஆஆ..” என்றாள் தெனாவெட்டாய்.
‘கட்டைக்காரி’ மற்றும் ‘அத்தக்கருப்பன்’ என்பது நாட்டு மாட்டு வகைகளில் ஒன்றாகும். சிறு வயதிலிருந்து ஒருவரை ஒருவர் இப்படி அழைத்துத் தான் பழகியிருந்தனர்.
“ஏது டாஆஆ வா?”
அவளைவிட ஐந்து வயது பெரியவனான அவனைப் பார்த்து அப்படி அழைக்க, தன் மரியாதை காற்றில் பறந்ததில் கொஞ்சம் அதிர்ச்சி அவனுக்கு.
“ஆறுச்சாமி மாமா! கொஞ்சம் இங்க வந்து பாருங்க உங்க அருமை மக மதில் ஏறிக் குதிக்குற அழகை” என சத்தமிட்டான் அவளை முறைத்துக் கொண்டே.
“ஸ்.. ஐயோ மச்சா கத்தாதீங்க. அப்பா வந்துரப்போறாரு” என கண்களை சுருக்கி கெஞ்சியபடி பதற்றமாய் எழுந்து நின்றாள்.
“ஏய் பார்த்து எங்காவது விழுந்து வெச்சிராத வேங்கை”
அவன் சொல்லி முடிக்கவில்லை அவள் எழுந்த வேகத்தில் மதில் மேல் தள்ளாடியபடி முன்னால் விழ, அவளைப் பிடிக்க வந்து அவனும் அவளோடு சேர்ந்து விழ, இருவரையும் தரை தாங்கிக் கொண்டது.
அவன் எழுந்து அவளையும் எழுப்பி நிற்கவைத்த அடுத்த நொடி அவள் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைக்க,
”ஆஆ” வென அலறியவள்,
“ப்ச்.. வலிக்குது மச்சா” என தலையைத் தேய்த்துக் கொண்டாள்.
“இந்நேரத்திக்கு எங்க போற, அதுவும் திருட்டுத் தனமா இப்படி மதில் ஏறிக் குதிச்சு? எத்தனை நாளா இந்தப் பழக்கம்?” கண்டிப்போடு கேட்க,
“அதெல்லாம் சொல்ல முடியாது. நீங்க உங்க வேலையை பார்த்துட்டு போங்க. நானும் போகோணும்” அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் பதில் தந்தாள் பாவை.
“ஏது வேலையை பார்த்துட்டு போறதா. ஹ்ம்ம்.. என்ர கிட்ட சொல்ல வேண்டாம் உன்ர அப்பாகிட்ட சொல்லிக்கோ” என அவள் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல,
“மச்சா விடுங்க மச்சா. கைய விடுங்க” என உதற, அப்போதும் அவன் பிடியை விடாது அவளை இழுத்துக் கொண்டு பின்வாயிலைச் சுற்றி முன்புறம் வந்திருந்தான்.
“நானும் அரும்பும் சினிமாவுக்கு போறோம் மச்சா. போதுமா?” என்றதில் அவன் திரும்பி அவளை முறைக்க,
“அதான் சொல்லிட்டனே, விடுங்க கைய” என உதறிக்கொண்டாள்.
“வயசென்ன பண்ணுற காரியம் என்ன? செகண்ட் ஷோக்கு அதும் இந்நேரத்துல வீட்டுக்குத் தெரியாம தனியா போற அளவுக்கு தைரியம் வந்துருச்சா? ஆருகிட்ட கத்துகிட்ட இதெல்லாம்??” சீறினான் அவன்.
“நான் ஒன்னும் சின்னப் புள்ள இல்லை. பத்தாவது படிக்குறேன். அதெல்லாம் எங்கயும் தனியாவே போவேன். இன்னைக்கு என்ர கூட அரும்பும் வருவா, அதெல்லாம் நாங்க சட்டுன்னு போயிட்டு பட்டுன்னு வந்திருவோம்” என படபடத்து விட்டு நகரச் செல்ல, அவள் கையை இழுத்துப் பிடித்து நிறுத்தியவன்,
“அப்படியே ஓங்கி ஒன்னு வெச்சேன்னு வெய்” எனக் கை ஓங்கியதில் அவள் ஓரடி பின்வாங்கினாள்.
“உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. விஷயம் தெரிஞ்சா ஆறுச்சாமி மாமா உன்ர தோல உரிச்சு தொங்க வுட்டுருவாரு. அதுக்கு முன்னாடி என்ர கிட்ட அடி வாங்கிறாத. ஒழுங்கா வீட்டுக்குள்ள போ வேங்கை. இல்லைன்னா நடக்குறதே வேற”
சில நொடிகள் பெரிதாய் யோசித்தவள் பின் தன் முடிவை ஒருமனதாய் மாற்றிக்கொண்டு,
“கேட் உள்ளார பூட்டிருக்கு நான் எப்படி போறது” என்றாள் பாவமாய்.
“இப்போ பச்சப் புள்ள மாறி பார்த்து என்ன பண்ணுறது இதை மதிலேறிக் குதிக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். படத்துக்கு போயிட்டு வந்து மட்டும் எப்படி வீட்டுக்குள்ள போயிருப்ப?”
“அதெல்லாம் யோசிச்சன். ஏணிய எடுத்து வெளில போட்டுத் தான் குதிக்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க வந்து என்ர காரியமே கெட்டுது. உங்கள யாரு இப்போ வரச் சொன்னது?” என்றவள் அவன் முறைக்கவும் வாயை அடங்கிக் கொண்டாள்.
“இந்த புத்திசாலித்தனத்தை எல்லாம் படிப்புல காட்டி முன்னேறுற வழியப் பாரு. இனி மதில் ஏறிப்பாரு அப்பறம் ஏற கால் இருக்காது” என கடிந்துகொண்டவன்,
“என்ர மேல ஏறி உள்ளார குதி ” என முன்வாசலின் திண்ணை மீது அவன் ஏறிக் குனிந்துகொள்ள அவன் கைப்பிடித்து மேலே ஏறியவள், திடீரென நினைவு வந்தவளாய்
“ஆமா இந்நேரத்திற்கு நீங்க எங்க போறீங்க?” என்று கேட்டாள்.
அவன் சென்று கொண்டிருந்ததும் செகண்ட் ஷோ சினிமாவிற்கு தான். அதைச் சொன்னால் உடன் வருகிறேன் என்று சொன்னாலும் சொல்லுவாள் என்று நினைத்து,
“போகும் போது எங்க போறீங்கன்னு கேட்க கூடாது” என்றான்.
“சரி வரும்போது எங்கிருந்து வருவீங்க?” என்று அவன் மேல் நின்றபடியே கேட்க,
‘இவள’ எனப் பல்லைக் கடித்தவன்,
“சீக்கிரம் இறங்குறையா இல்லை நான் நிமிரவா” என்றதும், அவன் முதுகில் நாட்டியமாடிய பின் கேட்டின் மீது கால் வைத்து உள்ளே குதித்துக் கொண்டாள்.
“கட்டக்காரி……!”
கடித்துத் துப்பிய வார்த்தைகளுடன் அவளை முறைத்துவிட்டு கசங்கிய பின்பக்க சட்டையை சரி செய்தபடி அங்கிருந்து சென்றான் விக்ரம பாண்டியன்.
என்ன தான் அவன் காப்பாற்றினாலும் அவள் போதாத நேரம் முன்வாசலைச் சுற்றி பின்வாசல் கதவைத் திறந்து அவள் உள்ளே வருவதை ஆறுச்சாமி கவனித்துவிட, சாட்டை வாரால் நன்கு வெளுத்துவிட்டார் அன்று.
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் எண்ணிப் பார்த்தபடி பெருமூச்சோடு அமர்ந்திருந்தாள் அரசி. இன்றும் மதில் மேல் தான். விக்ரம பாண்டியனை மீறி இம்முறையும் செல்ல முடியாது என்று புரிந்து போன மறுநொடி,
‘நான் யாருக்கும் தெரியாம மதில் ஏறிக் குதிக்கும் போதெல்லாம் எப்படித்தான் சரியா என்ர முன்னாடி வந்து நிப்பாரோ’ என மனதில் நினைத்திருக்க,
“திருந்தவே மாட்டியா நீ எல்லாம்?” என்ற விக்ரமனின் குரலில் நினைவுக்கு வந்தவள் மறுநொடியே அவன் புறம் திரும்பி,
“நீங்களும் திருந்தவே மாட்டிங்களா?” என்று கேட்டும்விட்டாள்.
அவளை நன்கு முறைத்தவன்,
“ஆறுச்சாமி மாஆ…” என்று குரல் கொடுக்க,
“ஸ்ஸ்.. என்ன இப்போ? நான் மதிலேறி குதிக்குற அழக எங்கப்பா வந்து பார்க்கணுமாக்கும். நான் எங்கயும் போகல, போதுமா? நீங்க கிளம்புங்க மொதல்ல”
“நீ பார்த்து இறங்கு”
“அதெல்லாம் ஏறுன எங்களுக்கு தெரியும் எப்படி இறங்கணும்னு” என்று கூறியவள்,
“இவருக்கு ரொம்ப தான் அக்கறை எங்க மேல. இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கோமே நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை வாய்ல இருந்து வரணுமே” என்று முணுமுணுத்தபடி ஏணியை சரிசெய்து கொண்டிருக்க, அவனிடம் ஒரு மென்னகை.
‘ச்சை ஏறுன வேகத்துலயே இறங்க வேண்டியதா போய்டுச்சே’ என நொந்தபடி இறங்குவதற்காக சென்றவள் திடீரென நினைவு வந்தவளாய் அவன் புறம் திரும்பி,
“ஆமா உங்களுக்கு என்ன வேலை? அதுவும் இந்நேரத்துல? எங்க தெருப்பக்கம்??” என்றாள் அவனை கையும் களவுமாய் பிடித்துவிட்டது போன்றதொரு பாவனையில்.
அவர்கள் வீட்டுப் பசுவானது கால் சத்துக் குறைபாட்டால் எழுந்து நிற்க முடியாதிருக்க, அதற்கு வைத்தியம் பார்க்க கம்பவுண்டரை அழைத்து வந்திருந்தான் விக்ரமன். நேரம் ஆகியதால் கம்பவுண்டரை அவரது ஊர் வரை சென்று விட்டுவிட்டு அந்த தெரு வழியாக திரும்பி வந்து கொண்டிருந்த போது தான் ஆறுச்சாமியின் வீட்டு மதில் மேல் தென்பட்ட ஏணியை கவனித்தான்.
கவனித்த மறுநொடியே இது யார் வேலையாய் இருக்கும் என்றும், அடுத்து நடக்கவிருக்கும் காரியம் என்னவென்பதையும் அறிந்து தன் வண்டியை தொலைவிலேயே நிறுத்திவிட்டு சத்தமின்றி ஒரு ஓரமாக வந்து மறைவில் நின்றுகொண்டான்.
காற்று பலமாய் வீசியடிக்க, மரங்கள் எல்லாம் இலைகளை அசைத்து எழுப்பிய பேரிரைச்சலில் அவனது புல்லட்டின் ஒலி தனித்துக் கேட்டிருக்கவில்லை அரசிக்கும்.
அதை எப்படி கவனிக்காது போனோம் என்ற யோசனையில் அவள் இருக்க, விக்ரமன் அவளது கேள்விக்கு பதிலளிக்காது இருக்க, அரசியின் கவனத்தை அவள் கைபேசி கலைத்தது. அரும்பின் எண்ணிலிருந்து தான் அழைப்பு வந்திருந்தது.
கைபேசியை எடுத்து காதிற்குக் கொடுத்தவள்,
“நம்ம வழியில இன்னைக்கும் ஒரு முரட்டுக் காளை குறுக்க வந்திருச்சு” என்றாள் விக்ரமனைப் பார்த்துக்கொண்டே. மறுமுனையில் யாரென்று அறியாது மறைமுகமாக செய்தி கூறுகிறாளாம்.
“புலிஈஈஈ….!”
மறுமுனையில் கோபமாய் ஒலித்த குரலில் அது அரும்பல்ல குலசேகர பாண்டியன் என்று புரிந்து போக லேசாய் அதிர்ந்தாள் அரசி.
“அரசி கண்ணு”
அந்நேரம் சரியாய் அவளுக்கும் சற்று தொலைவில் பின்புறத்தில் இருந்து கேட்ட நாயகியின் குரலில் திடுக்கிட்டுத் திரும்ப, பின் வாசல் விளக்கு எரிந்துகொண்டு இருந்தது.
திருதிருவென விக்ரம பாண்டியனையே பார்த்திருந்தாள் வேங்கையரசி.
அப்போது அரும்பின் நிலை?
அரசியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்ததுமே அவளுக்கு பதில் அனுப்பிய அரும்பு தன் தாவணியால் முகத்தை மறைத்துக் கொண்டு சத்தமின்றி பின்வாசல் வழியே வெளியேறினாள்.
கேட்டைத் தாண்டியவள் நாலைந்து வீடுகளைத் தாண்டி, அடுத்து அவள் தெருவைத் தாண்டுவதற்குள் அவள் முன்பு வந்து நின்றிருந்தான் குலசேகரன்.
‘ஐயோ மாமா’ எனப் பார்த்திருந்தாள்.
அவளை முடிந்தமட்டில் முறைத்தவன்,
“முக்காடு போட்ட மோகினியோட்டம் இந்நேரத்துல எங்கடி போற?” என்று கோபமாய் வினவ, உடனே தன் முகத்தை மறைத்திருந்த தாவணியை விலக்கி அதன் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிவிட்டு
“அது வந்து மாமா, அரசி மாட்டாஸ்பத்திரி கிட்ட வர சொன்னா அதான் போய்ட்டு இருக்கேன்” என்றாள்.
“மாட்டாஸ்பத்திரி கிட்ட சுடுகாடு தான் இருக்கு. அங்க எதுக்காமா?”
“அது தெரியல மாமா”
“ஏன் எதுக்குன்னு எல்லாம் கேக்க மாட்டியா? அவன் சொன்னான்னா பொசுக்குன்னு தண்ணி இல்லாத கிணத்துல போய் குதிப்பையா?” என்று காய,
“அவ சொன்னா கண்ண மூடிட்டு போய் குதிப்பேன் மாமா” என்றாள் அழுத்தமாய் தன் தோழியை விட்டுக் கொடுக்காது.
“ஏது குதிப்பையா? மண்டை பத்திரம்டி. உங்கப்பன் மீசை…” என அரும்பிற்கு பின்னால் பார்த்தபடி குலசேகரன் ஆரம்பித்ததுமே,
“ஐயோ அப்பா வந்துட்டாராங் மாமா?” என்று கண்களை விரித்து அவனிடம் கேட்டவளுக்கு தானாய் கையும் காலும் நடுக்கம் எடுத்தது.
“இந்த நடுங்கு நடுங்குறவ ஏன்டி மீசை கண்ணுல மண்ணை தூவிட்டு இந்நேரத்திற்கு அலுங்காம வெளிய வர்ற? உங்கப்பனுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறதுன்னு தான் சொல்ல வந்தேன்” என்றதும் தான் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியே விட்டாள் அரும்பு.
“ஏன்டி எலிக்குட்டி இப்பெல்லாம் உங்கப்பன் பெல்ட் போடுறது இல்லையா?” என்றான் குலசேகரன் ரகசிய குரலில்.
“போடுறாரு மாமா” என்றாள் பாவமாய்.
“அப்போ உங்கப்பன் பெல்ட்டுக்கு வேலை வந்திருச்சு. நீ செஞ்ச வேலை மட்டும் முறுக்கு மீசைக்கு தெரிஞ்சா என்னாகுறது? உங்கூட்டு பெருசு போதுமே ஏத்திவிட்டு அடிவாங்க வைக்க” என கேலி செய்ய, அவளோ பயந்து பயந்து பின்னால் திரும்பிப் பார்த்திருந்தாள்.
ஒரு வேகத்தில் அரசியின் சொல்லைத் தட்ட முடியாது கிளம்பிவிட்டாள், இருப்பினும் யாராவது வந்துவிடுவார்களோ தன்னை பார்த்துவிடுவார்களோ தன் அப்பத்தாவிற்கும் தந்தைக்கும் தெரிந்துவிடுமோ என்றெல்லாம் அரும்பை பயம் பிடித்து இருந்தது. அவளையே தான் பார்த்திருந்தான் குலசேகரன்.
அரும்புக்கு குலசேகரன் தாய் மாமன் என்றாலும் இருவருக்கும் வயது வரம்பு குறைவே. குலசேகரனுக்கும் அவன் அக்காவிற்கும் ஏனைய வருடங்கள் வித்தியாசம். அவனுக்கு ஐந்து வருடங்கள் இருக்கும் போது தான் மரகதவள்ளிக்கு அரும்பு பிறந்திருந்தாள்.
சந்தர்ப்ப வசத்தால் இன்று தன் அக்கா குடும்பத்தாரிடம் இருந்து விலகி நிற்கும் நிலை அவனுக்கு. அப்படி இருக்கையில் அரும்பை தன்னோடு சேர்த்துப் பார்த்தால் அவளுக்கும் பிரச்சனை என்று நினைத்தவன் அவளை வீடு வரை அழைத்துச்சென்று பத்திரமாக விட்டுவிட்டு விரைவில் திரும்ப நினைத்தான். அப்படி அவளோடு சென்றுகொண்டிருக்கும் வேளையில் தான் அவள் கைப்பேசியை வாங்கி அரசிக்கு அழைத்திருந்தான்.
குலசேகரன் குரல் கேட்டதும் அரும்பு மாட்டிக்கொண்டதை அறிந்து அரசி மானசீகமாய் தலையில் அடித்துக் கொள்ள,
“வந்ததும் வராததுமா ஆட்டம் போட்டா அப்பறம் புலிக்கூண்டுல தான் அடைபட்டு கிடக்கோணும்” என்று அவன் சொன்னதும் உடனே அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.
அடுத்து நாயகி வேறு அவளைத் தேடியபடி வந்து கொண்டிருக்க,
“ப்ச்.. சீக்கிரம் இறங்கு” என விக்ரமன் வேறு குரல் உயர்த்த, மறுநொடியே ஏணியைப் பிடித்து உட்புறமாக சரசரவென இறங்கிக் கொண்டாள்.
இறங்கியவள் ஏணியை சாய்த்துப் போட்டுவிட்டு இருளில் நின்றிருக்கவும், நாயகி அவளருகில் வரவும் சரியாய் இருந்தது.
“ஏய் சின்னக் குட்டி இந்நேரத்துல தூங்காம இங்க என்ன பண்ணுற?”
“தூக்கம் வரலைங் ஆத்தா, அதான் சும்மா காத்து வாங்கிட்டே நம்ம அரும்போட போன் பேசலாம்னு வந்தேனுங்”
“அட உனக்கு தூக்கம் வரலைனா அதுக்கு அவ தூக்கத்தை ஏன் கண்ணு கெடுக்குற? வயசு புள்ள தனிய ராத்திரி நேரத்துல இப்படி எல்லாம் நிக்க கூடாது சாமி. காத்து கருப்பு அடிச்சுப் போடும். உள்ளார போய் அக்காளோட படுத்துக்க இல்லைன்னா என்ர கூட வந்து படுத்துக்க”
“இல்லைங் ஆத்தா நான் அக்காளோடையே படுத்துக்றேன்ங். எனக்கு இப்போ தூக்கம் வந்திருச்சுங் நான் உள்ளார போறேன். நீங்க மொல்ல காத்து வாங்கிட்டு வாங்” என்றுவிட்டு வேகமாய் உள்ளே சென்றுகொண்டாள்.
‘என்னாச்சு சின்னவளுக்கு? வேட்டக் கருப்பராயன் காவலுக்கு போற இந்த நேரத்துல நான் என்னத்துக்கு காத்து வாங்கப் போறேன்’ என நினைத்தபடி கதவைப் பூட்டிவிட்டு அவரும் உள்ளே வந்து படுத்துக் கொண்டார்.
வாசம் வீசும்….!