தனது அலுவலக அறையில் மூன்றாள் அகலத்திற்கு கண்ணாடி பதிக்கப்பட்டு, உள்ளிருந்தே வெளியுலகை காணும்படி இருந்த ‘பிரன்ச் விண்டோ’வின் மூலம் சென்னையின் ரம்யத்தை சூடான குளம்பியுடன் ரசித்துக்கொண்டிருந்தார் ராஜகோபால்.
மகளிடம் எதையும் கேட்க வேண்டாம் என மனைவியிடம் சொல்லிவிட்டார். அதற்க்காக அவள் சம்பந்தப்பட்ட விடயத்தை அப்படியே ஆறப்போட அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. மகளே சொல்லட்டும் என காத்திராமல் தன் யூகத்தை சரிப்பார்க்க, ஆதித்யாவை சந்திக்க வரும்படி அழைத்துவிட்டு காத்திருந்தார்.
அவரை அதிகம் காக்க விடாமல் அவர் அறைக்கதவை லேசாக இருமுறை தட்டினான் ஆதி.
ராஜகோபால், “யெஸ்! கம் இன் ஆதி!” என ஆர்வமாய் அழைக்க, உள்ளே நுழைந்தவன் அவரை இருக்கையில் காணாது பார்வையை திருப்பினான். ஜன்னல் திட்டின் சிறு இடைவெளியில் லேசாக ஒரு காலை ஊனியபடி அவர் அமர்ந்திருக்க, “ஹலோ சார்” என இன்முகமாய் அவரருகே சென்றான் ஆதி.
வந்தவனிடம், “ஹவ் அபௌட் காஃபி?” என்றார் தன் கையில் இருந்த குவளையை அவனிடம் உயர்த்திக்காட்டி.
தயக்கமாய், “நாட் நவ் சார்” என ஆதி மறுக்க, புருவம் உயர்த்தி குறுநகை செய்த ராஜகோபால், “இன்னும் ஹேங்ஓவர் போலையோ?” என்றார்.
அவர் அப்படி கேட்டதும் திகைத்த ஆதி, “அத்…. சார்…?” என்றான் அசடு வழிந்து.
மனதிலோ, ‘நேத்து நைட் குடிச்சது, பார்த்ததும் தெரியுற அளவுக்கா அப்பட்டமா இருக்கு?’ என அவன் யோசிக்க, அதை புரிந்தவர் போல, “கண்ணு இவ்வளோ ரெட்டிஷா இருக்கு!! ஹாட் ஆ? இல்ல….” என ராஜகோபால் இழுக்கும்போதே,
அவசரமாய், “ஐயோ சார், ஹாட் எல்லாம் பழக்கம் இல்லை! ஜஸ்ட் பீர் தான்” என்றான் ஆதி.
அவன் மனசாட்சியோ, “அடப்பாவி! ஜஸ்ட் பீர் தானா? ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, நா……லு பீரு டா!!” என உண்மையை இடித்துரைக்க, காது கேளாதவன் போல அமர்ந்துக்கொண்டான்.
அவனை அழைத்த ராஜகோபால் எதுவும் பேசாமல் இருக்க, “கிரீன்வேலி டிஸ்ருப்யூட்டர்ஸ் கிட்ட டீல் ஒகே ஆகிடுச்சு சார்! கமிங் பிரைடே டாக்குமென்ட் ரெடி ஆகிடும்” என்றான் அவனே.
“ம்ம்ம்” கொட்டி கேட்டுக்கொண்டவர், “அந்த நார்த் இந்தியன் கம்பெனி டீடெயில்ஸ் கேட்டுருந்தேனே! என்னாச்சு?” என்றிட, “எந்த கம்பெனி சார்?” என்றான் ஆதி புரியாமல்.
“நம்ம நியூ ப்ராஜெக்ட்ல செராமிக் வொர்க் செஞ்சு தரதா நீதானே கமிட் பண்ண? அது சம்பந்தமா ஒரு நல்ல கம்பெனி இருக்குன்னு சொன்னியே ஆதி? மறந்துட்டியா?”
‘ஐயோ, நம்ம கம்பனியை தான் கேட்குறாரு’ என கண்டுக்கொண்ட ஆதி, ‘இப்ப என்ன சொல்லி சமாளிக்குறது?” என யோசிக்க வேண்டி இருந்தது.
அதற்குள், “அந்த கம்பெனி சேர்மேன் கிட்ட ஒரு முறை நான் பேசிடுறேன்! நீ இன்னைக்கே எனக்கு டீடெயில்ஸ் மெயில் பண்ணிடு” என ராஜகோபால் சொல்ல,
“என்ன சார் நீங்க? அது ஒரு டப்பா கம்பனி! நம்மக்கிட்ட ப்ராஜெக்ட் பண்றதெல்லாம் அவங்களுக்கு வாழ்நாள் கனவா இருக்கும்! இதுல நீங்க போய் இந்த சில்லி மேட்டருக்கெல்லாம் நேரா பேசணுமா என்ன? நான் எதுக்கு இருக்கேன், CRMன்னு? எல்லாம் நான் பார்த்துக்குறேன்” என்றான் அவசர அவசரமாய்.
[the_ad id=”6605″]
பின்னே ஜெயதேவுக்கு இவன் போட்டு வைத்திருக்கும் ஒப்பந்தம் தெரிந்தால் வானுக்கும் பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்துவிட மாட்டாரா? அதையும் விட, வடக்கே தன் தொழில் நேர்த்தியாலும், திறமையாலும் ‘தேவா செராமிக்ஸ்’சை ஜெயதேவன் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றாக கொண்டு வந்திருக்க, ஆதி ஒரே நொடியில் அதை ‘டப்பா கம்பெனி’ என்றாக்கியிருந்தான்.
ஆதி சொன்னதை கேட்டு நகைத்த ராஜகோபால், “அப்கோர்ஸ், இது உன் வேலை தான்! ஆனா, எனக்கொரு பழக்கம்! எந்த ஒரு புது கன்சர்ன் கூட டீல் வச்சுக்குறதா இருந்தாலும் நானே ஒருமுறை அவங்களை பார்த்து பேசிட்டு தான் டிசைட் பண்ணுவேன், அதனால நீ டீடெயில்ஸ் மெயில் பண்ணிடு” என முடித்துவிட்டார்.
ஆனாலும் விடாத ஆதி, “சார், நம்ம இன்னும் கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கே ஸ்டார்ட் பண்ணல… பில்டிங் வொர்க் எல்லாம் முடிஞ்ச பிறகு தானே செராமிக் வேலை! அதுக்கு இன்னும் ஆறு மாசம் ஆகும், அதுக்குள்ள என்ன அவசரம்?” என்றான்.
அவனை கூர்மையாக பார்த்த ராஜகோபால், “எனக்கு புரியல! இங்க நான் எம்.டி யா? இல்ல நீயா?” என ஹாஸ்யம் போல கேட்டதும், ஆதி ‘கப்’பென வாயை மூடிக்கொண்டான்.
சில நிமிட இடைவெளிக்கு பின்னே, ராஜகோபால், “நீ ஐபிஎம் ஸ்டுடென்ட்…! இல்ல?” என்று கேட்க, திடீரென்ற அவர் கேள்வியில் ‘ஆம்’ என தலையசைத்தான் ஆதி.
அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, “என் பொண்ணு கூட ஐபிஎம் தான்!!” என அவர் சொல்லவே, திகைத்த ஆதி, சட்டென சுதாரித்து, பதிலின்றி அவரை நன்றாய் கவனிக்க ஆரம்பித்தான்.
“சோ…? எல்லாம் எப்படி போகுது?”
ஆதி, “எது சார்?”
“நீ இங்க வந்த வேலை தான்!!” என அவர் சொல்ல, “எதை கேட்குறாரு?’ என ஒரு நொடி ‘ஜர்’க்கானான் ஆதி.
“எ…ன்ன… வே…ல்…லை?” வார்த்தை சரியாய் வராமல் தடுமாற, “லீடிங் கம்பெனில வேலை பார்க்கனும்ன்னு தானே மகாராஷ்டிரால இருந்து இங்க வந்த? அதான், அந்த வேலை நல்லா போகுதான்னு கேட்டேன்” என்றார் அவர்.
அவர் இதை சொல்லி முடிப்பதற்குள்ளே, ஆதிக்கு மூக்கின் நுனி வியர்த்து போயிருந்தது. வேகமாய் கைக்குட்டை எடுத்து அதை துடைத்தவன், ‘உப்ப்’ என காற்றை ஊதித்தள்ளி, “கோயிங் குட் சார்! வந்ததுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கு” என்றான் சிரித்த முகமாய்.
அவனை பார்த்து, “ம்ம்ம்” என பெரிதாய் தலையாட்டிய ராஜகோபால், “உன் சொந்த ஊரே மகாராஷ்டிராவா?” என்றார்.
‘ஐயோ கூப்பிட்டு வச்சு இன்டர்வியூ நடத்துறாரே?’ என பல்லைக்கடித்த ஆதி, வெளியில் எதையும் காட்டாது, “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்க தான் சார், ஆனா அப்பா அம்மாக்கு தமிழ்நாடு தான்! ஏதோ ஒரு கிராமம்! வேலைக்காக அப்பா மும்பை வந்தாரு… தென், அப்படியே செட்டில்ட்” என்றான்.
[the_ad id=”6605″]
மறுபடியும், “ம்ம்ம்ம்…” என இழுத்தார் ராஜகோபால். அவன் சொல்வதை உட்கிரகிக்கிறார் போல என எண்ணிக்கொண்டான் ஆதி. ஆனால், ‘எதற்கு?’ என்ற கேள்வி தோன்றாமல் இல்லை!
அவரோ ‘இன்னும் கேட்க வேண்டியது எவ்வளோ இருக்கு?’ என அசராமல் அடுத்த கேள்விக்கு போனார்.
“முதல் நாள் இண்டெர்வியூல நீ நடந்துக்கிட்ட விதத்தை நான் பார்த்துட்டு தான் இருந்தேன்! பொதுவா அப்படி ஒருத்தன் வந்தா, அவனுக்கு எப்பேர்ப்பட்ட திறமையும் தகுதியும் இருந்திருந்தாலும், செக்யுரிட்டியை விட்டு கழுத்தை பிடிச்சு அவனை வெளில தள்ளிருப்போம்!” என்றவர்,
அவனை ஒரு நொடி ஆழ்ந்து நோக்கி, “ஆனா, உன்னை அப்படி செய்யாம, வேலை போட்டு குடுத்துருக்கேன்! ஏன்னு தெரியுமா?” என்றார்.
ஆதியின் மண்டைக்குள் மணியடித்தது. ‘ஆஹா! எதையோ மோப்பம் பிடிச்சுட்டாருடா ஆதி!’ என சொல்லிக்கொண்டான்.
பதில் சொல்லாது அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்த ஆதியை கண்டவர், குடித்து முடித்த காஃபி மக்கை ஓரமாய் வைத்துவிட்டு, “உனக்கும் தன்யாவுக்கும் நடுல என்னவோ இருக்குன்னு தோனுச்சு!” என்றார். ஆதி இப்போது நன்றாய் நிமிர்ந்து அமர்ந்தான்.
‘அவருக்கு சந்தேகம் தோன்றிவிட்டது. அதை ‘இல்லை’ என சொல்லி மறுக்காமல் உண்மையை சொல்லி விடலாம்’ என முடிவெடுத்து விட்டான் ஆதி.
ஆதி, “ஆமா சார், இருக்கு” என்றான்.
அவன் ‘அப்படி ஒன்றும் இல்லை’ என மறுத்து சொல்லுவான் என்று எதிர்ப்பார்த்திருப்பார் போலும்! அவன் பதிலில் அவர் புருவம் வியப்பில் உயர்ந்தது.
ராஜகோபால், “இதுக்கு மேல நானா கேள்வி கேட்டு….” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “நானும் தன்யாவும் லவ் பண்ணோம் சார்…” என்ற ஆதி, “இப்பவும் பண்றோம்” என்றான் அவரை நேருக்கு நேராய் பார்த்து!
அவன் நேரடி பதிலில் அசந்து தான் போனார்…! பெண்ணை பெற்றவரிடமே, அதுவும் அவரிடத்தில் வந்து அமர்ந்துக்கொண்டே தைரியமாய் சொல்கிறானே? என்று…!
“அப்போ கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே? எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?”
ஆதி, “எனக்கும் அவளுக்கும் ‘ப்ரேக் அப்’ ஆகிடுச்சு சார்! அஞ்சு வருஷம் முன்னாடியே!” என்றவன், அவர் கேட்காத தகவலாய், “என்னை பாக்க பிடிக்காம தான் அவ படிப்பை பாதில விட்டுட்டு வந்தா! அதுக்கு பிறகும், நான் அவளை சமாதானப்படுத்த அடிக்கடி சென்னை வந்துட்டு இருந்தேன்! அப்போ அவ இங்க ஒரு லோகல் காலேஜ்ல ஸ்டடீஸ் கண்டின்யூ பண்ணிட்டு இருந்தா!” என்ற ஆதி ஒரு நீண்ட மூச்செடுத்து பின் தொடர்ந்தான்.
“கிட்டத்தட்ட ஒரு வருஷம்… மாசம் தவறாம அவளை பார்க்க அவ காலேஜுக்கு போனேன்! என்கிட்ட பேசக்கூட அவளுக்கு இஷ்டம் இல்லாம போச்சு! கடைசியா நான் அவளை பார்க்க போனப்போ, ‘இதுக்கு மேல என்னை பார்க்க வந்து டார்ச்சர் பண்ணா நான் எங்கயாவது போய்டுவேன்’னு மிரட்டினா…! எனக்கும் கோவம் வந்துடுச்சு! ‘சரிதான் போடி’ன்னு விட்டுட்டேன்! நாலு வருஷம்!! முழுசா நா…லு வருஷம்! அவளை மறக்கவும் முடியல! வேற யாரையும் நினைக்கவும் முடியல! அதான் இந்த முறை என்ன ஆனாலும், அவளை என்கூடவே கூட்டிட்டு போய்டனும்ன்னு வந்தேன்” என்றான் ஆதி.
ராஜகோபாலின் முகம் வரவேற்ப்பாய் இல்லை. அதற்காக தன் சினத்தையும் அவர் வெளிக்காட்டாது, “உங்களுக்கு என்ன சின்ன குழந்தைன்னு நினைப்பா? காதலிப்பீங்க, பிரிஞ்சு போவீங்க! வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டோம்ன்னு காரணம் கூட சொல்லாம பெத்தவங்களை கஷ்டப்படுத்துவீங்க! இல்ல? உன் வீட்ல எப்படி எதுவும் கேட்காம இருக்காங்க?” என அவர் குரல் உயர்த்தாமல் அழுத்தமாய் கேட்க, மௌனித்தான் ஆதி.
அவன் அமைதியாய் நிமிடத்தை கடத்த, தன்னை சற்று சமன் படுத்திக்கொண்ட ராஜகோபால், “சரி, என்ன பிரச்சனை உங்களுக்குள்ள? என் பொண்ணு மேல தான் தப்பா?” என்றார்.
“உங்க பொண்ணை பத்தி நானே சொல்லனும்னு இல்ல சார்! அவ பக்கம் தப்பு இருக்குன்னு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே மன்னிப்பு கேட்டுடுவா! ஆனா, யார் மேல தப்பு, என்ன ஆச்சு? எதனால பிரிஞ்சோம்? இது எதுவுமே தெரியாம எப்படி சார்? இப்போக்கூட அவக்கிட்ட மன்னிப்பு கேட்க நான் ரெடி! உங்க பொண்ணை என்கூட வந்துட சொல்லுங்க! என்னால இதுக்கு மேல அவ இல்லாம இருக்க முடியாது” என்ற ஆதிக்கு அவளுடன் அவன் கூடி களித்த நாட்கள் பகல் கனவாய் கண்முன் வர, சற்று கலங்கி தான் போனான்.
“அவ என்கூட இருந்தவரைக்கும் எனக்கு எதுவும் தெரியலை சார்! எப்போ என்னை விட்டு தள்ளி போனாலோ அப்போ தான் அவ நினைப்பு அதிகமா வர ஆரம்பிச்சுது! பசங்களுக்கு எப்பவும் கைல கிடைக்குறதோட வேல்யூ புரியாது சார்! அதுலயும் தன்யா எனக்கு ரொம்ப ஈசியா கிடைச்சுட்டா! அருமை தெரியாம மிஸ் பண்ணிட்டேன்!”
“எங்க வீட்ல கல்யாண பேச்சு பல மாசமா போய்க்கிட்டு தான் இருக்கு! எனக்கு ‘மனைவி’ங்குற இடத்துல தன்யாவை தவிர வேற ஒருத்தியை என்னால கற்பனைல கூட நினைக்க முடியல சார்!” ஆதி வெகு வருத்தமாய் பேச,
“அப்போ எதுக்கு நாலு வருஷம் சும்மா இருந்த? அப்போவே வந்துருக்கலாம்ல?” ஒரு தந்தையாய் ஆதங்கப்பட்டார் ராஜகோபால்.
[the_ad id=”6605″]
“என்ன சார் பண்றது? என்னதான் காதல் கன்னாபின்னான்னு இருந்தாலும், ‘ஒரு பொண்ணு அவளே உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு போய்ட்டா, நீ எதுக்குடா அவ பின்னாடி போகணும்ன்னு’ உள்ளுக்குள்ள ஓரமா ஒளிஞ்சுருக்க ‘ஆம்பள’ விஷால் அப்ப அப்ப காரை எடுத்துக்கிட்டு, தென்னந்தோப்பு வழியா பறந்து வந்து என்னை ஆப் பண்ணிடுவாரு! இப்பதான் அவரை ஒருவழியா டிவோர்ஸ் பண்ணிட்டு இங்க வந்துருக்கேன்” என சொல்ல, பற்கள் பளிச்சிட சிரித்தார் ராஜகோபால்.
அவருடன் சிரிப்பில் இணைந்தவனும், “ஜஸ்ட் கிவ் மீ அ மந்த் சார்! அதுக்குள்ள உங்க பொண்ணை கரெட் பண்ணிடுறேன்” என கண்ணடிக்க, “அடப்பாவி, அப்பாக்கிட்டேயே வந்து ‘உங்க பொண்ணை கரெட் பண்ணிடுறேன்’ன்னு சொல்றியா?” கோவம் போல கேட்டவருக்கும் சிரிப்பு தான் வந்தது.
சில நிமிடங்கள் சிரிப்பு தொடர, ஆதி, “ம்ம்ம்…. என்னைப்பத்தி எதுவுமே கேட்கலையே நீங்க?” என்றான் அவரிடம்.
“என்ன கேட்கணும்? நீ இங்க வந்ததுல இருந்து உன்னை நான் வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன், நோ பேட் ரிமார்க்ஸ்! கண்டிப்பா உன் குடும்பமும் நல்லவிதமா தான் இருக்கும்! அதுல எனக்கு சந்தேகமே இல்லை! எல்லாத்துக்கும் மேல, என் பொண்ணு உன்னைத்தவிர வேற யாரையும் கல்யாணம் செய்ய போறதும் இல்ல! இதுக்குமேல நான் தெரிஞ்சுக்க என்ன இருக்கு ஆதி?” என்றிட,
“நீ கழுதையோ குதிரையோ, என் பொண்ணுக்கு பிடிச்சதுக்கு அப்புறம் எதுக்கு ஆராய்ச்சி பண்ணணும்ன்னு மறைமுகமா சொல்றீங்க?! ஹும்ம்…. இருக்கட்டும் இருக்கட்டும்” என ஆதி தோரனையாய் சொல்ல, அவனை நெருங்கி வந்து, “அடடா… மாப்பிள்ளை கெத்து இப்பவே ஆரம்பிச்சுடுச்சே” என நகைத்தார் ராஜகோபால்.
“பின்ன, மாப்பிள்ளைன்னா சும்மாவா?” என்ற ஆதி, “சார், இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும்! தன்யா சமாதானம் ஆகுறவரை யாருக்கும் சொல்லாதீங்க ப்ளீஸ்” என்றான் வேண்டுதலாய்.
“ஏன் ஆதி?”
“சும்மா விட்டாக்கூட நான் அவளை கன்வின்ஸ் பண்ணிடுவேன்! இப்போ எல்லாரும் உண்மை தெரிஞ்சு, எங்க லவ்வுக்கு நீங்க எல்லாம் சப்போர்ட்ன்னு தெரிஞ்சா வீம்புக்குன்னே என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருப்பா சார்! என்னால இதுக்கு மேல முடியாது!” என இருகைகளையும் உயர்த்தி ‘சரண்டர்’ என சோர்ந்து போக,
“அதுவும் சரிதான் ஆதி! டோன்ட் வொர்ரி! நான் என் வைப் கிட்ட கூட இதை பத்தி பேசல, போதுமா? பட் ஆன் ஒன் கண்டிஷன்! நீ கேட்டுருக்க ஒரு மாசத்துக்கு மேல ஒரு நாள் கூட நான் காத்திருக்க மாட்டேன்! உடனே என்கேஜ்மென்ட்க்கு ரெடி பண்ணிடுவேன்! அப்புறம் என்ன எதுவும் சொல்ல கூடாது” என அவனை போலவே ‘சரண்டர்’ என கைகளை உயர்த்தி அவர் சொல்ல,
“ஓகே சார், டீல்!!!” என கட்டை விரல் உயர்த்தினான் ஆதி.
அனைத்தையும் சொல்லிவிட்டாலும் ‘எப்படி கண்டுபிடித்திருப்பார்?’ என தெரிந்துக்கொள்ள அவனுக்கு ஆவல் அதிகமாக, கேட்போமா? வேண்டாமா? என அவர் முகத்தை பார்ப்பதும் தயங்குவதுமாய் அவன் விளையாட்டு காட்ட,
“என்ன கேட்கணுமோ கேளு ஆதி” என ஊக்கினார் ராஜகோபால்.
“இல்ல சார்! எப்படி நான்தான்னு கண்டுபிடிச்சீங்க?”
அற்பமென ஒரு சிரிப்பை உதிர்த்தவர், “தன்யா ரூம்ல சிசிடிவி இருக்கு!” என்றார்.
ஆதி, “இருக்கட்டும்”
“அது என் மொபைல்ல கனெக்ட் பண்ணிருக்கு”
ஆதி, “அதுவும் இருக்கட்டும்”
“ரெண்டு நாள் முன்னாடி நீ அவ ரூம்க்கு போயிருக்க! ஒரு மணி நேரம் கழிச்சு வெளில வந்துருக்க! அந்த ஒருமணி நேர புட்டேஜ் ரெக்கார்டிங்ல இருந்து டெலீட் ஆகிருக்கு” என சொல்ல, ‘திக்’கென்றானது ஆதிக்கு.
‘ஐயையோ, பார்த்துட்டாரோ?’ என உள்ளுக்குள் பதற, “புட்டேஜ் டெலீட் பண்ணது தன்யா தான்! எனக்கு தெரியக்கூடாதுன்னு நினைச்சு செஞ்சுருக்கா! அதை மீறி டெலீட் ஆனதை ரெக்கவர் போட்டு பார்க்குற அளவுக்கு நான் மோசமான அப்பன் இல்லை” என சொல்ல,
“ஹப்பாடா!!! தப்பிச்சோம்” என நினைத்துக்கொண்டான் ஆதி.
“ஆரம்பத்துல இருந்தே இருந்த சந்தேகம், ஸ்ட்ராங் ஆகிடுச்சு! அதான் இன்னைக்கு பேசி பார்ப்போம்ன்னு கூப்பிட்டேன்! நீ சுத்தி வளைக்காம விஷயத்தை போட்டு உடைச்சுட்ட” என்றார் ராஜகோபால்.
ஆதி உதட்டை நீட்டி சிரிக்க, “லவ் பண்ணோம், ப்ரேக் அப் ஆச்சுன்னு நீ சொல்ற! என் பொண்ணு கல்யாணமே ஆகிடுச்சுன்னு சொன்னாளே? சும்மா தானே சொல்லிருப்பா?” என்றவருக்கு ‘அப்படி ஒன்றும் நடந்துருக்க கூடாதே’ என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமிருந்தது.
“அது….!!!” என யோசனையாய் இழுத்த ஆதி, “தன்யாவும் நானும் சேர்ந்து இந்த விஷயத்தை சொல்றோம் சார்! அதுவரைக்கும் எதுவும் கேட்காதீங்க” என்றுவிட்டான்.
ராஜகோபாலுக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது. இதுவரை அவர் கேட்காமலே எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தவன், ‘திருமணம் ஆகிவிட்டதா?’ என்ற கேள்விக்கு பளிச்சென ‘இல்லை’ என்று சொல்லாது இப்படி சூசகமாய் பதில் சொல்ல மறுத்தது, அவருக்கு சிறு சுணக்கத்தை கொடுத்தது.
முயன்று அதில் இருந்து வெளிவந்த ராஜகோபால், “அப்பறம் ஆதி, உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசணுமே?” என்றார் அடுத்த கட்டமாய்.
ஆதி சற்றும் தாமதிக்காமல், “நோ ப்ராப்ளம் சார், நாளைக்கே என் வீட்ல இருந்து பேச சொல்றேன்” என்றான்.
“நாளைக்கா?” என சற்று யோசித்தவர், “நாளைக்கு எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு!” என தயக்கமாய் இழுக்க, “அதுக்கு ஏன் தயங்குறீங்க சார்? உங்களுக்கு எப்போ ப்ரீ-யோ அப்போ பேசிக்கலாம்” என்றான் ஆதி!
நாளை வரப்போவதை அறியாது!!??