செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 19_2
மாதங்கள் செல்ல.. பழைய சேட்டைகள் ஒவ்வொன்றாய் வெளி வர… வார்டனால் பெண்களின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியவில்லை.
அன்று மாலை துளசிக்கு அழைப்பு வந்தது. ‘கார்டியன்’ வந்திருப்பதாக. மேசை மீது கன்னம் வைத்து எதிரே இருந்த வானோலி பெட்டியை திருகிக்கொண்டிருந்தவள், செய்தி வந்ததும், “வாஷிங் பௌடர் நிர்மா.. வாஷிங் பௌடர் நிர்மா” என்று பாடிக்கொண்டிருந்த ரேடியோ பெட்டியை அப்படியே வைத்துவிட்டு, துள்ளி குதித்து ஓடி வந்தாள். மூர்த்தியைப் பார்த்ததும் எங்கிருந்து தான் அத்தனை பிரகாசம் வருமோ தெரியாது. பெண் முகம் புன்னகையைப் பூசிக்கொண்டது. “மூர்த்தி சார்!”
“என்ன மூர்த்தி சார்.. புதன் கிழம வந்திருக்கீங்க?” புன்னகைத்தவளிடம்.. மூர்த்தி, “ஹாஸ்டல் வார்டன் மரியா.. காலேஜுக்கு இன்னைக்கு ஃபோன் போட்டாங்க. நேர்ல பேசணுமாம்..”
அவன் சொல்லி முடிக்கவில்லை.. பெண்ணின் புன்னகை போன இடம் தெரியவில்லை. விழிக்க ஆரம்பித்தாள்.
“என்ன துளசி? ஏதாவது பிரச்சினையா? யாராது உன்ன தொல்லை பண்றாங்களா?” தொடர்ந்து வந்த கேள்வி கனைகளை எதிர்நோக்கும் முன்… உள்ளே நுழைந்தார் மரியா. ஐம்பதுகளின் முடிவிலிருந்தார். முரட்டுத் தேகம். துடைத்து வைத்த முகம்.
“வாங்க மிஸ்டர்.மூர்த்தி… நீயும் வாமா..” அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
“உக்காருங்க சார். நடந்த விஷயத்தைப் பத்தி என்ன சொல்றாங்க துளசி?” என்று அவர் ஆரம்பிக்க.. துளசிக்கு எங்குப் பார்க்கவேண்டுமென்றே தெரியவில்லை.
“ஏதாவது பிரச்சினையா துளசி?’ அவன் கேள்வி அவளை நோக்கிச் செல்ல..
“துளசிக்குப் பிரச்சினை இல்ல… சார். உங்க துளசியால தான் பிரச்சினையே!”
என்ன? சரியாகத் தான் கேட்டதா? புருவம் சுருங்க வார்டனை பார்க்க… அவரோ அலட்டிக்கொள்ளாமல், “சரியா தான் உங்களுக்கு கேட்டுச்சு..” என்றார் மூக்குக் கண்ணாடியைக் கழட்டிக் கொண்டே.
இவன் அவளைப் பார்க்க… அவள், இவன் முகம் பார்த்தால் தானே… கர்மமே கண்ணாய் விரல் நகங்களை எண்ணிக் கொண்டிருந்தாள். எத்தனை முறை எண்ணினாலும் இடது கையில் ஐந்து விரல்களும்… ஐந்து நகங்களும் தான் இருந்தது.
[the_ad id=”6605″]
“ஒம்பதரைக்கு சுவர் ஏறி குதிச்சு… தெரு முக்கில குல்பி வாங்க போயிருக்காங்க உங்க துளசி. கேட்டை மூடுறது இப்படி ஏறி குதிச்சு போகவா?இவளுக்குக் காவல் காக்க இவளை மாதிரியே ரெண்டு ஃப்ரெண்ட்ஸ்! இது முதல் தரம்னா கூப்பிட்டிருக்க மாட்டேன் சார். தினம் தினம் ஒரு வார்னிங் வாங்கிடுறா…
சனிக்கிழமை ஒரு பையன் மெயின் கேட் பூட்டுற நேரம் கார்ல இருந்து இறக்கி விட்டுட்டு போறான். நைட் நேரம் பையனுங்களோட எதுக்கு ஊர் சுத்தணும்?
போன வாரம் மழையில ஆட்டம் போடுறேன் பேர்வழின்னு இவளும் இவ கூட்டாளிகளும் ஹாஸ்டலை நீச்சல் குளமாகிட்டாங்க! சும்மா இருந்த பொண்ணுங்கள மழைல ஆட வச்ச பெருமை உங்க துளசிக்கு தான். அதுல நாலு பொண்ணுங்களுக்கு நாலு நாள் ஜுரமும் சளியும்!
இங்க என்ன கலாட்டா நடந்தாலும்.. அதுக்கு இவ தான் தலைவி.
பத்து மணிக்கு விளக்கணைக்க சொன்னா… ஒரு நாளும் கேக்கறதே இல்ல.. படிக்கணும்னு சொல்லிட்டு ஒரே அரட்டை! இவளைப் பார்த்து ஒழுங்கா இருந்த பக்கத்து ரூம் பொண்ணுங்களும் ஒரு பேக்சு கேக்கிறது இல்ல.
கொடுக்கிற காபி சரி இல்ல… சாப்பாடு சரியில்லன்னு ஒரே ரகளை!
நான் சொல்லிச் சொல்லி பார்த்துட்டேன்… இதுக்கு மேல இது தொடர்ந்தா நீங்க வேற இடம் தான் பார்க்கணும். இவ பண்ற அட்டகாசத்துக்கு நீங்க தனி வீடு தான் பார்த்து போகணும். நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க. இல்லையா வேற இடம் பாருங்க!” பொரிந்து தள்ளிவிட்டுப் போனார். மழை பொழிந்து ஓய்ந்தது.
ஐயோடா… என்று பார்த்து அமர்ந்திருந்தான். என்ன விந்தையோ… உள்ளுக்குள் ஒரே குதூகலம் அவனுக்கு. மருந்துக்கும் கோபம் வரவில்லை. அவன் துளசியா? அப்படியே அவளை தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டும் என்ற பேராவலை முகத்தில் காட்டினான் இல்லை. இதோ.. இந்த நாளுக்கு தான் காத்திருந்தான். பார்த்தும் விட்டான்.
அவர் அறையை விட்டுப் போனதும், அவனும் வெளியே சென்று பார்வையாளர் அறையின் சுவரில் சாய்ந்து நின்றுகொள்ள.. அவன் அருகில் வந்தவள் மூர்த்தி முகம் பார்க்கவில்லை. திருட்டுத்தனம் செய்த பிள்ளை போல் நகத்தை மீண்டும் ஆராய ஆரம்பித்தாள்.
பொறுத்துப் பார்த்தவன், “துளசி..?” என்று ஆரம்பிக்கவும், அவள் முந்திக் கொண்டாள். “என்னை திட்டாதீங்க மூர்த்தி சார். பெட்டுல தோத்துட்டேன். தோத்தா குல்பி வாங்கி தரணும். மத்த நாள் எல்லாம் சீக்கிரம் வரவன் அன்னைக்குன்னு லேட்டா வந்தா என்ன பண்றதாம்? குல்பி காரனைத் தானே திட்டணும்?”
அவளிடம் படு சீரியசான முக பாவம். அவன் முகத்தில் புன்சிரிப்பு. “ஆமா துளசி” என்றான் நமுட்டு சிரிப்பு மாறாமல்.
“மழைல துவைச்சு போட்ட துணி நனைஞ்சு போயிடுமேன்னு மாடிக்குப் போனேனா… மழை என்னை நனைச்சிடுச்சு. துணி எடுக்க வந்த எல்லாருமே நனைஞ்சு போயிட்டோம். சரி அது தான் நனைஞ்சாச்சேன்னு இன்னும் கொஞ்ச நேரம் நனைஞ்சா தப்பா?”
“இல்ல மா.. மழை மேல தான் தப்பு!” குறையா குறும்போடு கூறினான்.
“இங்க இருக்கச் சமையல் அம்மாக்கு உங்களவுக்கு சமைக்கவே தெரியல மூர்த்தி சார், நாக்கு தற்கொலை பண்ணிப்பேன்னு பயமுறுத்துது. எல்லாம் அது நன்மைக்காக ரெண்டு வார்த்தை சொல்லிட்டேன்… என் மேல தப்பா?”
“இல்ல துளசி… சமையல் தெரியாம இத்தன வருஷமா சமையல் பண்ற அவங்க மேல தான் தப்பு..” குறுஞ்சிரிப்பு மறையவில்லை.
“அடுத்து துளசி?” இன்னும் முகம் புன்னகை பூசியிருக்க..
[the_ad id=”6605″]
“.. என்ன்ன்..ன மூர்த்தி சார்?” என்றாள் புரியாமல்.
“அது.. யார் அந்த பையன்?” கடினம் காட்டாத குரல்.
படபடப்பு ஒட்டிக்கொள்ள, வரவழைத்த தைரியத்தோடு.. “அது.. அது ராட்னி.. மூர்த்தி சார்” என்றாள் முகம் பார்த்து.
வாரம் ஒரு முறை வருவான். என்ன வேலை வந்தாலும் அனைத்தையும் அவளுக்காகத் தள்ளிவைத்துவிட்டு சனிக்கிழமை மதிய உணவுக்கு அழைத்து சென்றுவிடுவான். மனநல மருத்துவரைப் பார்க்கவேண்டியிருந்தால் அவரை பார்த்த பின்.. வெளியே எங்கேனும் கூட்டிச் செல்வதோ… தேவையானவற்றை வாங்கி தருவதோ.. ஏதோ ஒன்று கண்டிப்பாக இருக்கும். அவளுக்குப் படிக்க வேண்டியிருந்தாலோ… அவனுக்கு வெளி வேலை ஏதேனும் இருந்தாலோ மாலை காபியோடு விடுதியில் விட்டுவிடுவான். நேரம் இருந்தால்.. மீதி நேரத்தை அலையோசையோடு கழிப்பார்கள். இரவு உணவு முடித்து ஏழரை.. எட்டுக்கெல்லாம் விடுதியில் விட்டுச் சென்றுவிடுவான். இவளுக்காக அவன் சொந்த மண்ணில் கால் பதித்து மாதங்கள் ஆகிறது!
ஆக… வாரம் ஒருமுறை போதிய அளவு நேரம் அவளுக்காக அவன் ஒதுக்கிய பின்னும் இது எதுவுமே அவன் காதுகளை வந்தடையவில்லை. மூன்றாம் ஆள் சொல்லித் தெரிய வேண்டிய நிலை. இதுவரை கூறிய எதுவுமே சொல்லவேண்டிய நிகழ்வுகள் இல்லை தான். ஆனால்.. யாரோ ஒருவனோடு வெளியே சென்று வருவது கூடவா சொல்ல மாட்டாள்? ஒரேயடியாய் தள்ளி வைத்துவிட்டாளா?
மூர்த்தியின் முகம் மாறிப் போயிருக்க… அவளுக்கு அழுகை வரும் போல் தோன்றியது. “ஏன் மூர்த்தி சார்? கோபமா?”
“நான் கோபப்படணுமா துளசி?” புன்னகை மறைந்த குரலில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும்.. முகம் காட்டிக் கொடுத்தது.. அவனுக்கு பிடித்தம் இல்லை என்று! இத்தனைக்கும் முகத்தில் கடினம் இல்லை.
ஏனாம்? இவர் தானே அனைவரோடும் பழகச் சொன்னார்? இவர் தானே ராட்னி நல்லவன் என்ற சான்றிதழும் தந்தார்?
“ம்ம்கூம்… வேண்டாம் மூர்த்தி சார். நைட் சுவர் ஏறி குதிக்க மாட்டேன். மழையில ஆட மாட்டேன். நேரத்துக்கு வந்திடுவேன். இனி மேல். உங்கட்ட சொல்லாம யாரோடையும் போக மாட்டேன். டைம்க்கு லைட் ஆஃப் பண்ணிடுவேன். என் மேல கோபப்பட வேண்டாம் மூர்த்தி சார்…” பாவம் போல் உரைத்தாள்.
“ம்ம்ஹூம்…” கேட்டுக் கொண்டான்.
ஐயோ… அவன் முகம் தெளியவில்லையே.. “கோபமா மூர்த்தி சார்?”
“என் கோபத்துக்கு உன்கிட்ட மதிப்பிருக்கா துளசி?”
[the_ad id=”6605″]
கண் உப்பு நீரை கொட்டவா வேண்டாமா என்று அவனையே பார்த்து நிற்க.. அதில் ‘ஆம்’ என்ற பதிலிருந்தது. இப்பொழுது தான் சிரிக்க ஆரம்பித்தாள். அவள் கண்ணீரைத் தாங்குவானா? “இல்ல துளசி மா… கோபமெல்லாம் இல்ல! நான் சொல்லி நீ தெரிஞ்சுக்கிற வயச தாண்டிட்ட. எதனாலும் பார்த்து இருந்துக்கோ. நீ தப்பு செய்யல. எப்படி இருக்கியோ அப்பிடியே இரு. யாருக்காகவும் மாற வேண்டாம். இப்போ மழையில ஆடாம எப்போ ஆடுவ? சந்தோஷமா இரு! ஆனா ஜாக்கிரதையாவும் இருக்கணும். எங்கப் போனாலும் நேரத்தோட வந்திடு. இருட்டில சுத்தக்கூடாது. மத்தவங்களோட வீண் பேச்சுக்கு ஆள் ஆகாத.”
அமைதியாகப் பேசிவிட்டு வந்துவிட்டான்.. ‘தனியே ராட்னியோடு சுற்றவில்லை. பெண்கள் மூவரும்.. சுருட்டையும் சேர்த்து ஐந்து பேராக, வெண்ணிலா பிறந்த நாள் கொண்டாட அருணுக்கு சொந்தமான பேக்கரி சென்றோம்’ என்று கூறியிருந்தால்… தூக்கம் இழந்திருக்க மாட்டான்.
ராட்னியோடு பழக வேண்டும் என்ற எண்ணத்தோடு பழகவில்லை. ஒதுங்கித் தான் போனாள். ஆனால் ‘நீ ஒதுங்கினால்.. நான் ஒதுங்க வேண்டுமா?’ என்ற எண்ணத்தோடு அவள் பின்னோடு துள்ளல் மாறாமல் வந்தவனை தள்ளி நிறுத்த முடியவில்லை.
கொப்பளிக்கும் குறும்பு பார்வையோடு, “நீ அழகு” என்றான். கடித்துத் துப்பிய செல்ல தமிழில், “நான் டோட்டலா ரெண்டே இயர் தான் மெட்ராஸ்-ல! அப்றம் இங்லாண்ட் ரிட்டர்ன் போயிடும்.. கருணை காட்டி பேசு டுல்சி” என்றான். அவனின் ரசனை இழைந்தோடும் ‘டுல்சி’யை கேட்கவே அவனோடு மணிக்கணக்காகப் பேசலாம்.
புன்னகை வழிந்த இன்முகமாய்.. துள்ளலோடு “ஹாய் டுல்சி.. உனக்கு யெல்லோ கலர் பிடிக்கும். எனக்கு உன்ன பிடிக்கும். ஸீ உனக்காக நான் யெல்லோ ஷர்ட் போட்டிருக்கு! பேசு டுல்சி.. ஆம் அ குட் பாய்.. பி மை ஃப்ரெண்ட்” என்று அவளையே சுற்றி வந்தான். என்ன சொன்னாலும் ‘தாங்கிக் கொள்வேன்’ என்ற மனமும்… துள்ளிக் குதிக்கும் இளமையும் எளிதில் அவளை வென்று விட.. இதோ இன்று ஒன்றாய் வெளியே சென்று வரும் அளவு பழக்கம்.
அவன் கார் ஓட்டும் லாவகமும்… வேகமும், மீண்டும் மீண்டும் அவனோடு செல்ல ஊக்குவித்தது. அதுவும் இரவு நேரம் தான் வேகமாக ஓட்ட முடியும் என்பதாலேயே இரவு நேரப் பயணம். அவளின் கனவு கார், ‘கான்டசா’வையே அவன் வைத்திருக்க.. அவளுக்கு அதில் உலா செய்வதில் படு குஷி! என்றும் தனியே சென்றதில்லை. அவனோடு சுருட்டையும் இவளோடு நிலாவோ, விஜியோ இருந்துகொண்டே இருப்பார்கள். அவனும் அவளைத் தனிமையில் சந்திக்கவெல்லாம் விருப்பம் காட்டவில்லை. அவள் கள்ளமில்லா சிரிப்பும் பேச்சுமே போதுமானதாக தோன்ற அதற்கு மேல் அவன் பேராசை கொள்ளவில்லை.
“நான் வேலை பார்க்கிற காலேஜ்-ல நீ ஸ்டுடென்ட்-ங்கரனாலேயோ.. நீ என்னை சார்ன்னு கூப்பிடுறானாலேயோ நீ என் ஸ்டெண்டும் இல்ல.. நான் உன் லெக்சரரும் இல்ல! நினைவில வச்சுக்க ட்ரை பண்ணு துளசி..” இரவு தூக்கமில்லாமல் புரண்டவள் மண்டையில் மூர்த்தியின் வார்த்தைகள் தான். ஏனோ மறு நாளே ராட்டையைப் பார்த்ததும் இவை எல்லாம் மறந்தும் போனது.
அன்று வரை கவனத்தில் பதியாத விஷயங்கள் மூர்த்தியின் கண்ணில் விழுந்தது. காலை கல்லூரிக்குள் சென்று கொண்டிருந்தவன் பார்வையில் விழுந்தாள் மரத்தடியில் கண்ணில் வந்த நீரை துடைத்து.. வயிற்றைப் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்த துளசி. அவளோடு இணைந்து சிரித்துக் கொண்டிருந்தது வேறு யாருமில்லை.. சாட்சாத் எட்வார்ட் ராட்னியே தான்!