மண்வாசம் 20 :
அவ்விடியல் பல விசேசங்களையும் விவகாரங்களையும் விவாகங்களையும் தன்னுள் கொண்டு வெகு விமர்சையாய் விடிந்தது.
நேரம் காலை ஐந்து மணி!
நீரை வாரி முகத்தில் இரைத்துக் கொண்டே இருந்தாள் அரசி. சத்தமின்றி தண்ணீரோடு கண்ணீரும் வெளியேறுவதால் அந்நீரில் வேறுபாடு தெரியாமல் இருந்தது.
நேற்றைய தினம் வேலுச்சாமியின் நினைவிடத்தில் நடந்தது அனைத்தும் அவள் நினைவை விட்டு நீங்க மறுத்தது. எதையும் வெளியே காட்டிக்கொள்ளாது இருந்தாலும் உள்ளுக்குள் அழுத்தம் அதிகரிக்க, கத்தி அழவேண்டும் போல் இருந்தது.
ஆனால் மனம்விட்டு அழவும் முடியவில்லை. தண்ணீரை திறந்துவிட்டு மனக் கொதிப்பை எல்லாம் அடக்கிக் கொண்டிருந்தாள்.
தன் காதலை அகத்தின் அடி ஆழத்தில் தள்ளி, அதன் மேல் இன்று நடக்க விருப்பது தன் உடன்பிறந்தவளின் திருமணம் என்பதை ஆழமாய் பதிய வைத்தாள் அரசி.
தன் மனதை திடப்படுத்திக்கொண்டு தனக்கான பட்டுப் புடவையை உடுத்தி அளவான ஒப்பனைகளுடன் அரசியாய் மாறி அருந்தமிழின் அறைக்குள் வர, அருந்தமிழ் அவ்வறையில் இல்லை.
அவளுக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த முகூர்த்த புடவையும் நகைகளும் அப்படியே இருக்க, எங்கு சென்றாள் என்று புரியாது பார்த்திருந்தாள் அரசி.
அதே நேரத்தில்!
மணமகள் அறையில் பட்டுப்புடவை உடுத்தி அங்கத்தில் ஆபரணங்கள் பூட்டி அலங்கார பூஷிதையாய் நின்றிருந்தாள் அரும்பு.
இதயம் என்னவோ நொடிக்கொரு முறை துடிக்கும் வேகத்தை கூட்டிக்கொண்டே போக, மெல்ல தன் அறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
அவளுக்கும் மேல் பரபரப்பாய் பதற்றமாய் சுற்றிக் கொண்டிருந்தனர் வேலாத்தாளும் சரோஜினியும். முத்துச்சாமி ஒருபுறம் அதிர்ந்து போய் நின்றிருக்க, சொந்த பந்தங்கள் அனைத்தும் ஆளாளுக்கு எதையோ தீவிரமாய் பேசிக் கொண்டிருக்க ஒன்றும் புரியவில்லை அரும்பிற்கு.
[the_ad id=”6605″]
“இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு கடுதாசி எழுதி வெச்சிட்டு மாப்ள மண்டபத்தை விட்டே ஓடிப் போய்ட்டானாம்”
ஒரு பெருசின் வாயிலாக அப்போது தான் அவள் செவிகளில் வந்து விழுந்தது அச்செய்தி. சந்தோஷத்தில் தலை கால் புரியாது பலமாய் ஒரு விசிலைப் போட்டுவிட்டாள் அரும்பு.
“ஆரு டா அது கலியாணம் நின்னதுக்கு விசில் அடிக்குறது” என்று ஒரு குரல் வரவும், உடனே தன் தலையை கவிழ்த்துக் கொண்டு மேடை அருகே வந்து நின்றாள்.
“எங்க தேடியும் மாப்ள மண்டபத்துல இல்லைங் மாமா” என மாரிமுத்து மூச்சிறைக்க வந்து முத்துச்சாமியிடம் தெரிவிக்க, அரும்பு மேடையில் வந்து நிற்பதைக் கண்டவர் தன் மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வேதனை அதிகரிக்க அவளையே பார்த்திருந்தார்.
“பாவி மவன் இப்படி பண்ணிப் போட்டானே. என்ர மக வாழ்க்கையே வீணா போச்சே. மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னா இனி எப்படி அவளுக்கு ஒரு நல்ல வாழ்கையை அமச்சுக் கொடுப்பேன்” என்ற அன்னையின் குரலில் அரும்பு அவர் புறம் பார்த்தாள்.
மரகதவள்ளியோடு குலசேகரன் நின்றிருக்க ஒரே குதூகலமாய் இருந்தது அரும்பிற்கு. இருந்தும் சோகமாய் தன் முகத்தை வைத்துக் கொண்டு வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்டு,
“என்ன சரோஜினி இதெல்லாம்?” என முத்துச்சாமி தன் உடன்பிறப்பிடம் குரல் கொடுக்க,
“நம்ம தேவராஜன் இப்படி பண்ணியிருக்க மாட்டானுங் அண்ணா. இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குதுங். எல்லாத்துக்கும் காரணம் இந்தா நிக்குறானே இவனா தான் இருக்கோணும்ங்” என குலசேகரன் அருகில் வந்தவர் அவன் சட்டையைப் பற்றி உலுக்கி,
“எங்கடா என்ர மவன், அவனை என்ன பண்ணுன?” என,
“கடுதாசி எழுதி வெச்சுட்டு ஓடிப்போனவனை பத்தி என்ரகிட்ட கேட்டா நான் என்ன என்ர மடியில இருந்தா எறக்கி விட முடியும்? எங்கக்காளுக்காக தான் பாக்குறேன் இல்லைனா நடக்குறதே வேற” என முறைக்க அவர் கை தானாய் அவனிடம் இருந்து விலகியது.
“கொஞ்சம் அமைதியா இரு சரோஜினி” என மனையாளை அடக்கிய ரத்தினசாமி,
“என்னைய மன்னிச்சிருங் மச்சா. தேவராஜன் இப்படி நம்ம குடும்ப மானத்தை வாங்குவான்னு நான் நெனச்சும் பாக்கலைங்” என முத்துச்சாமியிடம் கையெடுத்துக் கும்பிட, அவரோ பதிலற்று அரும்பையே பார்த்திருந்தார்.
“பொண்ணுக்கு என்ன குறையோ அதான் சொந்த அத்த மவனே விட்டுப்போட்டு ஓடிட்டான். மணமேடை வரைக்கும் வந்த பொண்ண இனி ஆரு கட்டுவா” என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வர,
‘இது கிளிமூக்கன் குரல் ஆச்சே’ என அரும்பு கூட்டத்தில் பார்க்க,
‘என்ர மூக்க ஒடச்சு மூணு பிளாஸ்டர் போட வெச்சவ தானடி நீ. நீ மறந்திருக்கலாம் ஆனா நான் மறக்க மாட்டேன்’ என அவன் அரும்பின் நிலையைப் பார்த்து பழிவாங்குவதாய் எண்ணி கேலி சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்தான்.
அவனது சொல்லை அரும்பு கண்டுகொள்ளவில்லை. ஆனால் முத்துச்சாமிக்கு தான் உள்ளுக்குள் பெரிதாய் வலித்தது.
“வார்த்தைய அளந்து பேசோணும். இல்லைனா பேசுறதுக்கு வாய் இருக்காது” என்று குலசேகரன் அனல் அடிக்கக் கூறியதில் அமைதியானான் சேதுராமன்.
“உனக்கென்னப்பா இத்தன ரோசம் வருது. அவ்வளவு அக்கறை இருந்தா உன்ர அக்கா மகளை நீயே கட்டிக்க வேண்டியது தானே” என இன்னொரு குரல் வர,
“அதானோ! பொண்ணுக்கு சேகரன் மொற மாமன் தானோ அவனுக்கில்லாத உரிமையா? நடந்தது நடந்து போச்சு சேகரனையே உன்ர மகளுக்கு முடிச்சுப் போடு முத்துச்சாமி. மணமேடை வரைக்கும் வந்த கல்யாணம் நின்னா வீண் பேச்சுக்கு உன்ர மக தான் ஆளாகோணும்” என்று பரவலாய் பேச்சுக்கள் எழ,
“ஆளாளுக்கு பேசுறத நிறுத்துங்க. மொதல்ல தேவராஜன் எங்க போனான்னு கண்டு பிடிக்குற வழிய பாருங்க. என்ர பேரனோடதேன் என்ர பேத்தி கண்ணாலம் நடக்கும். இதைய ஆரு நெனச்சாலும் மாத்த முடியாது” என்று வீராவேசமாய் பேசினார் வேலாத்தாள்.
நேரம் காலை ஐந்து முப்பது!
மாறனின் விழிச்சிறையில் குற்றவாளியாய் நின்றிருந்தாள் அருந்தமிழ்.
இரவெல்லாம் துளி உறக்கமின்றி இருந்த அருந்தமிழ் மாறனின் கைபேசி எண்ணையே பார்த்திருதாள். பின் இயந்திரம் போல் எழுந்து குளித்துவிட்டு சாதாரண புடவையை உடுத்திக்கொண்டு தன் ஈரக்கூந்தலை தளரப் பின்னியபடி வந்து அன்னையின் புகைப்படத்தின் முன்பு நின்றவள்,
“நான் முடிவு பண்ணிட்டேன்ங் ம்மா. நீங்க தான் இனி எனக்கு துணையா இருக்கோணும்” என வேண்டிவிட்டு, மாறனை கைபேசியில் அழைத்தாள்.
உடனே அவனை சந்திக்கவேண்டும் என்றும், செல்லாண்டியம்மன் கோவில் மண்டபத்தில் அவனுக்காக காத்திருப்பதாகவும் கூறிவிட்டு வைத்தவள் ஒரு முடிவுடன் தன் துவக்கத்தைத் தேடி வந்திருந்தாள்.
மாறனும் தாமதிக்காது தனது ஜீப்பில் அவ்விடம் வந்திருந்தான்.
“என்னாச்சுங்க தமிழ்? ஏன் இந்த நேரத்துல இங்க வரச் சொன்னீங்க” என,
“என்னைய மன்னிச்சிருங்க மாறன்” என விழிகள் மன்னிப்பை யாசிக்க சற்றும் தயங்காது அவன் முன் மண்டியிட்டாள்.
“என்ன பண்ணுறீங்க தமிழ்” என பின்னால் நகர,
“நான் பண்ணுன காரியத்துக்கு உங்களால என்னைய மன்னிக்க முடியாதுன்னு தெரியுங்க. நான் இப்போத்தான் என்ர மனசு சொல்லுறதை முழுசா கேட்டேன். அது நீங்க இல்லைனா நான் இல்லைன்னு சொல்லுது. நீங்க சொன்னதோட்டம் நான் உங்களை தேடி வந்துட்டேன். என்னைய மன்னிச்சு ஏத்துக்கோங்க மாறன்” என அவள் அழுகையோடு சொல்ல, அவள் செயலில் அவனுக்கு லேசாய் சிரிப்பு தான் வந்தது.
“என்ன டீச்சர் ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க. உங்க மேல எனக்கெப்போ கோபம் வந்திருக்கு. மன்னிக்குற அளுவுக்கு நீங்க எந்த தப்பும் செய்யல. எழுந்திருங்க மொதல்ல” என தோள்பற்றி தூக்கிவிட, அவள் விழிகள் தாழ்ந்திருக்க அவன் விழிகள் அவள் மேலிருந்தது.
“வாங்க, நானே உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என அழைக்க உடனே அவன் கையைப் பற்றியவள்,
“போலாம்ங்க ஆனா இப்படியே இல்ல” என்றாள் சன்னமாய்.
அவன் புரியாது பார்க்க,
“என்னைய கல்யாணம் பண்ணிக்குறீங்களா?” என்றிருந்தாள் உறுதியான வார்த்தைகளுடன் அவன் கண்களை நேராய் சந்தித்து.
சில நிமிடங்கள் மௌனமே ஆட்சி புரிய, அதை மெல்லத் துறந்து
“இப்போ தான் தப்பு பண்ணுறீங்க” என்றான் மாறன்.
அதில் பரிதவிப்பாய் அவனைப் பார்த்திருந்தாள் அருந்தமிழ். அவளையே பார்த்தபடி,
[the_ad id=”6605″]
“உங்க அப்பா சம்மதமும் இதுல முக்கியம்ங்க தமிழ். மொதல்ல அவருகிட்ட பேசுவோம். அவரு முன்னாடி தான் நம்ம கல்யாணம் நடக்கணும். இங்க இப்படி நடந்தா இது ரெண்டு குடும்பத்துக்கும் தலைகுனிவு. எதையும் நேர்மையா எதிர்கொள்ளணும்ங்க” என்றான்.
“நீங்க என்னைய விட்டுட மாட்டீங்களே?” என மீண்டும் தவிப்போடு அவன் தேவி கேட்க,
“நான் எப்போ உங்களை விட்டேன்? ஆனா நீங்க இப்போத்தான் என்னைய கெட்டியா பிடிச்சிருக்கீங்க” என அவள் கையை காண்பிக்க, உடனே விலக்கிக் கொண்டாள்.
“வாங்க போலாம் அங்க எல்லாரும் உங்களை தேடுவாங்க” என அழைக்க, அவனோடு நடந்தபடி
“நீங்க ஏன் முன்னாடியே எங்கப்பா கிட்ட வந்து பேசலை?” என குறைபட்டுக் கொண்டாள்.
“நீங்க உங்க முடிவுல உறுதியா இருந்திருந்தா உலகமே எதிர்த்தாலும் நான் உங்க அப்பாகிட்ட வந்து பேசியிருப்பேன்” என்றான்.
“நான் தான் சொன்னங்களே” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“என்ன சொன்னீங்க? கட்டவண்டி பிடிக்குமான்னு உங்கப்பா கேட்டா பிடிக்கும்னு சொல்றதா சொன்னீங்களே அதுவா?”
“ஹ்ம்ம். ஆனா அப்பா அப்படி கேக்கவே இல்லங்க” என பாவமாய் சொன்னாள்.
“சரி அவரு தான் கேக்கலை. நீங்க கட்டவண்டி தான் பிடிக்கும்னு சொல்லியிருக்க வேண்டியது தானே?”
“இதுவரைக்கும் அப்பா சொல்லை மீறி நான் பேசுனதே இல்லைங்க. நான் என்ர முடிவுல உறுதியா இருந்திருக்கோணும். அதான் நான் பண்ணுன பெரிய தப்பு. என்ர தங்கச்சி சொல்லுவா முடிவு எல்லாருக்கும் நல்லதை கொடுக்குறதா இருந்தா அந்த விசயத்தை ஆரம்பிக்க தயங்கக் கூடாதுன்னு. ஆனா அப்பா வருத்தப் படுவாருன்னு பயந்து பயந்தே அவருகிட்ட நம்ம விசயத்தை ஆரம்பிக்கவே இல்லங்க நான்” என்றவள்,
“இப்போ அப்பா ஒத்துக்கலைனா என்ன பண்ணுறதுங்க?” என்று கலக்கமாய் கேட்க,
“கவலைப் படாதீங்க. அவரு ஒத்துக்கலைனா அவர் ஒத்துக்குற வரைக்கும் காத்திருக்கலாம். நிச்சயம் உங்க விருப்பத்தை மீறி அவரு எதுவும் செய்ய மாட்டாரு” என்று அவளை ஜீப்பில் அமர்த்தி வண்டியை கிளப்பினான்.
வரும் போதே சாரதாவிற்கு விசயத்தை தெரிவிக்க, அவரும் கந்தசாமியோடு விரைந்து ஆறுச்சாமியின் இல்லம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
நேரம் காலை ஆறு மணி!
தேவராஜனை எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.
அப்போது மாரிமுத்துவின் கைபேசி இசைக்க அதை ஏற்றுப் பேசியவன் உடனே முத்துச்சாமியிடம் வந்து,
“மாமா! மோசம் போய்ட்டீங் மாமா. இந்த தேவராஜ பய நம்ம அரும்பை விட்டுப்புட்டு அவங்கூரு குஸ்தி வாத்தியார் புள்ளைக்கு கோவில்ல வெச்சு தாலி கட்டிப்புட்டான்ங் மாமா” என மைக் இல்லாமலே சத்தமாய் அனைவருக்கும் கேட்கும்படி கூற, இடிந்துபோனார் வேலாத்தாள்.
‘என்ர மவனாவது அந்த குஸ்தி வாத்தியார் புள்ளைய கட்டறதாவது’ என மகன் குணம் பற்றி உறுதியாய் அறிந்த சரோஜினி,
“என்னடா சொன்ன” என மாரிமுத்துவின் சட்டையை எட்டிப் பிடிக்க,
“அட நீவேற ஏன் சின்னம்மா ரத்தினசாமி சித்தப்பன் சட்டையை புடிக்குற மாறயே ஊருல இருக்குற அல்லாரு சட்டையையும் எட்டி எட்டிப் புடிக்குற” என அவர் கையை விலக்கியவன்,
“இதையப் பாரு” என அவன் கைபேசிக்கு வந்த காணொளியை எடுத்துக் காண்பித்தான். அதில் தேவராஜன், குஸ்தி வாத்தியார் மகளுக்கு தாலி கட்டுவதைக் கண்டு சரோஜினி பேரதிர்ச்சி அடைந்தார்.
விஷயம் தெரிந்ததும் இனி திருமணம் நடைபெறாது என்று தூரத்து உறவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மண்டபத்தில் இருந்து சென்றுகொள்ள நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்தனர்.
“அல்லாரும் சேந்து இப்படி என்ர மக வாழ்க்கைல விளையாடிட்டீங்களே” என மரகதம் மயங்கியதுபோல் சரிய, குலசேகரன் தன் அக்காளை தாங்கிப் பிடித்தான்.
முத்துச்சாமி தொலைவில் இருந்தபடி மனையாளை வேதனையோடு பார்த்தார். அரும்போ அவரிடம் வந்து,
“உங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தானுங் ப்பா எனக்கு விருப்பம் இல்லைனாலும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இப்போ பாருங் யார்யாரோ நாக்கு மேல பல்லு போட்டு என்னைய தப்பா பேசுறாங்க” என விசும்ப,
இப்படி செய்துவிட்டோமே என பெரிதாய் தவித்தார் முத்துச்சாமி.
“இதுவரைக்கும் நீங்க எது செஞ்சாலும் அது என்ர நல்லதுக்குன்னு தான் நெனைச்சிட்டு இருந்தேன்ங் ப்பா. அடி வாங்கினாலுங்கூட உங்க மேல எனக்கு வெறுப்பே வந்ததில்லைங். உங்கமேல அவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன்ங். உங்களை மீறி எங்களுக்கு எதுவும் தப்பா நடக்காதுன்னு நெனச்சேனுங். ஆனா நீங்க, இவங்க பேச்சை கேட்டுகிட்டு என்ர நம்பிக்கையை சுக்குநூறா ஒடச்சிட்டீங்க” என, அவர் வலியோடு பார்த்திருந்தார்.
“நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் நெனைக்கலைங் ப்பா. எனக்கு குலசேகரன் மாமாவை தான் பிடிக்கும்னு தெரிஞ்சிருந்தும் நீங்க இப்படி பண்ணியிருக்கக் கூடாது. நான் ஒன்னும் பொருள் இல்லைங்களே உங்க தங்கச்சி ஆசைப்பட்டதும் அப்படியே தூக்கிக் கொடுக்க” என, அவளோடு சேர்த்து அவர் கண்களும் கலங்கிப் போனது.
‘மீசையை போட்டுத் தாக்குறாய்யா எங்கக்கா மக’ எனப் பார்த்திருந்த குலசேகரன்,
“போதும்க்கா எந்திரி ஒருத்தரும் உன்னைய கண்டுக்கல” என அவன் மேல் சாய்ந்திருந்த மரகதத்தின் காதில் மெல்லக் கூற, மயக்கம் தெளிந்தவர் போல் தலையைப் பிடித்துக் கொண்டு நின்றார்.
“என்ரனால இந்த கல்யாணம் நிக்காதுனு நான் உங்களுக்கு வாக்கு கொடுத்தேனுங் ப்பா. நான் அதைய காப்பாத்தி மணமேடை வரைக்கும் வந்துட்டேன். இனி நான் என்ன பண்ணோனும்னு சொல்லுங்க அதையும் பண்ணுறேன்” என்று அரும்பு இறுதியாய் சொல்ல, மரகதம் முத்துச்சாமியை முறைத்துப் பார்க்க, அவர் தலை தானாய் தாழ்ந்து போனது.
“சட்டுபுட்டுன்னு அடுத்து ஆகவேண்டிய காரியங்கள பாருங்கப்பா. இது ஒரு பொண்ணோட வாழ்க்கை சம்பந்தப் பட்டது” என நெருங்கிய சொந்தங்கள் மீண்டும் ஆரம்பிக்க, பேச்சு இறுதியில் குலசேகரன் இடத்தில் வந்து நின்றது.
சரோஜினிக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“இன்னும் என்ன பாத்துட்டு இருக்கீங் அண்ணா? இவனை மொதல்ல அடிச்சு தொறத்துங். இவனை எல்லாம் ஆரம்பத்துலையே உள்ள விட்டிருக்கக் கூடாது. கல்யாண வேலையை கவனிக்குறேன்னு கல்யாணத்தையே நிறுத்தீட்டான் படுபாவி. எல்லாம் இவனும் இவன் அக்காளும் போட்ட திட்டாமா தான் இருக்கும்ங்” என முத்துச்சாமியிடம் கூறியபடி மரகதத்தை முறைக்க,
“போதும் நிறுத்துங் அத்தை. பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். நடக்குற எல்லாத்துக்கும் என்ர குலசேகரன் மாமனையே காரணம் காட்டுறது உங்களுக்கு என்ன புதுசா? உங்க மவன் பண்ணுற அயோக்கிய தனமெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா? திட்டம் போட்டு ஏமாத்துறது எல்லாம் என்ர அம்மாளுக்கு வராது. உங்கள நம்புனதுக்கு தான் என்ர அப்பா தலை குனிஞ்சு இந்த நெலைமைல நிக்குறாரு. இதுவரைக்கும் உங்கனால நாங்க அனுபவிச்சதே போதும். இனியும் எங்க குடும்ப விசயத்துல தலையிடாம தள்ளியே நில்லுங்க” என்று கையெடுத்து கும்பிட்டிருந்தாள் அரும்பு.
அவள் எதிர்த்து பேசியதில் முகம் சிவக்க,
“அடிக் கழுத ஆருகிட்ட என்ன பேசுற” என சரோஜினி கை ஓங்க, அதுவரை அமைதியாய் இருந்த முத்துச்சாமி வேகமாய் மகளருகில் வந்தார். அதற்குள் அரும்புக்கு குறுக்கே நின்ற குலசேகரன்,
“அவ மேல ஒரு அடி விழுந்துது பொறவு எதிர்ல நிக்குறது ஆரு என்னன்னு கூட பாக்க மாட்டேன்” என அழுத்தமாய் சொல்ல, உயர்த்திய கையை கீழே இறக்கினார் சரோஜினி.
குலசேகரனையே பார்த்திருந்தார் முத்துச்சாமி. சரோஜினி வீராப்பு குறையாது,
[the_ad id=”6605″]
“என்னடா பண்ணுவ? வெறும் பய உனக்கே இவ்வளவு இருந்தா அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு டா என்ர மவன். கலியாணம் ஆனா என்ன இப்போ, அந்த குஸ்தி வாத்தியார் மவளை தொறத்தி விட்டுப்புட்டு என்ர அண்ணன் மவளை தான் அவனுக்கு நான் கட்டி வைப்பேன்” என,
“அப்போத்தேன் உன்ர அண்ணன் சொத்து பூராவும் உனக்கே வரும். அதுக்குத்தேனோ இந்த ஆட்டம் ஆடுற?” என்றார் மரகதம்.
“பாத்து பேசுங். இது உங்க வாழ்க்கைக்கு நல்லதில்ல” என சரோஜினி திமிராய் மிரட்ட, அவரை கூர்மையாய் பார்த்த மரகதமோ
“இந்த வயசுல இனி நான் வாழாவெட்டியா ஆகப்போறனா? அப்படியே ஆனாலும் என்ர தம்பி எனக்கு ஒரு வாய் காஞ்சி ஊத்த மாட்டானா?” என்று சொல்ல, சரோஜினி அதிர்ந்துபோய் பார்க்க, முத்துச்சாமி மிரண்டுவிட்டார்.
வேலாத்தாவோ அனைத்தையும் பார்த்தபடி அமைதியாய் இருந்தார். தேவராஜன் இப்படி செய்வான் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
‘இவ ஓடி போயிருவாளோனு கண்கொத்தி பாம்போட்டம் பாத்திருந்தனே இப்படி அவன் ஓடி போவான்னு தெரியாம போச்சே’ என உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தார்.
சாது மிரண்டால் காடு பொல்லாது எனக் காண்பித்துக் கொண்டிருந்தார் மரகதம்.
“நீ பேசாம இரு க்கா” என குலசேகரன் சொல்ல,
“நீ பேசாம இருடா. இன்னிக்கு நான் ஒரு கை பாத்தே ஆகோனும். இதுநாள் வரைக்கும் அல்லாரு கிட்டையும் எத்தனை சொல்லு கேட்டிருப்பேன். குடும்ப மானம் காத்துல போயிருமேன்னு எல்லாத்துக்கும் வாய மூடிட்டு இருந்தேன் ஏன்? அரும்பை நல்லபடியா கரை சேர்க்கணும்னுதேன். இனியும் அமைதியா இருந்தா அவ வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிரும் போல” என்றவர் முத்துசாமியை பார்த்துக்கொண்டே,
“ஆளாளுக்கு என்ர மவ வாழ்க்கைல முடிவெடுத்தது போதும். இனி பெத்தவ நாஞ்சொல்லுறேன்” என்று ஆரம்பித்து,
“சேகரா! நீ என்ர சொல்லுக்கு கட்டுப்படுறது உண்மைனா போய் மேடைல உக்காரு” என்றார் தம்பியிடம்.
சில நொடிகள் தன் அக்காவையே பார்த்தவன் பின்,
“மாமா சம்மதம் இல்லாம நான் மேடை ஏறமாட்டேன் க்கா” என திட்டவட்டமாய் சொன்னான்.
‘பாருங்க என்ர மாமாவ’ என்பதாய் அரும்பும், ‘பாருங்க என்ர தம்பிய’ என்பதாய் மரகதமும் முத்துச்சாமியைப் பார்க்க, அவர் குலசேகரனையே பார்த்திருந்தார்.
யார் எப்படி என்று புரிந்து தான் இருந்தது முத்துச்சாமிக்கு. ஆற்றங்கரையில் வைத்தே குலசேகரனைப் பற்றி அறிந்துகொண்டார் அவர். இருந்தும் உடன்பிறப்பிற்கு கொடுத்த வாக்கை காக்கவேண்டி கல்யாணத்தை நடத்திமுடிக்க எண்ணினார்.
ஆனால் இன்றோ இக்கட்டான சூழ்நிலையில் பலரது உண்மை முகம் வெளிப்பட, அவர் செய்தது பெருந்தவறென்று புரிந்தது. வாய் திறந்து பேசக் கூட முடியாது ‘போ’ என குலசேகரனை நோக்கி கையை அசைக்க, அதன் பின்னரே அவன் மேடையில் சென்றமர்ந்தான்.
“ஏனுங் அம்மணி நீங்க சொன்ன மாப்ள இவரு தானுங்களா?” என அதுவரையில் நடப்பதை எல்லாம் ஓரமாய் நின்றபடி வேடிக்கை பார்த்திருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கேட்க, மெல்ல தலையசைத்தாள் அரும்பு.
“இப்போத்தானுங் ஜோடி நல்லா இருக்குது” என அவர்களைப் படம்பிடிக்க தயாராகினர்.