வேத மந்திரங்கள் ஓதப்பட, அக்னி சாட்சியாக அரும்பின் சங்குக் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனையாளாக்கிக் கொண்டான் குலசேகர பாண்டியன்.
அரும்பிற்கு சந்தோசம் அரும்ப, கண்களில் ஆனந்தக் கண்ணீரும் அரும்பியது. அவன் கையால் தன் கழுத்தில் ஏறிய பொன் தாலியை தொட்டுப் பார்த்து அவனையும் பார்க்க, அதரங்களில் அரும்பிய மென்னகையுடன் அவள் நேர் வகுட்டிலும் தாலியிலும் குங்குமம் இட்டான் அவள் மாமன்.
மரகதத்தின் முகத்தில் அத்தனை ஆனந்தம். அதனோடே,
“செல்லாண்டியம்மா! என்ர நம்பிக்கை வீண் போகலை” என தன் குலதெய்வத்திற்கு ஆயிரம் முறை நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“இப்போத்தான் எங்கக்கா மொகத்துல சிரிப்பையே பாக்க முடியுது” என அக்னியை வலம் வந்தபடி குலசேகரன் சொல்ல,
“அம்மாகிட்ட நான் சொல்லிருக்கேன் மாமா, உன்ன அழவெச்சு பாக்குறவங்க முன்னால ஒரு நாள் நீ சிரிப்ப, அவங்க அழுவாங்கன்னு. அதுதான் நடக்குது” என்றாள் அரும்பு.
வேலாத்தாள் மற்றும் சரோஜினிக்கு தங்களது திட்டம் நிறைவேறாது போனதில் என்ன செய்வதென்று புரியாது ஆளுக்கொரு மூலையில் இருந்தபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.
“எப்படி மாமா அந்த தேவாங்கை இங்கிருந்து கடத்துனீங்க?” என்று அரும்பு ஆச்சரியமாய் வினவ, மணமேடையில் இருந்தபடி மைக் மாரிமுத்துவை பார்த்தான் குலசேகரன்.
அவன் பார்வை அறிந்து அங்கிருந்தே கட்டை விரலை உயர்த்திக் கண்பித்து கண்ணடித்தான் அவன். அரும்பு தன் பதிலுக்கு காத்திருப்பது கண்டு,
“உங்கத்த மகன் பண்ணுற லீலைகள் எல்லாம் உங்கப்பனுக்கு வேணா தெரியாம இருக்கலாம், ஆனா இந்த ஊர் உலகத்துக்கே தெரியும். பெரிய இடமாச்சேன்னு அவனூர்க்காரங்க அல்லாரும் பொறுத்துக்கிட்டு இருந்திருக்காங்க. அவன் அப்பவும் அடங்கம ஒரு படி மேல போய் அந்த குஸ்தி வாத்தியார் பொண்ண கர்ப்பமாக்கியே போட்டான்” என, அதிர்ந்துபோய் பார்த்தாள் அரும்பு.
“வாத்தியார் சும்மா இருப்பாரா? உடனே உங்கத்த கிட்ட வந்து பேச, அது சொத்துபத்த பத்தியெல்லாம் கேவலமா பேசி அவரை அனுப்பி விட்டுப்போட்டு, வெவரமா உங்கப்பன் கிட்ட வந்து பேசி உன்னைய சம்பந்தம் பண்ணி போடுச்சு. இந்த விசயத்த மாரிமுத்து மூலமா வாத்தியார் காதுல நான் போட, அவரு உடனே முஸ்டிய தட்டிட்டு கிளம்பிருக்காரு”
“அப்பறம் என்னாச்சு மாமா”
“அப்பறம் என்னாகும். நம்ம மாரிமுத்து அவரை அடக்கி இப்படி ஒரு திட்டத்தை போட்டுக்கொடுக்க, வாத்தியாரும் அவரு ஆளுகளோட வந்து உன்ர அத்தை மவனை அலேக்கா தூக்கிட்டு போய் அவரு பொண்ணு கழுத்துலையே தாலி கட்ட வெச்சுப்புட்டாரு”
“அப்போ அந்த லெட்டரை தேவாங்கு எழுதலையா மாமா?”
“கடத்திட்டு போற நேரத்துல எவனாச்சும் உக்காந்து கடுதாசி எழுதுவானாடி? உங்கப்பனுக்கு சந்தேகம் வராம இருக்க அதுவும் மாரிமுத்து செஞ்ச வேலைதேன்”
“நம்ம மாரி அண்ணனுக்கு என்ர மேல எவ்வளவு பாசம்”
“அது உன்ர மேல இல்ல எலி. என்ர மேல. ஒரு காலத்துல அவங்கப்பன் அவன வீட்டுக்குள்ளார அடச்சு வெச்சிருந்தப்போ அவன் எழுதுன காதல் கடுதாசி எல்லாம் நான் ஜென்னல் வழியா வாங்கிட்டு போய் தபால் பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் பக்கத்தூரு பிரியாவ அவன் கட்டியிருப்பானா? அந்த நன்றிக் கடனுக்குத்தேன் உன்னைய என்ர தலையில கட்டிப் போட்டான் படுபாவி” என, அவனை ஒரு இடி இடித்தாள் அரும்பு.
குலசேகரன் சிரிக்க அரும்பு முறைக்க அதை அழகாய் கிளிக் செய்துகொண்டார் புகைப்படக் கலைஞர்.
அடுத்து மணமக்கள் வேலாத்தாளிடம் ஆசிர்வாதம் வாங்கச் செல்ல,
“இந்த வெறும் பயலுக்கு என்ர ஆசிர்வாதம் ஒரு கேடா” என வெறுப்பை உமிழ்ந்தார்.
அனைவரும் குலசேகரனை அவ்வாறு அடையாளப் படுத்துவது அரும்பின் இதயத்தை குத்திக் கிழித்து.
“நல்லாவே இருக்க மாட்டீங்க. நாசமாத்தான் போக போறீங்க” என்றார் சரோஜினியும் தன் அன்னையோடு சேர்ந்துகொண்டு.
‘பளார்’ என்று அவர் கன்னத்தில் ஒன்றை விட்டிருந்தார் ரத்தினசாமி. வாங்கிய அடியில் அதிர்ந்துபோய் பார்க்க,
“இதைய முன்னாலயே கொடுத்திருக்கோணும். நீ புள்ள வளத்தி வெச்ச லச்சனத்துக்கு உனக்கெல்லாம் வாய்பேசுறதுக்கே தகுதி இல்ல. ஒழுங்கா அந்த வாத்தியார் மவள நம்மூட்டு மருமகளா ஏத்துக்கோணும் சொல்லிப்புட்டேன். அங்கயும் வந்து தைய தக்கான்னு குதிச்சா பொளந்துபோடுவேன் பொளந்து. இங்கிருந்து உன்ர அண்ணன் குடியக் கெடுத்து போதும். இனி உன்ர பொறந்த வீட்டோட ஒட்டும் இல்ல ஒறவும் இல்ல. மீறி வெச்சுக்கிட்டா ஒரே அடியா இங்கயே வாழாவெட்டியா இருந்திரு. என்ர கூட வர்றதா இருந்தா வா” என சீற, வார்த்தையே வரவில்லை சரோஜினிக்கு.
“உங்க மனம்போல நல்லா இருங்க” என மணமக்களை வாழ்த்திவிட்டு ரத்தினசாமி சென்றுகொள்ள, வேகமாய் அவர் பின்னால் தன் அன்னையைப் பார்த்தபடி ஓட்டமும் நடையுமாய் சென்றார் சரோஜினி.
“இப்போ சந்தோசமா? மொத்தமா என்ர சொத்தை சுருட்டிட்டு போகத்தானோ அக்காளும் தம்பியும் இத்தனை நாளா திட்டம் போட்டீங்க. என்ர சொத்தை இந்த வெறும் பய அனுபவிக்க ஒருநாளும் நான் ஒத்துக்க மாட்டேன் முத்துச்சாமி” என மரகததையும் குலசேகரனையும் பார்த்தபடி வேலாத்தாள் தன் மகனிடம் பேச,
மரகதம் பொங்கிக்கொண்டு பதில் சொல்லும்முன்,
“வேண்டாம்ங் ஆத்தா என்ர ஊட்டுக்காரரை இனி என்ர முன்னாலையே மரியாதை இல்லாம பேசுனா அதைய பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்” என்ற அரும்பு,
“ஆருக்கு வேணும் உங்க சொத்து? உங்க சொத்துலை சல்லி பைசா எங்களுக்கு வேண்டாம். என்ர மாமன் இனி வாழ்க்கை பூரா என்ர கூட இருக்கைல உங்க சொத்து எனக்கெதுக்கு” என குலசேகரனின் கையோடு கைக்கோர்த்தாள்.
[the_ad id=”6605″]
“சோத்துக்கு வழியில்லாம இந்த வெறும் பயலோட என்ர வாசல்ல வந்து தான் நிக்கப் போறடி” என வேலாத்தாள் சொல்ல,
“நானும் என்ர மாமனும் இந்த ஊர் மெச்ச வாழ்ந்து காட்டுறமா இல்லையானு பாருங்க. அது வரைக்கும் உங்கூட்டு வாசப்படியை கூட மிதிக்க மாட்டேன்” என்றவள்,
“வாங் மாமா போலாம்” என குலசேகரன் கையை பிடித்துக் கொண்டு முத்துச்சாமியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல, மரகதமும் தன் மகளோடு சென்றார்.
செல்லும் யாரையும் தடுக்கக் கூட இல்லை முத்துச்சாமி. மகனாய் தமையனாய் இதுவரையில் வென்றவர் ஒரு தந்தையாய் கணவனாய் தோற்றுப்போய் நின்றிருந்தார்.
ஆறுச்சாமியின் இல்லமே அலங்கோலப்பட்டுக் கொண்டிருந்தது.
“கல்யாணப் பொண்ணை காணோம்” என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவ, நாயகி எல்லா இடங்களிலும் தமிழைத் தேட, முத்துலட்சுமி என்ன செய்வதென்று புரியாது ஆறுச்சாமியின் அருகில் நின்றிருந்தனர்.
“தமிழு போறத என்ர கண்ணால பாத்தேன்” என சூப் கடை சுப்பாத்தா தன்னுள் பதிவு செய்து வைத்திருந்த சிசிடிவி காட்சிகளை சொல்லவும், அதை நம்பாது ஆறுச்சாமி அரசியை தான் பார்த்தார்.
அவளும் தலையை தாழ்த்திக் கொள்ள, அதிர்ந்துபோனார்.
“இங்க இல்லைனா தேவி எங்க போனா? ஆருகோட இருக்கா”
“தமிழ் யாரோட இருப்பான்னு எனக்கு தெரியுங் மாமா” என்றான் விக்ரமன். அதில் அரசி அவனை ஆழமாய் பார்த்தாள்.
“என்ன கண்ணு சொல்லுற” என நாயகி கேட்க,
விக்ரமன் பதில் சொல்வதற்குள் மாறனின் ஜீப் அவர்களது வாசலில் வந்து நின்றது. மாறனோடு வந்திறங்கினாள் அருந்தமிழ் தேவி.
“தேவி! எங்கமா போய்ட்ட” என அவளருகே வந்த ஆறுச்சாமி மாறனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“சரி வா கண்ணு முகுர்த்தத்துக்கு நேரம் ஆகுது சீக்கிரம் தயாராகோணும்” என அழைக்க,
“உங்ககிட்ட தனியா பேசணும்ங் ப்பா” என்றாள்.
“அப்பறம் பேசிக்கலாங் கண்ணு இப்போ முகுர்த்தத்துக்கு….”
“இப்போவே பேசணும்ங் ப்பா” என்றுவிட, அவள் என்றும் இப்படி பிடிவாதம் செய்து பார்த்ததில்லை அவர். விஷயம் பெரிது என்று தோன்ற,
“அல்லாரும் இங்கயே இருங்க” என்றுவிட்டு அவளை மேலே அழைத்துச் சென்றார்.
மேல்மாடம் செல்லும் சில நொடிகளிலேயே அத்தனைக்கும் தன்னை தயார் செய்து கொண்டவள் அன்னையை துணைக்கு அழைத்தும் கொண்டாள்.
அவர்களோடு மிக முக்கியமானவர்கள் மட்டுமே சூழ்ந்திருக்க, தந்தை கேட்கும் முன்பே விசயத்தை சொல்லத் தொடங்கியிருந்தாள் பயத்தில்.
“நான் இவரை தான் மனசார விரும்புறேன்ங் ப்பா. இவரை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்ங்” என்று மாறனை காண்பிக்கவும், இடியிறங்கியது போல் இருந்தது ஆறுச்சாமிக்கு. அதற்கு மேல் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் அரசி.
“என்ன உளர்ற?” என்று சீற,
“என்னைய மன்னிச்சிருங் ப்பா” என அவர் காலில் விழுந்திருந்தாள் அருந்தமிழ்.
“ஊரறிய நிச்சயம் பண்ணி கல்யாணம் வரைக்கும் வந்தப்பறம் இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறியே தேவி. நம்ம விக்ரமனை நெனச்சு பாத்தையா?” என்றார்.
அரசி விக்ரமனைத் தான் பார்த்தாள். அவன் இயல்பாய் நின்றிருப்பது கண்டு, இது முன்னரே இவருக்குத் தெரிந்துள்ளதா என அவளுக்குள் சந்தேகம் எழுந்தது.
அருந்தமிழ் தலையை தாழ்த்திக் கொண்டு அமைதியாய் நின்றிருக்க,
“சொல்லு தேவி” என உறுமினார் வேங்கையரசியின் தந்தை.
“எனக்கே தெளிவா முடிவெடுக்க தெரியலைங் ப்பா. உங்ககிட்ட சொல்லோணும்னு வரும் போதெல்லாம் சரியான சூழ்நிலை அமையலைங். உங்க விருப்பப்படி நடக்கோணும்னு தான் அப்போ எல்லாத்தையும் தூக்கி போட்டேன். ஆனா உங்க விருப்பப்படி இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டா குற்ற உணர்ச்சிலையே நான் செத்துருவேனுங் ப்பா. விக்ரமன் மச்சானையும் நான் ஏமாத்துறதா தான் ஆகும்ங். யாருக்குமே உண்மையா இல்லாம எதுக்கு இந்த வாழ்க்கை” என கண்ணீர் சிந்த,
“தமிழ் மேல எந்த தப்பும் இல்லைங்க எல்லாத்துக்கும் சூழ்நிலை தான் காரணம்” என மாறன் குறுக்கிட,
“நான் என்ர மக கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் ஆறுச்சாமி.
“மாமா! அவ மனசுல என்ன இருக்குன்னு இப்போவாச்சும் உங்களுக்கு தெரிய வந்ததுங்களே. விருப்பப் பட்டவங்களை சேர்த்து வெய்யுங்க. அப்போ தான் எல்லார் வாழ்கையும் நல்லா இருக்கும். தமிழ் இதைய மறச்சு கல்யாணம் செய்திருந்தா அவளும் நிம்மதியா இருந்திருக்க மாட்டா, நானும் நிம்மதியா இருந்திருக்க மாட்டேன்” என்றான் விக்ரமன், இறுதி வரிகளில் அரசியைப் பார்த்தபடி.
என்ன செய்வதென்று தலையைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டார் ஆறுச்சாமி. அதற்குள் கந்தசாமியும் சராதாவும் அவ்விடம் வந்திருந்தனர்.
“மாறா! என்னடா இது” என கந்தசாமி மகனிடம் பாய, குறுக்கே வந்த அருந்தமிழ்,
“அவரு மேல எந்த தப்பும் இல்லைங்க. எல்லாம் என்ர மேல தான்” என்றாள் பாவமாய். அதில் கந்தசாமி, ஆறுச்சாமி இருவரும் அருந்தமிழைத் தான் பார்த்திருந்தனர்.
“இப்போ வந்து இப்படி நிக்குறது தப்புதேன்ங் அண்ணா. ஆனா பசங்க ஆசப்பட்டுட்டாங்க, பெரியவங்க நாம பாத்து தான் ஒரு நல்ல முடிவா எடுக்கோணும்” என சாரதா ஆறுச்சாமியிடம் பேச,
“சாரதா..!” என்ற கந்தசாமியின் குரலில் அமைதியானார்.
“மாறன் என்ர மகன்னு பாக்க வேண்டாம்ங். தமிழு உங்க மக. அவ வாழ்க்கைய பத்தி முடிவெடுக்க உங்கள தவற ஆருக்கும் உரிமை இல்லை. நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நானும் என்ர மகனும் கட்டுப்படுவோம்ங் ஆறுச்சாமி” என்றுவிட்டார் கந்தசாமி.
[the_ad id=”6605″]
மகன் செய்து வைத்திருக்கும் காரியத்தால் அதைத்தவிர வேறு எதையும் கூற முடியவில்லை அந்த பெரிய மனிதரால். அடுத்து ஆறுச்சாமி முத்துலட்சுமியைப் பார்க்க,
“அண்ணா! நமக்கு புள்ளைக சந்தோசம் தானுங் முக்கியம். அதுகள கஷ்டப்படுத்தி இந்த கலியாணம் நடக்க வேண்டாமுங். மாறன் தம்பிக்கே நம்ம தமிழை கொடுத்துடலாம். அதெல்லாம் சாரதா நல்லா பாத்துக்குவாங்க” என்றார் முத்துலட்சுமி.
“சரின்னு சொல்லு ஆறுச்சாமி” என மகனின் தோளை நாயகி பற்ற, அனைவரையும் ஒருமுறை பார்த்தவர் பின் ஒப்புதலாய் தலையசைத்தார்.
அனைவரும் கலந்துபேசி வெளியே வர, உற்றார் உறவினர் அனைவரும் ஒருவாராக விஷயம் என்னவென்பதை புரிந்து கொண்டனர். லோகநாதனும் பார்வையாளனாய் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான். ஐயர் வேறு ஹோமம் வளர்த்தக் காத்திருந்தார்.
ஆறுச்சாமிக்கு மனமே இல்லாது விக்ரமனைப் பார்த்தார். அவனும் அவரைத் தான் பார்த்தான்.
“என்னைய மன்னிச்சிரு ப்பா” என தயங்காது அவனை கையெடுத்துக் கும்பிட, பதறிப் போய் அவர் கைகளைப் பற்றியவன்,
“மாமா ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க. இதுல உங்க தப்பு எதுவும் இல்லைங் மாமா. எங்கப்பாவுக்கு கொடுத்த வாக்கை பத்தி யோசிக்காதீங்க. தமிழோட வாழ்க்கையை பத்தி மட்டும் யோசிங்க. சில வாக்குகளை நிறைவேத்தாம இருக்குறது தான் எல்லாருக்கும் நல்லது. இந்நேரம் அப்பா நம்மளோட இருந்திருந்தா அவரும் இதையே தான் சொல்லியிருப்பாருங்” என்றான்.
இதன் பின் இப்படி ஒரு விஷயம் இருப்பதே இப்போது தான் தெரிய வந்தது அரசிக்கு. வேலுச்சாமி மாமாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்றத் தான் தந்தை இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்றும் அதனால் தான் விக்ரமன் எதையும் தடுக்க முடியாது அமைதியாய் இருந்திருக்கிறான் என்று புரிந்தது.
அரசியைத் தான் பார்த்திருந்தான் லோகநாதன்.
‘இந்த திமிரு பிடிச்சவளை எப்படியாச்சும் பழி வாங்கோணும். வெளிநாட்டுல படிச்சவ எப்படியும் உள்ளூர்க்காரனை கட்ட மாட்டா. இவள ஊர் எல்லையவே தாண்ட விடக்கூடாது. அக்காவுக்கு பாத்தவன் தன்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு காலம் பூரா கண்கலங்கோணும்’ என எண்ணிய லோகநாதன்,
“மணமேடை வர வந்து கல்யாணம் நின்னு போனா விக்ரமனுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம். அதுக்கு ஆரு ஈடு கட்டப்போறா?” என்று குரல் கொடுத்தான். அரசி அவனை கூர்ந்து பார்க்க,
‘என்னையவே கன்னத்துல அறஞ்சவ தானடி நீ. இன்னிக்கு உன்னைய என்ன பண்ணுறேன்னு பாரு’ என நினைத்து உதட்டை வளைத்து சிரித்தவன்,
“அதான் இன்னொரு பொண்ணு இருக்குதல்ல அதைய விக்ரமனுக்கு கொடுக்கறது” என,
“அட நம்ம லோகநாதன் சொல்லுறதும் நியாயம் தானப்பா” என கூட்டத்தில் குரல்கள் எழ, அனைவரும் விக்ரமனையும் அரசியையும் முடிச்சிட்டனர்.
தன் நண்பனுக்கு கொடுத்த வாக்கை அரசி மூலம் காப்பாற்றியாக வேண்டும் என எண்ணிய ஆறுச்சாமி,
“வேலுச்சாமிக்கு கடைசி மூச்சிருக்குறப்போ உன்னைய என்ர மருமகனா ஆக்கிக்குவேன்னு வாக்கு கொடுத்திருந்தேன் விக்ரமா. அத்தனை சந்தோசம் அவன் மொகத்துல. உங்கப்பனுக்கு கொடுத்த வாக்கை மட்டும் காப்பாத்தாம போனா என்ர உசுரு என்ர உடல்ல தங்காது” என்றார் விக்ரமனின் கையைப் பற்றி.
அவர் அப்படிக் கூறியதும் தான் விக்ரமனுக்கு தெரிந்தது அருந்தமிழைக் குறிப்பிட்டு அவர் சொல்லவில்லை, பொதுவாய் தான் வாக்கு கொடுத்திருக்கிறார் என்று.
காலம் நம்மை வைத்து ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டில் அது நினைத்தால் மட்டுமே நம் கண்கட்டானது அவிழ்க்கப்படும். தன் கண்கட்டு அவிழ்ந்ததில் உள்ளுக்குள் மகிழ்ந்தான் விக்ரமன்.
“என்ர மூத்த மகளால அது நெறைவேறாம போயிருச்சு. என்ர இளைய மக தான் அதைய நெறைவேத்தோனும்னு இருந்திருக்கு. அரசியை கலியாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா ப்பா?” என்று ஆறுச்சாமி கேட்க, சில நொடிகள் அரசியைப் பார்த்த விக்ரமன்
“நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுல எனக்கு சம்மதங் மாமா” என்றான்.
அவன் தோள்களை அழுந்தப் பற்றியவர் கண்கள் கசிய அவனை அணைத்துக் கொண்டார். அவர் மனதில் வேலுச்சாமியின் முகமே வந்து போனது. பின் முத்துலட்சுமியிடம் வந்தவர்,
“லட்சுமி! அரசிய உன்ர மருமகளாக்கிக்க உனக்கு சம்மதமா?” என்று வினவ,
“என்னங் அண்ணா இப்படி கேக்குறீங்க. எனக்கு முழு சம்மதம்ங்” என்று சொல்லவும் தான் ஆறுச்சாமியின் மனம் குற்றவுணர்வின் பிடியில் இருந்து கொஞ்சம் விலகியது. அடுத்து தன் இளைய மகளைத் தான் அழைத்திருந்தார்.
“வேங்கை”
“அப்பா”
“போய் மணமேடைல உக்காரு”
“அப்பா…” என தயங்க,
“உன்ர பங்குக்கு நீயும் என்ர தலையில இடிய இறக்க போறயா? உனக்கும் உங்கக்காளோட்டம் ஏதாச்சும் நெனப்பிருந்தா இப்பவே சொல்லிப்போடு” என, அவள் விக்ரமனைப் பார்த்தாள்.
“உன்ர அக்கா என்ர மானம் மருவாதைய கொன்னுட்டா நீ என்னையவே கொன்னுபோடு” என, அருந்தமிழ் தந்தையைப் பார்த்தபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க
“அப்பா! என்ன பேச்சு பேசுறீங்?” என அவருக்கும் மேல் குரல் உயர்த்தினாள் அரசி.
பெருமூச்சோடு ஆறுச்சாமி நின்றிருக்க,
“சரிங் ப்பா. உங்க விருப்பப்படி நடக்கட்டுங். ஆனா அக்காவுக்கு கல்யாணம் முடியாம நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்றாள் அரசி.
அவள் விருப்பம் நிறைவேறும் நேரத்தில் கூட சுயநலமாய் முடிவெடுக்கவில்லை. அருந்தமிழைத் தான் பார்த்தாள். அவளும் அரசியையே தான் பார்த்திருந்தாள். அக்கா மீது கோபமோ வருத்தமோ அந்நேரத்தில் இல்லை. தன் அக்கா விருப்பட்ட வாழ்க்கை அவளுக்கு அமைந்தாக வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது அரசிக்கு.
“தேவி கலியாணத்த இன்னொரு நாள் வெச்சுக்கலாம் இப்போ நீ போய் மணமேடைல உக்காரு” என ஆறுச்சாமி சொல்ல,
“நான் உங்க முடிவை மீற மாட்டேங் ப்பா. என்னைய நெனச்சு நீங்க வருத்தப்பட வேண்டாம். அதே நேரத்துல என்ர முடிவுல இருந்தும் மாற மாட்டேங். விக்ரமன் மச்சானை முழு மனசோட நான் கல்யாணம் பண்ணிக்குறேன்ங் ஆனா அதுக்கு முன்னால என்ர அக்கா கல்யாணம் நடக்கோணும்” என்றாள் உறுதியாய்.
மாறனுக்கும் அவன் பெற்றோருக்கும் அருந்தமிழ் மற்றும் அரசியின் பந்தம் எப்படிப் பட்டது எனப் புரிந்தது. முத்துலட்சுமிக்கு அரசியின் வார்த்தையே போதுமானதாய் இருக்க, விக்ரமன் தான் கொஞ்சம் சிடுசிடுப்பாய் நின்றிருந்தான். அது எதற்கென்று புரியாத போதிலும் அவன் மீது தான் அரசியின் பார்வை படிந்திருந்தது.
“தாலிக்கு என்ன பண்ணுறது?” என நாயகி கேட்க,
“இந்தாங் ம்மா” என தன் மருமகளுக்கென செய்த பொன் தாலியை கையோடு கொண்டு வந்திருந்த சாரதா அதை எடுத்து நீட்டினார்.
கந்தசாமி தன் மனையாளை முறைக்க, மாறனோ இது சபையாய் மட்டும் இல்லாது போயிருந்தால் அன்னையை பாதத்தில் சாஸ்டாங்கமாய் விழுந்திருப்பான்.
மீதியை தன் கையில் எடுத்துக் கொண்ட ரங்கநாயகி நேராக ஐயரிடம் போய் நின்றார்.
“நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. நான் பூஜ சாமானெல்லாம் ஏற்பாடு பண்ணிடுறேன் கொஞ்ச நேரத்துலையே இன்னொரு முகூர்த்தம் வருது ரெண்டாவது கல்யாணத்தையும் முடிச்சு கொடுத்துட்டே போறேன்” என்றுவிட, நாயகி அவருக்கு உதவ ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டு
“தம்பி! வாங்க நல்ல நேரம் போய்ட்டு கெடக்கு” என மாறனை அழைத்து வந்து மணையில் அமரவைக்க, சாங்கியங்கள் போய்கொண்டிருந்த வேளையில் தமிழை விரைந்து தயார் செய்து அழைத்து வந்து அமர வைத்தாள் அரசி.
[the_ad id=”6605″]
அருந்தமிழ் தன் தந்தையையே பார்த்துக் கொண்டிருக்க,
“எல்லாம் சரியாகிடும் டீச்சர் கவலை படாதீங்க” என அவள் கையை அழுத்தப் பற்றினான் நன்மாறன்.
அதில் லேசாய் புன்னகைத்து,
“கொஞ்சம் கிட்ட வாங்களேன்” என அழைக்க, அவனும் பூமாலையை சரிசெய்வதுபோல் அவள் புறம் குனிய
“எனக்கு கட்டவண்டியை மட்டும் தான் பிடிக்கும். கடைசி வரைக்கும்” என்றாள் ஆத்மாத்தமாய்.
அதில் நிமிர்ந்து அவள் முகம் காண, கண்கள் கலங்கி இருந்தது.
ஊரில் நற்பெயரோடு வாழ்ந்து வரும் வயதான தம்பதியர் வந்து வாழ்த்தி அவர்கள் கையால் தாலி எடுத்துக் கொடுக்க, அவர்களை வணங்கிப் பெற்றுக் கொண்டான் மாறன்.
எல்லையற்ற காதலுடன் அவளருகில் வந்தவன் அவள் கண்களோடு கண்களை கலக்கவிட்டபடி அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட, அவன் கண்களையே பார்த்திருந்தாள் அருந்தமிழ்.
எதையெதையோ எண்ணி அவள் மனதில் காதலை நிலைக்கவிடவில்லை அவள். அனைத்தையும் அவளை மறக்கச்செய்து மாறனின் காதல் அவள் மனதை வென்று நிலைத்து நின்றிருக்கிறது இன்று.
அடுத்து அனைவரிடமும் ஆசி பெற, ஆறுச்சாமி அருந்தமிழின் முகத்தைக் கூட பார்க்கவில்லை.
சிறிது நேரத்தில் அரசியையும் விக்ரமனையும் மணையில் அமர்த்தியிருக்க, காண்பது யாவும் கனவா நினைவா என நம்பாமுடியாது பார்த்திருந்தாள் அரசி.
விக்ரமனின் கையில் லேசாய் கிள்ளினாள். அவன் முறைத்துப் பார்க்க,
“அப்போ கனவில்லையாங் மச்சா” என்றாள் ஆச்சர்யமாய் சொல்பவள் போல். அவன் திரும்பிக் கொள்ளவும் அவளும் அமைதியாய் அமர்ந்துகொண்டாள்.
தான் எதிர்பார்த்ததுபோல் நடப்பது கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தான் லோகநாதன். அந்நேரத்தில் எதேர்ச்சியாய் திரும்பிய அரசி அவனைக் கண்டுவிட, அவன் பார்வையோ அவளை பரிகசிப்பது போல் இருக்க,
“தேங்க்ஸ் டா லோகு” என்று இதழசைத்தாள்.
‘இவ என்னத்துக்கு நமக்கு நன்றி சொல்லுறா?’ எனப் புரியாது பார்த்திருந்தான் அவன்.
பின் முகூர்த்த நேரத்தில் பெரியோர் தாலி எடுத்துக் கொடுக்க, அவர்களை வணங்கிப் பெற்ற விக்ரமன் தன் தந்தையை மனதில் நினைத்து வணங்கிவிட்டு, அரசியைப் பார்த்தபடியே தாலியை அவள் கழுத்தருகே கொண்டுவர,
“லவ் யூ அத்தக்கருப்பா” என்றாள் அவன் கண்களில் அவள் பிம்பம் தெரிய.
அந்நேரம் அனைத்தும் பின்னுக்குப் போய் அவன் ‘கட்டைக்காரி’ மட்டுமே அவன் அகமெங்கும் வியாபித்திருந்தாள்.
தன்னை ஆளும் அரசியை தன் மனப்பிரதேசத்தின் பேரரசியாக்கி, அவள் நல்லாட்சி புரிய தன்னையே அவளுக்கு மெய்க்காப்பாளனாக்கிக் கொண்டான் விக்ரம பாண்டியன்.
அகசிம்மாசனத்தில் அவளவனை அமர்த்தி, தன்கையால் மணிமுடி தரித்து, அப்பாண்டிய அரசனுக்கு தன்னையே அவன் ஆளும் ராஜ்யமாய்க் கொடுத்தாள் வேங்கையரசி.
வாசம் வீசும்..!