மழைத்துளி 12
அமிர்தா பாதுகாத்திருந்த உடைகளை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்ட அனு தக்ஷனின் வரவுக்காக காத்திருந்தாள். அவனிடம் தனக்குத் தெரிந்ததை உடனேப் பகிர்ந்துக் கொள்ளும் ஆவல் இருந்தாலும் கணவனை வேலைக்கு இடையில் தொந்திரவு செய்ய விரும்பவில்லை. பயிற்சி மாணவி என்றாலும் அவளும் மருத்துவர் என்பதால் அவனை ஃபோனில் அழைக்கவில்லை.
மாலை ஏழு மணி போல் களைத்து போய் வீடு வந்த தக்ஷனிடம் முதலில் சொல்ல நினைத்தாலும் தோழியிடம் பேசி தெளிவுப்படுத்திக் கொண்டு கணவனிடம் பகிரலாம் என்ற முடிவுடன் அவனுக்கு உணவு எடுத்து வைத்தாள்.
குளித்து உடை மாற்றி வந்தவன் , ” கேண்டி … சாப்பிட்டுட்டு ஊட்டிக் கிளம்புவோமா , அப்பா என்னைய தொந்திரவு பண்றதா நினைச்சு ரொம்ப ஃபீல் பண்றார். இங்க இருந்தா நானும் ஹாஸ்பிடல் போகாம இருக்க மாட்டேன்… ஒரு ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வருவோமே….” என அனுவின் முகம் பார்க்க ,
“ம்… அத்தான் நீங்க இப்ப திருவனந்தரபுரம் ஃபிளைட் எப்போனு பாருங்க … எனக்கு கன்னியாகுமரி போய் உங்க தங்கச்சி முதுகுல ரெண்டு போடணும் போல இருக்கு … எனக்காக…. இல்ல நமக்காக இவ்வளவு செய்துருக்கா… அவள…. ” அனுவின் பேச்சைக் கேட்டு சத்தமாக சிரித்த தக்ஷன்..,
” உண்மை தான் .. நான் உங்க யாருக்கும் தெரியாம உன்னைய வாட்ச் பண்றேன்னு நினைச்சா … உன்னைய நான் மறக்காம இருக்க அவ சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் உருவாக்கி கொடுத்துருக்கா…. போகலாம்…. ஆனா உங்கண்ணா அந்த பிராஜக்ட் முடியுற வரை யாரையும் அங்க வர வேண்டாம்னு சொன்னாரே … நாம அதையும் பார்க்கணும் தானே…. ” என்று யோசிக்க ,
” … பிஸ்னஸ்ல எப்பவும் எங்கண்ணன் ஜெயிச்சுட்டுத் தான் இருப்பார். ஆனா வாழ்க்கைலயும் அவர் ஜெயிச்சுட்டார்னு தெரியனும் … அதுக்கு நான் நேர்ல போனாதான் முடியும் ….” என எண்ணமிட்ட அனு , அதை வெளியில் சொல்லாது,
“அண்ணா கிட்ட நான் பேசிக்கிறேன்… எனக்கு இப்ப அவளப் பார்த்தே ஆகணும். நீங்க டிக்கட் பாருங்க , நான் ரெடியாகுறேன் … நாம சர்பிரைஸா போறோம்… யாருக்கும் சொல்லாதீங்க அங்க போய் சொல்லிக்கலாம் … ” என்றவள் அதற்கு மேல் அவனை யோசிக்க விடாது கிளப்பி இதோ திருவனந்தபுரம் வந்து இறங்கியவர்கள் குமரியை நோக்கி வாடகை காரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
தனித்தனி அறைகளில் படுத்திருந்தாலும் , ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டு உறக்கமின்றி புரண்டுக் கொண்டிருந்த அமிர்தாவும் ஆதியும் அவரவர் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தனர்.
கடல் அலைகளின் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த இருவரின் காதுகளிலும் கார் ஹார்ன் சத்தம் கேட்க , அமிர்தா பால்கனி கதவை திறந்துப் பார்த்தாளென்றால் , ஆதிக்கு செக்யூரிட்டி இன்டர்காமில் அழைப்பு விடுக்க , கதவைத் திறந்து தடதடவென்று அவன் படியிருங்குவதைப் பார்த்த அமிர்தாவும் அவன் பின்னேயே ஓடினாள்.
கீழே வந்து வாசல் கதவை ஆதி திறக்கவும் ,
“அண்ணா” என்ற விளிப்போடு இரு தங்கை மார்களும் அவரவர் அண்ணனிடம் சென்றனர்.
நால்வருக்குமே பேச்சு வரவில்லை … ஆனால் காரணங்கள் தான் வேறு… வேறு. அனு மகிழ்ச்சியோடு வந்து அண்ணன் கைகளை கட்டிக் கொள்ள ,
அமிர்தா விழிகளில் ஒரு வித பயத்தை தேக்கி தக்ஷனை வந்து கட்டிக் கொண்டு அவன் முகம் பார்த்தாள். முதலில் இந்நேரம் வந்து நிற்கிறார்களே என்ற பதற்றத்தில் வந்து நின்ற ஆதியும் தங்கையின் மலர்ந்த முகத்தைப் பார்த்து நிம்மதியடைந்து ,
அனுவைத் தோளோடு அணைத்து ,
” வாங்க தக்ஷன்… திடீர்னு இந்நேரத்துல … பயந்தே போய்ட்டேன் …” என்று அவன் முகம் பார்க்க ,
தக்ஷனோ வெகு நாட்களுக்குப் பிறகு தங்கையின் ‘அண்ணா’ என்ற மெல்லிய அழைப்பிலயே தன்னை மறந்திருந்தான்.
கணவன் கேட்டும் பதில் சொல்லாமல் தன்னையே ப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணனைக் கண்டவள் , அவனை உலுக்கி ,
“அண்ணா… கேட்கிறாங்கல சொல்லுங்க…. ” என அவன் சட்டையைப் பற்றியவள்,
” அப்பா… அப் …. ” என பயப் பார்வை பார்த்தவளிடம் ”
கண்ணில் நீர் தேங்க தலையை இல்லை என்பதாக உலுக்கி , தொண்டை கரகரக்க,
“நீ என்கிட்ட இப்படி வாய் திறந்து பேசி எவ்வளவு நாளாச்சு ….. ஸ்பீச் தெரஃபி தரும் போதெல்லாம் உன்னால பேச முடியும் பேசுனு எத்தனை தடவை சொல்லியிருப்பேன்…. இப்ப நீ பேசுறது….” என்றவன் தங்கையிடமிருந்து பிரிந்து ஆதி அருகில் வந்தவன் ,
[the_ad id=”6605″]
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் வராது , ஆதியை தோளோடு இறுக அணைத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ் ஆதி… தேங்க்ஸ் … உங்களப் பார்த்ததும் தான் பேசவே ஆரம்பிச்சிருக்கா…”
ஆதி அருகில் நின்ற அனு இப்போது தோழியைக் கூர்ந்துப் பார்க்க , அமிர்தா முகத்தில் அதை ஆமோதிக்கும் பாவனை தான்.
“அப்போ நீ எங்கண்ணனப் பார்த்தா தான் வாயத் திறப்பேன்ற முடிவோட இருந்திருக்க ….. இப்படிக் கூட காதலிக்க முடியுமா டி… எண்ணமிட்ட அனுவை ஆதியின் குரல் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
அதற்குள் ஆதி தக்ஷனின் முதுகைத் தட்டி சமாதானம் செய்தவன்.அமிர்தாவிடம் ,
“ரிது … ரூம்ல ரெண்டு மூணு பேக் வச்சிருக்கேன் எடுத்துட்டு வா….” எனவும் அமிர்தா விழிக்க ,
“இல்ல உங்கண்ணன் ஏற்கனவே சொன்ன தேங்க்ஸ் கூட இதையும் சேர்த்து வைக்கதான்….” என்றதும் , அருகில் இருந்த அனு , அவன் தோளை அடித்து,
“அ…ண்ணா” எனச் சினுங்கினாள் என்றால் அமிர்தா கண்களும் முகமும் மலர அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
இப்போது அனைவரும் இலகுவான மனநிலைக்கு வர , அவர்களை வரவேற்று உள்ளே வந்தார்கள். தக்ஷன் அனுவைப் பார்த்துக் கொண்டு ,
“மாப்ள உங்க ப்ரோஃபஷனும் … என் ப்ரேஃபஷனும் நம்மள குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க விடாது… அப்பா இவங்க ரெண்டு பேரும் லீவு முடிஞ்சதும் காலேஜ் போகணும் எங்கயாவது வெளியூர் போய்ட்டு வாங்கனு சொன்னாங்க , அதுதான் ஒரு நாலு நாள் நாம லட்சத் தீவு போகலாம்னு ….. ” என்றுப் பேச ஆரம்பிக்க ,
அமிர்தா கடிகாரத்தைக் காட்டியவள், அவர்களை சைகை மூலமாக உறங்கலாம்…காலை எழுந்துப் பேசிக் கொள்ளலாம் என்று விட்டாள். எழுந்து சமையலறைப் போகப் போனவளைத் தடுத்த தக்ஷன் ,
“அம்மு .. ப்ளீஸ் டா பேச ட்ரைப் பண்ணிட்டே இரு … பழைய மாதிரி பேசிரலாம்… சைகை பண்ணினா அதேதான் பழகும் … ” என்றதும் அமிர்தா புன்னகையோடு கணவனைப் பார்த்தாள் .
அவனும் புன்னகைத்தவன் , “மாப்ள நானும் அதையே தான் சொல்லிட்டு இருக்கேன்….. சைகைல பேசாத வா….யால பேசுனு ” என்றவன் யாரும் அறியாமல் மனைவியைப் பார்த்து கண் சிமிட்ட , திடுக்கிட்ட அமிர்தா சமையலறையில் புகுந்துக் கொண்டாள்.
அவர்களும் இளந் தம்பதியரே என்பதால் ஆதியின் பேச்சும் அமிர்தாவின் சிவந்த முகமும் அவர்களுக்கும் வேறு செய்தி சொல்ல … அதைக் கண்டுக்கொள்ளாது ,
“பாப்பா எதுவும் வேண்டாம் மா… உங்களையும் டிஸ்டர்ப் பண்ணிட்டோம் … நீ சொன்ன மாதிரி காலைலப் பேசிக்கலாம் ” என தக்ஷன் சொன்னதும் மாடியிலிருந்த மற்றொரு படுக்கையறையை திறந்து அவர்கள் பொருட்களை வைத்த ஆதி , அவர்களிடம் விடைபெற்று அவனறைக்குள் நுழைய, அவனோடு கூடவே வந்த அமிர்தா அங்கேயே நின்றாள்.
திரும்பாமலயே பின்னால் வந்தவன் அவள் கைப் பிடித்து உள்ளே இழுக்க , தடுமாறி நிலைக்கு வந்தவளை கைகட்டி புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.
முகம் நிமிர்த்தி அவன் விழிகளைப் பார்க்க , பின் தரையைப் பார்க்க….என நின்றிருந்தவளிடம் ,
“சொல்லு… என்ன செய்யலாம் ….லட்சத்தீவுக்கு ஒரு புரோஜக்ட்க்காகப் போயிருக்கேன் … வாவ்….. ரொம்ப அழகான இடம் …அப்பலாம் நினைப்பேன் ..சிங்கிளா இங்க வரது வேஸ்ட்னு .. ஹனிமூன் போக நல்ல சாய்ஸ்…. எப்படி நாமளும் போ…. ஷ் …”
அமிர்தா அவன் வாயில் மெல்ல அடித்திருந்தாள் … அவன் வலியில் சத்தம் தரவும் பயந்து போய் அவன் உதட்டை தடவிக் கொடுக்க அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. சத்தமாக சிரிக்க ஆரம்பித்தவனது உதட்டை அழுத்தமாக மூடியவள் , வேகமாக ‘சிரிக்காதே’ என்பது போல் தலையசைத்து ,
” அண்ணன் இருக்காங்கங்க … சத்தமா சிரிக்காதீங்க … அதோட கடவுள் விஷயத்துல விளையாட்டாக் கூடப் பேசாதீங்க….. ப்ளீஸ்…. நான் உங்கள ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனோன்னு தோணுது…. நான் நாளைக்கே ஊருக்கு கிளம்பட்டுமா….” என மெல்ல சொன்னவளின் கண்களும் அந்த அறையின் மெல்லிய வெளிச்சத்தில் கெஞ்சின. மனைவியின் விழிகளில் மயங்கியவன் , தன் இரு காதுகளையும் பிடித்து தோப்புக்கரணம் போடுவது போல் செய்து , அவள் முன்முட்டிப் போட , பட்டென்று கையை எடுத்தவளது கரத்தை தன் கரங்களுக்குள் பொதிந்தவன் ,
“சாரி ….. தப்புதான் … இனி அப்படிப் பேசல … பட் இன்னொன்னும் நிஜம் தான்… நீ என்னை மனசளவுலயும் ,உடலௗலவுலயும் ரொம்பவே டிஸ்டர்ப் பண்றதான் ….. எப்படி இப்படி ஆனேன்னு புரியல…. பார்த்த நாலு நாள்ல காதல் வருமா தெரியாது….வொஃய்ப்ங்கிறதால இந்த உணர்வா தெரியல …. மே பீ… தங்கச்சி கல்யாணத்துலக் கூட நீ இருந்துருப்பனு நினைக்கிறேன்… ஆனா அப்ப யாரோ போலனு சைட் அடிச்சிருப்பேன்னு நினைக்கிறேன் …..” என்றவாறு வாய் விட்டு சிரிக்க ….
அமிர்தா முறைப்பது போல பாவனைக் காட்டவும் ,
” பட் இட் இஸ் ட்ரூ….எப்பவும் உன் நினைப்பாவே இருக்கு ….. எஸ் ஐ ஃபீல் லவ் …. ஐ லவ் யூ ரிதூ…. ” தன் முன் மண்டியிட்டு பேசிக் கொண்டிருந்தவனை விழிகள் மலரப் பார்த்துக் கொண்டிருந்த அமிர்தாவிற்கு காயம் கொண்ட இதயத்தை மலர் கொண்டு இதமாக வருடும் உணர்வே …
“நிறைய அலைச்சல் உடம்பு ரெஸ்ட் கேட்குது… ஆனா மனசு ம்ஹும்… இப்பவும் தூக்கமில்லாம புரண்டுட்டு இருக்கவும் தான் , அவங்க வந்ததும் கீழ இறங்கிட்டேன்.”ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்றவன்,
” உன்னைய ரொம்ப பிடிச்சிருக்குனும் … லவ் பண்றேன்னும் தெரிஞ்சுப் போச்சு …இனி நிம்மதியா இருப்பேன்…. அதுக்காக நீ ஊருக்கெல்லாம் போக வேண்டாம். யு நோ எனக்கு சுய கட்டுப்பாடு அதிகம் உண்டு .. எந்த நிலையிலும் ஒழுக்கம் தவறமாட்டேன்…. இவ்வளவு நாள் அப்படித்தானே இருந்தேன் .. என்ன திடீர்னு உன்னைய பக்கத்துலயேப் பார்க்கவும் கொஞ்சம் தடுமாறிட்டேன்.”ஆதியின் பேச்சில் அதுவரை வெட்கம் பூசியிருந்த அவள் முகம் ஒரு வித உணர்ச்சி மாற்றத்துக்குச் சென்றது.
“போ… போய் தூங்கு .. உங்கண்ணன்கிட்ட நான் பேசிக்கிறேன் …” என அவள் கையை விட , அவன் கை எடுத்ததுக்கூடத் தெரியாமல் அந்தரத்தில் கை நிற்க நின்றிருந்தவளைப் பார்த்து புன்னகைத்தவன் ,
” ஷாக் ஆகிட்டியா…. இருக்கும் இப்படி திடீர்னு லவ் சொல்லிட்டேன்னு யோசிக்கிறியா ….அதுதான் சொல்றாங்களே காதல் எப்போ எப்படி வந்ததுனு சொல்ல முடியாதுனு … அப்படி தான் எனக்கும் …
எப்பவும் நான் நானா இருக்கணும் , அதுதான் எனக்கு வரப்போறவளுக்கும்னு சொல்வேன் … ஆனா மச்சான் சொன்னான் , உனக்கும் காதல் வந்தா நிறைய புரியும்னு …. நிஜம் தான் நான் நானாவே இருக்க முடியல … மீட்டிங் முடிஞ்சதும் போன் பண்ணி , கல்யாண லைஃப் எப்படி போகுது… உங்கம்மா போல பொண்ணு வேணும்னு சொன்ன …. எந்தங்கச்சி பத்து பெர்சன்ட் தான் அத்தை போலனு கிண்டல் பண்றான்….
[the_ad id=”6605″]
ஒரு விரக்தி புன்னகையை தந்தவள், வெளியேற கதவருகே செல்ல , “ரிது ….” அவனழைப்பை உணர்ந்து தலையைத் திருப்ப ,
“ஆனா நான் இப்ப என்ன சொன்னேன் தெரியுமா ….”
” என்ன ” என விழிகளாலயே கேள்விக் கேட்டவளிடம்..,
“எங்கம்மா எங்கம்மாவா மட்டும் இருக்கட்டும் ….என் மனைவி … என் மனைவியா அவளோட தனித்துவங்களோட இருக்கட்டும்னு….”
” இப்படியே என்னை மயக்கிட்டு இருந்தா எப்படி….” வழக்கம் போல் அவனை நினைக்கையில் வரும் எண்ணமே இப்போதும் அவளுக்கு … மெல்லிய புன்னகையோடு அவனைப் பார்க்க …
“என்னையப் பிடிச்சிருக்குதுனு சொன்ன … அந்தப் பிடித்தம் … அதாவது …..உனக்கும் என்னைப் போல ஃபீலிங்க்ஸ்….ஐ மீன் அந்த பிடித்தத்துக்கு பேர் காதலா இருந்தா கட்டாயம் சொல்லு… ஐ ம் வெய்ட்டிங் … ”
புன்னகை மறையப் பார்க்க ,இப்போது அவளால் அங்கு நிற்கவே முடியாது என்பது தெளிவாகவும் ,அவனிடம் “சரி” என்பதாக தலையசைத்து விட்டு அவனறையை விட்டு வேகமாக வெளியேறினாள்.
அதே வேளையில் ஆதியும் அமிர்தாவும் அறையை விட்டு வெளியேறியதும் கதவை பூட்டிய அனுவை பின்னிருந்து இடையோடு அணைத்துக் கொண்ட தக்ஷன்.. அவள் கழுத்தில் முகம் வைத்து கன்னத்தோடு கன்னம் இழைத்து ,
” கேண்டி … இந்தக் கன்னத்தை அப்படியே கடிச்சு சாப்பிடணுங்கிறது எத்தனை வருஷ கனவு தெரியுமா … பட் … ” என்றவனிடருந்து மேலும் சத்தமும் இல்லை, அசைவும் இல்லை .
“அத்தான் ” என அனு மெல்ல அழைக்க , அவனிடமிருந்து பதிலில்லை என்றதும் , மெல்ல முகம் திருப்பிப் பார்க்க , கண்கள் மூடி அவள் கழுத்தில் சுகமான உறக்கத்தில் இருந்தான். அனுவிற்கு புன்னகையை அடக்க முடியவில்லை. நன்கு திரும்பவும் கண் விழித்த தக்ஷனை மெத்தை அருகே கைப் பிடித்து அழைத்து அமர வைத்தவள் ,
“அத்தான் உங்க கேண்டிய ஆசை தீர கடிச்சு சாப்பிடலாம் … காலையிலருந்து ரொம்ப அலைச்சல் ,முதல்ல ரெஸ்ட் எடுங்க , ஊட்டி போயிருந்தா நேரம் மிச்சம் தான் … ஆனா இப்ப உங்க தங்கச்சிய நேர்ல அண்ணனோட பார்த்ததும் வந்தது பாருங்க ஒரு திருப்தி … அது உங்களுக்கு கிடைக்கப் போய் தான் இப்ப இந்த தூக்கம் கூட…. ” மனைவியை நெருங்கி அணைத்துக் கொண்டவன் ,
” கேண்டி நிஜமாவே நான் லக்கி தான் .என்னைய எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கிற …., சரி வா இப்ப தூங்கலாம் … நாளை லருந்து ஒரு ரெண்டு மூணு நாள் தூங்க நேரமிருக்காது… நிறைய வேலை இருக்கு ….”
” இருக்கும் இருக்கும் …. ஆமா லட்சத்தீவு பிளான் எப்போ போட்டீங்க … சொல்லவே இல்ல.”
“நீ இங்க வரதுக்கு டிக்கெட் போட சொன்னதுமே ஒரு ஏஜென்ஸி மூலமா இதையும் புக் பண்ணிட்டேன் … ஆனா நாம் நாலு பேரும் ஒரே இடம் போனா அது ஃபேமிலி டூர் ஆகிடும் … சோ தனித் தனி தீவுல ‘ஹனிமூன் சூட்’ … நாளைக்கு சாயந்திரம் ஃபிளைட்…. எப்பூடி ….. ” என அவள் முகம் நெருங்க ,
“அடடா… ரொம்பத்தான் …. அண்ணன கேட்காம பண்ணிருக்கீங்க அவங்க என்ன முடிவு பண்ணிருக்காங்க தெரியல … முதல்ல உங்க தங்கச்சிக்கு நான் தர வேண்டியது நிறைய இருக்கு அதைக் கொடுத்துட்டுத் தான் அடுத்த வேலையே…. ” என யோசனைக்குப் போனவளின் கன்னத்தில் முத்தமிட்ட தக்ஷன், அவள் உதட்டை அளந்துக் கொண்டே
” கேண்டி …டையர்டெல்லாம் போச்சு ….ம் … ம் ” என கட்டிலைக் காட்டி சரசமாக கேட்க ,
வெட்கத்தோடு தலை குனிந்தவளிடம் , “அப்ப ‘ம்’ சொல்றியா” என நெருக்கத்தை அதிகப்படுத்த ,
அவர்களின் காதல் மொழிகள் நியாபகம் வர , அவனைப் படுக்கையில் தள்ளியவள் ,
” படுத்து தூங்குங்க , நான் வாஷ் ரூம் போய்ட்டு வந்து தூங்குறேன்…” என்றவள் புன்னகையோடு குளியலறையில் புகுந்துக் கொண்டாள்.
ஆதியின் அறையை விட்டு வெளியேறிய அமிர்தா அவள் தங்கியிருந்த அறையைத் திறக்கவுமே அடக்கி வைத்திருந்த கண்ணீர் வடியத் துவங்கியது. விடி விளக்கின் வெளிச்சத்தில் சுவற்றில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு அப்படி ஒரு அழுகை ,
“ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்.. ”
நாட்கள் அல்ல மாதங்கள் அல்ல பல வருடங்களாக மனதில் தேக்கி வைத்திருந்த நினைவுகள் இன்று ஆதியின் பேச்சில் மேலெழும்பி அப்படியொரு அழுகையைத் தந்தது.
“சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன் ….”
சுவற்றில் நிழலாக புன்னகைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள்…
[the_ad id=”6605″]
“காதல் வர அஞ்சு நாள் கூட அதிகம் … அஞ்சு செகன்ட் போதும்னு உங்களுக்கு தெரியலயா….
“குலதெய்வமெ எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அனைக்க வா தீயை அனைக்க வா
நீ பார்க்கும்பொது பனியாகிறேன்…”
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது ,
பால்கனி சென்றவள் சிறிது சத்தம் வர அழத் துவங்கி விட்டாள். மெல்ல மெல்ல அழுகை நின்று தேம்பிக் கொண்டே கடலை வெறித்துக் கொண்டிருந்தாள்.
குளியலறைச் சென்று வந்த அனு தக்ஷன், அலுப்பில் உடைக் கூட மாற்றாது உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து புன்னகைத்தவள் ,
“டையர்ட் போயிருச்சாமா … “எண்ணிக் கொண்டே அவளிருந்த அறையின் பால்கனி கதவைத் திறந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு வந்திருக்கிறாள். அப்போது இந்த பால்கனியிலிருந்து கடலை ரசித்திருக்கிறாள் . இப்போதும் விளக்கொளியில் ஜொலித்த வள்ளுவரைக் காண ஆசைப்பட்டு கைப் பிடிச்சுவர் அருகே வர , பக்கத்து அறையின் பால்கனியிலிருந்து சுவற்றில் தலை சாய்த்து நின்ற அமிர்தாவின் நிழல் கீழே பிரதிபலிக்கவும் அனுக் குழம்பிப் போனாள்.
” என்ன இவ இந்த ரூம்ல இருக்கா , இது அப்பா அம்மா வந்தா தங்குற ரூமாச்சே ” என யோசிக்கும் போதே அமிர்தாவின் தேம்பல் ஒலியும் கேட்டு விட , உடனே அவளிருந்த அறைக்குச் சென்றாள்.
தூவும் ……