செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 34
வாசலில் தென்னை ஓலை தோரணங்களுடன் குலை தள்ளிய செவ்வாழையும், வாழையோடு கட்டி வைக்கப்பட்ட செவ்விளநீர் குலையும், உலத்தியின்(கூந்தற்பனை) கூந்தலும் அது திருமண வீடு என்று பறைசாற்றியது.
திருமணத்திற்கு ஒரு நாள் முன் சத்யன் குடும்பம் வந்திறங்கியது. வீடு முழுவதுமே சொந்தங்களும் நண்பர் கூட்டமும் நிரம்பியிருக்க… எங்கும் பேச்சும் சிரிப்புமாய் வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது.
அன்று காலை குளத்தில் குளிக்க சத்யனும் மூர்த்தியும் சென்றனர். இரண்டு வருடத்திற்குப் பின் மீண்டும் இருவரும் ஒரே சமயத்தில் சொந்த மண்ணை மிதிப்பது இன்று தான்.
மூர்த்திக்கு சத்யன் மேல் கோபம். சத்யன் எதிர்பார்த்தது தான். இருக்காதா? சத்யன் திருமணத்திற்கு, மூர்த்தி வாரம் பத்து நாளுக்கு மேல் அவனோடு இருக்க… இவனோ ஒரு நாள் முன் வந்து அடுத்த நாளே போவதாகக் கூறினால்?
“எதுக்கு நீ வந்த? அட்சதை தூவ அங்க இருந்து குடும்பத்தை இழுத்துட்டு வந்தியாக்கும்? நீ கிளம்பு” எண்ணையில் இட்ட கடுகாய் மூர்த்தி வெடித்தான்.
“ஒரு கேஸ் டா.. ரெண்டு நாள்-ல நான் அங்க இருந்தே ஆகணும்!”
“ஏன் ஏதாவது போற உயிர பிடிச்சு வைக்க போறியா?”
மூர்த்தியை ஆழ்ந்து பார்த்தவன், “என் வாய்ல இருந்து வாங்கலனா தூக்கம் வராதே உனக்கு?”
“பச்… சொல்லு. நீ கிளம்பணுமா வேண்டாமான்னு நான் சொல்றேன். இங்க நீ முடிவெடுக்க முடியாது.”
“எல்லாம் அதே பழைய கதை தான். தொடர் கதையா போச்சு!
மினிஸ்டர் மெஹ்ராவோட அண்ணன் பொண்ணுன்னு தெரியாம, பதினேழு வயசு பொண்ண தூக்கிட்டானுங்க! பொண்ணு காணம்ன்னு ஊர் பூரா மூனு மாசம் தேடினோம். கிடக்கவே இல்ல. போன வாரம் எவனோ மினிஸ்டர் ஆளுங்கள்ல ஒருத்தன் அந்த பொண்ண ‘அங்க’ பார்த்திடவும் விஷயம் வெளிவந்துது.
அந்த பொண்ண தேடி இவனுங்க அங்க போகறதுக்கு முன்ன, எப்படியோ மோப்பம் பிடிச்சுட்டாங்க. பொண்ண கொன்னு, ஆக்ஸிடென்ட் மாதிரி செட் பண்ணிட்டானுங்க. நடு ரோட்டுல கிடந்தா.
பெரிய இடம்ன்னு தெரியமா எவனோ கடத்தி வித்துட்டு போய்டான். இவனுங்க தொழிலுக்கு புதுசு போல.. ஆழம் தெரியாம கால வச்சு சொதப்பிட்டானுங்க! அந்த மெஹ்ரா அவனுங்க கூட்டத்தோட அழிக்காம விட மாட்டன். இப்போ அது எங்க தலை மேல! ”
“ஏன்டா சலிச்சுக்கிற? ஒரு உயிர் டா..”
“ஆமா உயிர் தான். அவனுங்க வீட்டு பொண்ணுனா மட்டும் வலிக்குது? இவன மாதிரி அரசியல் வாதி தானே டா இவனுங்கள எல்லாம் வளர விட்டது? இந்த மெஹ்ரா நாய்க்கு எவ்வளவு கட்டிங் போகுது தெரியுமா? அவன் வளர்த்த நரி.. இன்னைக்கு அவன் கழுத்தில பல்ல பதிச்சிட்டு நிக்குது!”
“இந்த கூட்டத்த தானே ஒழிக்க போறதா சொல்லிட்டு இருந்த? என்ன ஆச்சு அந்த விஷயம்?”
“பச்! அது எல்லாம் கனவுக்கு மட்டும் தான் பொருந்தும்ன்னு தெரிஞ்சுகிட்டேன் மூர்த்தி. ஏகப்பட்ட பண புழக்கம் அங்க… மனுஷ உயிருக்கும், உணர்வுக்கும் மரியாதை இல்லாத இடம். ஒருத்தனை நசுக்கினா… அங்க இருந்து நாலு புதுசா முளைக்குது. வெறுத்து போச்சு! ஹோப் இல்லடா… முடியாதுன்னு ஒதுங்கிட்டேன்.
[the_ad id=”6605″]
வெறும் ஒண்ணு ரெண்டு இடத்துல நடக்குதுன்னா பரவால… முடிச்சிடலாம்! ஆனா இது ஏகப்பட்ட நெட்வர்க் டா. உள்ள போனா… போனது தான். வெளியில வர முடியாது. சாக்கடை இழுத்திடும். என் கை பூரா ரத்தக்கறை மட்டும் தான் இருக்கும். திரும்பி பார்த்தா என் வாழ்க்கை மட்டும் முடிஞ்சு இருக்கும்… அங்க ஒண்ணும் நடந்திருக்காது. கல்யாணம்.. பொண்டாட்டி, குழந்தன்னு ஆகிபோச்சு… அதுல மாட்ட முடியாது டா!
அங்க இருந்து தப்பிச்சு வர பொண்ணுங்க.. அங்க இருந்து காப்பாத்த படுற பொண்ணுங்க.. நோய் வந்து துரத்திவிட படுற பொண்ணுங்களுக்கு, அனு இப்போ ஒரு பௌண்டேஷன் கூட சேர்ந்து சேவை செய்யறா! நான் முடிஞ்சவரை அவளுக்கு ஹெல்பா இருக்கேன். ஏதோ எங்களால முடிஞ்சது.
இது சர்வதேச பிரச்சனை டா.. அவன் அவனுக்கு உணர்வு வரணும்.. இல்லன்னா இத ஒழிக்க முடியாது. நம்ம வீட்டில ஒரு தறுதலை உருவாகாம நாம தான் பார்த்துக்கணும். நம்ம வீட்டு பிள்ளைங்க விக்டிம் ஆகாம கவனமா இருக்கணும்!”
“சரி… நீ எதுக்கு கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பற? அத சொல்லு?”
“ஓ.. அதுவா? அந்த மெஹ்ரா.. அவனோட அடியாட்கள் மூலமா அந்த பொண்ணுக்கு அநியாயம் பண்ணினவங்கள ரெண்டு நாள்ல போட போறான். அரசியல்வாதியோட அடியாட்கள் மாட்டக் கூடாது…! சோ.. அது நடக்கும் போது கண்டும் காணாமலும் ஒதுங்கி நிக்கணும். நடுவில யாரும் தலையிட கூடாது. அந்த கண்டராவி வேலை பாக்க நான் அங்க இருந்தே ஆகணும்!”
“ம்ம்ஹூம்…! சரி.. மாட்டிகிட்டா?”
“ம்ம்.. அதுக்கு தான் நாங்க இருக்கோமே?” சலித்துக் கொண்டான்.
“இது நல்லா இருக்கே…” மூர்த்தி சிரிக்க..
“மறந்துட்டியா? நீ பண்ணி வச்ச வேலை எல்லாம்? அந்த கௌரவ நாலு தட்டு தட்டிட்டு விடுடான்னு சொன்னேன்.. கேட்டியா? செஞ்சது நீ.. ஆனா நீ எங்கேயாது பிக்சர்ல வந்தியா?”
“சரி விடு! பழச எதுக்கு கிளறிகிட்டு? நீ இருக்க வரைக்கும் என் மேல் தூசி பட விடுவியா என்ன? எல்லாம் அந்த தைரியம் தான். உன் சாதனையை எல்லாம் நினைச்சு நான் பெருமை பட்டா? நீ சலிச்சுக்கிற?”
“அட போ மூர்த்தி… நீ உங்க அக்கா பேச்ச கேட்டு நல்ல வேளை IPS படிக்க வரல! சட்டமாது? ஒழுங்காது..? எனக்கு மனசு விட்டு போச்சு. பேசாமா இங்க வந்து பனை ஏறலாம்!”
“அட போடா.. உன் பலம் தெரியாம உளறாதா! உன் புண்ணியத்தில எனக்கும் துளசிக்கும் கல்யாணம். நீ மட்டும் டிப்பார்மென்ட்ல இல்லன்னா அவனுங்கள போட்டு தள்ளிட்டு நான் கம்பி எண்ணிட்டு இருந்திருப்பேன்”
“விடு.. விடு.. பழைய சாக்கடை எதுக்கு? ஆமா.. இந்த ப்ரேம் பையன் எப்போ வரான்?”
“அவன் உன்ன விட பிஸி. என்கௌன்டர் பண்ணிட்டு பதில் சொல்லிட்டு அலையறானாம். இன்னைக்கு சாயங்காலம் வரதா சொன்னான்.”
“துளசிக்கு ட்ரீட்மென்ட் எப்படி போகுது?”
“துளசிக்கு மாத்திரை நிப்பாட்டி இருந்தாங்க. ஆனா கீழ விழுந்த அன்னைக்கு ஒரு ப்ளூ கலர் கார பார்த்துப் பயப்படவும்… மாத்திரை மருந்து கவுன்ஸ்லிங்… எல்லாம் திரும்பவும் ஒரு ரௌண்டு போய்ட்டு வந்தாச்சு! இப்போதைக்கு வெறும் கவுன்ஸ்லிங் மட்டும் தான். மூணு மாசத்துக்கு ஒரு தரம்.. ஒரு விசிட் அவ்வளவு தான். இப்போ அவளும் ஓக்கே தான். பயம் எல்லாம் இல்ல. அவளுக்குன்னு ஒரு குடும்பம், அதுவே தனி பலம் தான். இருக்கா… ரொம்ப நல்லா.. சந்தோஷமா இருக்கா.
மேடம் ஒரு வீராங்கனை இப்போ… நடு ராத்திரி செல்வனோட நம்ம மலைக்கு போயிருக்கான்னா பாரேன்..”
சத்யன், “துளசியா? நம்ம குட்டி செல்வனுக்கு எங்க இருந்து இத்தனை தைரியம்? கேக்கவே அவ்வளவு நிம்மதியா இருக்கு துளசியோட மாற்றம். முதல் நாள்.. அந்த ரோட்டில இடிச்சு விழுந்த பொண்ணு முகத்தில எவ்வளவு பயம்…! நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்த போது உயிர்ப்பே இல்லாத முகத்த பார்த்ததும் ‘இவ எப்படி வாழ போறா’ன்னு நினைச்சேன்.
ரெண்டு வருஷத்தில.. இது பெரிய ச்சேஞ் மூர்த்தி. ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்கன்னு தெரியல.. அதையே செய்ங்க! சந்தோஷமா இருங்க டா. வாழ்த்துக்கள் மச்சான்.
இது வரைக்கும் சரி தான். கல்யாணம் ஆனதும் இத செய்யாத அத செய்யாதன்னு.. டிபிகல் ஹஸ்பண்டா மாறாத..”
“காத்துக்கு ஏது டா வேலி..? அவ ஃப்ரீ ஸ்பிரிட். அத தடுத்தா அவ ஓஞ்சு போய்டுவா. ஆனா நான் சொல்லவந்தது அது இல்ல… நம்ம செல்லு தோட்டத்தில மூணு பேர் வந்திருக்காங்க..”, என்று ஆரம்பித்து, துளசி மூலமாகவும் ஊர் ஜனங்களின் மூலமாகவும் கேள்வி பட்டதையும் கூறி முடித்தான்.
“அது மணியோட ஃப்ரெண்ட்ஸ்சான்னு மணிட்ட விசாரி” என்றான் சத்யன் சரியாக.
மூர்த்தி, “என்ன சொல்ற? அவனுங்க சரி இல்ல டா. துளசியும் செல்வனும் ஓட.. பின்னாடியே துரத்தி இருக்காங்க. அவங்க நோக்கம் சரி இல்ல. அவங்க மணிக்கு ஃப்ரெண்ட்ஸ்சா?”
சத்யன், “அது எல்லாம் தெரியல. நீ மராட்டின்னு சொல்லவே சொன்னேன். மணிய ரெண்டு தரம் பார்த்துருக்கேன் பாம்பேல. அவன் கூட நின்ன ரெண்டும் எருமை மாதிரி தான் இருந்தாங்க. எங்க டா அவன்? அவன்ட்ட பேசணும்ன்னு நினைச்சேன். ஆறு மாசம் முன்ன வழியில பார்த்ததும் வீட்டுக்கு வர சொன்னேன்… அப்புறம் அவன பாக்கவே முடியல! அங்க என்ன பண்றான்? என்ன வேலை? ஏதாவது தெரியுமா?”
மணி கேள்வியாய் அவர்கள் முன் நிற்க.. வீட்டில் ஒருவருக்கும் அவனைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. பானு கை விரித்தார். கேள்விகளுக்கான பதிலைத் தரவேண்டியவனோ, நேற்று இரவு வரை வீட்டில் இருந்தவன் இன்று விடிந்த பின் இல்லை. எங்குச் சென்றானோ தெரியவில்லை. அவனை யாரும் தேடவும் இல்லை. அவன் எப்பொழுதுமே இப்படி தானே.. விட்டுவிட்டனர்.
யார் இருந்தால் என்ன.. யார் இல்லாமல் போனால் என்ன.. நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. சூரியன் அஸ்தமித்து.. சந்திரன் வானை நட்சத்திர கூட்டத்தோடு அலங்கரித்து.. நீ போ என்று அதை மறைத்து சூரியன் துயில் எழ.. அடுத்த நாளும் விடிந்தது.
மிகவும் மன ரம்மியமான விடியல் அது. இரண்டு மாத குழந்தை முதல் பல் விழுந்த பாட்டி வரை அனைவருமே புத்தம் புது மலராய் மிளிர… கதையின் நாயகன் நாயகி தோள் உரசும் துரத்தில்.
மனங்கள் பின்னிக்கொண்டதால் இருக்கலாம்.. இருவரும் அகமோடு முகமும் மலர்ந்து வெண்பட்டில் வசீகரித்தனர். மூர்த்தி – துளசியின் திருமண நாள்!
கம்பீரத்தின் முழு உருவமாய் மூர்த்தியும்… அழகின் மொத்த பெட்டகமாய் அவன் துளசியும், அருகருகே.
பெருசுகளின் சிரிப்பொலிகள் நடுவே நாதஸ்வரம் ஒலிக்க…
பட்டுத்துணி சரசரக்க… சிறிசுகள் ஓடி ஆட,
நகைகள் மின்ன அதற்கு நிகராய் மின்னும் கண்களோடு மங்கையர் உலா வர..
இது தான் சமயம் என்று மீசை வைத்த இளவட்டுகள் கண் மலர்ந்து நிற்கும் காட்சி எல்லாம் கவிதையே.
கையிலிருந்த அட்சதையோடு அனைவருமே எழுந்து நிற்க… அந்த அழகான, அனைவராலும் எதிர்பார்த்த நிமிடம் வந்தது.
இரு மனங்களும் ஏகாந்தத்தில் மிதக்க..
இரு கண்களும் மோத.. ‘நான் உனக்கு மட்டும் தான்’ என்ற மௌனமான காதல் மொழி விழிவழி கடத்தப்பட்டு கொண்டிருந்தது.
கண்கள் மோதி மின்னல் எழ… மனம் கள்ளுண்டு ஆனந்த கூப்பாடு போட.. கைசேரும் இந்த நாளுக்கு தானே எத்தனை கனவு. எவ்வளவு காத்திருப்பு.
மனம் தேடிய, அதன் தப்பிய தாளம் எதிரில். அவள் இதயம் ‘லப்’ என.. அவனது ‘டப்’ என்று ரிதத்தை பூர்த்தி செய்தது. இருவருக்கு மட்டுமே கேட்டது அந்த புல்லாங்குழலின் இசை.
மூர்த்தி விரும்பியது போல், துளசி முகம் பார்த்து கண் மூடலாம்.. பட்டு மேனியைக் கட்டி அணைத்து உறங்கலாம். மனைவி முகம் பார்த்து விழிக்கலாம். அவள் வாசம் அவன் மேல் என்றும். வானத்தில் எழும் வானவில்லின் வர்ணஜாலம் அவன் இதயத்தில்.
கட்டி மேளம் முழங்க.. மங்கள நாதஸ்வரம் இசைக்க..
மூர்த்தியின் கை பெண்ணவள் கழுத்தை உராய.. விரல்கள் தன்னவள் பிடரியைத் தீண்ட.. பெண் உயிர் வரை அந்த மின்சார சாரல், இனிமையாய் தீண்ட.. அட்சதை, மழையாய் அவர்கள் தலை வருடி வாழ்த்த..
கணவன்-மனைவி என்ற அழகான வாழ்நாள் பந்தத்திற்குள் துளசியும் மூர்த்தியும் கால் பதிக்க, தங்கத் தாலியின் கொக்கியை இட்டு வாழ்வைத் துடங்கியிருந்தான், மூர்த்தி.
பானுவும், செல்வனும் பெண் வீட்டாராய் மாற.. எல்லா வித சம்பிரதாயங்களோடு வீட்டினுள் நுழைந்தவள் மனதில் அப்படி ஒரு நிம்மதி.
தாய் ஸ்தானத்தில் பானுவும், எழில் சித்தியும் துளசியோடே நின்று அனைத்தையும் கவனிக்க… செல்வன், உடன் பிறப்பாய் மாறிப் போனான். எங்குமே எதிலுமே குறை வைக்கவில்லை பெண்ணிற்கு. ‘எனக்கும் அம்மா அப்பா இருந்திருந்தா..’ அப்படியான எண்ணம் ஒரு முறை கூட துளசி மனதில் எழவில்லை என்பது பொறிக்கப்படாத உண்மை.
பால் பழம் என ஆரம்பித்து, முறைப்படி ஒவ்வொரு சாங்கியம் நடந்து முடிய மதியம் ஆனது.
வயிறு சத்தம் போட ஆரம்பித்தபின் தான் மாப்பிள்ளை பெண்ணுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தனர்.
பந்தி விசாரிப்புக்காரர்களாய் செல்வனும் கூட்டாளிகளும் சுற்றி வந்தனர். அனைவரும் வயிறார உண்டு, வாழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டுக்காரர்கள் மிகுந்த கவனம் செலுத்துவது தெரிந்தது. கேட்டுக் கேட்டு உபசரித்துக் கொண்டிருந்தான் செல்வன்.
[the_ad id=”6605″]
திருமண வீட்டு உணவு மிகுந்த சுவையுடன் இருந்திருக்க வேண்டும்… அதனாலேயே உண்டு முடித்துச் சென்றவர்கள் முகத்தில் அலாதி திருப்தி. ஆண்டுகள் பல கழிந்தாலும், சாப்பாடும், உபசரிப்பும் வந்தவர் நினைவில் பதிந்து போகும் என்பதில் ஐயமில்லை.
தலை வாழையிட்டு.. அவியல், துவையல், நார்த்தங்காய் தீயல், இஞ்சி தீயல், முட்டைகோஸ் துவரன், வாழக்காய் பொரியல், பாசிப்பருப்புத் தேங்காய்ப் பொரியல், பீட்ரூட் பச்சடி, வெள்ளரி பச்சடி, பழத் தொக்கு, மாங்காய் ஊறுகாய், ஏத்தன் வறுவல் என பன்னிரண்டு வகை கூட்டு வகை வரவுமே பெண் கண் விரிய ஆரம்பித்தது. குமரியில் கல்யாண சாப்பாடு என்றாலே 5, 9, 12 என்ற எண்ணிக்கையில் தான் கூட்டு வகையின் எண்ணிக்கை இருக்கும்.
அதுவும் இயற்கை முறையில் பக்குமாக விளைந்த காயும்.. சுத்தமான தேங்காய் எண்ணையும் கொண்டு செய்யப்படும் உணவின் தரமும் சுவையும் அதிகம். ஆண்டும் சென்றாலும் உணவின் ருசி மறக்காது.
“என்ன துளசி மா.. அசையாம உக்காந்து இருக்க?”
“இவ்வளவா?” கண் விரித்தாள்.
“எல்லாம் கொஞ்சமா தானே வச்சிருக்கான்.. பொறுமையா சாப்பிடு.. எல்லாமே ஒவ்வோரு ருசி..” என்றவன் அவன் இலையில் மூழ்கிப் போனான்.
ஒவ்வொன்றாய் தொட்டு சுவைக்க.. அதன் ருசியில் கண் மூட… உமிழ் நீர் பஞ்சமில்லாமல் சுரந்தது.
ரசனையோடு சாப்பிட ஆரம்பித்தவள் எதிரில் அமர்ந்திருந்தவரை பார்க்கவும் விழி இன்னும் பெரிதாய் விரிந்தது.
“உன் இலைய பார்த்து சாப்பிடு துளசி” இலைக்கும் வாய்க்கும் நடுவே அந்தரத்தில் அவள் கை நிற்க, மூர்த்தி மெல்ல அவன் கால் முட்டியால் அவள் முட்டியை தட்டிவிட்டுக் கூற, நல்ல பிள்ளையாய் இடது கையை கண் எதிரில் வைத்துக்கொண்டு உணவில் கவனம் செலுத்த நினைத்தாலும் விரலின் இடுக்கின் வழி எதிரில் இருந்தவரை தான் பார்த்தாள்.
ஒவ்வொரு கூட்டாய் வரவர அவரும் வந்த வேகத்தில் ஒவ்வொன்றையும் விழுங்க.. விரல் இடுக்கின் துவாரம் பெரிதானது. இத்தனை வேகமாய் உண்டால் இவருக்கு ருசி எப்படித் தெரியும் என்பது அவளின் பெருத்த சந்தேகம்.
எதிரில் இருப்பவர் சாப்பிடுவதைப் பார்த்தவளுக்கு வயிறு நிறைந்து போனது. கைக்கும் வாய்க்கும் உணவு சென்ற வேகம் அப்படி. பசி ருசி அறியாது பெண்ணே!
தலைவாழை இலையை நிறைத்த 12 கூட்டுகளே அதிகம் என்று நினைத்து முடிக்கும் முன் அரிசிச் சோறு, நெய் மணக்கப் பருப்புக் குழம்பு, சாம்பார், வத்தல் குழம்பு, புளிசேரி, பாயசம், பப்படம், வாழைப்பழம், ரசம், மோர் என்று ஒன்று மாற்றி ஒன்று வந்துகொண்டே இருக்க.. முதல் முறை துளசி விழித்தான்.
ஒவ்வொரு வகையாய் முடித்து.. பாயசம் வரவும், எதிரில் இருப்பவர், இலையில் பாயசம் ஊற்றி பப்படத்தை உடைத்துப் போட்டு வாழைப்பழத்தைப் பிசையவும் அவள் மூர்த்தியைத் தான் பார்த்தாள். அவனும் அதையே செய்ய.. ‘இந்த ஊர் வழக்கம் போல..’ என்று அவள் நினைக்க..
“அந்த ஆளுக்கு வயிறு வலிக்க போறது நிச்சயம். என்னை விட்டுடு துளசி. நான் பிழைச்சு போறேன்..” இலையிலிருந்து முகத்தை உயர்த்தாமல் மூர்த்தி பேச முதலில் அவளுக்கு விளங்கவில்லை. விளங்கியபின்னும் முறைக்க முடியவில்லை.. சிரிப்பு தான் வந்தது.
“போங்க மூர்த்தி சார்..” சத்தமே இல்லாமல் வாய் முணுமுணுத்தது. மூர்த்தி இயல்பாகத் தெரிய.. அவளிடம் தான் ஏதோ ஒரு புதுமையான உணர்வு. மூர்த்தியிடமே கூச்சம் தோன்றியது பெண்ணிற்கு.
“போதும் சைட் அடிச்சது. கிடைக்கும் போது சாப்பிடு துளசி.. அப்புறம் பசிக்குதுன்னு வந்து நிக்காத.” என்றான்.
ஒருவர் கவனத்தையும் கவராமல் இலையை பார்த்துக்கொண்டே அவன் பேச அவளும் தலை நிமிர்த்தாமலே.. மூர்த்தியின் இலையையும் எதிர் ஆளையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இருக்க… உணவு எங்கே இறங்குவது?
[the_ad id=”6605″]
அது என்னவோ அனைவர் திருமண விழாவிலும் உணவை சுவைக்க முடிந்த நமக்கு, நம் திருமணம் என்று வரும் போது… அந்த உணவின் சுவை தெரிவதில்லை.. அதீத பசி இருந்தாலும் உணவு தொண்டையைத் தாண்டி கீழே இறங்குவதில்லை. உணவைக் கூச்ச நாசமே இல்லாமல் ரசித்து ருசிக்கும் நம் துளசியும் அதே மேக் தான் போலும்! ஆண்பிள்ளைகள் இதிலும் தனி தான்! மூர்த்தி எந்த தயக்கமும் இன்றி மூக்கு முட்ட உண்டு முடித்தான். அவனுக்கு என்ன… அவன் ஆசை மனைவியின் கை பிடித்தாயிற்று. உள்ளம் நிறைந்து போனது.. வயிறை ஏன் சும்மா விட வேண்டும் என்று அதையும் நிறைத்துவிட்டான்.
பரிமாற வந்தவனிடன்.. “வேண்டாம்.. போதும்.. போதும்…” என்று கூறி நாலு நேந்திரங்காய் சிப்ஸ்சும், பொரியல் வகைகளையும்.. நாலு வாய் உணவையும் உள்ளே தள்ளித் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மூர்த்தி முடிக்கும் போது முடித்துக் கொண்டு எழவும் செல்வன் வந்தான், “என்ன மைனி சாப்பிடுற நீ? எதாவது தனியா எடுத்திட்டு வரட்டா? சிப்ஸ்.. இன்னும் வேணுமா?” என்று கேட்டுக்கொண்டே அவள் பின்னால் வரவும்..
“பசிச்சா உன் கிட்ட தான் வருவேன் தம்பி. இப்போ ஒண்ணும் வேண்டாம். நீ போய் மத்தவங்கள கவனி செல்வா..” என்றாள் கிசுகிசுபாய்.
“அட-பிரதமன் ஏன் சாப்பிடல? எல்லா பாயசத்தையும் வேண்டாம் சொல்லிட்ட? உனக்கு கண்டிப்பா அந்த டேஸ்ட் பிடிக்கும் மைனி..” விடாமல் அவள் பின்னோடே வந்தான். அவள் ஒன்றும் ஒழுங்காக உண்ணவில்லையே என்ற ஆதங்கம்.
“என்னால இலையில ஊத்தி பாயசத்த எல்லார் முன்னாலையும் நக்கி சாப்பிட முடியாது செல்வா! இப்போ வேண்டாம்… அப்புறம் கப்புல தா.. இப்போ நீ போ. என் பின்னாடியே வராத, உங்கண்ணா.. மலை ஏறிடுவார். ஓடு” என்று அவனை விரட்டி விட்டாள்.
சத்தமில்லாமல் இருவரும் பேசினாலும், மூர்த்தி காதில் இருவரின் உரிமை பேச்சும் மரியாதையற்ற அழைப்பும் கேட்கத்தான் செய்தது. ஏனோ மனதிற்குள் ஓர் இதம் பரவியது. எங்கிருந்தாலும் செல்வனின் பார்வை அவள் மேல் இருப்பது அப்படி ஒரு நிம்மதியைக் கொடுத்தது. மனைவிக்கு வீட்டினரைப் பிடிக்கவேண்டும்.. வீட்டாட்களுக்குப் புதிதாய் வருபவளைப் படிக்கவேண்டும் என்ற மனவுளச்சல் ஆண்கள் மட்டுமே அறிந்தது. அந்த பிரச்சினை மூர்த்திக்கு இல்லை.
ஒருவழியாய் பந்தி முடிந்து.. வீட்டில், பானுவின் மூத்தமகனைத் தவிர, வீட்டாட்களும் வீட்டில் தங்கியிருந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருக்க…
“எல்லாரும் ஒண்ணா நின்னா ஒரு ஃபோட்டோ எடுத்திடலாம்” என்று புகைப்பட கலைஞர் கூற, ‘இங்க நீ.. அங்க நான்..’ என்று ஒருவழியாய் அனைவரும் நின்றார்.
துளசியையும் மூர்த்தியையும் சுற்றி அப்படி ஒரு கூட்டம். யாருமே இல்லாமல் தனியாய் போனேனே என்றவள் துயரமெல்லாம் போக.. பெண்ணையையும் மாப்பிள்ளையையும் நசுக்காத குறை.
வருடங்கள் முன் எப்படி தானே அவன் அருகில் நின்றாள்.. அன்று ஆசைப் பட்டது இன்று நிறைவேறி விட்டது. ஒன்பது பிள்ளைகள் பெற்றால் சபதத்தில் ஜெயித்துவிடலாம். உள்ளுக்குள் சிரிக்க அது முகத்தில் பிரதிபலிக்கவும் செய்தது.
துளசி ஓர கண் கொண்டு மூர்த்தியைக் காண விழைய… அவனுக்கும் அன்றைய நினைவு தான் போலும்.. அவள் புறம் புன்னகை முகமாய் அவன் திரும்ப… இருவர் கண்ணும் சந்தித்த அந்த அழகான தருணம் சட்டத்திற்குள் சென்று நடுக் கூட சுவரில் அமர்ந்துகொண்டது.