விக்ரமனின் வீட்டுப் பூஜை அறையில் விளக்கேற்றி வணங்கிக் கொண்டாள் அரசி.
வேலுச்சாமியின் புகைப்படத்தின் முன் கைப்கூப்பி நின்று வணங்கியவள் அடுத்து முத்துலட்சுமியின் பாதம் பணிய,
“மகராசியா இருக்கோணும். எழுந்திரு கண்ணு” என அவள் தோள் தொட்டு எழுப்பியவர், திருநீறை எடுத்து விக்ரமனுக்கும் அரசிக்கும் நெற்றியில் வைத்துவிட்டு இருவரையும் வரவேற்பறைக்கு அழைத்து வந்தார்.
மூவரும் ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர். விக்ரமன் அரசியின் மீது கோபத்தில் இருந்தான். அரசியோ மனவருத்தத்தில் இருந்தாள். லட்சுமியோ மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த நிலையில் இருந்தார். ஆனால் மூவருக்கும் பொதுவானதொரு விஷயம் இருந்ததென்றால் அது திருமணம் முடிந்த நிம்மதி ஒன்றே.
ஆறுச்சாமி அருந்தமிழை தன் மகளே இல்லை என்று கூறியதும் அரசி அவர்களுகிடையில் பேசப் போன நேரத்தில் விக்ரமன் அவள் கையை அழுந்தப் பற்றியிருந்தான்.
அவனை மீறி செல்ல முடியாது அமைதி காத்தவள் அருந்தமிழ் அங்கிருந்து கிளம்பியதும் நேராக முத்துலட்சுமியிடம் வந்து,
“அத்தை போலாங்களா” என்று கேட்க,
“நீ எங்க கண்ணு போற?” என நாயகி அவளருகில் வர,
[the_ad id=”6605″]
“அக்காவை ஓட்டும் இல்ல ஒறவும் இல்லைன்னு சொல்லி அனுப்புனதோட்டம் அப்பா நாளைக்கு என்னையும் அனுப்ப மாட்டாருன்னு என்ன நிச்சயம்ங் ஆத்தா” என்று ஆறுச்சாமியை பார்த்தபடி நாயகியிடம் கேட்டாள்.
“வேங்கை” என விக்ரமன் குரல் கொடுக்க,
“இருங் மச்சா. நான் நியாயமாத்தானே கேக்குறேன். இத்தனை நாள் பிரியமா வளத்த பொண்ணு இன்னிக்கு வேண்டாதவளா போய்டா. வீட்ட விட்டே போக சொல்லிட்டாரு. அப்போ இத்தனை வருசமா நாங்க இந்த வீட்டுல பொறந்து வளந்ததுக்கு என்ன அர்த்தம்?” என,
“அவ பண்ணுன காரியத்துக்கு நீ பரிஞ்சு பேச வேற வந்துட்டியா?” என வேங்கையிடம் சீறினார் ஆறுச்சாமி.
“அவ பண்ணுனது சரின்னு சொல்லலைங் ப்பா. ஆனா அவ மனசையும் நீங்க புரிஞ்சுகிட்டு இருந்திருக்கோணும். உங்களை மீறி அவ இது நாள் வரைக்கும் ஒரு காரியமாச்சும் செஞ்சிருக்காளான்னு சொல்லுங்க? எதுக்கும் உங்ககிட்ட அடம்பிடிச்சதில்ல. அப்படிப்பட்டவ தான் உங்க சொல்ல மீற முடியாம இத்தனை நாளா தன் காதலை மனசுக்குள்ளயே போட்டு பொதச்சுட்டு இருந்திருக்கா. ஏன்? நீங்க வருத்தப்படுவீங்கனு”
“இப்போ மட்டும் நான் வருத்தப்படுலையா?”
“இப்போ நீங்க வருத்தப்படுவீங்கனு இந்த கல்யாணத்த பண்ணிகிட்டா நாளைக்கு எல்லாரும் வருத்தப்படுவாங்க. ஒரு கட்டத்துல இதையெல்லாம் யோசிச்சுத்தான் அக்கா மாறன் மாமாவோட வந்து நேரடியா உங்ககிட்ட பேசி இருக்கா. அதுவும் நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பிக்கைல. ஆனா நீங்க என்ன காரியம் பண்ணியிருக்கீங்க? தலை முழுகுறேனு சொல்லி அக்காள கஷ்டபடுத்தி இந்த வீட்ட விட்டே அனுப்பிட்டீங்க”
“அரசி! பொறகு பேசிக்கலாங் கண்ணு. அவனே வேதனைல இருக்கான் பேசமா இரு சாமி” என நாயகி சொல்ல,
“அதான் அவ புகுந்த வீடு இருக்குதல்லோ நான் என்ன நடுத்தெருவுலையா நிறுத்தீட்டேன்” என்றார் ஆறுச்சாமி.
“ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கும் பொறந்த வீட்டுக்கும் நடுவுல பாலமா இருந்து உறவுகள இணைச்சு வைக்குறா. இரு கரையில எது ஒடஞ்சாலும் பாதிப்பு என்னமோ பாலத்துக்கு தான்.
இங்கிருந்து போற பொண்ணுக்கு நீங்க தான் நம்பிக்கை கொடுத்து அனுப்போணும். அங்க எல்லாமே புது இடம் புது சொந்தம். அப்படி அவளுக்கு அங்க ஏதாவது பிரச்சனை வந்தா நாங்க இருக்கோம் உனக்கு, தகுரியமா இருன்னு நம்பிக்கை கொடுக்குறது தான் பொறந்த வீடு. இத்தனை வருசமா வளர்த்த பொண்ண எப்படி ப்பா உங்களால தூக்கி வீச முடிஞ்சுது?” என தந்தை மீதே குற்றம் சுமத்தினாள்.
“அவ எல்லாத்தையும் தூக்கி வீசலையா?” தந்தையாக தமிழது செயலை தாள முடியவில்லை அவரால்.
“அவ ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து உங்க முன்னாடி நிக்கலைங் ப்பா. தான் விரும்புரவரை உங்க முன்னாடி கொண்டுவந்து நிறுத்தி, அவரையே கல்யாணம் பண்ணி வைக்க தான் சொன்னா. இதுல உங்க கௌரவத்துக்கு எந்தவிதக் கொறச்சலும் இல்லயே”
“ஊர்ல நாலு பேரு நாலு விதமா பேசமாட்டாங்களா? பேச மாட்டாங்களா என்ன, இன்னிக்கே பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஹ்ம்ம்!”
“அந்த நாலு பேரை பாக்குற நீங்க ஏன் நீங்க பெத்த பொண்ணை பாக்கலை. அவ வாழ்க்கை முக்கியமா இல்ல அந்த நாலு பேரு பேசுறது முக்கியமா? இந்த உலகம் வாழ்ந்தாலும் பேசும் வீழ்ந்தாலும் பேசும். ஏன் இவ்வளவு பேசுற நீங்க, தமிழ் அவ விருப்பப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது பிடிக்காம அவளை ஒதுக்கி வெச்ச நீங்க, எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமான்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா?”
“அது நான் வேலுச்சாமிக்கு..”
“போதுங் ப்பா. அவரவர் பக்க நியாயம் அவரவருக்கு பெருசு. தமிழ் உங்க முடிவை மீறுனது தப்புனா நீங்க என்னைய கேக்காமையே முடிவெடுத்ததும் தப்பு தானுங் ப்பா” என்றாள்.
இத்திருமணத்தில் விருப்பமா என்று கேட்காது மணமேடையில் சென்று அமரு என்றுதானே கூறினார் அவள் தந்தை. விக்ரமனின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால்? நிச்சயம் தந்தையின் சொல்லை மறுத்திருப்பாள். விளைவு விபரீதம் ஆகியிருக்கும். அதை நினைக்கவே நெஞ்சம் படபடத்தது அரசிக்கு.
“இப்போ முடிவா என்ன தான் சொல்ல வர்ற?” என்று ஆறுச்சாமி கேட்க,
“அக்காவை ஏத்துக்கோங்க. அவளுக்கு பண்ணவேண்டிய முறையை செய்யுங்க” என்றாள்.
“அது முடியாது வேங்கை. என்ர முடிவுல எந்த மாற்றமும் இல்ல” என,
“அப்போ என்ர முடிவையும் கேளுங் ப்பா. தமிழ் இந்த வீட்டு வாசப்படியை மிதிக்காம நானும் மிதிக்கமாட்டேன்” என்றவள், வாசலில் சென்று நின்று கொண்டாள்.
“தமிழுதேன் போய்டா இவளாச்சும் இருப்பான்னு பாத்தா இப்போ இவளும் போறாளே” என நாயகி வருத்தப்பட,
“தமிழு மேல உள்ள பாசத்துனால அப்படி பேசிட்டு போறாளுங். எங்க போய்டுவா இங்கதானே வருவா. ரெண்டு நாள் போனா சரியாகிடும். நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங். நான் பாத்துக்குறேன் அரசியை” என முத்துலட்சுமி நாயகியிடமும் ஆறுச்சாமியிடமும் விடைபெற்று வர,
“நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங் மாமா. அவ ஏதோ கோவத்துல பேசிட்டு போறா” என விக்ரமன் சொல்ல, பதில் பேசும் நிலையிலேயே இல்லை ஆறுச்சாமி. சோர்ந்து போய் பிரம்பு நாற்காலியில் அமர, அவரை அப்படிக் காண முடியாது விக்ரமன் அங்கிருந்து கிளம்பி வந்திருந்தான்.
மூவரும் அந்நிகழ்வையே எண்ணிப் பார்த்திருக்க,
“என்ன கண்ணு அண்ணனே வருத்ததுல இருப்பாரு நீயும் இப்படி வெடுக்குனு பேசிப்போட்டு வந்துட்ட” என்றார் முத்துலட்சுமி. உடனே,
“எல்லாத்துலயும் அவசரந்தேன். மத்தவங்க நிலைமைல இருந்தெல்லாம் யோசிக்கறதே கெடையாது. எடுத்தோம் கவுத்தோம்னு பேசிடுறது” என்றான் விக்ரமனும்.
“என்ன யோசிக்காம விட்டுட்டேங் மச்சா. பெத்த புள்ளைய ஒட்டும் இல்ல ஒறவும் இல்லைன்னு சொல்லி அனுப்புனா அவளுக்கு எப்படி இருக்கும்னு உங்க மாமன் மட்டும் யோசிச்சாருங்களா” என அரசியும் பேச,
“உனக்குமேல பாசம் வெச்சவரு தான் அவரு. அவரு அப்படி பேசுறாருனா அவரு மனசு எப்படி காயப்பட்டிருக்கும்னு புரிய வேண்டாம்? பிரச்சனையை தீர்க்க பாக்கோணும் நம்ம பங்குக்கு பிரச்சனையை பெருசு பண்ணி விடக்கூடாது” என விக்ரமன் சொல்ல,
‘கல்யாணம் ஆன மொதோ நாளே என்ன இப்படி அடிச்சுக்குறாங்க’ என பயந்து போன முத்துலட்சுமி,
“விக்ரமா நீ உள்ளார போ கண்ணு” என அவனை அனுப்பிவிட்டு அரசியை தன் அறைக்குள் அழைத்துச் சென்றார்.
“அரசி கண்ணு உனக்கு இந்த கலியாணத்துல விருப்பந்தானோ! விக்ரமன் மேல உனக்கு ஏதாச்சும் கோபம் கீன இருக்குதா?” என வருத்தமாய் கேட்க, அவரது பரிதவிப்பு புரிந்தது அரசிக்கும். அவர் முன்னிலையில் விக்ரமனோடு அப்படி பேசியதற்கு தன்னையே நொந்துகொண்டாள்.
“அதெல்லாம் இல்லீங் அத்தை” என்றாள். இருந்தும் அவர் முகம் தெளிவில்லாது இருக்க,
“உன்ர கிட்ட ஒரு விஷயம் சொல்லோணுங் கண்ணு. கலியாணத்துக்கு ஒரு வாரம் இருக்கைலதேன் இந்த விசயமே எனக்கு தெரிய வந்துது” என, அவரை புரியாது பார்த்தாள் அரசி.
“மாறன் தம்பி நம்மூடு தேடி வந்திருந்துது” என்று சொல்லவும் ஆச்சர்யமாய் பார்த்திருந்தாள் அரசி. அடுத்து முத்துலட்சுமி கூறிய செய்திகளில் அரசிக்கு இன்னதென்று சொல்ல முடியாதொரு உணர்வு பிறக்க, அவரிடம் விடைபெற்று விக்ரமனை நாடி விரைந்தாள்.
[the_ad id=”6605″]
தமிழுக்கு நினைவுகள் எல்லாம் தங்கையைச் சுற்றியே இருந்தது. மாறனுக்காக தன் முகத்தை இயல்பாய் மாற்றிக்கொண்டாலும் சில நிமிடங்களிலேயே அதில் தென்படும் சோகத்தை கவனித்து தான் இருந்தான் மாறன்.
“என்னங்க தமிழ் இப்படி ஓட்டு வீட்டுல உங்களை உக்கார வெச்சுட்டேன்னு நினைக்குறீங்களா?” என, உடனே அவனைப் பார்த்தவள்
“ஐயோ அப்படி எல்லாம் இல்லைங்க. உங்ககூட ஓலக் குடிசைல வாழ்ந்தாலும் எனக்கு அது சந்தோசம் தான்” என்றாள் மனதார.
அதில் அவன் அதரங்களில் அரும்பிய புன்னகையோடு,
“வாங்க கொஞ்ச நேரம் வெளிய காத்தார நடக்கலாம்” என்று அழைத்துச் சென்றான்.
தமிழ் தரையைப் பார்த்தபடி அமைதியாய் வர,
“உங்க தங்கச்சி கிட்ட பேசணும் போல இருந்தா போன் பண்ணி பேசுங்க” என்றான். அவள் நினைத்ததையே அவன் கூறியதில் வியந்தாலும், அரசியோடு பேச மறுத்துவிட்டாள்.
“வேண்டாங்க. அப்பறம் அப்பா அவளையும் ஒதுக்கி வெச்சிடுவாரு” என, அவன் தன் கைபேசியை எடுத்து ஒரு வாய்ஸ் நோட்டை ஒலிக்கவிட்டு தமிழிடம் தந்தான். அதைக் கேட்டவளுக்கு இதழ்களில் புன்முறுவல் பூத்தது.
“மாமா! நான் அரசி பேசுறேன். உங்ககிட்ட பேசுறதுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கலை. என்ர அக்கா கிட்ட சொல்லுங்க, அவ அந்த வீட்டு வாசப்படியை மிதிக்குற வரைக்கும் நானும் மிதிக்கமாட்டேன்னு. அக்காள பத்திரமா பாத்துக்கோங்க. தனியா இருக்க ரொம்பவே பயப்படுவா. அப்பறம் ரொம்ப தேங்க்ஸ் மாமா. நான் நாளைக்கு உங்களோட பேசுறேன்” என்று வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தாள் அரசி.
அதன் முடிவில் மீண்டும் அருந்தமிழின் கண்கள் பணிக்க,
“உங்க தங்கச்சி எப்படியும் எனக்கு தினமும் போன் பண்ணிடுவாங்க” என்றான் மாறன்.
“அப்பா என்னையத்தான் ஒதுக்கிட்டாரு இவ எதுக்கு இப்படி ஒரு முடிவெடுத்தா? இதுனால அப்பாவும் ஆத்தாவும் ரொம்பவே வருத்தப்படுவாங்க” என அதற்கும் கவலையுற்ற தமிழ்,
“என்ர சுயநலத்துக்காக என்ர தங்கச்சி வாழ்க்கைய நானே கெடுத்துட்டேன். அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா இல்லையானு கூட அப்பா அவகிட்ட ஒருவார்த்த கேக்கலைங்க. அப்பா வாக்கை காப்பாத்துறதுக்காக அவளும் மணமேடை ஏறிட்டா. அவ வாழ்க்கை எப்படி இருக்கப் போகுதோன்னு நெனச்சாவே என்ரனால தாங்கிக்க முடியலைங்க” என குற்றவுணர்வு ஒங்க பெரிதாய் தவிக்க,
அவள் தோள்பற்றி தன்புறம் திருப்பிய மாறன்,
“உங்க தங்கச்சி எனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொன்னாங்கன்னு யோசிச்சீங்களா? அப்பறம் பேசும்போது அவங்க குரலை கவனிச்சீங்களா” என புருவம் உயர்த்த, புரியாது பார்த்தாள் அருந்தமிழ்.
“நான் ஒரு வாரத்துக்கு முன்னாடியே விக்ரமனை அவர் வீட்டில் சந்திச்சேனுங்க தமிழ்” என்றான். கண்கள் விரிய பார்த்தவளிடம் அன்றைய நிகழ்வுகளை எடுத்துரைத்தான் நன்மாறன்.
விக்ரமனை அவன் வீட்டில் சந்தித்த மாறன் முத்துலட்சுமி முன்னிலையில்,
“நானும் தமிழும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். அவங்க அப்பா சொல்லுக்காகத் தான் தமிழ் ரொம்ப யோசிக்குறாங்க. அவங்கனால உங்களை கல்யாணம் செய்துக்க முடியாதுங்க விக்ரமன். சீக்கிரம் அவங்களே என்னைய தேடி வருவாங்க. அப்படி அவங்க வந்துட்டா என்ரகூடத் தான் திரும்புவாங்க. உங்க கல்யாணம் நின்னுடும். அந்த நேரத்துல நீங்க தமிழை தப்பா நெனைக்கக் கூடாதுங்க” என்றிருந்தான்.
முத்துலட்சுமி அதிர்ச்சியாய் பார்க்க, விக்ரமனோ
“ஒருவேளை தமிழ் வரலைனா?” என்று கேட்டிருந்தான்.
“கண்டிப்பா வருவாங்க. எங்க காதல் நிலையானதுன்னு நான் நம்புறேன். எனக்கு கொடுத்த இடத்தை கண்டிப்பா அவங்கனால உங்களுக்கு கொடுக்க முடியாது” என்று ஆழமாய் கூறினான் மாறன்.
விக்ரமன் புன்னகைப்பது கண்டு,
“என்னப்பா இதெல்லாம்” என முத்துலட்சுமி பதற,
“வேங்கை உங்களுக்கு மருமகளா வந்தா சம்மதமாங் ம்மா?” என்று தன் அன்னையிடம் கேட்டிருந்தான்.
“ஏன் விக்ரமா திடீர்னு இப்படி கேக்குற அப்பாவுக்கு கொடுத்த வாக்கு என்னாகுறது” என
“அப்பாவுக்கு மாமா கொடுத்த வாக்கு முக்கியங்களா இல்ல நாலு பேரோட வாழ்க்கை முக்கியங்களா? எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கோணும்னு நீங்களே சொல்லுங் ம்மா” என்றான்.
தாயிற்கும் மகனும் நடுவில் பார்வையாளனாய் நின்றிருந்தான் மாறன்.
“நாலு பேரோட வாழ்க்கையா?”
“அரசி நம்ம வீட்டுக்கு வரோணும்னு தான் நான் ஆசைப்படுறேங் ம்மா. அன்னிக்கு மாமா நம்ம வீடு தேடிவந்து சொல்லும் போது என்ரனால அவரு முடிவை மறுக்க முடியலைங். நம்ம அப்பாவுக்கு கொடுத்த வாக்கா மட்டு இல்லாம இருந்திருந்தா அப்போவே எப்படியாவது மறுத்திருப்பேனுங் ம்மா” என்றான்.
“இப்போ என்னப்பா பண்ணுறது. இதைய நீ முன்னாலையே என்ரகிட்ட சொல்லியிருந்தா நான் ஆறுச்சாமி அண்ணன்கிட்ட பேசி இருந்திருப்பனே” என,
“அப்போ நீங்க அரசியை தான் விரும்புறீங்க இல்லையா? அப்பறம் எப்படி தமிழை உங்களால ஏத்துக்க முடியும்? எந்த தைரியத்துல கல்யாணம் வரைக்கும் வந்தீங்க விக்ரமன். தமிழை பத்தி யோசிக்கலையா நீங்க. ஒருவேள அவங்க என்னைய விரும்பாம இருந்திருந்தா அவங்க நிலைமை என்ன ஆகும். தங்கச்சியை விரும்பிட்டு எப்படி அக்காவை கல்யாணம் செய்ய முடியும்” கொஞ்சம் கோபம் தான் மாறனிடம்.
“மாறன்! கோவில்ல உங்க பரம்பரை வளையல் தமிழ் கைக்கு போகும்போதே எனக்கு விஷயம் தெரியும்” என்று ஒரே வரியில் விளக்கம் கொடுத்துவிட்டான் விக்ரமன்.
“நிச்சயத்தை தமிழ் எப்படியும் நிறுத்துவா உடனே நீங்களும் வந்து பேசிடுவீங்கன்னு நான் நெனச்சேன். அப்போ என்ர கிட்ட சரியான காரணம் இல்ல. வேங்கையை பத்தி சபையில பேசி அவளுக்கு அவமானத்தை தேடித்தர முடியாது. நான் பேசியிருந்தா தப்பே செய்யாத வேங்கை மேல அக்கா வாழ்க்கையை கெடுத்துட்டான்னு மொத்த பழியும் வந்து சேர்ந்திருக்கும்” என்றான்.
மாறன் அமைதியாய் இருக்க,
“எந்த தைரியத்துல கல்யாணம் வரைக்கும் வந்தீங்கனு என்னைய கேக்குற நீங்க ஏன் தமிழை இதுவரைக்கும் வர அனுமதிச்சீங்க? உங்க பக்கம் ஒரு காரணம் இருக்குறதோட்டம் தான் என்ர பக்கமும் காரணம் இருக்கு. யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு தான் நான் ஒவ்வொன்னையும் பொறுமையா யோசிச்சு பண்ணுறேன். ஒருவேளை தமிழ் வரலைனா என்ன பண்ணுவீங்கனு கேட்டேன் இல்லையா. தமிழ் வரலைனா நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ண மாட்டீங்க. ஆனா நான் அப்படி இல்ல” என்றவன்,
[the_ad id=”6605″]
“வேங்கையை என்ரனால வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. அவ இடத்தயும் வேற யாருக்கும் கொடுக்க முடியாது. அவளுக்கும் அப்படித்தான். அவளும் அவ அக்கா வாழ்க்கையோட தன் வாழ்க்கையை சிக்க வெச்சுட்டு அதைய விடுவிக்க வழி தெரியாம போராடிட்டு இருக்கா” என்றான் வருத்தமாய்.
ஒருவருக்குள் ஒருவரை சிக்க வைத்து முடிச்சு போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் விதியிடம் இருந்து தத்தம் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள ஆளுக்கொரு முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் முத்துலட்சுமி அதில் பெரிய முடிச்சொன்றை அவிழ்த்தார்.
“நீ ஒன்னும் கவலைப்படாத விக்ரமா. உனக்கு சரின்னு பட்டதை தயங்காம செய்யு. எல்லாம் நல்லதாவே நடக்கும். அப்பா உனக்கு தொணையிருப்பார். அவருக்கு உன்ர மாமன் கொடுத்த வாக்கை விட நாலு பேரு வாழ்க்கைதேன் முக்கியம்” என்றார் முத்துலட்சுமி முடிவாய்.
அதன் பின்னரே முழு நம்பிகையுடன் மாறன் விடைபெற்று நகர்ந்தான்.
எங்கெங்கோ சுற்றி யார் யார் மூலமாகவோ காய்களை நகர்த்தி அனைவரையும் தவிக்கவிட்டு துடிக்கவிட்டு விளையாடிய பின்னரே, அவர்கள் வாழ்க்கையை அவர்களிடமே சரியாய் கொண்டுவந்து சேர்த்திருந்தது விதி.
மழை பேய்ந்து ஓய்ந்தது போல் இருத்தது அருந்தமிழுக்கு.
“அப்போ விக்ரமன் மச்சானும் அரசியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்களா? என்ர தங்கச்சி எனக்காக இவ்வளவு பெரிய விசயத்தை உள்ளுக்குள்ளயே போட்டு பொதச்சிட்டு இருந்திருக்கா” என அரசியை எண்ணி தமிழ் மீண்டும் வேதனிக்க,
“அரசியை பத்தி இனி நீங்க கவலைப்படாதீங்க தமிழ். அவங்களை விக்ரமன் பாத்துக்குவாரு” என்றான் மாறன் கண்களை அழுந்த மூடித்திறந்து.
இப்போது தான் தமிழின் மனம் குற்றவுணர்வின் பிடியில் இருந்து கொஞ்சம் விலகியது.
“என்ரனால தான் எல்லாருக்கும் கஷ்டம். உங்களையும் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். உங்க குடும்பத்துல இருந்தும் பிரிச்சுட்டேன். என்னைய மன்னிச்சிருங்க மாறன்” என நீர் திரண்ட விழிகளோடு மீண்டும் மன்னிப்பை யாசிக்க, சிறு புன்னகையோடு அவள் வலக்கையை எடுத்து தன்னிரு கைகளுக்குள் வைத்துக்கொண்ட மாறன்
“நீங்க கெடைக்காம போயிருந்தா வாழ்க்கை முழுக்க நான் தான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன். கவலைப்படாதீங்க தமிழ் எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். நம்ம சரி பண்ணிடலாம்” என்று நம்பிக்கையாய் சொல்ல, அவள் இதழ்கள் விரிய, சாரல் மழை இருவரையும் பன்னீர் தூவி ஆசிர்வதிக்க இருவரும் வீட்டினுள் வந்தனர்.
விக்ரமனைத் தேடி அவன் அறைக்குள் வந்ததாள் அரசி.
தன் தந்தை வாக்கு என்ற ஒரு விசயத்தை வைத்து இப்படி தங்களது வாழ்க்கையில் விளையாடியதை எண்ணி பெருமூச்சை வெளியேற்றியபடி உள்ளே வர, விக்ரமன் கட்டிலில் அமர்ந்தபடி சுவரையே வெறித்திருந்தான்.
அவனைப் புரிந்து கொள்ளாது போனதில் அவளுக்கும் வருத்தமே. வேலுச்சாமியின் நினைவிடத்தில் அவன் கூற வந்ததை பொறுமையாய் கேட்டிருக்கலாம் என்று இப்போது எண்ணினாள்.
அன்று அவள் வார்த்தைகள் எல்லை மீறியது கூட நினைவில் வந்தது. கதவைச் சாற்றித் தாளிட்டவள் அவன் காலில் விழுந்துவிடலாம் என்ற அளவிற்கு கூட எண்ணிக் கொண்டிருந்தாள்.
அவள் வருகையை உணர்ந்த விக்ரமன்,
“இப்போ என்ன?” என்றான்.
“ஒன்னுமில்லீங் மச்சா”
“அப்பறம் எதுக்கு கதவை சாத்துற?”
“ஏன் உங்களுக்கு பயமா இருக்கா” என, அவளையே கூர்ந்து பார்த்தவன்
“எதுக்கு வம்பு அப்பறம் நாங்க பயன் படுத்திகிட்டோம்னு பழிய போட்டாலும் போடுவீங்க” என்றதில் அரசிக்கு ஐயோ என்றிருந்தது.
“நான் ஏதோ வேகத்துல யோசிக்காம பேசிட்டேன்ங் மச்சா” என விளக்க முற்பட,
“சொல்லுற வார்த்தை ரொம்ப முக்கியம். கோபத்துல பேசுனாலும் வெளிய வந்த வார்த்தை இல்லைன்னு ஆகிடாது” என கதவை திறந்து வெளியேற, செல்லும் அவனையே பார்த்திருந்தாள் அரசி.
மன்னிப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடியதல்லவே!
வாசம் வீசும்…!