என் காதல் கனா
4
விவேக்
விவேக் கடலூரைச் சேர்ந்தவன். பதினொன்றாவது படிக்கும் போதே அப்பா இறந்துவிட்டார். இறந்துவிட்டார் என்றால் சாதாரணமாக போகவில்லை. சொத்து பத்து என சல்லிக்காசு விட்டுப் போகாவிடினும், தனக்குப் பின் பேர் சொல்ல ஐந்து பிள்ளைகளையும், இரண்டு மனைவிகளையும் விட்டுச் சென்றிருந்தார்.
“அதெப்படி இரண்டு மனைவி?” என ஆச்சர்யப்படாதீர்கள். விவேக்கின் அப்பா இறந்த போது தான், இன்னொரு குடும்பம் இருக்கும் விஷயமே இரு குடும்பத்திற்கும் தெரியவந்தது. அவ்வளவு சாமர்த்தியமாக, ஒரு குடும்பத்தை கடலூரிலும், இன்னொன்றை சிதம்பரத்திலும் நடந்தி வந்திருக்கிறார் மனிதர்.
கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது பள்ளியின் பியூன் வந்து துண்டுக்காகிதம் நீட்டி, விவேக்கை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றான். “பேக் எடுத்துட்டு வீட்டுக்குப் போப்பா…”என தலைமை ஆசிரியர் வருத்தத்துடன் தெரிவித்த போது, விவேக் என்ன ஏதென்று தெரிமலேயே வீட்டிற்குச் சென்றான்.
வீட்டை நெருங்கும் போதே, வாசலுக்கு வெளியே போடப்பட்டிருந்த சாமியானாவும், காலி நாற்காலிகளும் பெரும் சோகத்தை உணர்த்த, உள்ளே நுழைந்தவனை திடுக்கிடச் செய்தது கூடத்தின் நிசப்தம். கூடத்தின் நடுவே தந்தையின் உடன் வெள்ளைத் துணியினால் சுற்றப்பட்டு, மலர் மாலையுடனும், தரமற்ற ஊதுபத்தி வாசனையுடனும் காட்சியளித்தது. இழவு வீட்டிற்கு ஒரே சாட்சி இது மட்டும் தான். தூணின் ஒரு ஓரத்தில் கண்கள் சிவக்க அம்மா அமர்ந்திருக்க, அவளுக்கு இருபுறமும், தம்பியும் தங்கையும் அமர்ந்திருந்தனர். இருவர் கண்களும் கலங்கியிருந்த போதும், பெருங்குரலெடுத்தெல்லாம் அழவில்லை. அம்மாவின் கோப முகத்தை பார்த்து பார்த்து பயந்து போய் அமர்ந்திருந்தவர்கள், விவேக் உள்ளே நுழையவும் “அண்ணா”என இவனுடன் வந்து ஒட்டிக் கொண்டனர்.
சிறிது பயத்துடனேயே தாயை நெருங்கியவன்,மெல்லமாக “அம்மா”என அழைக்க, அன்னையின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. கண்கள் மாத்திரம் இருபக்கங்களிலும் அலைபாய்ந்து, தந்தையின் உடலைத் தாண்டி ரேளித் தூணின் அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் மேல் படிந்து மீண்டது.
தாயின் பார்வை சென்ற திசையை விவேக்கும் கவனித்தான். அந்தப் பெண்ணிற்கும் தாயின் வயதோ, அதை விடவும் இரண்டு மூன்று வயது கம்மியாகவோ இருக்கும். அவர் அருகில் தங்கை வயதை ஒட்டிய இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். இன்னது தான் வண்ணம் என சொல்லமுடியாத ஒரு வித மங்கிய பழுப்பு வர்ண புடவை. மூவர் காதிலோ கழுத்திலோ துளி தங்கம் இல்லை. பார்க்கும் போதே பஞ்சத்தில் வாடும் வயிறுகள் என நிதர்சனமாக விளங்கிவிடும். தாயின் கண்கள் சென்ற திசையை நோட்டமிட்ட விவேக்கின் மனம் ஏதோ பெரிய விவகாரம் என்று மட்டும் உணர்த்தியது.
“அவங்க யாரும்மா?”என விவேக் அந்த நேரத்தில் அசம்பாவிதமாக அந்தக் கேள்வியை கேட்டும் தொலைத்தான். ஏனென்றால் வந்திருந்தவர்களில் பெரும்பாலானோரை விவேக் அறிந்திருந்தான். தந்தையுடன் வேலை செய்தவர்கள், சொந்தம் பந்தம் என அவன் அறிந்த முகங்கள் நிரம்பியிருக்கும் இடத்தில் சம்பந்தமில்லாத ஒருவர், அதிலும் துக்கம் தழும்பும் கண்களுடன் நின்றிருந்தது விவேக்கிற்கு வேறுபாடாகத் தெரிந்தது.
“உன் சின்னம்மா”என அன்னையின் வாயில் இருந்து வந்த பதிலைக் கேட்டு விவேக் மட்டும் அல்ல, அங்கிருந்த உறவினர் கூட்டம் மட்டும் அல்ல, அந்த சின்னம்மா என்று அழைக்கப்பட்ட பெண்ணுமே ஆடித்தான் போயினர். “அக்கா”என்று அழைத்துக் கொண்டு ஓடி வந்த அந்த சின்னம்மாவும் அம்மாவில் மடியில் சாய்ந்து அழத்துவங்க, அதுவரையில் அமைதியாக அமர்ந்திருந்த அம்மா மடை திறந்து அழத்துவங்கினாள்.
அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு, சின்னம்மா தேவியும் அவளது இரு மகள்களும் வேறு போக்கிடம் இல்லாமல் கடலூர் வீட்டிலேயே வசிக்கத் துவங்க, அதுவரையில் மூன்று குழந்தைகளின் வாழ்க்கைப்பாட்டிற்காக துயரப்பட்ட அன்னை ராதா, மேலும் மூவரின் பொறுப்புகளையும் விரும்பி ஏற்றுக் கொண்டாள்.
“எதுக்கு ராதா உனக்கு இந்த தேவையில்லாத கஷ்டம்” என உச் கொட்டிய சுற்றத்திடம், “அந்த பொண்ணு மட்டும் என்ன தப்பு பண்ணிச்சு. இந்த மனுஷன நான் நம்பின மாதிரி நம்பி ஏமாந்தவ. ரெண்டும் பொட்டை பிள்ளைக, அவமட்டும் எங்கிட்டு போவா?” என ஊர்வாயை நிமிடத்தில் மூடிவிட்டார் ராதா.
இத்தனை துன்பத்திலும் நடந்த ஒரே நல்ல விஷயம், தந்தை அதுவரையில் பார்த்து வந்த ஆரம்ப சுகாதாரத்துறையின் வேலை, அம்மாவிற்கு கிடைத்தது. அதனால் வயிற்றிற்கு வஞ்சனை என இல்லாமல் போனது. சின்னம்மா தேவியும் வீட்டில் வெட்டியாக இல்லாமல், வீட்டு வேலை செய்த நேரம் போக, மீத நேரத்தில் மளிகை சாமானம் பொட்டலம் செய்யும் வேலையை செய்யத் துவங்க, தந்தை என உறவை இழந்த போதிலும் அந்தக் குடும்பம் நிம்மதி என்னும் வழியினைத் தேடி மெதுவாக ஆனால் திடமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
இதற்கு இடையில் தான் விவேக் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து, கல்லூரி சேர்ந்தான். வீட்டின் கஷ்டம் உணர்ந்து நன்கு படிக்கவும் செய்தான். ஆனால் இந்தக் காலகட்டங்களில் எல்லாம் விவேக் வெறுத்த ஒரே வாசகம் “உன்னை நம்பித்தான் இத்தனை வயிறு இருக்கு விவேக். நல்லா கருத்தா படிப்பா”என்பது தான். அந்தக் குடும்பத்தின் சுமை முழுவதும் விவேக்கிடம் சென்றுவிட்டதைப் போல் வீட்டினர் அனைவருமே நடந்து கொண்டது தான். விவேக்கிற்கு பொறுப்பு இருக்கவே செய்தது. ஆனால் அதை நொடிக்கொரு தரம் நினைவு படுத்திக் கொண்டே இருந்தது தான் சகிக்கமுடியவில்லை. இயல்பாக இருக்க முடியாமல், இருக்கவும் விடாமல், விவேக்கின் தலையைக் கண்டதும் “தம்பி வந்தாச்சு”என மூலைக் கொருவராக நகர்வதும், “அண்ணாட்ட சொல்லிடுவேன்”என அம்மாவும் சின்னம்மாவும் குழந்தைகளை மிரட்டுவதும் என்று இருந்ததால், இருபதுவயதில் நாற்பது வயது ஆடவனாக நடத்தப்படுவது போல் நிறைய நாட்கள் விவேக்கிற்குத் தோன்றும்.
நாளாக ஆக, இந்த பொறுப்பு கொடுத்த பயம், வீட்டினரின் அதீத மரியாதை என இவற்றையெல்லாம் விவேக் வெறுக்கத் துவங்கினான். “என்னை ஒரு இருவது வயசு பையன்னு பார்க்காம, எனக்கு ஆசைகள், தேவைகள் இருக்கும்னு நினைக்காம, இப்படி அவங்க வாழ்க்கையை முழுசா தூக்கி என்மேல வக்கறது என்ன நியாயம்?”என மனது நினைப்பதை தடுக்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் தவிக்கத் துவங்கினான்
அதிலும் படித்து முடித்த கையோட நல்ல வேலையும் கிடைக்க, சென்னையில் வீடு எடுத்து தங்கிக் கொண்டான். முடிந்தவரையில் கடலூர் செல்வதை குறைத்துக் கொண்டான். ஆனால் மாதம் தவறாமல் தன் செலவிற்குப் போக, மீதப் பணத்தை வீட்டிற்கு அனுப்பிவிடுவது என பொறுப்புகளை மறக்காமல் நடந்து கொண்டான்.
இப்படி அதிகம் கலங்கல்கள் இன்றி நன்றாக சென்று கொண்டிருந்த விவேக்கின் வாழ்க்கையில் அமெரிக்க ஆசையைத் தூண்டியது சதீஷும் அவனது அண்ணன் கிஷோரும் தான்.
சதீஷும் விவேக்கும் கல்லூரியில் ஒன்றாகப் பயின்றவர்கள். “டே, வீட்டுக்கு வாடா” என சதீஷ் அவர்களது வீட்டிற்கு அழைக்கும் நாட்களில் தவறாது விவேக் சென்றுவிடுவான். இயல்பாக இருபது வயதினனாக நடத்தப்படும் வீட்டில் இருக்க விவேக்கிற்குப் பிடித்துப் போனது.
“அப்பா இல்லைன்னாலும் பொறுப்பா இருக்கற பையன்”என்று சதிஷின் வீட்டினர் விவேக்கிடம் அன்பு பாராட்டினர். அப்படி கல்லூரி படிக்கும் காலத்தில் சதீஷின் அண்ணன் கிஷோரிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு நாளில் தான் கிஷோர் தன் கனவுகளைப் பற்றி விவேக்கிடம் பகிர்ந்து கொண்டான்.
“மாச சம்பளமே நாலு லட்சத்துக்கும் மேல கிடைக்கும் விவேக். நீ ஏண்டா ட்ரை பண்ணக் கூடாது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து படிச்சா உனக்கு கண்டிப்பா கிடைக்கும்டா..”
“ஆசை இல்லாம இல்லண்ணா. ஆனா நிறைய செலவாகும்ல அதான் யோசிக்கறேன்.”
“டே, அப்படி பெருசாலாம் செலவாகாது. அதுவுமில்லாம, ஸ்காலர்ஷிப்ல சீட் கிடைச்சுதுன்னு வை, பேங்கல லோன் ஈசியா கிடைக்கும். உனக்கு இஷ்டம்னா சொல்லு, நான் படிச்ச எஸ்.ஏ.டி இண்ஸ்டிடியூட்ல பேசிப்பாக்கறேன்….என்னோட புக்ஸ் இருக்கு அதை கூட யூஸ் பண்ணிக்கோ…எப்படியும் சதீஷை சேர வைக்க போறேன், நீயும் கூட ஜாயின் பண்ணிக்கோ..யோசிச்சு சொல்லு…”என்று நம்பிக்கையூட்டும் விதமாகப் பேச, விவேக்கிற்கும் அந்த ஆசை மெல்லமான தீப்ப்பொரியாக பற்றத் துவங்கி, கண்டிப்பாக மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றே ஆகவேண்டும் என்ற பெரும் நெருப்பாக கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. மாதம் நாலு லட்சம் சம்பளம்…எண்ணி, மூன்றே வருடத்தில வங்கிக் கடன், அம்மா வெளியே வாங்கியிருந்த சிறிய கைமாத்துகள் என அனைத்தையும் அடைத்துவிடலாம்.
படிப்பது போக இதர செலவுகளுக்கு பார்ட் டைம் ஜாப் போல் வேறு ஏதேணும் வேலை செய்து சமாளித்துக் கொள்ளலாம். சதீஷும் உடன் இருக்கப் போகிறான். அவன் அண்ணாவின் வழிகாட்டுதலுல் இருக்கிறது என பல நாட்கள் இரவு தூங்காமல் யோசித்து ஒரு முடிவை எட்டியிருந்தான் விவேக்.
அம்மாவிடம் தன் விருப்பத்தை சொல்லும் தைரியத்தை சிறிது சிறிதாக சேகரித்து, அன்றைய தினம் அம்மாவிடம் மொழிந்த போது, விவேக் எதிர்பார்த்த சம்மதம் உடனே கிடைக்கவில்லை.
“தகுதிக்கு தக்கன தான ஆசைகளும் இருக்கணும். படிக்கணும்னு ஆசையிருந்த இங்க சென்னையில படி. வேலைக்குப் போயிட்டே பார்ட் டைம்ல எம்.பி.ஏ பண்ண எவ்வளவோ வசதிகள் இருக்கறப்போ, அமெரிக்கா போகறேன்னு நீ சொல்லறதைக் கேட்டா சிரிப்பு தான் தம்பி வருது..”என சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டே ராதா கூறியதைக் கேட்க விவேக்கிற்கு நாராசமாக இருந்தது. ஏதோ பொம்மைக்கு அழும் சிறு பையனிடம் சிரிப்புடன் சமாதானம் சொல்வது போல் பட்டது.
போதாக்குறைக்கு, சின்னம்மா தேவி வேறு, “அக்கா இவ்வளவு கஷ்டத்திலையும் உங்க படிப்பை நிறுத்தாம, எல்லா பிரச்சனையும் தன் தோள் மேல தூக்கி வச்சுகிட்டு கிடக்காங்க. பையன் ஆளாவான், வேலைக்குப் போயி கை நிறைய சம்பாரிச்சு கொண்டுவந்து தலையில கொட்டுவான். தம்பி, தங்கச்சிங்களை காப்பாத்துவான்னு உங்களை அன்னாந்து பார்த்துகிட்டு நாங்க நிக்கறோம். நீங்க என்னடான்னா …..”என ராதாவிற்கு ஜாஸ்ரா அடிக்கத் துவங்க, அப்போதைக்கு விவேக் அந்தப் பேச்சை சிலகாலம் மறந்திருந்தான்.
இதற்குள் நான்காம் வருட துவக்கத்தில் கேம்பஸ் இண்டர்வியுக்கள் வரத்துவங்க, சதீஷும் விவேக்கும் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தனர். அம்மாவின் ஆனந்தத்திற்கு அளவே இல்லாமல் போனது. விவேக்கும் நிம்மதியாகவே வேலைக்குச் சென்றுவந்தான். விடுமுறைக்காக கிஷோர் ஃபிலடெல்ஃபியாவில் இருந்து இந்தியா வந்திருந்த சமயம், மீண்டும் மேற்படிப்புக்காக பேச்சுகள் சதீஷின் வீட்டில் துவங்கியிருந்தன. இம்முறை மிகவும் தீவிரமாக.
“ஆறு மணிக்கு ஆபீஸ் முடிஞ்சதும், எஸ்.ஏ.டி எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணு சதீஷ். விவேக் நீயும் தான். ஒரு நாளைக்கு டூ ஹவர்ஸ் படிச்சா போதும்டா. அதுமட்டும் இல்லாம, இப்போ வேலைக்குப் போறதனால கம்பெனி என்ஸ்பீரியன்ஸ் இருக்கும். இது ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்….டோண்ட் வேஸ்ட் டைம் கைஸ்”என கிஷோர் வற்புறுத்தி கோச்சிங் கிளாஸில் சேர்த்துவிட்டான். சதீஷ் கல்லூரியில் உடன் படித்த சுபாஹினியைக் காதலித்துக் கொண்டிருந்ததால் மாலை நேரம் சதீஷிற்கு விரைவில் கழிந்து போகும். அண்ணனின் வற்புறுத்தல் தாளாமல் விவேக்குடன் சேர்ந்து எஸ்.ஏ.டி படிக்கத் துவங்கினான்.
கடின உழைப்பு தந்த பலனாக விவேக்கிற்கும், இயல்பான புத்திசாலித்தனம் கொண்ட சதீஷிற்கும் அமெரிக்காவின், ஆர்கன் மாகாணத்தில் “யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்கனில்” பிசினஸ் மேனேஜ்மெண்ட் பயில வாய்ப்பு கிடைத்தது. சதீஷிற்கு தன் காதல் பிரச்சனை காரணமாக உடனே சம்மதம் சொல்ல முடியாத சூழல் உருவாகியிருக்க, விவேக்கிற்கு வேறு விதமான பிரச்சனைகள் இருந்தன.
“நீ யோசிச்சு தான் பேசறியா விவேக். உன்னை நம்பி நாங்க இத்தனை பேர் இருக்கோம். உன் மாச சம்பளத்தை நம்பி, நகை சீட்டு, ஏல சீட்டுன்னு கொஞ்சம் செலவுகளும் இருக்கு. இப்போ வேலைக்குப் போமாட்டேன், படிக்க போறேன்னு சொன்னா என்னடா அர்த்தம்”என வேலையை ராஜினாமா செய்த விஷயத்தை வீட்டில் கூறிய போது, அம்மா ராதா ஆத்திரப்பட்டார்.
“படிக்கனும் தானே ராதாக்கா தம்பி ஆசைப்படுது. படிச்சு இன்னும் பெரிய வேலையில உட்கார்ந்தா நம்மளை இன்னும் நல்லா தானே பார்த்துக்கும்…ரெண்டு வருஷம் தானே படிக்கட்டுமே..இவ்வளவு நாள் ஆம்பிள்ளை துணை இல்லாம இந்த வீட்டை நீங்க சமாளிக்கலையா? என்னைக்கு இன்னொரு குடும்பம் இருக்குன்னு நம்ம தலையில குண்டை தூக்கிப் போட்டுட்டு அந்த மனுஷன் போச்சோ, அப்பவே நானும் புள்ளைகளை கூட்டிட்டு ஆறு குளம்னு விழுந்திருப்பேன். சாமி மாதிரி எங்களை பாதுகாத்தீங்க…. யாருக்கோ செய்யறவங்க உங்க சொந்த புள்ளைக்கு பார்க்கமாட்டீங்களா…செலவுகளை கொஞ்சம் குறைச்சு சமாளிச்சுக்கலாம்க்கா…”என்று விவேக்கின் சுருங்கிய முகத்தைக் கண்டு மனமிறங்கி சின்னம்மா தேவி, ராதாவிடம் ஆதரவாகப் பேசினார். அம்மாவின் ஆத்திரம் கொஞ்சம் குறைந்த போதும் மனம் சமாதானமாகவில்லை.
“படிக்கறதப் பத்தி பிரச்சனையில்லை தேவி. ஆனா அதுக்கு பேங்கில பதினஞ்சு லட்சத்துக்கு சொத்து மதிப்பு காமிக்கணும். அதுக்காக இந்த வீட்டுப் பத்திரத்தை கேட்கறானே அதான் என்னால பொறுக்க முடியலை. ஏதோ வீடுன்னு சொல்லிக்க இருக்கற இந்த ஒரு கூறையும் இல்லைன்னா, இத்தனை புள்ளைகளை எப்படி கரை சேர்ப்பேன்”என முனங்கலாக ராதாவின் குரல் எழுந்தது.
“அம்மா, நான் விக்கறதுக்காம்மா வீட்டைக் கேட்கறேன். பேங்கல அடமானமா சொத்து இருக்குன்னு காமிச்சா தான்மா லோன் கிளியர் ஆகும். ஏம்மா புரிஞ்சுக்காம பேசறீங்க… அப்படி தம்பி தங்கைகளைப் பார்க்காம நான் போயிருவேனோன்னு பயமா இருந்துச்சுன்னா வேணாம்மா நான் படிக்கலை. என் மேல நீங்க வச்சிருக்கற நம்பிக்கை அவ்வளோ தான்னு நினைச்சுக்கறேன். சரியா”என விருட்டென்று அன்று கிளம்பி சென்னை வந்துவிட்டான்.
அமெரிக்கா கனவுகள் அஸ்தமனமாகிவிட்டன என உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த ஒரு நாளில் தான் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. “வீட்டை அடமானம் வைக்க சம்மதம்”என்று கொஞ்சம் பிசிறடிக்கும் குரலுடன் தன் விருப்பத்தை தெரிவித்தாள் அம்மா. விவேக்கிற்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. “தேங்கஸ் மா”என்ற வார்த்தைகளைத் தவிர வேறு பேசத் தெரியவில்லை. இதோ இன்று பேங்க வேலைகள் கொஞ்சம் பாக்கி இருப்பதாக செய்திவரவும், கடலூர் சென்று கொண்டிருக்கிறான் விவேக்.
“கைல கால்ல விழுந்தாவது வாங்கிடுடா”என சதீஷ் விளையாட்டாக சொன்னதைக் கேட்ட போது, விவேக்கீற்கு நிஜத்திலுமே அப்படி அனைவரது கைகால்களில் விழாத குறையாகத்தான் சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்ற எண்ணமே பிரதானமாகத் தோன்றியது.