மண்வாசம் 28 :
இடி இடிக்க மழை பொழிய
இருகரையும் பெருகி வர
பெருகி வரும் தண்ணியிலே
பெண்களெல்லாம் நீராட
மழைத்துளியும் மண்வாசமும் போட்டிபோட, சாலையில் இறங்கி கொடையோடு நடைபோட்டார் சுப்பாத்தாள்.
“இந்த மழையில கொட புடிச்சுக்கிட்டு எங்க போற சுப்பாத்தா?” என்ற ராமாத்தாளின் குரலில் நின்றவர்,
“அட இன்னிக்கு நம்ம நாயகி பேத்திக்கு வளைகாப்பு முடிச்சு கூட்டியாறாங்கல்லோ. அதேன் ஒரெட்டு போய் பாத்துப்போட்டு வரலாம்ன்னு” என,
“அப்படியா சமாசராம். சரி நீ முன்னால போ நான் பின்னாலயே வாரேன்” என்ற ராமாத்தாளிடம் விடைபெற்று,
நீராடி நீர் புழிஞ்சு
நீலவண்ணப் பட்டுடுத்தி
பட்டெல்லாம் நிலந்தூற
பாவயக்கா தேரோட
தேரோடும் வீதியிலே
தெப்பலாக ஓலையக்கா
பாடலைத் தொடர்ந்தபடி ஆறுச்சாமியின் இல்லம் நோக்கி நடைபோட்டார்.
அருந்தமிழின் வளைகாப்பு நிகழ்வு இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவிருக்க, கந்தசாமியின் இல்லம் உற்றார் உறவினர் சூழ காட்சியளித்தது.
ஆறுச்சாமி தன் மகளையும் மருமகனையும் மனதார ஏற்றுக் கொண்ட பின்னரே அவர்களை தன் இல்லம் அழைத்து வந்திருந்தார் கந்தசாமி. அதில் தன் சம்பந்தி மீதுள்ள மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு பெருகியது ஆறுச்சாமிக்கு. இருவரும் மனக்கசப்புகளை எல்லாம் மறந்து இன்முகமாய் இணைந்து நின்று அனைத்து உறவுகளையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
தான் வைத்திருந்த பொன்னாபரணங்களை எல்லாம் மருமகளுக்கு அணிவித்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார் சாரதா. அரசி அவருக்கு உதவி செய்துகொண்டிருக்க,
“சின்ன மருமகளே! இது நம்ம தமிழுக்கு போட வேண்டிய தங்க வளையல் இதைய கொண்டுபோய் தாம்பூலத் தட்டுல வெச்சுப்போட்டு வந்திரு கண்ணு” என,
“சரிங் அத்த” என அவள் அதை வாங்கிக் கொண்டு நகர,
“அரசி! இங்க வா கண்ணு” என்றழைத்தார் முத்துலட்சுமி.
“என்னங் அத்த” என்று கேட்க,
“பொட்டு பாரு கோணையா இருக்குது” என அவள் நெற்றியில் பொட்டை சரி செய்தவர்,
“ஏன் கண்ணு பூ வைக்காம இருக்கற. இந்தா வெச்சுக்கோ” என அவளுக்காக எடுத்து வைத்திருந்த மல்லிச் சரத்தை அவளிடம் கொடுக்க, அழகாய் புன்னகைத்தவள்
“நீங்களே வெச்சு விடுங்க” என்றாள்.
“திரும்பு” என முத்துலட்சுமி மல்லிச்சரத்தை அவள் கூந்தலில் சூடிவிட, தன் பேத்திகளை அவரவர் அத்தைமார்கள் தங்களது மகள்போல் பார்த்துக் கொள்வதைக் கண்டு பெருங்களிப்பு கொண்டார் ரங்கநாயகி.
வளையலை தாம்பூலத் தட்டில் வைத்த அரசி அனைத்தையும் ஒருமுறை சரி பார்த்தாள்.
பல்வேறு வகையான பூக்கள், பழங்கள், இனிப்புகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், சீர்வரிசை போன்றவற்றை வைக்கப்பட்டிருந்தது. சத்துமிக்க தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட ஏழுவகை சாதங்கள் படைக்கப்பட்டிருந்தது.
சுபமுகூர்த்த நேரம் நெருங்கி இருக்க அருந்தமிழையும் நன்மாறனையும் சடங்கு நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர். கந்தசாமி தேங்காய் உடைத்து வைக்க, இரண்டு குத்து விளக்குகளிலும் தீபமேற்றிய சாரதா சடங்குகளைத் துவங்கினார்.
மாறனின் பார்வை மனையாளை விட்டு அகலவே இல்லை. தாய்மையின் செழிப்பில் நின்றிருந்தவளிடம்,
“தமிழ்! ரொம்ப அழகா இருக்கீங்க” என்று சொல்லவும் மேலும் அவள் கன்னங்கள் சிவந்து அழகூட்டியது.
அவளுக்கு மாலை அணிவித்து நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து அவளிரு கைகளிலும் கன்னங்களிளும் சந்தனத்தைப் பூசினான். பின் அவளிரு கைகளிலும் வளையல் அணிவித்து பன்னீர் தெளித்து அறுகரிசி படைத்து தனது மனைவியும் கருவிலிருக்கும் குழந்தையும் நலமோடு இருக்க கடவுளை வேண்டினான்.
ஆறுச்சாமி தன் மகளையே அன்பொழுகப் பார்த்திருந்தார். இந்நேரத்தில் வள்ளியம்மாள் உடன் இருந்திருந்தால் தன் மகளைக் கண்டு அவர் வெகுவாய் மனம் மகிழ்ந்திருப்பார். அருந்தமிழும் இந்நேரத்தில் அவரை எதிர்பார்த்திருக்கக் கூடும். அதற்கு கொடுத்து வைக்காததை எண்ணி கலங்கிய விழிகளோடு நிற்க, அவர் கையை அழுந்தப் பற்றினாள் அரசி.
உடனே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,
“அக்காளோட போய் இரு கண்ணு” என்றார்.
அவரையே பார்த்தவள்,
“கம்பீரமா நிக்குறது தான் எங்கப்பாவுக்கு அழகு. இப்படி கலங்கிப் போய் நிக்கக் கூடாதுங்” என்றதும் அவர் அதரங்களில் ஒரு மென்னகை. அதோடு தனது மீசையை முறுக்கிக் கொண்டு அவளைப் பார்க்க, சின்ன சிரிப்புடன் சூப்பர் என்று கையசைத்து நகர்ந்தாள்.
மாறனைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் அருந்தமிழுக்கு வளையல் போட்டு ஆசி வழங்கிச் செல்ல, ரங்கநாயகியும் முத்துலட்சுமியும் மட்டும் ஒரு ஓரமாய் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். அவர்கள் புறம் பார்வையை பதித்த அருந்தமிழ்,
“ஆத்தா” என்று நாயகியை அழைக்க,
“என்ன கண்ணு” என உடனே அவளருகில் வந்திருந்தார்.
“வளையல் போட்டு விடுங்க”
“வேண்டாங் கண்ணு. நான் என்னத்துக்கு. அதேன் அத்தை அல்லாரும் போட்டச்சல்லோ”
“எல்லாரும் போட்டா என்னைய தூக்கி வளத்துன நீங்க போட வேண்டாங்களா? வளையல் போட்டு விடுங்க” என தமிழ் மீண்டும் சொல்ல,
“தமிழ் சரியாத்தான் சொல்லுறாங் ஆத்தா. உங்க ஆசிர்வாதம் எங்களுக்கும் குழந்தைக்கும் கண்டிப்பா வேணுங்” என்றான் மாறனும். நாயகி அப்போதும் தயங்க,
“போட்டு விடுங் ம்மா” என்று கந்தசாமியும் சொல்ல,
“அதேன் தமிழு ஆசையா கேக்குறாளல்லோ வாங்க” என புன்னகையுடன் சாரதா வளையல் எடுத்துக் கொடுத்தார். கண்கள் கலங்கிப் போயிருந்தது நாயகிக்கு. ஆறுச்சாமியைப் பார்க்க அவரும் செல்லுமாறு புன்னகைக்க, தன் மூத்த பேத்தியின் கை பிடித்து வளையல் அணிவித்த நாயகி
“மகராசரா இருக்கோணும்” என இருவரையும் மனதார வாழ்த்தினார். அடுத்து அருந்தமிழ்,
“அத்தை நீங்களும் வாங்க” என முத்துலட்சுமியையும் அழைத்தாள்.
வேலுச்சாமியின் இறப்பிற்கு பின் எதிலும் முன்னிற்பதில்லை அவர். தானாகவே ஒதுங்கிக் கொள்வார். அது விக்ரமனுக்கு மிகுந்த வருத்தமளிக்கும் ஆனால் அரசி வந்தபின் அக்குறை இல்லை. அவள் அனைத்திற்கும் முத்துலட்சுமியையே முன்னிறுத்துவாள். இன்று அருந்தமிழும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அவரை அழைக்க, விக்ரமனிற்கும் அரசிக்கும் அருந்தமிழின் இச்செயல் பெரிதாய் தோன்றியது.
முத்துலட்சுமி தயங்க,
“ஆசிர்வாதம் பண்ண நல்ல மனசிருந்தா போதுங் அத்தை. அது உங்களுக்கு கொட்டிக் கெடக்குது. வாங்க” என்று அழைத்துச் சென்றாள் அரசி.
அருந்தமிழுக்கு அங்கிருந்த அனைவரும் வளையல் போட்டிருக்க, பின் ஏழுவகை சாதம் ஊட்டினர்.
“சின்ன மருமகளே! இந்த பூவையும் வளையலையும் வந்திருக்குற அல்லாருக்கும் கொடு” என்ற சாரதா ஒரு தட்டை எடுத்துக் கொடுக்க, வருகை புரிந்த பெண்கள் அனைவருக்கும் அதை கொடுக்கச் சென்றாள் அரசி.
இறுதியாய் அருந்தமிழுக்கு திருஷ்டி சுத்திப் போட்டு வளைகாப்பு நிகழ்வை நிறைவு செய்து அவளை பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாகினர். மாறனை பிரிந்து செல்வதை எண்ணி அவள் கவலையுற,
“நாங்களே பாத்துக்குறோம்ங் அண்ணா” என்றார் சாரதா மருமகளை அனுப்ப மனமில்லாது.
“ரெண்டு குடும்பத்துக்கும் இது மொதோ வாரிசு. தமிழுக்கு தலை பிரசவம் வேற, நாங்கதேன் கூட இருந்து பாக்கோணும் சாரதா. என்ன ஒரு அஞ்சாறு மாசந்தேனோ. பொறவு உன்ர மருமகள உன்ர பேரக்கொழந்தையோட சேர்த்து அனுப்புறோம்” என நாயகி சொல்ல,
“அத்தன மாசமெல்லாம் பொறுத்துக்க முடியாதுங் ம்மா. கொழந்த பொறந்ததும் நான் வந்து கூட்டிட்டு போயிடுவேனுங்” என சாரதா சொல்ல அதற்கு அனைவரும் சிரிக்க, அரசி மட்டும் விக்ரமனின் கையை நோண்டினாள்.
அவன் என்னவென்று புருவம் உயர்த்த,
“நாளைக்கு எனக்கும் எதவது இப்படி சொன்னாங்கனா நீங்க அத்தையோட வந்து என்ர கூடயே இருந்துக்கோங் மச்சா” என்றாள் ரகசியமான குரலில். அதில் லேசாய் புன்னகைத்தவன்,
“நானெல்லாம் வரமாட்டேன் நீ வேணும்னா எங்கையும் போகாம என்ர கூடயே இரு” என்றான் அவளைப் போலவே ரகசியக் குரலில். உடனே நறுக்கென்று அவன் கையைக் கிள்ள,
“ஷ்ஷ்” என்ற அவனது சத்தத்தில்
“என்னாச்சு விக்ரமா” என்று முத்துலட்சுமி அவர்கள் புறம் திரும்ப,
“கொளவி கொட்டிருச்சுங் ம்மா” என்றான் அரசியை பார்த்துக்கொண்டே.
“சும்மா இருந்தா தானுங் அத்தை, இவரு கொளவி கிட்ட வம்பு பண்ணி இருப்பாரு அது கோபத்துல ஒரு போடு போட்ருச்சோட்டம்” என அரசி சொல்ல, விக்ரமன் அவளை முறைக்கவும்
“உங்களோட ஒரே அக்கப்போருதேன்” என புன்னகைத்துத் திரும்பினார் முத்துலட்சுமி.
அருந்தமிழின் முகம் வாட்டமாய் இருப்பது கண்டு,
“ரெண்டு நாள் நீயும் போய் தமிழு கூட இருந்துட்டு வா” என்றார் கந்தசாமி தன் மகனிடம். அவனும் சரியென்றுவிட, மாறனும் தன்னுடன் வருவது தெரியவும் தான் அவள் முகம் மலர்ந்தது.
சில மணி நேரத்தில் அனைவரும் ஆறுச்சாமியின் இல்லத்தை அடைய, அங்கு சுப்பாத்தாள் ராமாத்தாள் என ஒரு பட்டாளமே அவர்களுக்காக காத்திருந்தது.
அடுத்து அரும்பும் குலசேகரனும் அவர்களது குடும்பத்தாருடன் வருகை புரிய, அவ்விடமே கலகலப்பானது. அருந்தமிழும் மாறனும் அனைவரிடமும் வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள, அவர்கள் அனைவருக்கும் மதிய விருந்து ஆறுச்சாமியின் இல்லத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசியும் அரும்பும் உடனிருந்து அனைவருக்கும் பரிமாறினர். அனைவரும் உண்டு எழ, விக்ரமனையும் குலசேகரனையும் வெகுநேரமாய் காணாது அவர்களைத் தேடிக்கொண்டு வந்தனர்.
“ஆத்தா! மச்சானை பாத்தீங்களா” என அரசி நாயகியிடம் கேட்க,
“அப்பத்தா! மாமாவை பாத்தீங்களா” என அரும்பு வேலாத்தாளிடம் கேட்க,
“மச்சானை கேக்குதாம் மாமரத்து மயிலு மாமனைத் தேடுதாம் பூமரத்து குயிலு” என்று வந்து நின்றார் சுப்பாத்தாள்.
“பேட் வைப்ரேஷன்” என்ற அரசி உடனே அரும்போடு அங்கிருந்து நகரச் செல்ல,
“தமிழுக்கும் உங்ககோடத்தானோ கண்ணாலம் ஆச்சு. அவ எப்படி சட்டுபுட்டுன்னு நல்ல சேதி சொல்லிப்போட்டா. நீங்க எப்போ வாந்தி எடுக்கப் போறீங்க” என்று கேட்டுவைத்தார் சுப்பாத்தாள்.
அவர் புறம் திரும்பிய அரசி,
“உங்க கடை சூப்பை கொண்டாந்தீங்கனா குடிச்சுப்போட்டு இப்போவே ரெண்டு பேரும் வாந்தி எடுத்துர்றோம்” என,
‘இந்த நாயகி பேத்திக்கு எகத்தாளத்துக்கு என்னிக்கும் கொறைச்சல் இருக்காது’ என நினைத்து பார்த்திருக்க,
“ஒரு வயசு புள்ள வீட்ல இருந்தா போதுமே மொதல்ல எப்போ கல்யாணம்னு கேக்குறது சரி கல்யாணம் முடிஞ்சா கம்முனு போவீங்கன்னு பாத்தா அடுத்து எப்போ கொழந்தைனு கேக்குறது. நீங்க கேக்கலைனா இங்க ஒன்னும் நடக்காதாக்கும். அவங்கவங்க ஊட்டு பிரச்சனையை பாக்குறத விட்டுப்போட்டு அடுத்தவிக விசயத்துல மூக்க நுழைக்க மொதோ ஆளா கெளம்பி வந்துர்றது” என்று பொறிந்தாள் அரும்பு.
‘வேலாத்தா பேத்திக்கு நம்ம நாயகி பேத்தி எவ்வளவோ தேவலை. இவ என்ன இந்தப் பொறி பொறியுறா’ என அரும்பைப் பார்த்த சுப்பாத்தாள்,
“சும்மாவா சொன்னாங்க கொரைக்குறதுக எல்லாம் வேட்டைக்கு உதவாதுன்னு” என, கொதிநிலைக்குச் சென்ற அரும்பின் கை பற்றி இழுத்துக்கொண்டு வேகமாய் உள்ளே வந்தாள் அரசி.
“மொதல்ல இந்த சூப்புக்கு வெய்க்கோணும் பெரிய ஆப்பு. அதுக்குள்ள நீ ஏன் அரசி என்னைய உள்ளாரா கூட்டியாந்த?” என அரும்பு பொங்க,
“சூப்பு வெறும் அம்பு தான்” என்றாள் யன்னலின் அருகே சென்று நின்றுகொண்டு. அரும்பு புரியாது பார்க்க அரசி கண்காட்டவும், அவளும் யன்னலில் அருகே வந்து பார்த்தாள்.
அரும்பும் அரசியும் சென்று கொண்டதை உறுதி செய்தபின்,
“சொன்னதோட்டம் பேசிப் போட்ட சுப்பாத்தா. இனி அவளுக பாத்துக்குவாளுக. இந்தா இருபது ரூவா. கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் வாங்கி போட்டுக்கோ” என்று ரங்கநாயகி கொடுக்க,
“ரெண்டும் ரோசக்காரிக. எண்ணி பத்தே மாசத்துல பேரப்புள்ளைய கையில கொடுத்துருவாளுக” என வேலாத்தாள் சொல்ல,
“ஆனாலும் உன்ர பேத்தி என்னைய நெம்ப பேசிப் போட்டா வேலாத்தா” என சுப்பாத்தாள் புலம்ப, வேலாத்தாள் பெரிய மனது செய்து தன் சுருக்கு பையில் இருந்து இருபது ரூபாவை எடுத்துக் கொடுக்கவும் புன்னைகையோடு வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினார்.
அரசியும் அரும்பும் ஒருவரை ஒருவர் ஆழமாய் பார்த்துக்கொண்டு தலையசைத்தனர்.
சற்று நேரத்தில் முத்துச்சாமியும் மரகதவள்ளியும் கிளம்ப ஆயத்தமாக அவர்களோடு வேலாத்தாளும் கிளம்பிக் கொண்டார். மற்ற உறவுகளும் சென்றுவிட, அரும்பை இன்று தன்னுடன் இருக்குமாறு அரசி வற்புறுத்தவும் அவளும் குலசேகரனும் அங்கேயே தங்கிக்கொள்ள முடிவு செய்தனர்.
இரவு உணவிற்கு அரிசி பருப்பு சாதம் செய்த நாயகி அனைவரையும் வாசலில் வட்டமாய் அமரவைத்து அவர் கையால் உருண்டை பிடித்துக் கொடுக்க, உறவுகளோடு உட்கொள்ளும் நிலாச்சோறு உள்ளமெல்லம் தித்தித்தது.
மாறன் அவன் கையில் இருந்ததை தமிழுக்கு கொடுக்க அவன் கையால் உண்டவள்,
“இது எனக்குங்களா இல்ல…” என முடிப்பதற்குள்,
“முதல்ல நீங்க தான் தமிழ். உங்களுக்கு அடுத்து தான் நம்ம குட்டிமா” என்றான். அவள் கையில் இருந்ததை அவனுக்கு அளித்தவள்,
“உங்களுக்கு பொண்ணு தான் வேணுங்களா?” என்றதில் அழகாய் புன்னகைத்தவன்,
“எனக்கு ஒரு நம்பிக்கை, குட்டி தமிழ் தான் பிறக்கப் போறாங்கன்னு” என்று சொல்ல, நிறைந்த புன்னகையுடன் அவனையே பார்த்திருந்தாள் அருந்தமிழ்.
இதழ்கள் விரிய தன் அக்கா மாமாவை பார்த்திருந்த அரசி அப்படியே தன்னருகில் இருந்த விக்ரமனைப் பார்க்க, அவன் எதையும் கண்டுகொள்ளது அமர்ந்திருந்தான்.
‘ஜடம் ஜடம்’ என்று நினைத்து ஒரு பெருமூச்சை விட, அவள் முன் நீட்டப் பட்டிருந்தது அவன் கரம்.
அதில் அவன் புறம் பார்க்க,
“சாப்பாட்டுல எல்லாம் சரியா இருக்கான்னு பாரு. ஏதோ பத்தாத மாற இருக்கு” என்றான் முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு. அவன் கையால் ஒருவாய் உண்டவள்,
“சரியாத்தான் இருக்குங் மச்சா” என்றாள்.
“அப்படியா” என அவள் உண்ட மீதியை அவன் உண்டுவிட்டு,
“இப்பத்தான் எல்லாம் சரியா இருக்கு” என்று குறுநகையுடன் சொல்ல, விசயம் புரியவும் அரசி நாணத்தில் அமர்ந்திருக்க,
“வேங்கை உனக்கு வெக்கமெல்லாம் வருதா? எங்கே என்னைய கொஞ்சம் பாரு. சில சரித்திர சம்பவங்களை சேமிச்சு வெச்சுக்கோணும்” என கேலி செய்ய,
“ப்ச்.. போங்க” என திரும்பிக் கொண்டாள்.
“பருப்பஞ்சோத்துல அல்லாம் சரியாத்தேன் இருக்குது மாப்ள” என்ற குரலில் தன் இடப்புறம் திரும்பிய விக்ரமன்,
“அது எனக்கும் தெரியுமே மச்சா” என்று இயல்பாய் சொல்ல, அதிர்ந்துபோய் பார்த்த குலசேகரன்
“மாப்ள! பக்கத்துல இருக்குறவன் வயித்தெரிச்சலை இப்படி அநியாயத்துக்கு கெளப்பக் கூடாது” என, அவன் தோள் தட்டி சின்ன சிரிப்பை உதிர்த்தான் விக்ரமன்.
“அட சேகரா நல்லா சாப்புடு” என நாயகி குலசேகரன் கையில் மீண்டும் ஒரு உருண்டையை வைக்க, அவன் உண்ணாது அதையே பார்த்திருக்க
“என்ன மாமா உலக உருண்டையா இது? இப்படி உத்து பாத்துட்டு இருக்குற. மடாருனு வாய்க்குள்ள போடு” என்றாள் அரும்பு.
“அப்படியாஆஆ” என்றவன் அவள் வாயில் அதைத் திணித்திருந்தான்.
அவனது எதிர்பாராத செய்கையில் திகைத்தவள் உணவை கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு அதை விட பெரிதாய் உருண்டை பிடித்தபடி அவனைப் பார்க்க, அடுத்து அவள் செய்யப் போவதை அறிந்து அவன் சுதாரிப்பதற்குள் அவன் வாயில் திணித்திருந்தாள்.
நேரம் நகர ஆறுச்சாமி உறங்கச் சென்று கொண்டார். சிறிது நேரத்தில் முத்துலட்சுமியும் செல்ல, வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு நாயகி மட்டும் இளமைப் பட்டாளத்தோடு அமர்ந்திருந்தார்.
ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பாம் வெத்திலையாம்
போட்டா செவக்குதில்லே
பொன்மயிலே உன்மயக்கம்
“வயக்காட்டுக்கு போய்ட்டு பொழுதோட திரும்பையில உங்க அப்பாரு இந்தப் பாட்டை பாடிகிட்டே மாட்டு வண்டிய வெரசலா ஓட்டிட்டு வருவாரு” என்று தன் நினைவுகளில் மூழ்கி இருந்தார் நாயகி.
அதற்கே அருந்தமிழ் கொட்டாவி விட, அவளை அழைத்துக் கொண்டு உறங்கச் சென்றான் நன்மாறன்.
“வெத்தலை போடுறீங்களா கண்ணுகளா?” என்று கேட்க,
“இதெல்லாம் இப்ப யாருங் ஆத்தா போடுவா. உங்களையோட்டம் அந்தக் காலத்து ஆளுகதேன் போடுவாங்க” என்றாள் அரும்பு.
“என்ன கண்ணு இப்படி சொல்லிப்போட்ட. வெத்தலைல எத்தன விசயமிருக்குது தெரியுமா? இதப்பாரு நீளமா இருக்குறது ஆம்பள வெத்தலை குட்டையா இருக்குறது பொம்பள வெத்தலை” என, குலசேகரன் வேகமாய் ஒன்றை கையில் எடுத்தான். உடனே அவன் கையைத் தட்டிய அரும்பு
“மாமா அதைய கீழ போடு. அது பொம்பள வெத்தலை” என,
‘இவ ஒருத்தி’ என அவளை பார்த்தபடி அதை கீழே போட்டுவிட்டான்.
“நான் வெத்தல மடிச்சு அவருக்கு கொடுக்க அவரு எனக்கு கொடுக்க. ஆரு நாக்கு செக்க செவப்பா செவக்குதுன்னு போட்டி போட்டுக்குவோம்” என நாயகி ரசித்துச் சொல்ல,
“அப்பத்தா நம்ம அப்பாருகோட பெரிய போட்டியாத்தேன் போட்டுருக்கு” என்றான் குலசேகரன்.
“ஆரு ஜெயிச்சாங் ஆத்தா?” என அரும்பு கேட்க,
“உங்கப்பாருதேன். அத்தனை பாசம் வெச்சிருந்தாரு என்ர மேல” என்றார் நாயகி.
“நாக்கு செவக்குறதுல எல்லாம் பாசம் தெரியுதாக்கும் போங்காத்தா” என்ற அரசி,
“நீங் வாங் மச்சா. எனக்கு தூக்கம் வருது. நீங்களும் காலைல நேரமே வயலுக்கு போகோணுமில்ல” என விக்ரமனை அழைக்க,
“நீ போய் தூங்கு. எனக்கு தூக்கம் வரலை” என்றுவிட்டான்.
உடனே கண்களை உருட்டி அரசி முறைக்க,
“அட விக்ரமந்தேன் வரலைன்னு சொல்லுறானல்லோ. நீ போ கண்ணு” என்றார் நாயகி.
அங்கிருந்து எழுந்து சென்றவள் தூணின் மறைவில் நின்று அங்கு அலங்காரத்திற்கு தொங்க விட்டிருந்த செண்டுமல்லிப் பூவை எடுத்து விக்ரமனின் மேல் வீச, பூவை கையில் வைத்தபடி அத்திசையில் திரும்பியவன்
‘என்ன’ என்று புருவம் உயர்த்த,
‘காதுல வெச்சுக்கோங்க’ என்று சைகை செய்தாள்.
‘அடிங்க’ என எழுந்தவன்
“சரிங் ஆத்தா, நீங்கெல்லாம் பேசிட்டு இருங்க. நான் காலைல நேரமே வயலுக்கு போகோணும்ங். எனக்கும் தூக்கம் வருது” என,
“அதுக்குள்ளையா” என்றான் குலசேகரன்.
ஆமாம் என்று தலையசைத்துவிட்டு விக்ரமனும் நகர, அரும்பு குலசேகரனை அழைத்தாள்.
“அட இரு அப்பத்தா கிட்ட மீதி கதைய கேட்டுட்டு வர்றேன்” என, தன் தலையில் அடித்துக் கொண்டவள்
“நாளைக்கு சொசைட்டில ஏதோ வேலை இருக்கு நேரமே போகோணும்னு சொன்னயே மாமா” என,
“இல்லையே” என்றான்.
“குலசேகராஆ.. ஒழுங்கு மருவாதையா உள்ளார வந்திரு” என்று பல்லைக் கடிக்க,
“ஆத்தா! எனக்கும் திடுதிப்புன்னு தூக்கம் வந்துபோடுச்சுங். நீங்களும் அப்பாரும் வேட்டைக்கு போன கதைய நான் இன்னொரு நாளைக்கு கேட்டுக்குறேனுங்” என அவனும் எழுந்துகொள்ள,
“சரி அல்லாரும் போய் தூங்குங்க. நான் கதவை பூட்டியாறேன்” என்று எழுந்த நாயகி கதவை சாற்றி வரச் சென்றார்.
அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வெற்றிலைப் பெட்டியில் ஒன்று கூட இல்லாதது கண்டு,
“அட அத்தனை வெத்தலயையும் ஆரு தூக்கிட்டு போனா?” எனப் பார்த்திருந்தவர் பின் சின்ன சிரிப்புடன் அவர் அறைக்குச் சென்றார்.
அனைவரது மனம் தனிலும் மகிழ்ச்சி மட்டுமே. அளவற்ற நேசம் நெஞ்சத்தினில் வாசம் செய்ய, இன்பங்கள் சேர்ந்த வண்ணம் இருந்தன. இனி போராட்டங்களுக்கோ வலிகளுக்கோ இடமில்லை என்று நினைத்திருக்க, மாபெரும் போராட்டத்திற்கான விதையை அம்மண்ணில் விதைத்தது விடியல்.
மனப் போராட்டம் முடிவு பெற மண்ணின் போராட்டாம் துவக்கம் பெற்றது.
வாசம் வீசும்…!