ஜோஷ்வாவின் திடீர் அணைப்பு தன்னுள் விளைவிக்கும் தடுமாற்றங்களையும் பெயரறியா உணர்வுகளையும் தாண்டி இன்னும் தீராத ஒரு உறுத்தல் அவனை விலக்கி தள்ள சொல்லி கட்டளையிட,
“லீவ் மீ ஜோஷ்..”
என விலக முயன்றாள்.
அதில் சற்று தளர்த்தினாலும் அணைப்பை விடாமல்,
“ஷ்ஷ்… ஜென்சி.. கொஞ்ச நேரம்.. ஜெஸ்ட் லிசன் டு மை ஹாட்…”
ஹஸ்கியாய் காதில் ஒலித்த அவன் குரலில் தள்ள முயன்ற கைகள் அப்படியே நின்றது. காதுகளோ தன்னைபோல் அழுத்தமாய் அவனில் பதிய வேகமாய் துடிக்கும் இதயதுடிப்பை தன்னில் உணர்ந்தாள் அவள்.
“ட்ரமாடிக்கா பேசுறேன்னு நினைக்காத.. பட்.. க்ரேஸியா அடிச்சுக்குது பார் என் ஹாட்.. உன்னை இந்த மாதிரி ஹோல்ட் பண்ணனும்னு நினைக்கும் ஒவ்வொரு தருணமும் இப்படி தான்..
ஹாஸ்பிடலில் எனக்காக அழுதேனு தெரிஞ்சபோது… என்னை பத்தி நிறைய யோசிச்சனு தெரிஞ்சபோது.. என்னை நீ மட்டுமே நம்புறேனு தெரிஞ்சபோது.. எனக்காக நீ பேசுவேன்னு தெரிஞ்சபோது.. இதோ இப்ப கூட எனக்காக ஆதரவா தோள் கொடுக்க நீ முயலும்போது.. ஒவ்வொரு முறையும்.. வார்த்தையால வெளிப்படுத்த முடியாத எக்கசக்க ஃபீலிங்க்ஸை என் ஹாட்பீட் சொல்ல துடிக்கும்.. அது உன்னை இப்படி ஹக் பண்ணி உன்கிட்ட கொட்டி தீர்க்கும்வரை ஓயாது ஜென்சி.. ஆனால் அது கொட்டி தீர்க்க என்னோட ஆயுள் முழுசும் போதுமா தெரியல.. அதுவரை இந்த ஹக் எனக்கு வேணும் ஜென்சி..”
எந்த கள்ளமும் குறும்புமின்றி வெளிவந்த வார்த்தைகள் யாவும் அவளை மூச்சடைக்க தான் செய்தது.
“ஏ..ஏன்.. என்னென்னமோ பேசுற.. எல்லாமே விளைடாட்டு இல்ல ஜோஷ்..”
என்றாள் அலைபுறுதலோடு..
அவளை விலக்கி கைகளை கோர்த்து அவனை எப்பொழுது ஈர்க்கும் அவள் விழியோடு கலந்தவனாய்,
“ஐம் டேம் சீரியஸ்.. இந்த ஃபீலிங்க்ஸை எனக்குள்ள சப்ரஸ் செய்ய செய்ய வெடிச்சுடும்போல இருக்கு.. சத்தியமா தாங்க முடியல ஜென்சி..” என்றான்.
உண்மையில் அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. தன் வாழ்க்கையின் மிகவும் கணத்த நேரங்களை பற்றி பேசியதாலோ இல்லை அவளின் அணுசரணையாலோ உணர்ச்சிகரமாய் இருந்த ஆழ்மனது அத்தனையையும் கொட்டி தீர்க்க விழைந்தது.
“நீ கோபப்படுறது.. சிரிக்கிறது.. அழுத்தமா பார்க்கிறது.. அலட்சியமா பேசுறது எல்லாமே எப்படி எனக்குள்ள ஒரு அங்கமா மாறிச்சுனு இப்பவரை புரியல… எப்பவும் என் நினைப்புல இதெல்லாம் சுத்திட்டே இருக்கும் ஜென்சி.. எந்த பொண்ணும் உன் அளவுக்கு என்னை பாதிச்சதே இல்லை..”
அதுவரை ஏதோ ஒரு மாயலோகத்தில் மிதப்பது போல் திகைத்து நின்றவள் அவனின் கடைசி வரியில் பட்டென்று தரையில் விழுந்தது போல் எல்லாம் மறைந்தது.
அவன் பிடியில் இருந்த கையை விடுவித்துக் கொண்டு அவன் புஜத்தில் ஒரு விரலால் சுட்டிகாட்டி குத்தியவள்,
“எந்த பொண்ணும் இல்லையா.. அப்போ இந்த பொண்ணு..!!! கையிலே குத்தி வைச்சும் உங்க கேர்ள் ப்ரெண்டை மறந்துடாதீங்க ஜோஷ்வா”
என கூர்மையான பார்வையோடு சொல்லியவள் அவன் பதில் பேசும்முன் அவனைவிட்டு ஓடியிருந்தாள்.
***
மேரி ரோஸ் பள்ளியின் வெள்ளி விழா அன்று..!!! பிடித்தும் பிடிக்காமலும் மொத்த குடும்பமும் ஒன்றாய் குழும்பியது இந்த விழாவிற்கு அனைவருமே கிளம்பி கொண்டிருந்தனர்.
மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் அனார்கலி சுடிதார் அணிந்து ஃபிஸ்ப்ரைய்ட் பின்னல் முன்பக்கம் தோளோடு நிற்க மிதமான ஒப்பனையில் நேர்த்தியாய் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தபடி நின்றாள் ஜென்சி.
நேற்றைய பாதிப்பு இன்னமும் குறையவில்லை. நடந்தவை எல்லாம் இரவு முழுவதும் இமை சிமிட்டும் ஒவ்வொரு கனமும் மின்னல் போல் மின்னி மின்னி மறைய தூங்கவே இல்லை அவள்.
அதன் தாக்கம் தன் தோற்றத்தில் தெரியவில்லை என்பதில் திருப்தி கொண்டபின்பே இறுதியாய் தன் கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியே வர ஹாலில் ஜோசஃப் மட்டும் தயாராகி காத்திருந்தான்.
“ஹே ஸாரி ஜோ.. லேட் ஆகல தானே..? எங்க அனீ..?”
வேக நடையோடு அருகில் வந்து வினவ,
“ஸாரிலாம் எதுக்கு யா.. பார் இன்னும் என்னோட மேடம் ரெடியாகி வரலை.. வா.. இப்படி உட்கார்..” என்றவன்,
“என்னவோ உன்னிடம் ஒரு சேன்ஞ் தெரியுதே..?! ஒரு புது பொலிவு..!! என்ன ஜென்சி..”
என சிரிப்பும் ஆச்சரியமுமாய் கேட்க,
“ஆஹான்.. எனக்கு அப்படி எல்லாம் எதுவும் தோணலயே..”
என்றாள் அவளும் மற்றொரு ஸோஃபாவில் உட்கார்ந்தபடி..
ஆனால் ஜோசஃப் சொல்வதும் உண்மை தான். எப்பொழுதும் உணர்ச்சிகளை பெரிதாய் காட்டாமல் அழுத்தமான அவளின் முகபாவத்தில் தற்போது எல்லாம் அடிக்கடி காணப்படும் சிரிப்பாலும் குறும்பாலும் அந்த இறுக்கம் தளர்ந்து சிறு புன்னகை சுவடோடு இருக்க அது அவளுக்கு தனி சோபையை தந்தது.
“உனக்கு இதெல்லாம் தோணாதே.. புதுசா என்ன கேம் ப்ரோக்ரேம் பண்ணலாம்னு தான் தோணும்..”
என ஜோசஃப் கிண்டலடிக்க,
“பரவாயில்லை.. இதை காம்ப்ளீமெண்டாவே நான் எடுத்துகிறேன்..” என தலையசைத்து சொன்னவள்,
“எல்லாரும் போயிட்டாங்களோ..”
என்றாள் கேள்வியாய். அவளின் பார்வையோ மாடி படிக்கட்டை தொட்டு மீண்டது.
“ஆமா… எனக்கும் தெரியல.. தாத்தா தான் சொல்லிட்டு போனாங்க.. அப்பா என் மேல கோபமா இருக்கிறதால என்னை அவாய்ட் பண்றாராம்..”
பெருமூச்சோடு அவன் சொன்னதில்,
“கோபமா.. ஏன்..”
என்றாள் யோசனையாய்..
“எத்தனை நாள் எதுவும் நடக்காத மாதிரி என்னால இருக்க முடியும் ஜென்சி.. நேத்து என் மனசுல உள்ளதை பேசினேன்.. இனியும் நான் அவர் பக்கம் இருக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.. என்னோட இந்த மாற்றத்தை எதிர்பார்த்து இருக்க மாட்டார்.. அந்த கோபம் அப்பாவுக்கு.. என்ன வந்தாலும் சரி நான் என் பிடியில் உறுதியா இருக்கேன்..”
மரத்த குரலில் ஜோசஃப் பேச
நேற்று ஜோஷ்வா மூலம் தெரிந்து கொண்ட விஷயங்களால் அவர் மீது அவளுக்கும் வெறுப்பும் எரிச்சலும் இருந்தாலும் அவன் தந்தை பற்றி அவனிடமே தவறாக கூறினால் அவனுக்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் மேற்கொண்டு எதுவும் பதில் சொல்லாமல் அமைதி காத்தாள்.
“சரி.. அதை விடு.. நீ வேற ஈவ்னிங்கே டிக்கெட் புக் பண்ணிட்டேன்னு சொல்ற.. ஏன் ஜென்சி.. எங்களோடவே சேர்ந்து மும்பை போகலாம் தானே… என்ன பங்ஷன் முடிஞ்சதும் நேர ஃப்ளைட் ஏற போறியா..”
அவனே மீண்டு வேறு பேச்சிற்கு மாற,
“உண்மையா எனக்கு வேலை இருக்கு ப்பா.. போய் ஆகணும்.. இத்தனை நாள் இருந்ததே எனக்கு ஆச்சரியம் தான்.. பட்.. இந்த மூணு நாள் ரொம்பவே சந்தோஷமா இருந்தேன்.. இந்த நேரத்தில் எனக்கு ரொம்ப தேவையான ஒன்னா தான் இருந்திருக்கும் நினைக்கிறேன்.. பிகாஸ் ஒரே மாதிரி ஸ்கெடியூலில் ஓடிட்டே இருந்தபோது நின்னு நிதானிக்க கிடைச்ச ஒரு சின்ன ப்ரேக் மாதிரி இருந்துச்சு.. தேங்க்ஸ் டு யூ ஜோ….”
என்றவள் குரலிலும் அந்த சந்தோஷமும் நன்றியும் இருந்தது.
“நீ சந்தோஷமா இருந்தாலே எனக்கு ஹேப்பி தான் ஜென்சி.. இதுக்கு ஏன் தேங்க்ஸ்..”
“தேங்க்ஸ் சொல்லி தான் ஆகணும்.. என்னை காம்ப்ரமைஸ் பண்ணி.. தாத்தாட்ட எனக்காக பேசி… ஜோஷ்வாவோடவே என்னையும் வரா மாதிரி ப்ளான் பண்ணியது எல்லாமே நீ தானே.. நீ இன்சிஸ்ட் செய்யலனா நான் இங்க வந்திருக்க மாட்டேன்..”
“அது சரி.. வந்த நோக்கம் என்னாச்சு.. ஜோஷ்வா வாயாலே உண்மையை வரவைப்பேன்னு சொன்னீயே.. பேசிட்டீங்களா..”
என அவன் கேட்க அதற்கு அவள் பதில் சொல்லும் முன் அனீயும் தயாராகி வந்துவிட பேச்சும் அத்தோடு நின்று கிளம்பி வெளியே சென்றவர்கள் உள்ளே இருவரின் பிற்பாதி உரையாடலை மட்டுமே கேட்டுவிட்டு அதிர்ந்திருந்து நின்ற ஜோஷ்வாவை கவனிக்கவே இல்லை.
ஜென்சியே உறங்காதபோது அவன் மட்டும் எங்கணம் உறங்கியிருக்க போகிறான்.
இரவு முழுவதும் அவசரப்பட்டு விட்டோமோ என்று தான் அவனுக்கு மீண்டும் மீண்டும் தோன்றியது.. இவற்றை பேசவேண்டும் என்றெல்லாம் அவன் எண்ணவில்லை.
ஆனால் அவளின் நெருக்கத்தில் அவனையும் மீறி நடந்தது. அதற்கு அவளின் எதிரொலியில் தான் தன் தவற்றை உணர்ந்தான். இன்னும் தெளியப்படாத விஷயங்கள் இருக்க இதனை முந்தி சொல்லியிருக்க கூடாது என்றே தோன்ற தன் பதிலை கேட்க விருப்பம் இன்றி புறகணித்து சென்றதால் இன்னும் தவிப்பாய் இருந்தது.
அங்கங்கே பிட்டு பிட்டு தெரிந்த விஷயங்களை கோர்த்தால் அவளுக்கு தேவையில்லாத கற்பனையை கொடுக்குமே..!! அதனால் அவள் மனம் என்ன பாடுபடும் என எண்ணி எண்ணி கவலை கொண்டவனுக்கு மற்றைய எதிலும் கவனம் செல்லவில்லை.
அதனால் விழாவிற்கு செல்லும் ஆர்வமேயின்றி தாமதமாய் கிளம்பி அவன் இறங்கி வந்தபோது தான் சரியாய் நண்பர்களின் நன்றி நவிலும் நிகழ்வு அரங்கேற ஸ்தம்பித்தான்.
விமான நிலையத்தில் முதலில் சந்தேகித்தாலும் அதன்பின் முழுமையாய் தற்செயல் என்றே நம்பினான். அதிலும் ஜென்சியின் எதையும் நேரடியாய் பேசும் குணம் அறிந்தவன் என்பதால் அவள் மேல் துளியும் சந்தேகம் தோன்றவில்லை.
ஆனால் அவர்களின் இந்த சம்பாஷணையில் எல்லாம் ஜோசஃப்பின் திட்டதின்படி அரங்கேறிய நாடகம் என்று புரிய நேற்று தந்தையுடன் சண்டையில் அவன் தலையிடாதது.. ஜென்சிக்கு எப்படி தாத்தாவின் அறிமுகம் எல்லாம் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டு ஏமாற்ற பட்டுள்ளோம் என பொட்டி அறைந்தாற்போல் உறைத்தது.
‘தான் மருத்துவமனையில் இருந்தபோது கூட காண வராதவள் இங்கே இவ்வளவு தூரம் வந்தது ஜோசஃப்பின் வார்த்தைக்காக தானா..? இதனை அவள் நேரடியாய் சொல்லி கேட்டு இருந்தால் கூட சற்றும் தயங்காமல் சொல்லியிருப்பானே..!! ஏன் தன்னிடம் இணக்கமாய் பேச வேண்டும்..நட்பாய் பழகவேண்டும்.. எல்லாம் அவனுக்காக தானா..!! இதில் நான் பேசினதை சரியா புரிஞ்சுக்காம கவலை படுவாளேனு வருத்தப்பட்ட நான் எவ்வளவு பெரிய முட்டாள்..!”
வலிக்க வலிக்க புரிந்த விஷயங்களால் மனம் இரணமாக அங்கேயே கல்லாய் சமைந்திருந்தான்.
“‘டூ இட்’ ‘டூ இட்’நு உன்னை நான் தான் போக் பண்ணிட்டே இருப்பேன்.. அதுக்கு பதிலா என்னை எங்கே செய்யணுமோ அங்கே அடிச்சு பழிவாங்கிட்ட சகோதரா..!! வெல் ப்ளன்ட் அண்ட் எக்ஸிக்கியூடட்..”
வெறுப்பாய் சபாஷ் போட்டது மனம்..!!
இதை எதையும் உணராமல் பள்ளிக்கு வந்ததில் இருந்து ஜோஷ்வாவை தான் தேடியது அவள் விழிகள்..!
அன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் மாணவ – மாணவிகள் அதற்கான முன்னேற்பாடுகளிலும் ஆசிரியர்கள் அவரவருக்கு கொடுத்த பணிகளை செயல்படுவதிலும் முனைப்பாக இருக்க ஒருப்பக்கம் சிறப்பு விருந்தினர்களுக்கான வரவேற்பு என பள்ளி விழாகளுக்கே உரிய பரபரப்பும் உற்சாகமும் வளாகம் முழுவதும் நிறைந்திருந்தது.
விருந்தினர்களுக்கான அறையில் தான் அமல்ராஜ்,ப்ரியா மற்றும் பலரும் இருக்க அங்கேயும் ஜோஷ்வா இல்லை எனவும் யாரிடமோ பேசிக் கொண்டிருந்த ரெமிஜியஸிடம்,
“தாத்தா.. ஜோஷ்வா எங்கே..”
என ஜென்சி விசாரிக்க
“நானும் அவனை தான் ஜென்சி தேடிட்டு இருக்கேன்.. இன்னும் ஆளை காணும்.. எங்க போனான் தெரியல..”
என்று அவரும் சொல்லவும் ‘இங்க வராமல் எங்க போயிருப்பான்..’
யோசனையில் மூழ்கியவளாய் அனீயோடு அவர்களுக்கான இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டாள்.
இங்கே இவர்களுக்கு பின்னால் வந்துக் கொண்டிருந்த ஜோசஃப் கண்டதும் தன் கணவர் கவனம் கவராது அவனை தனியே அழைத்து சென்ற ப்ரியா,
“என்னடா உனக்கு அப்பாவுக்கும் பிரச்சனை.. நேத்து வரை நல்லா தானே இருந்தீங்க.. இபப் என்ன..?? ரொம்ப கோபமா இருக்கார்..”
என டென்ஷனாய் கேட்க,
“ஏன்னு அப்பாவையே கேட்க வேண்டியது தானே ம்மா..”
என்றான் அமைதியாக..
“கேட்டா என்கிட்டையும் எரிஞ்சு விழுகிறார்.. நீயும் அவரை கோபப்படுத்தி பார்க்காதடா.. எதுவா இருந்தாலும் பேசி மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடி.. போ..”
“என்ன நடந்துச்சுனே தெரியாது.. அப்புறம் ஏன் ம்மா சாரி கேட்க சொல்ற.. ஏன் அப்பா தப்பே பண்ணிருக்க மாட்டாரா..?”
“என்னவா இருந்தால் என்ன..? அப்பா தானே ஜோசஃப்.. விட்டு கொடுத்து போயேன்.. நேத்துல இருந்து ரொம்ப சிக்ரெட் பிடிக்கிறார்.. டாக்டர் அந்த வாசனையே கூடாதுனு சொல்லியிருக்கார்ல.. எனக்கு பயமா இருக்கு.. நீ போய் பேசி சமாதனம் படுத்து ஜோ.. நீ சண்டை போட்டால் அவரால தாங்க முடியாது.. பாவம் டா அவர்..”
பிடித்து அவனை தள்ளாத குறையாக அமல்ராஜூடன் பேச சொல்லி கட்டாயப்படுத்த,
“அவர் பாவமா.. அவரையே நம்பிட்டு இருக்க நீயும் நானும் தான் பாவம்..” என எரிச்சலாய் சொன்னவன் ப்ரியாவின் முகவாடலை தாங்க முடியாமல் தந்தையை அணுகி பேச முற்பட்டான்.
“ப்பா..”
என அவன் அழைக்கவும்,
“என்ன..!! நேத்து அனாவசியமா என்கிட்ட சண்டை போட்டுட்டோம்னு கில்ட்டியா இருக்கா..? யோசிக்காமல் எதையும் பேசிடகூடாது ஜோசஃப்..உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சு இருக்கேன் தெரியுமா.. எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்.. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்…”
என போனால் போகிறது என்பது போல் அவர் பேச,
“ப்பா.. எனக்கு எந்த கில்ட்டியும் இல்ல.. என் முடிவுல இப்பவும் சரியா தான் இருக்கேன்.. மாற வேண்டியது நீங்க தான் ப்பா..இனியாவது புரிஞ்கோங்க.. நீ செய்யுறதோட ஆழம் உங்களுக்கு புரியலயா..? நல்லதுனு நம்பி தானே வாங்குறாங்க.. அதை ஏமாத்தி பிழைக்க என்ன அவசியம் சொல்லுங்க.. பணம் தான் காரணம்னா நம்மகிட்ட இல்லாத பணமா ப்பா..!! வேணாம் ப்பா.. ப்ளீஸ்.. இப்பவும் கெட்டு போகல.. நியாயமா இருப்போமே..?”
என அவரை மாற்றிவிடும் நோக்கோடு தன்மையாகவே சொல்ல அதற்கு அவர் முகத்தில் அலட்சியம் தவிர வேறெதுவும் இல்லை.
“எனக்கு நீ பாடம் சொல்லாத ஜோசஃப்.. எது நல்லது கெட்டதுனு உனக்கு சொல்லி கொடுத்தவனே நான் தான்.. என்னைவிட நீ இந்த உலகத்தை ஒன்னும் பார்த்திடல.. பணத்தை தாண்டி பிஸ்னெஸ்ல எவ்வளவோ இருக்கு.. என்ன செய்யுறோம்னு தெரிஞ்சுதான் செய்றோம்.. இத்தோட விளைவு வேற ஒருத்தனுக்கு லாபம்..!! அதனால கிடைக்கும் பிஸ்னெஸ் டீல்னு இது சங்கிலி தொடாரா போயிட்டே இருக்கும்.. சும்மா ஒன்னும் இந்த உயரத்திற்கு வந்திடல ஜோசஃப்.. நீயும் அவனை மாதிரி ஆகிடாத அவ்வளவு தான் சொல்வேன்..”
மிதப்பும் கர்வமும் நிறைந்த குரலில் பேச இவரிடம் சொல்லி பயணில்லை என புரிந்தவனாய் பெருமூச்சோடு பதில் பேசாமல் அங்கிருந்து நடக்கவிருக்கும் கலையரங்கத்திற்கு சென்றுவிட்டான்.
தமிழ்தாய் வாழ்த்தோடு அன்றைய நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட ஒரு மணிநேரம் சென்றபின் தான் அங்கே வருகை தந்தான் ஜோஷ்வா. அவன் உள்ளே வரவுமே கண்டுவிட்ட ஜென்சி இடையில் சட்டென்று எழுந்து கொள்ள முடியாது என்பதால் அவன் தன் பக்கம் திரும்புகிறானா என்று பார்த்து பார்த்து ஏமாற்றம் தான் கொண்டாள்.
‘நேத்தி நான் டாட்டூ பத்தி சொன்னதில் கோபம் ஆகிட்டானா..?? ஏன் என்னை அவாய்ட் பண்ணனும்..’ அவள் மண்டை காய அவனையே பார்த்திருந்தவளுக்கு வேறெதிலும் கவனம் செல்லவில்லை.
ஜென்சியின் பார்வை தன்னையே தொடர்வதை உணர்ந்தாலும் சற்று அவள் புறம் திரும்பவில்லை. மனதை போலவே முகமும் பாறையாய் இறுகியிருக்க அனைவரையும் கடந்து அவன் நேராய் சென்று அமர்ந்தது ஜோசஃப்பின் அருகில் தான்.
குன்னூர் வந்ததில் இருந்து இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவும் இல்லை. எதிரெதிரே பார்த்து கொள்ளவும் இல்லை. ஆதலால் திடீரென தன் அருகில் வந்து ஜோஷ்வா அமரவும் ஏதோ பேச நினைக்கிறான் என்று புரிந்தது.
அதே போல் அவனும்,
“என்ன சகோதரா.. என்னை பார்த்தாலே பாய்ஞ்சு வருவீங்க.. இப்ப ரொம்ப அடக்கி வாசிக்கிறா மாதிரி இருக்கு..”
நக்கல் தொனித்து வந்த கேள்விக்கு,
“நீ என்னவேணாலும் பேசிக்கோ.. உன்கிட்ட சண்டைபோடும் மூட்ல நான் இல்ல..”
என்றான் ஓய்ந்த குரலில்..
“ஏன் நீ வைச்ச உளவுதுறை என்னை பத்தி உங்களுக்கு சாதகமா எதுவும் சொல்லலேனா..?”
ஜோஷ்வா ஜென்சியை உளவுதுறை என்று குறிப்பிட்டு சொல்ல அவனோ தான் வழக்கமாக அவனை கண்காணிக்க வைக்கும் ஆளை பற்றி பேசுகிறான் என அர்த்தம் கொண்டு,
“ஆமா.. நீ ஒன்னு நினைச்சு செய்வ.. அப்பா ஒன்னு நினைச்சு செய்வார்.. ரெண்டு பேரோட வீம்புக்கு என் தலையை தானே உருளுது… நீங்க ரெண்டு பேருமே சொல்லாமல் உண்மை என்னான்னு வேற எப்படி தான் நானும் தெரிஞ்சுகிறது..”
“உன்னோட இத்தனை வருஷம் பகைமை பாராட்டனும்னு எனக்கு என்ன ஆசையாடா..? நான் நம்ப மாட்டேன்னு நீயா முடிவு பண்ணிகிட்டா நான் பொறுப்பா..!! நடக்கவே நடக்காத ஒரு பொய்யை சொல்லி எப்பவும் என்னை டென்ஷன் ஆகிவிட்டு பார்க்கிறது உனக்கு விளையாட்டா இருக்கா..? ஐ ஃபீல் சோ ஸ்டூப்பிட்.. ஊரு உலகத்துல எவனுக்கும் இப்படி ஒரு தம்பி கிடைக்க மாட்டான்..”
என பல்லை கடித்து ஆதங்கமாய் ஜோசஃப் பேசியதற்கு எந்த எதிர்ப்பும் இன்றி,
“சரி.. அப்படி ஒரு தம்பி கிடைச்சதை நினைச்சு அப்புறம் சந்தோஷம் பட்டுக்கலாம்.. இப்ப உன் ஆசை அப்பாவை தாக்க பெரும்பிரச்சனை வந்திட்டு இருக்கு.. அதில் இருந்து அவரை எப்படி காப்பாத்தலாம்னு அதை பத்தி யோசி.. பிரயோஜனமா இருக்கும்..”
என கேஷ்வலாய் சொல்ல அதில் அவன் புருவம் முடிச்சிட்டது.
அவன் பக்கம் முழுதாய் திரும்பியவன்,
“என்ன ஜோஷ் பண்ண..”
என பதட்டமாய் கேட்டான். உதடுகளை அலட்சியமாய் வளைத்து அங்கே பார் என்பது போல் சமிக்ஞை காட்ட அங்கு அமல்ராஜ் யாருடனோ பதட்டமாய் அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது தெரிய மீண்டும் திரும்பி இவன் முகத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாய் அவரை நோக்கி ஓடினான்.
“என்னாச்சு ப்பா.. ஃபோன்ல யாரு..”
அவர் அலைபேசியை வைத்ததும் இவன் பதட்டமாய் அவர் இருந்த டென்ஷனில் ஜோசஃப் மீதிருந்த கோபத்தை மறந்தவராய்,
“இதயா தான்… அங்கே பெரிய பிரச்சனை ஆகிடுச்சு..போலீஸ் வந்து இருக்காம்..” என்றார்.
விஷயம் இது தான்..!!! லாக்டோ குளிர்பானம் தொடர்ந்து எடுத்துக்கொண்டதால் பதினைந்து வயது சிறுவன் சிறுகுடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எய்தியுள்ளான். அது மருத்துவ ரீதியாய் நிரூப்பிக்கப்பட்டதால் அச்சிறுவனின் குடும்பத்தாரும் பொதுமக்களும் நியாயம் கோரி போராட்டத்தில் இறங்க கலவரம் வெடித்தது.
விஷயம் பெரிதாகாமல் மறைக்க நினைத்தாலும் முடியாதபடி (ஜோஷ்வாவின் திருவிளையாடலால்) மேலிடத்தில் அழுத்தம் கொடுக்க இவர்கள் வீட்டில் போலீஸ் முற்றுகை இட்டிருந்தது.
இதனை ஜோசஃப்பிடம் சொல்லும்போதே அவர் குரல் தடுமாற அடுத்து என்ன என்று யோசிக்கும் திறனையும் இழந்து நின்றார்.