காதல் 18:
மறுநாள் எப்படியாவது அந்த தலைவரை சந்தித்து உண்மை எல்லாம் சொல்லி விட வேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும், அன்று இரவு ஏனோ சக்திக்கு தூக்கம் வரவேயில்லை. பயம் ஒரு பக்கம் அவளைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. தான் செய்வது சரியா? என்ற சந்தேகம் ஒரு புறம். எல்லாம் சரியாக நடக்குமா..? என்ற சந்தேகம் ஒரு புறம்.
அங்கே லெனின்னுக்கும் இவள் மேல் கோபம் பொங்கிக் கொண்டு தான் இருந்தது. தேவன் சொன்னதற்காக அமைதியாக இருந்தான். இருந்தாலும் நான்கு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதா..? என்ற கோபம் அவனுக்குள் கனன்று கொண்டு இருந்தது.
மறுநாள் வேக வேகமாக கிளம்பினாள் சக்தி. தேவனுக்கும் விஷயம் தெரியும் என்பதை அந்த நேரத்தில் மறந்து விட்டிருந்தாள். அவள் நினைப்பில் இருந்தது எல்லாம் நடக்கும் எல்லா தப்புகளையும் அன்று வெளியே கொண்டு வர வேண்டும் என்பது தான். வீட்டைப் பூட்டி வெளியே வரும் போது தான் கவனித்தாள், அவளைக் கண்காணிக்க இரண்டு பேர் வெளியே நிற்பதை. அவர்களைப் பார்த்ததும், அவளுக்கு லேசான பதற்றம் தொற்றிக் கொள்ள, ஒரு நிமிடம் யோசித்தாள்.
பிறகு எதையோ மறந்தவள் போல, மீண்டும் வீட்டைத் திறந்து உள்ளே சென்றாள். பதட்டத்தில் அவளுக்கு என்ன செய்வதேன்று தெரியவில்லை. வீடியோ ஆதாரங்கள் அனைத்தும் அவள் போனிலும் இருந்தது. ஒரு பென்டிரைவிலும் இருந்தது. அந்த பென்டிரைவை மட்டும் ஒரு ஜிப் கவரில் போட்டவள், சுற்றும் முற்றும் பார்த்து, அதை அந்த மாவு டப்பாவில் மாவிற்குள் மறைத்தாள். தன்னுடைய இன்னொரு பட்டன் போனை எடுத்தவள், அதை சைலன்ட் மோடில் போட்டு விட்டு, தன்னுடைய ஆடைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள். தேவையான துணிகளை ஒரு பேக்கில் எடுத்து தயாராக வைத்தாள்.
“எப்படியும் இன்னைக்கு சாயந்தரமே இங்க இருந்து கிளம்பிடனும்..!” என்று நினைத்தவள், அந்த அவசரத்தில் ஷிவானிக்கு போன் செய்ய மறந்தாள். பிறகு எப்போதும் போல் வீட்டைப் பூட்டி வெளியே வர, அவள் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் லெனின் காதுக்கு கொண்டு சென்றிருந்தனர் அந்த இருவரும்.
“அப்படியே அவளை பாலோ பண்ணுங்க. அவ நம்ம கண் பார்வையிலேயே இருக்கணும்..!” என்றான் லெனின்.
“அவ மூஞ்சியே சரியில்லைண்ணே..! இவ ஏதோ விவகாரமா பண்ண போற மாதிரியே இருக்கு..!” என்று அந்த இருவரில் ஒருவன் சொன்னான்.
“நம்மை மீறி அவ எதுவும் செய்ய முடியாதுடா..!” என்ற லெனினுக்கும் மண்டைக்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருந்தது. அவள் ஏதோ தாறுமாறாக செய்யப் போகிறாள் என்று.
லெனின் நினைத்ததைப் போல, அன்று முழுவதும் அவளால் அந்த முக்கிய புள்ளியைப் பார்க்க முடியாமலேயே போனது. தன்னைச் சுற்றி பெரிய கண்காணிப்பு வளையமே இருப்பதை நன்றாக உணர்ந்து கொண்டாள் சக்தி. அவள் நினைத்தது நடக்காமல் போன இயலாமை வேறு ஒரு பக்கம் அவளைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது.
“இதெல்லாம் நடக்கும்ன்னு எனக்குத் தோணலை சக்தி. பேசாம நீ இங்க இருந்து எஸ்கேப் ஆகுறது தான் பெட்டர். நேரா அந்த போலீஸ் ஆபிசரை போய் மீட் பன்றதைத் தவிர உனக்கு வேற வழியில்லை. நீ என்னதான் தலை கீழா குட்டிக் கரணம் போட்டாலும், இவங்க கிட்ட நீ நினச்சது நடக்காது..” என்றது அவளின் மனசாட்சி.
“சரிதான்..! நான் முதல்ல இங்க இருந்து கிளம்பணும்..! அதுக்குப் பிறகு மத்ததைப் பார்த்துக்கலாம்..!” என்று ஒரு திடமான முடிவுக்கு வந்தாள் சக்தி. சிவா அவளைப் பார்க்க வருகிறேன் என்ற விஷயத்தையே மறந்து போனால் சக்தி. அவளுடைய கவனம் முழுவதும் இந்த விஷயத்திலேயே இருக்க, அதை மறந்து போனாள்.
ஆனால் தேவனும், லெனினும் அவளை விட திட்டம் தீட்டியிருப்பதை மறந்து போனாள்.
“அண்ணே..! இவளை நம்ப முடியாது. என்னதான் நம்ம கண்காணிப்புல இருந்தாலும், இவ ஏதாவது திகிடுத்தனம் செய்வா. அந்த ஷிவானிகிட்ட இவ பேசுனாலும், சிக்கல் தான். இவளை நம்ப இடத்துக்கு முதல்ல தூக்கணும். அதுக்கப்பறம் என்ன செய்றதுன்னு யோசிக்கலாம்..!” என்று தெளிவாக ஸ்கெட்ச் போட்ட லெனின், அவளை கடத்தியிருந்தான்.
நான்கு நாள் கெடுவை சக்தி எதிர்பார்த்திருக்க, இவ்வளவு சீக்கிரம் அகப்படுவோம் என்று அவள் எண்ணவில்லை.
“உன் வேலையை மட்டும் பாருன்னு எவ்வளவு தூரம் அழுத்தி அழுத்தி சொன்னேன்..! எங்க கேட்ட..? பாரு வீணா இப்ப சாகப் போற..!” என்றான் லெனின்.
பயத்தில் அவளுக்கு முகம் எல்லாம் வியர்த்துக் கொட்ட, இதயத்தின் துடிப்பு அவளுக்கு இரண்டு மடங்காகக் கேட்டது.
“என்ன வீடியோ ஆதாரம் வச்சிருக்க..?” என்றான் லெனின்.
“என்கிட்டே எந்த ஆதாரமும் இல்லை..! என்னை விட்டுடு” என்றால் சக்தி.
“உன்னை வெளிய விட்டா, நாங்க உள்ள போகணுமே…? எங்க தலையில நாங்களே எப்படி மண்ணை அள்ளிப் போடுவோம்..?” என்றான் லெனின் குதர்க்கமாக.
“நிஜமா என்கிட்டே எந்த ஆதாரமும் கிடையாது..!” என்று அவள் வேண்டும் என்றே சொல்ல,
“நீ சொல்றதை நம்ப, நான் ஒன்னும் முட்டாள் இல்லை…” என்றவன் அவளின் செல்போனைப் பிடுங்கினான்.
“பாஸ்வோர்ட் சொல்லு..!”
“சொன்னா நம்புங்க..! அதுல எதுவும் இல்லை..!” என்றாள் சக்தி.
“இப்ப சொல்லப் போறியா இல்லையா..?” என்று அவன் அதட்ட, திக்கித் திணறி சொன்னாள். அவள் சொன்ன உடன் மொபைல் திரையைத் திறந்தவன், அதற்குள் சென்று ஆராய்ச்சி செய்ய, அதில் இம்பார்ட்டென்ட் என்ற போல்டரில் இருந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்து போனான் லெனின். அத்தனையும் பக்கா சாட்சியாக இருக்கும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு.
“ஒண்ணுமே இல்லைன்னு சொன்ன..? இவ்வளவு வச்சிருக்க. பாடம் நடத்துறதைத் தவிர எல்லா வேலையும் பார்த்திருக்க..?” என்றவன் அவளை ஓங்கி அறைய, அவளின் கன்னம் வீங்கிப் போனது. அதில் இருந்த அனைத்தையும் அழித்தவன், அந்த போனையே சுக்கு நூறாக உடைத்தான்.
“இதையெல்லாம் பெட்ரோல் ஊத்தி கொளுத்துங்கடா..!” என்றவனின் முகம் விகாரமாக மாறியது.
“உன்னைய நல்லவன்னு நினச்சேன். எங்க அண்ணியும் உன்னை நல்லவன்னு நம்புறாங்க..! ஆனா நீ, இப்படி ஒரு கேடு கெட்டவனா இருப்பன்னு நினைக்கலை..!” என்று சக்தி கோபமாய் சொல்ல,
“ஏண்டி சொல்ல மாட்ட. உன்னையெல்லாம் இன்னும் உயிரோட வச்சு பேசிட்டு இருக்கேன் பாரு.. இதுவும் பேசுவ..? இன்னும் பேசுவ..? இன்னையோட உன் கதையை முடிக்கிறேண்டி..!” என்று லெனின் சொல்ல,உள்ளுக்குள் நடுங்கிப் போனாள் சக்தி. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“என்னைய இப்போ கொலை பண்ணா, கண்டிப்பா உனக்கு களி தாண்டா. நான் ஏற்கனவே ஆன்லைன் கம்ளைன்ட் பண்ணிட்டேன். எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, அதுக்கு நீயும் அந்த தேவனும் தான் காரணமுன்னு..!” என்றால் சக்தி.
“பொய் சொல்லாத..!” என்றான்.
“நான் ஏன் பொய் சொல்லப் போறேன்..? எனக்குத் தெரியாதா நீ எவ்வளவு பெரிய அயோக்கியன்னு. நீ கொலை பண்ற வரைக்கும் சும்மாவா இருப்பாங்க..?” என்று நக்கலுடன் சிரித்தாள். அவள் ஏற்கனவே அதை செய்திருந்தாள்.
“உன்னை..!” என்று பல்லைக் கடித்தவன், உடனடியாக தேவனுக்கு போன் செய்தான்.
“என்னடா சொல்றிங்க..?” என்றான் தேவன்.
“ஆமாண்ணே..! இப்ப இவளை ஏதாவது பண்ணா, கொஞ்சம் சிக்கல் தாண்ணே..!” என்றான் லெனின்.
“நான் தான் சொன்னேனே..! நாலு நாள் பொறுன்னு. அந்த கம்பைன்ட் எல்லாம் நான் பார்த்துக்கறேன். அதுவரைக்கும் நீ பொறுமையா இரு..!” என்றான் தேவன்.
“எல்லா ஆதாரத்தையும் அழிச்சுட்டேன்..! இனி இவகிட்ட எதுவும் இல்லண்ணே..!” என்றான் லெனின்.
“முட்டாள் மாதிரி பேசாத லெனின். இப்போவே இவ்வளவு முன்னெச்சரிக்கையா இருக்குறவ, ஆதாரத்தை கைல வச்சுகிட்டா சுத்துவா. அது மட்டுமில்லாம அவளே ஒரு ஆதாரம் தாண்டா..! அவ வாயே திறக்காத மாதிரி அவளை லாக் பண்ணு. அது தான் இப்போதைக்கு முக்கியம்..!” என்றான் தேவன்.
லெனினுக்கும் அது தான் சரியாகப் பட்டது. “சரிண்ணே..!” என்று போனை வைத்தவன்,
சக்தியை யோசனையுடன் பார்த்தான். அவளின் முன்பு ஒரு சேரை இழுத்துப் போட்டவன்,
“ஓகே..! இப்போ ஒரு டீல் பேசுவோமா..?” என்று கேட்க, அவனை புரியாமல் பார்த்தாள் சக்தி.
“உன்னோட போன்ல இருந்த ஆதாரம் இப்போ இல்லை. ஆனா, இன்னும் எங்கெங்க இதை வச்சிருக்க..? அதை முதல்ல சொல்லிடு..! உன்னை விட்டுறேன்…” என்றான் திட்டத்துடன்.
“இல்லை வேற எங்கயும் இல்லை. இது மட்டும் தான். இருந்ததையும் அழிச்சுட்ட அப்படிங்கிற திமிர்ல பேசுறியா..?” என்றால் வீம்பாக.
லெனின் அவளை நம்பாத பார்வை பார்த்தான். இருந்தாலும் சக்தி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை. அவனாக ஒரு முடிவுக்கு வந்தவன்,
“இந்த ஆதாரம் உன் மூலமாவோ, இல்லை வேற யார் மூலமாவோ வெளிய வந்தா என்ன நடக்கும் தெரியுமா..?” என்று நிறுத்தியவன், அருகில் இருந்த லேப்ட்டாப்பை எடுத்து அவளுக்கு அதில் படம் ஓட்டிக் காட்டினான். அதைப் பார்த்த சக்தியின் கண்கள் அருவருப்பில் கூசிப் போக,
“நல்ல பார்த்துக்க, இது வெறும் சாம்பிள் தான். இது மாதிரி எல்லா பொண்ணுங்க வீடியோவையும் ஒரே நாள்ல வெளிய விடுவோம். ஒரு பொண்ணு செத்ததுக்காக கவலைப் படுற நீ, அப்பறம் எல்லா பொண்ணுங்க சாகுறதுக்கும் கவலைப் படனும்..!இதையெல்லாம் வெளிய விட்டா, என்ன நடக்கும்ன்னு உனக்குத் தெரியும் தானே..?” என்று லெனின் கேட்க, அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தால் சக்தி. நினைக்கும் போதே அவளுக்கு உடல் எல்லாம் பதறியது. கண்கள் கலங்கி அழுகை வருவதைப் போல் இருந்தது.
“இப்போ சொல்லு..! இன்னும் வேற என்னென்ன ஆதாரம் எல்லாம் இருக்கு உன்கிட்ட..?” என்றான் லெனின்.
“சத்தியமா என்கிட்டே எதுவும் இல்லை..!” என்று உறுதியாக நின்றாள்.
“உன் மூலமா ஏதாவது வீடியோ வெளிய வந்தா, இப்போ நீ பார்த்த எல்லாமே வெளிய வரும். எல்லாத்துக்கும் காரணம் நீயாதான் இருப்ப..!” என்று லெனின் சொல்ல, அதற்கு மேல் அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை.
“நான் எதுவும் வெளிய சொல் மாட்டேன். என்னை தயவு செஞ்சு விட்டுரு..!” என்றாள்.
“அவ்வளவு சீக்கிரம் உன்னை விட முடியுமா..? எனக்கே எனக்குன்னு உன்னை விருந்தாக்காம எப்படி விட முடியும்..?” என்று லெனின் சிரிக்க,
“நான் கப்ளைன்ட் பண்ணியிருக்கேன்..!” என்றாள் உள்ளே தோன்றிய பயத்துடன்.
“அதெல்லாம், ஒண்ணுமில்லாம பண்ண ஒரு நிமிஷம் போதும்..!” என்று லெனின் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தேவனிடம் இருந்து போன் வந்தது.
“இவளை பத்திரமா பார்த்துக்கோங்க..!” என்றவன் அங்கிருந்து செல்ல, துவண்டு போனாள் சக்தி.
“இதெல்லாம் உனக்குத் தேவையா..? இதுல தலையிடாம இருந்திருந்தா, உனக்கும் பிரச்சனை இல்லை, பாதிக்கப் பட்ட பொண்ணுங்களுக்கும் பிரச்சனை இல்லை..!” என்று உள் மனம் சொல்ல,
“நான் தப்பா எதுவும் பண்ணலை…! நான் செத்தாலும் பரவாயில்லை..!” என்று எண்ணிக் கொண்டாள்.
அவள் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்கும் போதே வருணுக்கு கோபம் தலைக்கேறியது. அவனுடைய முக நரம்புகள் இறுக்கமாகிக் கொண்டே செல்ல, அவனின் முக மாறுதல்களைப் பார்த்தவள்,
“என்னாச்சு சார்..?” என்றாள். அவளின் கேள்வியில் நிஜத்திற்கு மீண்டான் வருண்.
“இப்படியும் சில ஈனப் பிறவிங்க இருக்காங்கன்னு நினச்சாலே, அப்படியே அவங்களை சுட்டுத் தள்ளனும்ன்னு தோணுது..!” என்றான் வருண்.
“ஆனா, அவங்க தான் சார் சமூகத்துல மரியாதையோட இருக்காங்க. அநியாயத்தை கண்டு பொங்குறவங்க எல்லாம், சோறு பொங்க கூட வழியில்லாம இருக்காங்க..!” என்று சக்தி ஆத்திரப்பட, அவளை வியப்புடன் பார்த்தான் வருண்.
“என்ன சார் அப்படி பார்க்குறிங்க..?” என்றாள்.
“இல்லை.. உன்னை நான் என்னவோ நினைச்சேன். ஆனா, இப்போ எல்லாமே நினைச்சதுக்கு மாறா இருக்கு..!” என்றான் வருண்.
“என்ன நினைச்சிங்க..?”
“கொஞ்சம் பயந்த சுபாவம். எதுவும் தெரியாதுன்னு நினச்சேன். பரவாயில்லை, நான் நினச்ச அளவுக்கு பயந்த சுபாவம் இல்லை..!” என்றான்.
“நான் பயந்ததுக்கு, இப்போ பயப்படுறதுக்கு ஒரே காரணம், என்னோட உயிர் போய்டும்ன்னு நினைச்சு இல்லை சார். பல பொண்ணுங்களுக்கு அதுவும் நிறைய சின்ன பிள்ளைங்களுக்கு ஏற்கனவே போன மானம், திருப்பி திருப்பியும் போய்ட கூடாதுன்னு தான்..!” என்று சொல்லும் போதே, அவள் கண்கள் கலங்கியது.
“இப்போ எதுக்கு கண் கலங்குற..? விஷயம் என்கிட்டே வந்துடுச்சுல்ல. இனி நான் பார்த்துக்கறேன்..!” என்றவன்,
“அவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிச்ச..?” என்றான் வருண்.
“அங்க இருந்து என்னால உடனே தப்பிக்க முடியலை சார்.எப்படியோ கஷ்ட்டப்பட்டு தப்பிச்சு வந்தா, என்னால மலையை விட்டு கீழ இறங்க முடியலை. ஒருவழியா அவங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு தான் தப்பிச்சு வந்தேன். அப்படியும் விடாம என்னை தொடர்ந்து வந்துட்டாங்க.
நான் பஸ்ல இருந்ததால, அவங்களால என்னை ஒன்னும் பண்ண முடியலை. பப்ளிக் நிறைய பேர் இருந்தாங்க. நான் பஸ்ல வரும் போதே உங்க கார் பின்னாடி வரதைப் பார்த்தேன்..!” என்று சக்தி நிறுத்த,
“இது புதுக் கதையா இருக்கே..?” என்றான் வருண்.
“நிஜம் தான் சார்..! நீங்க வந்த காரும், நான் வந்த பஸ்சும் பக்கம் பக்கமா தான் வந்தது. அப்போதான் உங்களை நல்லா பார்த்து, அது நீங்க தான்னு ஊர்ஜிதம் பண்ணிகிட்டேன். இவங்க கிட்ட இருந்து தப்பிக்கனும்ன்னா அது உங்க கூட வந்தா தான் நடக்கும்ன்னு தெரிஞ்சுகிட்டேன். அன்னைக்கு நானா தான் அந்த பஸ்ஸை விட்டு இறங்கினேன். நான் நினைச்ச மாதிரி, உங்க பார்வை படுற இடமா பார்த்து நடந்து வந்தேன். அதே மாதிரி அவங்களும் என்கிட்டே வந்து வம்பு பண்ணினாங்க. அதாவது, அமைதியா அவங்க கூட வரலைன்னா, என்ன வேணும்ன்னாலும் செய்வோம் அப்படின்னு மிரட்டிட்டு இருந்தாங்க. நான் சத்தம் போட்டு கத்தவும், அங்க இருந்த ஒன்னு ரெண்டு பேர், கூட்டம் சேர, சரியா நீங்களும் காரை நிறுத்துனிங்க. நான் நினைச்ச மாதிரியே அவங்க முகத்துல பயம் தெரிஞ்சது. நான் உங்க கூட இருக்குறது அவங்களுக்கு எந்த நேரமும் ஆபத்து அப்படின்னு அவங்களுக்கு நல்லா தெரியும். அதுக்குப் பிறகு நடந்தது தான் உங்களுக்குத் தெரியுமே..?” என்று முடித்தாள் சக்தி.
“சோ..! எல்லாமே உன்னோட பக்கா பிளான். அப்பறம் ஏன் நான் கேட்டப்ப அமைதியா இருந்த..? அப்பவே உண்மையை சொல்லி இருக்கலாமே..?” என்றான் வருண்.
“இல்ல சார்..! நாங்க ரெண்டு தடவை போலீசை நம்பினோம். ஆனா, ஒன்னு கூட நடக்கலை. எல்லாமே எங்களுக்கு எதிராத்தான் திரும்புச்சு. அதான் உடனே உங்களையும் என்னால நம்ப முடியலை. அது மட்டும் இல்லாம, நான் ஆதாரத்தை உங்ககிட்ட குடுத்து, நீங்க அவங்களை அரஸ்ட் பண்ணிட்டா, அந்த வீடியோ எல்லாத்தையும் அவன் வெளிய விடுவான். இதுனால எத்தனை பொண்ணுங்க பாதிக்கப்படுவாங்க. அதெல்லாம் எனக்குள்ள யோசிச்சுகிட்டு, உங்ககிட்ட சொல்லலாமா..? இல்லை வேண்டாமான்னு ஒரு பெரிய போராட்டமே நடத்திட்டு இருந்தேன்..!” என்றால் சக்தி.
“இப்போ மட்டும் அந்த நம்பிக்கை எப்படி வந்தது..?” என்றான் வருண்.
“அது எப்படின்னு கேட்டா சொல்லத் தெரியலை. ஆனா, அவங்க என்னை மறுபடியும் கடத்தினப்போ உணர்ந்தேன்… உங்களை விட்டு வந்திருக்க கூடாதுன்னு..! நான் செஞ்ச முட்டாள் தனத்தை நினச்சு நினச்சு அழுதேன். இனி உயிரோட இருக்கவே போறதில்லைன்னு நினைச்சப்போ தான், நீங்க மறுபடியும் வந்திங்க. என்னை காப்பாத்துனிங்க. எனக்கு அந்த நிமிஷமே நம்பிக்கை வந்துடுச்சு..! இனி எனக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு..! ஒருவேளை காதல் கொடுத்த நம்பிக்கையா கூட இருக்கலாம்..?” என்று அவள் வாய் உளறிவிட,
“என்ன சொன்ன..?” என்றான் அவளை கூர்மையாக பார்த்தபடி.
“என்ன சொன்னேன்..?” என்று அவள் புரியாமல் பார்க்க,
“ஏதோ சொன்னியே..?” என்று அவன் மீண்டும் கேட்க, தான் சொன்னதை நினைவுக்கு கொண்டு வந்தவளுக்கு குப்பென்று வியர்த்தது.
“அது..கா..காவல்துறை குடுத்த நம்பிக்கையா கூட இருக்கலாம்ன்னு சொன்னேன்..!” என்று மழுப்பினாள்.
“இல்லையே..! எனக்கு வேற மாதிரி கேட்டுச்சே..?” என்றான்.
“உங்களுக்குக் கேட்டா, அதுக்கு நான் பொறுப்பில்லை சார்..!” என்றவள்,
‘மிஸ்டர்.காவல் துறைக்கு இதெல்லாம் உடனே கேட்டிடும்..!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“அவங்க நினைச்சிருந்தா, உன்னை உடனே தட்டித் தூக்கியிருக்க முடியும். ஆனா, அது அவ்வளவு சீக்கிரம் முடியாததுக்கு காரணம், உன்னோட நேரம்ன்னு கூட சொல்லலாம்..! இனி என்ன பண்ணணுமோ அதை நான் பார்த்துக்கறேன்..!” என்று வருண் சொல்ல,
“சார், அந்த வீடியோ எல்லாம்..!” என்று இழுத்தாள் சக்தி.
“கண்டிப்பா அதெல்லாம் வெளிய வராது. அதுக்கு நான் பொறுப்பு. அந்த லெனின் என்கிட்டே இருக்குற வரைக்கும் அந்த தேவனால ஒன்னும் புடுங்க முடியாது. ஆனா, அந்த தேவனை அரஸ்ட் பண்ணினா, நீ கோர்ட்க்கு வந்து சாட்சி சொல்ற மாதிரி இருக்கும்..!” என்றான் வருண்.
“நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வரத் தயார்..!” என்றவள்,
‘வாழ்க்கையோட கடைசி வரைக்கும் கூப்பிட்டாலும் நான் ரெடி தான்..!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
“இந்த கேஸ் முடிஞ்ச உடனே உன்னை எங்கயும் கூப்பிட மாட்டேன்..!” என்றான் வருண், அவளையே பார்த்துக்கொண்டு. அதைக் கேட்ட சக்திக்கு சப்பென்று ஆகியது.
‘இந்த ஜென்மத்துல மிஸ்டர்.காவல்துறைக்கு பல்ப் எறியப் போறதில்லை. இந்த காதல் எல்லாம் எப்பவும் நிறைவேறாது..!’ என்று விரக்தியாய் தனக்குள் பேசிக் கொண்டாள்.
அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த வருணுக்கு உள்ளே சிரிப்பாக இருந்தது. அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. மழை தூர ஆரம்பித்திருந்தது.
“கிளம்பலாமா..? மழை வர மாதிரி இருக்கு..!” என்றாள் சக்தி.
“நமக்கும் இந்த மழைக்கும் ரொம்ப ஒற்றுமை இல்ல..!” என்றான் வருண்.
“ஏன் அப்படி சொல்றிங்க..?”
“இல்லை, முத்த சந்திப்பில் இருந்து..!” என்று அவன் வாய் உளற,
“சார்..!!!” என்று அதிர்ந்தாள் சக்தி.
“சாரி..சாரி..! முதல் சந்திப்பில் இருந்துன்னு சொல்ல வந்தேன்..!” என்றவன் அவளுக்குத் தெரியாமல் நமட்டு சிரிப்பு சிரித்தான். அவளுக்கு இருந்த எரிச்சலில், அவன் சிரிப்பை கவனிக்கவில்லை.
“முதல் சந்திப்பே மழையில் ஆரம்பிச்சது தானே..! என்னா மழை..!” என்று அவன் சொல்ல, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“சென்னையில் பேஞ்ச மழையை சொன்னேன்..!” என்றான்.
“ஹோ..!” என்றாள் சக்தி.
“போகலாமா..?” என்றான் வருண்.
“ம்ம்..!” என்றவள் அவன் பின்னால் ஏறி அமர, வண்டியை எடுத்தான் வருண்.
வரும் பொது மெதுவாய் வந்தவன், இப்போது வேகமாய் ஓட்ட, வண்டி வளைந்து வளைந்து செல்ல,அவளும் வேறு வழியில்லாமல், வளைந்து வளைந்து அவன் மேல் மோதினாள். அதுவே அவளுக்கு பெரிய அவஸ்தையை கொடுத்தது.
“கொஞ்சம் மெதுவா போங்களேன் சார்..!” என்று அவள் சொல்ல,
“சக்தி..! இங்க இப்படித்தான் போக முடியும். இடி வாங்குற நானே பேசாம இருக்கேன். உனக்கென்ன..?” என்று கேட்க,
“அடப்பாவி..! இப்படியெல்லாம் கூட பேசுவானா..?” என்று அதிர்ந்தாள் சக்தி. அவளின் முகத்தை கண்ணாடியில் பார்த்த வருணுக்கு, அப்படி ஒரு சிரிப்பு.
“இது கூட நல்லாத்தாண்டா இருக்கு வருண்..!” என்று நினைத்தவன், அந்த நிமிடங்களை ரசித்தபடி சென்று கொண்டிருந்தான்.