சில்லென்று மேனி சிலிர்க்கும் இதமான வெப்பம். சுற்றிலும் தூய்மையான காற்று. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தரை தென்படவில்லை. நடக்கும் இடமெல்லாம் முகில்கள் முயல் குட்டி போல் பொசுபொசுவெனத் தாவுகிறது. அவை அனைத்தும் பஞ்சு பொதியல் தானோ, கொஞ்சம் தலை சாய்ந்து கொள்ளலாமோ என்னும் அளவிற்கு இருந்தது. கால் பதிக்கும் இடமெங்கும் மெத்தையெனத் தான் மிதக்கிறது அந்த மேகங்கள். வழி நெடுகும் மரங்கள் கிடையாது, மணல் கிடையாது, மாடிவீடும் கிடையாது. வெட்டவெளியும் வெறும் காற்றும் நிறைந்திருந்த நிசப்த சூழல் அது.
பின்ன தேவலோகம் அப்படிதானே இருக்கும்? அப்படிதானே நாம கற்பனை செஞ்சுருப்போம். ஆமா இது தேவலோகமே தான். உடனே கதை இப்படித்தான் இருக்கும்னு முடிவுக்கு எல்லாம் வரக்கூடாது. சரி வாங்க கதைக்குப் போவோம்.
அங்கே அகஸ்மாத்தாய் அந்த ஒற்றைப் பிரமாண்ட வரவேற்பு பலகை “தேவலோகம் உங்களை அன்போடு வரவேற்கிறது” என்ற வாசகத்தைத் தாங்கி நின்றது. நன்றாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், தேவலோகம் இதுதான். மானிடர்களின் பிறப்பு நிர்ணயிக்கப்படும் முதன்மை கூடம் இதுதான். மனிதர்களை உற்பத்தி செய்து பூலோகத்திற்கு டெலிவரி செய்யும் தொழிற்சாலை இதுதான். மானிடர்கள் அவர்கள் வாழ்க்கையில் படாத பாடு பட்டாலும், ஒரே பாட்டில் ஓஹோ என்று ஆனாலும் அதை எழுதி வகுத்து அதற்கு ஏற்ப நம்மை ஆட்டிவைக்கும் ப்ரோடக்சன் ஹவுஸ் இதுதான். இயற்கை மரணம் என்றாலும் சரி, கொலை, தற்கொலை, விபத்து என்கிற இன்ஸ்டன்ட் மரணம் என்றாலும் சரி, எதுவானாலும் அவை முற்றுப்பெறும் மையான பூமியும் இதுதான்…
இதுதான்ன்ன்…
இதேஏஏஏஏ…தான்ன்ன்ன்ன்…
தேவலோகத்தில் சொர்க்கலோகம் எமலோகம் என்று இருவேறு பிரிவுகள் மட்டுமல்லாமல் பிரம்மனின் சத்திய லோகம் என்கின்ற பென்ட்ஹவுஸ், சிவன் பார்வதியின் ஸ்பெஷல் கைலாஷா ஹில்ஸ், என்று திசைக்கு ஒரு கடவுளுடைய பிரைவேட் பிராபர்ட்டி இருக்கிறது. எது யாருடையது என்னும் ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம். இத்தனை பிராபர்ட்டிக்களுக்கு மத்தியில் தான் நம் விஷ்ணு லக்ஷ்மியின் அந்த வைகுண்டம் என்கின்ற ஹைக்கிளாஸ் ஹவுஸ்ஸும் இருந்தது. அதைப் பார்த்தாலே தெரியும் பணச் செழிப்பும், எழில் வனப்பும், அடேங்கப்பா! பெத்த பார்ட்டி தான் போல என்று ஆச்சரியம் கொள்ள வைக்கும்.
உள்ளே ஒருமுறையேனும் எட்டி பார்த்துவிட வேண்டும் என்று மனம் கூப்பாடு போடுகிறது. நம்மால் உள்ளே நுழைய முடியுமா என்று தான் தெரியவில்லை. யாரேனும் வாசலில் செக்யூரிட்டி இருக்கிறார்களா பார்ப்போம். ஹ்ம்ம் ஹ்ம்ம்.. ஒருத்தனையும் காணோம். சரி தைரியமாக என் பின்னே வாருங்கள். அந்தப் பாராளும் பரந்தாமனின் பால் வதனத்தை வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிடுவோம்.
உள்ளத்தின் குதூகலிப்பு உடலின் மயிர்க்கால்கள் வரை பரவிக்கிடக்க, நம் கூர்முனை நாசிகளையும் அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் தீண்டத் தவறவில்லை.
ஆனால்..
ஆனால்..
அங்கே,
மங்கள ஒளியையும், மங்கள ஒலியையும் குன்றச்செய்து பாழாய்ப்போன இருளும் நிசப்தமும் கடுகளவும் கருணையின்றிக் கவிழ்த்துவிட்டது போல் தெரிகிறது. சதா சர்வகாலமும் தேவகானம் ஒலிக்கும் இடத்தில் இந்த அழுத்தம் நிறைந்த அமைதி கொஞ்சமே கொஞ்சம் சகிக்க இயலவில்லை தான்.
ஆஹா.. அதோ பாருங்கள். தொண்டு செய்து தொழுகும் தூய பக்தர்களை அன்புக்கரம் நீட்டி அரவணைத்திடும் ஆதி மூலமான ஆண்டவனைச் சாந்த ஸ்வரூபமாகப் பார்க்கையில் உள்ளம் பரவசம் அடைவதை நிச்சயம் தடுக்க இயலாது
கலப்படம் இல்லாத பசும்பாலெனப் பதமாய் வரும் தீந்தமிழ் வாய்மொழி சொற்கள் அனைத்தும் பன்னீர் புஷ்பங்கள் என்னும் அளவிற்கு உச்சரிப்புகள் கூட நளினத்தோடு ஏறி இறங்கி வருகிறது அய்யன் அவன் திருவாய் மலர்ந்தால்.
இருப்பினும் கூட ஏதோ ஒரு கலக்கம் அவர் வதனத்தில் இழைந்தோடுவதைக் கண்கூடாகக் காண முடிந்தது.
நாரதர் அங்கே வருகிறார்.
“”நாராயண.. நாராயண..” என்று நாராயணனின் நாமத்தை வெகு பணிவோடு மொழிந்து கொண்டே வருகிறார்.
அங்கே அமர்ந்திருந்த விஷ்ணு பரமாத்மாவைக் கண்டவர்,
“பாராளும் பரந்தாமா..
ஜெகத்தாலும் ஜனார்த்தனா..
வரியோறுக்கு வாழ்வளிக்கும் வள்ளலே…
எல்லோர் நெஞ்சிலும் குடிகொண்ட எளியோனே…
திருவுலகம் எங்கும் திருப்புகழ் கொண்ட தலைவனே…
திருமகளைத் திருமதியாகக் கொண்ட திருமாலே..
மாதவா..
மணிவண்ணா..
மதுசூதனா..
கேசவா
கோவிந்தா..
கோகுல கண்ணா..
எனை ஆளும் மன்னா..
உன் மலரடி பொற்கமலங்களுக்கு என் கோடி நமஸ்காரங்கள்” என்று கூறிமுடிக்கவும், விஷ்ணு பெருமான் நாரதரைக் கண்டு பெயருக்கென்று வலிய வரவழைத்த சிரிப்பொன்றைத் தவழவிட்டு அப்படியே அமர்ந்திருக்கிறார்.
“என்ன நேர்ந்தது என்று இந்த அடியேன் தெரிந்து கொள்ளலாமா..? முப்பொழுதும் திவ்ய கானத்தோடு லட்சுமி கடாக்க்ஷம் நிறைந்திருக்கும் வைகுண்டமே இப்படிச் சோபை இழந்து காணப்படுவது எனக்கே சற்று நெஞ்சத்தைத் தைக்கச் செய்கிறது. தேவலோகமே பெரும் அதிர்ச்சியிலும் திகைப்பிலும் அமிழ்ந்திருக்கிறது என்பதை நான் கூறக்கேட்டுத் தான் தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை. பரம்பொருளான பெருமானே! நடந்தது என்னவோ? லட்சுமி தேவியார் எங்கே? என் மனம் உலைகளனில் இட்டது போல் சொல்லவொன்னா தவிப்பில் இருக்கிறது. கூறுங்கள் ஸ்வாமி. என்ன நடந்தது?”
“ப்ரிகு முனிவர் வந்திருந்தார் நாரதா…”
“ஒருநிமிடம் அய்யனே, மீண்டும் ப்ரிகு முனிவர் வந்து உங்களை எட்டி கிட்டி உதைத்துவிட்டாரா? அதனால் தான் மீண்டும் லட்சுமி தேவி உங்களின் மீது கோவம் கொண்டு சென்று விட்டாரோ? அப்படி இருந்தாலும் கூட, இப்பொழுது உங்களோடு லட்சுமி தேவியார் சேர்த்து வைக்க வரம் பெற்ற மற்றொரு அலமேலு அம்மையார் இல்லை தானே. ஒருவேளை அலமேலு போல வடிவேலு என்று அம்மையார் எவரேனும் வரம் பெற்றார்களா என்று நன்றாக ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துப் பாருங்கள் பிரபு. தாங்கள் வரங்களை வாரி வழங்கும் வள்ளல் பெருமான் தானே. கணக்கில் வைத்துக் கொள்ள இயலாத அளவிற்கு வரைமுறையின்றி வழங்கினாலும் வழங்கி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது”
(அலமேலு மங்கையைப் பெருமாளோடு சேர்த்து வைக்க லட்சுமி தேவியார் பெருமாளைப் பிரிந்து சென்ற கதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அறியாதவர்கள் கூறவும். தனியாக நிச்சயம் பதிவு செய்கிறேன். கதையில் அதை நுழைப்பது அவசரியமற்றதாய் தோன்றியது)
“நாரதா.. நிறுத்தடா உன் பிதற்றலை. நீ விளையாட்டாய் நகையாடுவதை எல்லாம் நகைப்போடு செவிமடுக்க எனக்கும் பொழுது இல்லை. நெஞ்சம் வேகிறதடா எனக்கு. அவள் இல்லாத இந்த வாழ்வும் வைகுண்டமும் எனக்கு என்றும் விடியாத இருள் தானே!” என்று கூறிய விஷ்ணுவின் குரலில் கோபம் இல்லை. மாறாய் தவிப்பு இருந்தது.
“அய்யனே, அடியேனை மன்னித்து அருளவேண்டும். விஷயத்தின் வீரியம் எனக்குப் புரிகிறது பிரபு. தேவி இல்லாத இந்த வைகுண்டம் மட்டும் அல்ல பிரபு, வையகமே சாபப்பிடியில் பீடித்தது போல் தான் இருக்கும். தேவி எங்கே பிரபு? என்ன நடந்தது? ப்ரிகு முனிவர் எதற்கு வந்தார்? அவரால் ஏதும் இடர் உருவாகியதா?”
“இல்லை நாரதா… ப்ரிகு முனிவரை நாங்கள் இருவரும் ஏகோபித்து மகிழ்வாகவே அழைத்து உபசரித்தோம்.
முன்னொருநாள் அவர் வந்ததைக் கூட அறியாமல் நான் உறக்கம் கொண்டுவிட்டேன் என்று என் நெஞ்சில் உதைத்தவர், பின் அவராக மனம் மாறிக் கொண்டிருந்த செருக்குத் தலைக்கனம் அத்தனையையும் விடுத்துத்தான் வாழ்ந்தார், இன்று ஏனோ மூர்க்கமாகக் கோபித்துக்கொண்டார்.”
“அப்படியென்றால்… ஐயகோ இது என்ன தெய்வத்திற்கே வந்த சோதனை? நாராயணா! என்ன இதெல்லாம். நான் நினைப்பது தான் நடந்துவிட்டது என்று தயை கூர்ந்து சொல்லிவிடாதீர்கள்!”
“ஆம் நாரதா. அதுதான் நடந்துவிட்டது.
ப்ரிகு முனிவரை உபதேசித்துக் கனிவாகக் கவனித்தோம். அவருக்கு உணவளித்த வேலையில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நிகழ்ந்தது.. அதில் ஆரம்பமானது தான் அனைத்தும்” என்ற விஷ்ணு அந்நிகழ்வை ஒருமுறை நினைத்துப் பார்த்தார்.
.
.
.
“ப்ரிகு முனிவரே, உணவு அனைத்தும் உங்களுக்குப் பிடித்தமாக இருக்கிறதா?” என்று லட்சுமி தேவியார் பணிவாய் கேட்க,
“பிடித்தத்திற்கு என்ன குறை தேவி, இந்தத் திருமகள் எனக்காக உணவு கொணர்ந்ததே பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன் இந்தக் கிழவன். இதில் குறை வேறு நான் தனியாகக் கண்டுவிடப் போகிறேனா?” என்று அவர் மன நிறைவை வாழ்த்தி கூறிக்கொண்டிருந்தார்.
அச்சமயம் பரமாத்மாவும் அவர்களோடு இணைந்து கொண்டார்.
“முனிவரே! உபசரிப்புகளில் ஏதும் குறை இல்லை தானே! சௌகரியமாக இருக்கிறீர்களா?” என்று அவரும் தன் பக்க விசாரிப்புகளைக் கேட்டுவிட்டார்.
“நாராயணா.. எனக்கு ஒரு சந்தேகம். அதை நிவர்த்திச் செய்ய முடியுமா உன்னால்?”
“கூறுங்கள் முனிவரே! என் அறிவுக்கு எட்டியவரை நான் கூறுகிறேன்..”
“அதென்ன அறிவுக்கு எட்டியவரை, சிந்தையும் நீயே, சிந்திப்பதும் நீயே, சிந்திக்கச் செய்வதும் நீ தானே! ஹாஹா… அது போகட்டும். என் சந்தேகத்தைக் கேட்கிறேன். பெண்கள் படைக்கப்பட்டது எதற்காக? இதற்கு உன் பதிலைக் கூறு” என்று அவர் விஷ்ணு பரமாத்மாவைக் கண்டு வெகு மும்மரமாகக் கேட்கிறார்.
சற்றே நிதானித்த விஷ்ணு பரமாத்மா “பெண்கள் மட்டுமல்ல முனிவரே, அனைவருமே படைக்கப்பட்டதன் காரணம் ஒன்று தான். சக உயிரினங்களைப் போற்றிப் பாதுகாத்து அன்பைப் பகிருவது தானே! இதில் சந்தேகம் என்னவோ?” என்று எதையோ ஊகித்து நடுநிலையான பதிலை அவர் கூற,
“அடடா, என் எண்ணம் தெரிந்தே சாமர்த்தியமாய்ப் பதில் மொழி கூறுவது அத்தனை பிரமாதம் அல்ல நாராயணா!
ஒரு பெண்ணாகப் பிறந்தவளுக்குத் தலையாயக் கடமை என்ன? அதை முதலில் கூறு!” என்று முனிவரும் பிடியாய் பேச்சுக்கொடுத்தார்.
“நிறைய இருக்கிறதே முனிவரே, குறிப்பிட்டுக் கூறுவது சாத்தியமா?
என்னை இக்கட்டில் மாட்டிவிடும் கேள்விகளையும், வாதங்களையும் தாங்கள் தூபம் போட்டு வளர்க்கிறீர்கள்”
“என்ன நாராயணா? ஐயம் ஒன்று கொண்டேன், அதை அய்யன் நீயே தீர்த்து வைப்பாய் என்று நம்பினேனப்பா! நீ மழுப்புகிறாயே?”
“அதுசரி, நீங்கள் இதை விடப்போவதில்லை என்பது திண்ணம்.
நடப்பது நடக்கட்டும். அதாவது… பிறந்ததும் வீட்டை சுபிக்க்ஷம் அடையச் செய்பவர் பெண்கள் தான். வளரும்பொழுது வீட்டில் மகிழ்வைக் கொடுப்பதும் பெண்கள் தான். பருவத்தில் பூப்பெய்தியதும் காதல் ரசம் அனுபவிக்க வைப்பதும் பெண்கள் தான். பெற்றோருக்குப் பெண் பிள்ளைகள் தானே பெரும் சொத்து. பிறந்தகம் விட்டு கணவனை நாடிச் செல்லும்பொழுது அந்த வீட்டிற்கும் சுபிக்க்ஷதை அள்ளி தருகிறாள். பின் தாய்மை கொண்டு பிள்ளை பெறுவதும், அதைப் பண்போடும் அன்போடும் வளர்ப்பதும் பெண் தான். இதில்… “என்று விஷ்ணு பெருமாள் பேசிக்கொண்டிருக்கையிலேயே இடை புகுந்த ப்ரிகு முனிவர்,
“அதேதான், அதேஏஏஏஏ தான்ன்ன்..
ஆக,
ஆக,
பெண்ணாய் பிறந்தவளுக்குப் பிறந்த வீட்டில் பெற்றோரையும், புகுந்த வீட்டில் பெற்ற பிள்ளைகளையும், வாழ்வனைத்தும் மற்றொரையும், உற்றோரையும் பேணி பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது தானே. நான் கூறுவது சரிதானே? சரிதான். சரிதான். அப்படி இருக்க இன்றைய பூலோகத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடந்துகொள்வது எனக்கு அத்தனை சரியாகப் படவில்லை. ஆம் தானே நாராயணா? இதற்கொரு மார்க்கம் கண்டுவிட முடியாதா? பெண்கள் எல்லாம் இப்படிக் குணம் மாறி மென்மை மறந்து வன்மை புகுத்திக்கொண்டால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வித்தியாசம். இதில் சளைத்தோர் சாதிப்போர் என்று வேறுபாடே இருக்காது தானே? ம்ம்ம்ம்?”
ப்ரிகு முனிவர் அப்படிப் பேசியதும் அங்கு இவர்கள் உரையாடலை அமைதியாய் செவிமடுத்த லட்சுமி தேவியாருக்குக் கோபம் கன்னாபின்னாவென கொப்பளிக்கிறது. ஆர்ப்பாட்டமாய் எழுந்தவர் கண்கள் சிவக்க, பரமாத்மாவை ஒருமுறை ஏறிட்டுவிட்டு, ப்ரிகு முனிவரிடம் வேக நடை கொண்டு சென்று, வார்த்தைகளை வெட்டி வீசுகிறாள் அன்னையவள்.
“முதியவர், மூத்தோர் என்று பணிவிடை செய்வதை, பணிந்து செல்வது என்று நினைத்து விட்டீர்களோ ப்ரிகு முனிவரே. அதுவும் பெண் தெய்வமான என் முன்னிலையிலேயே இத்தனை அழுத்தமாய், இப்படிப் பேச எத்தனை திண்ணகம்! தாங்கள் பேசியது அனைத்தும் தவறென்று உங்களுக்குப் புரியவில்லையோ? அன்பிற்கும் அடிமைத்தனத்திற்கும் உள்ள இடைவெளி உங்களுக்குத் தெரியவில்லையா? இல்லை குருடனாகித் தான் போனீர்களா? ஆஹா, அதுசரி… பாராளும் பரந்தாமன் இவரையே அகந்தை கொண்டு மிதித்தவர் தான் தாம், இதில் உங்கள் ஆண் செருக்கை இன்று கண்டு கொண்டதில் என்ன பெரிய ஆச்சரியம். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் முனிவரே, அன்புக்குக் கட்டுப்படுபவள் தான் பெண். அதைத்தான் என் கணவர் கூறினார். தாங்கள் செய்வது அனைத்தையும் அடக்குமுறை என்பர். பிறப்பிலிருந்து அன்றாடம் அத்தனை தேவைகளிற்கும் பெண்களை அண்டி வாழும் ஆணுக்கு இத்தனை இருமாப்பு இருக்க அவசியம் யாதொன்றும் இல்லை. இனி ஒரு முறை என் முன்னால், இப்படி வார்த்தைகளை உங்கள் எண்ணப்படி கொட்டி தீர்க்காதீர்கள். இது நான் உங்களுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை” என்று அத்தனை காட்டமாய்க் கத்துகிறார் லட்சுமி தேவி. கத்தியும் கூடக் கொண்டிருந்த கோபம் தணிந்தபாடில்லை.
பரந்தாமன் பதட்டமாய், “லட்சுமி, அவசரம் கொண்டு ஆத்திரத்தில் வார்த்தைகளை விடாதே. அவர் எதோ பெரியவர், அவர் புரிதலுக்குப் பேசுகிறார். அதற்காக நீ இப்படிக் கோபித்துக்கொள்வது எனக்கு ஒன்றும் சரியாகப் படவில்லை. நிதானம் கொள்வாயாக” என்று லட்சுமியின் மென்கரங்களை அழுந்த பற்றியபடி கூறுகிறார்.
கைகளைச் சட்டென உதறிய லட்சுமி எங்கோ வெறித்தபடி இருக்க, விஷ்ணு பரமாத்மா லட்சுமி தேவியைத் தோள் பற்றி அமரவைத்து, நாடி பிடித்து “அவர் பேசியது அனைத்தும் தவறாக இருக்கலாம், ஆனாலும் அவர் ஒரு தபசி, ஊன் உறக்கம் என்று சர்வமும் யாகங்கள், பூஜைகள், என வேதங்கள் ஓதி உலகை உயிர்ப்போடு வைப்பவர்கள். அவசரம் வேண்டாம் கண்ணே!” என்று பொறுமையாய் பொருள் பொதிந்து விளக்கிக்கொண்டிருக்க,
ப்ரிகு முனிவருக்கோ, லட்சுமி பேசியவற்றிலேயே எல்லையைக் கடந்த கோபம், இப்பொழுது தன்னிடம் இப்படி அவமரியாதையாக நடந்து கொண்ட லட்சுமியை, மன்னிப்பு கூற வைக்காமல், அவளிடமே கொஞ்சி பாடம் கற்பிக்கிறானே என்ற எண்ணம் காற்றற்று வெள்ளம் போல் கரைக்கடந்த துவேஷத்தை இவர்கள் மீதும் கக்கச் செய்தது.
“நாராயணா… என்னை நீ அவமதித்து விட்டாய். நீதான் முப்பெரும் தேவர்களில் முதலானவன் என்று போற்றிப் புகழ்ந்த என்னையே நீ புறம் தள்ளிவிட்டாயல்லவா? நான் என்ன பிதற்றுகிறேனோ? உனக்கும் கூடப் பெண் பித்துப் பிடித்து விட்டதோ? உலகை ஆளும் கடவுளே இப்படிப் பெண் மீது மோகம் கொண்டு, மயங்கிக் கிடக்கையில் உலகம் எப்படி உருப்படும். ஹ்ம்ம்ம்”
“முனிவரே! வார்த்தைகள் அத்தனையும் எல்லை மீறுகிறது. மூத்தோராய் இருந்து என்ன பயன். அதற்குண்டான முதிர்ச்சி உங்கள் மொழியில் இல்லையே? பெண்களைத் தாழ்த்திப் பேசுவது ஆண்மையா? உலகத்தில் உள்ள மாந்தர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய உயர்ந்தவர் தாங்கள். தங்களின் இந்த அற்ப எண்ணத்தை எண்ணி என் சினம் தான் கொப்பளிக்கிறது”
“நாராயணா! நிறுத்து உன் வீண் பேச்சை. தெய்வம் என்ற மமதை கொண்டு பேசுகிறாய். இக்கணம் உறைக்கிறேன் கேட்டுக்கொள். எந்த லட்சுமியின் சொல்லுக்குச் செவி மடுத்து என்னை அவமதித்தாயோ.. அதே லட்சுமி இந்த நொடியே மறைந்து போவாள். பூலோகத்தில் பெண்ணாய் பிறப்பெடுத்து, அவளது உண்மையான தெய்வச் சக்திகளையோ, அம்சங்களையோ அவ்வாழ்க்கை முடியும்வரை நினைவுகொள்ள மாட்டாள். நீ அப்பெண் பிறவி எடுத்து அதற்கு இருபத்தி ஐந்து அகவை பூர்த்தி ஆகும்வரை பிரிந்து வாழ்ந்து பெரும் துயர் அடைவாய்.
லட்சுமி அப்பெண் பிறவியாய் பிறந்து மாண்டு மீண்டும் மேலோகம் வருகையில் தெரியும் இந்த ப்ரிகு முனிவரின் சொல்வாக்கும் அதன் உண்மைத் தன்மையும். பெண்ணாம் பெண்.. பொல்லாத பெண்.. பெண் தெய்வம் என்று சரிக்கு நிகராய் நின்று உலகை ஆட்சி வேறு செய்கிறார்கள். அப்படிப் பட்ட இடத்திலிருந்து செய்யும் செயல்கள் அத்தனையும்.. ச்ச.. ச்ச.. இனி நான் வாழ்வில் ஒரு பொழுதும் இந்த வைகுண்டத்தின் வாசலை மிதியேன். இது எனை ஈன்ற தாய் மீது ஆணை” என்று இடி எனக் கர்ஜித்த ப்ரிகு முனிவர் சட்டென மறைந்துவிட்டார்.
அவர் கொடுத்த சாபத்தை உணர்ந்து பின்னால் கோபமாய் அமர்ந்திருந்த லட்சுமியை அவசரமாய்த் திரும்பிப் பார்க்கிறார்.
காற்றோடு கலக்கும் வெண்புகை போல மெல்ல மெல்ல உருவம் கரைகிறது.
கரைந்து மறையும் கடைசி நிமிடங்களில்..
“அய்யனே! வருந்தாதீர்கள். இதை நமக்கான தற்காலிக இடைவெளியாக எண்ணுங்கள். நமக்குள் உண்டாகப் போகும் இந்தப் பிரிவு நிரந்தரம் அல்ல. கவலையை விடுங்கள். என்னை எண்ணி வருத்தம் கொள்ளாதீர்கள். மீண்டும் உங்களிடமே வந்து சேர்வேன். ப்ரிகு முனிவரின் கூற்றும் எண்ணமும் அர்த்தமற்றது என்றும் மூடத்தனம் என்றும் நான் எடுக்கப்போகும் பிறவியின் மூலம் உணரச்செய்வதாய் அமையட்டும்.
எனை ஆசி கூறி அனுப்பி வையுங்கள் ஸ்வாமி” என்று லட்சுமி கைகள் இரண்டையும் கூப்பி வணங்க, அதை எட்டி பிடிக்க முயன்று தோற்றுப் போனார் பரமாத்மா.
திருவுருவம் மொத்தமும் காற்றில் கரைந்த கற்பூரம் போலக் காணாமல் போனது.