“1500’ல முதல் கவர்னரா இருந்தவர் ப்ரான்சிஸ் அல்மெய்டா. அவங்களோட முதல் கேபிட்டல் கொச்சி. அல்மெய்டாவோட பாலிசி பெயர் ப்ளூ வாட்டர் பாலிசி. அரப்ஸ் கூட நடந்த போர்ல அரபிய கடற்கொள்ளையர்களால் அவர் கொல்லப்பட்டார்.”
“செகண்ட் கவர்னர்…” என்று தொடங்கிய வகுப்பு முடிய நாற்பத்தைந்து நிமிடங்களானது.
“ஓகே கைஸ். இன்னிக்குக் க்ளாஸ் ஓவர், இதை ரிவிஷன் பண்ணிட்டு வாங்க, ஒரே வருசத்துல படிச்சு பாஸ் ஆகணும்னு முடிவோட வாங்க. இந்த ஐந்தாண்டு திட்டமெல்லாம் வச்சிக்காதீங்க” என்று அறிவுறுத்தினான் ராய்.
அரசுத்தேர்வுகளுக்குப் பயிற்சி தரும் அகாடமியில் எல்.எல்.ராய் வரலாறுப்பாடம் எடுக்கிறான்.
“தேங்க் யூ சார்” என்று மாணவர்கள் வாழ்த்தி விடைப்பெற்றனர்.
“ராய் சார் நல்லா சொன்னார்ல, அவர் சொன்ன கதை அப்படியே மைண்ட்ல இருக்கு” மாணவர்கள் தங்களுக்குள் பேசியபடி வெளியேற, ராய் ஆசிரியர்களுக்கான பொது அறைக்குள் நுழைந்தான். காலை ஏழு முதல் எட்டு மணிவரை விடாது பேசியிருக்க தொண்டை வறப்போயிருந்தது. வேகமாக தண்ணீர் கேனிலிருந்து தண்ணீர் பிடித்துக் குடித்தவன் நாற்காலியில் உட்கார்ந்தான்.
ஒன்பது மணிக்கு அடுத்த வகுப்பிருக்க, ஒரு மணி நேர இடைவெளியில் உண்டு வர வேண்டும். இல்லையேல் பத்துக்குத்தான் உணவை நினைக்கலாம்.
அதற்குள் அவன் எப்போதும் உண்ணும் டிபன் செண்டரில் இட்லி இல்லாமல் போகலாம், தோசை மாவு காலியாகலாம், பூரிகள் பூரிப்பின்றி இருக்கலாம். அங்கே அண்டா குண்டா காலியாகிவிட்டால் அண்ணா நகரில் குறைந்த விலையில் உணவு கிட்டுவது கஷ்டம்.
பக்கத்திலிருக்கும் அடையார் ஆனந்த பவனின் ஒரு பழச்சாற்றின் விலையில் இவன் இருவேளைகள் உணவு முடித்து, இருவேளை தேனீர் முடித்துவிடுவான், இரவு உணவு கூட முடிப்பான்.
பத்து நிமிடங்கள் அப்படியே தலைகவிழ்ந்து மேஜையில் சாய்ந்தவன்,
“என்ன ராய் தூங்கிட்டு இருக்க? நம்ம பாடம் நடத்தி பசங்கதான் தூங்கணும்” என்றபடி அவன் எதிரே இருந்த புத்தக அலமாரியில் புத்தகங்களை தேடினாள் ப்ரீத்தி.
“நான் பத்து மணிக்குச் சாப்பிட்டுப்பேன். நீ போ” ப்ரீத்தி சொல்லவும் ராய் அறையை விட்டு வெளியேறி நான்கைந்து கட்டிடங்கள் தள்ளியிருக்கும் டிபன் செண்டரில் இரண்டு இட்லி, ஒரு வடை என்று உணவை உள்ளே தள்ளினான்.
வீட்டுணவுக்கு நாவு ஏங்கினாலும் ரோஷம் தலைத்தூக்கியது. மோசமான உணவை எல்லாம் உண்டவனுக்கு இந்த டிபன் செண்டரின் ருசி பிடிக்கும். அம்மா எப்போதும் அவன் வயிறை வாட விட்டதே இல்லை. இவனால்தான் அவருக்கு எதுவும் செய்ய முடியவில்லை.
வேகவேகமாக இட்லி, வடை ஒரு காபி என்று காலை உணவை கச்சிதமாக முடித்து மீண்டும் அகாடெமிக்குள் நுழைந்தான். பத்து மணி வரை அடுத்த பேட்ச் மாணவர்கள் வர பாடம் எடுத்தவன் ஓய்வறை சென்று வந்தான். சார்ஜில் போட்டிருந்த அவன் அலைப்பேசியைப் பார்க்க அதில் மூன்று தவறவிட்ட அழைப்புகள். குறுஞ்செய்திகள் குவிந்திருந்தன. அத்தனையும் ஒருத்தியிடமிருந்து.
அதனை பார்க்கவும் தலைவலி அவனுக்கு. அடுத்து அவனுக்கு மதியத்திற்கு மேல்தான் வகுப்பிருக்க, அகாடெமி விட்டு இறங்கியவன் டீ குடித்தான். டீ குடித்துவிட்டு தன் நண்பனுக்கு அழைத்தான்.
“என்னை கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்றா டா அவ” என்று லாலா புலம்ப, சக்திக்குப் புன்னகை. சிரித்தால் லாலா திட்டுவான் என அடக்கினான்.
“ஒரு வருசம் டைம் கொடுடின்னு சொன்னா என்னை கழட்டிவிட ப்ளான் பண்றியா கேட்கிறா. விட்டா கட்டாயக் கல்யாணம் பண்ணிடுவா போல”
“ஹாஹா, கட்டாயக் கல்யாணமெல்லாம் வழக்கமா நீங்கதானே டா பண்ணுவீங்க. சுதந்திர விலாசத்தோட பழக்கமாச்சே?” சக்தி நக்கலாகக் கேட்டிட
“மவனே நேர்ல வந்து செருப்பால அடிப்பேன். என் சித்தப்பாவை வம்பிழுக்கலன்னா உனக்குத் தூக்கம் வராதே”
“எனக்கொரு வழி சொல்லுடா வெண்ண” லாலா கோபமாகக் கத்தினான்.
“என்னடா சொல்லணும்?”
“அவ மூணு மாசம் முன்னாடியே வந்து சொன்னா, நான் அப்போ எழுதியிருந்த எக்ஸாம் நல்லா பண்ணியிருந்தேன். மெயின்ஸ் ல ஒரு ஒன்றரை மார்க்ல போயிடுச்சு. இன்னும் ஒரு வருசம் டைம் கேட்டா கொடுக்க மாட்டேங்கிறா, அவங்கம்மா கம்பெல் பண்றாங்க சொல்றா. நான் என்னடா செய்றது?”
“என்னை கேட்டா அந்த பொண்ணு கிட்ட பேசின? என்கிட்ட சொல்லிட்டா உனக்கு லவ் வந்துச்சு?”
“மவனே! தங்கச்சி புருஷன்னு கூட பார்க்க மாட்டேன். போலிஸ்காரன் என் கையால அடி வாங்கி சாவாத!”
“செத்தாலும் நண்பன் கையால சாவுறேன் டா லாலா” சக்தி சிரிப்பை அடக்கி சொல்ல
“டேய் நான் சீரியஸா பேசுறேன், நீ மட்டும் லவ் பண்ணும்போது சொல்லிட்டா பண்ணின?” லாலா எரிச்சலாகக் கேட்டிட
“சரி சரி டென்சன் ஆகாத, உனக்கு விருப்பம்னா ஓகே சொல்லு. இல்லைனா நோ சொல்லு, அப்படி கம்பெல் பண்ணியெல்லாம் கல்யாணம் பண்ண முடியாது, கூடாது” என்றான் சக்திவேல் அழுத்தமாக.
“அவகிட்ட அப்படி முடியாதுனு சொல்ல மனசு வரலையே டா மச்சான்”
“அப்போ மூடிட்டு மூணு முடிச்சு போட்டுடு” சக்திவேலும் எரிச்சலாக சொல்ல
“சக்தி” லாலா குரல் மெல்லக் கேட்டது.
“சொல்லுடா”
“நான் நோ சொன்னா அவளை மொத்தமா இழந்துடுவேன் டா. எனக்கு அதுக்கு மனசில்ல, என்னையும் மதிச்சு லவ் சொன்ன பொண்ணுடா, நீயும் பார்த்திருக்க தானே? இந்த வாரம் லீவ் கிடைச்சா வரியா இல்லை அவகிட்ட போன்ல பேசி கன்வின்ஸ் பண்றியா? எனக்காக ப்ளீஸ். ஒரு நல்ல வேலையில்லாம எனக்குக் கல்யாணம் பண்ண இஷ்டமில்லடா”
“புரியுது மச்சான், நீ கவலைப்படாத. நான் தங்கச்சிட்ட பேசுறேன்.” என்று வாக்குக் கொடுத்த சக்திவேலே தங்கையிடம் பேசியபின் அப்படியே கட்சி மாறுவான் என்று லாலா எதிர்ப்பார்க்கவில்லை.
நண்பனிடம் பேசிய பின் கொஞ்சம் மனம் நிம்மதியுற, மீண்டும் அகாடெமி வந்தவன் அவன் தேர்வுகளுக்குப் படித்தான். அடுத்து வகுப்புகள் முடிய ஏழு மணியாக இரவு உணவை முடித்து அவன் தங்கியிருக்கும் விடுதி சென்றான்.
அம்மாவிற்கு அழைத்துப் பேசியவன் மொட்டை மாடியில் சிறிது நேரம் உலாவினான்.
லாலா லஜபதி ராய் சுதந்திர விலாசத்துக்காரன். திருவாரூர் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவன் லாலா. லாலாவின் தாத்தா திலகரின் அப்பா சுதந்திர போராட்ட வீரர். ஆகையால் அவர்களின் வீட்டின் பெயர் சுதந்திர விலாசம். திலகருக்கு இரண்டு மகன்கள் பெரியவர் வாஞ்சி நாதன் சித்ராவுக்கு இரண்டு மக்கள். லாலாவும் அவன் தங்கை சரோஜினியும். சின்னவர் சித்தப்பா சித்ரஞ்சன் வசுந்த்ராவுக்கு ஒரே மகன் பகத் சிங். அவன் ஒன்பதாம் வகுப்பு முடித்திருக்கிறான். சித்ரஞ்சன் தஞ்சாவூரின் ஏடிஎஸ்பி.
சரோஜினி டவுனில் உள்ள பள்ளியில் ஆசிரியை. அவளின் கணவன் சக்திவேல், தஞ்சாவூரில் காவல்துறை ஆய்வாளராக இருக்கிறான். சக்திவேலின் கொள்ளுத்தாத்தா வேதையன் ஆங்கில அரசின் கீழ் வேலைப்பார்த்தவர், அவர்களை துரை வீடு என்று அந்த காலத்தில் அழைக்க, சுதந்திரப்போராட்டத்தில் ஈடுப்பட்ட திலகரின் தந்தைக்கும், திலகருக்கும் அவர்களோடு ஒத்துப்போகாது.
இரு குடும்பங்களுக்குச் சிறு சிறு சண்டைகள் அடிக்கடி வெடிக்கும். பக்கத்து வீடு என்றாலும் இந்தியாவின் பாகிஸ்தான் அது!
இதில் சித்ரஞ்சனும் சக்திவேலின் அத்தையுமான வசுந்த்ராவும் காதல் திருமணம் செய்தவர்கள். வேதையன் வெள்ளையர்களிடம் வேலைப்பார்த்துப் பொருளீட்ட, வெள்ளையனை எதிர்த்தே செல்வம் இழந்தனர் சுதந்திர விலாசத்துக்காரர்கள்.
அதனால் திலகருக்குத் தன் மக்களை எப்படியாவது சர்க்கார் உத்தியோகத்தில் உட்கார வைக்க வேண்டுமென்ற உறுதி. அதன்படி வாஞ்சி நாதன் அக்ரீ ஆபிசராக இருக்க, சித்ரஞ்சன் காவல்துறையில் இருக்கிறார். அடுத்து பேரன் லாலாவையும் அரசுத் தேர்வுக்குத் தயார் செய்துக்கொண்டிருந்தார்.
லாலாவும் சொல்பேச்சுத் தட்டாத பிள்ளை. தாத்தா சொன்னது கேட்டுப் படித்தான், படித்தான், படித்துக் கொண்டே இருக்கிறான். அவன் எழுதாத தேர்வில்லை, ஏறாத எக்ஸாம் செண்டர் இல்லை. பார்க்காத தன்னம்பிக்கை வீடியோக்கள் இல்லை, போடாத மாக் டெஸ்ட் இல்லை, படிக்காத செய்தித்தாள்கள் இல்லை. அதே நேரம் அவனுக்கு இன்றுவரை அரசு வேலையுமில்லை.
நான்கு வருடங்கள் வேகமாக ஓடிவிட்ட நிலையில் அவன் தங்கை திருமணம் முடிந்த சில நாட்களில் நடந்த சம்பவம் லாலாவின் நினைவில் வர, மொட்டை மாடி சுவரில் அப்படியே சாய்ந்து வானத்தை வெறித்தான்.
தங்கை திருமண சமயத்தில் அவன் தேர்வு முடிவுகள் வெளிவர, அந்த முறை சொற்ப மதிப்பெண் வித்தியாசத்தில் அவனின் வாய்ப்புப் பறிபோனது. லாலா தங்கை திருமணம் என்று அதனை வீட்டில் சொல்லாது மனதுக்குள் வைத்து மருகிட, சில நாட்களில் வாஞ்சி நாதன் மகனிடம் தேர்வு முடிவு குறித்துக் கேட்டார்.
“போச்சுப்பா” என்றான் மெல்ல. அவனுக்கே கஷ்டமாக இருந்தது. எப்போதுதான் எனக்கு விடியும் என்ற எண்ணம், விடியுமா என்ற சந்தேகமே வந்துவிட்டது. தனக்கான வேலை இதுவல்லவோ இல்லை வேளை இதுவல்லவோ என்ற குழப்பங்கள்.
“என்ன போச்சுன்னா?” வாஞ்சி நாதன் குரல் உயர்ந்தது.
“என்னப்பா பாஸ் ஆகலயா?” திலகரின் குரல் வருத்தமாக ஒலிக்க, லாலாவும் சோகமாக தலையசைத்தான்.
“விடுப்பா. அடுத்த பரீட்சையில பார்த்துக்கலாம்” என்று திலகர் சொல்ல
அவரின் மனைவி அஞ்சம்மா, “மன்னார்குடி ஜோசியன் அடுத்த பங்குனிகுள்ள இவனுக்கு வேலை கிடைச்சிடும், யோகமிருக்குனு சொன்னான். நீ கவலைப்படாத லாலா” என்றார்.
“ஆமா சித்திரை பங்குனின்னு போகுமே தவிர இவனுக்கு வேலை கிடைச்ச மாதிரிதான். அப்பா என்னை மன்னிருங்கப்பா… உங்க ஆசையெல்லாம் இவன் நிறைவேத்த மாட்டான். என்னோட வேலை செய்றவங்க பசங்க எல்லாம் பெரிய பெரிய ஐடி கம்பெனில லட்சத்துல சம்பளம் வாங்குறாங்க, இல்லை வெளி நாட்டுல படிப்பு, வேலைனு இருக்கானுங்க. இவன் படிச்சிருந்தா ஒழுங்கா இன்னேரம் வேலைக்குப் போயிருக்க மாட்டான்..” மகனை முறைத்தபடி வாஞ்சி நாதன் சொல்ல
“நான் படிக்கலன்னு சொல்லாதீங்கப்பா. நான் ஒழுங்காதான் படிச்சேன்” லாலா ரோஷமாக சொல்ல
“படிச்சு கிழிச்சிருந்தா நாலு வருசத்துல இன்னேரம் ஒரு க்ளார்க் வேலையாச்சும் வாங்கியிருக்கணும். நம்ம சரோ மாப்பிள்ளைக்கும் உன் வயசுதானே? அந்த பய எஸ்.ஐ இருந்து இன்னிக்கு இன்ஸ்பெக்டரா இருக்கான். நீ அப்படியே இருக்க” என்றார் ஆற்றாமையோடு.
லாலாவுக்கு சட்டென்று எல்லாம் நினைவில் வைக்க முடியாது. நேரமெடுத்துப் படித்தாலும் தீவிரமான படிப்பாக இருக்கும். அவனும் வயதுக்கேற்ற வகையில் நண்பர்களோடு சுற்றுவது என்றிருந்தாலும் அதெல்லாம் முதலிரண்டு வருடங்களிலே குறைந்து இப்போது நெருங்கிய நண்பன் என்றால் சக்தி மட்டுமே.
அவனை படிக்கவில்லை என்று அப்பா குற்றம் சுமத்த அத்தனை கஷ்டமாக இருந்தது. இருபத்தேழு வயதாகப்போகிறது அவனோடு படித்தவர்கள் வேலைப்பார்க்கிறார்கள், சிலருக்குத் திருமணம் கூட ஆகிவிட்டது, அவர்களின் பிள்ளைகள் கூட பள்ளிக்கூடம் செல்ல துவங்கியிருக்க, லாலா இன்னும் படிப்போடு இருக்கிறான்.
படித்து முடித்தவுடனே தாத்தாவின் பேச்சைக் கேட்காமல் வேலைக்குச் சென்றிருக்க வேண்டுமோ என்று சில மாதங்களாக அவனுக்குள்ளும் யோசனைகள் ஓடின.
லாலாவுக்கும் அப்பா, சித்தப்பா, சக்தி போல் ஒரு அரசு வேலை. அதனோடு கிடைக்கும் மரியாதை எல்லாவற்றின் மீதும் ஆவலிருந்தது, தாத்தாவின் பெயரையும் காப்பாற்றலாம் என்ற எண்ணம். ஆனால் வருடங்கள் ஓட, வாழ்க்கைப் பற்றிய பயமும் சோர்வும் அவனை ஆட்கொண்டன.
இப்போது கூட தங்கைக்குத் திருமணமாகிவிட அதற்கும் கூட அவனால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. கை செலவுக்கு ஆகுமென்று ஒரு வருடமாக ஆன்லைனில் அகாடெமியொன்றில் இரண்டு பாடங்களுக்கு வகுப்பெடுக்கிறான். அதில் வந்த வருமானத்தில் பரிசு வாங்கியிருந்தான்.
அவனுக்கே தன்னைக் குறித்த தாழ்வுணர்ச்சியிருக்க தந்தையும் அதையே சொல்லிப்பேச இன்னும் உடைந்தான் லாலா.
“இப்போ என்ன? நான் வேலை வாங்கிட்டா படிச்சேன்னு ஒத்துப்பீங்கதானே? நான் இன்னிக்கே சென்னை போறேன், நான் படிச்சு வேலை வாங்கிட்டு வீட்டுப்பக்கம் வரேன்” என்று கோபமாகக் கத்திவிட்டு அறைக்குள் புகுந்தவன் யார் சொல்லியும் கேட்கவில்லை.
அத்தனை நாள் பொறுத்தவன் அன்று பொங்கிவிட, திலகர் கூட சொல்லிப்பார்த்தார்.
“நீ நல்லா படிச்சேன்னு எனக்குத் தெரியும் லாலா. உங்கப்பன் ஏதோ ஆதங்கத்துல பேசுறான். வேலைப் பார்த்து படிக்க எல்லாம் கஷ்டம், ஒரு வருசம் பாரு வரலன்னா வேற பார்ப்போம். எங்கேயும் போகாதப்பா” என்று சொல்லியும் சென்னை வந்துவிட்டான்.
வழக்கம்போல் சென்னை அவனையும் அணைத்துக்கொண்டது.
இதோ ஒரு வருடமாகிறது. நேர்காணல் வரை இரண்டு தேர்வில் தேர்ச்சிப்பெற்றான், அதில் தேறவில்லை.
இதில் கோடை அனலில் அதிசயமாக பெய்யும் மழை போல் திடீரென ஒருத்தி அவன் வாழ்வில் வந்தாள். காதல் தந்தாள். இன்று கல்யாணத்திற்குக் கேட்கிறாள். அவன் கேளாமல் ஒரு காதல்! ஆனால் அவனின் தனிமைக்கும் தாழ்வுணர்ச்சிக்கும் தாலாட்டு போல் அவள்.
நிலையற்ற வேலையும் பிடிப்புமில்லாத நிலையில் அவனுக்கு திருமணத்தில் இணைய விருப்பமில்லை.
பத்து மணிக்கு அவன் போனில் அலாரம் சத்தம் போட உறங்கும் நேரம் அவனுக்கு. உட்கார்ந்திருந்தவன் மெல்ல எழுந்து அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தான். ஆகாயத்தில் நிலவின் உதயம்! இப்போதெல்லாம் நிலவைப் பார்ப்பதில் அவனுக்கு அலாதி ஆனந்தம் கிடைக்கிறது.
‘தானாக தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாகிற்று’ என்று வண்ணதாசனின் கவிதையுண்டு.
அப்படி தானாக தட்டுப்பட்டவள் தான் அவனின் நிலா. காதலை அவனுக்குள்ளும் உதிக்கச் செய்தவளின் பெயர் உதயநிலா. உறங்கலாம் என்று அவன் படியிறங்க, உதய நிலாவிடமிருந்து அழைப்பு. பேசலாமா வேண்டாமா என்ற தடுமாற்றத்தோடு தரையிறங்கி அறைக்குள் நுழைந்தான் லாலா.