நடந்தவற்றை எல்லாம் நாரதரிடம் கூறிமுடித்த பரமாத்மாவின் முகம் வருத்தம் தோய்ந்து இருந்தது.
“அய்யனே நடந்தவற்றைக கேட்டால் உண்மையில் எனக்கும் ஆத்திரம் தான் வருகிறது. இந்த ப்ரிகு முனிவர் ஏன் இப்படி ஒரு சாபத்தை வீசிவிட்டுச் சென்றுவிட்டார். இது அபத்தமாக அல்லவா இருக்கிறது. ஏன் இப்படி ஒரு மூர்க்கத்தனம்? இனி நாம் செய்வது யாது பிரபு? ப்ரிகு முனிவரிடமே சென்று அவரை கண்டு அவரது தவறை எடுத்துக்கூருவோமா பிரபு? அவர் மனம் மாற வாய்ப்புள்ளது அல்லவா?” என்ற நாரதனை பார்த்து ஒரு வெற்று சிரிப்பை மட்டும் உதிர்த்த பரமாத்மா,
“இப்படி அர்த்தமற்று பேசாதே நாரதா, எடுத்துக் கூறுவதைக் கேட்டு நடக்கும் பால்மணம் மாறாத பாலகனா அவர். நிச்சயம் அவர் மனம் மாறி அவரது தவறுகளை உணர்வார். பெண்ணை வெறும் சேவகம் செய்யும் பிறப்பு என்று அவர் பார்க்கும் கண்ணோட்டமும், அவர் எண்ணமும் நிச்சயம் விரைவில் மாறும் அவருக்கு. ஆனால் இட்ட சாபம் பொய்த்துவிடுமா? இல்லை கொட்டிய வார்த்தைகளைத் தான் அள்ளிவிட முடியுமா? ஹ்ம்ம்.. ம்ம்ம்ம்.. முடியாது நாரதா. இது அனைத்தும் நிகழ்ந்து தான் ஆக வேண்டும். வேறு மார்க்கமும் இல்லை என்பது தான் உன் தந்தை பிரம்மதேவர் எனக்கு எழுதிய விதி போலும் “
“பிரபு, என்ன இப்படி விரக்தியாகப் பேசுகிறீர்கள். உலகனைத்தும் ஆளும் நாயகன் தாங்கள் இப்படி இருக்கையில், இந்தத் தரணி எப்படித் தங்குதடையின்றி இயங்கும்?”
“இது விரக்தி இல்லை நாரதா! சரிபாதியானவள் சற்றே தொலைவில் தொலைந்துவிட்டாளே என்ற வலி. கொஞ்சம் ஏக்கமும் கூட. இப்படி நிறையக் கூறிக்கொண்டே போகலாம். இதற்குக் காதல் என்றும் பெயர் வைக்கலாம் அல்லவா?” என்று நாரதரை ஏறிட்டுப் பார்க்கிறார்.
நாரதர் ஒன்றும் கூறாமல் முழித்துக்கொண்டிருக்க, பரந்தாமன் மெல்லியதாய் சிரித்தவண்ணம், “நீ இப்படி முழிக்கும் அளவிற்கு நான் ஒன்றும் கூறவில்லையே நாரதா? அதுசரி, பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பவனுக்குக் காதல் பாடம் எடுக்க என்னால் ஆகாது” என்று எழுந்து அங்கே தனியே பூத்துக்குலுங்கிய பாரிஜாத மலர்களை ஒருகணம் பார்த்தவாறு நிற்கிறார்.
“இந்தப் பாரிஜாத மலர்கள் அத்தனையும் லட்சுமிக்கு மிகவும் பிடித்தவை. பாவம் இவை கூட அவள் இல்லாமல் இனி பார்ப்பாரற்று தான் கிடக்கப் போகிறது போலும்” என்று கூறுகையில் அவர் குரலில் இருந்த எதோ ஒரு தவிப்பு அப்பட்டமாய் நமக்குத் தெரிகிறது.
பஞ்சுமெத்தை மேகங்கள்.. ஆகாயத்திற்கும் எனப் பஞ்சபூதங்கள் அனைத்தும் உங்கள் காதலின் சாட்சியாய் நின்று உங்களை ஒன்று சேர்க்கும். அது திண்ணம். பாரிஜாத மலர்களும் உங்கள் காதலின் பெயர் சொல்லியே மனம் வீசும். தாங்கள் நினைவுகளின் பிடியில் சிக்கிவிடாதீர்கள் பிரபு. தாங்கள் தகர்த்தெறியத் தடைகள் இன்னும் கோடி உள்ளது. ஆனாலும் தாங்கள் இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள் என்று தான் எனக்கும் புரிபடவில்லை”
“தானாய் அவள் என்னைச் சேரவும் வாய்ப்பில்லை நாரதா! அவளுக்கு அவளைப் பற்றிய, அவள் பிறப்பைப் பற்றிய எண்ணங்கள் வராது போகட்டும் என்பதே சாபம். என்னால் கூட மானுடனாய் அவதரிக்க இயலாது நாரதா! கலியுகத்தின் வழும்பை நோக்கியது எனது பத்தாவது அவதாரம். நான் கடவுளாகவே பூலோகம் செல்வது எத்தனை சாத்தியப்படும் என்பது தான் சந்தேகமாகவே இருக்கிறதடா!”
“கடவுளுக்கே இந்தச் சோதனை!
எப்பொழுது தீரும் இந்த வேதனை!”
“நாரதா.. வேண்டாம் இந்த எதுகை மோனை விட்டுவிடு!”
“ஐயோ பிரபு, நான் கூற விளைந்தது வேறு! முழுமைக்கும் கேளுங்கள்”
“என்ன..?”
“மஷ்ய.. கூர்ம.. வராஹ.. நரஹரி.. வாமன.. பார்க்கவ.. ராம்.. பலராம.. கிருஷ்ண.. கல்கி என்று மக்களுக்காக தசாவதாரங்கள் எடுக்க இயன்ற உங்களுக்கு, மனைவிக்காக ஒரு பிறவி எடுக்க இயலாதோ? என்ன பிரபு? தாங்கள் நினைத்தால் முடியாதது என்று எதுவும் உண்டா என்ன?”
“இல்லை நாரதா! கடவுளாக இருந்தாலும் கூட சில சட்டத்திட்டங்களை கடைப்பிடிக்கவேண்டும். அவர் அவர்க்கென்று ஒரு நெறிமுறை இருக்கிறது. கோட்பாடுகள் இருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்டது படி நான் தசாவதாரம் மட்டுமே எடுக்க இயலும். கல்கியாக பிறந்தாள் அது கலியுகத்தின் இறுதியாகத் தான் இருக்க முடியும். அடுத்த சத்யயுகத்தின் ஆரம்பம் அது. அதற்காகவே அன்றி வேறு எந்தச் சொந்த காரணங்களிற்கும் நான் பிறவி எடுத்தல் தகாத ஒன்று நாரதா! ம்ம்ம்ம்.. ஹான்.. வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நான் இதே ரூபத்தில் என் தெய்வ ஆற்றல்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு அவளுக்காகச் சிலகாலம் மனிதனை போல் என்னை நானே பாவித்து வேண்டுமானால் வாழலாம்.”
“என்ன பிரபு இப்படிக் கூறுகிறீர்? தாங்கள் அப்படி சிலகாலம் வாழச் சென்றுவிட்டாள், இந்த உலக உயிர்களை எப்படிக் காப்பீர்கள்? பெரும் குழறுபடி நடந்துவிடாதா?”
“நாரதா? நீயும் என்ன புரியாதவன் போல் பிதற்றுகிறாய்? மனிதர்களை நல்வழியில் கொண்டுவர நினைப்பவன் தான் நான். எங்கே எல்லாம் நல்ல சிந்தனையும், நேர்மறை எண்ணங்களும் நிறைந்திருக்கிறதோ அங்கெல்லாம் நானும் நிறைந்திருப்பேன். தனி மனிதனின் ஒழுக்கத்திற்கும் எண்ணங்களிற்கும் ஏற்றவாரு தானே அவர்கள் வாழ்க்கை பயணிக்கும். நான் வெறும் வழிகாட்டி தானே!”
“அருமையான விளக்கம் பிரபு! ஆக தாங்கள் இப்படியே மனித உருக்கொண்டு வாழப் போகிறீர்கள். ஆனால் எப்பொழுது பூலோகம் செல்லப் போகிறீர்கள்?”
“அதற்கு என்னவள் முதலில் பிறப்பெடுக்க வேண்டுமே! அவள் பிறந்து வளர்ந்து இருபத்தி ஐந்து அகவை ஆகும் வரை என் கண்களில் அக்கபட மாட்டாள். இது எனக்கு விதிக்கப்பட்டது நாரதா! பொறுத்திருப்போம். அவளுக்காக நான் காத்திருக்கும் தருணங்கள் அனைத்தையும் நான் கடந்தாகத்தான் வேண்டும்!”
“எல்லாம் நன்றாகவே நடக்கும் பிரபு! நானும் உங்களோடு பூலோகத்திற்கு உதவியாக வருகிறேன்!”
“இல்லை நாரதா! அது எத்தனை சரியாக இருக்கும் என்று தெரியவில்லையே!”
“எல்லாம் சரியாகத்தான் இருக்கும் பிரபு! தாங்கள் வீணாக என்னைப் புறம் தள்ளாதீர்கள்”
“வேண்டாம் என்று மறுத்தாலும் மூச்சிற்கு முந்நூறு முறையாவது நாராயணா நாராயணா என்று என் நாமத்தை விற்றுக்கொண்டே பின் வருவாய். சரி என்னோடு வா, வருவதில் தவறொன்றும் இல்லை. உன் ஆசையைக் கெடுப்பானேன்? ஆனால்….”
“ஏன்? நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இதில் என்ன ப்ரபு இடையில் அந்த ‘ஆனால்’ என்று ஒன்று இடைமறிக்கிறது? தாங்கள் ஒன்றும் கூறவேண்டாம் போங்கள்”
“நன்றாக யோசித்துக்கொள்ளடா! பிறகு பின்வாங்க இயலாமல் முழிக்கமாட்டாயே? மனிதனாய் வாழ்வது உனக்கு ஏற்புடையதா? பிறகு வருந்தி பயனில்லை!”
“அப்படியெல்லாம் நான் ஒன்றும் செய்துவிட மாட்டேன் பிரபு. நான் தான் நல்ல பிள்ளை ஆயிற்றே! உங்கள் சொல் பணிந்து நடப்பேன்! இது நான் உங்களுக்குக் கொடுக்கும் வாக்கு”
“எப்படித்தான் இப்படி ஒன்றும் அறியாத பாலகன் போல் உரையாடுகிறாயோ?”
“உங்களை விடவா நான் பகடி செய்கிறேன். தாங்களே பக்தர்களிடம் தீராத விளையாட்டுப் பிள்ளை என்று பெயர் பெற்றவர். உங்களுக்கு நான் எம்மாத்திரம்?”
“ஹாஹா.. சரி நாரதா நீ போய்வா.. நாம் பூலோகம் சென்று வாழத் துவங்கும் நாள் தொலைவில் இல்லை. அன்று என்னை வந்து சேர்ந்துவிடு” என்று பரமாத்மா கூறி முடிக்கவும், நாரதர் ஆசி பெற்றுக்கொண்டு விடை பெற்றார்.
அதற்குப் பிறகு எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்கள் உருண்டு ஓடியது என்பதெல்லாம் கணக்கில் இல்லை.
அத்தனை நாட்களும், நிமிடங்களும், நொடிகளும் தவத்தில் கழிகிறது அந்த நாராயணனுக்கு. தன்னவள் தன் மனக்கண்ணில் தோன்றும் வரை விழித்திறவேன் என்று அமர்ந்திருக்கிறார். முழு மூச்சாய் மனைவியின் பிறவியை அறிய முயல்கிறார். வருடங்கள் உருண்டு ஓடுகிறது. அவ்வப்பொழுது கண்கள் மட்டும் பனித்துவிடும்.
இறைவனாக இருந்தால் என்ன? இடும்பனாக இருந்தால் என்ன? இல்லை அற்ப வாழ்வைக் கொண்ட மனிதப் பிறவிகளாக இருந்தால் தான் என்ன? தன்னவளை தூரம் நின்று கூட பார்க்க இயலாத துயர் துவண்டு போகச் செய்யும் தானே! அதுதானே மனம்? அதற்கும் உணர்ச்சிகள் இருக்கிறது தானே? அதுதானே காதல்? அதனால்தானே இந்தப் பிரிவின் வலி?
இறைவன் என்று காதலுக்குக் கரையாமல் கல் எனச் சமைந்து நிற்க எதிர்பார்ப்பது ஒன்றும் நியாயமில்லை தானே!
“ராவணன் இடத்தில் சீதையாய் அவளும் ராமனாய் நானும் அப்பிறவியில் பத்து மாதங்கள் பிரிந்திருந்த துயரையே இத்தனை பிறவிகளுக்குப் பின்னும் என் மனம் மறக்கவில்லை! நமக்கு இப்படி ஒரு சாபம் எதற்கு?” என்று அந்தப் பரமாத்மா படும் துயர் பார்க்கும் நமக்கே பெரும் வேதனை தருகிறது, பரந்தாமன் படும் பாடு சொல்லிவிட முடியுமா?
.
.
.
.
அவர்கள் எதிர்பார்த்த அந்நாளும் வந்தது…!!!!
.
.
.
.
சூரியன் நீட்டிய கரங்களில் உள்ள சாயம் பட்டு நீலத் துணியில் சிவப்பு வண்ணம் தெளித்தார் போல் ஆங்காங்கே இளஞ்சிவப்பு நிறம் கலங்களாய் காட்சி அளித்த காலை நேரம் அது. இரவு பெய்த மழையின் சாட்சியாய் அந்தத் தார் சாலைகள் அனைத்தும் லேசாய் ஈரத்தைத் தாங்கிக்கொண்டு சில்லென்ற காற்றை தவழவிட்டுக்கொண்டிருந்தது!
அந்தக் காலைப் பொழுதே சென்னை வாழ் மக்களுக்கு அத்தனை பரபரப்பு தான்.
ஒன்பது மணி ஆகியும் ஒன் மேன் ஆர்மி போல் அசராமல் கட்டிலில் கை கால்களை பரப்பிக்கொண்டு தூங்குகிறாள் பெண்ணொருத்தி!
“காலையில எழுந்தோமா, பல்ல விளக்குனோமா, குளிச்சோமா, உறுப்புடியா அம்மாவுக்கு நாலு வேலை பார்த்து கொடுத்தோமான்னு ஏதாச்சும் செய்ய தோணுதா உனக்கெல்லாம். என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்கியோ தெரில. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு இன்னொரு வீட்டுக்கு போக போற பொண்ணு. இந்த லட்சணத்துல நீ இருந்தா உன் மாமியாகாரி என்ன நாக்கை புடுங்குற மாதிரி கேக்க மாட்டாளா? என்னடி பொண்ணு வளத்து வச்சுருக்கேன்னு. உனக்கு இளயவ, அவ எம்புட்டு பொறுப்பா இருக்குறா. அதுல பாதியாச்சும் செய்யலாம்ல. என்னேரமும் திங்குறது தூங்குறது. சரியான தர்த்தரியம் புடிச்ச பீட போல. எழுத்துரு டி மொதல்ல” என்று விடிந்தும் விடியாமலும் தன் மகள் வைஷ்ணவிக்கு வஞ்சனையே இன்றி வசைபாடல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார் அவள் அம்மா சைலஜா.
“அம்மா விடும்மா, இன்னும் மூணு மாசம் தான நம்ப கூட இருக்க போறா. ஜாலி அஹ் இருந்துட்டு போட்டும். சும்மா அவளை திட்டாத” என்று அக்காலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கையில் காபியோடு வருகிறாள் இளைய மகள் மனோரஞ்சிதம்.
“ஆமா அக்கால சொன்னா தொங்கச்சிக்கு வேர்த்துடுமே. என்னமோ பண்ணுங்க. எனக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகுது. நான் கிளம்புறேன். இல்லனா காலைலயே அந்த நளினி வந்து வம்பு வழக்க ஆரம்பிச்சுடுவா. எனக்கு பிபி ஏறும்” என்ற சைலஜா குளியல் அறைக்குள் புகுந்து கொண்டார்.
அவர்கள் வசித்திருப்பது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. இரண்டு தளத்திற்கு ஒரு பெண்ட்ஹவுஸ் என்னும் ரீதியில் இருபது மாடிகளுக்குப் பத்து வீடுகளைக் கொண்ட மிக நேர்த்தியான கட்டிடம் அது.
அடுக்கு மாடி குடியிருப்பு தான் என்றாலும், செல்வந்தர்கள் வாழும் இடம் தான் இது. அதற்கு அருகில் இருந்த குடியிருப்புகள் அத்தனையும் கேட்டட் கம்யூனிட்டி என்று சொல்லப்படும் நிர்மாணிக்கப்பட்ட சமூகம்.
ஆக, இவர்களும் செல்வந்தர்கள் தான் என்பதை இதன் மூலம் பிக்ஸ் செய்துவிடுவோம்.
இவர்கள் வீடு ஏழாம் மாடியில் அமைந்திருந்தாளோ என்னவோ சைலஜாவுக்கும் எதிர் வீட்டு நளினி மாமியோடு ஏழாம் பொருத்தம் பக்காவாக இருந்தது, அது தனிக் கதை. பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
சைலஜா கணவனை இழந்த விதவை. இளைய மகள் மனோரஞ்சிதம் பிறந்து மூன்று வயதிலேயே விபத்து ஒன்றில் சைலஜாவின் கணவர் ஜகன்னாதன் உலகை நீத்தார். அதன் பிறகு பெண்கள் இருவருக்கும் அம்மா தான் எல்லாம்.
அவர் இல்லையே என்று மன ரீதியாகத் துவண்டார்களே அன்றி பண ரீதியில் அவர்கள் பெரிதாய் கஷ்டம் எல்லாம் படவில்லை என்று தான் கூற வேண்டும்.
சுயமாக அவர்களுக்கென்று ஒரு கன்ஸ்டரக்ஷன்ஸ் கம்பெனியே இருக்கிறது. அதுவும் ஏகப்போக லாபம் பார்த்துக்கொண்டிருந்த தொழில். சைலஜாவிற்கு தொழில் ரீதியாக அதற்கேற்ற படிப்பும் முன் அனுபவம் மிகையாகவே இருந்ததாலும், சைலஜா கொண்டிருந்த மனோதிடம் அத்தனை வலியதாக இருந்ததாலும் ஓர் ஆணுக்குச் சமமாக நின்று தொழிலை கையில் எடுத்துக் கொண்டார்.
நிர்வகிப்பதில் ஜகன்னாதனையே சைலஜா மிஞ்சிவிட்டாள் என்பது அவர்களை அப்பொழுதய நாட்களில் சுற்றி வந்த கழுகு கண்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. லட்சங்களில் முதல் போட்டு ஆயிரங்களில் லாபம் பார்த்த நிலையை மாற்றி கோடிகளில் வரவை பார்க்க ஆரம்பித்து நடுத்தர வர்க்கத்தை விட்டு சற்றே உயர்ந்து வந்து விட்டார்கள் அவர்கள்.
பார்ப்பவர்களுக்கு ஒரே பாட்டில் ஓஹோ என்று ஆனது போல் இருந்தாலும், இரு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு தனியார் கம்பெனியை வெற்றிகரமாக நடத்த சைலஜா பட்ட கஷ்டங்களை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது.
இவர்களின் வாழ்வாதாரம் இப்படி இருக்க. இவர்களின் குடும்பம் இன்னும் அழகானது தான். காலை விடிந்ததும் விடியாததும் சைலஜாவிடம் அன்பாய் அர்ச்சனைகளை வாங்கிக்கொண்டு இருப்பவள் தான் சைலஜாவின் மூத்த மகள் வைஷ்ணவி.
பீகாம் முடித்துவிட்டு சிஏ பாஸ் பண்ண இயலாத அக்மார்க் அவரேஜ் ஸ்டுடென்ட்.
இரண்டு வருடம் சிஏ எழுத முயன்றும் ஒரு தேற்றமும் இல்லாத காரணத்தினால்,
அம்மாவின் கம்பெனிக்கு வேலை என்ற பெயரில் போய் வருவதோடு மூன்று வருடத்தைக் கடத்திவிட்டு, இருபத்தி ஆறு வயதில் வீட்டில் கை காட்டிய கல்யாணத் திசையில் காலெடுத்து வைத்துவிட்டாள். எல்லா வீட்டிலும் கடைக்குட்டி தான் செல்லம் அதிகம் இருக்கும். இங்கே எல்லாம் தலைகீழாகத் தான் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் அன்னையுடன் மல்லுக்கு நிற்கும் வைஷ்ணவிதான் இந்த வீட்டில் செல்லப் பிள்ளை என்பது பார்த்த பத்தே நிமிடத்தில் புரிந்துவிட்டது நமக்கு.
இளைய மகள் மனோவிற்கு வரும் புரட்டாசியோடு இருபத்தி ஐந்து வயது துவங்குகிறது. உளவியலில் முதுகலையும் முடித்துவிட்டாள். அஸோசியேட் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ( Associate Clinical Psychologist) என்று தகுதியும் பெற்றுவிட்டாள். தனியாக கிளினிக் ஒன்றில் அடுத்த வாரம் தான் பணியைத் துவங்க இருந்தாள். பாவம் என்ன குழறுபடி நடந்ததோ தெரியவில்லை, சைலஜா அவர்கள் கம்பெனிக்கே வந்து பொறுப்பை எடுத்துக்கொள்ளக் கூறிவிட்டார். அவளுக்கோ சக ஊழியர்களோடு சகஜமாக உறவாடி மகிழ வேண்டும். இங்குச் சென்றால் முதலாளியின் மகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் தான் பார்ப்பார்கள், அதுவும் இன்றி தான் படித்த படிப்புக்கும் தன் அம்மா தனக்குக் கொடுக்கும் பொறுப்பிற்கும் சற்றும் சம்பந்தம் இல்லை என்று கூறியவள், போன மாதம் தான் வேறு ஒரு கம்பெனியில் அவள் அம்மாவின் மூலமே எச்ஆர் பொறுப்பில் முன்னனுபவம் வேண்டும் என்று கூறிச் சேர்ந்துவிட்டாள்.
ஆஹா… இன்னொன்றைக் கூற மறந்துவிட்டேன். மனோ என்னும் மனோரஞ்சிதம் வேறு யாரும் இல்லை. சாட்ச்சாத் நம் லட்சுமி தேவியே தான். இல்லத்தரசியாக இருந்து இரும்பு நெஞ்சம் கொண்டு உயர்ந்து நிற்கும் சைலஜாவின் கருவில் இரண்டாவதாய் உதித்த பொற்குவியல். அவர் வாழ்வைத் தானே விரிவாக அலசி ஆராயப் போகிறோம். அதைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம்.
இதுதான் இவர்கள் மொத்தக் குடும்பத்தின் ஹிஸ்டரி ஜாக்ரப்பி.
மனோவின் குணநலன்கள் அத்தனையும் ஆஹா ஓஹோ என்று தான் இருக்கும். மறுப்பதற்கில்லை. கொஞ்சமே கொஞ்சம் சுட்டித்தனமும் அளவிற்கு அதிகமாய் பொறுப்புணர்ச்சியும் கொண்டவள். குடும்பம் என்றாள் போதும் குட்டி கர்ணம் அடிப்பவள். அத்தனை பெரிய பாசக்காரி என்று கூறவந்தேன்!
காலையிலேயே அவள் மஞ்சள் நிற வெஸ்பா ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு எதிர்வீட்டு நளினி மாமியின் மகள் சாய்க்ரிபாவையும் ஏற்றிக்கொண்டு அந்த ஒருவழிச்சாலையில் அவள் பணிபுரியும் தனியார் கம்பெனியை நோக்கிப் பறக்கிறாள்.
அங்கு அதே தனியார் கம்பெனியில் எம்டி பதவிக்குப் புதிதாக ஹரிதாஸ் என்று ஒருவர் வந்திருப்பதாக கம்பெனி முழுதும் ஒரே சலசலப்பு காட்டு தீப்போல் பரவியது.