அந்த இருசக்கர வாகனம் யுகா கன்ஸ்டரக்ஷன்ஸ் என்று பெயர் தாங்கிய பலகையைத் தாண்டிச் செல்கிறது.
கட்டிடம் பெரிய உயரம் எல்லாம் இல்லை. இரண்டாம் தளம் கூட கிடையாது… படிகளே இல்லாமல் சமதளத்தில் அமைந்த பிரம்மாண்டமான விஸ்தாரமான கட்டிட அமைப்பு கொண்டது தான் யுகா கன்ஸ்டரக்க்ஷன்ஸ்.
மனோ மற்றும் நளினி மாமியின் மகள் சாய்கிரிப்பா இருவரும் உள்ளே நுழைந்த நொடி முதல் ஆபீஸ் மொத்தமும் அந்தப் பேச்சுதான்.
ஒருவர், “இதென்ன பைத்தியக்காரத் தனமா இருக்கு? இப்டிக்கூட பண்ணுவாங்களா என்ன ம்ம்ம்?
இன்னொருவர்,”ஆமா சார், இப்டிலாம் எந்த கம்பெனிலயாச்சும் நடக்குமா?”
முதலாமவர், “ஆஹான்.. அதெப்படி, தன்னோட கம்பெனிலையே இன்னொருத்தனுக்கு கீழ வேலை பாக்குறது… ம்ம்ம்ம் கொஞ்சம் ஓவர் அஹ் தான் தெரியுது எனக்கு”
மற்றொருவர், ” சார் இல்லனா அவங்க பூர்விக சொத்தா இருக்கும். முன்னாடி இருந்த நம்ப ஆளு தத்து பிள்ளையா இருக்கும்.புதுசா வந்த இவரு கோச்சிக்கிட்டு போன உண்மையான வாரிசா இருந்தா? அவரை பாக்கத்தான் ஒரிஜினல் பணக்காரன் மாதிரி தெரியுது. நம்ப பாரதி சார் கொஞ்சம் எளிமை டைப் ஆச்சே”
“இருக்கும் இருக்கும்.. என்ன வெவரம்ன்னு சரியா தெரிலையே.. என்னவா இருக்கும்”
இப்படி பலவாராகப் பேசிக்கொண்டிருந்த சக ஊழியர்களைப் பார்த்து எரிச்சல் தான் வந்தது மனோவிற்கு.
“ஏன் டி சாய், இந்த சீரியலுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்கவேண்டிய மகான்களை இங்க ஏன் டி வேலைக்கு சேர்த்துருக்காங்க!?” என்று கேட்டவளின் குரலில் கொஞ்சம் கேலியும் இருந்தது.
“அடி போடி நீ வேற, அவனவன் ஹாலிவுட் ரேஞ்க்கு கதை அளப்பானுங்க, நீ என்னமோ சீரியலுங்குற.. ஹாஹா..
ஆனா எனக்கே கொஞ்சம் டவுட் தாண்டி, அதெப்படி நம்ப எம்டி பாரதி சார் அவர் கம்பெனில இன்னொருத்தருக்கு கீழ வேலை பாக்க முடியும்? இந்த கம்பெனி அவங்க குடும்பம் மூணு தலைமுறையா எடுத்து நடத்துறது தான. ஒன்னும் புரியலையே? ஏன் இப்டி பைத்தியம் மாதிரி பன்றாங்க? உனக்கு என்ன தோணுது டி மனோ?”
“அவங்க கம்பெனி, அவங்க இஷ்டம் உனக்கு என்ன? நமக்கு என்ன வந்துது? யாருகிட்ட வேலை பாத்தாலும் சம்பளம் தர தான் போறாங்க. பட் என்ன… யுகா அண்ணா கொஞ்சம் ஜெனியூன். நம்மகிட்ட பாசமா இருப்பாங்க. இப்போவும் என்ன, அவங்க இங்கதான இருக்க போறாங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல பாத்துக்கலாம். விடு”
“ஆனாலும் ஆனா உன்ன மாதிரி ஒருத்திய பாக்கவே முடியாது. போடி” என்று அவள் சென்றுவிட, யுகா என்கின்ற யுகபாரதி, யுகா கன்ஸ்ட்ரக்ஷன்ஸின் எம்டி, சாரி முன்னால் எம்டி காரை விட்டு இறங்கி உள்ளே வந்துக்கொண்டிருக்கிறான்
நல்ல மிடுக்கான நடை பகட்டான உடை என வாலிபத்தின் வசந்தம் அவனிடத்தில் வீசித் தள்ளியது.
அவன் தான் யுகபாரதி, தோற்றத்திற்கும் குணத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது தான். எளிமையாக இணங்கி பழகக்கூடியவன். மனிதர்களை மதிக்கத் தெரிந்தவன். ஆக மொத்தத்தில் ஒரு செல்வந்தனிற்கு மகனாகப் பிறந்த அக்மார்க் ஜெண்டில்மேன்.
உள்ளே நுழைந்த யுகா அங்கிருப்பவர்கள் அத்தனை பேரின் வணக்கங்களையும் புன்னகையுடன் பெற்றுக் கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி வேக நடைபோட்டான்.
உள்ளே சென்றவன் வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. வெளியே முன்பே குழப்பத்தில் இருந்த ஆட்கள் எல்லாம் ஆர்வம் தாளாமல் அவன் அறை வாசலில் செவிகளைத் தீட்டி வைத்து ஏதாவது செய்தி கிடைக்கிறதா என்று ஆர்வமாக நிற்க, இதையெல்லாம் கண்ட நம் மனோவிற்கு பெருமூச்சு ஒன்று விடுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியாத நிலை.
திடீரெனக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த யுகா, “சார் வந்துட்டாரு. சீக்கரம் வாங்க. மாலை பொக்கே எல்லாம் ரெடி அஹ்? என்ன எல்லாரும் முழிக்குறிங்க? வாங்க சீக்கரம்” என்று பரபரப்பாகப் பேசியவனுக்கு யாரும் பதில் சொல்லவும் மறந்து அவன் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப ஓடினார்கள்.
“அப்றம் மனோ, நீங்க மாலை வாங்கிட்டு வந்துருங்க, புது எம்டி சார் அஹ் நீங்கதான் வெல்கம் பண்ணனும். சீக்கிரமா வாங்க. ஏன் அப்டியே நிக்கிறீங்க?”
“இல்ல சார், நான் எப்படி? மாலை எல்லாம்?”
“என்னாச்சு மனோ? இவ்ளோ யோசிக்குறீங்க. யோசிக்குற நேரம் இதில்ல.. வாங்க வாங்க ” என்றவன் சரியாக அங்கே மாலை எடுத்துக்கொண்டு வந்தவரிடம் அந்த மாலையையும் வாங்கி இல்லை இல்லை பிடுங்கி அவள் கைகளில் திணித்துவிட்டு அவளையும் கையோடு இழுத்துக்கொண்டு செல்லாத குறை தான். அவன் மேல் உள்ள மரியாதை நிமித்தமாய் அவளும் அதை அப்படியே செய்ய முன் வந்தாள்.
அங்கே அந்தச் சொகுசு ஆடி காரில் இருந்து இறங்குகிறார் அவர்ர்ர்ர்ர்.. ஹரிதாஸ். உடன் ஓர் உதவியாள் வேறு, பெயர் நரேஷ்.
அந்தக் கடைக்கண் பார்வை, கத்தி வீசும் கண்கள், மிடுக்கான நடை, உடல் மொழி என்று அத்தனையிலும் வசீகரம் தான் மிதமிஞ்சி இருந்தது.
உள்ளே நுழைந்த ஹரிக்கு நேராக மனோ தோன்றியிருந்தாள்.
யுகா அவளிடம் மாலையைப் போடச் சொல்லி உந்த, அவள் விழித்த விழி விழித்தபடி இருக்க, அவள் முன் வந்து நின்ற ஹரியும் அவள் மாலை அணிவிக்காமல் இம்மியும் நகர்வதாய் இல்லை போல. அவளை ஹரி பார்க்கும் பார்வையே அவளுக்கு ஓர் அசவுகரியத்தைக் கொடுக்கிறது.
“என்ன இவன் இப்டி பாக்குறான்” என்று எண்ணியவள் ஹரி கழுத்தில் பட்டென மாலையை போட்டுவிட்டு சட்டென நகர்ந்து கொண்டாள். அவள் அருகில் இருந்த சாய் ஹரியைப் பார்த்தபடி அப்படியே இருக்கிறாள்.
“அடி மனோ. இவர எங்கையோ பாத்த மாதிரியே இருக்கே. கூட இருக்க அந்த ஆளையும் எங்கையோ பாத்துருக்கேன். ஆனா எங்கன்னு தான் சரியா நியாபகம் வர மாட்டேங்கிது”
“ஆமா அவன் உன் அத்தை பையன். இது உன் மாமா பையன். யாரை பாத்தாலும் இப்டி ஏதாச்சும் ஒன்னு சொல்ல வேண்டியது. பேசாம வாடி” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
ஹரியின் முகத்தில் அந்த வசீகரப் புன்னகை ஒன்று அரும்பியது.
வரவேற்புகள் அத்தனையும் வெகு ஜோராக முடிந்து, ஹரியை அவனுக்கான பிரத்தியேக அறையில் அமரவைத்தாயிற்று.
சுற்றும் முற்றும் பார்த்த யுகா, அறையினுள் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,
“ஜீ, ஹரி ஜீ… இந்த செட் அப் எல்லாம் பக்கா தான. என்னென்ன செய்யனுமோ எல்லாம் நாங்க பாத்துக்குறோம் நீங்க காரியத்துல கண்ணா இருங்க ஜீ” என்றவன் ஹரியிடம் பவ்யமாக நிற்கிறான்.
ஹரி, “இவன் என்ன டா இவ்ளோ பயபக்தியோட நிக்கிரான். எல்லாம் ஓகே தான். பட் என்னையும் கொஞ்சம் உன் பிரண்ட் மாதிரி ட்ரீட் பண்ணின்னா நல்லாருக்கும். இப்டி ரொம்ப தள்ளி வச்சு நடந்துக்குற மாதிரி இருக்கு. நிச்சயம் கூட இருக்குறவங்களுக்கு ஏதும் சந்தேகம் வந்துர கூடாது. அப்றம் எல்லாருக்கும் ஆபத்து தான். வீண் சிரமம் தான் மிஞ்சும்” என்று கூற,
நரேஷ், “பாஸ், நீங்க என்ன சும்மா வா? எவ்ளோ பெரிய ஆள் நீங்க! அதெல்லாம் தன்னால அந்த பயமும் பக்தியும் வரதான செய்யும்” என்று சிரித்துக்கொண்டே ஹரியின் தோள்களை இடிக்க,
ஹரி ஓர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான்.
அவ்வளவுதான் நரேஷ் கப்சிப்.
இதையெல்லாம் கவனித்த யுகாவிற்கு இப்பொழுதும் கூட நம்ப இயலவில்லை தான், தன்னிடம் உதவி நாடி வந்தவர்கள் கடவுள் என்று.
ஆக,
ஆக..
ஹரிதாஸ் அண்ட் நரேஷ் தான் கலியுகத்தில் உலவும் விஷ்ணு பரமாத்மா மற்றும் நாரத முனி என்பது நமக்கு ஒருவாறு தெளிவாகவே தெரிகிறது அல்லவா? ஆனாலும் இவர்கள் பூலோகம் வந்த கதையும், இப்பொழுது கம்பெனிக்கு எம்டி ஆக உருமாறியதும் குழப்பம் கூட்டுகிறது தானே.
அந்தக் கதையையும் பார்த்துவிடுவோம்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு,
பூலோகம் செல்லச் சரியான நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த பரமாத்மாவும் நாரதரும் தேவலோகத்திற்குத் தற்காலிகமாகப் பிரியாவிடை கொடுத்துவிட்டு பூலோகம் நோக்கி பயணம் ஆகிறார்கள்.
வழியில் எல்லாம் பரமாத்மாவிற்கு லட்சுமி தேவியாரின் சிந்தனை தான். எத்தனை யுகங்களுக்கான காத்திருப்பு? எத்தனை சூழலில்.. எத்தனை நேரங்களில் மனச்சோர்வின் பொழுதும் மனம் தன்னை அறியாமல் தன்னவளை தேடியிருக்கும்? எத்தனை முறை தன்னையறியாமல் தன்னவளின் பெயரை உச்சரித்திருப்பார்? எண்ணிக்கை பெரிது தான். அன்று ப்ரிகு முனிவரால் மறைந்த லட்சுமி தேவி பூலோகத்தில் பிறப்பெடுக்கவே இத்தனை யுகமா! என்று நொடிகளை நினைவுகளால் நகர்த்தி இருந்தார்.
இதோ வந்துவிட்டார்கள் பூலோகம்.
இதோ வந்துவிட்டார்கள் இந்தியா.
இதோ வந்துவிட்டார்கள் தமிழகம்.
இதோ மெட்ராஸும் வந்தாயிற்று.
அவர்கள் வந்து தோன்றியது எதோ ஒரு மளிகைக் கடை முன்பு போலும். கணிசமான கூட்டத்தோடு அன்றாடம் இயங்கும் கடை. அதெல்லாம் இப்பொழுது பரமாத்வாவின் நினைவில் இல்லை.
தன்னவள் மனிதப் பிறவியில், அதுவும் இப்பிறப்பில், எப்படி இருப்பாள்? என்னைக் கண்டவுடன் ஏதேனும்
உணர்ச்சிகள் எழுமா? எழுமாயின், எங்கனம் அவளிடம் இத்தனை நாள் துயரை நான் எடுத்துரைப்பேன்? அவளுக்கும் என் வலிகள் ரணத்தை உண்டாக்கிவிடுமோ? என்று பலவாரான மனவோட்டங்களில் லயித்து இருந்த பரமாத்மா, “அய்யனே!”, என்ற நாரதனின் குரலில் நடப்புக்கு வந்தார். சரியாகச் சொன்னால் இழுத்துவரப்பட்டார்.
“சொல் நாரதா? என்னவாயிற்று?”
“என்ன பிரபு சொல் என்று என்னை என்ன சொல்லக் கேட்கிறீர்கள்? தாங்கள் தான் அடுத்தகட்டத் திட்டத்தை பற்றிக் கூற வேண்டும். இங்கு வந்து அடுத்து என்ன செய்ய இருக்கிறோம் என்பதை தாங்கள் முடிவு செய்தாயிற்று தானே? என்ன பிரபு இப்படி முழிக்கிறீர்கள்? அப்படியென்றால்? தாங்கள் இதுபற்றி இதுவரை ஒன்றும் யோசிக்கவே இல்லை என்பதுதானே அர்த்தம்? சரியாய் போயிற்று போங்கள்.” என்று நாரதர் தலையில் கைவைத்துக்கொண்டு,” நாராயணா, நாராயணா” என்று முகம் திருப்பிக்கொள்ள,
“என்னை எதற்கடா அழைக்கின்றாய்?”
“இனி நடக்கப்போகும் வேடிக்கைகளுக்கெல்லாம் தாங்கள் தானே மூல முதல் காரணம்! அதற்குத்தான் உங்கள் நாமத்தையே உச்சரித்துக்கொண்டு இருக்கிறேன்!”
இவர்கள் இருவரும் இவ்வாறாகப் பேசிக்கொண்டிருக்க, அந்தக் கடையிலிருந்து வெகுநேரமாக இவர்களையே உற்று நோக்கிய ஒரு பெண் இவர்களிடம் வந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை நீட்ட, இவர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
அந்த பெண் வேறு யாரும் இல்லை, ஏழாம் மாடி எதிர் வீட்டு நளினி மாமியின் மகள் சாய் கிரிப்பா தான். என்ன நினைத்தாளோ, காசை கொண்டு வந்து நீட்டுகிறாள்.
அடக்கடவுளே, என்ன இது? கலியுகம் வந்த கடவுள்கள் கலியுகத்திற்கு ஏற்ப காட்டன் டீ-சர்ட் பேண்ட் என்று போடாமல் காதுகளில் தொங்கும் குண்டலங்கள் சகிதம் பட்டாடையோடு அப்படியேவா வருவது? பாவம் தேவியாரின் நினைவுகள் சற்றே அவர்களை நிதானத்தில் செயல் பட விடவில்லை போலும்.
ஹரி கொஞ்சம் முழித்தபடியே நிற்க, நாரதர் அவளை ஏறிட்டுப் பார்த்து விட்டு, “பெண்ணே! என்ன இது? எதோ காகிதத்தை நீட்டுகிறாய்? யாரேனும் ஏதேனும் தூது சொல்லி அனுப்பினார்களோ? அதென்ன பரமாத்மாவிற்கே தூது. யார் அனுப்பியது?” என்ற நாரதர் அந்த இருபது ரூபாய் நோட்டை வெடுக்கெனப் பிடுங்க,
கிரிப்பா, “மேக் அப் நல்லாருக்கு, செரி ஒரு இருவது ருவா குடுத்துட்டு ஆசீர்வாதம் வாங்குவோம்னு வந்தேன். என்னங்க நீங்க காசுவாங்கிட்டு ஆசீர்வாதம் எல்லாம் பண்ண மாட்டிங்களா? ட்ராமா போடற குரூப் அஹ் நீங்க? மொதல்ல நார்மல் அஹ் பேசுங்கய்யா ரெண்டுபேரும்” என்று கூறிவிட்டு இவர்களை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
அந்த இருபது ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டிருக்கிறார் நாரதர்.
நாரதர், ” ப்ரபு, தாங்கள் இத்தனை வருடங்கள் தியானித்து இருந்ததால் இங்கு நடந்த மாற்றங்களைக் கவனிக்க தவறிவிட்டீர்கள் போலும். இங்கு வாய் மொழி முதல் பெண்களின் உடல் மொழி வரை அனைத்தும் மாறிவிட்டது பிரபு. என்ன பிரபு இப்படிச் செய்துவிட்டீர்கள்? கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். அந்தப் பெண் நம்மைப் பேடி போல் பார்த்துச் செல்கிறாள். எல்லாம் தங்களால் வந்தது!” என்று அவரை பாவமாய் பார்க்க,
“நான் தவத்தில் இருந்தேன் சரி! நீ என்ன தவம் இருந்தாயடா?”
“நாராயணா! நாராயணா! சரி விடுங்கள், நடந்தது நடந்துவிட்டது. இனி நடப்பதைப் பார்ப்போம் பிரபு. இக்காலத்தின் நடைமுறைக்கு மாறவேண்டும் அல்லவா. அப்படி சற்று ஒதுக்குப்புறமாகச் சென்று ஆவன செய்து வருவோம். வாருங்கள் வாருங்கள்” என்று பரமாத்மாவையும் கையோடு இழுத்துக்கொண்டு ஒரு முட்டுச்சந்துக்குள் நுழைந்து ஒரு பத்து நிமிடம் ஆகிறது. இருவரையும் இன்னும் காணவில்லை.
அடடே வருகிறார்கள் அக்மார்க் எங்ஸ்டர்ஸ் போலவே. ட்ரெண்ட் தெரிந்த கடவுள் போலும். அழகாய் ஒரு முழுக்கைச் சட்டை முலங்கை வரை சுருட்டி விட்டு அதற்கு ஏற்றார் போல் ஜீன்ஸ் அணிந்து கொண்டு பார்க்க நல்ல வாட்ட சாட்டமான வாலிபர்கள் போலத்தான் இருக்கிறார்கள். நாரதற்கு மட்டும் கொஞ்சமே கொஞ்சம் தொப்பை தெரிகிறது. மற்றபடி இருவரும் அப்படி இருக்கிறார்கள்.
நாரதர் ஒருமுறை பரமாத்மாவைப் பார்த்து கைகள் உயர்த்தி பிரமாதம் என்று காட்டிக்கொண்டே, “பிரபு இந்த ஆடையில் கூட தாங்கள் ஆணழகனாகத் தான் இருக்கிறீர்கள்” என்று கண்ணடிக்கிறார்.
“அடேய் மெண்டல், இன்னும் ஏன்டா தூயதமிழ்ல பேசுற?”
“ஐயகோ, மறந்துவிட்டேன் பிரபு!”
“எது?… டேய் ஒழுங்கா பேசு, எல்லாம் நம்பல வித்யாசமா பாக்குறாங்க பாரு”
“இல்ல இல்ல, சாரி பாஸ். சட்டுனு நம்ப லாங்குவேஜ் மாத்த முடியல. ஆனாலும் இந்த ஸ்லாங் எனக்கு புடிக்கல பாஸ். நம்ம பேசுறதே கவிதை வடிக்குறாப்ல அழகா இருக்கும். இது என்னவோ பிச்சு கொதறுன மாதிரி ரெண்டு மூணு மொழிய கலந்து… ச்சை.. நல்ல மொழிய நாராசம் பண்ணிட்டு அத நியூ நார்மல் ஆக்கி வச்சுருக்காங்க” என்று தலையில் அடித்துக்கொண்டார் நாரதர்.
“ஹாஹா.. உண்மை தான். அதைத்தான் இந்தக் காலத்துப் பாடலாசிரியன் ஒருத்தன்…
எங்கே கிடைக்கும் கவிதைன்ற தலைப்புல ஒரு கவிதை எழுதியிருக்கான். என்னனு தெரியுமா?”
“என்ன பாஸ்?”
“*வணக்கம் என்ற வார்த்தை,
அதை வண்க்கம் என்று ஒடித்து,
தமிழ் எழுத்தை மடித்து,
அதில் கசியும் ரத்தம் குடித்து,
தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளிகள்
தமிழைத் தோலுரித்து பேசும்போது,
அங்கே கவிதையா கிடைக்கும்?
நம் கல்லீரல் தான் துடிக்கும்*ன்னு சொல்லிருக்காரு.
அது எவ்ளோ உண்மைல!”
“உண்மையிலும் உண்மை தான் பாஸ்”
“ஓகே டா, அத விடு, அதெல்லாம் இனிமேல் நீயும் நானும் நெனச்சா கூட மாத்த முடியாது. உனக்கு ஒரு பேர் வச்சுருக்கேன். நரேஷ். நாரதன்…. நரேஷ். பொருத்தம் நல்லாருக்குள்ள” என்று சிரித்த பரமாத்மாவைப் பார்த்த புதிய நரேஷ் என்கின்ற நாரதர், “அப்போ உங்களுக்கு ஹிரித்திக் ரோஷன். நல்லாருக்குள்ள?” என்று கூற, அவர் இவனை ஏற இறங்கப் பார்க்கிறார்.
“ஓகே பாஸ், அப்போ ஹரிஷ், ஹர்ஷவரதன் இல்லனா ஹரிதாஸ்.. இதெல்லாம் எப்படி இருக்கு?”
“ஹாங்… ஹரிதாஸ்.. நல்லாருக்கே! பரவால்ல, அதையே பிக்ஸ் பண்ணிடுவோம்” என்று அப்பொழுதே இந்தக் கடவுள்கள் கூறி முடிக்கவும், சரியாக அவர்கள் நின்றிருந்த சாலையில் எதிர்புறம் டமால் என்று இடியை ஒத்த சப்தம் காதை கிழித்தது.
அடுத்த பத்து நொடிகளில் அந்த இடம் சுற்றி ஜனக்கூட்டம் குழுமி இருந்தது…
அக்கம் பக்கம் இருந்தவர்கள் பேசிக் கொண்டது, ” அய்யயோ சின்ன வயசு போல, லாரி காரன் அப்டியே அந்த கார் மேல ஏத்திட்டான். உதவிக்கு கூட எவனும் போகாம எல்லாம் செல்லுல போட்டோ புடிக்குதுங்க பாருங்க. பிழைக்குமா தெர்ல? ரத்தம் அவளோ ஓடுது. பொம்பளைங்க நம்மளால ஏதும் எடுத்துக்கட்டி செய்ய முடியலையே! பாவம். யார் பெத்த புள்ளையோ?!”
நரேஷ், “பாஸ், நம்ம எமராசா வேலைய காட்டீர்காரு போல. நாம தலையிட வேண்டாம் வாங்கப் போயிருவோம்” என்று கூற அவரிடம் இருந்து ஒரு முறைப்பு தான், நாரதர் அடங்கிவிட்டார்.