Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 15

அத்தியாயம் 15 

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ 

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ 



Advertisement

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் 

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

Advertisement

காலை ஐந்தரை மணிக்கு பூம்பாவையின் குரலில் பாரதியார் பாட்டு அத்தனை இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தது.

Advertisement

அதை ரசித்துக்கொண்டே ஸ்ரீகாந்த் ஊஞ்சலில் லேசாக ஆடி கொண்டு சுகமாக படுத்திருந்தார்.

Advertisement

இனிமையான இசையோடு காற்றில் மிதந்து வந்தது டிகாஷன் வாசனை. சற்று முன்பு தான் தோட்டக்காரர் கறந்த பாலை கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றிருந்தார். 

அடுத்த ஐந்து நிமிடங்களில் மணக்க மணக்க காபியை கொண்டு வந்து கொடுத்தார் பூம்பாவை. 

“ஹனி.. நிஜமாலுமே டிவைன்.. காலையில, உன் காஃபி உன் பாரதியார் பாட்டு ரெண்டும் சேர்ந்து..” என்று மனமார பாராட்டி காபியை ரசித்து குடித்தார்.

ஹிருதய் குளித்து கிளம்பி வந்தான்.

“என்ன ஹிருதய், இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட, காஃபி குடிக்கிறியா?” என்றார் ஸ்ரீகாந்த் உற்சாகமாக.

“ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு  ப்பா.. நான் போற வழியில குடிச்சிக்கிறேன்” என்று நிக்காமல் விரைந்து விட்டான்.

“எங்க ஹனி இவ்வளவு காலையில கிளம்பிட்டான்..”

“வயல் வேலை எல்லாம் விடி காலையிலே ஆரம்பிச்சிடும்ங்க.. இப்ப போயிட்டு காலையில டிபன் சாப்பிட வந்திடுவான். அப்புறம் திரும்ப கிளம்புவான் “

“இவன் எதுக்கு இப்படி ஓடுறான். நம்ம வயல் இல்லையே?”

“அவன் முழுசா எல்லாத்தையும் தெரிஞ்சுக்க நினைக்கிறான். அரிசி விற்க அது எப்படி விளையுதுன்னும் தெரிஞ்சுக்கணுமாம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் பெரியப்பா அவனுக்கு என்ன அரிசி வகைகள், என்ன என்ன பயிர் முறைகள், விளைச்சல் எப்படி, அறுவடை எப்படி, நெல் எப்படி பதப்படுத்தனும், பச்சரிசி எப்படி, புழுங்கள் எப்படி, தண்ணீர் பாசனம் எப்படி, இப்படி எல்லாத்தையும் சொல்லி கொடுக்கிறாங்க. உண்மையில இவ்வளவு விஷயங்களை கத்துக்கிறது சாதாரண விஷயம் கிடையாது. அவருக்கு ஹிருதய் மேலே தனி பிரியம். அதனால சொல்லி தராரு”

“ஆனா அவர் பசங்க எல்லாம் படிச்சு பெரிய வேலையில இருக்காங்க இல்லையா ஹனி?”

“ஆமாங்க, அதனால் கூட ஹிருதய்யை பிடிச்சிருக்கும் போல”

ஹாசினியும் காலையிலே எழுந்து படித்துக் கொண்டிருந்தாள்.

“இது நம்ம பாஃமிலியான்னு எனக்கே சந்தேகமா இருக்கு ஹனி.. எப்படி இருந்த நாம இப்ப எப்படி இருக்கோம் இல்ல?”

ஸ்ரீகாந்த் அலுவகத்தில் கேட்டு ஒரு வாரம் வொர்க் பிரம் ஹோம் வாங்கி இருந்தார். 

அப்பொழுது வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

“யாரு  இவ்வளவு காலையிலேயே வந்திருக்காங்க?” என்று கேட்டுக்கொண்டே பாவை வெளியே சென்று பார்த்தார்.

ப்ரதமேஷ், மிருதுளா, தணிகாச்சலம், சிவங்கரி நால்வரும் வந்து இறங்கினார்கள்.

“ஏங்க, சீக்கிரம் வாங்க” என்று கணவருக்கு குரல் கொடுத்துவிட்டு வாசலுக்கு விரைந்தார்.

“வாங்க அத்தை, வாங்க அண்ணா, அண்ணி, ப்ரதம்” என்று அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து வந்தார்.

‘இவர்கள் என்ன சொல்லாமல் கொள்ளாமல் திடீர் என்று வந்து குதித்திருக்கிறார்கள்’ என்று ஸ்ரீகாந்த் குழப்பமாக அனைவரையும் பார்த்துக்கொண்டே வரவேற்றார்.

பூம்பாவை அனைவருக்கும் சூடாக காஃபி கொண்டு வந்து கொடுத்தார்.

ஹாசினி அனைவருடனும் சிறிது நேரம் பேசிவிட்டு பள்ளிக்கு கிளம்பி சென்று விட்டாள். காலை ஏழு மணிக்கு எல்லாம் அவளது பேருந்து வந்து விடும்.

“நீங்க எல்லாம் குளிச்சிட்டு வாங்க, சாப்பிட்டுட்டே பேசலாம்” என்றார் பாவை.

விரைவாக வேலை செய்யும் பெண்மணியை வைத்துக்கொண்டு இடியாப்பம் தேங்காய்ப்பால், வடை, சாம்பார் என்று அனைத்தையும் தயார் செய்துவிட்டார்.

உணவு உண்ணுகையில், ப்ரதமேஷிடம் “என்ன விஷயம்?” என்று செய்கையில் கேட்டுக்கொண்டிருந்தார் பாவை.

அவனும் செய்கையில் ஏதேதோ காண்பித்து கொண்டிருந்தான், இரண்டு என்று விரல்களை காட்டினான், பின் வானத்தை பார்த்து மேலே கை தூக்கினான், பின் கைகளை கோர்த்துக்கொண்டு காண்பித்தான்.

பாவைக்கு ஒன்றும் விளங்கவில்லை.

மீண்டும் ‘ஒழுங்கா சொல்லு’ என்று செய்கை காட்டினார் கடுப்பாக.

மற்றவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அமைதியாக.

அப்பொழுது வெளியே கந்தசாமியின் புல்லெட் சத்தம் கேட்டது.

“என்ன இதயா, ஊர்ல இருந்து உறவுக்காரங்க வந்திருக்காங்க போல, சொல்லவே இல்லை?” என்றார் ஹிருதய்யிடம்.

“தெரியலயே தாத்தா, நான் கிளம்பும் போது யாரும் இல்லையே? “

“சரி, நானும் ஒரு எட்டு வந்து பார்த்திட்டே கிளம்புறேன்” என்று அவரும் ஹிருதய்யுடன் உள்ளே வந்தார்.

“அடடே! பட்டணத்துகாரங்க வந்திருக்காங்களா? வாங்க வாங்க” என்று அவர் வீட்டாளை போல இவர்களை வரவேற்றார்.

“பார்த்தியா மிருது, நாம அவரை கூப்பிடணுமா அவர் நம்மை கூப்பிடணுமா?”

என்று சிவங்கரி மகள் காதை கடித்தார்.

“என்ன பாவை நீ கூட சொல்லவே இல்லை, சொல்லி இருந்தா காலையிலே வெடக்கோழியா பிடிச்சு அனுப்பி இருப்பேன் இல்ல?” என்றார் கந்தசாமி பாவையிடம்.

“இப்ப என்ன பெரியப்பா, மதியத்துக்கு அனுப்புங்க..”

“மதியத்துக்கு கோழி எதுக்கு, நல்ல வெள்ளாடா பார்த்து வாங்கி கொடுத்து விடறேன்.”

“சரி பெரியப்பா, இப்ப சாப்பிட்டுட்டு போங்க” என்று பாவை ஹிருதய்யுக்கும் கந்தசாமிக்கு பரிமாறினார்.

“இந்த முறை கட்டாயம் எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்திட்டு தான் போகணும்” என்று அனைவரையும் அழைத்துவிட்டு புறப்பட்டார்.

வாசல் வரை தணிகாச்சலம் அவருடன் சென்றார்.

“முக்கியமான சங்கதியா தம்பி, எல்லாரும் ஒன்னா வந்திருக்கீங்க?” என்று  கந்தசாமி அவரிடம் பேச்சு கொடுத்தார்.

தணிகாச்சலம் தாங்கள் வந்த விஷயத்தை கூறிவிட்டார். 

“உங்க பேத்தியை தானாம் ஹிருதய்க்கு கல்யாணம் செய்ய நினைக்கிறீங்க? உங்க சம்பந்தி சீரியஸா இருக்கிறதுனால சீக்கிரம் கல்யாணம் முடிக்க நினைக்கிறீங்களாமே?”

கந்தசாமி இது என்னடா, சுத்தி சுத்தி இதே விஷயம் வருதே என்று தலையை பொத்தாம்பொதுவாக ஆட்டிவைத்தார்.

“அதுக்காக தான் என் மாமியார் எங்களையும் கூட்டிகிட்டு பொண்ணு பார்க்க கிளம்பி வந்திருக்காங்க”

“ஓ, நல்லது தம்பி.. நான் புறப்படுறேன்” என்று கிளம்பிவிட்டார் கந்தசாமி.

அவர் கிளம்பியதும் சிவங்கரி உள்ளே ஆரம்பித்தார்.

“என்ன பாவை, என் பேரனுக்கு கல்யாணம் எல்லாம் பேசி முடிச்சிட்ட போலயே?”

நேத்து தானே ஸ்ரீகாந்திற்கே விஷயம் தெரியும். அதுக்குள்ளவா அம்மாகிட்ட சொல்லிட்டாரு என்று பாவை கணவரை முறைக்கவும்.

“என்ன, என் முன்னாடியே என் புள்ளயை முறைக்கிற?”

“————”

“நீ வேணா என்னை மதிக்காம இருக்கலாம், ஆனா வீட்டுக்கு பெரியவளா எனக்கும் கடமைகள் இருக்கு, பொறுப்புகள் இருக்கு”

பாவைக்கு தலையே சுத்தும் போல இருந்தது.

“நான் ஒத்துக்குவேன்னான்னு உனக்கு சந்தேகம் வந்திருக்கலாம். ஆனா, சாக போற ஒரு உயிர், அவங்க பேத்தி கல்யாணத்தை பார்க்க ஆசை படறது தப்புன்னு சொல்ல முடியாது. அதை புரிஞ்சுகாத அளவு எனக்கு கல் நெஞ்சு கிடையாது”

ஹிருதய், ஸ்ரீகாந்த், பாவை மூவரும் ‘ங்கே’ என்று விழித்தனர்.

“எல்லாம் என் ட்ரெயினிங் அத்தை” என்றான் ப்ரதமேஷ் பாவையிடம் ரகசியமாக.

நறுக்கென்று அவன் தொடையை பிடித்து கிள்ளி வைத்தார் பாவை.

“அய்யோ அம்மா” என்று அலறினான் ப்ரதமேஷ்.

“என்னடா? நான் தான் இப்ப முன்ன மாதிரி இல்லையே. எதுக்கு கத்துற?” என்றார் சிவங்கரி கடுப்பாக.

“நாங்க தப்பா நினைப்போம்னு யோசிக்காதீங்க பாவை. ஹிருதய்க்கும் ப்ரதமேஷுக்கும் என்ன ரெண்டு வயசு தானே வித்யாசம். யாருக்கு முன்ன கல்யாணம் நடந்தா என்ன இப்ப? எல்லாரும் நம்ம பிள்ளைங்க தானே” என்றார் மிருதுளா.

“என்ன கேக்காம நீயா முடிவு எடுக்கிறதுல எனக்கு வருத்தம் தான். ஆனா அதுக்காக என் பொறுப்புல இருந்து நான் விலக மாட்டேன். இந்த குடும்பத்து தலைவியா, இவங்க கல்யாண ஏற்பாட்டை நானே முன்னே நின்னு  நடத்தலாம்னு முடிவு செஞ்சிட்டேன். அதான் கிளம்பி வந்துட்டோம்” என்றார் சிவங்கரி சீரியல் வசனம் போல.

“என்ன பாட்டி சொல்றீங்க?” என்றான் ஹிருதய்.

“நீ ஒன்னும் கவலை படாதே ஹிருதய்.. இன்னும் வேலைக்கு போகலைன்னு எல்லாம் யோசிக்காத.. உன் திறமை பத்தி உன்னை தூக்கி வளர்த்த எனக்கு தெரியாதா? நான் உனக்கு மாரல் சப்போர்ட்டா இருப்பேன் டா.. இப்ப கல்யாணம் செஞ்சுகிறதுல தப்பு இல்லை. இது ஒரு மனிதாபிமானத்துல செய்யுற உதவி தானே. நல்ல குடும்பம்.. என்ன ஒன்னு பொண்ணு பேரு மட்டும் தான் ஓல்ட் பேஷன்னா  இருக்கு..  

நாளைக்கே நல்ல நாள் தான், நாம போய் பொண்ணு பார்த்திட்டு  ஒப்பு தாம்பூலம் மாத்திட்டு வந்துடலாம். இப்ப கொஞ்ச நேரம் படுக்கிறேன். எழுந்ததும் என்ன எல்லாம் வாங்கணும்னு சொல்றேன்”  என்று அவரே பேசி முடித்துவிட்டு  எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

“நாங்களும் கொஞ்ச நேரம் படுக்கிறோம் பாவை”, என்று மிருதுளா தணிகாச்சலம் தம்பதியும்  உள்ளே சென்றுவிட்டனர்.

“டேய்.. ப்ரதமா.. என்னடா நடக்குது இங்கே?” என்றார் பாவை ப்ரதமேஷிடம்.

“என்ன அத்தை நீங்க? இப்படி ஒன்னும் தெரியதா மாதிரியே இருக்கீங்க மூனு  பேரும்?”

“நிஜமாலுமே ஒன்னும் புரியல டா” என்றான் ஹிருதய்.

“அதான் அத்தை, உங்க பிரண்ட்டோட  அம்மா சீரியஸ்ன்னு ஹாஸ்ப்பிட்டல்ல  சேர்த்து இருந்தாங்கலாமே?”

“ஆமா “

“அவங்க கடைசி ஆசையா அவங்க பேத்தி கல்யாணத்தை பார்க்க ஆசைபட்டாங்க தானே? அதுக்கு திடீர்ன்னு நம்ம ஹிருதய்யை மாப்பிள்ளையா பார்த்தாங்க தானே?” 

“ஆமா … உனக்கு இது எல்லாம் யார் சொன்னா?”

“ஹாசினி தான் அவ பிரண்ட் ரம்யா சொன்னதா எல்லாம் சொன்னா, அதான், நான் பாட்டிக்கு எடுத்து சொல்லி எல்லாம் புரிய வச்சிட்டேன்..” என்றான் பெருமையாக.

“டேய், நீ சொன்னது எல்லாம் சரி தான்டா.. அதுக்கப்புறம் அவங்க அம்மாக்கு சரி  ஆகி வீட்டுக்கு போய்டாங்க.. கல்யாணத்தை பத்திலாம் யாரும் பேசலை..”

“அய்யய்யோ.. என்ன அத்தை சொல்றீங்க?”

“எல்லாம் இந்த ஹாசினி ரம்யா ப்ரேம் மூனும் செய்யுற வேலை. இவ்வளவு கதை சொன்னவங்க உன்கிட்ட இதை சொல்லலையா?” என்றார் பாவை கடுப்பாக.

“இல்லையே.. நான் தான் பாட்டிகிட்ட, நீங்க தான் இந்த குடும்பத்து தூண்.. உங்களால தான் நல்ல முடிவுகள் எடுக்க முடியும்.. உங்களை நம்பி தானே இந்த குடும்பமே இருக்கு..  அப்படி இப்படின்னு பல பில்ட் அப் கொடுத்து ஒத்துக்க வச்சேன்..”

“ஏன்டா என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் தானே?” என்றார் பாவை நொந்து போய்.

“உங்களுக்கு உதவி செய்யலாம்னு தான் அத்தை செஞ்சேன்… இப்ப முழுசா ராஜ மாதாவா மாறி நிற்குற அவங்களை எப்படி சமாளிக்க?”

“போடா லூசு..” என்றான் ஹிருதய் கடுப்பாக.

“இப்ப என்ன அத்தை பண்றது?”

“நீயே போய் அப்படி ஒன்னும் இங்க நடக்கலைன்னு சொல்லி புரியவை” என்றார் ஸ்ரீகாந்த்.

“மாமா மாமா.. ப்ளீஸ் மாமா, நீங்க போய் பாட்டிகிட்ட சொல்லுங்க மாமா”

“டேய், ஏற்கனவே எம்மேல கோவமா இருக்காங்க.. நானெல்லாம் சொல்ல முடியாது..” என்று அவர் மறுத்து விட்டார்.

அவன் ஹிருதய்யை பார்க்கவும்,

“டேய்.. நானே போய், நான் லூசு இல்லைன்னு சொல்ல சொல்றீயா?”

அவன் பாவையை பார்க்கவும், அவர் தீவிரமாக எதையோ யோசித்து கொண்டிருந்தார்.

“நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஹெல்ப் பண்ணாட்டி என்ன? எங்க அத்தை இருக்காங்க எனக்காக யோசிக்க..” என்றான் கெத்தாக.

“சொல்லுங்க அத்தை என்ன யோசிச்சிருக்கீங்க?”

“மதியம் உனக்கு பிடிச்ச  மட்டன் சுக்கா பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் ப்ரதமா.. நீ போய் பாட்டிக்கிட்ட விஷயத்தை சொல்லிடு..” என்று அடுப்படிக்குள் சென்று விட்டார்.

ப்ரதமேஷ் தலையில் கை  வைத்து அமர்ந்துவிட்டான்.

“எல்லாம் இந்த ஹாசினியால வந்தது. பெரிய டிடெக்ட்டிவ் மாதிரி ‘என்ன கண்டுபிடிச்சேன் தெரியுமான்னு?’ அவ சொன்னதை நம்பி இப்படி உட்கார்ந்திருக்கேனே?” என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

————-

“எல்லாம் உங்களால வந்துதான். உங்க திருவாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கீங்களா? இப்ப ஊர்ல இருந்து பொண்ணு பார்க்கவே கிளம்பி வந்திருக்காங்கன்னு சொல்றீங்க” என்று நித்யகல்யாணி கந்தசாமியை கிழித்து தொங்க போட்டுக்கொண்டிருந்தார்.

“இங்க பாரு டீச்சரு , நான் செய்யாத தப்பை என்மேல போடாத, எல்லாம் நீயும் உன் புள்ளையும் செஞ்ச வேலை தான்..”

“ஊருக்கு இளிச்சவாயி, பிள்ளையார் கோவில் ஆண்டியாம் .. நாங்க என்ன செஞ்சோம்?”

“நீங்க ரெண்டு பேரும் பேசுனதை கேட்டு தான் ரம்யாவும் ப்ரேமும் விஷயத்தை பரப்பி இருக்குங்க..”

“எல்லாம் அந்த சின்ன கழுதைகளால வந்ததா? இருங்க மாலதிக்கு போனை போட்டு ரெண்டு பேர் தோலையும் உரிக்க  சொல்றேன்..”

“அம்மாவுக்கும் பிள்ளைக்கும்  வெண்கல குரல், நீங்க பேசுனது அவங்களுக்கு கேட்டுச்சு.. பிள்ளைங்க என்ன செய்யும்?”

“கேட்டா, உடனே ஊருக்கே சொல்லனுமா?”

“இப்ப என்ன செய்யலாம், அதை சொல்லு பூபாலம்” 

“நீங்க போன் போட்டு மாலதியையும் சௌந்தரையும் வரச் சொல்லுங்க முதல்ல”

அவர்கள் இருவரும் அரைமணி நேரத்திலே வந்து சேர்ந்தனர். விஷயத்தை கேள்வி பட்டதும் இவர்கள் எதிர் பார்த்த அளவிற்கு இருவருக்கும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.

“முத்துவை கிளம்பி வரச் சொல்லுவோமா அத்தை?” என்றார் மாலதி.

“அவகிட்ட என்னன்னு விஷதத்தை சொல்றது மாலதி.. திடீர்ன்னு இப்படின்னு சொன்னா பிள்ளை எப்படி எடுத்துக்குமோ?” என்றார் அவர் பேத்தியை எண்ணி கவலையாக.

“ஊருக்கே தெரிஞ்சிருக்குன்னா, உங்க பேத்திக்கு இந்நேரம் விஷயம் தெரியாமலா இருக்க போகுது? அது எல்லாம் மாமாவை பேச சொல்லுங்க.. எல்லாம் கூட்டு களவாணிக தான் அத்தை..” என்றார் மாலதி நொடிப்பாக.

“மாமனாருன்னு மரியாதை இருக்கா? களவாணி பயன்னு சொல்லுது பாரு நித்யா..”

“அவ எங்க அப்படி சொன்னா? சும்மா இங்க நின்னு சலம்பிக்கிட்டு இருக்காம போய்  உங்க பேத்திக்கு போனை போடுங்க..”

“ஏம்ப்பா, விஷயம் நிச்சயமா? முத்துவை வேற வர சொல்லிட்டா அப்புறம் ஒன்னும் இல்லைன்னா சங்கடமா போயிடும்.. இன்னும் யாரும் நேரடியா இதை பத்தி பேசலையே” என்றார் சௌந்தர் தந்தையிடம்.

“அவங்க வீட்டு மாப்பிள்ளை அப்படித்தான் சொன்னாரு சௌந்தரு”

“நீங்க என்ன ம்மா சொல்றீங்க?” என்றார் அம்மாவிடம்.

“சௌந்து சொல்றது சரி தான். கண்ணாமூச்சி ஆட்டமா ஆடுறோம் இங்க? மாலதி நீ உன் பிரண்ட் கிட்ட பேசி பாரு.. விஷயம் தெரிஞ்சிடும்.. “

————-

ப்ரதமேஷ் குறுக்கே நெடுக்கே நடந்துகொண்டிருந்தான்.

பாவையின் போன் அடிக்கவும்,

“ப்ரதம் என் போன் ஹால்ல சார்ஜ் போட்டு இருக்கேன் யாருன்னு பாரு?”

“அத்தை எம் ஸ்கொயர்ன்னு போட்டிருக்கு..”

பாவை வேகமாக ஓடி வந்து கைபேசியை வாங்கி ஆன் செய்தார்.

“சொல்லு மாலதி…” என்றார் மூச்சு வாங்க.

“ஏன் இப்படி மூச்சு வாங்க பேசுற பாவை?” 

“உன் நம்பர்ன்னு சொன்னதும் ஓடி வந்தேன் அதான்.. நீ சொல்லு”

“உங்க வீட்டுக்கு உறவுகாரங்க எல்லாம் வந்துருக்காங்கன்னு மாமா சொன்னாரு…”

“ஆமாம், எங்க மாமியார் நாத்தனார் எல்லாம் வந்திருக்காங்க..”

“என்ன விஷயம், திடீர்ன்னு வந்திருக்காங்க?”

“இவ தெரிஞ்சு கேக்கறாளா தெரியாம கேக்குறாளான்னு தெரியலையே..”

என்று யோசித்து கொண்டிருக்கையில்,

“சரி சொல்லு, இனி நேரடியா பேசிடலாம்..” என்றார் மாலதி.

“அது வந்து மாலு, ஹாசினி சொன்னா, நீங்க உங்க பொண்ணுக்கு என் பையனை கேக்க நினைக்கிறதா?”

“ஆமா பாவை, அம்மாவுக்கு முடியலைன்னு மதுரைக்கு போனப்ப அந்த பேச்சு வந்தது..”

“அது எப்படியோ சென்னைக்கு என் மாமியார் காது வரைக்கும் போயிடுச்சு..

இப்ப அவங்க பொண்ணு பார்க்க போவோம்னு சொல்லி நிக்குறாங்க..”

“சரி அப்ப நாளைக்கு வந்துடுங்க… இங்க எங்க மாமியார் வீட்டுக்கே வந்துடுங்க.. பாவை”

“இல்ல மாலதி, எனக்கு புரியுது இது மிஸ் அன்டர்ஸ்டாண்டிட்ங்னு.. பிள்ளைங்க விஷயத்தை பேசி பெருசாக்கிட்டாங்க..”

“இல்ல பாவை, இது எல்லாம் நம்ம கையை மீறி நடக்கிற மாதிரி இருக்கு.. நடக்கிறபடி நடக்கட்டும்.. பார்த்துக்கலாம். நாளைக்கு வந்துடுங்க.. நல்ல நேரம் பார்த்திட்டு போன் பண்ணி சொல்லு, நாங்க ஏற்பாடு எல்லாம் ஆரம்பிச்சிடறோம்.. பிள்ளைங்க பேசி பார்க்கட்டும். அப்புறம் அவங்க விருப்பத்தை கேட்டுட்டு மேலே பேசிக்கலாம். என்ன சொல்ற?”

“சரி மாலு..”

பாவை போனை வைக்கவும், ப்ரதமேஷ், ”அப்பாடா.. ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சிடுச்சு இல்ல அத்தை, இந்த ராஜமாதாகிட்ட எப்படி சொல்றதுன்னு மண்டை காஞ்சு போயிடுச்சு” என்றான் ஆசுவாசமாக.

“ஆமாடா, நீ வா நான் உனக்கு சூப் தரேன்”

மறு நாள்  மாலை ஐந்து மணிக்கு பெண்  பார்க்கும் படலம் என்று முடிவாகியது.

——————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!