Skip to content
Post Views: 2,180
அத்தியாயம் 7
காலை ஐந்தரை மணிக்கு எல்லாம் ஹிருதய் பூம்பாவையின் பெரியப்பாவின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு இரயில் நிலையம் சென்று விட்டான்.
Advertisement
அப்பொழுதே வீட்டில் அனைவரும் குளித்து தயாராகத்தான் இருந்தனர்.
“நாங்க முன்னாடி போய் இறங்கிட்டு, கார் திருப்பி அனுப்புறோம், நீயும் சித்தியும் அதில வந்துடுங்க” என்றார் ஸ்ரீகாந்த் கிளம்புகையில்.
Advertisement
Advertisement
“இந்த ஊர்ல எல்லாம் ஸ்டேஷன்ல காலையில யார் இருக்க போறா? காலையிலேயே ஹிருதய் தனியா போய் அங்கே காத்து இருக்கணுமா? ஒரு ஆட்டோ பிடிச்சு வான்னு சொன்னா அவளே வந்துட போறா?” என்றார் சிவங்கரி.
“ஏங்க, எதை வச்சு பிரச்னை பண்ணலாம்னே இருப்பாங்களா உங்க அம்மா.. எனக்கு வேலை இருக்கு.. நீங்களே சமாளிங்க” என்று உள்ளே சென்றுவிட்டார் பூம்பாவை.
Advertisement
“அம்மா, நீ கிளம்பும்மா.. அவன் போயிட்டு அரைமணி நேரத்துல வந்துட போறான்… நமக்காக தானே சித்தி இவ்வளவு தூரம் தனியா வர்றாங்க.. அப்படியே விட முடியுமா?”
“என்னடா வளர்த்த பாசம் பெத்த பாசத்தோட பெருசா போய்டுச்சா?”
அதற்குள் ஹிருதய்யை செல்லுமாறு பின்னிருந்து செய்கை காட்டி அனுப்பி விட்டார் பூம்பாவை.
பாட்டி கூறியது போல இல்லாமல், ஜே ஜே என்று இருந்தது ஸ்டேஷன்.
வண்டியை பார்க் செய்துவிட்டு நிதானமாக உள்ளே சென்றான் ஹிருதய்.
“அடடே! நம்ம பட்டணத்து பைங்கிளி…” என்றார் தாத்தா இவனை பார்த்து.
‘நம்மளையா சொல்றாரு’ என்று ஹிருதய் சுற்றி நாலா பக்கமும் திரும்பி பார்த்தான்.
“என்ன தம்பி, கோவிலுக்கு போகாம, இங்கன என்ன செய்றீங்க?” என்று இவனை நோக்கி வந்தார் கந்தசாமி.
‘லொள்ளு தான் இவருக்கு’ என்று மனதிற்குள் அவரை வறுத்துவிட்டு,
“எங்க சின்ன பாட்டி வர்றாங்க தாத்தா, அவங்களை கூப்பிட தான் வந்தேன், வீட்ல மத்தவங்க எல்லாம் புறப்பட்டுட்டு இருக்காங்க”
“ஓ, சரி சரி.. நான் எம் பேத்தியை கூட்டிட்டு போக வந்தேன்..”
ஹிருதய் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான்.
“இன்னும் அரைமணி நேரம் இருக்கு ரயில் வர..” என்றார் தகவலாக.
“ஆமா தாத்தா..”
“டீ குடிப்போம் வா” என்று அவர் எழுந்து அங்கே இருந்த டீக்கடைக்கு சென்றார்.
பின் இருவருக்கும் டீ வாங்கி ஒன்றை ஹிருதய்யிடம் கொடுத்தார்.
அவனால சூடாக இருந்த டீ க்ளாஸை பிடிக்க முடியவில்லை, தடுமாறினான்.
தாத்தா கடைக்காரரிடம் கேட்டு இன்னொரு க்ளாஸ் வாங்கி ஆற்றி கொடுத்தார்.
அங்கே இருந்த அனைவரும் நக்கலாக இவனை பார்த்தார்கள். ஆனால் அது ஹிருதய்க்கு புரிந்த மாதிரி தெரியவில்லை.
“தேங்க்ஸ் தாத்தா” என்று அவன் டீயை குடிக்க தொடங்கினான்.
அப்பொழுதே அவனை மிகவும் பிடித்து போனது தாத்தாவிற்கு. பின் மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தார்.
சரியாக ஆறு மணிக்கு ட்ரெயின் வந்து சேர்ந்தது.
கொஞ்சம் பரபரப்பாகியது ரயில் நிலையம்.
அதோ, என் பேத்தி என்று கை காட்டினார் தாத்தா.
தலையில் பெரிய கட்டுடன் ஒரு பெண் வந்துகொண்டிருந்தாள், பக்கத்தில் அவனது சின்ன பாட்டி காதம்பரியும் உடன் வந்தார்.
“என்ன தாத்தா, அவங்க தலைல அடி பட்டிருக்கும் போலவே, இவ்வளவு பெரிய கட்டு போட்டிருக்காங்க” என்றான் லேசாக பதறிய குரலுடன்.
“நேத்து ராத்திரி வரையிலும் நல்லா தான் இருந்துச்சு.. ரயில்ல தான் எதோ சம்பவம் நடந்திருக்கும் போல” என்றார் தாத்தா அசால்ட்டாக.
ஹிருதய் அவரை ஒரு மாதிரியாக பார்ப்பதை கவனித்தாலும் கண்டுகொள்ளாமல் நின்றுகொண்டார்.
“என்ன அய்யா, நேரமே வந்துட்டிங்களா?” என்று கேட்டுக்கொண்டே இவர்களிடத்திற்கு வந்தாள் அவரது பேத்தி. ஐந்தடி உயரம்தான் இருப்பாள். துரு துரு கண்கள், ஆப்பிள் கன்னம், மலர்ந்த முகம் என்று க்யூட்டாக இருந்தாள்.
அவள் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சு வாங்க வந்தார் காதம்பரி.
“என்ன ஸ்வீட்டிம்மா, இவங்களை தெரியுமா? இவங்க கூட வரீங்க, எங்க உங்க பேக்” என்றான் ஹிருதய் காதம்பரியிடம்.
சின்ன பாட்டியை சுருக்கி ஸ்வீட்டி, மரியாதை நிமித்தம் ஸ்வீட்டிம்மாவாக மாறி இருந்தது.
“அவங்களால பேக்கை தூக்கிட்டு இறங்க முடியல” என்று கூறி, “இந்தாங்க பிடிங்க” என்று அவரது பேக்கை ஹிருதய்யிடம் கொடுத்தாள் அந்த பெண்.
“நேத்து ட்ரெயின்ல தான் பார்த்தேன் ஹிருதயா … அது பெரிய கதை…”
“நடந்துட்டே பேசுவோம் வாங்க” என்று தாத்தா நடக்க தொடங்கினார்.
“என்ன முத்து, பெரிய சம்பவமோ? என்ன கட்டு இது?” என்றார் பேத்தியிடம்.
“சம்பவம் சின்னது தான், காயமும் சின்னதுதான் அய்யா.. ஆனா, இந்த நர்ஸ் அம்மா தான் பதட்டத்துல இவ்வளவு பெரிய கட்டை போட்டு விட்டுட்டாங்க..” என்றாள் காதம்பரியை காட்டி.
“இல்லைங்க, பொண்ணு சாதாரணமா சொல்லுது, நல்ல அடி தான், இரத்தமும் கொஞ்சம் நிறைய தான் போயிடுச்சு, காயம் ஆழம் இல்லைனாலும் பெருசுதான்” என்றார் காதம்பரி.
காதம்பரி சொன்னதை காற்றில் விட்டுவிட்டு, “இந்த கட்டோட வீட்டுக்கு போனா, டீச்சருங்க அடி வெளுத்திடும் முத்து..” என்றார் பேத்தியிடம் சீரியஸாக.
“ஆமா அய்யா, அதை நினைச்சா தான் கண்ணை கட்டுது…”
பேசிக்கொண்டே தாத்தா, பேத்திக்கும் காதம்பரிக்கும் டீ வாங்கிக்கொடுத்தார்.
ஹிருதய் தன் சின்ன பாட்டியிடம் சுருக்கமாக மாலதி ஆண்ட்டியை பற்றியும் தாத்தாவை பற்றியும் எல்லாம் கூறினான்.
“என்ன கண்ணு ஆச்சு…” என்றார் தாத்தா இப்பொழுது பேத்தியிடம்.
“அது இரண்டு மூனு தடிமாடுங்க பொம்பளை பிள்ளைங்களை கலாட்டா செஞ்சுட்டு இருந்தானுங்க.. நானே அவனுங்க மண்டையை பிளக்கலாம்னு பார்த்துட்டு இருந்தேன்.. அப்ப இந்த நர்ஸ் அம்மா, ‘என்னப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க, அது தப்புன்னு’ பதமா எடுத்து சொல்ல, அவனுங்க ‘அப்படிதான் தப்பு தப்பா பேசுவோம்ன்னு’, இவங்களையும் தப்பா பேசுனானுங்க..
‘இப்படி பண்ணிட்டு இருந்தீங்கன்னா போலீஸ்ல கம்பிளைன்ட் பண்ணுவேன்னு’ இவங்க வார்த்தை விட, அவனுங்க கையில வச்சிருந்த பாட்டில்ளாலே இவங்களை அடிக்க வந்துட்டானுங்க, நான் அதை தடுக்க குறுக்க பூரவும் லேசா என் தலையில பட்டிடுச்சு..”
“அம்புட்டு தானா?சரி அவனுங்க என்ன ஆனானுங்க” என்றார் தாத்தா சாதாரணமாக.
கேட்டுக்கொண்டிருந்த ஹிருதய்க்கு ‘அச்சச்சோ’ என படபடப்பாக இருந்தது.
“அதை ஏன் கேக்குறீங்க… நான் பயந்துட்டேன்.. ட்ரெயின்ல இருந்த எல்லாரும் பயந்துட்டோம்.. ஆனா உங்க பேத்தி, அடுத்த அஞ்சு நிமிஷத்துல அவனுங்கள புரட்டி போட்டு அடி வெளுத்துடுச்சு.. அவனுங்க மூனு பேரு.. பாப்பா ஒத்தை ஆளா சும்மா பூந்து விளையாடிடுச்சு” என்றார் காதம்பரி பெருமையாக.
ஹிருதய் ‘ஆங்’ என்று பார்த்திருந்தான்.
“பார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கு, ஆனா அடி ஒன்னு ஒன்னும் இடி மாதிரி விழுந்துச்சு..” காதம்பரி இன்னும் அந்த பிரமிப்பில் இருந்து வெளி வரவில்லை. சினிமாவில் பார்ப்பது போல இருந்தது அந்த காட்சி.
“எல்லாம் என் ட்ரெயினிங் இல்ல” என்று தாத்தா பெருமையாக மீசையை நீவி விட்டுக்கொண்டார்.
“அப்புறம் அவங்க தொந்திரவு செய்யலையா ஸ்வீட்டிம்மா” என்றான் ஹிருதய் காதம்பரியிடம் மெல்ல .
“நீ வேற.. அவனுங்க அதுக்கப்புறம் மூச்சு கூட விடலை அடுத்த ஸ்டேஷன்ல இறக்கி விட போயிருச்சு இந்த பாப்பா.. அவனுங்க ப்ளீஸ் கலாட்டா செய்யாம வருவோம், இங்கே இறக்கி விடாதீங்கன்னு கெஞ்சி கால்ல விழுந்துட்டாங்க..
அவனுங்களை அப்புறம் கதவு கிட்ட உட்கார சொல்லிடுச்சு.. அவனுங்க பர்த்தை டிடிஆர் கிட்ட சொல்லி, டிக்கெட் கன்பார்ம் ஆகாதவங்களுக்கு மாத்தி கொடுத்திடுச்சு”
காதம்பரி சுவாரசியமாக கதை கூறிக்கொண்டிருக்கையில், இரு வீட்டில் இருந்தும் அழைப்பு வந்துவிட்டது..
பின் “நீங்க நர்ஸ்ஸா?” என்றார் தாத்தா காதம்பரியிடம்.
“ஆமா, ஆனா கையில முதலுதவி பெட்டி, மருந்து எல்லாம் இல்ல. கோவில்ல இருந்து கொண்டு வந்த மஞ்சள் வச்சிருந்தேன். அதை வச்சு, என் துப்பட்டாவை வச்சு கட்டு போட்டுட்டேன்”
“இப்ப அதை கழட்டிட்டு, காயம் பெருசா தெரியாத மாதிரி பிளாஸ்திரி போட முடியுமா?”
“போடலாம் தான், ஆனால் ப்ளாஸ்திரி?”
“அது எல்லாம் என் வண்டியில இருக்கும், வாங்க” என்று அழைத்து சென்றார்.
பின் அவர் தாத்தா கொடுத்த முதலுதவி பெட்டி கொண்டு காயத்தை சுத்தப்படுத்தி, பிளாஸ்திரி போட்டு விட்டார்.
“இங்க பாருங்கம்மா, நீங்களும் கோவில் விசேஷத்துக்கு தானே வர்றீங்க” என்றார் தாத்தா.
“ஆமாங்க..”
“ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க.. இந்த ட்ரெயின்ல நடந்தது, சண்டை, அடி, காயம் இது எதையுமே அங்க யார்கிட்டயும் சொல்லக்கூடாது…”
அவர் ‘ஏன்?’ என்று கேள்வியாக பார்க்கவும்,
“இங்க பாருங்க நர்ஸ் அம்மா… நான் உங்களை ட்ரெயின்ல பார்க்கவே இல்லை புரிஞ்சுதா… அங்க புதுசா பார்க்கிற மாதிரியே மெயின்டைன் பண்ணுங்க.. விலாவாரியா சொல்ல நேரம் இல்ல” என்று கட் அண்ட் ரைட்டாக கூறினாள் முத்து.
அவரும் சரி என்று தலையை ஆட்டி வைத்தார்.
“அய்யா, பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டேன்னு சொல்லிடுவோமா?”
“வேணா முத்து, போன தடவை பக்கத்து ஊர்ல பஞ்சாயத்துக்கு போய்ட்டு வந்து அதை தானே சொன்னோம்.. பேட்மிட்டன் விளையாடும்போது விழுந்துட்டேன்னு சொல்லிடு.. “
“ஓகே அய்யா..”
“கிளம்புங்க.. நேரமாயிடுச்சு..” என்று ஹிருதய்யிடம் கூறிவிட்டு, தாத்தா அவரது புல்லட்டை எடுத்தார்.
“தாத்தா, இந்த பையன் முழியே சரி இல்லையே? யார்கிட்டயும் சொல்விட மாட்டான் இல்ல?” என்றாள் ஹிருதய்யை காட்டி.
“என்னது பையனா?”
“என்ன முழிக்கிறீங்க? சொன்னது புரிஞ்சுது தானே?” என்றாள் அதிகாரமாய் அவனை பார்த்து.
அவன் தலையை ஆட்டவும் தான் புல்லட்டில் ஏறி அமர்ந்தாள்.
“அந்தத்தம்பி ஒரு புள்ள பூச்சி முத்து, நீ வா” என்றார் தாத்தா.
“அட பாவிங்களா! பிரேம் சொன்ன மாதிரி டெட்லி கோம்போ தான்” என்று நினைத்துக்கொண்டான்.
“ஸ்வீட்டிம்மா, இங்க ஊர் எல்லாம் சூப்பர் தெரியுமா?” என்று சின்ன பாட்டியுடன் கதை பேசிக்கொண்டே இவனும் வண்டியை எடுத்தான்.
இவர்கள் வண்டியில் வரும்பொழுது வீட்டில் இருந்து அழைத்தார் சௌந்தர்.
“அப்பா, ட்ரெயின் வந்துச்சா இல்லையா? நேரமாயிடுச்சு, நாங்க எல்லாரும் முன்னாடி போறோம், நீங்க ரெண்டு பேரும் கிளம்பி சீக்கிரம் வாங்க” என்றார்.
“இப்ப தான் வந்துச்சு.. அதுவும் சரி தான், நாங்க வந்துடறோம்” என்று போனை வைத்துவிட்டார்.
‘அப்பாடா இப்பொழுதைக்கு தப்பிச்சோம்’ என்று கூறி, இருவரும் மெதுவாக வீட்டை நோக்கி சென்றனர்.
—————
error: Content is protected !!